அந்த நீண்ட சாலையில், இரவு விளக்குகளின் ஒளியும், வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் ஒளியும் சாலையில் வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருந்தது. அவ் வீதியில் மிதமான வேகத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தான் யுவராஜ். சிட்டியின் முடிவில் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. யுவராஜின் போலிஸ் மூளை எதையோ உணர்த்த, தனது காரின் விளக்குகளை அணைத்து நிறுத்தி விட்டு எதிரில் இருந்த காரை பார்த்தான். சாலையில் இருந்த விளக்குகள் அவனுக்கு உதவி புரிந்தன.
நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கி வந்த ஒருவன், காரின் டிக்கியை திறந்து, அதிலிருந்து ஒரு மூட்டையை கீழே இறக்கினான். பின் யாரும் இருக்கிறார்களா என சுற்றிச் சுற்றி பார்த்தான். யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், மூட்டையை அருகில் இருந்த குப்பையோடு குப்பையாக போட்டு விட்டு வந்து காரில் ஏறினான்.
இதைப் பார்த்த யுவராஜ் அந்த காரின் நம்பரை நோட் பண்ணிக் கொண்டான். அந்த கார் சென்றதும், இவனும் தனது காரை எடுத்துக் கொண்டு சென்றான். கார்த்தியாயினியை காப்பாற்ற வேண்டி இருந்ததால், அந்த மூட்டையை பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தான்.
………….………….………….………….……இரவு நேரம் என்றாலும் கல்யாண வீடு என்பதால் அந்த பெரிய வீட்டில் நிறைந்து இருந்தனர் ஆட்கள். கல்யாண வீடு ஆட்டம், பாட்டம் என களைகட்டியது.
ஒரு பக்கம் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது, மறு பக்கம் ஆண்கள் சேர்ந்து சோமபானம் அருந்தி மகிழ்ந்து கொண்டு இருந்தனர்.
அவ் வீடே சிரிப்பு சத்தமாக இருந்தது. ஆனால் கார்த்தியாயினியின் அறைக்குள் மட்டும் அவள் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. சினிமாவில் வருவது போல யாரும் தன்னை காப்பாற்ற வர மாட்டார்களா என்று பலவாறு கற்பனை செய்தாள் பேதையவள்.
அங்கயற்கண்ணி கதவுக்கு தாள்பாள் போட கூடாது என்று சொல்லிச் சென்றதால், அவள் கதவை தாழ்ப்பாள் போடவில்லை. திடீரென அவளது கதவு திறக்க, அச் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே குடித்ததால் சிவந்த கண்களுடன், தள்ளாடியபடி நின்றிருந்தான் செந்தில். அவனை பார்த்த கார்த்தியாயினிக்கு உதறல் எடுத்தது. செந்தில் கார்த்தியாயினி அறைக்கு வந்து அவளிடம் தவறாக நடக்க பலமுறை முயன்றிருக்கிறான். அப்போதெல்லாம் எப்படியோ தப்பித்து விடுவாள். இன்று அவனது பார்வையில் உடல் கூசியது. கட்டியிருந்த தாவணி பாவாடையை இழுத்து முடிந்தளவு தனது உடலை அதற்குள் மறைத்துக் கொண்டு இருந்தாள்.
கோணல் சிரிப்போடு அவளின் அருகே வந்தான். அவன் மீதிருந்து வந்த சரக்கின் நெடி அவளுக்கு குமட்டியது. முகத்தை சுழித்தாள். அவளது முகச் சுழிப்பை பார்த்தவனுக்கு கோபம் வர, அவளது முகத்தை இறுக்கிப் பிடித்தான். வலியில் துடித்தாள்.
“என்னடி பக்கத்துல வந்தாலே முகத்தை சுழிக்கிற… எத்தனை நாளைக்கு என்கிட்ட இருந்து உன்னால தப்பிக்க முடியும்…? விடிஞ்சா கல்யாணம்… அதுக்கு அப்புறம் உன்னால என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாதுடி..” என்று அவளை தள்ளி விட்டு அறையை விட்டு சென்றான்..
அழுது அழுது கண்ணீரும் வற்றி விட்டது. அவளையறிமால் அழுதவாறே தூங்கி விட்டாள் கார்த்தியாயினி.
………………………………………………
அவன் செழும்பூரினை அடையும் வேளையில் அவனது நண்பனின் போனில் வந்தான். காரை ஓரமாக நிறுத்தி விட்டு போனை எடுத்துப் பேசினான்.
“சொல்லுடா.. நான் கேட்டது என்னாச்சி….?”
“நீ ஒண்ணு சொல்லி நான் அதை முடிக்காமல் இருப்பனா யுவா.. கார்த்தியாயினியோட எல்லா தகவலும் என்கிட்ட இருக்கு….”
“தட்ஸ் குட்….”
“யுவா அந்த பொண்ணோட அம்மாவும் அப்பாவும் சின்ன வயசில கார் ஆக்ஸிடெண்ட்ல இறந்திட்டாங்க…. அவளோட அப்பாவோட தங்கச்சிதான் அங்கயற்கண்ணி… இவளுக்கு கார்த்தியாயினியோட சொத்து மேல கண்.. அதுமட்டுமல்ல அவளோட பையன் செந்தில்…. இவன் எமகாதகன்… தாய்க்கு அவளோட சொத்துமேல கண் என்றால், இவனுக்கு அவள் மேல கண்..
சாஸ்திரத்தில செந்திலோட முதல் மனைவி, கல்யாணம் நடந்து மூணு மாசத்தில செத்திடுவானு சொல்லியிருக்கு.. அதனால தன்னோட சொந்த வீட்டிலேயே வேலைக்காரி போல இருக்கிற கார்த்தியாயினியை பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி, அவள் செத்ததும் சொத்து எல்லாத்தையும் இவங்க எடுத்திட்டு, செந்திலுக்கு பெரிய இடத்துல பொண்ணு எடுக்கிறதுதான் இவங்களோட திட்டம்…” என்று கார்த்தியாயினியின் மொத்த விபரத்தையும் யுவராஜிடம் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்ட யுவராஜ்க்கு கார்த்தியாயினியை நினைக்க பாவமாக இருந்தது. சொந்த வீட்டில் இப்படி வேலைக்காரியாக அவள் இருப்பதை நினைக்க அங்கயற்கண்ணிக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தான் யுவராஜ்.
“சரி மச்சான்.. ஏதாவது உதவி தேவைனா கால் பண்ணு…” என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணினான்.
யுவராஜ் காரில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான். அதிகாலையில் சில்லென்று வீசிச் சென்றது குளிர் காற்று. அவனது உள்ளத்திற்கு இதமாக இருந்தது. தனது கைகளை விரித்து அந்த இனிமையை அனுபவித்தவாறு கண்களை மூடிக் கொண்டு நின்றிருந்தான்.
………….………….………….………….……விடியற் காலையில் இருந்து அங்கயற்கண்ணி பரபரப்போடு இருந்தார். இந்த கல்யாணம் எப்படியாவது நடக்க வேண்டும் என நினைத்தவாறு இருந்தார். செந்திலை எழுப்ப அவனது அறைக்குள் சென்றார்.
அங்கே கட்டிலில் படுத்திருந்தான். அவனை எழுப்பி ரெடியாக சொல்லிவிட்டு, கார்த்தியாயினியிடம் சென்று அவளையும் தயாராக சொல்லிவிட்டு கீழே சென்றார்.
தனது விதியை நினைத்து அழுது கொண்டே தயாராகினாள் கார்த்தியாயினி. மாப்பிள்ளையையும் பொண்ணையும் மண்டபத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.
மேடையில் ஐயர் கல்யாணத்திற்கான மந்திரங்களை ஓதிக் கொண்டு இருந்தார். அங்கயற்கண்ணிக்கு பயந்து ஊரில் உள்ள அனைவரும் மண்டபத்திற்கு வந்திருந்தனர். சந்திரமோகனும் பதட்டத்துடன் இருந்தார்.
மாப்பிள்ளை செந்திலை மணமேடையில் அமர்ந்திருந்தான். அங்கயற்கண்ணி வாயெல்லாம் பல்லாக நின்று வருவோரை வரவேற்றார். அப்போது அவரிடம் வந்த உறவுக்கார பெண், அவர் காதில் ஏதோ சொல்ல கோபத்துடன் மணப்பெண் அறைக்குள் சென்றார்.
அங்கே அழுது கொண்டு மணமேடைக்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தாள் கார்த்தியாயினி. அவளிடம் வந்த அங்கயற்கண்ணி, “ஏய் என்ன திமிரா? ஒழுங்கு மரியாதையா மணமேடையில வந்து உட்காரு. இல்லை இங்கேயே உன்னை கொன்று போட்றுவன்.” என்றார்.
“என்னை கொன்னே போட்டாலும் நான் வர மாட்டேன்…” என அடம் பிடித்தவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். கன்னங்களில் வரிக்குதிரை போல அங்கயற்கண்ணியின் கைவிரல்களின் பதிவு கார்த்தியாயினி முகத்தில் இருந்தது.