உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05

4.6
(9)

புகழினியும் யோசனையுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டினாள்.

 சங்கரபாண்டியன் வீட்டினுள்ளே நுழைந்தார். கை , கால்களை கழுவிவிட்டு மர நாற்காலில் அமர்ந்தார்.

“ இந்தாங்க ப்பா…தண்ணீ குடிங்க…” என‌ மீனாட்சி சொம்பை நீட்டினாள்.

 “அம்மாவ கூப்பிடு மா…” என்றார்.

மீனாட்சி மாட்டுத் தொழுவத்திற்கு சென்று அங்கிருந்த கோமதியின் அருகில் சென்று ,” அம்மா அப்பா கூப்பிடுறாரு..” என்றாள்.

“ம்ம்..இந்தா வர்றேன்…” என்றவர், “ ஏலேய் பழனி.. நம்ம லட்சுமி(பசு)  ரெண்டு நாளா சொகமில்லாம கிடக்கு…என்னன்னு பாரு ல…” என்றவாறே வீட்டினுள் நுழைந்தார்.

“சொல்லுங்க…கூப்டீகளா..?” என்றார் கோமதி.

“ ம்ம்…சொல்றேன் கோமதி உக்காரு…”

அவரருகில் அமர்ந்தவர் மனதில் ஏதோ வில்லங்கம் வரப் போவாதாக எச்சரிக்கை மணி அடித்தது. இல்லையென்றால் இப்படியெல்லாம்  லேசில் அவரருகில் அமரச் சொல்வாறா என்ன…?  மனதில் நினைப்பதை முகம் காட்டிக்கொடுக்காமல்  இருக்க மிகவும் பிரயத்தனப்பட்டார் கோமதி.

சங்கரபாண்டியனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்  காரியமே கண்ணாக ,

“ என் தங்கச்சி பையன் ஆதித்யன்…வெளிநாட்டுல இருந்து வர்றானாம்.‌.. பல வருசம் கழிச்சு இப்பதேன்  வாரான். தங்கச்சியும்  குடும்பத்தோட பத்து நாள்ல இங்கன வருவா…” என்றவாறே நிறுத்தினார்.

கோமதியின் முகமோ சுருங்கியது..

“ என்ன…கோமு…? ஏன் முகமே மாறிப்போச்சு…என்ன..?” என்றார் சற்று உரக்கவே.

அதில் திடுக்கிட்டவர் வழக்கம் போல் முகத்தை சாதாரணமாக்கிக் கொண்டு ,” தாராளமா வரட்டுங்க…” என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

“மாடியை ஆளுங்களை விட்டு சரி பண்ணி வை. நல்லா சுத்தமா இருக்கனும்‌.  புது மரக்கட்டில் ரெண்டு செஞ்சி கொண்டாற சொல்லிருக்கேன். அப்பறம் …” என முடிக்கும் முன்பே  , ” எதுக்குங்க ரெண்டு…? அதுவும் ‌புதுசு..? ” என்ற கோமதியை பார்வையாலேயே எரித்தார் சங்கர பாண்டியன் .

அதை கண்ட கோமதிக்கோ உதறல் எடுக்க , ” மேல சொல்லுங்க…குறுக்காக பேச‌மாட்டேன்.” என்று அவர் மனம் அறிந்து பள்ளி மாணவிப்‌ போல அமர்ந்திருந்தார் கோமதி.

“அது” என்பது போல ஒருவித முக பாவனையுடன் ,” ஒண்ணு என் தங்கை மவனுக்கு , இன்னோன்னு என் தங்கச்சிக்கு..” என கூறிக்கொண்டே இருக்கும் போது கோமதியின் மனமோ , ” ஏன் அவ புருசனுக்கும் ஒரு தனி கட்டில் வாங்க வேண்டிதானே. ஆளாளுக்கு ஒவ்வொன்னுத்தலையும் உருளட்டும்‌ . ம்ம்க்கும் ” என சலித்துக் கொண்டார். கோமதியின் எண்ணப்போக்கினை அறிந்தவர்‌போல சங்கரபாண்டியன் , ” இங்க‌ பாரு‌ என் வசதிக்கு  எவ்வளவு வேணாலும் என் தங்கச்சிக்கும் சரி…அவ குடும்பத்துக்கும் செய்வேனாக்கும். யாராலையும் ஒண்ணும் செய்ய முடியாதாக்கும். உன் மனசுல என்னத்த நினைப்பன்னு எனக்குத் தெரியும் கோமு. நான் சொல்றதை மட்டும் நீ செஞ்சா போதும் ‌ மறுத்து பேசாத புரியுதா…? அப்பறம் இந்து சில்லுன்னு காத்து வர்ற மெசின் இருக்குல(AC) அது ரெண்டு வாங்கனும். மெத்தை ரெண்டு, பீரோ ரெண்டு வாங்கிப் போடனும். அப்பறம்  ஆகியோட அளவு தெரியாது அதனால அவனுக்கு புதுத்துணி வாங்க வேணாம். ஊர்ல இருந்து வந்ததுக்கப்பறம் நம்ம மருதைக்கு அழைச்சிட்டு போய் வாங்கிடலாம்.  வடிவுக்கு சாதா சீலை ஒரு பத்து, பட்டுச் சீலை ஒரு பத்து, மாப்பிள்ளை மயிலுக்கு பட்டு வேட்டி சட்டை வாங்கிடலாம்‌ .ரொம்ப வருசத்துக்கு பொறவு  வாராவ எல்லாரும். நல்லா திருப்தியா செஞ்சி அனுப்பனும் . ஒரு மனக்குறையும் வரக்கூடாது. என்ன கோமு புரியுதா…?  இந்த வாரம் பெரிய வண்டியை எடுத்துட்டு மருதைக்குப் போய் எல்லாம் வாங்கிடனும். மீனாட்சியையும்‌அழைச்சிட்டு போலாம். வேணும்னா உனக்கும்  என்ன பிடிக்குதோ வாங்கிக்கோ. மீனாட்சிக்கும் நல்ல துணிமணி வாங்கனும். என் புள்ளைக்கு எது போட்டாலும் அந்த மீனாட்சி அம்மன் கணக்காவே இருப்பா…” எனத் தாலி கட்டிய மனைவியைத் தவிர அனைவரையும் தாங்கி பேசியது கோமதிக்கு வலித்தது. எத்தனை வருடங்கள் ஆனாலும் மனைவியும் தன்னில் பாதி தான்.அவளுக்கும் உணர்வுகள் உண்டென்பதை புரிந்துகொள்ளவே மாட்டாரா…? என்ற ஆதங்கமாக இருந்தது கோமதிக்கு.  கோமதியோ அமைதியாக ,” எனக்கு எதுவும் வேணாம். இருக்குற சீலையே கட்ட முடியலை. மீனாட்சிக்கு நல்லதா வாங்கிபுடலாம். ” என‌ மீனாட்சியை மட்டும் குறிப்பிட்டு “மற்றவர்களுக்கு என்ன வாங்கினாலும் எனக்கு ஒன்றுமில்லை” என்பது போல பார்த்தார் கோமதி.

மனைவியின் எண்ணம் நன்றாக சங்கரபாண்டியனுக்கு புரிந்தாலும் தனது தங்கையை விட்டுக் கொடுக்கவே மாட்டார்.

பெண்கள் மறுத்துப் பேசுவதே தவறு என்ற அபிப்பிராயம் உள்ளவரை மாற்றுவது இயலாத ஒன்று என்பதால் கோமதியும் அவர் கூறியதற்கெல்லாம் தலையசைத்து விட்டு சென்றுவிடுவார்‌.

ஆனால் இம்முறை கோமதிக்கு மனம்‌ மிகவும் நெருடலாகவே இருந்தது.

வடிவாம்பாள் கோமதியுடன் பேசும்போது ஒருவித குத்தலுடனே பேசுவார்.

கோமதிக்கு அவரது வரவு அத்தனை உவப்பானதானக இல்லை. இதில் அவரது மகனது வருகை வேறு‌ பீதியை கிளப்பியது.

சிறு வயதிலிருந்தே எதையும் பிடிவாதமாக சாதிக்கும் குணம் ஆதித்தனுக்கு. சில சமயங்களில் சங்கரபாண்டியனையே எதிர்த்து நிற்கும் அளவிற்கு அவனது பிடிவாதம் இருக்கும் .

ஏதேதோ எண்ணங்களில் உழன்று கொண்டிருந்த வரின் மனம் கடைசியாக மீனாட்சியின் திருமணத்தில் வந்து நின்றது.

“ அம்மா…! அம்மா…! என்னம்மா யோசனை..? ரெண்டு மூணு தடவை கூப்பிட்டது காதுல விழுகலயா..?” என்றாள் ‌மீனாட்சி தாயின் யோசனை படிந்த முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தபடியே..

“ ஒண்ணுமில்லை மீனாட்சி…உங்க அத்தை வருவாங்க போல…அதான் ‌கொஞ்சம்‌ யோசனை…”

“ யாரு.‌. வடிவு அத்தையா…?”

“ ஆமாம் மா…” எனக் கூறியவர் ஆதித்யன் வருவதை கூறி அவளது மனதை குழப்பவில்லை.

“ சரி…. பாத்துக்கலாம் விடும்மா… “ என்று அவரது தோள்‌ அணைத்தாள்.

“மீனாட்சி…” என மென்மையாக அழைத்தார் கோமதி.

“ என்னம்மா…” என்றாள்.

“ஒண்ணு கேட்பேன்….கோவிக்காம மறைக்காம பதில் சொல்லனும்..” என்றார்.

மீனாட்சியோ யோசனையுடன்,  “கேளு‌ம்மா..” என்றாள்.

“ ஈஸ்வரனை மனப்பூர்வமா விரும்புற‌தானே..? அவனை கல்யாணம் பண்ணிக்குற எண்ணம் இருக்கு தானே…?” என்றார்.

மீனாட்சி திகைத்தாள் ஒரு நிமிடம்.

ஏனெனில் கோமதிக்கு மகளின் மனம் புரிந்தாலும் இது நாள் வரை வெளிப்படையாக எதுவும் கேட்டதேயில்லை.

இன்று அந்த அவசியம் வந்துவிட்டது எனவே மகளின் மனதை அறிய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் கேட்டுவிட்டார். இப்படி திடீரென்று தனது தாய்‌ கேட்டது மீனாட்சியை மௌனமாக்கியது.

அவள் அமைதியாக நிற்கவும்,” சொல்லு மா…உங்க அப்பா கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுடாவ….உங்க அத்தைகாரி குடும்பத்தோட வாரவ… எனக்கு எதுவும் சரியா படல மீனாட்சி…இனியும் நீ கல்யாணத்தை தள்ளி போட முடியாது. நீ மாமா… மாமான்னு ஈஸ்வரனோட பேசி பழகுறதெல்லாம் உங்க அப்பாவுக்கு நல்லவே தெரியும் டி‌… ஆனாலும் உங்க அப்பா அமைதியா இருக்குறது நீ எந்த அளவுக்கு போறன்னு பாக்கறதுக்கு தான். அவர மீறி நீ எதுவும் பண்ண மாட்டேன்னு வீம்புல இருக்காரு. உன்னோட பதில்ல தான் எல்லாமே இருக்கு கண்ணு…உன் மனசுல இருக்குறத பட்டுன்னு சொல்லிப் பழக உன்னைய முதல்ல தயார் படுத்திக்கோ…” என்றவர் ,“ சரி நான் கேட்டதுக்கு பதில் என்ன..?” என தீர்க்க மாய் அவளைப் பார்த்தார்.

“ அம்மா…என்‌ மனசு பூராவும் இருக்குறது ஈஸ்வரன் மாமா மட்டுந்தேன்… அவரைத் தவிர வேற யாரையும் நான் கட்டிக்கிட மாட்டேன்…அப்பா வந்து எந்த சூழ்நிலையில் இதைக் கேட்டாலும் என்னால சொல்ல முடியும்….ஆனா…” என நிறுத்தினாள்‌

கோமதியோ புருவச் சுழிப்புடன் , “ என்ன டி…?” என்றார்.

“ மாமா கிட்ட எத்தனையோ தடவை கல்யாணத்தை பத்தி பேசினேன்…ஆனா அது பிடி கொடுக்காம பேசுது மா….என்னப் பண்றதுன்னு தெரியலை மா…” என கலக்கத்துடன் கூறினாள்.

அவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவள். எப்படியாவது தங்களுடைய காதல் கை சேர்ந்துவிடும் என அசாத்திய நம்பிக்கையில் இருப்பவளுக்கு சிறு நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டு இருப்பது அவன்‌ பிடி கொடுத்து பேசாதது மட்டுமே. மற்றபடி ஆயுள் முழுவதும் அவனுக்காக காத்திருக்க அவள் தயாராகத்தான் ‌இருக்கிறாள்.

அவளருகே வந்த கோமதி அவளது கைகளைப் பிடித்து கொண்டு ,” வெசனப்படாதே மீனாட்சி….! திரும்பவும் அவன்கிட்ட சுழ்நிலைய எடுத்துச் சொல்லி பேசிப்‌பாரு….ஏன் சொல்றேன்னா…உங்க அத்தைகாரி மட்டும் வந்த பரவாயில்ல….அந்த ஆதித்யனும் வரானாம். அதேன் கொஞ்சம்‌ ரோசனையா இருக்குது..சோழியன் ‌குடுமி சும்மா ஆடாது மீனாட்சி. பாத்து சுதானாமா இருந்துக்க…அம்புட்டுதேன் சொல்லுவேன்…” என்று கூறி விட்டு வெளியே சென்றார். ஆதியின் வருகையை கூற வேண்டாம் என்று முதலில் நினைத்தவர் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். எதற்கும் சொல்லி வைப்போம் என்று கூறிவிட்டார் .

மீனாட்சியோ குழம்பிய‌ முகத்துடன் வீட்டினுள் நுழைந்தாள்.

எதிரே வந்த பாண்டியனோ , “ மீனாட்சி ‌இந்த மூணு சட்டையை மட்டும் இஸ்திரி போட்டு தாரியா…? நாளை கழிச்சு மும்பை கிளம்புனும் டி….ப்ளீஸ்….என் செல்லக்குட்டில்ல …” என்றபடி தன் கரங்களில் இருந்த சட்டையை அவளிடம் கொடுக்க அவளோ யோசனையுடன் நின்றிருந்தாள்.

“மீனாட்சி…! ஏ…மீனாட்சி…என்ன யோசனை அப்படியே நிக்க…ஏதும்‌‌ பேய்…கீய…பாத்து பயந்துட்டியா..?” என்றவாறே அவளது தோளைத் தொட்டான்.

அவளோ கனவிலிருந்து விழிப்பதைப போல் திருதிருவென விழித்தாள்.

“என்ன கேட்ட…?” என்றாள்.

பாண்டியனோ இருபுறமும் சலிப்பாக தலையை ஆட்டியபடி,” சரியா போச்சு போ…. என்னோட சட்டைய தேய்ச்சுத் தரீயான்னு கேக்கேன். உன் காதுலயே விழலயா…? என்ன நினப்புல இருக்க நீயு….” என்றவன் தங்கையின் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

அவளது முகம்‌ குழப்பத்தில் இருப்பதைக் கண்டு “ ஏய்…மீனாட்சி…என்ன மேலுக்கு எதுவும் முடியலையா..? ஏன் மொகம்‌ வாடி போய் கிடக்கு..?” என அக்கறையுடன் விசாரித்தான்.

சட்டென நிதானத்திறகு வந்தவள், ” ஒண்ணுமில்லைண்ணே…. நீயும் புகழுயும் விரும்புறத அப்பாகிட்ட சொல்லிறலாம்மான்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்…அம்புட்டுதேன்…” என‌

சாவகாசமாக அவனது தலையில் இடியை இறக்கினாள்.

அவனோ அதிர்ந்து போய் , “அடியே….பாதகத்தி….என்னடி சொல்ற..? நான் மும்பைய்க்கு கிளம்புனும்‌ டி. குட்டைய குழப்பி விடாத தாயே…! நீ  எதுனாச்சும்‌ பண்ணி அவ அப்பா யாருக்காச்சும்  அவளை கட்டி வச்சிரப்போறாரு டி…” என‌ அலறினான்.

அதைக் கண்டவள் கலகலவென‌ சிரித்தவள் , “ ஏண்ணே…இம்புட்டு பயப்புடுற..? அப்ப எப்படி அவங்க அப்பா கிட்டயும் நம்ப அப்பாகிட்டயும் சம்மதம் வாங்குவ….?” எனத் தீவிரமான முகத்துடன் கேட்டாள்.

ஏனோ அவன் கூறும் பதிலில் அவளது வாழ்க்கைக்கும் வழி தோன்றுமோ என்ற நப்பாசை.

“ இங்கன பாரு மீனாட்சி… இது பயம் இல்ல‌ புத்திசாலித்தனம். இப்ப நான் ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன். இப்ப போய் முட்டாள்தனமான ஏதாவது செய்ய போயி புகழினியோட லட்சியம் பாதிக்கப்பட்ருச்சுனா ரொம்ப கஷ்டமாகிடும். அதான் நான் ஊர்ல இருந்து திரும்ப வர்ற வரைக்கும் அவ நிம்மதியா‌ இருக்கனும். அதான் எனக்கு ரொம்ப முக்கியம். நிச்சயமா நான் திரும்பி வந்ததும் அவள் கல்யாணம் கட்டுவேன். அதுவரைக்கும் நீ எதுனாலும் குட்டைய குழப்பாம இரு டி தாயே…! உன்னை கையெடுத்து கும்புடுறேன்….” என அப்பாவியாய் அவளைப் பார்த்தான்.

மீனாட்சியோ , ”ஹான்…! அந்த பயம் இருக்கனும் உனக்கு…சரியா?.. ம்ம்.. என்ன கேட்ட …? சட்டையை தேய்ச்சு தாம்மான்னு பதிவிசா கேளு…போனா போகுதுன்னு தேய்ச்சு தாரேன்…” என புருவத்தை ஏற்றி இறக்கினாள்‌.

“ அடிங்க…உனக்கு ரொம்ப ஏத்தமாகி போச்சு கழுத…. தேய்ச்சு தா மீனாட்சி…விளையாடத நேரமாச்சு…வேலையிருக்கு…” என அலுப்புடன் பேசும் அண்ணனை அதற்கு மேலும் கெஞ்ச‌ வைக்க மனமில்லாமல் ,  “சரி‌..சரி.. அழாதே..குடு..குடு.. தேய்ச்சு தாரேன்..” என்று சட்டைகளை கைகளில் அள்ளிக் கொண்டு தனதறைக்குச் சென்று வேகமாக இஸ்திரி போட்டு கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.

மனம் முழுவதும் ஈஸ்வரனிடம் திருமணத்தைப்‌ பற்றி பேசி முடிவெடுத்து விட வேண்டும் என நினைப்பே ஓடிக்கொண்டிருந்தது.

மறுநாள் காலையில் வீட்டு வேலைகளை வேகமாக முடித்து விட்டு ஈஸ்வரனை காண கரும்புத் தோட்டத்திற்குச் சென்றாள்.

இன்று ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துவிட வேண்டும் என்று அவளது உள்ளம் கூப்பாடு போட்டது.

அவன்‌ எவ்வளவு கோபப்படுததுவது போல் பேசினாலும் மீண்டும் மீண்டும் பேசி அவனது கோபத்தை கிளறி விடவேக்கூடாது என்ற உறுதியோடு சென்றாள். அவளுக்குத் தெரியவில்லை அந்த உறுதி குலையபப் போகிறதென்று.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

1 thought on “உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!