வீட்டுக்கு வந்தவனின் மனமோ ஒரு நிலையிலேயே இல்லை. அவனும் வெகுவாக சிரமப்பட்டு தன் மனதை சமநிலைப்படுத்த முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அவனின் மனம் முழுக்க அவளின் ஆட்சி தானே நடந்து கொண்டிருக்கிறது.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து தன்னை சுத்தப்படுத்தி முடித்ததும் பாரிவேந்தன் செய்யும் முதல் வேலை தன் தாய் முத்துலட்சுமியை காண்பது தான்.
சமீப காலமாக அதீத உடல் பருமன் காரணமாக அவருக்கு மூட்டு வலி பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது. வெகு நேரம் நிற்கவோ நடக்கவோ அவரால் இயலாது.
எனவே அவருக்கு சிரமம் கொடுக்காமல் இவனே அவரின் அறைக்குச் சென்று அவரை பார்த்து சற்று நேரம் அவருடன் பேசிவிட்டு தான் தன் அறைக்கு செல்வான்.
இன்று அவரை கூட பார்க்க தோன்றாமல் தனக்குள்ளேயே உழன்றபடி அறைக்குள் முடங்கி கிடந்தான். நிச்சயமாக அவனின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் அவள் தான்.
அவன் கடந்து செல்ல முடியாமல் தடுமாறிய திணறிய அவன் வாழ்க்கையின் முக்கிய அத்தியாயம் அவள் தான்.
இன்று அனைத்துமே இவனுக்கு தெளிவாகிவிட்டது. அவளுக்கு என்று கணவன் இருக்கிறான் குழந்தை வந்துவிட்டது அனைத்திற்கும் மேல் அவளுக்கு தன்னை யார் என்று கூட தெரியவில்லை.
இதை இப்படியே விட்டு விடுவது தான் இருவரின் வாழ்க்கைக்கும் நல்லது என்று அவனின் மூளை எடுத்துரைத்தாலும் மனதின் ஓரம் ஏதோ ஒரு நெருடல்.
தான் செய்த தவறுக்காக அவளிடம் குறைந்தபட்சம் மன்னிப்பையாவது யாசிக்க வேண்டும் அல்லவா..
மன்னிக்க முடியாத பெரும் குற்றம் தான் செய்திருக்கிறேன். ஆனாலுமே அன்று நடந்த விஷயத்தை பற்றி அவளிடம் விளக்கி கூற வேண்டும் என்று ஒரு மனம் அவனை ஊந்தினாலும்..
மற்றொரு மனமோ, ‘அவளே அந்த சம்பவத்தை கடந்து சென்ற பிறகு மீண்டும் மீண்டும் அதைப் பற்றி ஏன் அவளுக்கு நினைவுபடுத்த வேண்டும். இதை இப்படியே விட்டு விடுவது தான் இருவருக்குமே நல்லது’ என்று எடுத்து கூறியது.
ஆம், இது தான் சரி.. மேலும் அன்றைய சம்பவத்தை பற்றி அவளிடம் பேசி அவளின் வாழ்க்கையையும் வீணாக்கி விடக்கூடாது. நடந்தது அனைத்தையும் மறந்து விட வேண்டும் என்று தனக்கு தானே கூறிக்கொண்டிருந்தான் தன் மனதில் பதிய வைக்க வேண்டி.
இரவு முழுவதும் அவனுக்கு ஒரு பொட்டு தூக்கமில்லை. தன்னுடையது என்று எண்ணிய பொருள் இப்பொழுது மற்றவருடையது ஆகிவிட்டது.
ஆனாலுமே ஏதோ ஒரு ஊந்துதல்.. இப்பொழுதே மருத்துவமனை சென்று அச்சிறு உயிரை தன் கையில் ஏந்த வேண்டும் என்ற ஆவல்..
அவளை நினையாதே மனமே நினையாதே என்று எவ்வளவு எடுத்து கூறியும் அவளை சுற்றியே வட்டமடிக்கும் தன் மனதை அடக்க வழி தெரியாமல் காலையிலேயே கிளம்பி விட்டான் மருத்துவமனைக்கு தன் தாயிடம் மட்டும் கூறிவிட்டு.
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தவன் தன் அறையை அடைந்ததும் ரம்யா, “என்னாச்சு டாக்டர் இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டீங்களே”.
“நத்திங் ரவுண்ட்ஸ் போகணும்” என்று அவளுக்கு பட்டும் படாமலும் பதிலளித்தவன்.
அவனின் பின்னோடு மருத்துவக் குறிப்புகள் அடங்கிய நோட்டு புத்தகத்துடன் அவனை பின் தொடர்ந்து ஓட்டமும் நடையுமாக ஓடினாள் ரம்யா.
ரம்யாவின் முன்பு பெயருக்கு முதலில் வேறொரு நோயாளியின் உடலை சரி பார்ப்பது போல் பார்த்தவன். அடுத்ததாக சென்று நின்றது என்னவோ அவள் இருக்கும் அறையின் வாயிலில் தான்.
நேற்று போன்றே இன்றும் ஏதோ இனம் புரியாத படபடப்பு அவனை தொற்றிக் கொண்டது.
இவன் கதவின் மீது கையை வைக்கவும் உள்ளிருந்து ஒரு பெண்ணின் குரல் கோபமாக, “என்ன சார் பண்ணி வச்சிருக்கீங்க நீங்க.. யாரை கேட்டு நீங்க இப்படி எல்லாம் செஞ்சு இருக்கீங்க” என்றாள் சீற்றமாக.
அது அவளாக தான் இருக்கும்.. அவளின் குரலாக தான் இருக்கும்.. அவளின் குரலை கேட்டு நொடி முதல் தன் காதுகளை கூர்மையாக்கியவன் அவள் பேசுவதையே உன்னிப்பாக கவனிக்க தொடங்கினான்.
ரம்யாவிற்கு இவனின் நடவடிக்கைகள் விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் தோன்றியது. இருப்பினும், எதுவும் கூறாமல் அமைதியாக நின்று இருந்தாள்.
“சொல்லுங்க சார் உங்ககிட்ட தான கேட்டுகிட்டு இருக்கேன். என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க.. நீங்க எதுக்காக குழந்தையுடைய அப்பா இடத்தில் உங்க பெயரை கொடுத்து இருக்கீங்க” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் அழையா விருந்தாளியாக ஊற்றெடுக்க தொடங்கியது.
அவள் எதிரே நின்றிருந்த மதன், “சரி தப்பு தான்.. உன்னை கேட்காமல் அந்த இடத்தில் என்னுடைய பெயரை கொடுத்தது தப்பு தான். என்னை மன்னிச்சிடு.. சரி இப்போ நீ சொல்லு அந்த இடத்துல வேற எந்த பெயரை போடலாம்” என்றான் கணீர் குரலில்.
அவனுக்கு பதிலுரைக்க முடியாமல் வாயடைத்து போய் கண்களில் கண்ணீரோடு அமர்ந்து இருந்தாள்.
அவள் இனியாள்..
என்ன கூற முடியும்.. குழந்தையின் தந்தை யார் என்று தெரிந்தால் தானே கூறுவதற்கு.. இதை வெளியில் சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.
அவ்வளவு ஏன் அவளின் குடும்பத்தார் கூட அவளை நம்பவில்லையே.. இவள் கருவுற்று இருக்கிறாள் என்பதை தெரிந்த உடனேயே வீட்டை விட்டு விரட்டி அல்லவா விட்டு விட்டார்கள்.
ஆதரவற்று நின்றவளுக்கு அரணாய் வந்து நின்றவன் தான் மதன். இனியாள் படித்துக் கொண்டிருந்த கல்லூரியின் பேராசிரியர்.
“சொல்லு இனிமா குழந்தைக்கு அப்பா என்ற இடத்துல யாருடைய பேரை கொடுக்கிறது” என்றவனுக்குமே குரலில் ஆதங்கம் தான் மேலெழுந்திருந்தது.
“அதுக்காக உங்க பேரை போய் கொடுத்து இருக்கீங்களே சார் இதெல்லாம் எப்படி சரி வரும்”.
“தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு இனிமா.. இனிமேலும் நீ தனியா இருக்க தேவையில்லை. இத்தனை மாசம் என் பேச்சைக் கேட்காமல் இருந்துட்ட இனிமே உனக்காக இல்லைனாலும் இந்த குழந்தைக்காகவாவது நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்”.
“ப்ளீஸ் சார்.. திரும்ப இப்படி ஒரு வார்த்தையை சொல்லிடாதீங்க. நான் ஏற்கனவே பலமுறை உங்க கிட்ட சொல்லிட்டேன் உங்களுடைய அன்புக்கு ரொம்ப நன்றி. ஆனா அதுக்கு என்னால் பதிலுக்கு எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையில் நான் இருக்கேன். என்னால் உங்க வாழ்க்கையும் வீணா போக கூடாது” என்னும் பொழுதே அவளுக்கு தொண்டையை அடைத்தது.
“என்ன உளறுர நீ உன்னால் என் வாழ்க்கை என்ன வீணா போகப்போகுது. என்னை நீ கல்யாணம் செஞ்சுக்கிட்டனா நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையுமே நல்லா இருக்கும். இந்த குழந்தையோட நீ தனியா எப்படி வாழ்வாய்?”.
“அதை நான் பாத்துக்குறேன் சார். இது என்னோட குழந்தை இதை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும். அதுக்காக என்னுடைய பாவத்தை உங்க தலையில் இறக்கி வைக்க நான் தயாரா இல்லை.
காலத்துக்கும் அந்த குற்ற உணர்ச்சியே என்னை சாகடித்துவிடும். தயவு செஞ்சு இந்த பேச்சை விடுங்க எனக்கு உங்க மேல நிறையவே மதிப்பும் மரியாதையும் இருக்கு. நீங்க எனக்கு நிறையவே செஞ்சிட்டிங்க போதும்..” என்றவள்.
தன் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு, “இனிமேலும் எனக்கு நீங்க எதுவுமே செய்ய வேண்டாம். இதுவரைக்கும் நீங்க எனக்கு செஞ்சதே போதும் இதுக்கு அப்புறம் நீங்க உங்க வாழ்க்கையை பாருங்க நான் என் வாழ்க்கையை பார்க்கிறேன்”.
அவளின் வார்த்தைகளை கேட்ட பிறகு தான் பாரிவேந்தனின் மனம் சற்று ஆசுவாசமடைந்தது போல் இருந்தது.
“என்ன பேசுற நீ.. இந்த நிலைமையில் உன்னை இப்படியே விட்டுட்டு என்னை போக சொல்றியா.. ஐ ஸ்டில் லவ் யூ இனிமா.. செய்யாத தப்புக்காக நீ ஏன் தண்டனையை அனுபவிக்கணும்.
எவனோ ஒரு ராஸ்கல் செஞ்ச காரியத்தால் இத்தனை நாள் நீ அசிங்கப்பட்டதும் அவமானப்பட்டதும் போதும். இதுக்கு அப்புறமாவது உனக்கு ஒரு அங்கீகாரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கணும்னு நான் ஆசைப்படுறேன்.
உனக்கும் உன் குழந்தைக்கு என்னைக்குமே நான் பாதுகாப்பா உறுதுணையாக இருப்பேன்” என்றான் காதல் வழிந்தோடும் குரலில்.
“போதும் சார்! இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாம்னு நினைக்கிறேன் ப்ளீஸ்.. தயவு செஞ்சு நீங்க இங்க இருந்து கிளம்புங்க இனிமே என்னை பாக்க வராதீங்க. பழையபடி ஊருக்கே போய் காலேஜ்ல வேலை பாருங்க நான் என் வாழ்க்கையை பாத்துக்குறேன். என்னை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் என் மேல நீங்க வச்சிருக்க அன்பு உண்மையா இருந்தா தயவு செஞ்சு நான் சொல்றதை செய்யுங்க இங்க இருந்து போயிடுங்க” என்றாள் தன் முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டு.
அவள் வார்த்தையில் முற்றிலுமாக மனமுடைந்து போனான் மதன்.
அவள் வீசிய வார்த்தைகளால் அவனின் மனம் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது. அவளை பார்த்து விரத்தியான புன்னகையை சிந்தியவன் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
அடுத்து என்ன என்பது அவளுக்குமே விளங்கவில்லை தான். ஆனாலுமே அவனுக்கு பாரமாக இருக்க அவள் விரும்பவில்லை. அது மட்டுமல்லாமல் அவனுக்காகவே இன்னொருத்தி காத்துக் கொண்டிருக்கிறாள் அல்லவா..
தன் மேல் அத்தனை காதலை சுமந்து கொண்டிருக்கும் மதனுக்கு தன்னிடம் கொடுக்க எதுவுமே இல்லையே.. இப்படி ஒரு கலங்கமானவளுக்கு அவனின் பரிசுத்தமான காதலை ஏற்றுக் கொள்ள எந்த ஒரு தகுதியும் இல்லை.
அது மட்டும் இன்றி அவனை அவள் ஒருநாளும் அப்படி ஒரு எண்ணத்தில் பார்த்ததும் இல்லை.
ரம்யா தயக்கமான குரலில், “டாக்டர்” என்று அழைத்தவாறு தன் கையில் இருந்த காகிதத்தை பாரிவேந்தனை நோக்கி நீட்டினாள்.
அதில் குழந்தைக்கு பர்த் சர்டிபிகேட் எடுப்பதற்காக தாய் தந்தை பெயரும் குழந்தையின் பெயரும் மேலும் சில விவரங்களையும் எழுதி இருந்தது.
அதில் தந்தையின் பெயர் இருக்கும் இடத்தில் மதன் என்று எழுதி இருந்தது. அதை பார்த்து தான் இவள் கோபமாக இருக்கிறாள் என்பது பாரிவேந்தனுக்கு நன்கு புரிந்து விட்டது.
அப்படி என்றால் இந்த குழந்தை இவனுடையது இல்லையா என்று எண்ணும் பொழுதே அவனுக்குள் ஒரு பெருமூச்சு வெளியேறியது.
“இதனால் தான் ஏதோ பிராப்ளம்னு நினைக்கிறேன் டாக்டர்” என்ற ரம்யாவிற்கு சிறு தலையசைப்பை கொடுத்தவன் மெல்லமாக கதவை தட்டி விட்டு அறைக்குள் நுழைந்தான்.
அவள் கையிலும் அதே காகிதம் தான் இடம் பெற்றிருந்தது.
இவர்களை சற்றும் எதிர்பாராதவள் சட்டென்று தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். அவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தபடி குழந்தையின் அருகில் சென்றவன் இம்முறை ஏதோ ஒரு உரிமை உணர்வோடு குழந்தையை ஏந்திக் கொண்டான்.
அவன் ப்ளட் சாம்பில் எடுப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. குழந்தைக்கும் தனக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அவன் முடிவெடுத்து விட்டான்.
எதற்காக அடுத்தவரை எண்ணி அஞ்ச வேண்டும். ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துவிட்டால் குழந்தை தன்னுடையது தான் என்று உறுதியாக தெரிந்து விடுமே என்று எண்ணியவனோ இன்றே அதை செயல்படுத்தியும் விட்டான்.
Super hero va terror Anti hero va kondu vanga pa
🤔😅 என்ன பண்ணனும்னு சொல்லுங்க பண்ணிடுவோம் 🫡
Therija hero thappu panna madhiri kondu vanga super ra irrukum pa
Surrogacy story ya
No da
Nenga en story conceptaye change pandringa da 😅. Wait panni story padinga kandipa ungaluku pidikum