என்‌ பிழை நீ

4.7
(16)

பிழை – 4

நேற்று எல்லாம் ரம்யாவின் வாயிலாக இவர்களின் குடும்ப பெருமையை கேட்டவளுக்கு பாரிவேந்தனை தப்பானவன் என்று சந்தேகப்பட துளியும் தோன்றவில்லை.

தான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் கடவுள் தனக்கு நல்ல வழியை காட்டுகிறார் என்று எண்ணியவள் ஆச்சரியமாக, “முத்துலட்சுமி மேடமையா பாத்துக்கணும்?” என்றாள் விழி விரித்து.

“ம்ம்” என்றவனின் இதயமோ வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

அவளும் இப்போதைய சூழ்நிலையில் குழந்தையுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் தான் இருக்கிறாள். வலிய வந்து இருக்க இடமும் பார்ப்பதற்கு வேலையும் தருகிறேன் என்று கூறி அழைக்கும் பொழுது அவளுக்கும் மறுக்க தோன்றவில்லை.

ஏற்கனவே பிரசவத்திற்கு பணம் கட்ட வேண்டாம் என்று கூறியதில் பாரிவேந்தனின் மேல் இனியாளுக்கு பெரும் மரியாதை உணர்வு தோன்றியது. இப்பொழுது அவன் வேலை தருவதாக கூறியதும் அது பல மடங்காக அதிகரித்தது.

‘கடவுளே! இப்போவாவது உனக்கு என் மேல கொஞ்சம் கருணை வந்துச்சே’ என்று எண்ணியவள் அமைதியாக அமர்ந்திருப்பதை கண்டவன், “என்ன ஆச்சு உங்களுக்கு இந்த வேலை வேண்டாமா?”.

“ஐயோ சார்! என்ன இப்படி கேட்டுட்டீங்க.. நானே இப்போ எங்க போறதுன்னு தெரியாம தான் யோசிச்சுகிட்டு இருந்தேன்” என்று சற்று பதட்டம் கலந்த குரலில் அவள் கூறவும் அவளையே கூர்ந்து பார்த்தான் பாரி.

அவனின் பார்வையில் தான் கூறியதை உணர்ந்தவள் சட்டென்று தன் தலையை தாழ்த்திக் கொண்டு, “அது வந்து.. சார் என்னால் இப்போ எல்லா விஷயத்தையும் சொல்ல முடியாது. நிறைய கஷ்டங்களை ஃபேஸ் பண்ணிட்டேன்.

அடுத்து லைஃப்ல என்னன்னு தெரியல.. கடவுளா பார்த்து தான் உங்களை இங்க அனுப்பி இருக்கிறார் என்று நினைக்கிறேன். எனக்கு இந்த வேலைக்கு சம்மதம் தான் ரொம்ப தேங்க்ஸ்..” என்றாள் கம்மிய குரலில்.

அவளின் வார்த்தையில் எச்சிலை கூட்டி விழுங்கியவன் பெரு மூச்சை வெளியேற்றியவாறு, “ஓகே.. டிஸ்சார்ஜ் பண்ணதும் நானே உங்களை வீட்டுக்கு கூப்பிட்டு போறேன்”.

அவனுக்கு சம்மதமாக தலையசைத்தாளே தவிர எதுவும் கூறவில்லை. அதற்கு மேல் என்ன பேசுவது என்று இருவருக்குமே தெரியவில்லை.

அவளின் மனதில் இருக்கும் வேதனைகளை பற்றி அறிய வேண்டும் என்ற முனைப்பு அவனுக்குள்ளும் இருக்க தான் செய்தது.

ஆனால் என்ன செய்ய முடியும் அனைத்தையுமே இப்பொழுது அவளிடம் கேட்க முடியாதே..

அவள் படும் துயர் அனைத்துக்கும் காரணமே நான் தான். ஆனால் இது எதுவுமே அவளுக்கு தெரியாது. அப்படி இருக்கையில் எந்த உரிமையில் நான் அவளின் கஷ்டங்களை பற்றி கேட்க முடியும் என்று எண்ணியவன் சிறிது காலம் போகட்டும் என்று தள்ளிப் போட்டான்.

கார் அமைதியாக பாரிவேந்தனின் வீட்டை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தது.

காருக்குள் அமர்ந்திருந்த பாரிவேந்தனுக்கும் இனியாளுக்கும் இடையே எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை.

இருவருமே அவர்களுக்குள்ளேயே சிந்தனையில் மூழ்கி போயிருந்தனர்.

இருவரின் சிந்தனையையும் கலைக்கும் பொருட்டு இனியாளின் கையில் இருந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

அதில் இருவருமே தன்னிலை அடைய..

இனியாள் குழந்தையை சமாதானம் செய்ய தொடங்கினாள்.

இன்று தான் அவளுக்கு டிஸ்சார்ஜ் பாரிவேந்தன் கூறியது போலவே அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு தங்கள் வீடு நோக்கி புறப்பட்டான்.

அவளை தன் அருகில் முன்னிருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று அவனுக்கும் ஆசை தான்.

ஆனால் அவளோ நேராக பின் இருக்கையில் ஏறிக்கொண்டாள். அவனுக்கும் எதுவும் கூற முடியாத நிலை வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

அவளின் சமாதானத்திற்கு எல்லாம் குழந்தை அமைதியாகவில்லை.

“என்னாச்சு?” என்ற பாரி வேந்தனுக்கு பதிலுரைக்க முடியாமல் தடுமாற்றத்தோடு அமர்ந்திருந்தாள்.

சற்று நேரம் அவளின் பதிலுக்காக காத்திருந்தவன் பதில் இல்லாமல் போகவும் கண்ணாடியினோடு அவளை பார்த்து, “குழந்தைக்கு பசிக்குதுனு நினைக்கிறேன் ஃபீட் பண்ணுங்க” என்று இலகுவாக கூறினான்.

என்ன இருந்தாலும் அவன் ஒரு மருத்துவன். அதிலும், மகப்பேறு மருத்துவன்..

பல தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு பாலூட்டுவதை பார்த்திருக்கிறான். இதில் வெட்கப்படவோ அசிங்கப்படவோ என்ன இருக்கிறது இது இயற்கை தானே என்ற எண்ணம் தான் அவனிடம். அதனாலேயே அவளிடமும் இலகுவாக கூறினான்.

ஆனால் அவளுக்கு தான் அப்படி இல்லையே.. என்ன தான் மருத்துவனாக இருந்தாலும் பாரி வேந்தன் ஒரு ஆண். அடுத்தவன் முன்னிலையில் எப்படி குழந்தைக்கு பசி ஆற்றுவது என்று அவளுக்குள் ஒரு தடுமாற்றம்.

படித்தவள் தான்..

எதையுமே பிற்போக்காக சிந்திக்கும் குணம் இல்லாதவள் தான்..

ஆனால் நடந்த சம்பவங்கள் அவளின் இயல்பையே மாற்றி விட்டது என்று தான் கூற வேண்டும்.

அவள் தயங்கவும் இவனின் முகம் இறுக அழுத்தமாக ஸ்டீரிங்கை பற்றினான். ஏதோ ஒரு இனம் புரியாத கோபமும் அவள் மேல் எழுந்தது. வண்டியின் வேகத்தை கூட்டியவன் விரைந்து வீட்டை அடைந்தான். அதற்குள் எப்படியோ இனியாள் குழந்தையை தூங்க வைத்து விட்டாள்.

முதல் அனுபவம் அல்லவா எதையுமே சரி வர செய்ய தெரியவில்லை. என்ன தான் வாய்மொழியாகவும் பார்த்தும் தெரிந்து கொண்டாலும் கூட அனுபவப்பூர்வமாக உணர்வது என்பது புதிய உணர்வு தானே.

கேட்பதற்கும் உணர்வதற்கும் இருக்கும் வித்தியாசத்தை இப்பொழுது தான் உணர்ந்து கொண்டிருக்கிறாள்.

அவளையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டே பாரிவேந்தன் வீட்டிற்குள் நுழைய. அவனிடம் இருந்த இறுக்கம் மொத்தமாக தணிந்து விட்டது. ஏதோ ஒரு புதிய இனம் புரியாத மகிழ்ச்சி அவனுக்குள் குடி கொள்ள தொடங்கியது. இந்த நாளுக்காக தானே இத்தனை நாட்கள் காத்துக் கிடந்தான்.

அவளின் தோளை சுற்றி வளைக்க மேலெழுந்த கையை சட்டென்று அடக்கியவன். தன் மாற்றத்தை எண்ணி தானே அதிர்ந்தவாறு விறுவிறுவென அவளை விட்டு இரு அடி முன்னே நடந்தான்.

இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. புதிய இடம் சுற்றும் மற்றும் பார்வையாலேயே அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

பெரிய அளவிலான வீடு தான். வீட்டின் செழுமையை பார்க்கும் பொழுதே இவர்கள் வசதி படைத்தவர்கள் என்பதை யாரும் கூறாமல் கூறியது.

ஹாலில் பெரிய அளவிலான ஓவியம் பிரேம் செய்து மாற்றப்பட்டிருந்தது.

அதில் நடுவே 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி நாற்காலியில் அமர்ந்திருக்க.

அவருக்கு வலது புறம் அவரை போன்றே வயதை ஒத்த ஒரு ஆணும் இடதுபுறம் பாரிவேந்தனும் நாற்காலியின் கைப்பிடியில் அமர்ந்திருந்தனர்.

இருவரின் கைகளும் முத்துலட்சுமியின் தோளில் இருந்தது.

மூவரின் முகத்திலுமே அத்தனை மகிழ்ச்சி.

“இது எங்களுடைய குடும்ப புகைப்படம். அது என்னுடைய அம்மா அப்பா” என்று அதில் இருப்பவர்களை இனியாளுக்கு அறிமுகப்படுத்தினான்.

பார்க்கவே மகாலட்சுமி போல் சாந்தமான முகத்தோடு அமர்ந்திருந்தார் முத்துலட்சுமி.

அவருக்கு அருகே கம்பீரமாக தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அவரின் கணவர் கனகலிங்கம்.

அப்பொழுது அறையில் இருந்து வெளிவந்த முத்துலட்சுமி, “வா பாரி யார் இவங்க?”.

அவரின் குரலில் கலைந்த இருவரும் அவரை பார்க்க.

“அம்மா இவங்க பேரு இனியாள். நம்ம ஹாஸ்பிடல்ல தான் டெலிவரி ஆச்சு. இந்த ஊர்ல யாரையும் தெரியாதுன்னு சொன்னாங்க. கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம் அதான் உங்களை பாத்துக்குறதுக்காக அப்பாயின் பண்ணி இருக்கேன்”.

இனியாளை நோக்கி மென்மையாக புன்னகைத்தவர், “எதுக்கு பாரி இதெல்லாம்?”.

“இருக்கட்டும் மா நீங்க எவ்வளவு கஷ்டப்படுறீங்கன்னு நானும் தினமும் பார்த்துக்கிட்டு தானே இருக்கேன். உங்களை இங்க தனியா விட்டுட்டு ஹாஸ்பிடல் போயிட்டு நீங்க எப்படி இருக்கீங்களோனே மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு. உங்களுக்கு துணையா ஒருத்தரை வேலைக்கு சேர்த்தா நானும் நிம்மதியா என் வேலையை பார்ப்பேன்”

அதற்கு மேல் முத்துலட்சுமி மறுக்கவில்லை. தன் மகன் நிம்மதியாக இருப்பான் என்று கூறிய பிறகு அவரால் மறுக்க முடியுமா என்ன..

மெதுவாக நடந்து வந்து இருக்கையில் அமர்ந்தவர், “இப்படி உட்காருமா” என்று தன் அருகே இருந்த இருக்கையை கை காண்பித்தார்.

இனியாளும் மறுக்காமல் சென்று அமர்ந்து கொள்ள.

“என்ன குழந்தை பிறந்திருக்கு?”.

“பெண் குழந்தை”.

“ஓ! அப்போ மகாலட்சுமி பிறந்திருக்கா..” என்றவரை நோக்கி வலுக்கட்டாயமாக சிரித்தாள்.

“எனக்கும் பெண் குழந்தைகள் என்றால் அவ்வளவு ஆசை. ஆனா எனக்கு ஒரே பையன் தான். பாரிக்கு அப்புறம் குழந்தை தங்கல. நானும் அவன் அப்பாவும் ஒரு பெண் குழந்தை பெத்துக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தோம். என்ன பண்றது நமக்கு என்ன கிடைக்கணும்னு இருக்கோ அது தானே கிடைக்கும்” என்றார் பெருமூச்சை வெளியேற்றியவாறு.

இனியாள் எதுவும் கூறவில்லை. அவர் கூறுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

புதிதாக ஒருவரை சந்திக்கும் பொழுது எடுத்த எடுப்பிலேயே கலகலவென பேசும் குணம் கொண்டவள் கிடையாது அவள்.

அதுவே ஒருவருடன் சற்று ஒன்றிவிட்டால் நன்கு பேச தொடங்கி விடுவாள்.

பாரி வேந்தன் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கான அறையை தயார் செய்து கொண்டிருந்தான்.

என்ன தான் அவன் அறையை சரி பார்த்துக் கொண்டிருந்தாலும் அவனின் முழு கவனமும் இவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதில் தான் இருந்தது.

இனியாளிடமிருந்து குழந்தையை தான் பெற்றுக் கொண்டவர் சற்று நேரம் அதனை கொஞ்சிக் கொண்டிருந்தார். தன் சொந்த பேத்தி என்று அறியாமலே அவ்வளவு ஆசையாக அக்குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார்.

“குழந்தையோட அப்பா என்னமா பண்ணுறாரு?” என்று சட்டென்று அவர் கேட்டு விடவும்.

அவருக்கு பதில் உரைக்க முடியாமல் திணறினாள் இனியாள்.

“அது.. அது வந்து.. மேடம்..” என்று அவள் தடுமாறவும்.

“அம்மா விதுஷா வீடியோ கால் பண்ணி இருக்கா உங்க கிட்ட பேசணுமாம்” என்றவாறு கையில் செல்போனுடன் அவ்விடம் வந்து சேர்ந்தான் பாரிவேந்தன்.

சற்று நேரத்தில் படபடப்பாக ஆகிவிட்டது இனியாளுக்கு.. அவனின் பார்வை தப்பாமல் அவளில் படிந்தது.

“ஓ! நம்ம விதுமாவா.. குடு குடு..” என்றவர் செல்பேசியை வாங்கிக் கொண்டு, “விது குட்டி எப்படி இருக்க.. எங்க நினைப்பெல்லாம் உனக்கு இப்போ தான் வந்துச்சா.. எப்போ ஊருக்கு வருவ?” என்று விசாரித்தார்.

“அம்மா நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் இவங்களை அந்த ரூம்ல விட்டுட்டு வரேன்” என்று தன் தாயிடம் கூறியவன் இனியாளை பார்த்து தலையசைக்கவும்.

அவளும் சட்டென்று எழுந்து அவனின் பின்னோடு சென்றாள்.

“நான் நல்லா இருக்கேன் அத்தை நீங்க எப்படி இருக்கீங்க.. இன்னும் 2 டேஸ் தான் உங்களை எல்லாம் பார்க்க பறந்து வந்திடுவேன்” என்றாள் கலகலவென்று.

‘யாரு விதுஷா.. அத்தைனு கூப்பிடுறாங்க.. ஓ! அப்போ டாக்டர் சாருக்கு கல்யாணம் ஆகிடுச்சா..’ என்று எண்ணியவளோ, ‘ரொம்ப நல்ல குடும்பம் கடைசி வரைக்கும் இவங்க எல்லாம் சந்தோஷமா இ

ருக்கணும்’ என்று மனமாற வேண்டிக் கொண்டாள்.

தான் இருக்க வேண்டிய இடத்தில் தன்னை அறியாமலே வேறொருத்தியை வைத்து பார்க்கிறாள் என்பதை அவள் உணர்வது எப்போது..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “என்‌ பிழை நீ”

Leave a Reply to E2K Writers Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!