வழக்கமாக வெகு நேரம் அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கும் முத்துலட்சுமிக்கு ஏனோ இனியாள் வந்த பிறகு புத்துணர்ச்சி கிடைத்தது போல் ஆகிவிட்டது. முதல் நாளே அவரோடு நன்கு இணைந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும்.
அதிலும் அந்த பிஞ்சு குழந்தையை அவர் மடியில் ஏந்தி இருக்கும் பொழுதெல்லாம் மற்ற சிந்தனைகள் அனைத்தும் புறம் தள்ளி வைத்துவிட்டு ஏதோ புதிதாய் பிறந்ததைப் போன்று உணர்கிறார்.
தன் மடியில் கிடக்கும் அந்த சிசுவை ஆசையாக வருடிவிட்டவர் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு, “பாரியும் இப்படி தான் சின்ன வயசுல கொழுகொழுன்னு இருப்பான். பார்க்கவே அவ்வளவு ஆசையா இருக்கும்.
அவனுடைய அப்பாவுக்கு அவன் பிறந்தது அவ்வளவு சந்தோஷம்.. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தார்னா அவன் அவர் மடியிலேயே தான் இருப்பான். அவரும் அவனை இறக்கி விடவே மாட்டார்” என்றவரின் கண்களில் மெல்லிய நீர்ப்படலம் அந்நாளின் நினைவோடு.
“வாழ்க்கை எவ்வளவு வேகமா ஓடுது இல்ல.. இப்போ திரும்பி பார்த்தா அவர் என்னோட வாழ்ந்த நினைவுகள் மட்டும் தான் என்கிட்ட இருக்கு அவர் இல்லை..” என்னும் பொழுதே அவரின் இதழ்கள் துடித்தது.
அவரின் கையின் மீது தன் கையை வைத்து அழுத்தத்தை கொடுத்த இனியாள், “கவலைப்படாதீங்க மேடம் அதான் உங்க பையன் உங்களோட இருக்காரே.. அவர் உங்களை நல்லா பாத்துப்பார் என்ற நம்பிக்கையில் தான் சார் உங்களை விட்டுட்டு போயிருப்பாரு..
வாழ்க்கையில் எப்போ என்ன நடக்கும்னு நாம முடிவு பண்றது இல்லையே.. முடிவு எடுக்கும் சக்தி மட்டும் நமக்கு இருந்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்” என்ற வார்த்தைகளை அவள் முத்துலட்சுமிக்காக கூறினாளோ.. அல்லது தனக்கு தானே கூறிக் கொண்டாளோ.. அது அவள் மட்டுமே அறிந்த உண்மை.
“என்னை அவன் நல்லா தான் பாத்துக்குறான். ஆனா அவனை பார்த்துக்கொள்ள தான் என்னால் முடியல” என்று கூறியவர் தங்களின் சிறு வயதில் நடந்த சம்பவங்களையும் இனியாளுடன் பகிர்ந்து கொண்டார்.
அவருக்கு ஏனோ இனியாள் தன்னுடன் மிகவும் நெருக்கம் ஆகிவிட்ட உணர்வு.
பரிவேந்தனுடன் அமர்ந்து இப்படி எல்லாம் பேச அவருக்கு பெரும்பாலும் சந்தர்ப்பமே அமையாது என்பதைவிட அவன் அமைத்துக் கொள்ள மாட்டான் என்று கூறினால் தான் சரியாக இருக்கும்.
ஏனெனில், பாரிவேந்தனுடன் முத்துலட்சுமி பேச ஆரம்பித்தாலே இறுதியில் அது அவனின் திருமணத்தில் சென்று தான் நிற்கும். அதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவன் நடந்து கொள்ளவே மாட்டான்.
எனவே தன் தாயைப் பற்றி மட்டுமே விசாரித்துவிட்டு மருத்துவமனை நோக்கி புறப்பட்டு விடுவான். ஒரு புறம் உண்மையிலேயே அவனுக்கு மருத்துவமனையில் வேலை பளு இருந்தாலும் மற்றொரு புறம் அவன் தன் திருமணத்தை தவிர்ப்பதற்காகவே அவருடன் வெகு நேரம் பேச மாட்டான் என்பது தான் நிதர்சன உண்மை .
அப்படியே அவர்களின் குடும்ப புகைப்படம் அடங்கிய ஆல்பத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையாக இனியாளிடம் காண்பித்துக் கொண்டு அவர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்.
இறுதியில் பாரியின் குடும்பமும் விதுஷாவின் குடும்பமும் ஒன்றாக நிற்கும் புகைப்படம் வந்தது.
“இது தான் ராஜசேகர் அண்ணா.. அப்புறம் இது அவருடைய மனைவியும் மகளும் நேத்து கூட எனக்கு வீடியோ கால் பண்ணி பேசிக்கிட்டு இருந்தாளே” என்று முத்துலட்சுமி அவளுக்கு நினைவூட்டும் விதமாக கூறவும்.
‘அப்போ இவங்க தான் டாக்டர் சாரோட வைஃபா’ என்று எண்ணியவளும், “ரொம்ப அழகா இருக்காங்க மேடம். டாக்டர் சாருக்கும் இவங்களுக்கும் ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு” என்று தன் மனதில் பட்டதையும் வெளிப்படையாக கூறிவிட்டாள்.
அவள் கூறியதை கேட்டு தன் கண்களை பெரிதாக விரித்த முத்துலட்சுமி, “உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?”.
பாரி வேந்தனும் விதுஷாவும் கணவன் மனைவி என்ற எண்ணத்தில் இனியாள் பேசிக் கொண்டிருக்க.
அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ளாத முத்துலட்சுமியும் பல வருடங்களாக தாங்கள் பாரிவேந்தனுக்கும் விதுஷாவிற்கும் திருமணம் முடிக்கலாம் என்ற யோசனையில் இருப்பது இவளுக்கு எப்படி தெரிய வந்தது என்ற எண்ணத்தில் கேள்வி எழுப்பினார்.
அவருக்கு அவள் பதில் உரைப்பதற்குள்ளாகவே அவ்விடம் வந்து சேர்ந்த பாரிவேந்தன், “என்னம்மா இந்த நேரத்துக்கெல்லாம் நீங்க ரூம்ல படுத்து இருப்பீங்களே இன்னைக்கு என்ன ஹாலில் உட்கார்ந்து இருக்கீங்க?” என்றவாறு இவர்களை நோக்கி வந்தான்.
அவர்கள் இருவரின் பேச்சும் அத்துடன் தடைப்பட்டது.
“சும்மா பேசிகிட்டு இருந்தோம் கண்ணா நீ என்ன இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து இருக்க.. அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே”.
“நோ மா.. கொஞ்சம் ரெஸ்ட்லஸ்ஸா இருக்க மாதிரி இருந்துச்சு அதான் வீட்டுக்கு கிளம்பி வந்துட்டேன் பெருசா பேஷன்சும் இல்ல” என்று வாய்க்கு வந்ததை அடித்து விட்டான்.
தன் தாயின் மடியில் நித்திரையில் இருக்கும் தன் மகளை உரிமையோடு ஏந்தி கொண்டவனின் கண்களோ ஆசையாக அவனின் மகளை வருடியது.
“அப்படியே உன்னை சின்ன வயசுல பார்த்த போல இருக்கு பாரி” என்று அவனின் தாய் புன்னகைக்கவும்.
அவரை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவனும் அவருக்கு ஆமோதிப்பாக தலையசைத்தான்.
“பாரி நீ கவனிச்சியா குழந்தையோட கையில் உனக்கு இருக்க போலவே நட்சத்திர வடிவில் மச்சம் இருக்குப்பா” என்று அவர் ஆர்வமாக கூறவும்.
“ஓ! அப்படியா.. நான் கவனிக்கவே இல்லையே” என்றவனுக்கும் இப்பொழுதே அதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
ஆனால் அவனின் மகளோ உனக்கு காட்ட மாட்டேன் என்பது போல் தன் கையை குறுக்கி படுத்தவாறு ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
பாரிவேந்தனுக்கு பிறக்கும் பொழுதே அவனின் வலது கையின் மணிக்கட்டில் நட்சத்திர வடிவில் மச்சம் இருந்தது. அதேபோல் அவனின் மகளுக்கும் இருப்பது அனைவருக்கும் இவள் தான் தன் மகள் என்பதை பறைசாற்றும் விதமாக தான் அவனுக்கு தோன்றியது.
மிக மிக மெதுவாக குழந்தையின் கையை திருப்பி பார்த்தவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. தன்னை போலவே தன் மகள் பிறந்திருக்கிறாள் என்பதில்..
அவனின் விழிகள் அடுத்ததாக இனியாளை எதிர் நோக்க.. அவளோ அங்கே அமர முடியாமல் சங்கடத்தோடு அமர்ந்திருந்தாள்.
“நான் கொஞ்ச நேரம் படுக்கிறேன் பாரி ரொம்ப டயர்டா இருக்கு” என்றவாறு முத்துலட்சுமி எழுந்து சென்றுவிடுவும் தனித்து விடப்பட்டது என்னவோ பாரியும் இனியாளும் தான்.
இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் பாரி வேந்தனுக்குள் ஏதோ ஒரு உரிமை உணர்வு இனியாளின் மேலும் தோன்றியது.
அங்கே வீற்றிருந்த போட்டோ ஆல்பத்தை பார்த்த பாரி, “ஓ! எங்க அம்மா மொத்த கதையையும் உன்கிட்ட சொல்லிட்டாங்களா” என்று புன்னகையோடு கேட்டான்.
அவனின் இலகுவான பேச்சு இனியாளுக்கும் சற்று சங்கடத்தை நீக்க, “ஆமா சார் சும்மா உங்க குடும்ப ஆல்பத்தை காட்டிட்டு இருந்தாங்க” என்றவள் அப்பொழுது தான் நினைவு வந்தவளாக, “சார் உங்க வைஃப் ரொம்ப அழகா இருக்காங்க உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் பொழுது மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி இருக்கீங்க”.
அவளின் வார்த்தையில் அவளை அதிர்ந்து பார்த்த பாரிவேந்தன், “என்ன சொல்ற?”.
அவனின் அதிர்ந்த பார்வை இவளுக்குள் எதையோ உணர்த்த, “விதுஷா மேடம் பத்தி தான் சொன்னேன் சார். அவங்க உங்க வைஃப் தானே?” என்றாள் சந்தேக குரலில்.
“நோ! ஷி இஸ் மை ஃபிரண்ட்” என்றான் அழுத்தமாக.
அவனின் வார்த்தையில் சரியாக விசாரிக்காத தன் மேல் கோபமும் அவனின் முன்பு சங்கடமும் ஆகி போக.
“இட்ஸ் ஓகே” என்றவனின் குரல் சற்று கோபமாக தான் இருந்தது.
“ஈவினிங் என்னுடைய ஃபிரண்ட்ஸ் வராங்க அவங்களுக்கு டின்னர் இங்க தான் ரெடி பண்ணனும் செல்வி அக்கா வந்தாங்கன்னா அவங்க கிட்ட இன்பார்ம் பண்ணிடு” என்று விட்டு அவன் எழுந்திரிக்கவும்.
இவளும் அவசரமாக இருக்கையில் இருந்து எழுந்தாள். குழந்தையை அவளிடம் நீட்டியவனின் கைகள் பட்டும்படாமலும் அவள் கையை தீண்டியது.
அந்த தீண்டலே அவனுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வை கொடுக்க. அவள் அருகில் முற்றிலுமாக இலகிப் போய்விட்டான்.
“நீ வா போனு கூப்பிடலாம் இல்ல” என்று தனக்கு வெகு அருகில் நின்றிருந்தவளை பார்த்துக்கொண்டே கேள்வி எழுப்பவும்.
“ம்ம்” என்றவளுக்கு இன்னமுமே விதுஷாவை அவனின் மனைவியாக எண்ணி பேசியதில் சற்று சங்கடமாக தான் இருந்தது.
அதன் பிறகு இனியாள் குழந்தையோடும் முத்துலட்சுமியுடனும் நேரத்தை செலவிட.
பாரிவேந்தன் தான் அவ்வபொழுது அவளை எண்ணி அலைபாயும் தன் மனதை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான்.
அவன் கூறியது போலவே ஏழு மணி அளவில் விதுஷாவும் அவனின் நண்பன் அரவிந்தும் இவர்களின் வீட்டை அடைந்தனர்.
உள்ளே நுழைந்ததுமே விதுஷா, “அத்தை” என்ற அழைப்போடு முத்துலட்சுமியை அணைத்துக் கொள்ளவும்.
‘ச்ச.. இப்படி இவங்க அத்தைனு சொல்லவும் தான் நாம தப்பா புரிஞ்சுகிட்டோம். என்ன இருந்தாலும் நாம தெளிவா விசாரிச்சு இருக்கணும்’ என்று தன்னை தானே கடிந்து கொண்டு நடப்பவற்றை பார்வையாளராக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் இனியாள்.
“எப்படி இருக்கீங்க ஆன்ட்டி?” என்ற அரவிந்தனின் கேள்விக்கு, “நான் நல்லா இருக்கேன் பா நீ எப்படி இருக்க.. வீட்டுக்கு எல்லாம் வரர்தே இல்ல இப்போ தான் உங்க ரெண்டு பேருக்கும் வர வழி தெரிஞ்சதா” என்று உரிமையோடு கடிந்துக் கொண்டார்.
அவர்கள் பேச்சு இனியாளுக்கும் சுவாரசியமாக இருந்தது.
“அம்மாடி இனியா செல்வி கிட்ட சொல்லி இவங்களுக்கு சாப்பிட கொண்டு வாமா” என்ற முத்துலட்சுமிக்கு சிறு தலையசைப்பை பதிலாக கொடுத்தவள் சமையலறையை நோக்கி நடக்கவும்.
புதிதாக பாரிவேந்தனின் வீட்டில் இடம்பெற்றிருக்கும் பெண்ணை எடை போடும் பார்வை பார்த்தான் அரவிந்த்.
“யார் அத்தை அது?” என்று விதுஷா கேள்வி எழுப்பவும்.
அவளை பற்றிய முழு விவரத்தையும் கூறினார் முத்துலட்சுமி.
அவரின் பேச்சில் யாரும் அறியா வண்ணம் அரவிந்த்தின் இதழ்களுக்குள் நக்கல் சிரிப்பு இழைந்தோடியது.
‘அன்னைக்கு உங்க மகன் செஞ்ச சம்பவத்துக்கு இந்நேரம் அந்த பொண்ணு பிரக்னெண்டா இருந்திருந்தா உங்களுக்கும் இப்படி தான் பேரக் குழந்தை பிறந்திருக்கும்’ என்று தன் மனதிற்குள் வன்மமாக எண்ணியவன் வெளியே சா
ந்தமான முகத்தோடு அமர்ந்திருந்தான்.
உண்மையிலேயே பாரி வேந்தனின் குழந்தை தான் இது என்பதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
Super
Thank you dr 😊