பாரிவேந்தனும் விதுஷாவும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள்..
அவர்களின் அப்பா காலத்து நட்பு இவர்கள் வரையிலும் தொடர்கிறது. இருவரும் ஒன்றாக தான் பள்ளிக்கு சென்றார்கள்..
இருவரின் தந்தையுமே மருத்துவர்களாக இருப்பதால் இருவருக்குமே அவர்களை போன்றே மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட இருவருமே மருத்துவ துறையை தேர்ந்தெடுத்தனர்.
மருத்துவ கல்லூரியில் இவர்களுக்கு நண்பன் ஆனவன் தான் அரவிந்த்.
என்ன தான் அரவிந்த் இவர்களுடன் நெருங்கி பழகினாலுமே பாரிவேந்தனும் விதுஷாவும் ஒரு சில குடும்ப விஷயங்களை பற்றி தனித்து இருக்கும் பொழுது மட்டும் தான் பேசுவர்.
அது அரவிந்திற்கு தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக் கொள்வான். அதெல்லாம் அவனுக்கு அப்பொழுது பெரிதாக தெரியவில்லை.
அவர்கள் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவன் விதுஷாவிடம் அவளை காதலிப்பதாக கூற..
ஆனால் அரவிந்தால் அவ்வளவு இலகுவாக கடந்து விட முடியவில்லை.
சில மாதங்களாக விதுஷாவின் மேல் இனம் புரியாத ஒரு உணர்வு அவனுக்கு துளிர் விட தொடங்கியிருந்தது. அன்று தான் அதை காதல் என்று உணர்ந்து கொண்டான்.
விதுஷா இப்படி கூறவும் தன்னையும் மீறி எழுந்த கோபத்தோடு, “லுக் விதுஷா! படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையில்லாத விஷயம்.. அதுவும் அவனை மாதிரி ஒரு ஆளை செலக்ட் பண்ணி உன் லைஃபை நீயே ஸ்பாயில் பண்ணிக்காத.
இப்போ நீ உன்னுடைய கரியர்ல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணு இந்த லவ் ரிலேஷன்ஷிப் இதையெல்லாம் பியூச்சர்ல பாத்துக்கலாம்” என்று பாரி வேந்தன் இல்லாத சமயம் அவளை அமர வைத்து சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தான்.
அவனின் பேச்சில் சலித்து போன விதுஷா, “ஐயோ அரவிந்த், எனக்கும் இப்போ அப்படியெல்லாம் எந்த ஒரு ஐடியாவும் இல்லை. அவன் கேட்டான்னு தான் நான் சொன்னேன். நீ ஏன்டா இவ்வளவு அட்வைஸ் பண்ற தாங்க முடியல”.
விதுஷா எதையுமே இலகுவில் கடந்து செல்லும் குணம் கொண்டவள்.
கலகலப்பானவளும் கூட..
இன்று வரையிலுமே அவள் கடக்க முடியாது திணறும் ஒரே விஷயம் பாரிவேந்தன்!
ஆம், சிறு வயது முதலே நண்பனாக பார்த்தவனின் மேல் எப்போது எந்த இடத்தில் காதல் முளைக்க தொடங்கியது என்பதை அவளே அறியவில்லை.
உண்மையை கூறப் போனால் இது காதல் தானா என்று கூட அவளுக்கு விளங்கவில்லை.
ஆனால் ஏதோ ஒரு உணர்வு பாரிவேந்தனின் மேல் இருப்பது மட்டும் அவளுக்கு புரிந்தது. அதற்கு காரணம் அவர்கள் இருவரின் குடும்பத்தாருமாக கூட இருக்கலாம்.
உயிர் நண்பர்களாக பயணித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையில் என்று இரு குடும்பத்தாரும் சேர்ந்து திருமண பேச்சை பேசினார்களோ அன்று முதல் தான் விதுஷாவின் மனதில் இந்த தடுமாற்றம் உருவெடுக்க தொடங்கியது.
பாரிவேந்தனின் தந்தை இறந்த பொழுது அவன் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்தான். எனவே, அவனின் தாய்க்கு பக்கபலமாக இருந்தது அனைத்துமே விதுஷாவின் தந்தை ராஜசேகர் தான்.
அதன் பிறகு இரு குடும்பமும் இன்னுமே நெருக்கம் ஆகிப் போயினர்.
பாரிவேந்தனின் அளவிற்கு விதுஷாவின் குடும்பம் மிகவும் வசதி படைத்தவர்கள் இல்லாவிட்டாலுமே ஓரளவிற்கு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தான்.
கல்லூரி படிப்பு முடியும் காலகட்டம் அது..
பாரி வேந்தனும் விதுஷாவும் தங்களுடைய முத்துலட்சுமி மருத்துவமனையிலேயே மருத்துவர்கள் ஆக பணியாற்ற முடிவு செய்தனர்.
அரவிந்தும் விதுஷாவை பிரிய முடியாமல் இவர்களுடனே இணைந்து கொண்டான்.
அவனை நண்பனாகவே பாவித்த மற்ற இருவருக்குமே இது பெரிதாக தெரியவில்லை. நாட்கள் அழகாக நகர்ந்தது நாளுக்கு நாள் விதுஷாவின் மேலிருந்த காதல் அரவிந்தின் மனதில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய தொடங்கியது.
அவளுக்காக என்ன வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற அளவிற்கு கண்மூடித்தனமான காதலாக அது மாறியது.
இப்படியான நாட்களில் தான் ஒரு நாள் அவர்கள் மருத்துவர்களாக பணியாற்ற தொடங்கி இரண்டு வருடம் கடந்திருக்கும் ராஜசேகரின் மனைவி ராதிகா அன்று முத்துலட்சுமியை சந்திப்பதற்காக அவரின் வீட்டிற்கு வந்திருந்தார்.
“அண்ணி நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க விதுஷாவை உங்களுக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். எங்களுக்கும் பாரியை சின்ன வயசுல இருந்தே தெரியும். ரெண்டு பேருக்குமே வயசாகிட்டே போகுது நாம ஏன் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்க கூடாது” என்று தன் மனதில் பட்டதை எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி முத்துலட்சுமியிடம் கேட்டார்.
முதலில் இவர் கூறுவதை கேட்டு அதிர்ந்த முத்துலட்சுமி, “என்ன சொல்றீங்க அண்ணி விதுஷாவும் பாரியும் ஏதாவது காதல்..” என்று அவர் தடுமாற்றத்தோடு இழுக்கவும்.
“ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல அண்ணி எனக்கு தோணுச்சு அதான் உங்ககிட்ட கேட்டேன். இரண்டு குடும்பத்துக்கும் பல வருஷ பழக்கம்.. பசங்க ரெண்டு பேரும் கூட ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துமையா இருக்காங்க.. இவங்களுக்கு ஏன் கல்யாணம் செஞ்சு வைக்க கூடாதுன்னு தோணுச்சு அதான் அண்ணி கேட்டேன்”.
அவர் கேட்பதை மறுக்க தன்னிடமும் காரணம் இல்லை என்பதை உணர்ந்த முத்துலட்சுமி, “ரொம்ப சந்தோசம் அண்ணி.. என்ன சொல்றதுன்னு தெரியல.. எனக்கு இப்படி ஒரு எண்ணம் வரவே இல்ல பாருங்க.. உண்மையிலேயே விதுஷா ரொம்ப நல்ல பொண்ணு விதுஷா மாதிரி ஒரு மருமக என் குடும்பத்துக்கு வர நாங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்” என்றார் மன நிறைவாக.
அவரின் வார்த்தையில் ராதிகாவிற்கும் மனம் நிறைந்து போக, “ரொம்ப சந்தோஷம் அண்ணி நான் உடனே இதை பத்தி விதுஷாவோட அப்பா கிட்டயும் விதுஷா கிட்டயும் பேசுறேன். பசங்க விருப்பம் தானே நமக்கு முக்கியம். நீங்களும் பாரிகிட்ட பேசி பாருங்க ரெண்டு பேருக்கும் சம்மதம்னா மேற்கொண்டு இதைப்பற்றி பேசலாம்”.
முத்துலட்சுமியும் அவருக்கு ஆமோதிப்பாக தலையசைத்தார்.
அதன் பிறகு வந்த நாட்களில் விதுஷாவிடமும் அவரின் அன்னை இதைப்பற்றி கூறினார். ஆரம்பத்தில் விதுஷா இவரின் பேச்சை ஆதரிக்கவே இல்லை.
“என்னமா பேசுறீங்க நீங்க.. நான் போய் எப்படி பாரியை கல்யாணம் பண்ணிக்க முடியும். நாங்க ரெண்டு பேரும் சைல்ட்வுட் பிரண்ட்ஸ்.. எனக்கு அவனை சின்ன வயசுல இருந்தே தெரியும். இதுவரைக்கும் நான் அவனை அப்படி பார்த்தது கூட இல்லை” என்றவளுக்கு அவரின் வார்த்தையை கேட்ட பிறகு பெரும் சங்கடமாக இருந்தது.
“என்னங்க இவ இப்படி பேசுறா.. நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று ராதிகா தன் கணவரை தன் சார்பாக பேச அழைக்கவும்.
“ரெண்டு பேரும் ஒரு விஷயத்தை நல்லா கேட்டுக்கோங்க.. கனகலிங்கம் குடும்பத்தை எனக்கு பல வருஷமா தெரியும். அதே போல நீயும் பாரியும் நல்ல நண்பர்கள். இந்த திருமண விஷயத்தால் ரெண்டு குடும்பத்துடைய நட்புக்கும் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது.
அதை மட்டும் நல்லா மனசுல வச்சுக்கோங்க.. அப்புறம் ராதிகா இந்த விஷயத்துல முடிவு பண்ண வேண்டியது விதுஷா தான். அவ முடிவு என்னவோ அதான் என்னுடைய முடிவும்.
அவ பாரியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா எனக்கும் ரொம்ப சந்தோஷம். பாரி மாதிரி ஒரு பையன் என் பொண்ணுக்கு மாப்பிள்ளையா வருவதில் எனக்கும் சம்மதம் தான்.
அதே சமயம் விதுஷா வேண்டாம்னு முடிவு பண்ணாலும் நான் அதுக்கு தடையா நிக்க மாட்டேன். ஏன்னா இது அவளுடைய வாழ்க்கை.. வாழ போறது அவங்க ரெண்டு பேரும் தான்.
சின்ன வயசுல இருந்தே தெரியும் என்பதற்காக அவங்கள கல்யாணம் பண்ணிக்க சொல்லி நாம கட்டாயப்படுத்த முடியாது இல்லையா.. இந்த விஷயத்துல நீ விதுஷாவை எதுவும் போர்ஸ் பண்ணாத..
விதுமா நீ நல்லா யோசி டா யோசிச்சிட்டு உன்னுடைய முடிவை அம்மாகிட்ட சொல்லு. உனக்கு சம்மதம்னா மட்டும் தான் இதைப்பற்றி மேற்கொண்டு பேசுவோம். இல்ல வேண்டாம்னா இந்த பேச்சை இப்படியே விட்டு விடலாம். நோ வொரிஸ்” என்று தன் மகளின் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு விட்டார்.
“இங்க பாருடா விது அம்மா ஒன்னும் உன்னை போர்ஸ் பண்ணல.. பாரி மாதிரி ஒரு நல்ல பையன் உனக்கு மாப்பிள்ளையா வந்தால் நல்லா இருக்கும்னு தான் சொல்றேன். நல்லா யோசிச்சு பாரு சின்ன வயசுல இருந்தே உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியும்.
நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்குடா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல.. புருஷன் பொண்டாட்டிக்கு அடிப்படையே இந்த புரிதல் தானே.. அது உங்க ரெண்டு பேர்கிட்டயும் நிறையவே இருக்கு.
அதனால் தான் பாரியை உனக்கு பேசலாம்னு நினைச்சேன். ஆனா உன்னுடைய விருப்பம் என்னவோ அதுதான் எங்களுடைய விருப்பமும் நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லு” என்றபடி அவரும் நகர்ந்துவிட.
இறுதியில் முடிவு எடுக்கும் வாய்ப்பு விதுஷாவின் கைக்கு வந்துவிட்டது. என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
இது நாள் வரை நண்பனை தாண்டி பாரிவேந்தனை அவள் பார்த்ததே கிடையாது.
நல்லவன் தான்..
அன்பானவனும் கூட..
இருவருக்கும் இடையே நல்ல புரிதலும் இருக்கிறது. ஆனால், திருமணம் எல்லாம் சரி வருமா.. அவன் என்ன நினைப்பான்.
முதல் முறை பாரியின் மேல் எழும் உணர்வை புரிந்து கொள்ள முடியாமல் தத்தளித்தாள்.
அதன் பிறகு பாரியை பற்றியே அதிகமாக சிந்திக்க தொடங்கினாள். அவளின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அவளை அறியாமலே இடம் பிடிக்க தொடங்கினான் பாரிவேந்தன்.
நட்புக்கும் காதலுக்கும் இடையே ஒரு முடிவை எடுக்க முடியாமல் தள்ளாடியவள் நண்பனாக அரவிந்தை நாடி சென்றாள்.
Super
Thank you 🙏