23. காதலோ துளி விஷம்

4.8
(100)

விஷம் – 23

நாட்கள் மிக வேகமாக நகர்ந்தன.

யாழவனின் அறை ஜன்னலில் முகத்தைப் புதைத்தவாறு விழிகளில் தேங்கிய கண்ணீரோடு நின்றிருந்தாள் அர்ச்சனா.

இன்று அவளுடைய பிறந்த நாட்டை விட்டு செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு.

இனி அவளுடைய வாழ்க்கை யாழவனுடன் லண்டனில் அல்லவா தொடங்கப் போகின்றது.

பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் தயார் செய்தவளுக்கு பிரிவுத் துயரம் அழுத்தத்தான் செய்தது.

அதே கணம் குளித்துவிட்டு இடையில் துவாலையுடன் வெளியே வந்த யாழவனின் பார்வையோ விரித்துவிட்ட கூந்தலுடன் சாளரத்தின் ஓரமாக நின்ற அவனுடைய தேவதையின் மீது பதிந்தது.

சத்தம் இன்றி அவளை நெருங்கி வந்தவன், பின்னாலிருந்து அவளை அணைத்துக் கொண்டவாறு அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைக்க, அவனுடைய தொடுகையில் பதறியவள் பின் தன் விழிகளை வேகமாகத் துடைத்துக் கொண்டாள்.

அவள் அழுதுகொண்டிருக்கிறாள் என்பதை புரிந்துக்கொண்டவனுக்கு சட்டென போக உணர்வு அறுந்து போனது.

வேகமாக அவளுடைய தோள்களைப் பற்றி தன்னை நோக்கி அவளைத் திருப்பியவன்,

“என்னடி?” என மென்மையான குரலில் கேட்க,

அப்படியே அவனுடைய மார்பில் சாய்ந்துகொண்டவளுக்கு கண்ணீர் வழிந்தது.

“எல்லாரையும் விட்டுட்டுப் போறத நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு யாழன்… அம்மாவும் தங்கச்சியும் நானில்லாம சமாளிப்பாங்களான்னு தெரியல…” என வருத்தத்துடன் கூறினாள் அவள்.

“நீ இப்ப எதுக்காக கவலைப்படுற? நான் பாத்துக்குறேன்டி. கீர்த்தனாவோட ஸ்டடிஸ் சம்பந்தப்பட்ட செலவு எல்லாத்தையும் நாமலே பார்த்துக்கலாம். உங்க வீட்டுக்கு மாசா மாசம் பணம் அனுப்பலாம்.”

“நான் பணத்துக்காக சொல்லலங்க…”

“தெரியும்டி. பட் பயப்படாத. என்னோட ஃபேமிலி மாதிரி உங்க பேமிலியையும் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ என்ன மட்டும் நம்பி வா. இங்க இருக்க எல்லாரையும் நான் பார்த்துக்கிறேன்.” என காதலுடன் கூறினான் அவன்.

அக்கணம் அவளுடைய முகத்தில் சற்றே தெளிவு பிறந்தது.

அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு, அவனுடைய மார்பில் தன் முகத்தைப் புதைத்தவள்,

“தேங்க்ஸ் யாழன்…” என்றாள்.

“வெறும் தேங்க்ஸ் தானா? வேற எதுவும் இல்லையா?” என ஆசையாகக் கேட்டவன், விழிகளால் படுக்கையை சுட்டிக்காட்ட, சட்டென அவனை விட்டு விலகியவள்,

ஒரு விரலை நீட்டி,

“பத்திரம்!” என சிரிப்போடு எச்சரித்தாள்.

“ஹா.. ஹா பட் ஆச அடங்கவே மாட்டேங்குதே..” என்றான் அவன்.

அவளுக்கோ முகம் குப்பென சிவந்து விட்டது.

“இன்னும் கொஞ்ச நேரத்துல நாம இங்க இருந்து கிளம்பணும்… நமக்காக எல்லாரும் கீழ வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… சீக்கிரமா ட்ரெஸ் பண்ணிட்டு வாங்க.” என்றாள் அவள்.

அதே கணம் அவளுடைய அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்றவள்,

“சொல்லு அத்த… ஏன் கால் பண்ணீங்க? நான் கீழ வரட்டுமா?” என அர்ச்சனா ரூபாவதியிடம் கேட்க,

“உன்னோட அம்மாவும் தங்கச்சியும் வந்திருக்காங்க. சீக்கிரமா வாம்மா..” என்றதும்,

இவளுக்கோ உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது.

பதில் கூட கூறாது, அழைப்பைத் துண்டித்தவள்,

“ஏங்க…?”

“சொல்லுங்க மேடம்…”

“எங்க அம்மாவும் கீர்த்தனாவும் வந்திருக்காங்களாம்… நான் கீழ போறேன்..” என்றவள், சிரித்தவாறு ஓடியே விட, சிறுமி போல துள்ளிக் குதித்துக் கொண்டு செல்லும் தன் காதல் மனைவியை எண்ணி, அவனுக்கும் சிரிப்பு முகிழ்த்தது.

வேகமாக ஆடையை மாற்றிக் கொண்டு எடுத்து வைத்த பெட்டிகளை எல்லாம் வேலைக்காரர்களை அழைத்து தங்களுக்காக காத்திருந்த காரில் அடுக்கச் சொன்னவன், கீழே வந்தான்.

அங்கே சோபாவில் தன்னுடைய தங்கைக்கும் அன்னைக்கும் நடுவே அமர்ந்து விழிகள் கலங்க பேசிக்கொண்டிருந்த தன்னுடைய மனைவியை இன்னும் பிடித்துக் கொண்டது அவனுக்கு.

இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என எண்ணியவன் தன்னுடைய அன்னையை நெருங்கினான்.

“இனி எப்படா வருவ..? அடுத்த நாலு வருஷத்துக்கு பிறகுதான் வருவியா?” என அவர் ஏக்கமாகக் கேட்க,

“நோ மாம், நெக்ஸ்ட் இயரே கண்டிப்பா வரேன்.” என்றான் அவன்.

“நம்பலாமா டா?” என சிரிப்போடு கேட்டார் ரூபாவதி.

“ட்ரஸ்ட் மீ மாம்,” என்றவனின் பார்வை மீண்டும் தன்னவளின் மீது பாய்ந்தது.

அவளோ தன்னுடைய அன்னையை அணைத்து அழுது கொண்டிருக்க, அதற்கு மேல் தாங்க முடியாமல் அவளை நெருங்கி, அவளுடைய தலையை வருடிவிட்டவன்,

“ஒவ்வொரு வருஷமும் நாம இங்க வந்துட்டுப் போகலாம் பேபி. வேணும்னா இவங்களுக்கும் டிக்கெட் போட்டு நம்ம இடத்துக்கு வரவைக்கலாம்.. நீ அழாத ப்ளீஸ்..” என்றான் அக்கறையுடன்.

“அதான் மாப்பிள்ளையே சொல்லிட்டாருல்ல… அழாத கண்ணம்மா.. சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிங்க..” என்றார் அன்னம்.

“அக்கா, நீ இல்லாம எனக்குத்தான் ரொம்பப் போர் அடிக்கப் போகுது…” என்றாள் கீர்த்தனா.

“அப்போ நீயும் எங்க கூட கிளம்பி வரியா?” எனக் கேட்டான் யாழவன்.

“ஐயோ மாமா, நான் வரல. எனக்கு இந்தியா தான் பிடிக்கும்!” என்றாள் கீர்த்தனா.

“சரிதான்,” என்றவன், அனைவரிடமும் பேசி விடைபெற்றான்.

“அடுத்த வருஷம் வரும்போது என் பேரக் குழந்தையை கூட்டிட்டு வாங்க..” என்றார் ரூபாவதி.

அர்ச்சனாவுக்கோ முகம் சிவந்தது.

இதுவரை குழந்தையைப் பற்றி எல்லாம் சிந்தித்துப் பாராத யாழவனுக்கும், அர்ச்சனாவைப் போல ஒரு பெண் குழந்தை இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை நொடியில் தோன்றி மறைந்தது.

“பத்திரமா போயிட்டு வா..” எந்த உணர்வுகளும் இன்றி கூறினார் அவனுடைய தந்தை,

ஒருவாறாக அனைவரிடமும் விடை பெற்று, தங்களுக்காக காத்திருந்த காரில் அவர்கள் ஏறிக்கொண்டதும், அடக்கி வைத்திருந்த அழுகையோ அர்ச்சனாவுக்கு கண்ணீராக பொல பொலவென விழிகளில் இருந்து வழிந்தது.

அந்த சாலையில் இருந்து கார் திரும்பும் வரை, காரின் கண்ணாடி ஊடாக வெளியே நின்ற தன்னுடைய குடும்பத்தினரை விழிகள் நிறைந்த கண்ணீரோடு பார்த்துக் கொண்டே வந்தவள் உடைந்து போனாள்.

அக்கணம், அவளுடைய கரத்தை இறுகப் பற்றிக் கொண்டவன், “நான் இருக்கேன்…” எனும் விதமாக அவளுடைய கரத்தில் அழுத்தம் கொடுத்தான்.

அவளோ தன் விழிகளைத் துடைத்துக்கொண்டு, தன்னவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

இனி தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரப்போகும் வழித்துணை இவன்தான் என்று எண்ணியவளுக்கு காதல் நெஞ்சம் விம்மியது.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவளின் பார்வை, ஆவலோடு தன் முன்னே விரிந்த காட்சிகளை உள்வாங்கிக் கொண்டது.

“வெல்கம் டூ லண்டன்…” என அவள் முன் கைகளை விரித்து அவளை வரவேற்றவன், அருகே வந்து அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டு விலக,

அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

சட்டென யாரும் பார்த்துவிட்டார்களா எனப் பதறி, அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்தவள்,

அவர்களை யாரும் பெரிதாக கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து, நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டாள்.

“இப்படித்தான் பப்ளிக்ல கிஸ் பண்ணுவீங்களா? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என மெல்லிய குரலில் சீறினாள் அவள்.

“ஏய், இது இந்தியா கிடையாது. இங்க லிப் லாக் பண்ணாலே யாரும் கண்டுக்க மாட்டாங்க… ஃப்ரீயா விடு,” என்றவன்,

அவளுடைய கரத்தை பற்றிக்கொண்டான்.

அவளால்தான் அதை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியாமற் போனது.

அவர்களுக்கு எதிரே பிளாக் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று வந்து நிற்க,

அதை ஓட்டும் டிரைவர் வெள்ளை ஜாக்கெட்டுடன் காரிலிருந்து இறங்கி, அவர்களுக்காக கதவைத் திறந்தவுடன்,

அவளுக்கோ பிரம்மிப்பாக இருந்தது.

“வா,” என்றவன் அவள் காருக்குள் ஏறி அமர்ந்ததும், அவனும் உள்ளே ஏறி அமர்ந்தான்.

கதவை மூடிய டிரைவர், காரை செலுத்தத் தொடங்கினான்.

கார் வேகமாக நகரத்துக்குள் நுழைந்தது.

பறக்கும் புறாக்கள், இரும்புப் பாலங்கள், கண்ணாடிக் கட்டிடங்கள் என அனைத்தும் அர்ச்சனாவிற்கு வியப்பை ஏற்படுத்தின.

“பேபி, இதுதான் என்னோட ஆபீஸ் ஸ்ட்ரீட்… உனக்கு இங்க செட் ஆனதும் எல்லாத்தையும் சுத்திக் காட்டுறேன்…” என்றான் அவன்.

“சரிபா இன்னும் ரொம்ப தூரம் போகணுமா?”

“நாற்பது மினிட்ஸ் ஆகும், பேபி… டயர்டா இருந்தா தூங்கு,” என்றவன் தன்னுடைய மடியைக் காட்ட, அவளோ மறுப்பாக தலையசைத்து விட்டு வெளியே தெரிந்த காட்சிகளை இரசிக்கத் தொடங்கினாள்.

அவனோ அவளை மட்டுமே இரசித்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில்,

“பேபி, நாம் வந்துட்டோம்…” என்ற யாழவனின் குரலில் அவளுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.

கார் ஒரு பிரமாண்டமான இரும்புக் கதவைத் தாண்டி, வைக்கோல் நிறத்தில் அமைந்த தனிப்பட்ட டிரைவ் வேயில் நுழைந்தது.

மூன்று மாடிகள் கொண்ட ஒரு கோட்டைக்கு ஒத்த மாளிகையின் முன்னே கார் நின்றது.

அர்ச்சனாவின் கண்கள் மீண்டும் வியப்பால் விரிந்தன.

அவளுக்கு அது மாளிகையா இல்லை மியூசியமா என்றே புரியவில்லை.

“ஹேய், என்ன அப்படியே நிக்கிற? உள்ள வா…” என அழைத்தான் அவன்.

“இதுதான் உங்க வீடா?”

“எஸ் பேபி.. ஏன் பிடிக்கலையா?”

“இது ரொம்ப பெருசா சினிமா செட் மாதிரி இருக்கு.” என்றாள் அவள்.

“ஹாஹா… உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு, வேற வீடு வாங்கிக்கலாம்.”

“இல்ல இல்ல… எனக்கு பிடிச்சிருக்கு,” என்றவள் அவனுடைய கரத்தில் தன்னுடைய கரத்தை இணைத்தாள்.

அதற்குள் அந்த வீட்டில் வேலை செய்யும் பலர் வெளியே வந்து இவர்களுக்காக காத்துக் கொண்டு நிற்க,

அவர்களில் பலர் வெள்ளையர்கள் என்பதை உணர்ந்து, மீண்டும் வியந்தாள் அவள்.

அவர்களிடம், “இவள் என் மனைவி,” என அறிமுகப்படுத்தியவன், அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.

வீட்டின் வெளிப்புறத்தை விட, உள்புறம் இன்னும் எழிலாக இருந்தது.

செம்மணல் நிற மரத்தால் செய்யப்பட்ட அழகான ஜெர்மன் ஸ்டைல் படிக்கட்டுகள்,

சத்தமில்லாமல் ஓடும் இன்டீரியர் வாட்டர்ஃபால் என அனைத்தும் அவளை பிரம்மிக்க வைத்தன.

“ஐயோ, இன்னைக்கு முழுக்க நான் ஷாக் ஆயிட்டே இருக்கேன்… இன்னும் என்னெல்லாம் இந்த வீட்டுக்குள்ள வச்சிருக்கீங்க?” என சிரித்தவாறு கேட்டாள் அவள்.

“லைப்ரரி கூட இருக்கு..” என்றான் அவன்.

“வாவ் யாழன் உங்க டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு..” என அவள் பாராட்ட,

அவளை அர்த்தம் பொதியும் பார்வை பார்த்தவன்,

“உன்னை செலக்ட் பண்ணதும் நான்தானே.. அப்போ என்னோட டேஸ்ட் நல்லா தானே இருக்கும்…” என்றான் அவன்.

அவளுக்கோ இதழ்களில் வெட்கப் புன்னகை விரிந்தது.

அவளுடைய இடையில் கரத்தைப் பதித்து, தன்னை நோக்கி இழுத்தவன் அவளுடைய உதடுகளை நெருங்க,

“ஐயோ.. ஆ.. ஆளுங்க இருக்காங்க..” என அலறினாள் அவள்.

“ஏய்.. அவங்க இதெல்லாம் பார்க்க மாட்டாங்க டி..”

“உங்களை கொல்லப் போறேன் தள்ளிப் போங்க..” என சிரித்தவாறு அவனை விலக்கி விட்டாள் அர்ச்சனா.

பெருமூச்சோடு விலகி நின்றவன் “முக்கியமான இடம் பார்க்க போகலாமா?” என இமை சிமிட்டிக் கேட்டான்.

“முக்கியமான இடமா? என்னது?”

“நம்ம பெட்ரூம்…” என கிசுகிசுப்பான குரலில் கூறியவன்,

மீண்டும் அவளைத் தன்னருகே இழுத்து அவளுடைய இடையில் தன் கரத்தின் அழுத்தத்தை அதிகரித்தவாறு அவளை மேலே அழைத்துச் சென்றான்.

முகம் முழுவதும் சிவந்து, வெட்கப் புன்னகை சிந்தியவாறே அவனுடன் நடந்தாள் அர்ச்சனா.

அவனுடைய அறைக்குள் நுழைந்தவுடன், ஏதோ ஒரு புதுவிதமான உலகத்திற்குள் நுழைந்தது போல இருந்தது.

அறையின் மேற்கூரை முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்டிருப்பதால்,

அவளால் உள்ளே இருந்தபடியே அழகிய ஆகாயத்தை பார்க்க முடிந்தது.

“வாவ்…!” பிரமித்து விட்டாள் அவள்.

“பிடிச்சிருக்கா? இதுதான் என்னோட உலகம்…” என்றான் யாழவன்.

“ரொம்ப அழகா இருக்கு… ஆனா இதை ஏன் நீங்க உலகம்னு சொல்றீங்க?”

“சின்ன வயசுல இருந்து இங்கதான் வளர்ந்தேன். அதுக்கப்புறம் என் டேஸ்டுக்கு பொருந்துற மாதிரி ரூமை டிஸைன் பண்ணிட்டேன்…”

“சின்ன வயசுல யார் கூட இங்கே இருந்தீங்க?”

“என்னோட 15 வயசு வரைக்கும் அப்பாவும் அம்மாவும் இங்கதான் இருந்தாங்க. அம்மாக்கு லண்டன் செட் ஆகல…

அதனால அவங்க இந்தியா போயிட்டாங்க. என் ஸ்டடீஸ்க்காக நான் இங்கேயே இருக்க வேண்டிய சிட்டுவேஷன்.. இங்கே இருந்து தான் படிச்சேன்.. இங்கதான் என் பிஸ்னஸை வளர்த்தேன்.

என்னோட லைஃப்ல வளர்ச்சி, வெற்றி, தனிமை, சந்தோஷம் எல்லாத்தையுமே இந்த ரூம் பார்த்திருக்கு… இப்போ உன்னையும் பார்த்திருச்சு…” என்றான் அவன்.

அவன் கூறியதைக் கேட்டவளுக்கோ உள்ளம் வாடியது.

சிறுவயதில் இருந்து தனிமையிலேயே வளர்ந்திருக்கிறானே என வேதனையுடன் எண்ணியவள் அவனுடைய கன்னங்களைப் பற்றிக் கொண்டாள்.

“யாழன்.. 15 வயசுல இருந்து தனியாக இருந்தீங்களா?”

“எஸ் பேபி..”

“க.. கஷ்டமா இல்லையா..?”

“பாத்துக்க ஆள் இருந்தாங்க… இங்க எல்லா பசங்களும் அப்படித்தான்…” என்றான் அவன்.

“அப்படி இல்ல யாழன்… நமக்குன்னு ஒருத்தர் கூடவே இருக்கிறது எவ்வளவு நல்லது தெரியுமா?”

அவன் புருவத்தை உயர்த்தி, “அப்படியா?” என்ற பார்வையை அவளை நோக்கிச் செலுத்த,

“ம்ம்.. இனி நான் உங்க கூடவே இருக்கேன்…” எனக் காதலுடன் வார்த்தைகளை உதிர்த்தாள் காரிகை.

அடுத்த சில மணி நேரத்திலேயே ‘உன்னுடன் வாழ முடியாது..’ எனக் கதறும் நிலைக்கு அவளை இழுத்துச் செல்லப்போகும் விதியைப் பற்றி எதுவும் அறியாமல்,

அவனை வெட்கத்துடன் அணைத்துக் கொண்டாள் அந்த மாது.

💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 100

No votes so far! Be the first to rate this post.

1 thought on “23. காதலோ துளி விஷம்”

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். அதான் ஆப்பு வெச்சிட்டீங்களே வினிமா.👌👌👌👌👌👏👏👏👏👏😍😍😍😍🥰🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply to Kotteeswari K Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!