விஷம் – 26
தன்னுடைய தாய் நாட்டிற்கு திரும்பச் செல்ல வேண்டும் என்ற அவளுடைய கோரிக்கை யாழவனிடம் நிராகரிக்கப்பட்டது.
எரிச்சலுடன் அவனோடு சண்டையிட்டவள் அவன் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்க மிகவும் சோர்ந்து போனாள்.
ஒரு மாதம் அவனோடு இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் அவளுக்கு கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.
“நீங்க இப்படி பண்றது ரொம்ப தப்பு.. தப்பு மேல தப்பு பண்றீங்க யாழவன்..” சீறினாள் அவள்.
“இட்ஸ் ஓகே பேபி…” என்றான் அவன் நிதானமாக.
அவனுடைய நிதானத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குத்தான் பொறுமை பறந்து கரைந்து போய்விடும்.
“நீங்க என்ன பிளாக்மெயில் பண்ணி இங்க தங்க வைக்கிறீங்க… இந்த விஷயத்தை அத்தகிட்ட சொல்லிடுவேன்..” என அடுத்த ஆயுதத்தை எடுத்தாள் அவள்.
“நீ போலீஸ்கிட்ட சொன்னா கூட ஐ டோன்ட் கேர்..” என்றான் அவன் அழுத்தமாக.
அவளுக்கோ கண்ணை கட்டிக் கொண்டு வந்து காட்டில் விட்டதைப் போல இருந்தது.
இங்கே எதுவுமே அவளுக்குத் தெரியாது அல்லவா..?
விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு வந்த வழியைக் கூட மறந்து விட்டிருந்தாள் அவள்.
எங்கே சென்று டாக்ஸியை பிடிக்க வேண்டும்..?
விமான நிலையத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும்..?
எதுவுமே அவளுக்குத் தெரியாது.
அவளுடைய பாஸ்போர்ட் தொடக்கம் அனைத்து டாக்குமெண்ட்களும் யாழவனிடம்தான் இருந்தன.
அவளுடைய கையில் பணம் கூட இல்லையே..
அவள் சேமித்து வைத்ததெல்லாம் இந்தியப் பணமாக இருக்க இங்கே அவை தேவைப்படாது என எண்ணி எதையுமே எடுக்காமல் வந்தவளுக்கு இப்போது கையில் பணம் இல்லாமல் டிக்கெட்டை கூட புக் செய்ய முடியாது என்ற உண்மை முகத்தில் அறைய அழுகைதான் வந்தது.
அவனாக இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதென்றால் ஒரு மாதத்தின் பின்னர் தான் அனுப்பி வைப்பேன் என்கிறானே..
அதுவரை அவளால் இங்கே இருக்க முடியுமா..?
அவனுடைய முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஏமாற்றம் அல்லவா நெஞ்சை வதைக்கின்றது.
எப்படி தாங்கிக் கொள்வாள் அவள்..?
எதுவும் கூறாது அங்கிருந்த படுக்கையில் படுத்து விடலாம் எனச் சென்றவளுக்கு இதில் இன்னொரு பெண்ணும் படுத்திருப்பாளே என்ற எண்ணம் தோன்ற உடல் அருவருத்துப் போனது.
கண்ணீரோடு அங்கே இருந்த சோபாவில் படுத்துக் கொண்டவளுக்கு தன்னுடைய திருமண வாழ்க்கை தோற்றுப் போய்விட்டதாக தோன்றியது.
விழிகளை மூடிக் கொண்டாள்.
எவ்வளவோ ஆசைகளோடு வாழ்க்கையை ஆரம்பிக்க வந்தவளுக்கு வலி மட்டுமே பரிசாகக் கிடைத்திருந்தது.
அம்மாவிற்கு மட்டும் தன்னுடைய முடிவு தெரிந்தால் அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார் என்ற கேள்வி அவளை மிகவும் குழப்பியது.
இந்தத் திருமணம் சரியாக வராது என அன்றே கூறினாரே.
அப்போதாவது நான் இதைப் பற்றி சிந்தித்திருக்க வேண்டுமோ..?
லண்டனில் படித்து அங்கேயே வளர்ந்தவன் எப்படி வாழ்ந்திருப்பான் என்ற கேள்வியை எதற்காக அவனிடம் நான் கேளாமல் விட்டேன்..?
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் போல அல்லவா ஆகிவிட்டது.
உள்ளம் தகித்தது.
சற்று நேரத்தில் அவள் அருகே வந்த யாழவனோ அவளுடைய கைகளைப் பற்றிக்கொள்ள பதறி விழிகளைத் திறந்தவள் அவனை அந்நிய பார்வை பார்த்தாள்.
அந்தப் பார்வையை உணர்ந்து கொண்டாலும் தன் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளாமல் “சாப்பிடலாம் வா..” என அவளை அழைத்தான் அவன்.
“எனக்கு வேணாம்..”
“ப்ச்… என் மேல இருக்க கோபத்த சாப்பாடு மேல எதுக்குடி காட்டுற?” என்ற யாழவனின் வார்த்தைகள், அவளுடைய உடலை மேலும் இறுகச் செய்தன.
அவளால் தனக்குள் புகுந்த வலியைக் காட்டிக் கதறவும் முடியவில்லை.
அவனிடம் இயல்பாக பேசவும் முடியவில்லை.
அவனைப் பார்க்கும் போதெல்லாம், இந்த மனிதன் என் வாழ்க்கையை இப்படிச் சிதைத்து விட்டானே என்ற கோபமும் ஏமாற்றமும் அவளுக்குள் எழுந்தது.
“அர்ச்சனா உன்கிட்டதான் பேசிகிட்டு இருக்கேன்.. இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..?”
“உங்க கூட பேச பிடிக்கலைன்னு அர்த்தம்…”
“ஓகே என் கூட பேச வேணாம் வந்து சாப்பிடு வா…”
“என் வாழ்க்கையே நாசமா போச்சுன்னு கவலைல இருக்கேன்.. இப்ப சாப்பாடுதான் முக்கியமா..?” என எரிந்து விழுந்தாள் அவள்.
“நாசமா போற அளவுக்கு எதுவும் நடக்கல நீ வா..”
“ஐயோ… உங்களுக்கு நான் சொல்ல வர்றது ஏன் புரியவே மாட்டேங்குது..? எப்பவுமே நீங்க நினைச்சதுதான் நடக்கணுமா..? என்னோட சைட்ல இருந்து யோசிக்கவே மாட்டீங்களா..?” என அவள் மீண்டும் கோபத்தில் கத்த அடுத்த நொடி அவளுடைய முகத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டவன் அவளுடைய உதடுகளை நெருங்கி இடைவிடாது அவனைத் திட்டிக் கொண்டிருந்த உதடுகளை அழுத்தமாகக் கவ்விக் கொண்டான்.
அவளோ அதிர்ந்து விழிகளை விரிக்க, அவனோ ஆழ்ந்து அவளுடைய உதடுகளை சுவைத்துக் கொண்டிருந்தான்.
முதலில் அதிர்ந்து அவனுடைய கரங்களுக்குள் அடங்கிப் போனவள் அடுத்த நொடியே வெறுப்போடு அவனுடைய மார்பில் கரத்தை பதித்து வேகமாக அவனைத் தள்ளி விட்டாள்.
அவளை விட்டு விலகியவனின் பார்வையோ மீண்டும் அவளுடைய உதடுகளை நாட அவளுக்கோ கோபத்தில் உதடுகள் துடித்தன.
தன்னுடைய உதடுகளை புறங்கையால் வேகமாக துடைத்துக் கொண்டவள் “ச்சீஈஈ..” என்றுவிட அவனுடைய முகமோ இருண்டு போனது.
விருட்டென எழுந்து கொண்டான் யாழவன்.
அவனுடைய தன்மானம் அடிவாங்குவதை அவனால் தாங்க முடியவில்லை.
வேகமாக எழுந்து சென்றவன் சற்று தள்ளி இருந்த மேஜை மீது வைத்திருந்த இருவரின் உணவுத் தட்டுகளையும் கோபத்தில் மேஜை மீதிருந்து தட்டி விட்டான்.
மார்பிள் தட்டுகள் கீழே விழுந்து உடைந்து நொறுங்கும் சத்தத்தில் அர்ச்சனாவுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
பயந்து போனவள் என்ன சத்தம் என்பது போல எழுந்து வந்து பார்க்க அங்கே அவர்கள் இருவருக்காகவும் தயார் செய்த உணவோ தரையில் சிந்திக் கிடந்தது.
அவனோ அப்போதும் ஆத்திரம் அடங்காதவனாக தன்னுடைய கைமுஷ்டியை மடக்கி அந்த மேஜை மீது ஓங்கிக் குத்த அந்த கண்ணாடி மேஜையின் நடுவே விரிசல் ஏற்பட அவனுடைய ஆக்ரோஷம் கண்டு நடுங்கிப் போனாள் அர்ச்சனா.
நின்ற கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்தது.
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாது வேகமாக அந்த அறையை விட்டு வெளியே செல்லும் நோக்கத்தில் அவளோ ஓடிச் செல்ல,
அவளுடைய வழியை மறைத்தவனின் விழிகளோ இரத்தமனச் சிவந்திருப்பதைக் கண்டு அவளோ உறைந்து போனாள்.
அவளை நோக்கி ஒற்றை விரலை எச்சரிப்பது போல நீட்டியவன்,
“என்ன பாத்து சீன்னு சொல்றியா..?” எனக் கர்ஜிக்க, அவளுக்கோ அவனுடைய மிரட்டலில் உடல் தூக்கிப் போட்டது.
தன் வழிமறித்து நின்றவனின் மார்பில் கரத்தைப் பதித்து அவனைத் தள்ளியவள் அவனைத் தாண்டி வெளியே ஓடிவந்து ஹாலில் அமர்ந்து கொண்டாள்.
உடல் அழுகையில் தேம்பியது.
அங்கே வேலை செய்து கொண்டிருந்த பலரின் பார்வையும் அவளைத் தீண்டினாலும் எதுவுமே நடவாதது போல அவர்கள் தத்தமது வேலைகளில் மூழ்கி விட தன்னுடைய உள்ளங்கைகளில் முகத்தை புதைத்தவாறு விம்மி அழுதாள் அர்ச்சனா.
யாராவது வந்து தன்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விட மாட்டார்களா என ஏங்கியது அவளுடைய உள்ளம்.
கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தவன் அவள் பயந்து நடுங்கி வெளியே ஓடிச் சென்றதைக் கண்டதும் தன் தலையிலேயே ஓங்கித் தட்டிக் கொண்டான்.
அந்த சூழ்நிலையை எப்படிக் கையாள வேண்டும் என அவனுக்கே தெரியவில்லை.
இதுவரை எந்தப் பெண்ணிடமும் நிராகரிக்கப்படாத அவனுக்கு விரும்பிய பெண்ணின் உதாசீனமும் வெறுப்பு உமிழ்ந்த வார்த்தைகளும் நிதானத்தை இழக்கச் செய்தன.
ஆனால் மீண்டும் அவளுடைய கண்ணீரை பார்த்த கணமே அவனுக்கு உள்ளம் உருகி விட தன்னையே நிந்தித்துக் கொண்டவன் வேகமாக அவளைத் தேடிக் கீழே சென்றான்.
அங்கே கைகளில் முகத்தை புதைத்தவாறு சோபாவில் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் ஏனோ மனம் தடுமாறியது.
அவனுடைய ஒற்றைப் பார்வையில் ஆங்காங்கே நின்று வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும் அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விட மெல்ல அவள் அருகே சென்று அமர்ந்தவன் “சாரி..” என்றான் மென்மையான குரலில்.
அவளோ அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
ஒற்றை வார்த்தையும் பேசவில்லை.
அவள் முகம் புதைத்திருந்த உள்ளங்கைகளிலிருந்து கண்ணீர் வடிவதைக் கண்டு அவனுக்கோ இதயத்தில் சுருக்கென்ற வலி உண்டானது.
“பேபி ஐ ஆம் ரியலி சாரி…” என்றான் மீண்டும்.
“…..”
அவளுடைய உடல் அழுகையில் குலுங்கியதே தவிர அவனுடைய வார்த்தைகளுக்கு அவள் எந்தவிதமான துலங்களையும் புரியவில்லை.
“ஏய் இங்க பாரு பேபி.. நீ ச்சீன்னு சொன்னதும் என்னால அத தாங்கிக்க முடியல.. உன்னை நான் எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாதா…? நீ ஹேட் பண்ற மாதிரி பேசினாலே கோபமா வருது டி. என்னோட தப்புதான் சாரி.. இனி இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்..
உன்ன மிரட்டணும்னோ பயமுறுத்தணும்னோ நான் அப்படி பண்ணல… என்னை மீறி கோபத்துல அப்படி ரியாக்ட் பண்ணிட்டேன்..
இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம் அர்ச்சனா..? தயவு செஞ்சு என் கூட பேசு… பேசினா தானே பிராப்ளம் சால்வ் ஆகும்… இப்படி அழுதுகிட்டே இருந்தா பிரச்சனை எப்படி தீரும்..? புரிஞ்சுக்கோடி…” என்றான் அவன்.
“எ… என்ன ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்து விடுறீங்களா..?” என விழிகளைத் துடைத்தவாறு அவள் அவனைப் பார்க்க அவனுக்கோ ஐயோ வென்றாகிப் போனது.
“இந்த வீட்டோட ராணிடி நீ.. நீ எதுக்கு ஹாஸ்டல்ல தங்கணும்..?” என்றான் அவன் நிஜமான வேதனையோடு.
“என்னால உங்க கூட இங்க இருக்க முடியல யாழவன்.. உங்கள பார்க்கும் போதெல்லாம் ஏமாந்துட்டோமேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு.. வலிக்குது…”
“சரிடி நான்தான் தப்பு பண்ணிட்டேன்… உன்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை பத்தி நான் எல்லாத்தையும் சொல்லி இருக்கணும்.. உன்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டது என்னோட தப்புதான்… சத்தியமா உன்னை ஏமாத்தணும்னு நினைக்கல.. மன்னிச்சிடு அர்ச்சனா..
நீ எங்கேயும் போக வேணாம்.. இங்கேயே இரு… கொஞ்ச நாளைக்கு நான் வெளிய ஸ்டே பண்றேன்..”
“இது உங்க வீடு.. நீங்க எதுக்கு வெளியே ஸ்டே பண்ணனும்..? எனக்கு ஏதாவது சின்னதா ஒரு வீடு பார்த்து கொடுங்க ப்ளீஸ்..” என்றாள் அவள்.
அவனுக்கோ கசப்பான புன்னகை உதடுகளில் தவழ்ந்தது.
“இல்ல எனக்கு கொஞ்சம் பிஸ்னஸ் சம்பந்தமான டீலிங்ஸ் இருக்கு.. அதெல்லாம் நான் வெளியே இருந்துதான் பார்த்தாகணும்.. கொஞ்ச நாள் நான் வெளியே இருக்கேன்… என்னை பார்க்காம இருந்தா என் மேல இருக்க வெறுப்பு உனக்கு குறையும்னு நம்புறேன்..
இங்க உனக்கு தேவையான எல்லாத்தையும் இங்க வேலை பார்க்கிறவங்க பார்த்துப்பாங்க.. உனக்கு என்ன வேணும்னாலும் அவங்க கிட்ட கேளு.. என் மேல கோபம் போயிடுச்சுன்னா தயவு செஞ்சு எனக்கு கால் பண்ணு.. நீ எப்படின்னு தெரியல ஆனா நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்..” என்றவன் வலியோடு அவளை அணைக்க முயன்று பின் தானே அவளிடம் இருந்து விலகி எழுந்து நின்றான்.
“எல்லாம் சீக்கிரமாவே சரியாயிடும்னு நம்புறேன்.. இந்த பிரச்சனை முடிஞ்சு நீயும் நானும் பழைய மாதிரி சந்தோஷமா இருக்கணும்டி.. இதுதான் என்னோட ஆசை.. ஐ லவ் யூ பேபி பை..” என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றுவிட அவளுக்கோ புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது.
அப்படியே கண்ணீரோடு அந்த சோபாவில் விழிகளை மூடி சாய்ந்து கொண்டாள் அவள்.
சற்று நேரத்தில் ஒரு பெட்டியுடன் மௌனமாக அவளைப் பார்த்தவாறே யாழவன் அந்த வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுவிட அதைக் கூட உணராது அப்படியே படுத்திருந்தாள் அந்த மாது.
💔🫂💔
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.