27. காதலோ துளி விஷம்

4.7
(95)

விஷம் – 27

யாழவன் வீட்டை விட்டுச் சென்று முழுதாக இரு நாட்கள் முடிந்திருந்தன.

அவன் அந்த வீட்டில் இல்லாவிட்டாலும் கூட அர்ச்சனாவிற்கு தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து தன்னுடைய வேலையாட்களால் செய்ய வைத்திருந்தான்.

அவளுக்கு பிடித்த இந்திய உணவுகள் தினமும் சமைத்துக் கொடுக்கப்பட்டன.

அவள் தங்கியிருந்த அறையில் அவள் அணியும் ஆடைகள் தொடக்கம் இதர பொருட்கள் வரை தன்னுடைய ஆட்கள் மூலம் கொண்டு வந்து குவித்திருந்தான் யாழவன்.

அதுமட்டுமின்றி இருவருடைய திருமண புகைப்படத்தையும் பெரிதாக பிரேம் செய்து அவளுடைய அறையில் மாட்டச் செய்திருந்தவனுக்கு அப்படியாவது தன் முகம் பார்த்து கோபம் தீர்ந்து விடாதா என்ற அற்ப ஆசை.

அவளோ அனைத்தையும் அமைதியாக கடந்து கொண்டிருந்தாள்.

அவன் இல்லாத தனிமை அவளுக்கு சற்றே சிந்திப்பதற்கு வாய்ப்பு தந்தது போல இருந்தது.

அவன் இந்த வீட்டில் இல்லாவிட்டாலும் இங்கே உள்ள வேலையாட்களை ரிமோட் கண்ட்ரோல் வைத்து கட்டுப்படுத்துவது போல தனக்கு தேவையானவற்றையெல்லாம் பார்த்து பார்த்து செய்யும் அவனுடைய அக்கறை அவளுக்குப் புரியத்தான் செய்தது.

ஆனால் அந்த அக்கறையில் நனையும் மனநிலைதான் அவளுக்கு கொஞ்சமும் இல்லை.

தினமும் நாளொன்றுக்கு நான்கு தடவைக்கு மேல் அழைப்பெடுத்து பேசும் அன்னையிடம் உண்மையைக் கூற முடியாது தடுமாறி தவித்தபடியே பேசி முடித்து விடுபவளுக்கு மனம் மருகிப் போகும்.

அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் தன்னுடைய சகோதரி கீர்த்தனாவிடம் கூட அவளால் தனக்கு நடந்ததை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

கிட்டத்தட்ட சிறைக் கைதி போல இங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டால் அன்னையும் தங்கையும் உடைந்து போய் விடுவார்களே என்ற அச்சத்தில் நடந்ததைக் கூறாது அமைதி காத்தாள் அர்ச்சனா.

அத்தையிடம் கூறலாமா வேண்டாமா என்ற எண்ணம் அவளுக்குள் ஓடிக் கொண்டுதான் இருந்தது.

என்ன இருந்தாலும் அவர் யாழவனுக்கு அன்னை அல்லவா..?

அவர் கூறினால் யாழவன் கேட்காமல் இருப்பானா..?

அவரால் எனக்கு ஏதும் உதவ முடியுமா என்றெல்லாம் சிந்தித்தவள் அவருக்கு அழைப்பை எடுக்க முயல்வதும் பின்னர் வேண்டாம் என தன்னுடைய முயற்சியை கைவிடுவதுமாகவே இருந்தாள்.

இரவு வந்ததும் அழுகையும் வந்துவிடும்.

இத்தனை நாட்கள் உருகி உருகி காதலித்ததும் திருமணத்திற்கு பின்னர் அவனுடன் இருந்த அந்த இரண்டு நாட்களின் பசுமையான நினைவுகளும் அவளை உயிரோடு வதைத்தன.

அவனுக்கு அவள் நான்காவது பெண்ணாக இருக்கலாம் ஆனால் அவளுக்கு அவன் மட்டும் தானே‌ முதலும் இறுதியும்.

அவனை உயிருக்கு உயிராக அல்லவா நேசித்தாள்.

தன்னுடைய இறுதி வாழ்க்கை மட்டும் வரப்போகும் வழித்துணை என்று நம்பினாளே.

அனைத்தும் சீட்டுக்கட்டு மாளிகை போல அல்லவா சரிந்து போய்விட்டன.

ஏமாற்றத்தையும் வலியையும் காதலின் தகிப்பையும் அவளால் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியவில்லை.

முதல் நாள் முற்றிலுமாக உணவைத் தவிர்த்தவள் பின்பு கடனே என உணவைக் கொறிக்கத் தொடங்கினாள்.

ஒரு ஓரத்தில் யாழவனைப் பார்க்க வேண்டும் போல அவளுடைய மனம் ஆசை கொள்ளும்.

அடுத்த நொடியே தன்னையே கடிந்து கொள்வாள் அவள்.

இன்னும் சில நாட்கள் அவள் இப்படியே பிடிவாதமாக இருந்தால் தன்னையும் வேண்டாம் என விலக்கிவிட்டு இன்னொரு பெண்ணுடன் வாழ ஆரம்பித்து விடுவான் என்ற எண்ணமும் அவளுக்குள் தோன்றத்தான் செய்தது.

மனமெங்கும் கசந்து வழிந்தது.

அவன் மீது அடக்க முடியாத கோபம் அவளுக்கு.

கழுத்தில் தொங்கிய தாலி கூட கனத்துப் போனது.

எப்படியாவது இங்கிருந்து இந்தியாவிற்குக் கிளம்பிச் சென்று விட வேண்டும் என்பதே அவளுடைய மிகப்பெரும் விருப்பமாக மாறிப்போனது.

யாழவனோ வீட்டை விட்டு வெளியே தங்கிக் கொண்ட போதும் அவனுடைய சிந்தை முழுவதும் அர்ச்சனாவை சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தது.

இதோ அவளை விட்டு வந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. பைத்தியம் பிடிப்பது போல இருந்தது அவனுக்கு.

தன்னை வேண்டாம் என வெறுத்து விலகிச் செல்லத் துடிக்கும் பெண்ணை எதற்காக வற்புறுத்தி தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது என்னவோ உண்மைதான்.

ஒரு மாதம் வரை அவளுடைய மனதை மாற்றப் போராடலாம் அப்படி அவள் மாறவில்லை என்றால் அவள் விரும்பிய படி அவளை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு இங்கே தன்னுடைய வாழ்க்கையை தொடலாம் என எண்ணியிருந்தவனுக்கு இந்த இரண்டு நாட்களே அவள் இன்றி கடக்க முடியாத நிலை வந்து விட பெரும் தடுமாற்றமாக இருந்தது.

இதுவரை அவன் இப்படி ஒரு நிலையை எதிர்கொண்டதே இல்லையே.

இந்த சூழ்நிலையை எப்படி சாமர்த்தியமாக கடப்பது என்றும் புரியவில்லை.

மனமும் சித்தமும் எப்போது பார்த்தாலும் அர்ச்சனாவை பற்றியே எண்ணிக் கொண்டிருக்க தலைவலியே வந்து விட்டது அவனுக்கு.

அவர்கள் இருவரும் பழகியது சில நாட்கள்தான் என்றாலும் இருவரும் பகிர்ந்து கொண்ட காதல் கொஞ்சநஞ்சம் அல்லவே..

அந்த காதலின் ஆழம் மாபெரும் விருட்சம் போல வேர் விட்டு வளர்ந்து நிற்க அதை அவ்வளவு எளிதாக அவனால் மறந்து கடந்து விட முடியவில்லை.

என்னதான் சிந்தித்தாலும் இறுதியில் அர்ச்சனா வேண்டும் என்றே அவனுடைய மனம் கதறியது.

தன்னை எண்ணி அவனுக்கே வியப்பாக இருந்தது.

அவளின்றி தனியாக தூங்கியவனுக்கு பஞ்சு மெத்தையும் முள் படுக்கை போல மாறிப் போக இன்றைய இரவை தனியே எதிர்கொள்ளவே தயங்கினான் அவன்.

இக்கணமே அவளிடம் சென்று விடலாமா என ஏங்கிய மனதிற்கு கடிவாளம் இட முடியாது பெருமூச்சோடு எழுந்து கொண்டவன் அடுத்த நொடியே அர்ச்சனாவை பார்ப்பதற்கு கிளம்பலாம் என எண்ணி கார் சாவியை எடுக்க அவனுடைய நெருங்கிய நண்பனான விஷ்வாவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்று காதல் வைத்தவன் “சொல்லுடா..” என்றான்.

“டேய் நல்லவனே ஊருக்குப் போனதும் என்ன மறந்துட்டேல்ல..? லண்டன் போனதும் கால் பண்றேன் மச்சான்னு சொல்லிட்டு இப்போ வரைக்கும் நான் அனுப்பின மெசேஜ்க்கு ஒரு ரிப்ளை கூட பண்ணல.. என்னடா தங்கச்சி கூட நல்லா என்ஜாய் பண்ற போல..?” என விஷ்வா சிரித்தவாறு கேட்க,

“ஹாங்… ஹெயார்ல என்ஜாய் பணாறேன்…” என்றான் யாழவன்.

“டேய் என்னடா சொல்ற..?”

“நீ வேற எரிச்சல கிளப்பாதடா… அச்சு என்னோட பாஸ்ட் லைஃப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு ரொம்ப பிரச்சனை பண்ணிட்டாடா.. என்ன வேணாம்னே சொல்லிட்டா.. இந்தியா போறேன்னு பிடிவாதமா இருக்கா… நானே என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன்..” என்றான் எரிச்சலுடன்.

“ஓ காட்.. நீ உன்னோட பாஸ்ட் பத்தி அர்ச்சனாகிட்ட எதுவுமே சொல்லலையா..?”

“ப்ச்… இல்லடா அவ எதுவுமே கேட்டதில்ல.. எனக்குமே சொல்லணும்னு தோணல… ஆனா இப்போதான் எதுக்குடா சொல்லாம விட்டோம்னு தோணுது.. அப்போவே எல்லா உண்மையும் சொல்லி இருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காதுல்ல..?”” என வேதனையுடன் கூறினான் யாழவன்.

“அப்போவே நீ உண்மைய சொல்லி இருந்தா உன்னை கல்யாணமே பண்ணி இருக்க மாட்டான்னுதான் நினைக்கிறேன்..” என்றான் விஷ்வா.

யாழவனிடம் மௌனம்.

“சரி விடு மச்சி.. கவலைப்படாத.. எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.. என்ன இருந்தாலும் நீ இப்போ அவங்களோட புருஷன்.. எந்த பொண்டாட்டியுமே தன்னோட புருஷனை விட்டுக் கொடுக்க மாட்டாங்கடா.. இப்ப என்ன நிலமைல இருக்கு பிரச்சனை..?” எனக் கேட்டான் அவன்.

யாழவனோ நடந்த அனைத்தையும் கூறிவிட்டு பெருமூச்சு விட,

விஷ்வாவுக்கோ அவனை நினைத்து பாவமாக இருந்தது.

“டேய் நான் சொல்ற மாதிரி கேளு.. இப்படியே போய் நின்னீன்னா மறுபடியும் அவங்க உன் மேல கோபம்தான் படுவாங்க… பேசாம தங்கச்சிக்கு கால் பண்ணி உனக்கு ஆக்சிடென்ட்ன்னு சொல்லிடு..”

“வாட் ஆக்ஸிடென்ட்டா..? நான்தான் பொய் சொல்ல மாட்டேன்னு உனக்குத் தெரியும்ல..? நான் எதுக்குடா பொய் சொல்லணும்..?” எனக் கோபத்துடன் கேட்டான் யாழவன்.

“டேய் நல்ல விஷயத்துக்காக பொய் சொல்றதெல்லாம் தப்பில்லை.. நான் சொல்ற மாதிரி சொல்லு.. அப்புறம் பாரு உன்னை பார்க்க இப்ப நீ இருக்கிற வீட்டுக்கு தங்கச்சி ஓடி வந்துரும்..”

“நிஜமாவாடா சொல்ற..?”

“சத்தியமாதான்டா சொல்றேன்.. ‌ உன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்காங்க.. நீ இன்னொரு பொண்ணு கூட இருந்தத அவங்களால தாங்கிக்க முடியல.. அவங்களால மட்டும் இல்ல இந்தியால பிறந்து வளர்ந்த எந்த பொண்ணாலயுமே தன்னோட புருஷன் இன்னொரு பொண்ணு கூட வாழ்ந்திருக்கான்னு தெரிஞ்சா தாங்கிக்க முடியாதுதான்.. அவங்க பக்கம்தான் நியாயம் அதிகமா இருக்கு..

உன் மேல கோபமும் வெறுப்பும் இருக்கத்தான் செய்யும்.. ஆனா உன்ன உயிருக்கு உயிரா காதலிச்சு இருக்காங்க.. உனக்கு ஒன்னுனா அவங்களால கண்டிப்பா தாங்கிக்க முடியாது… நான் சொன்ன மாதிரி சும்மா சொல்லி பாரு.. அதுக்கப்புறம் உன்கிட்ட பேச வாய்ப்பிருக்கு..” என்றான் விஷ்வா.

“டேய் தேங்க்ஸ்டா..” என்றவன் விஷ்வா எதையோ கூற வர அதைக் கூட கேட்காமல் சட்டென அழைப்பைத் துண்டித்தவன் அர்ச்சனாவிற்கு அழைப்பெடுத்தான்.

அவளோ அழைப்பை ஏற்காது போக அவனுடைய மனமோ சோர்ந்து போனது.

மீண்டும் மீண்டும் அவன் அழைப்பை மேற்கொள்ள ஒரு கட்டத்தில் அழைப்பை ஏற்றவள் எதுவும் பேசாது அமைதியாக இருந்தாள்.

“அ.. அச்சு..?” மென்மையான குரலில் அழைத்தான் யாழவன்.

“………”

“ஹேய் பேச மாட்டியா பேபி…?”

“எதுக்காக எனக்கு கால் பண்ணீங்க..? உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டேன்ல..?” என அவள் கோபமாக சீற,

“எனக்கு சின்ன ஆக்சிடன்ட் ஆயிடுச்சுடி அதப் பத்தி சொல்லதான் உனக்கு கால் பண்ணேன்..” என சோகமான குரலில் கூறினான் யாழவன்.

நொடியில் அவளுடைய தேகமோ படபடத்துப் போனது.

“எ.. என்ன சொல்றீங்க யா… யாழன்..? ஆ.. ஆக்ஸிடன்டா…?? ஐயோ..” என அவள் பதறி அழ ஆரம்பித்து விட,

அவள் யாழன் என்று அழைத்ததிலேயே அவனுடைய மனம் முழுவதும் மகிழ்ச்சியில் நிரம்பிவிட்டது.

யாழவனோ எந்த பதிலும் கூறாது விழி மூடி தனக்கான அவளுடைய பதறலையும் அழுகையையும் ஆழ்ந்து உணர,

“உ.. உங்களுக்கு ஒன்னும் ஆகலையே..? நீங்க நல்லாதான இருக்கீங்க..? ஹ… ஹலோ.. ஹலோ… ஏ.. ஏதாவது பேசுங்க யாழன்… எ.. எனக்கு பயமா இருக்கு…” என அழுதவாறு படபடத்தாள் அவள்.

“பேபி.. பேபி ரிலாக்ஸ்… எனக்கு ஒன்னும் இல்ல.. பட் கைதான் உடைஞ்சிடுச்சு..” என்றான் அவன்.

“ஐயோ ஹாஸ்பிடல் போனீங்களா இல்லையா..? டாக்டர் பார்த்தாங்களா..?” அவளிடமோ அதிக பதற்றம்.

“இல்லடி எங்கேயுமே போகல.. இங்கதான் இருக்கேன்..”

“ப்ளீஸ் உங்களால வீட்டுக்கு வர முடியுமா..? இல்லனா எப்படியாவது என்ன அங்க வர வைங்க.. மு.. முதல்ல டாக்டரை பாருங்க..” என அவள அழுதவாறு கூற,

“ஹாஸ்பிடல் போய்ட்டு நானே வீட்டுக்கு வரேன் அச்சு..” எனக் கூறி அழைப்பைத் துண்டித்தவனுக்கு அவளுடைய தூய நேசம் தித்திப்பாய் உள் இறங்கியது.

அடுத்த நொடியே அவளிடம் கூறிய பொய்யை சகிக்க முடியாது தன்னுடைய ஒற்றைக் கையை இறுகப் பிடித்தவன் அதனை அங்கிருந்த தூணின் மீது வேகமாக மோத,

அவனுடைய கைமுட்டியில் இருந்து உதிரம் வழியத் தொடங்கியது.

“ஸ்ஸ் ஆஆஆ..” என்றவாறு ஒரு முறை கையை வலியோடு உதறினான் யாழவன்.

மீண்டும் முஷ்டியை மடக்கி விட்டு மணிக்கட்டோடு தூண் மோதும் வகையில் மீண்டும் அந்த தூணில் தன்னுடைய கரத்தை அவன் ஓங்கி அடிக்க அவன் அடித்த அடியில் மணிக்கட்டு எலும்பு சற்று பிசகி விட வலி உயிர் போனது.

வலியில் “டாம்…” எனக் கத்தியவன் வலியை கட்டுக்குள் கொண்டு வர சில நொடிகள் போராடினான்.

அந்தக் கையை அவனால் அசைக்கக்கூட முடியவில்லை.

அடுத்த கணம் திருப்தியாக புன்னகைத்துக் கொண்டான் யாழவன்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 95

No votes so far! Be the first to rate this post.

1 thought on “27. காதலோ துளி விஷம்”

Leave a Reply to Kotteeswari K Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!