விஷம் – 34
“பேபி…” என்ற கதறலோடு தன் முன்னே உடைந்து போய் நின்றவளை இறுக அணைத்துக் கொண்டான் யாழவன்.
அவளோ அவனை அணைக்கவும் இல்லை அவனுடைய அணைப்பை விலக்கவும் இல்லை.
அவள் கூறிய வார்த்தைகளை இன்னும் ஜீரணிக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தாள் அந்த பேதை.
“தயவு செஞ்சு இப்படி அமைதியா இருக்காத அச்சு.. எனக்கு பயமா இருக்கு.. ஏதாவது பேசு..”
“……”
“எல்லாமே என்னோட தப்புதான்டி.. நான் முன்னாடி பண்ண எல்லா தப்பும் இப்போ இப்படி வந்து நிற்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்ல அச்சு.. இது எல்லாத்தையும் நான் கண்டிப்பா சரி பண்ணிடுவேன்.. என்ன கொஞ்சம் பாருடி..” என்றவனின் வேதனைக் குரலில் மெல்ல அவனை விட்டு விலகியவள்,
“உங்க குழந்தைங்கள அவ சுமந்துகிட்டு இருக்கானு எப்படிங்க உங்களால சொல்ல முடியுது..? நான் உங்ககிட்ட இந்த விஷயத்தை எவ்வளவு ஆசையா சொல்ல வந்தேன் தெரியுமா..? ஆனா நான் சொல்ல வந்த விஷயத்தையே நீங்க எனக்கு சொல்றீங்க.. எனக்கும் அவளுக்கும் அப்போ என்னங்க வித்தியாசம்..?
எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் எல்லாமே ஒரே செகண்ட்ல இல்லாம ஆக்கிட்டீங்களே.. இப்ப நான் என்ன பண்ணுவேன்..? என்னால முடியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. இவ்வளவு நாளும் உங்க பழசை எல்லாம் மறந்து உங்க கூட புதுசா வாழ்க்கைய இங்கேயே ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா இப்போ இன்னொரு பிரச்சனையோட வந்து நிக்கிறீங்க..
இப்போ நான் என்ன பண்ணனும்..? அந்தக் குழந்தையை ஏத்துக்கிட்டு நீங்க இன்னொருத்தி கூட இருக்கிறத பார்த்துக்கிட்டே நானும் உங்க கூட வாழணுமா..? அதுதான் உங்க ஆசையா..? இன்னும் என்ன உயிரோட கொல்லனும்னு நினைக்கிறீங்களா..?” என அவள் அழுகையோடு கேட்க,
அவனோ நொறுங்கிப் போனான்.
“சத்தியமா இல்லடி.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமே இல்லை.. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும்போது சேஃபாதான் இருந்தோம்.. ஒரே ஒரு நாள்தான் அது மிஸ் ஆச்சு… அவளும் டேப்லட் யூஸ் பண்ணலன்னு சொல்றா..” என அவன் கூறிக்கொண்டு போக,
அவளுடைய கண்ணீரோ அதிகரித்தது.
அதற்கு மேல் அந்த உறவைப் பற்றிக் கூற முடியாது தன் பேச்சை நிறுத்தியவன்,
“கிளாரா என் கூட மட்டும் இருந்தது இல்லை.. அவளுக்கு மத்தவங்க கூடவும் தொடர்பு இருக்கு. இன்னும் அது என்னோட குழந்தை தான்னு கன்ஃபார்ம் ஆகலடி.. இன்னைக்கு போய் டெஸ்ட் பண்ணிட்டு வரேன்… அது என்னோட குழந்தையா இருக்கு சான்சே இல்ல…
நீ பயப்படாத அச்சு… இதுதான் நம்ம குழந்தை.. உன் வயித்துல வளர்றதுதான் என்னோட குழந்தை.. நம்ம எதிர்காலம் எல்லாமே நீங்க மட்டும்தான்டி..” என்றவன் மீண்டும் அவளை அனைத்துக் கொள்ள அவனுடைய மார்பில் முகத்தைப் புதைத்தவள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.
அவளை இன்னும் தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான் அவன்.
“அச்சு அழாதடி.. சத்தியமா இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சா நான் உன்னை காதலிக்காமயே விட்டுருப்பேன்… என்னால உனக்கு எவ்வளவு வலி..? சே.. நிஜமாவே வலிக்குதுடி… நான் வேணும்னு எதையுமே பண்ணல.. உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணி ரொம்ப சந்தோஷமா வாழணும்னு மட்டும்தான் நினைச்சேன்.. ஆனா இங்கு வந்த ஒரு மாசம் முழுக்க நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட.. இதுக்கு மேலயும் நான் உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன் அர்ச்சனா..
சாரிடி சாரி…” என்றவன் அவளுக்கும் மேலாக அழத் தொடங்கி விட அவளோ மிகவும் சோர்ந்து போனாள்.
“ஹேய் போதும் பேபி… நீ அழுதது எல்லாம் போதும்.. இனி நீ அழக்கூடாது.. இனிதான் நீ உன்னோட ஹெல்த்த நல்லா பாத்துக்கணும்.. கிளம்பு.. இப்பவே டாக்டர்கிட்ட போய் செக் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்..” என அவன் கூற,
“இ.. இல்லப்பா என்னால முடியல.. முதல்ல இந்த பிரச்சனையை முடிச்சிட்டு வாங்க.. அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்..” என மறுத்தாள் அவள்.
“ஏய் அது மட்டும் நீ இப்படியே இருக்கப் போறியா..? உன்ன அப்படியே விட்டுட்டு என்னால வேற வேலை பார்க்க முடியுமாடி..? ப்ளீஸ் பேபி கிளம்பு.. ஹாஸ்பிடல் போகலாம்..” என அவளை வற்புறுத்தி அழைக்க அவனை வெறுமையான பார்வை பார்த்தவள் அவனை விட்டு விலகி நின்றாள்.
“நான் இருக்கேன்டி உனக்கு… எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்.. கவலைப்படாம போய் ரெடி ஆகுமா..” என்றான் கரகரப்பான குரலில் அவன்.
உள்ளம் முழுவதும் வேதனை நிரம்பி வழிந்தாலும் இப்போது அதைப் பற்றி சிந்தித்து கவலைப்படத் தொடங்கினால் எங்கே உள்ளே இருக்கும் தன்னுடைய குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ எனப் பயந்தவள் சரியென தலையசைத்து விட்டு மருத்துவமனைக்குச் செல்லத் தயாராகத் தொடங்கினாள்.
யாழவனின் மணமோ வெகுவாக காயம் கண்டது.
எப்படியாவது அர்ச்சனாவை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என தவியாய் தவித்தான் அவன்.
இதுவரை கடவுள்களை வணங்காதவனோ இம்முறை கடவுளை அழைத்து அந்தக் குழந்தை தன்னுடையதாக இருக்கக் கூடாது என மனதார பிரார்த்தனையும் செய்து கொண்டான்.
சற்று நேரத்தில் அர்ச்சனா தயாராகி வந்ததும் அவளை நெருங்கி அவளுடைய கன்னங்களைப் பற்றிக் கொண்டவன்,
அவளுடைய நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு தன்னுடைய ஒற்றைக் கரத்தால் அவளுடைய வயிற்றை வருடிவிட விழிகள் கலங்க அவனைப் பார்த்தாள் அவள்.
“போகலாமா பேபி..?” என அவன் கேட்க மௌனமாக தலையசைத்தாள் அர்ச்சனா.
அவள் முகம் வாடிப் போயிருந்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை முடித்து குழந்தை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
சில மாத்திரைகளும் அறிவுரைகளும் அவளுக்கு வழங்கப்பட அனைத்தையும் கவனமாக செவிமடுத்துக் கொண்டவள் மீண்டும் அவர்களுடைய வீட்டிற்கு திரும்பும் போது மூன்று மணி நேரம் கடந்திருந்தது.
“பேபி எனக்காக நீ எதுவுமே சமைக்க வேணாம்.. நம்ம ஸ்டாஃபே எல்லாத்தையும் பார்த்துக்கட்டும்… நீ ரெஸ்ட் எடு..” என்றான் அவன்.
அதற்கும் அவளிடம் இருந்து ஒற்றை தலையசைப்புத்தான் அவனுக்குப் பதிலாகக் கிடைத்தது.
“பேச மாட்டியாடி..?” உயிர் அடங்கிய குரலில் கேட்டான் அவன்.
“நான் உங்களை லவ் பண்ணதே தப்பா யாழன்..?”
விக்கித்துப் போய்விட்டான் அவன்.
அவனால் பதில் பேசவே முடியவில்லை.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் வலி ஊடுருவி பரவியதைப் போன்ற உச்சகட்ட வேதனையில் நொறுங்கிப் போய் நின்றான் அவன்.
“போ.. போங்க யாழன்.. அது உங்க குழந்தைதானா இல்லையான்னு முடிவு பண்ணிட்டு வாங்க.. அதுவரைக்கும் என்னைத் தனியா விடுங்க..” என்றவள் தன்னுடைய அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
எதுக்கு இந்த லண்டனில் வளர்ந்தோம் என்ற இன்னும் முதல் முறையாக அவனை தாக்கியது.
அன்னையின் வளர்ப்பில் இந்தியாவிலேயே வளர்ந்திருக்கலாமோ..?
அனைத்தும் காலம் கடந்து விட்டதே..
உயிருக்குயிராக நேசித்தவளின் வயிற்றில் என்னுடைய உயிர் உதித்திருக்கிறது ஆனால் அதை எண்ணி மகிழக் கூட முடியாது தவறான முறையில் இன்னொரு உயிரும் அல்லவா உதித்து விட்டது.
அன்னம் தண்ணீர் மறந்து வெகு நேரம் சோபாவில் விட்டத்தை வெறித்தவாறு படுத்துக் கிடந்தவன் மாலை நெருங்கியதும் கிளாராவை வரச் சொன்ன மருத்துவமனைக்குச் சென்றான்.
முடிவெடுக்க முடியாத ஒரு சுமை உள் இதயத்தில் பாறாங் கல்லாய் கனத்தது.
மனித வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். காதலோ, கோபமோ, இரக்கமோ… எதுவாக இருந்தாலும் உண்மைதான் முடிவை தீர்மானிக்க வேண்டும்.. அதற்காகத்தான் இன்று யாழவன் கிளாராவை மருத்துவமனைக்கு அழைத்திருந்தான்.
அவளது கருவில் வளர்ந்துவரும் நான்கு மாதக் குழந்தையின் தந்தை தான்தானா என்பது குறித்த சந்தேகத்தின் முடிவை அறிந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் வந்துவிட்டான் யாழவன்.
நெற்றியோரம் வியர்வை அரும்பியது.
அவனருகே எந்தவிதமான படபடப்பும் இன்றி நின்ற கிளாராவோ
“நான் தயார்,” என்றாள்.
அவளது குரலில் அவசரமோ, பயமோ இல்லை.
ஆனால் யாழவனின் மனதுக்குள்ளோ பெரும் புயலே அடித்துக் கொண்டிருந்தது.
அவளுக்கு இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு இது ஒன்றும் சாதாரண விடயம் அல்லவே.
ரிசப்ஷனில் யாழவன் பெயரை சொல்லியவுடன், எழுந்து நின்றான் அவன்.
“மிஸ்டர் யாழவன் பிரான்சிஸ், நிப் டெஸ்ட் ஃபார் பேட்டர்னிட்டி ரைட்..? ப்ளீஸ் வெயிட்.. நர்ஸ் வில் கால்..” என்றாள் அந்தப் பெண்.
பத்து நிமிடங்களுக்குள், புன்னகை இல்லாத நர்ஸ் ஒருவர் வந்தார்.
“நீங்க ரெடி தானே..? சொன்னது போல உங்கள காயப்படுத்துற மாதிரி எதுவுமே பண்ண போறது கிடையாது.. பிளட் சாம்பிளும் வாய் திசு மட்டும்தான் எடுக்க போறோம் ரிலாக்ஸ் பண்ணுங்க..” என்றார்.
முதல் முறையாக யாழவனின் கண்கள் கிளாராவை ஓர் அன்னியப் பார்வையோடு பார்த்தன.
அவளோ நிதானமாக உள்ளே சென்றாள்.
அவளுக்கு பின் சென்ற நர்ஸ், யாழவனை அழைத்தாள்.
படபடப்புடன் உள்ளே சென்று தேவையானதை கொடுத்தவனைப் பார்த்து “யூ மே கோ.. ரிசல்ட் வில் பி ரெடி இன் ஃபைவ் வொர்க்கிங் டேஸ்..” என்றார் அந்தத் தாதி.
ஐந்து நாட்கள்!
முழுதாக ஐந்து நாட்கள் விடை தெரியாமல் தவிக்க வேண்டுமா..?
இந்தப் பிரச்சனையின் முடிவு தெரியும் வரை தன்னை தனியாக விடும்படி அர்ச்சனா உறுதியாகக் கூறிவிட்டாளே..
அவனுடைய மனமோ புலம்ப ஆரம்பித்துவிட்டது.
இது என்னுடைய குழந்தையாக இருக்கவே இருக்காது..
ஒருவேளை என்னுடைய குழந்தையாக இருந்தால்..?
சே சே.. அப்படி எல்லாம் இருக்காது..
ஆனால் கிளாராவைப் பார்த்தால் பொய் சொல்லுபவள் போல இல்லையே..
ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கடுக்கான எண்ணங்கள் அவனைக் குழப்ப, மெல்ல அந்த அறையை விட்டு வெளியே வந்தான் யாழவன்.
அவனைப் பின் தொடர்ந்து வந்த கிளாராவோ அவனது தோளை ஒரு முறை தொட்டாள்.
அந்தத் தொடுகையில் திரும்பி அவளை என்னவென்பது போல பார்த்தான் அவன்.
“நீ ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க..? எந்த ரிசல்ட் வந்தாலும் எனக்கு பயம் கிடையாது..” என்றாள் நிதானமாக.
“வெல்.. ரிப்போர்ட் வந்ததுக்கு அப்புறமா உன்கிட்ட பேசுறேன்..” என்றவன் அவளைத் திரும்பியும் பார்க்காது வேகமாக அந்த மருத்துவமனையை விட்டு வெளியே சென்றான்.
வீட்டிற்குச் சென்ற பின்பு கூட அவனைத் தனிமைதான் சூழ்ந்தது.
அர்ச்சனாவை சென்று பார்க்கும் தைரியம் அவனுக்கு இருக்கவில்லை.
அவள் கூறியது போல அவளை விட்டு விலகியே இருக்க ஆரம்பித்தான் அவன்.
இனி வரப் போகின்ற இந்த ஐந்து நாட்களும் நிச்சயம் அவனுக்கு நரகம்தான்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.