9. நேசம் கூடிய நெஞ்சம்

4.7
(13)

நெஞ்சம் – 9

காரை ஒட்டிக்கொண்டு இருந்தவனின் பார்வை ரியர்வியு மிர்ரில் பின்னால் அமர்ந்திருந்தவளையே தொட்டு தொட்டு மீண்டது. கொஞ்சம் கோபம், கொஞ்சம் வருத்தம் என கலவையாக இருந்தாள். ஆனால் அவளை அதே மனநிலையில் இருக்க விடாமல் அவந்திகா அவளுடன் விளையாடினாள். ஓகே, இந்த பாப்பாவை அந்த பாப்பா வைச்சு சரி பண்ணிடலாம் என்று சிரித்து கொண்டான் அர்விந்த்.

அவர்கள் மால் சென்றவுடன், ஜனனி அவள் தோழிகளுடன் சென்று விட்டாள். குழந்தையை போக்கு காட்டி வைத்துக்கொண்டாள் மலர் அப்பொழுது. நாலைந்து நாட்கள் கூடவே இருந்த பழக்கத்தில் அவந்திகாவும் அவளிடம் இருந்து கொண்டாள் சமத்தாக. குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இவன் பக்கமே பார்க்காமல், சுற்று புறத்தை வேடிக்கை பார்த்தவளிடம் அவன் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்று,

“வா உனக்கு டிரஸ் வாங்கலாம்” என்றான்.

“ஐயோ, சார் அதெல்லாம் வேண்டாம், இப்போ எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை சார்!”

“நீதான் அம்பி அந்நியன் மாதிரி அழுவே அப்பறம் சிரிப்பே, நான் அப்படி இல்லை, சொன்னா சொன்னது தான்! வா” என்று வலுகட்டாயமாக அவளை அழைத்து சென்றான். அவன் அவந்திகாவை அவளிடம் இருந்து தூக்கி கொண்டு நிற்காமல் நடக்க, இவள் மட்டும் எப்படி தனியே நிற்பது? அவன் பின்னாலேயே ஓடினாள். இவள் ஓடிய வேகத்திற்கு அவளின் கிரிப் இல்லாத செருப்பு வழுக்கி விட, ஐயோ அம்மா என்று கத்த, என்ன ஆச்சு அவளுக்கு என்று வேகமாக திரும்பி நின்று பார்த்தான் அரவிந்த். வழுக்கி தடுமாறியவள் சரியாக அவனிடம் வந்து அவனை இறுக கட்டிப்பிடித்து நின்றாள். ஒரு கையில் குழந்தை, மறுகையில் நெஞ்சில் சாய்ந்து அவனை கட்டிப்பிடித்தபடி நின்ற மலர், அவன் தடுமாறி கீழே விழாமல் நின்றது தெய்வச் செயல் தான். இருவரையும் இறுக்கி பிடித்தபடி அவன் நின்றது கவிதையாய் இருந்தது பார்ப்பதற்கு. அவனின் அணைப்பில் இருக்கிறோம் என்று உணர்ந்தவள், வேகமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவனிடம் இருந்து விலக முயற்சித்தாள், ஆனால் முடியவில்லை. அவனின் கை அவளின் முதுகின் வழியே அவளின் தோளை அவனின் நெஞ்சோடு அழுந்த பிடித்து இருந்தது. விலக முடியவில்லை என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் மலர். தன்னை பார்க்கும் அந்த விழிகளிடம் ஏதும் சொல்ல துடித்தனவோ அவன் விழிகள்? தெரியவில்லை அவளுக்கு ஆனால் அவன் இதழ் அதி மென்மையாக அவள் பெயரை உச்சரித்தது!

“விழி!”அவ்வளவு தான், வேறு எதுவும் பேசவில்லை!

“நான் இப்போ ஒக்கே தான் சார்” என்றவள் மெதுவாக அவனிடம் இருந்து அசைந்து அசைந்து விலகினாள். இருக்கும் சூழ்நிலை உணர்ந்து, இன்னும் அவள் அவன் கைக்குள்ளேயே இருக்கும் உணர்வோடு மெதுவாக நடந்தான் அர்விந்த். ஐயோ, இப்படி ஆய்டுச்சே என்ற சங்கடத்தோடு மலர் அவன் பின்னே மெதுவாக நடந்தாள். அப்போது அவர்களை நோக்கி ஒரு பெண் ஓடி வந்தது. வந்த பெண், மலரிடம் வேகமாக கன்னடத்தில் பேச, அர்விந்த், அவளுக்கு கன்னடம் தெரியாது என்று கூறி, அந்த பெண் அதன் போனில் காட்டியதை தனக்கு அனுப்பச் சொல்லி வாங்கிக் கொண்டான்.

அந்த பெண் சென்றதும், மலர் என்னவென்று கேட்க, “ஒண்ணுமில்லை அட்ரஸ் கேட்டது!” என்றான் சிரிப்பை அடக்கி கொண்டு.

“மால் குள்ளே, அதுவும் ஓடி வந்து என்கிட்ட அட்ரெஸ் கேட்க போகுதா? பொய் சொல்லாதீங்க, நான் ஒன்னும் அவ்ளோ முட்டாள் இல்லை….” குமுறினாள் மலர்.

“ஆமா, அவ்ளோ முட்டாள் இல்லை…. கொஞ்சம் முட்டாள்னு வைச்சுக்கலாமா?”

“என் டிரெஸ்ஸை பத்தியா? எங்கேயாவது கிழிஞ்சு போச்சா? இல்லைனா என்கிட்ட என்ன பேச வந்தது அந்த பொண்ணு?” வேக வேகமாக முன் பின் திரும்பி தன் உடையை ஆராய்ந்தாள் மலர்.

“ஹேய் லூசு! என்னை கோபப்படுத்தாதே, பேசாம வா என்கூட” என்று இப்போது எதை பற்றியும் கவலைப்படாமல் அவள் கையை பற்றி இழுத்துக் கொண்டு போனான் அர்விந்த்.

ஒரு கடையின் உள்ளே நுழைந்தவன், கடகடவென்று நாலைந்து டாப்ஸ் மற்றும் சுடி எடுத்தான். ஹெல்ப் பண்ணவா என்று கேட்டு வந்த சேல்ஸ் பெண்ணை போகச் சொல்லிவிட்டான். அவனே அவளை ட்ரையல் ரூம் அருகே அழைத்து சென்று, “வரிசையா போட்டு வந்து காட்டு, நான் இங்கே தான் நிற்பேன்” என்றான்.

அவள் முழிக்க, “போ!” என்று மெல்லமாக ஒரு அதட்டு போட்டான். அவன் எடுத்த அத்தனையும் அவ்வளவு பாந்தமாக பொருந்தி இருந்தது அவளுக்கு. அவள் மறுக்க மறுக்க, நான்கு டாப்ஸ், அதற்கு தோதாக பேண்ட், இரண்டு சுடி செட்டும் எடுத்து விட்டான். பின் செருப்பு கடைக்கும் அழைத்து போய் நல்ல செருப்பாக வாங்கி கொடுத்தான்.

“என்னோட இந்த மாசம் சம்பளத்தில பாதி போய்டுச்சு போலையே!” அவள் அவனிடம் கேட்க,

“என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?”

“என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?” பதிலுக்கு அவளும் கேட்டாள்.

“உன்னை தானே? லூசு தான் நீ! அதுவும் சந்தேகமே இல்லாம!” உற்சாகமாக கிண்டல் செய்தான் அவளை. அப்போது அவந்திகா அவனிடம் இருந்து இவளிடம் தவ்வ, அவளை வாங்கும் சாக்கில், அவந்திகாவின் காலால் அவனை உதைக்க வைத்து வாங்கினாள்.

அவளின் செயலை ரசித்தான் அர்விந்த். சிரித்துக்கொண்டே, “இவ்ளோ தான் உன்னால முடியும்! பொழைச்சு போ” என்றான். பின் ரொம்ப நேரம் நடந்துக் கொண்டே இருக்க முடியாது, எதாவது சாப்பிடலாம் என்று அவளை அங்கு இருக்கும் புட் கோர்ட்க்கு அழைத்து சென்றான். அவளிடம் என்ன வேணும் என்று கேட்க, என்ன சொல்வது என்று தெரியவில்லை அவளுக்கு. அதனால் காபி மட்டும் என்றாள். அவளை ஒரு விதமாக பார்த்து, நான் வாங்கிட்டு வரதை சாப்பிடு என்றவன் அவளுக்கு புதிது புதிதான ஐட்டம் எல்லாம் வாங்கி வந்தான். கடைசியாக கோன் ஐஸ் வாங்கி வந்து தர, அவன் முன் அதை சாப்பிடுவதற்குள் மூச்சு முட்டி போனாள் மலர். சரியாக அவள் எதிரில் அமர்ந்து இருந்தான் அர்விந்த். அவன் பார்வை முழுதாக அவள் மீது தான். அந்த கோனை ஐஸை எப்படி நாவால் அவன் முன் சாப்பிடுவது? வெட்கம் ஒரு பக்கம், தயக்கம் ஒரு பக்கம் என தவித்து, பொறுமையாக நாக்கு வெளியேவே வராமல் இதழால் உண்டாள் மலர். அவள் எதிரில் அமர்ந்து ஐஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தவனுக்கு தன்னை ஏறெடுத்தும் பாராமல், மெதுவாக இதழை குவித்து குவித்து அவள் ஐஸ்கிரீம் சாப்பிடும் அழகில் ஜில்லென்ற உணர்வுக்கு பதிலாக உடம்பு சூடாகி கொதித்தது. இவளைத் தான் பார்க்கிறான் அவன் என்று மலருக்கு புரிய, அவள் முகம் ரத்தமென சிவந்தது. அவந்திகா பாப்பா இவர்களை தொல்லை செய்யாமல், பேபி சேரில் அமர்ந்து அது ஒரு கப் ஐஸை அழகாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தது. ஜுரம் வந்து சரியான பிள்ளைக்கு மாமன் ஐஸ் வாங்கி கொடுத்தது தெரிந்தால் இருக்கு அவனுக்கு ஜனனியிடம்.

டேய், டேய் இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லை டா! மன்மதன் அவனின் அடாவடியில் குமுறினார். அவரின் உணர்வை மதித்து, ஓடிக் கொண்டு இருக்கும் ரீலை அத்துவிடாலம் என்று கடவுள் ஜனனியை அனுப்பி வைத்தார். அவளும் அவள் தோழிகளும் அப்போது தான் உண்டு முடித்தார்கள். கிளம்ப போகும் நேரம், இவர்களை கண்டு விட்டார்கள். அவர்களுக்கு பை சொல்லிவிட்டு வந்தவள்,

“அடேய், இவளுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து இருக்கியே? அச்சோ, மலர் நீயாவது சொல்லி இருக்கலாம்ல….” கோபமாக பேசினாள்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. மலர் சொன்னா நான் கேட்டுருவேனா? எதுக்கு அவளை இழுக்கிற?” அரவிந்தும் கோபமாக பேசினான்.

“ரொம்ப ஆடாதே டா! நிவேதா கிட்டே நீ ஓகே ஓகே சொல்றதை தான் பார்க்கிறேனே நான்! இந்த மாதிரி ரக்ட் பாய்ஸ்னு சொல்றவங்க எல்லார் கதியும் அப்பறம் அதோகதி தான்!” தம்பியை வாரினாள் ஜனனி. அவள் சொன்ன விதத்தில் மலர் சிரிக்க,

“உனக்கு என்ன அப்படி ஒரு சிரிப்பு வேண்டி கிடக்கு! கிளம்பு” அவளிடம் கடுப்பாக பேசினான் அர்விந்த்.

அவன் ஜனனிக்கு பதில் சொல்லாமல் மலரிடம் கத்த, வழக்கம் போல் வாயை விட்டாள் ஜனனி.

“என்னடா பொண்டாட்டி கிட்ட கத்துற மாதிரி அவளை கத்துறே? எனக்கு பதில் சொல்லுடா!”

பக்கென்றது மலருக்கு! படாரென்று அவன் முகத்தை பார்க்க, அவனும் அவளை தான் பார்த்தான். அதில் எந்த உணர்வும் இல்லை! பார்வை அவளிடம் இருந்தாலும் ஜனனிக்கு பதில் சொன்னான் அரவிந்த்.

“நீதான் லூசு, நான் இல்லை, நீ எதாவது உளறிகிட்டே வா, வீட்டுக்கு போற வரை பொழுது போகும்” அவந்திகாவை தூக்கி கொண்டான் கிளம்பத் தயாராக.

“உனக்கு கல்யாணம் ஆகட்டும், ப்ரூப் பண்றேன் டா நான்!” கருவியபடி தம்பியுடன் நடந்தாள் ஜனனி.

காரில் அடுத்த ஒரு மணி நேரமும் அர்விந்த் மலரை பார்ப்பதும், மலர் அரவிந்தை பார்ப்பதுமாக சென்றது. ஜனனி கணவனுடன் போன் பேசிக்கொண்டே வந்தாள். குழந்தை மலரின் மடியில் உறங்கி விட்டது. ஒரு முறை அர்விந்த் கண்ணாடியில் மலரை பார்த்து புருவத்தை என்ன என்பது போல் உயர்த்த பதறி போனாள் மலர். அதற்கு பின் தலையை நிமிர்த்துவாளா அவள்?

வீடு வந்து சேர்ந்த போது. ஜனனி மலர் கையில் இருந்த பைகளை கவனித்தாள்.

“ஹேய், அது என்ன பர்சேஸ்? யாருக்கு?”

“எனக்கு தான் கா!” தயங்கி கொண்டே சொன்னாள்.

“உனக்கு நீ வாங்கினதுக்கு எதுக்கு உனக்கு தயக்கம்….? காட்டு பார்போம் உன் செலெக்ஷனை” என்றபடி பையை வாங்கினாள் ஜனனி.

மலரிடம், வாயை குவித்து “ஷ்” என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்று விட்டான் அர்விந்த். ஐயோ, ஏது இவ்ளோ பணம் என்று கேட்டால், நான் என்ன செய்வேன்? என்றெல்லாம் அவள் பயப்பட, ஜனனி அது போல் எல்லாம் எதுவும் கேட்டு அவளை சங்கடப்படுத்த வில்லை, எல்லாம் சூப்பரா இருக்கு என்று பார்த்து விட்டு கொடுத்தாள். மலரே அருணாவிடமும் பாட்டியிடமும் காட்டினாள்.

பின் அனைவரும் டின்னர் சாப்பிட, பொறுமையாக ஆபிஸ் மெயில் பார்த்துக் கொண்டே அர்விந்த் கடைசியாக தான் உண்டு முடித்தான். தட்டை கொண்டு போய் அவன் வழக்கம் போல் கிட்சன் சின்க்கில் போடும் போது, யதார்த்தமாக மலரின் முகத்தை பார்க்க, அது சிவந்து கிடந்தது. அவனை அவள் ஒரு எதிர்பார்ப்புடன் நோக்குவது போல் அவனுக்கு தோன்ற, சட்டென்று ஒரு மாதிரி ஆகி விட்டது அவனுக்கு. இப்போது அவன் அலுவலக வேலையில் இருக்கவே அவன் அவளை பெரிதாக கவனிக்கவில்லை, ஆனால் மலர் இன்னும் வெளியே சென்று வந்த உணர்வில் இருந்து வரவில்லை. அவளை அர்விந்த் உணர வைத்த எண்ணத்திலேயே இருந்தாள். அவளையும் அறியாமல் தான் அவனை அவ்வாறு பார்த்தாள் மலர். “நீ சாப்பிடு மலர்” என்று சொன்னவன் அறைக்கு வந்து விட்டான்.

அறையில் வந்து படுத்து இருந்தவனுக்கு அன்று நடந்த அனைத்தும் படமாக ஓடியது. இறுதியில் தன் போனில், மெயில் பாக்ஸ் திறந்தவன், மால்லில் ஒரு பெண் ஓடிவந்ததே, அந்த பெண் அனுப்பிய புகைப்படத்தை கண்டான். அதில் அவ்வளவு அழகாக இரண்டு புகைப்படங்கள் வெவ்வேறு கோணங்களில், அர்விந்த் அவந்திகாவுடன் மலரை அணைத்து பிடித்து இருந்தது எடுக்கப்பட்டு இருந்தது. அந்த பெண் புகைப்படக் கல்லுரி மாணவி என்றும், அவர்களை யதார்த்தமாக கண்ட போது அவன் மலரை பிடித்த விதம் அவளை ஈர்த்ததாகவும் அதனால் புகைப்படம் எடுத்தேன். உங்க பேமிலி ரொம்ப அழகு என்று சொல்லிவிட்டு போனாள். மலரை அவன் மனைவியாகவும் அவந்திகாவை அவன் மகளாகவும் நாவல் நினைத்ததை அவன் மறுத்து பேசவில்லை. நன்றி மட்டும் சொல்லி புகைப்படத்தை தனக்கு மெயில் பண்ண ஐடி கொடுத்தான்.

மலரை அவன் நெஞ்சோடு அவன் அணைத்தது இன்னும் அவன் உணர்வில் இருக்க, அதோடு சேர்ந்து அவள் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட போது அவன் உணர்ந்ததும் நியாபகம் வந்தது. தான் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்று இப்போது மலரின் முகத்தை கண்டு உணர்ந்தான் அர்விந்த். இன்று நடந்த எதுவும் இனி தொடர கூடாது எதுவும் சரியில்லை, தான் நடந்துகொள்ள வேண்டிய முறை இதுவல்ல என்று தெள்ளத் தெளிவாக அப்போது உணர்ந்தான் அர்விந்த்.

தன் தவறை உணர்ந்து சரி செய்து கொள்வது நல்லது தான்! ஆனால் தன் தவறினால் பாதிக்கப்பட்டவர்களை கொஞ்சமாவது நினைத்து பார்த்து அவர்களிடம் மனம் விட்டு பேசினால் இன்னும் சிறப்பு. இங்கே அர்விந்த் அதை செய்யாமல், தன் தவறை திருத்தி கொண்டால் போதும், மலருக்கு பிரச்சனை இல்லை என்று அவனே முடிவு செய்து விட்டான். ஏற்கனவே போதிய பாதிப்பை அடைந்து விட்டாள் மலர் என்று யார் அவனுக்கு சொல்வது?

அந்த அப்பாவி, அவனுடனான இன்றைய பொழுதை மனதில் பொக்கிஷமாக சேமித்தது மட்டுமின்றி, அதை நினைத்து நினைத்து மகிழ்ந்து கொண்டு இருந்தாள். அவந்திகா போல் ஒரு குழந்தை கூட அவள் கற்பனையில் வந்து விட்டது! விடியல் அவளுக்கு வேறு வைத்து இருப்பது தெரியாமல் புன்னகையுடன் உறக்கத்தை தழுவினாள் மலர்.

என்றாவது அவள் நெஞ்சில் வந்த நேசம், அவன் நெஞ்சில் வருமா?

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “9. நேசம் கூடிய நெஞ்சம்”

Leave a Reply to Competition writers Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!