வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 20

5
(20)

வாழ்வு : 20

குளிர்காற்று வித்யாவின் உடலைத் துளைத்தது. அதன் மூலமாக ஊட்டியை நெருங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் எழுந்து அமர்ந்து காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள். சிறையில் இருந்து விடுதலை பெற்ற பறவையைப் போல இருந்தது அவள் மனது. தாயிடம் இருந்து தப்பி வந்தது சந்தோஷமாக இருந்தாலும் அவர் தன்னைக் கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயமும் வித்யாவிற்கு இருந்தது.

மதுராவும் சம்யுக்தாவும் டைனிங் டேபிளில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கல்யாணம் நடைபெறும் வரைக்கும் சம்யுக்தாவை கம்பனிக்கு வர வேண்டாம் என்று தீஷிதன் சொல்லிவிட்டான். மதுராவிற்கு தனக்குப் பிடித்த சம்யுக்தா அண்ணியாக வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பரந்தாமனும் அவரது வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மாடியில் இருந்து வேகமாக கீழே இறங்கி வந்தான் தீஷிதன். அவனும் வீட்டின் வாசலுக்கு வர, கார் ஒன்றும் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கினாள் வித்யா. தயக்கத்துடன் வாசலில் நின்றவளைப் பார்த்து தீஷிதன், “உள்ள வா வித்யா.. இதுவும் உன்னோட வீடுதான்..” என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

வித்யாவும் தலையை ஆட்டிவிட்டு தீஷிதனைப் பின்தொடர்ந்து வந்தவள், அங்கே சம்யுக்தாவைப் பார்த்ததும், “அக்கா…” என்று அழைத்துக் கொண்டு சம்யுக்தாவை அணைத்துக் கொண்டு அழுதாள். திடீரென தன்னை அணைத்துக் கொண்டு அழுபவளைப் பார்த்த சம்யுக்தாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

“வித்து…வித்து…” என்று அவளை பார்த்து உச்சிமுகர்ந்தாள் சம்யுக்தா.

“வித்து நீ எப்பிடி டி இங்க?” என்று கேட்டாள் மதுரா ஆனந்தமும் அதிர்ச்சியும் நிறைந்த குரலில். அப்போதுதான் வித்யா சம்யுக்தா அருகில் நின்ற மதுராவைப் பார்த்தாள்.

சம்யுக்தா வித்யாவிடம், “வித்து நீ எப்பிடி டா இங்க வந்த? நான் இங்க இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

“அக்கா உன்னை எங்கே எல்லாமோ தேடிட்டு இருந்தேன்.. சார்தான் எனக்கு நைட் கால் பண்ணி நீ இங்க இருக்கிறதாவும் உங்களுக்கு கல்யாணம்னு சொன்னாங்க..”

“வித்து நீ வந்தது அம்மாக்குத் தெரியுமா?”

“அக்கா உன்னை இப்படி கொடுமைப்படுத்தினவங்களை அம்மானு சொல்ல எப்படி மனசு வருது?”

“அவங்க எப்படி நடத்தினாலும் நான் அவங்க மேல உண்மையான பாசம் வைச்சிருக்கன் வித்து.. நீ சொல்லு நீ இங்க வந்தது அவங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது அக்கா.. உன்னை அந்த பிரகாஷ்க்கு கல்யாணம் பண்ணி வச்ச மாதிரி என்னையும் ஒரு பணக்காரனுக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணிருக்காங்க அக்கா.. எனக்கு என்ன பண்றது என்று தெரியாம இருந்தப்போதான் சார் கால் பண்ணாங்க.. அவங்களே கார் அனுப்பி வைச்சாங்க அக்கா.. அந்தக் கார்லதான் வந்தேன்..” என்று நடந்ததைக் கூறினாள் வித்யா. சம்யுக்தா தீஷிதனைப் பார்க்க அவன் தனது வலது பக்க இமையை தூக்கி கண்ணடித்தான் குறும்பாக. அதைப் பார்த்ததும் உடனே தலையை குனிந்து கொண்டாள் சம்யுக்தா. தீஷிதன் தனக்கு வந்த சிரிப்பினை உதட்டினுள்ளே மறைத்துக் கொண்டு மதுராவிடம், “மது உன்னோட பிரெண்ட் இனிமே இங்க தான் இருக்கப்போறாங்க வித்யாவிற்கு ரெடி பண்ண றூமைக் காட்டு.. வித்யா போய் ஃப்ரெஷ்ஷாகிட்டு வந்து சாப்பிடு.. சம்யுக்தா கொஞ்சம் என்கூட வா உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்..” என்றவன் வெளியே செல்ல, சம்யுக்தாவும் அவன் பின்னால் சென்றாள். மதுரா வித்யாவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

தோட்டத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்த தீஷிதன் சம்யுக்தாவின் கையைப் பிடித்து தனக்கு அருகில் உட்கார வைத்தான். சம்யுக்தாவைப் பார்த்து, “சரி இப்போ சொல்லு என்ன சொல்லணும் எங்கிட்ட? உன் தங்கச்சிய இங்க கூட்டிட்டு வந்ததுக்கு நன்றி சொல்லுமா?” என்று அவன் நேரடியாக கேட்க, சம்யுக்தாவின் கண்கள் கண்ணாடிக்குள்ளே விரிந்தன. அவளைப் பார்த்து சிரித்தவன், “என்னடா நாம மனசுல நினைச்சதை இவன் சொல்லிட்டானேன்னு பாக்கிறியா யுக்தா? உன் மனசு எனக்கு நல்லா புரியும்.. உன்னோட ஒவ்வொரு பார்வைக்குமான அர்த்தத்தை என்னால ரொம்ப நல்லா புரிஞ்சிக்க முடியும்..” என்றான்.

“வித்யாவை இங்க கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி..” என்று தனது நன்றியை அவனிடம் சொல்ல, அதை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டான்.

“யுக்தா நம்மளோட கல்யாணத்துக்கு சந்தோஷமா நீ ரெடியாகணும்.. எதைப்பற்றியும் நீ யோசிக்கக் கூடாது.. உன்னோட கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டும் யுக்தா.. உன்னோட நிகழ்காலமும் எதிர்காலமும் நானாக இருக்க ஆசைப்படுறேன்.. நம்ம கல்யாணத்துக்கு வர்ற அந்த பிரகாஷ் அடுத்தது உன்னை வளர்த்தவங்க உன்னை காயப்படுத்த நினைப்பாங்க.. அவங்க முன்னாடி நீ அழுதிட்டு நிற்கக்கூடாது.. உன்கூட நான் இருக்கிறன்.. இப்போ மட்டுமல்ல எப்பவும் நான் இருப்பேன்.. நீ தைரியமா இருக்கணும்.. ஈவ்னிங் வெட்டிங் ட்ரெஸ் எடுக்க போகலாம் சரியா?” என்றான்.

அவன் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தவள், “என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்ங்க..” என்றாள்.

“லூசு உன்னால எந்த கஷ்டமும் எனக்கு இல்லை.. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரு… உன்னோட தங்கச்சிகூட பேசு.. ஹாப்பியா இரு.. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் போயிட்டு வந்திடுறன்..” என்ற தீஷிதன் வெளியே செல்ல சம்யுக்தா அங்கேயே அமர்ந்திருந்தாள்.

பரந்தாமன் மலேசியாவில் இருக்கும் தன் தங்கைக்கு போன் பண்ணினார். சமையல் வேலை செய்து கொண்டிருந்த தமயந்தி போன் சத்தம் போடவும், வேலையை அப்படியே வைத்து விட்டு வந்து பார்க்க பரந்தாமனின் அழைப்பு என்றதும் உடனே போனை எடுத்து, “அண்ணா நல்லா இருக்கிறீங்களா? வீட்ல எல்லோரும் நல்லா இருக்கிறாங்களா?”

“இங்க எல்லோரும் நல்லா இருக்கிறாங்கமா.. அங்கே மாப்பிள்ளை, விக்ராந்த் எல்லோரும் நல்லா இருக்கிறாங்களா?”

“ம்ம்ம்ம் அவங்க சூப்பரா இருக்கிறாங்க அண்ணா..”

“தமயந்தி உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..”

“என்ன அண்ணா?”

“அதுவந்துமா நம்ம தீஷிதனுக்கு நாலுநாள்ல கல்யாணம்.. நீங்க இங்க இன்னைக்கே வர முடியுமா?”என்று பரந்தாமன் சொன்னதைக் கேட்ட தமயந்தி அதிர்ச்சி அடைந்தார்.

“என்ன அண்ணா நாலுநாள்ல கல்யாணம்னு இன்னைக்கு சொல்றீங்க? முன்னாடியே சொல்லிருக்கலாமே..” என்று ஆதங்கத்துடன் கேட்டவரிடம், சம்யுக்தா பற்றிய அனைத்தையும் சொல்லி, தீஷிதன் அவளை விரும்பியது முதல் திருமணம் முடிவானதுவரை சொல்லி முடிக்க மறுபக்கம் இருந்த தமயந்திக்கு மயக்கம் வராத நிலைதான்.

“அண்ணா நீங்க சொல்றதை கேட்டா எனக்கு சீரியல்தான் ஞாபகம் வருது..”

“தமயந்தி சம்யுக்தா யாருனு உனக்கு தெரிஞ்சா நீ இன்னும் அதிர்ச்சியாயிடுவ..”

“என்ன அண்ணா சொல்றீங்க?”

“ஆமா தமயந்தி..” என்ற பரந்தாமன் சம்யுக்தாவைப் பற்றி சொன்னதைக் கேட்ட தமயந்திக்கு கண்களில் கண்ணீர் வந்தது. அவரது நாக்கு தளுதளுத்தது. பேச்சு வரவில்லை.

“தமயந்தி இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.. நேரம் வரும்போது அதை சொல்லலாம்.. நீ இப்போ யார்க்கிட்டேயும் சம்யுக்தாவைப் பற்றி சொல்லிடாத.. நீ கல்யாண விஷயத்தை ரெண்டு பேர்க்கிட்டேயும் சொல்லி அவங்களையும் அழைச்சிட்டு வா..”

“கண்டிப்பா அண்ணா.. நான் இன்னைக்கு நைட்டே அங்க இருப்பேன்…” என்றவர் போனை வைத்து விட்டு சிறிது நேரம் அழுதார். பின்னர் கணவன் அமரேந்திரனுக்கும் விக்ராந்திற்கும் போன் பண்ணி உடனே வீட்டிற்கு வரச் சொன்னார்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

1 thought on “வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 20”

Leave a Reply to Babubuvana Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!