“அன்னைக்கு நான் இங்கே வரலைனு தான் உனக்கு கோபமா யுகன்? ஆறுதலா உன் பக்கத்துல இருக்கலைனு கவலையா என்ன.. அதுனால தான் என்னை அவொய்ட் பண்றியா?”
அவளது வினா சிரிப்பை வரவழைக்கத்தக்க ஒன்றாய் தோன்றியது யுகனுக்கு.
‘இதைத் தான் காரணம்னு சொன்னாளா? ச்சே, நான் வேறெதையோ நினைச்சுட்டேன்..’ என சத்தமாய் நகைக்க நினைத்தான். ஆனால் நகைத்தானா என்று கேட்டால், அதுதான் இல்லை. பாறை விழுங்கியவன் போல் விறைப்பாய் நின்றிருந்தான்.
“அவங்க, யாருமேயில்லாம நாம நடுத் தெருவுல அநாதையா அலைஞ்சப்போ அன்பா அரவணைச்சு ஆறுதல் கொடுத்த தெய்வங்கள்னு அம்மா இப்போவும் அடிக்கடி நினைவு படுத்துவாங்க அத்தை, மாமாவை..” மேற்கொண்டு கூற முடியாமல் பாதியிலே நிறுத்தியவள் கவலை தாளாமல் எச்சில் கூட்டி விழுங்கினாள். தொண்டைக் குழி எரிந்தது.
‘பாப்பா’ என அன்பே ஒழுக அழைக்கும் ரேணுகாவின் முகமும், அன்பை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு தன்னையும் அவரின் சொந்த மகளாய் நினைத்து அதட்டும் ருத்ரவனின் கண்டிப்பான பார்வையும் கண்ணுக்குள் படமாய் ஓடின.
‘இந்த உலகத்துல நல்லவர்களை வாழவே விட மாட்டியா?’ என கடவுளிடம் சண்டை போட்டாளே, அன்று அவர்களை இழந்து விட்டேன் என யுகன் அழைப்பு விடுத்த நேரத்தில்..
அவள் சொல்லியதைக் கேட்டு கீழுதட்டை வளைத்து கேலியாய் நகைத்த யுகன், கண்களில் கண்ணீர் வழிய நின்றவளை துச்சமாய் பார்த்து,
“எங்கம்மா அப்பா செய்த பெரிய தப்பு அதுதான். ரோட்டுல போற நாயை குளிப்பாட்டி கொண்டு வந்து வீட்டுக்குள்ள வைச்சுக்கிட்டாரு..” என்றான் மெல்லிய சிரிப்புடன். அந்த சிரிப்பில் கேலியைத் தாண்டி சோக சாயல் வெளிப்பட்டது.
மான்ஷி கன்னங்களைத் தாண்டி கழுத்தில் வழியவிருந்த கண்ணீரை புறங்கைகளால் துடைத்து விட்டுக் கொண்டாள்.
“அவங்களோட சடங்குக்கு கூட நான் வரலைனு கோபமாய்யா உனக்கு? இதை தவிர வேறெந்த காரணமும் இருக்க வாய்ப்பில்ல. நான் என்ன தப்பு செஞ்சேன்? சொல்லாம இப்படி வருத்தறியே யுகன்..” மீண்டும் கண்ணீர் வழிந்தது.
நக்கலாய் சிரித்தவன், மௌனமாய் அவ்விடத்தினின்று நகர்ந்து விட்டான். ப்சு, நின்று பொறுமையாய் விளக்கம் கொடுத்தால் அவனது கௌரவத்துக்கு என்னாவதாம்..
ஓய்ந்து போய் கட்டிலில் விழுந்தவளது கண்களில் கண்ணீருக்கு மட்டும் குறைவில்லை.
நெடுநாட்களுக்குப் பிறகு அவர்களின் நினைவு நெஞ்சை வாட்டியதில் என்றும் போல் தந்தையின் மேல் கொலை வெறியானாள் மான்ஷி.
‘அவர்களை இறுதியாய் ஒரு தடவையாவது பார்க்க முடியாதவாறு செய்து விட்டாரே!’ என்ற கோபத்தில் அவரிடம் சில வருடங்களாய் பேசுவதையே நிறுத்தி இருந்தாள்.
தன் பாராமுகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவராகவே வந்து மன்னிப்பு கேட்டு, தாடை தொட்டு கொஞ்சி, கெஞ்சி சமாதானம் செய்ததும் தான் மனமிளகினாள்.
பேசாமல் இருந்தேன் என்பதற்காய் இறந்தவர்கள் என்றும் திரும்ப வரப் போவதில்லை, அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்த தினம் மீண்டும் வரப் போவதுமில்லை. அப்படி இருக்கும் போது வீண் வீம்பு எதற்கு என நினைத்துத் தான் தந்தையிடம் பேசவே ஆரம்பித்திருந்தாள்.
தலைவலி ஓரளவு மட்டுப்பட்டதும் அறை விட்டு சிறு தள்ளாட்டத்துடன் வெளி வந்தாள் மான்ஷி. வெகு நேரம் அழுததில் முகம் வீங்கி, கண்கள் சிவப்பேறிப் போயிருந்தன.
வேலைகளை முடித்து விட்டு, சமையலறை வாசல்படியில் ஓய்வுக்காக கால் நீட்டி அமர்ந்தபடி இந்துவுக்கு அரிச்சுவடி சொல்லி கொடுத்துக் கொண்டிருந்த காமினியிடம், “காமினிக்கா ஒன் காஃபி ப்ளீஸ்” என்றாள் சோர்வாய்.
“இதோம்மா, எடுத்துட்டு வரேன்..” என்றவள் தோளுக்கு கீழால் தொல தொலவென வடிந்த இந்துவின் டீஷர்ட்டை சரி செய்து, அவளைத் தூக்கி தரையில் அமர வைத்து விட்டு எழுந்து கொண்டாள்.
“இ ஃபார் இந்தர்ல ம்ம்ம்மா?” என மூன்று வயது மகள் கேட்ட தோரணையில் சிரிப்பு வந்தது காமினிக்கு.
அவள் சிரிப்பதற்குள், இந்துவை அள்ளித் தூக்கி தட்டாமாலை சுற்றிய மான்ஷி, “இ ஃபார் இந்தர், வொய்(y) ஃபார் யுகன்..” எனக் கூறிக் கொண்டே அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
கலகல நகைப்புடன் வேகமாகக் கை கொட்டிய இந்து, “யுகி சித்தப்பா..” என குதூகலமாக ஆரவாரம் செய்தாள், தன்னிரு முயல் பற்களை வாடகைக்கு விட்டபடி.
அவளது மூக்கைத் தொட்டு ஆட்டி விளையாடிய மான்ஷி அவளைப் பத்திரமாகக் கீழே இறக்கி விட்டு திரும்பும் போது,
“ஒன் காஃபி ப்ளீஸ்..” என்ற கடினக் குரல் கூடத்திலிருந்து ஒலித்தது.
மான்ஷியை கடைக் கண்ணால் பார்த்த காமினி, “பார்றா! மேடமுக்கு காஃபி தேவைப்பட்டதும், ஐயாவுக்கும் தேவைப்படுது. இதை தான் லவ்வுனு சொல்லுவாங்களோ..” என்று கேட்டாள், கிசுகிசுப்பான குரலில்.
நாணித் தலை சாய்த்த மான்ஷி, “லவ்வைப் பத்தி நீங்க என்ன தெரியாதவங்களா? உங்க லவ்வை பார்த்து நானே பொறாமைப் பட்டிருக்கேன் காமினிக்கா..” என்றாள், சிறு குரலில்.
காமினி பற்களைக் காட்டினாள்.
“வீட்டுல விருப்பப்படலனு இந்தர் பையாவோட வீட்டை விட்டே ஓடி வந்துட்டிங்க. என் வீட்டுல எல்லாரும் ஓகே, ஆனா சம்பந்தப்பட்டவர் தான் மனசு வைக்கல; பிகு பண்ணுறாரு!” என சோகமாய் கூறியவளுக்கு பார்வையாலே ஆறுதலளித்த காமினி, காப்பி கப்பை அவள் கையில் கொடுத்து விட்டு, மற்றொன்றை தட்டில் வைத்துக் கொண்டு கூடத்துக்கு நடந்தாள்.
“வெயிட்! வெயிட்! வெயிட்!”
ஓடிச் சென்று அவளை வழி மறித்து நின்ற மான்ஷி, தன் கையிலிருந்த காப்பி கப்பை தட்டில் வைத்துவிட்டு தட்டைத் தன் கைகளில் வாங்கிக் கொள்ள,
“ஐயா என்னை திட்ட போறாரும்மா..” என சிறு குரலில் பம்மினாள் காமினி.
மான்ஷியால் யுகனின் கோபப்பார்வை அடிக்கடி இவளையும் தொட்டு மீளும். பிறகு இரவையில் ‘நீ உன் வேலையை மட்டும் பாரு..’ என இந்தரிடமும் சிலபல திட்டுகளை பெற்றுக் கொள்வாள்.
“நான் பார்த்துக்கிறேன்..” என கண் சிமிட்டிக் கூறிவிட்டு ஹாலுக்கு சென்றவள் சோபாவில் அமர்ந்திருந்த மிதுனாவைக் கண்டதும் முகம் சிவந்தாள்.
அவள் வந்திருக்கிறாள் என்பதை முன்பே அறிந்திருந்தால் கிட்சேனில் தன் நேரத்தை செலவு செய்திருக்கவே மாட்டேனே என்று நினைத்தவள் மூச்சை மெல்ல ஆசுவாசமாக இழுத்து விட்டாள்.
இரத்தம் கொஞ்சம் கொஞ்சம் சூடேற ஆரம்பிக்க, “ஹ்க்கும்!” என தொண்டையை செருமியவள் மிதுனாவை முறைத்தவாறே காப்பி தட்டை மேஜை மேல் வைத்து விட்டு, தனக்கானதை எடுத்துக் கொண்டு அவளுக்கு எதிரே அமர்ந்தாள்.
மான்ஷியை அங்கே எதிர்பார்த்திருக்காத மிதுனாவுக்கு சட்டென்று உடல் தூக்கி வாரிப் போட்டது.
தயக்கமாய் யுகனைத் திரும்பிப் பார்க்க, அவனோ தனக்கு முன் கழுகுப் பார்வையுடன் அமர்ந்திருப்பவளை சற்றும் கண்டு கொள்ளாமல் மேஜை மேலிருந்த காப்பியைக் கண் காட்டினான்.
மிதுனா கைகளைப் பிசைந்தாள்.
“உன்னை இங்கே வர வேணாம்னுல சொல்லி வைச்சிருக்கேன்?” அமைதியாய்.. மிக நிதானமாய் கேள்வி கிளம்பியது மான்ஷியிடமிருந்து.
அவள் என்னவோ சாதாரணமாக தான் கேட்டாள். ஆனால் அதற்கே மிதுனா நடுங்கிப் போனாள். அன்று அவள் முன்னிலையிலே ஜாடியை விட்டெறிந்து யுகனைக் காயப்படுத்தியதை கண்டதிலிருந்து மான்ஷியை காணும் போது உள்ளுக்குள் சற்று அதிகமாகவே உதறியது அவளுக்கு.
“அது, சார் தான்..” இமைகள் படபடக்க இறப்பர் நாடாவைப் போல் பேச்சை இழுவையாய் நிறுத்தியவளை சலிப்புடன் பார்த்தவள்,
“சாருக்கு சமீப காலமா மூளை குழம்பி போயிருக்கு. அவன் சொன்னதும் உடனே நீ கிளம்பி வந்திடுவியாக்கும்..” என்றாள். சலிப்பை தாண்டி எரிச்சல் வெளிப்பட்டது அவள் குரலில்.
மிதுனா நெளிந்தாள்.
யுகன் அழைப்பு விடுத்து ‘வா’ என அழைக்கும் போது வராமலிருப்பது ஒரு பிரச்சனை என்றால், சைக்கோ போல் எரிந்து விழும் மான்ஷியை எதிர் கொள்வது மற்றொரு பிரச்சனை அவளுக்கு.
அங்கொருத்தி தன்னைப் பற்றி பேசுகிறாள் என்ற எண்ணமே இன்றி சோபாவை விட்டு எழுந்து நின்றவன், மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தவாறே,”நேரமாச்சு, போலாம்..” என்றான் மிதுனாவிடம்.
‘வர வேண்டாம்னு சொல்லி இருக்கிறேனே?’ என்ற கேள்விக்கு பதில் எதிர்பார்த்தவளாய் மான்ஷி தன்னையே லேசர் பார்வையால் துளைத்துக் கொண்டிருக்கும் போது, எங்ஙனம் இவவிடத்திலிருந்து நகர்வேன் என பயந்து நின்றாள் மிதுனா.
“மிது நேரமாச்சு..” என குரலுயர்த்திக் கூறி, மிதுனாவின் கவனத்தை தன்னை நோக்கி ஈர்த்தவன் அவளது கையைப் பற்றிக் கொண்டு நகரவென திரும்பவும்,
“அம்மாஆ..” என்ற அலறலுடன் மிதுனா அவனிடமிருந்து கைகளை உதறவும் சரியாக இருந்தது.
திடீரென முகத்தில் வீசி அடிக்கப்பட்ட காப்பியின் சூட்டில் கண்கள் மிதுனாவின் கலங்கி கலங்கின; வலது கன்னம் எரிந்தது.
கைகளை உதறியபடி வலியில் முனகியவளை திரும்பிப் பார்த்தவன் என்ன நடந்திருக்குமென்று ஒரே நொடியில் ஊகித்து விட்டான்.
பற்களை நறநறத்தபடி தலையைத் திருப்பி மான்ஷியை முறைத்தவன், “ஆர் யூ ஓகே மிது?” என கடினம் குறைந்த குரலில் மிதுனாவிடம் அக்கறைப்பட்டான்.
கண்ணாடி மேஜை சில்லு சில்லாக உடைந்து, ஓங்கி உதைத்த காலிலும் ஆங்காங்கே காயத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் அவளின் கோபம் துளியளவும் தீரவில்லை. அவன் மைதிலியிடம் பேசுவதைப் பார்த்தே பொறாமைத் தீயில் வெந்தவள், வேற்று ஒருத்தியை செல்லப் பெயர் வைத்து அழைத்து, மென்மையான குரலில் ஆகர்ஷிப்பதை ஏற்றுக் கொள்வாளா என்ன..
இரத்தம் சொட்டத் தொடங்கிய காலை டைல்ஸ் தரையிலிருந்து தூக்கியவள் கண்கள் சிவக்க மிதுனாவின் மேல் பாய இருந்த நேரத்தில்,
“ஆர் யூ க்ரேஸி?” என்ற கத்தலுடன் அவளை சுவற்றோடு சாய்த்து கழுத்தை பலமாக நெறித்தான் யுகன்.
“பைத்தியம் இல்லய்யா! சை..க்.கோ ஆகிட்..” ம்ம்கூம், அதற்கு மேல் பேச முடியவில்லை. கழுத்து நெறிக்கப்பட்டுக் கொண்டிருந்ததில் மூச்சிறுகி, கண்கள் மேல் நோக்கி சொருகின.
“சா..சார் அவளை விடுங்க..” என முழு விசையுடன் அவனின் கை பற்றி இழுத்தாள் மிதுனா. பயத்திலும், அதிர்ச்சியிலும் வியர்வை ஆறாக ஓடியது அவள் முகத்திலும், உடலிலும்.
யுகனின் பிடி தளர்ந்ததும், தொப்பென தரையில் சரிந்து வீழ்ந்தாள் மான்ஷி.
கால் காயத்திலிருந்து இரத்தம் வெளியதாலோ, வெகு நேரமாய் மூச்சுக் குழாய் மூடப்பட்டு இருந்ததாலோ என்னவோ.. மெல்ல மயக்கத்தில் ஆழ்ந்து போனாள் மாளவிகா.. யுகனின் மான்ஷி!
*******
திறந்திருந்த ஜன்னல் வழியாகக் கசிந்து வந்த நிலவொளியில், சில மணி நேரங்கள் கடந்தும் மயக்கம் தெளியாமல் கட்டிலில் கண்மூடி துயில் கொண்டிருந்தவளை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தான், யுகேந்த்ராவ்!
அவன் கண்கள் சிமிட்டாமல் அவளைப் பார்த்திருந்த பார்வைக்கான அர்த்தம் என்னவென்பதைப் புரிந்து கொள்ள எவராலும் முடியாது. ரசனையா.. வேதனையா.. காதலா.. கவலையா.. தாபமா.. கோபமா.. நேசமா.. வெறுப்பா.. வெறுமையா.. சலிப்பா.. ம்ம்கூம், அது அவன் மட்டுமே வெளிச்சம்!
கட்டிலில் அங்குமிங்குமாய் உருண்டு திறக்க முடியாத கண்களை கடினப்பட்டு திறந்த மான்ஷி, எரிச்சலைக் கொடுத்த கழுத்தை அழுத்தமாய் வருடிக் கொடுத்தாள். பலமாக இருமினாள்.
இருமிக் கொண்டே மெதுவாகக் கட்டிலில் எழுந்தமர்ந்தவள் சோபாவில் அமர்ந்து தன்னை வெறித்துப் பார்த்திருந்தவனைக் கண்டதும் சட்டென முகம் மலர்ந்தாள். கண்களில் ஹார்டின் பறந்தது.
நடந்த எதுவும் நினைவில்லை. கழுத்து எரிச்சலுக்கு காரணமானவனே அவன் தானென்பதை நொடியில் மறந்தாள். அசைக்கும் போது சுள்ளென்ற வலியைக் கிளப்பிய காலுக்கு என்ன நடந்ததென மறந்தாள்.
“யுகன்..” காய்ந்து போயிருந்த இதழ்களைப் பிரித்து மெல்லிய குரலில் முனகியவள், வறண்ட தொண்டையை ஈரப் படுத்துவதற்காய் எச்சிலை விழுங்கும் போது தொண்டை எரிந்தது.
கட்டிலில் உள்ளங்கைகள் ஊன்றி, மெல்ல எழுந்தவள் கட்டுப் போட்டிருந்த காலை அப்போது தான் கண்டாள்.
அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவனது நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகள், நிலவு வெளிச்சத்தில் மின்னின. அதை தொட்டுப் பார்த்தவளின் மனத்தில் பற்பல கேள்விகள்.
‘இது.. இந்த வேர்வை.. எனக்கு ஏதாவது ஆகிடுமோங்குற பயத்துல ஊத்தெடுத்ததா?’
நினைக்கும் போதே இதயம் ஃப்ரீஸரில் வைத்தெடுத்த ஐஸ்கியூபை போல் சில்லிட, சகல வலிகளையும் மறந்து சோபாவின் கைப்பிடியில் தன் எடையை மொத்தமாய் சரித்தாள்.
மேஜை மீதிருந்த தண்ணீர் பாட்டில் திறந்தது திறந்தபடி கிடந்தது.
‘பதற்றத்தைத் தணிக்க அவ்வப்போது எடுத்து பருகி இருப்பானோ?’
பரவச மிகுதியில் ஏதோ சொல்ல வாய் திறந்தவள், உடலில் போர்த்தியிருந்த டவலை வலது கையால் உருவி சுருட்டிக் கொண்டு.. தன்னை ஓரந்தள்ளி விட்டு எழுந்து நின்றவனைக் கண்டதும் வாயை மூடிக் கொண்டாள். நெஞ்சில் மீண்டும் சொல்லொணா வலி!
உடற்பயிற்சி செய்திருப்பான் போலும்! நெற்றியில் மட்டுமல்ல, உடல் முழுவதும் வியர்வை தான். அணிந்திருந்த ஆர்ம்கட் டீஷர்ட்டைப் பிழிந்து காயப்போடலாம் எனக் கூறும் அளவுக்கு வியர்த்திருந்தது ஆடவனுக்கு.
“அப்போ பதட்டத்தாலயோ, பயத்தாலையோ வந்த வேர்வை இல்லையா இது?” என தன்னிடமே கேட்டுக் கொண்டவள் ஏமாற்றம் சொட்டும் விழிகளுடன் அவனை அடிபட்ட பார்வை பார்க்க,
“அதான் பைத்.. ஸ்ஸ் மயக்கம் தெளிஞ்சிடுச்சுல்ல? இப்போ கிளம்பு!” என அவள் முகம் பாராமல் கூறியவன் விறுவிறுவென வெளியேறி விட்டான் அறையிலிருந்து.
அவனது உருவம் கண்களை விட்டு மறைந்த பிறகும், அவன் சென்று மறைந்த திசையையே வெறித்துக் கொண்டிருந்தாள் மான்ஷி, வலியுடன்!
குருவிக் குளியலொன்றை போட்டுக் கொண்டு அறைக்கு வந்தான் யுகேந்த்ராவ்!
இடுப்பிலிருந்த டவல் நழுவிக் கீழே விழாதிருப்பதற்காய், அதன் இரு பக்க நுனிகளை இழுத்து இறுக்கமாக சொருகிக் கொள்ளவும், மேஜையிலிருந்த அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
தலையை இருபுறமாக ஆட்டி நீர்த் திவலைகளை நாலாபுறமும் விசிறியடித்தவன் கேசத்தை வலது கையால் கோதி விட்டபடி மற்ற கையால் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.
இந்த அழைப்பு வருமென ஏற்கனவே எதிர்பார்த்திருந்தான் போலும், கீழுதட்டை வளைத்து கேலியாய் நகைத்தபடி அழைப்பேற்றவன்,
“நீ கால் பண்ணுவேனு தெரியும். ஆனா இவ்ளோ சீக்கிரமா பண்ணுவேனு எதிர் பார்க்கல டியுட்!” என்றான். குரலில் நக்கலும் ஏளனமும் கொட்டிக் கிடந்தது.
மறுபுறத்தில் இருந்தவனின் கண்களில் லேசான திகைப்பு!
‘அழைப்பு விடுத்தது நானென அவன் அறிய வாய்ப்பில்லை; என்னை இனங்காணக் கூடாது என்பதற்காகத் தானே, புது எண்ணிலிருந்து அழைப்பே விடுத்தேன்? இருந்தும் ஊகித்து விட்டானே!’ என எழுந்த திகைப்பு மறுநொடியே கோபமாய் மாற,
“ஐ வார்ன் யூ யுகேந்த்! என் வழியில குறுக்கா வராத. அதான் உனக்கு நல்லது. இதுவரை நாள் நீ பார்த்த கரண்சிங், அவனை உசுப்பேத்தி விட்டதுக்கு அப்பறமா பார்க்க போறவனை விட ரொம்ப நல்லவன்..” என எச்சரிக்கும் விதமாகப் பேசினான்.
கை வந்து சேரவிருந்த பெரிய டீலைக் கை நழுவி போகும்படி செய்து விட்டது பத்தாதென, கரண்சிங்கின் உற்பத்தி பொருட்கள் யாவிலும் கலப்படம் என்ற தகவலை தேவையான இடத்துக்கு அனுப்பி வைத்து, அதை உண்மைப் படுத்துவதற்காக சிலபல விளையாட்டுகளையும் அரங்கேற்றி இருந்தான் யுகேந்த்ராவ்!
கையாலாகாத நிலையில் இருந்து கொண்டு மிரட்டுவதற்காய் அழைப்பு விடுப்பான் என ஏலவே இவன் எதிர்பார்த்திருக்க, கோபத்தின் உச்சிக்கு சென்றிருந்த கரண்சிங் ஊகத்தைப் பொய்ப்பிக்காமல் உடனே அழைத்து விட்டான்.
வாய் விட்டுச் சிரிக்கத் தோன்றியது யுகனுக்கு.
“ரியல்லி? சரி சொல்லு, உன்னை எப்படிலாம் உசுப்பேத்தி விட்டா நீ செமயா காண்டாவ? ஆக்சுவல்லி வர வர எனக்கும் இந்த கேம் போரடிக்குது..” என நக்கலாய் பேசியபடி ஜன்னலருகே திரும்பி நின்றவன்,
“முதல்ல, எதிர்ல இருக்கிறவனைப் பயமுறுத்தற மாதிரி பேச பழகுடா வெண்ணமவனே!” என்றுவிட்டு, அதற்கு மேலும் பேசுவதற்கு எதுவுமில்லை என்பது போல் அழைப்பை துண்டித்துக் கொண்டான்.
கண்கள் சாளரத்துக்கு வெளியே தெரிந்த தோட்டத்தின் வனப்பில் லயித்தன.
கதிரவனின் ஒளி பட்டு வெட்கிக் கொண்டிருந்த மலர்களைக் கண்ணாரக் கண்டு ரசித்தான். நினைவடுக்குகளில் ஏதேதோ நிழற்படங்கள்.. அவை யாவும் ஆடவனின் ஏகாந்தத்துக்கு மேலும் இதம் சேர்ந்தன.
கண்களை இறுக மூடித் திறந்து கடந்த காலத்தை நெஞ்சோடு புதைக்க முயன்றவனின் முதுகில் சட்டென்று வெண்பஞ்சு மூட்டையொன்று மோதி விழுந்தது.
மென் கரங்கள் இரண்டு கொடி போல் சுற்றி வளைத்தன, அவனது கட்டுடலை.
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்யா!” என்று கூறியவளின் சூடான கண்ணீர் அவனது வெற்று முதுகை பாரபட்சமின்றி நனைக்க, ஆடவனின் உடல் விறைத்தது.
“என்கிட்டே சொல்லிக்காமலே கெளம்பிப் போய்ட்ட.. சரிதான், அப்போ மீட்டிங் முடிஞ்சதும் வந்திருக்கலாம் இல்லையா?” என உரிமையாய் கேட்டு அவனின் முதுகில் தன் ஈர இதழ்களைப் பதித்தவள் அடுத்த நொடி,
“அம்மாஆ..” என்ற முனகலுடன் கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து நின்றாள்.
ஆமாம், தன் மீது படர்ந்திருந்த கைகளைப் பற்றி பார்வைக்கு முன்னால் இழுத்து நிறுத்தியவன், தன் கைகளை முழு வேகத்தில் வீசி விட்டான் அவளது கன்னத்தை நோக்கி! கை வந்து முழு விசையுடன் பாவையின் கன்னத்தில் மோதியதில் கன்னம் இரத்தமென சிவந்து போனது.
அவசரமாக கழுத்தை சுற்றிப் போட்டிருந்த டவலை உருவி உடலைப் போர்த்திக் கொண்டவனின் கண்களில் தெரிந்த பதற்றமெல்லாம் ஒருசில நிமிடங்கள் தான்!
அடுத்த க்ஷணமே, “யாரு உனக்கு என்கிட்ட இந்தளவு உரிமை எடுத்துக்க அனுமதி கொடுத்தா? ச்சை! இப்படி தான் வந்து திடுதிப்புனு வந்து அணைப்பியா..” என எரிந்து விழுந்தவன்,
“உன் வாசனைய என் பக்கத்துல உணர கூடாதுனு நினைக்கிறேன். உனக்கு புரியல?” என்று வினவியபடி டேபிள் மீதிருந்த பேர்ஃபியூம் பாட்டிலைத் திறந்து, அதிலிருந்த திரவியம் முடிந்து போகும் வரை தன் வெற்றுடலில் அடித்தான்.
அவனது செயலில் வெகுவாக மனம் நொந்து போனவள் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். குதிரைப் படையொன்று பயணிப்பது போல், நெஞ்சம் கனத்தது.
அவனது வருகை அறிந்ததும் தடுக்க வந்த தந்தையைக் கூட சற்றும் மதியாமல் அவனைக் காண விரைந்தோடி வந்தாளே!
அறைக் கதவருகே நின்று கள்ளத்தனமாய் அவனைப் பார்த்து ரசித்து, அவன் செதுக்கி வைத்திருந்த கட்டுடல் அழகில் தன்னை மறந்து, அவனது உருவத்தை மொத்தமாய் தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டாளே..
‘மானு..’ என்ற அழைப்புடன் ஓடி வந்து அணைத்து, ‘உன்னை எவ்ளோ மிஸ் செய்தேன் தெரியுமாடி?’ என்ற கொஞ்சல் மொழிகளை அவன் பேசப் போவதில்லை என அறிவாள் தான்.
இருப்பினும், காதல் வயப்பட்ட அவளின் மனதும், தன்பால் அதிக ஈடுபாடு கொண்டவனின் அக்கறைக்காய் ஏங்கி நிற்கும் நெஞ்சமும், இந்த அன்பெல்லாம் கிடைக்கப் போவதில்லை என அறிந்தும் எதிர்பார்த்துத் தொலைக்கிறதே..
“என் ஸ்மெல்.. என் வாசனையை உணர்ந்தா உன் கண்ட்ரோல் மிஸ் ஆகிடும்னு பயப்படறியா யுகன்?” அழுகையோடு வினவியவள் அவனை கேலிப் பார்வையை உணர்ந்து கொண்டு,
“நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெ.ரியு..மா?” என வினவினாள்.
வாய் திறந்தானோ இல்லையோ, அவள் எழுப்பிய வினா அவனுக்கு வேறொரு நிகழ்வை நொடிப் பொழுதில் நினைவூட்டிச் சென்றது.
அவனுக்கு பன்னிரண்டு வயதிருக்கும் போது, ஸ்கூல் சுற்றுலா பற்றி அறிந்து கொண்டு, ‘முடியவே முடியாது! மானுவை விட்டுட்டு தனியால்லாம் போக மாட்டேன்..’ என அடம் பிடித்தவனை ஒற்றைக் காலில் நின்று ருத்ரவன் பஸ் ஏற்றிவிட்ட நிகழ்வு! மறக்க முடியாத அழகிய தருணங்களை சுமந்த காலமது.
அன்றும் கூட, சுற்றுலாவை முடித்துக் கொண்டு வீடு திரும்பியவனின் முதுகைக் கட்டிக் கொண்டு கண்ணீருடன் இதே வார்த்தைகளை தான் உதிர்த்தாள் மான்ஷி.
‘உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?’
‘நீ ஏன்டா என்னை விட்டுட்டு போன? நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா.. உனக்கு என்மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல..’
விம்மலோடு கொஞ்சல் மொழி பேசியவளின் கண்ணீர் கண்டு பதறி, தன் கைகளாலே அவள் கண்ணீரைத் துடைத்தெறிந்து, அவளைத் தன் நெஞ்சக்கூட்டோடு அணைத்து ஆறுதல் அளித்தவன், இன்று அவளது கண்ணீருக்கே காரணமானவனாய் இருக்கிறான்.
காலத்தின் கோலமா? விதியின் சதியா..
அவ்வளவு காலமும் மலர்களைக் கொய்து வந்து தன் கைகளில் பொத்தி, அவற்றைப் பாதுகாத்து வைக்குமாறு கூறியவனே ஒருநாள் திடீரென்று அந்த மலர்களை பறித்தெடுத்து, தன் அழுகையையும், கண்ணீரையும் பொருட்படுத்தாமல் அவற்றை காலால் நசுக்கி அநியாயமாக்கினால் எப்படி இருக்கும்?
பொக்கிஷம் பொக்கிஷமென நெஞ்சில் சேமித்து வைத்த அவனின் அன்பும், அக்கறையும், இன்று அவனாலே பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நினைக்கும் போதே மூச்சடைப்பது போல் உணர்ந்தாள் பாவை.
“யுகன்ன்ன்..”
“ப்ம்ச், இந்த ஒரு வாரம்.. பத்து நாளா எவ்ளோ நிம்மதியா இருந்தேன்லனு நினைக்கிறப்போ அந்த நாட்களுக்காக மனசு ஏங்குது!” என கரடுமுரடான குரலில் சலித்துக் கொண்டவன் சென்று வாட்ரோபிலிருந்த பிளைன் டீஷர்ட் ஒன்றை எடுத்து, திரும்பி நின்று அணிந்து கொண்டான்.
“அப்போ நீ என்னை நிஜமாவே மிஸ் பண்ணவே இல்லையா யுகன்?”- ஏக்கத்தில் நெஞ்சம் வெடித்து விடுமோ என அஞ்சும்படியாய் இருந்தது அவளின் விம்மிப் போன குரல்.
நின்று திரும்பியவன் அவளைப் பார்த்த பார்வையில் உள்ளுக்குள் மரித்துப் போனாள் மான்ஷி. அப்படி ஒரு பார்வை! ‘பைத்தியமா நீ?’ எனக் கேட்டு நின்ற அந்தப் பார்வையின் பட்டவர்த்தனமான கேள்வியில் மொத்தமாக உடைந்து போனாள்.
இந்தப் பார்வை, கேலி கிண்டலை எல்லாம் இந்த ஓரிரு மாதங்களாகவே கடந்து வருகிறவள் தான். இருப்பினும், ‘உன்னை ஒரு வாரம் கழித்து பார்க்கிறேனே யுகன், சிறு புன்னகையை ஆவது என்னை நோக்கி வீசி இருக்கக் கூடாதா?’ என விம்மினாள்.
கத்தி அழுதால் மனப் பாரம் குறையுமெனத் தோன்றினாலும், அழுதால் என்ன.. அழுது களைத்து மயங்கியே போனாலும் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்க இங்கு ஆருமில்லை என விரக்தியுற்றாள்.
“யுகன்..”
சலிப்புடன், அவளைக் கிஞ்சித்தும் கண்டு கொள்ளாமல் நடந்தான் யுகேந்த்ராவ்.
“யுகன், ஐ க்னோ! ஐ க்னோ எவ்ரிதிங் அபௌட் வாட் ஹப்பெண்ட்.. எதுக்கு நீ அவொய்ட் பண்ணுறேனு தெரியும் யுகன். கியூட்டி பை’னு மைதிலி கிட்ட கொஞ்சுவியே! என்னை மட்டும் வெறுத்து ஒதுக்க காரணம் என்னனு எனக்கு தெரியும். என்னை நீ உன் பக்கத்துல சேர்க்க தயங்கறது ஏன்னும் தெரியும்..” என பொறுமை இழந்தவளாய் குரலுயர்த்தி கத்தினாள் மான்ஷி.
அவனது நடை தடைப்பட்டது. நின்று திரும்பிப் பார்க்கவில்லை தான் என்றாலும், வெட்டு விழுந்திருந்த புருவத்தை அழுத்தமாய் நீவியபடி அவள் கூறப் போவதைக் கேட்பதற்காய் காதுகளை கூர்மைப்படுத்திக் கொண்டான்.
‘காரணம் தெரிந்து விட்டதா?’ நினைக்கும் போதே உடல் சூடேறி, கண்கள் கோபத்தில் கோவைப் பழமாய் சிவந்து போயின.
“முடியாது, உன்னை விட்டு யாருமில்லாத இடத்துக்கு போய் என்னால இருக்க முடியாதுன்னு மறுக்க மறுக்க அப்பா என்னை படிக்கிறதுக்காக அப்ராட் அனுப்பி வைச்சாருல்ல?
அத்தை, மாமா ஆக்சிடண்ட்ல இறந்து போனதை கேள்விப்பட்டதும் எவ்ளோ துடிச்சேன் தெரியுமா? நானும் அவங்களை கடைசியா ஒரு வாட்டி பார்க்கணும்ங்குறதுக்காக வந்தே தீருவேன்னு அடம் பிடிச்சேன்.
அன்று,
‘நான் வருவேன், ப்ளீஸ் வர விடுங்களேன்..’ என அலைபேசி வழியே கதறிக் கொண்டிருந்தாள் மான்ஷி.
“வேணாம்டா. அதான் இங்க னாம எல்லாரும் இருக்கோமே, நீ பதறாத! எல்லாத்தையும் சரி வர பார்த்துக்கறோம்..” என யோசித்துப் பார்க்காமல் உடனடியாக மறுத்தார் சிவதர்ஷன்.
ருத்ரவனும், ரேணுகாவும் இறந்து விட்ட தகவல் காதை எட்டிய நேரத்திலிருந்து அவருக்கு நிமிடத்துக்கு ஒரு தடவை அழைப்பு விடுத்து கெஞ்சிக் கொண்டு தான் இருக்கிறாள். அவர் தான் பிடி கொடுக்காமல், தான் நினைத்தது தான் நடந்தாக வேண்டும் என்ற வீம்பில் மறுத்து பேசிக் கொண்டிருந்தார்.
“டாடி, யுகன் ரொம்ப உடைஞ்சு போயிருக்கான். அவனுக்காக நான் அங்க வரணும். ரொம்ப அழறான்ப்பா..” என கூறும் போதே,
‘எனக்குனு இப்போ இங்க யாரும் இல்லடி. எல்லாரும் என்னை விட்டு போய்ட்டாங்க. நீயும் தூரமா இருக்கே. தாங்கிக்க முடியல மானு..’ என உடைந்து பேசிய யுகனின் வார்த்தைகளை நினைத்து அழுதாள்.
அவனின் துயராற்றுவதில் தன் பங்கு என்னவென்பதைப் புரிந்து கொண்டதிலிருந்து அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எந்தெந்த முறைகளில் கெஞ்ச முடியுமோ, அந்தளவுக்குக் கெஞ்சி கூத்தாடிப் பார்த்து விட்டாள் தந்தையிடம்.
அவர் உறுதியாக மறுத்தபடியால், அவரறியாமல் கள்ளத்தனமாய் புக் செய்த டிக்கெட்களும் கூட அவரின் கருணையால் கான்செல் ஆகிக் கொண்டே இருந்தது.
“ப்.பா ப்..ளீஸ்..” என கடைசி நம்பிக்கையில் கெஞ்சிப் பார்த்தாள்.
மகளின் கெஞ்சலைக் காது கொண்டு கேட்க முடியாமல் அழைப்பைத் துண்டித்துக் கொண்ட தர்ஷன், அதன் பிறகு அவளின் அழைப்புகளுக்கு பதில் கொடுக்கவே இல்லை.
கட்டிலில் விழுந்து உருண்டு அழுது கரைந்தவள் இறுதி முயற்சியாய் தன் மணிக்கட்டை அறுத்து, வழிந்தோடிய இரத்தத்தை புகைப்படமாக்கி தர்ஷனுக்கு வாட்ஸப் செய்தாள்.
இனியாவது யுகனைக் காணச் செல்ல சந்தர்ப்பம் அமையுமென எதிர்பார்த்தாள். நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் இறைவனின் இருப்பை எங்ஙனம் உணர்வதாம்..
“நீ பைத்தியகாரத் தனமா எதையாவது ட்ரை பண்ணி செத்துகித்துப் போயிடாதம்மா..” என அழைப்பு விடுத்து மிக மோசமாய் அதட்டியவர், ‘உன் ஆட்டம் என்னிடம் எடுபடாது!’ என அத்தோடே அலைபேசியையும் அணைத்து ஓரந்தள்ளி வைத்து விட்டார்.
எது எப்படியோ, இவள் கையை அறுத்துக் கொண்ட விடயமறிந்து யுகன் தான் உயிர் வரை பதறிப் போனான்.
தன் கவலை, கண்ணீரையெல்லாம் மறந்து அவளை திட்டித் தீர்த்து விட்டான். அவனிடமிருந்து அந்தளவுக்கு சரமாரியாகத் திட்டு வாங்கியது அதுதான் முதன்முறை..
‘நீ என் உயிருடி..’ என அவன் கூறிக் கலங்கிய வரியில் அவளின் இதயம் அடிபட்டுப் போனது. தனக்கு ஒன்றென்றதும் இவ்வளவு கலங்குகிறான், ஆனால் அவனின் இழப்பிற்கு ஆறுதல் கூற நான்தான் அருகில் இல்லாமல் போய் விட்டேன் என கலங்கினாள்.
பெற்றவர்களின் இறுதி சடங்குகள் முடிந்த மறுநாளே, மான்ஷியைக் காண்பதற்காக விமானம் ஏறியிருந்தான் யுகன்.
அங்கு சென்று அவளது பைத்தியக்காரத் தனத்தை கண்டித்து அவளைக் கன்னம் கன்னமாக அறைந்து, பின் அவளை தன் நெஞ்சோடு அணைத்து உச்சி முகர்ந்ததெல்லாம் வேறு கதை!
‘உன்னுடனே ஊருக்கு வந்து விடுகிறேன்..’ என அடம் பிடித்தவளை,
‘மாமாவுக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாரு. நீ இங்கேயே இருந்து படி. நீ ஒரு கலெக்டராவோ, பெரிய ஆளாவோ வந்துட்டா எனக்கு இல்லையா பெருமை? நீ கலங்காதே.. வாரா வாரம் உன்னைப் பார்க்க ஓடோடி வருவேன்டி..’ என ஆறுதல்படுத்தி விட்டு வந்தவன், அன்று தான் அவளைப் பார்த்துப் பேசிய கடைசி நாளாகவும் அமைந்தது.
அதன் பிறகு அவனிடமிருந்து அழைப்புகள் வரவில்லை; இவளிடமிருந்து புறப்பட்ட அழைப்புகளுக்குக் கூட பதிலோ, பதில் அழைப்புகளோ இல்லை. என்ன ஏதேன்று புரியாமல் ஊருக்கு வர முயன்றவளை வலுக்கட்டாயமாய் அங்கே இருக்குமாறு தடுத்து வைத்திருந்தார் சிவதர்ஷன்.
அவனைக் காணவில்லை, அவனிடம் பேசவில்லை என ஏக்கத்திலே துடிதுடித்துப் போனவள், இன்று வரை பதில் தேடிக் கொண்டு தான் இருக்கிறாள், அவனது அலட்சியத்துக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும், விலகலுக்குமான காரணம் என்னவாய் இருக்கும் என்பதை!
சில வருடங்கள் முன்பு, குடும்பத்தினரின் மோசடிக்கு இலக்காகி ஒரு வேளை உணவுக்கு வழியின்றி ஸ்டேஷனுக்கு வந்திருந்தவர் தான் சிவதர்ஷன். ஐந்து மாத கர்ப்பிணியாக வயிற்றைத் தள்ளிக் கொண்டு அவரின் பின்னோடு வந்திருந்தாள் சகுந்தலா.
நம்பும் படியாக ஏமாற்றி, இவரிடம் இருந்த சொத்துக்களை மொத்தமாக தங்கள் பெயருக்கு மாற்றியமைத்துக் கொண்டதோடு, அவரை ஊரை விட்டே துரத்தி அடித்து விட்டனர் பணவெறி பிடித்த குடும்பத்தினர்.
அதற்கு சாட்சியாக, தர்ஷனிடம் எந்த ஆதாரங்களும் இல்லையென்றபடியால், பிரச்சனையை தீர்த்து அவருக்கு நியாயம் பெற்றுத் தர வழியின்றித் திணறிய ருத்ரவமூர்த்திக்கு அவர்மேல் பரிதாபம் எழுந்தது.
கர்ப்பமான மனைவி வேறு!
எதுவுமே செய்ய இயலாதென தானும் கை விரித்து விட்டால் உடைந்து போவார்கள் எனக் கருதி, நயமாகப் பேசிக் கதைத்து அவர்களை தன் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார் மூர்த்தி. அவருக்கு என்றுமே பிறருக்கு உதவுவதில் அதீத ஆர்வமுண்டு!
கணவனின் மூலம் நடந்ததை அறிந்து கொண்ட ரேணுகாவுக்கும் அவர்களின் மேல் தனிப்பிரியம் தலைதூக்கியது. கணவனுக்கு ஏற்ற மனைவி.
‘இத்துணை பெரிய பங்களாவில் அவர்களுக்கு தங்கிக் கொள்ள இடமில்லையா?’ எனக்கேட்டு அவர்களை அன்புற அரவணைத்துக் கொண்டாள். அப்போது யுகனுக்கு வெறுமனே ஐந்து, ஐந்தரை வயது தான்.
இத்தனை வருடங்கள் கடந்த பிறகும், இரு குடும்பத்தினரும் எந்தவொரு மனஸ்தாபமும் இன்றி ஒன்றாகத் தான் வசித்து வருகின்றனர்.
ருத்ரவனே தர்ஷனின் திறமையைக் கண்டு மெச்சி, ஒரு நல்ல அலுவலகத்தில் தன் செல்வாக்கை உயர்ந்த அளவில் உபயோகித்து வேலை வாங்கிக் கொடுத்திருந்தார்.
எப்படியோ அவரின் உதவியோடு வாழ்வில் முன்னேறி ஒரு தரத்துக்கு வந்த தர்ஷன், ‘அட்டையாய் ஒட்டிக்கொண்டு உங்களுக்கு தொந்தரவாய் இருக்க முடியாது..’ எனக் கூறிக்கொண்டு தான் சிறுக சிறுகச் சேமித்து சொந்தமாகக் கட்டிப் போட்ட வீட்டுக்கு குடிபுகப் பார்த்தாலும்,
‘என்ன பேசுறீங்கணா? நீங்க எல்லாரும் போய்ட்டிங்கனா அப்பறம் நானும் அவரும் உங்க பின்னாடியே, உங்க வீட்டுக்கு குடி பெயர்ந்துருவோம்..’ என செல்லமாக மிரட்டி, அவர்களைத் தங்களோடே நிறுத்திக் கொள்வதில் ரேணுகா பலே கில்லாடி!
இடைப்பட்ட காலத்தில் சகுந்தலா- ரேணுகாவுக்கு இடையில் தூய நட்பு வேர் விட்டிருந்தது. இரத்த தொடர்பின்றியே அக்கா, தங்கை என உரிமையோடு உறவாடும் ஆறுதலான அணைப்புகளும், தலை கோதல்களுமாய் மிக அழகியதொரு பந்தம்..
மறுபுறம் சிவதர்ஷன் மேல் எழுந்த பரிதாபம் காலப்போக்கில் அன்பாக மாற்றம் பெற்று, அவர்கள் இருவரும் கூட உற்ற தோழர்களாக உருமாறி இருந்தனர். விறைப்பாய் திரியும் போலீஸ்காரனிடம் உரிமையாக உரையாடும் தைரியம் தர்ஷனுக்கு மட்டுமே உள்ளது.
அன்று ஆற்றங்கரையிலிருந்து வீடு திரும்பிய கையோடு, “அந்த வாத்தி நம்ம மானுவை போட்டு அந்த அடி அடிச்சிருக்காருப்பா. அவனை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளுங்க..” என பதினாறு வயது சிறுவன் தந்தையிடம் அடம்பிடித்து நின்றான்.
ஓரிரு தடவைகள் மறுத்துப் பார்த்த ருத்ரவன், “அடங்க மாட்டியா? வாத்தி’னா அடிக்க தான் செய்வாங்க..” என அதட்டி, அதுவும் பயனளிக்காது போனதால் யுகனுக்கு நாலைந்து அடிகளைத் தாராளமாகக் கொடுத்திருந்தார்.
அவர் அடித்தது கூட வலிக்கவில்லை யுகனுக்கு. ஆனால் மானுவுக்கு கால்கள் தடிக்கும் அளவுக்கு அடித்தது தெரிந்தும் பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டாரே என கவலையாக வந்தது.
அதிருப்தி கொண்டு, முதன்முறையாக தந்தையிடம் முகம் திருப்பியவனை, தந்தை ருத்ரவமூர்த்தி தனிப்பட்ட முறையில் கனகவேலைச் சந்தித்து அதட்டி விட்டுச் சென்ற விடயம் எட்டியிருக்க வாய்ப்பில்லை தான்.
‘இவர் கிட்ட சொல்லி எதுவும் நடக்கப் போறதுல்ல..’ என சலித்து, தானாகவே களத்தில் இறங்கினால் என்ன என யோசிக்கத் தொடங்கினான்.
*******
வெய்யோனின் தகிப்பு தணிந்திருந்த முன் அந்திமாலைப் பொழுது!
கண்களிலிருந்து பாதியாய் இறங்கி மூக்கில் தேங்கிய கண்ணாடியை சரி செய்தபடி, தோட்டத்திலிருந்த கல் இருக்கையில் அமர்ந்து மாணவர்களின் பயிற்சி புத்தகங்களை திருத்திக் கொண்டிருந்தார், கனகவேல். கணக்கு வாத்தியார்!
ஸ்கூலில் பாடம் எடுப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால் ஹோம் ஒர்க் எழுதி வரும் மாணவர்களின் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வருபவர், மாலை நேரங்களில் ஓய்வாகி, கல் இருக்கையில் கால் மேல் கால் போட்டமர்ந்து கொண்டு அவற்றை சரி பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
அவ்விடத்துக்கு அருகேயிருந்த புதருக்குள் இருந்து ஓணானாய் தலை நீட்டினான் யுகன்.
கனகவேலை பார்க்கும் போது கோபம் கோபமாக வந்தது அவனுக்கு.
“எவ்ளோ தைரியம் இருந்தா என் மானுவையே அந்த அடி அடிச்சிருப்பாரு?” என பற்களை நறநறத்தவனின் மனக்கண் முன் வந்து சென்றது, தடித்துச் சிவப்பேறியிருந்த மான்ஷியின் வாழைத் தண்டுக் கால்கள்.
தந்தையிடம் கூறி வேலைக்காகவில்லை எனப் புரிந்ததும், டியுஷன் முடிந்த கையோடு வீட்டுக்கு செல்லாமல் நேராக வாத்தியின் வீட்டுக்கு வந்திருந்தவன் அவர் பயிற்சி புத்தகங்களில் கவனமாய் இருப்பதை பார்த்து நகைத்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தவன், மண்ணோடு பாதியாய் புதைந்திருந்த பெரிய சைஸ் கல்லொன்றைத் தூக்கி வீசியடித்து, அவரின் வீட்டின் கண்ணாடி ஜன்னலை உடைத்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
அவருடன் நேரில் மோதும் அளவுக்கு தைரியமில்லை. அதை விட, விடயம் அறிந்தால் ருத்ரவமூர்த்தி அடி பிளந்து விடுவாரென்ற பயம். அதனால் தான் இந்த வேண்டாத வேலை சிறியவனுக்கு.
“டேய்! யாருடா அங்க?” என்ற கனகவேலின் காட்டுக் கத்தல் அவனைப் பின் தொடர,
“என் மானுவையா அடிக்கிற? இன்னொரு வாட்டி அவளை அடிச்சா உங்க சொட்டை தலையில மாவரைப்பேனாக்கும்!” என காற்றோடு எச்சரிக்கை விடுத்தபடி மூச்சிறைக்க அவன் வந்து நின்றது தன் வீட்டுக்கு முன்னால் தான்.
குனிந்து, முழங்காலில் கைகளை ஊன்றி மூச்சு வாங்கியவன் நிமிரும் போது, கையில் பிரம்புடன் கண்கள் சிவக்க நின்றிருந்தார், ருத்ரவமூர்த்தி. யுகனுக்கு அச்சத்தில் ஒருகணம் இதயம் நின்று துடித்தது.
“அ.ப்..பா..” என அழைத்தவனின் தோளில் வலிக்காதவாறு ஒரு அடி வைத்தவர்,
“டியுஷன் போனவன் வீட்டுக்கு வர இவ்ளோ நேரமானது ஏன்?” என்று கேட்டபடி அவனது கைபற்றி இழுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தார்.
எதிரில் இருப்பவர் வேறொருவராக இருந்திருந்தால் வாயில் வந்ததை அடித்து விட்டு, அவரை சாமர்த்தியமான முறையில் நம்ப வைத்திருப்பான். ஆனால் உயிரான தந்தையிடம் பொய் கூற நா எழவில்லை. தந்தையின் கோபமுகம் பார்க்கும் போதே தெரிந்து விட்டது, தான் பார்த்து விட்டு வந்த வேண்டாத வேலை பற்றி அவர் அறிந்து விட்டாரென்று!
“கேட்ட கேள்விக்கு பதில் வரல..”
தந்தையின் அதட்டலில் தெளிந்தவன், டைல்ஸ் தரையில் அமர்ந்திருந்த மான்ஷியையும், அவளின் தலை வாரிக் கொண்டிருந்த ரேணுகாவையும் பார்த்து விட்டு ருத்ரவனை ஏறிட்டான்.
அவரும் விட்டபாடில்லை. பதில் கூறியே ஆகவேண்டும் என்பது போல் விடாக்கண்டனாய் அவனையே ஊடுருவும் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தார்.
இன்று தரமானதொரு சம்பவம் நடக்கப் போகிறதென யுகனின் மண்டைக்குள் அபாயமணி ஒலித்தது. மான்ஷிக்காக பேச வந்து, தந்தை நேற்று சாதாரணமாக முதுகில் போட்ட நான்கு அடிகளின் வலியே இன்னும் குறையவில்லை.
முதுகில் அவரின் ஐந்து விரல்களும் அழகாய் பதிந்திருக்கிறதென ரேணுகா இரவில் மூக்கு சிந்தி கண்ணீர் வடித்து முற்றாக ஒருநாள் கடந்திருக்கவில்லை. அதற்குள் இன்னொன்று..
தலையை திருப்பி மான்ஷியைப் பார்த்தான் மீண்டும்.
தட்டிலிருந்த மாதுளை முத்துகளை சுவைத்து கொண்டிருந்தவள் தன்னைப் பார்த்து உதிர்த்த புன்னகைக்காக எத்தனை அடிகளை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.
‘என் மானுவையே அடிச்சாருல?’ என ஆழ்கடலாய் பொங்கியவன், “அப்பா..” என்ற விளிப்போடு தந்தையை நோக்க,
“ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்கள் தேவைப்படும் யுகேந்த்ரா. பொய் சொல்லி தப்பிக்கிறதை விட, உண்மையை சொல்லி தண்டனை அனுபவிக்கிறது பெட்டெர். இது என் ஆசிரியர் சொல்லி கொடுத்த படிப்பினை!
நான் உனக்கு அப்பா இல்லையா? நீ என்ன பண்ணுவ, எதை பண்ணனும்னு யோசிப்பன்னு எனக்கு தெரியும். என் பார்வை எப்போவும் உன்னைச் சுத்தி தான் இருக்கும்..” என்றார் கேலியும், கண்டிப்பும் இரண்டறக் கலந்த குரலில்.
தலை குனிந்தவன், “வாத்தி மானுவை அடிச்சிருந்தாருல்ல அப்பா? அவ கால் சிவந்திருக்கு. பாவம் அவ..” என மறைமுகமாக தன் செயல் பற்றி விளக்க முயன்றான்.
அதன் பிறகு அந்த வீட்டினுள் இருந்து கேட்டதெல்லாம் யுகனின் கத்தலும், மான்ஷியும் அழுகையும், ரேணுகாவின் ‘என்னங்க..’ என்ற தவிப்புடன் கூடிய அழைப்புகளும் தான்.
“நான் தான் வேணாம்னு சொன்னேனே. வாத்தி திட்டுறாரு, அடிக்கிறாருன்னா அதுல ஒரு நல்லது இருக்கு. கேட்க மாட்டியா?”
“எப்போத்தில இருந்து அப்பா பேச்சையே மீறி நடக்க ஆரம்பிச்ச?”
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு அடி வீதம் இழுத்து விளாசினார் மகனை. அவன் கண்ணீர் விட்டு அழவில்லை, ஆனால் ஒவ்வொரு அடிக்கும் தாங்கமாட்டாமல் அலறினான்.
“மாமா, யுகனை அடி..க்காதீங்க.” என்ற கதறலுடன் வந்து அவரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தாள் மான்ஷி.
யுகன் சிவந்து போன கைகளை தேய்த்து விட்டபடி சுவற்றோடு ஒட்டி உடல் குறுக்கி அமர்ந்து கொண்டான்.
ருத்ரவமூர்த்தி இலகுவில் பிரம்பு தூக்க மாட்டார். தூக்கினால் இனி மரண அடி தான்! ஒவ்வொரு முறையும் அவன் அடி வாங்குவதற்கான பின்னணியில் குட்டி மான்ஷி தான் இருந்தாள்.
அவளைக் கலாய்த்ததற்காக பள்ளி மாணவனின் சீருடை கிழியும் அளவுக்கு மண்ணில் பிரட்டி உருட்டி அடி பிளந்ததால்..
‘அவளோட டிபன் பாக்ஸ்ல இருந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டிருக்கான். அவளுக்கு பசிக்கும்ல..’ என எதிரில் இருந்தவனின் மூக்கிலே குத்து விட்டதால்..
‘இவ பென்சிலை எதுக்கு அந்த மங்கம்மா எடுக்கணும்? அவ எடுத்ததால தான் இன்னைக்கி சித்திர பாட டீச்சர் இவளை கிளாஸை விட்டு வெளிய அனுப்பிட்டா..’ என மங்கம்மா என பட்டப்பெயர் வைத்து அழைக்கப்பட்ட மீராவின் கூந்தலைப் பிடித்து பலங்கொண்ட மட்டும் பீய்த்து இழுத்ததால்..
‘அவ விளையாடற பாலை(ball) நீ எதுக்குடா எடுக்கணும்? பாரு, அவ அழறா!’ என பக்கத்து தெருவில் வசிக்கும் சமவயது தோழனின் முகத்தை உடைத்ததால்..
அப்படி இப்படியென, எப்படியோ மாதத்துக்கு இரண்டு முறையாவது ருத்ரவமூர்த்தியிடம் சரமாரியாக வாங்கிக் கட்டிக் கொள்வான்.
‘இனிமே யாரையும் கை நீட்டி அடிக்க மாட்டேன்ப்பா’ எனக் கூறுபவன், மற்ற தடவை மான்ஷி கண்களை கசக்கி விட்டால் தந்தைக்கு பண்ணி கொடுத்த சத்தியத்தை மறந்து சம்பந்தப் பட்டவனை/ளை புரட்டி விடுவான். பிறகினி வீட்டுக்குள் பூஜை தான்.
இது வாடிக்கையாகிப் போன ஒன்று! ஆதலால் தான் என்ன நடந்திருக்கும் என்பதை வெகு சாமர்த்தியமாக ஊகித்து, அதை அவனது வாயாலே கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டு ருத்ரவன் கண்டித்தது.
“பாவம் யுகன், அவனை அடிக்காதிங்க மாமா..” என ஒரே வரியை பற்பல விதங்களில் கண்ணீரும், கதறலுமாய் கூறியவளின் அழுகை, வாடி வதங்கியிருந்த யுகனைப் பார்க்கும் போது நொடிக்கு நொடி அதிகரித்தது.
“இனிமே நீ ஒழுங்கா ஹோம் ஒர்க் எழுதிட்டு ஸ்கூல் போகலைனா மாமா உன்னையும் இப்படி தான் அடிப்பேன்..” என்ற அதட்டலோடு விருட்டென்று நகர்த்தவரின் பார்வை, மகனை பார்த்து கண்ணீர் சிந்தி நின்ற ரேணுகாவை தழுவி மீண்டது.
அவரின் பார்வைக்கான அர்த்தம் புரியாதவளா என்ன அவரின் மனையாள்?
‘துணிப் பொட்டலத்தில் ஊதி, பிரம்பு பட்டு சிவந்திருக்கும் இடங்களில் வலிக்காதவாறு ஒற்றி எடு! காயமாக முன் மருந்திடு!’ என்ற செய்தியை அவளிடம் உணர்த்தி நின்றன, ருத்ரவனின் கண்கள்.
ரேணுகா தலை குனிந்தபடி அவரைக் கடந்து நடந்தாள்.
மகனை திரும்பிப் பார்த்த ருத்ரவனின் கண்களில் ஏக வருத்தம்! ஆனால் என்ன செய்வது? செய்யும் தவறை இப்போதே அதட்டி மிரட்டி திருத்தவில்லையெனில் பிறகொரு நாளில் சமூகத்தில் கெட்ட பெயரை தாங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படுமே என்ற பதைபதைப்பு.
அவனை அடித்துப் போடும் நாட்களில், ரேணுகாவோடு சேர்த்து அவருமே இரவு பூரா உறக்கம் தொலைப்பார்.
யுகன் தூங்கிய பிறகு அவனறைக்கு சென்று, தடித்திருக்கும் கையையும் காலையும் வருடிப் பார்த்து, கலங்கும் கண்களுடன் அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியே வருவார். அதன் பிறகு ஓரளவாவது கண்ணயர்வார்.
மகனை சில நொடிகள் பார்த்திருந்தவர் பெருமூச்சுடன் நகர்ந்து விட,
“அந்த மனுஷன் தான் வேணாம்னு சொன்னாருல்ல? நீ எதுக்கு வாத்தி வீட்டுக்கு போன..” என்று கேட்டபடி மகனின் கைகளுக்கு மருந்து தேய்த்து விட்டாள், ரேணுகா.
“அவரு மானுக்கு அடிச்சிட்டாரும்மா..” என வலியின் விசும்பலுடன் கூறியவன், ஈரம் காயாத மான்ஷியின் கன்னங்களைத் தன் டீஷர்ட்டை இழுத்து மென்மையாகத் துடைத்து விட்டான்.
இப்படி நாட்கள் அதன் போக்கில் கடந்து சென்றன.
அன்று மாலை நேர ஸ்விம்மிங் கிளாஸ் சென்று விட்டு வீட்டுக்கு வந்த யுகன், யாரும் அறியாமல் மான்ஷிக்காக வாங்கி வந்த ஆரஞ்சு மிட்டாயை எடுத்துக் கொண்டு அவளறைக்குச் சென்றான்.
வழமையாக அவள் ஸ்கூல் ஹோம் ஒர்க் செய்யும் நேரமிது! அன்று ருத்ரவன் யுகனை அடி வெளுத்ததில் இருந்து சாப்பிட மறந்தாலும், ஹோம் ஒர்க் எழுத மறக்க மாட்டேனெனும் அளவுக்கு பயந்து போயிருந்தாள்.
ஆயிரம் வேலைகள் தான் இருந்தாலும், மாலை நேரத்தை ஹோம் ஒர்க் செய்வதற்காகவென்றே தனித்துவமாய் ஒதுக்கி வைத்திருந்தாள். தன்னால், தன் உயிரோடு கலந்தவன் துன்பமுறுவதை அனுமதிக்க அவளென்ன முட்டாளா..
“ஹோம் ஒர்க் பண்ணற நேரமாச்சே! மானு எங்க போனா..” என தன்னிடமே கேட்டுக் கொண்டு சமையலறைக்கு சென்றவன், அங்கு பதட்டமாக நின்றிருந்த தாயையும், சகுந்தலாவையும் பார்த்து குழம்பிப் போனான்.
“ம்மா, மானுவை ரூம்ல காணோம். எங்க போயிட்டா?”
“இல்லைடா, கிளாஸ் விட்டு அவ வீட்டுக்கே வரல. எங்க போய்ட்டானு டென்ஷனா தேடிட்டு இருக்கும் போது தான் தெரிஞ்சுது, அப்பா மேல இருக்குற கோபத்துல பாப்பாவை யாரோ கிட்னப் பண்ணிட்டாங்கனு.. அப்பாவும், தர்ஷன் அண்ணாவும் பாப்பாவை அழைச்சிட்டு வர போயிருக்காங்க..” என யோசிக்காமல் பார்க்காமல் உண்மையை மறைக்காமல் புட்டுபுட்டு வைத்தார் ரேணுகா.
‘என்ன!’ என நொடியில் பதறி விட்டான் யுகேந்த்ரன்.
“இல்ல, மானுவுக்கு எதுவும் ஆகாது..” என மூச்சுவிட மறந்து இடையும்றாது முணுமுணுத்தவன், பதற்றத்தைக் குறைபதற்காக குவளையிலிருந்த தண்ணீரை மொத்தமாக வாய்க்குள் சரித்தான்.
“யாரும்மா கிட்னப் பண்ணி இருக்காங்க?” என்று மூச்சு வாங்க கேட்டவனிடம் பதில் கூற தயங்கிய ரேணுகா, அவனது இந்தப் பதட்டமும், தவிப்பும் கூட ஆபத்தானதோ என பயந்தாள்.
சாதாரண பதற்றமல்ல அது! முகத்தில் அருவியாய் வியர்வை வழிய, தொண்டைக் குழி ஏற இறங்க மேஜையின் ஓரத்தை அழுத்தமாக பற்றியபடி பதினெட்டு வயதேயான மகன் நின்றிருந்த கோலம் ஒருவித பயத்தை கொடுத்தது, அவனைப் பெற்ற தாய்க்கு.
“அவ இருக்குற இடம் தெரிஞ்சிடுச்சு. நீ டென்ஷன் ஆகாத தம்பி! பாப்பாவுக்கு எதுவும் ஆகாது..” என சகுந்தலா முந்திக் கொண்டு கூறிய எதுவும் அவனது காதில் ஏறவே இல்லை.
தலையை பற்றியபடி அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தவனிடமிருந்து, “மானுவுக்கு ஏதாவது ஆச்சு.. அப்பறம் நா..நான் எவனையும் சும்மா விட மாட்டேன்..” என்ற வெஞ்சின சபத வார்த்தைகள் வெளி வந்தன.
அயர்வாய் மெல்ல சுவற்றில் தலை சாய்த்தவன், “மானு..” என்ற முனகலோடு அடுத்த கணமே நான்காக மடிந்து, தொப்புக்கடீரென்று மயங்கி விழுந்திருந்தான்.
மான்ஷி அதீத கோபத்தில் வீசியடித்த ஜாடி காற்றில் பறந்து வந்து அவனைத் தாக்கி விட்டுக் கீழே விழுந்துடைந்து நாலாபுறமும் சிதறிப் போனது.
அவன் கையில் காயமாகி இரத்தம் வெளியேற ஆரம்பித்ததும், வீசி அடித்தவளுக்கே உயிர் வரை வலி கண்டது தான் விந்தை!
ஜாடி தன்னை நோக்கி வீசப்படுவதைக் கண்டதும் நகர்ந்து நிற்பான். பிறகு அந்த ஜாடி மீண்டும் தன்னை நோக்கியே வீசியெறியப்படும் என்றல்லவா நினைத்தாள்? கல்லுளி மங்கன் போல் நின்ற இடத்திலே நின்றிருப்பான் என கனவா கண்டாள்..
“ஐயோ யுகன், ரத்தம்!” என பதறிக் கொண்டு வந்தவளின் கண்களில் மாலை மாலையாய் வழிந்தது, கண்ணீர்.
அவளின் காட்டுக் கத்தலில் தான், நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் உறைந்து நின்றிருந்த மிதுனா என்ற சிலைக்கு உயிரே வந்தது. யுகனை ஏறிட்டுப் பார்த்தவள் கையில் இரத்தம் வழிய அவன் நின்றிருந்த கோலம் கண்டு அதிர்ந்து கண்களை இறுக பொத்திக் கொண்டாள்.
“ஐயோ யுகன், உன் கைல பிளட் வருது. அதான் வீசி அடிக்கிறேன்னு தெரியுதுல? அப்பறம் அப்படியே நின்னுட்டு இருப்பியா பைத்தியம்! நீ என்ன லூசாய்யா?”
வார்த்தைக்கு வார்த்தை மூக்குறிஞ்சியபடி விம்மலுடன் பேசியவள், அவனின் கை பற்றி, காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் தன் துப்பட்டாவால் துடைத்து விட்டாள். காயம் பட்டது அவனுக்கு, ஆனால் வலியின் தாக்கத்தில் துடித்துப் போனதென்னவோ அவள்..
“சாரிடா..” என கண்ணீர் வழிய மன்னிப்பு இறைஞ்சியவள் அழுதழுது மூச்சிறுகிப் போய் இடது கையால் மெல்ல நெஞ்சை நீவிக் கொண்டாள்.
மூச்சை ஆழமாக இழுத்து வெளியேற்றியவாறு உள்ளே ஓடப் பார்த்தவளின் இடை வரை வளர்ந்த கூந்தலைப் பற்றி இழுத்து நிறுத்தியவன்,
“ஆக்ட்டிங் போதும்! இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு..” என அலட்டிக் கொள்ளாமல் சிடுசிடுத்தான், யுகன்.
“ஆக்ட்டிங்கா?” என்று கேட்டவளுக்கு அழுகையையும், கோபத்தையும் மீறி சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.
“ஆகட்டிங் இல்ல?” என்று தன்னிடமே கேட்டுக் கொண்டு கண்களை துடைத்தபடி விரக்தியாகச் சிரிக்க முயன்றவள், அவன் முடியைப் பற்றி இழுத்துக் கொண்டிருப்பதால் எழுந்த வலியில் சட்டென முகம் சுணங்கினாள்.
“ஸ்ஸ்ஸ்..” என பற்களைக் கடித்து வலியை விழுங்கிக் கொண்டவள் அவனின் கைகளுக்குள் சிறையாகி பாடுபட்டுக் கொண்டிருந்த முடியை ஒரே இழுவையாக இழுத்து விடுவித்துக் கொண்டு வீட்டினுள் ஓடினாள்.
அடுத்த அரை நிமிடத்தில் முதலுதவிப் பெட்டியோடு அவன் முன் வந்து நின்றவள், அவனது உஷ்ண முறைப்பை சற்றும் கண்டு கொள்ளாமல் மருந்து கட்டி விட முயல, அவள் கையைத் தட்டி விட்டவன்,
“மிதுனாஆ..” என்று உச்சஸ்தாயியில் கத்த, அவ்வளவு நேரம் இருவரையும் ஆவென வாய் பிளந்து பார்த்திருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸை அவ கைல கொடுத்துட்டு மரியாதையா இங்கேருந்து கிளம்பு. என் பொறுமைய சோதிக்காத!” என அதட்டியவன் இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற குறிப்புடன் விறுவிறுவென வீட்டினுள் சென்று விட்டான்.
கோபத்தில் புசுபுசுவென மூச்சு வாங்கியவள், “எல்லாம் உன்னால வந்தது. எனக்கும் அவனுக்கும் இடைல ஆயிரம் சண்டைகள் இருக்கும்; கோபம் இருக்கும்; ஏன் வெறுப்பு கூட இருக்கும். ஆனா நீ வந்து குறுக்கா நிற்க வேண்டிய அவசியமில்ல மிதுனா. அப்பறம் உன் அம்மாப்பாவுக்கு அவங்க பொண்ணு இல்லாமலே போய்டுவா..” அவனை நெருங்க முடியாத இயலாமையைக் கொட்டித் தீர்க்க, அவளைப் பயப்பார்வை பார்த்து வைத்தாள் மிதுனா.
யுகனையே பயமின்றி தாக்கியவளாயிற்றே! தன்னைத் தாக்க முடியாத கோபத்தில் தான் ஜாடியை அவனை நோக்கி விட்டெறிந்தாள் என அவளுக்குப் புரியாமலில்லை.
“அவன் ரொம்ப ரோஷக்காரன். இப்போ நான் போகலைன்னா மருந்து கட்டிக்காம, கைல வழியிற ரத்தத்தை கூட துடைக்காம அப்படியே உக்காந்துட்டு இருப்பான். ஸோ போறேன். மருந்து போட்டு விட்ட கையோட நீ இடத்தை காலி பண்ணிட்டு போயிட்டே இருக்கணும். இனி இந்த பக்கம் மறந்தும் கூட எட்டிப் பார்த்திடாத! என்னை கொலைகாரி ஆக்காதே மிதுனா.” என கட்டளையாய் கூறியவள் முதலுதவி பெட்டியை அவள் கையில் திணித்து விட்டு நகர்ந்தாள்.
மிதுனா பெருமூச்சுடன் வீட்டினுள் நுழையும் போது, கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கையில் வழியும் இரத்தத்தை வெறித்துக் கொண்டிருந்தான், யுகன்.
“யுகன் சார்!” என்ற அழைப்புடன் அவனை நெருங்கிச் செல்லவென்று காலடி எடுத்து வைத்தவள் அவன் பார்த்த பார்வையில் அவ்விடமே தேங்கி விட, கை நீட்டி முதலுதவி பெட்டியைக் கை காட்டினான்.
“உங்க கைல..” என பதற்றமாகப் பேச வந்தவளை முறைத்தவன், “உன் வேலை எதுவோ, அதை மட்டும் பாரு மிதுனா..” என்றான் அழுத்தமாய்.
மேற்கொண்டு விதண்டாவாதம் செய்ய தைரியமின்றி முதலுதவிப் பெட்டியைக் கொடுத்து விட்டு அவனுக்கு சற்றுத் தள்ளி சோபாவில் அமர்ந்து கொண்டாள், கைகளைப் பிசைந்தபடி.
பற்களைக் கடித்து வலியை தனக்குள் புதைத்தபடி காயம்பட்ட கையில் மற்றொரு கையால் சுயமாகவே கட்டுப் போட்டுக் கொண்டான் யுகன். இடையிடையே பதறி தன்னருகே வந்து நின்றவளை தீப் பார்வை பார்த்து தூர நிறுத்தவும் மறக்கவில்லை.
•••••••
நிலத்தில் விழுந்து வலியால் துடி துடித்துக் கொண்டிருந்தவனை ஆசை தீரப் பார்த்திருந்தான் யுகன். காயம்பட்ட கையில் கட்டு போட்டுக் கொண்டதும் அடுத்ததாய் அவன் வந்து நின்றது இந்த இடத்துக்கு தான்!
அவனின் கியூட்டி ப்பை’யை தொட்டவனை அப்படியே விட்டு விட அவன் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லையே!
ஏற்கனவே அவனைப் பற்றி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் காதில் வந்து விழுந்திருக்க, ‘சரிதான் விட்டுப் பிடிக்கலாம்’ என நினைத்திருந்தவன் அந்தப் பொறுப்பை அப்படியே இந்தரிடமே ஒப்படைத்தும் விட்டிருந்தான்.
ஆனால் மைதிலியிடம் வம்பு வளர்த்து அவளது கைப் பற்றியது பத்தாதென்று அவளின் கூந்தலை வேறு பிடித்திழுத்திருக்கிறானே! அவள் வலியில் துடித்துப் போயிருக்க மாட்டாளா என அவளை விட இவன் தான் சினந்தான். அவளது கசங்கிய முகத்தைக் கற்பனை செய்து பார்த்தவனுக்கு இவனைக் கொன்று விட வேண்டுமென்று தான் ஆசை பிறந்தது.
“எவ்ளோ தைரியம் இருந்தா பொண்ணுங்க கையைப் பிடிச்சிழுப்ப.. பொண்ணுங்கன்னா அவ்ளோ இளக்காரமா போச்சா உனக்கு?” என்று கேட்டவன் ஜீவனற்று நிலத்தில் விழுந்திருந்தவனது கையில் ஷூக் காலால் அழுத்தம் கொடுக்க,
“அம்மாஆஆஆ.. ” எனப் பெருங் குரலெடுத்துக் கதறினான், குமரனின் மகன்.
“ச்சை, அம்மானு சொல்லாதடா..” என பற்களைக் கடித்தவனின் கண்கள் கலங்கிச் சிவப்பேறின.
இருவரையும் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்திருந்த இந்தருக்கு யுகனின் கோபம் அதீத பயத்தைக் கொடுக்க, எச்சிலைக் கூட்டி வறண்டு போயிருந்த தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டவன், “யுகி பையா..” என்றழைத்தான், இறங்கிய குரலில். அவன் அழைத்தது அவனுக்கே கேட்காத நிலையில் சிங்கமாய் கர்ச்சித்து நின்றவனுக்கு கேட்டிருக்க முடியுமா என்ன..
“ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்! இன்னொரு வாட்டி உன்னைப் பத்தி ஒரு சின்ன கம்ப்ளைன்ட் என் காதுல வந்து விழக் கூடாது..” என விரல் நீட்டி எச்சரிக்கையாய் கூறியவன் நாவை மடித்து,
“ஜாக்கிரதை!” என சீறி விட்டு விருட்டென்று அங்கிருந்து வெளியேறி விட, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தொப்பென்று நிலத்தில் அமர்ந்தான் இந்தர்.
என்ன நடக்குமோ.. ஏது நடக்குமோ என்ற யோசனையில் ஒழுங்காய் மூச்சு விடக் கூட மறந்து போயிருந்தான் அந்த அப்பாவி.
பெண்களை லேசாகத் தொட்டவனின் கையையே கதறக் கதற துண்டித்து தூர எறிபவன் மைதிலியை நடு சாலையில் வைத்து வம்பு செய்தவனை விட்டு வைக்க மாட்டான் என உறுதியாய் நம்பினான். ஆனால் அவன் அடித்து மிரட்டியதோடு விட்டு விட்டுச் சென்று விட்டானே..
‘நாம் நினைத்தது என்று தான் நடந்திருக்கிறது? நினைப்பது ஒன்று.. நடப்பது ஒன்று!’ எனப் பெருமூச்சு விட்டவன்,
“உனக்கு இது தேவையாடா? நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருந்தா லைஃபைக் கூட சந்தோசமா வாழாம இப்படி பாதிலயே முடமாகி கிடப்பியா?” என்றான்.
குரலில் அத்தனை ஆதங்கம்..
எதற்கு இந்த வீண் வேலை? உன் பாட்டில் இருந்திருக்கலாமே.. இவ்வளவு நாள் குடியால் உடம்பைக் கெடுத்துக் கொண்டிருந்தவன் பெண்ணைத் தொட்ட.. இல்லை தொட்டு கலாய்க்க நினைத்த ஒரே காரணத்தினால் முடமாகியே விட்டானே என அவன் மேல் பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை இந்தரால்.
“அது அவனோட விதி! இவனைப் பார்த்து இன்னும் நாலு பேர் நடு ரோட்டுல பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணுறதை நிறுத்திடுவாங்க..” என முதுகுக்கு பின்னே ஒலித்த யுகனின் சிம்மக் குரலில் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றான். போகிறேன் என்று சென்றவன் மீண்டும் வந்து நிற்பான் என அவன் எங்கே அறிந்தான்?
“ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய், நல்ல ட்ரீட்மென்ட் கொடுத்துடு..” வலியில் முனகிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவாறே இந்தரிடம் கூறியவன் அவனின் பதிலை எதிர் பாராமல் அங்கிருந்து சென்று விட,
தவறென்று ஒன்றைக் கண்டு கொண்ட நொடியில் சம்பந்தப்பட்டவனை அடி வெளுத்து விட்டு, காயமாகியவனை ‘ஹாஸ்பிடலில் சேர்த்து விடு ‘ எனக் கூறினால் பாவம் இவனும் என்னதான் செய்வான்? சரியென்று தலை அசைத்து விட்டு கூறுவதை கூறியபடியே செய்து முடிப்பவன் இரவில் காமினியிடம் புலம்பித் தள்ளுவான்.
அதற்கென்று மனதளவில் சாதாரணமாகவேணும் யுகனை வைதது கிடையாது. அவனது எந்தவொரு செயலிலும் அதிருப்தியில் முகம் சுழித்ததும் கிடையாது. செய்தவன் அனுபவிக்கட்டுமே என ஆழ்மனம் கூறிவதைக் கேட்டு தன்னைத் தானே ஆறுதல்படுத்திக் கொள்வான்.
பக்கவாத நோயாளியைப் போல் கையையும் காலையும் இழுத்துக் கொண்டிருந்தவனை அள்ளித் தோளில் போட்டுக் கொண்டவன், ஒப்படைக்கப்பட்ட வேலையை செய்து முடிக்கவென அங்கிருந்து கிளம்பினான்.
*******
இருள் அடர்ந்த நேரத்தில் சமையலறையில் பாத்திரம் உருட்டிக் கொண்டிருந்தாள், சகுந்தலா.
இரவுணவை தயாரிப்பதற்கென வெட்டி வைத்திருந்த காரட் துண்டுகளை நறுக் நறுக்கென கடித்த வண்ணம் சமையலறையின் படியில் ஏறி அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தாள், மான்ஷி.
யோசனை முழுவதும் யுகனை சுற்றித் தான் வலம் வந்தது. கைக் காயம் என்னவாயிற்றோ.. இந்நேரம் உணவு உட்கொண்டு இருப்பானோ.. என்ன செய்து கொண்டிருப்பான்.. அந்த ரோஷம் கெட்டவள் மிதுனா அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டிருப்பாளா, இல்லையா.. பெயின் கில்லர் மருந்து போட்டிருப்பானா.. அதைப் போட்டிருந்தால் கொஞ்சமாவது வலி குறைந்திருக்குமே.. என பலவாறெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தவளின் தொடையில் வலிக்கும்படி கிள்ளி வைத்தாள், சகுந்தலா.
தொடையில் சுள்ளென்று வலித்ததும் தான், விரண்டோடிக் கொண்டிருந்த சிந்தனைக் குதிரை ஓரிடத்தில் மூச்சிறைக்க நின்றது போலும், “ஸ்ஸ்..” என வலியில் முகம் சுருக்கியபடி தாயை முறைத்தாள்.
“அப்படி என்னடி யோசனை உனக்கு?”
“ப்ச்!” என சலித்துக் கொண்டவள் கை நீட்டி சோம்பல் முறித்தபடி,
“வேற எதைப் பத்தி தான் யோசிக்க போறேன்ம்மா? எவ்ளோ அன்பா இருந்தான்.. மைதிலியை விட என்னைத் தான் ரொம்ப புடிக்கும் யுகனுக்கு. ஆனா இப்போ என்னைக் கண்டுக்குறதே இல்ல, பார்த்தியா? கண்டாலே வள்ளுனு எரிஞ்சு விழறான். ஏன்ம்மா..
படிப்புக்காக நான் அவனை விட்டுட்டு அப்ராட் போயிருக்கவே கூடாதும்மா. அதான் அவன் இப்போ என்கிட்ட பேசாமலே இருக்கானோ, என்னவோ..” என்றாள், தன்னை சிந்தனைக்குள் மூழ்கடித்துக் கொண்டே..
“அப்படி சொல்லவும் முடியாது கண்ணம்மா. நீ அப்ராட் போன பிறகும் கூட வாரா வாரமோ, மாசம் ரெண்டு தடவையோ தவறாம உன்னைப் பார்க்க வந்தானே? திடீர்னு தான் இப்படி ஆகிட்டான். பாவம் யுகி தம்பி!”
ஆமோதிப்பாய் தலை அசைத்தாள், மான்ஷி.
“அப்பாம்மாவை ஒரே டைம்ல இழந்ததுக்கு பிறகு தனிமைல இருந்து இப்படி முரடனா ஆகிப் போய்ட்டான், மான்ஷி. நீங்க போய் உங்க வீட்டுல இனி தங்கிக்கோங்கனு திடீர்னு ஒருநாள் வந்து சொன்னதும், நாங்களும் அதான் சரினு யோசிச்சி நம்ம வீட்டுக்கே வந்துட்டோம்.
அப்போ நம்ம கூடவே தங்கிக்கோப்பானு சொன்னேன்; கேட்கல. எத்தனையோ வாட்டி நானாகட்டும், உன் அப்பாவாகட்டும்! போய் கூப்பிட்டு பார்த்தும் எதுவும் வேலைக்கு ஆகல. ஒரேயடியா மறுத்துட்டான்.
அவங்க இறப்பு பிறகு தம்பி அவ்ளோவா நம்ம வீட்டு பக்கம் வந்து போகல. நானோ, உன் அப்பாவோ போனாலும் முகம் கொடுத்து பேசல.
ஆனா மைதிலி கூட பேசினான்; அடிக்கடி ஃபோன் பண்ணி மணிக் கணக்கா பேசி சிரிப்பான்; இவளும் அங்க போய் வருவா! தம்பி இங்க வரதுனாலும், அவளைப் பார்க்குறதுக்காக மட்டுந்தான் வந்தேன்னு சொல்லுவான்.
இப்போல்லாம் யாருக்கிட்டயும் ஒட்டி பழக பயப்படறானோ என்னவோனு தோணுது, மான்ஷி! ருத்ரா அண்ணாவை அவனுக்கு எவ்ளோ புடிக்கும்னு உனக்கு தான் தெரியுமே..”
ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவளுக்கு, இடைப்பட்ட காலத்தில் ஏதோவொன்று நடந்திருப்பதாய் உள்ளுணர்வு உறுத்தியது.
யாரிடமும் நெருங்கிப் பழக பயப்படுகிறான் என்றே வைத்துக் கொண்டாலும், அப்படியாயின் மைதிலியிடமும் கூடத் தானே அளவோடு பழகி இருக்க வேண்டும்? ஆனால் அன்னை கூறுவதை வைத்துப் பார்த்தால், அதற்கு தலை கீழாக அல்லவா நடந்திருக்கிறது?
காலையில் ஷாப்பிங்மால் சென்றிருந்த இடத்தில் நடந்த விடயம் பற்றி மைதிலி அன்னையிடம் கூறக் கேட்டாளே..
நடந்த சம்பவம் கேள்வியுற்றதும் அவளைக் காண ஓடோடி சென்றிருக்கிறான் என்றால்! ம்ம்கூம், மேற்கொண்டு சிந்திக்காமல் அயர்வோடு தலை சிலுப்பிக் கொண்டாள், மான்ஷி.
“மான்ஷி!” என நான்காவது முறையாக அழைத்து பார்த்துவிட்டு தோளில் ஒரு அடி வைத்து, மீண்டுமொரு முறை இயல்புக்கு அழைத்து வந்தாள், சகுந்தலா.
“ஹான்!!” எனத் தெளிந்து திருதிருத்தவள்,
“அத்தை, மாமா இறந்ததுக்கு அப்பறம் என்னைப் பார்க்க வந்தவன், எனக்குன்னு உன்னைத் தவிர வேற யாருமே இல்லைனு எவ்ளோ அழுதான் தெரியுமா? அந்த அழுகை இன்னுமே என் கண்ணுக்குள்ள இருக்கும்மா. ரொம்பவே உடைஞ்சு போயிருந்தான்.
அன்னைக்கு வந்து என்னை பார்த்து பேசிட்டு போனவன் பிறகு எனக்கு ஃபோனே பண்ணல; நான் பண்ணினாலும் எடுத்து பேசல; திடீர்னு அவொய்ட் பண்ண தொடங்கிட்டான்.
என்மேல எதுனாலும் கோபமோ நினைச்சுக்கிட்டு, இங்க வர என்னாலான முயற்சிகளை எல்லாம் செய்தேன். அப்பா, இருந்த அத்தனை வழிகளையும் அடைச்சு, என்னை இங்க வர விடாம பண்ணாரு!
சரிதான், பழசு எதுக்கு? நான் தான் வந்துட்டேனேம்மா. எதுக்கு என்னை இந்தளவு தவிர்க்கறான்? நான் என்னம்மா தப்பு பண்ணேன்.. இந்த ரெண்டு மாசத்துல அவன் என்கிட்ட ஒழுங்கா பேசின நாள்னு ஒரு நாளே இல்ல, தெரியுமா?” என்றவளின் குரல் பாதியிலே உடைந்தது.
மனம் நொந்தவராய் மகளை மிகுந்த வருத்தத்துடன் ஏறிட்டாள் சகுந்தலா.
“மானும்மா எப்போடி என்கிட்டே வருவனு தினம் தினம் ஃபோன் பண்ணிக் கேட்டவன் தானேம்மா.. நான் வந்ததும் வந்திட்டியா மானுனு கேட்டுட்டு ஓடி வந்து அவனோட மான்குட்டியை கட்டி அணைச்சு கொஞ்சி இல்லையா இருக்கணும்?
எதுக்கும்மா கோபப்படனும்? என்னை முறைக்கணும்.. விலகி நடக்கணும்.. வே.. வேதனைப் படுத்தனும்?”
பதில் சொல்லத் தெரியாமல், கனத்த மௌனத்தை அவ்விடம் நிலைக்க விட்டவளின் கரம் மான்ஷியின் தலை வருடிக் கொடுத்தது, வெகு ஆதூரத்துடன்.
“அவன் என்னை ஸ்ட்ரேஞ்சரைப் போல பார்க்கிறான்ம்மா. அவனோட மானு இல்லம்மா நான்? மைதிலி கிட்ட ரொம்ப நல்லா பேசத் தெரிஞ்சவனுக்கு, ஏன் என்னைப் பிடிக்கல?”
“தம்பிக்கு உன்னைப் புடிச்ச அளவுக்கு வேற யாரையும் பிடிக்காது, கண்ணம்மாஆ!” என மகளின் துயராற்ற முயன்றாள், சகுந்தலா.
“வாய்க்கு வந்தபடி பேசாதடி!” என அதட்டினாள், மருமகனின் கரைக் காணாத அன்பையும்.. காதலையும் மனக்கண் முன் காட்சியாக்கியபடி.
“எனக்கென்னவோ, இத்தனை வருடங்கள் அவனைத் தவிக்க விட்டதுக்காக தான் என்னை இப்படி ஒதுக்கி வைக்கிறானோனு தோணுதும்மா. கண்டிப்பா அவனை நான் அடைவேன்; உங்க மருமகன் கையை கோர்த்துட்டு ஒருநாள் நான் இந்த வீட்டுக்கு வரல!! சத்தியமா என் பேரை நான் மாத்திக்கிறேன்..” என சபதம் எடுக்க,
“ஏற்கனவே உன் பேரை தான் தம்பி மாத்தி வைச்சிருக்காரே, மாளவிகா!” என மகளை இலகுவாக்கும் பொருட்டு கேலி செய்தாள், சகுந்தலா.
நினைத்தாற்போலவே, மான்ஷியாக மாற்றம் பெற்ற மாளவிகாவின் முகம் விகசித்தது.
தலை அசைத்து மெல்ல சிரித்துக் கொண்டவள்,
“அப்பப்பா! அவ பேரு மாளவிகாடானு நாங்க எல்லாரும் சொல்லுறதைக் கேட்காம, இல்ல மான்ஷி தான்னு அவன் சின்ன வயசுல செய்த சேட்டைகள் இன்னுமே கண்ணுக்குள்ள நிற்குது!
மாளவிகானு அவன் காதுபட யாராவது கூப்பிட்டா போதுமே! மான்ஷி சொல்லுனு அடிக்க வருவான். கோபம் பொத்துகிட்டு வரும் தம்பிக்கு! அந்த வயசுலயே உன்மேல அன்பு வைச்சவன் தான், இப்போ ஒதுக்கிறான்னா.. ஏதாவது காரணம் இருக்கும்னு என் மனசு சொல்லுதும்மா!
பொறுமையாரு! காலம் எல்லாத்தையும் சரி செய்யும்னு நம்புவோம்..” என்றவளைப் பார்த்து புரிந்ததாகத் தலை அசைத்தாள்.
நினைவுகள் மீண்டும் மனம் கவர்ந்தவனை நோக்கி அவசர கதியில் பயணித்தன.
‘ஓ.. வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக..
அவன் வருவான் என்று காத்திருந்தேன்..
ஓ.. அவன் குரல் கேட்கும் திசைகளிலெல்லாம் புது புது கோலம் போட்டு வைத்தேன்..
மக்கள் அதிகமாகப் புலங்கும் அந்த நாலடுக்கு ஷாப்பிங்மாலின் முன், அரை போதையில் தள்ளாடியபடி கடந்து செல்லும் பெண்களிடம் வம்பளந்து கொண்டிருந்தான் ஒருவன்.
தன்னைப் பார்த்து அஞ்சி தள்ளி நின்ற யுவதிகளின் கரம் பற்றி இழுத்து அவர்களிடம் வம்பளக்க, கடுப்பாகி அவனை கை நீட்டி அறைந்தே விட்டாள் அவர்களில் ஒருத்தி.
அவமானத்தில் முகம் கறுத்தவன், “ஹேய்! யூ!என்னையே அடிச்சிட்டல்ல.. நான் யார்னு தெரியுமா உனக்கு?” என்று தள்ளாட்டத்துடன் கேட்டபடி நேராக நிற்க முடியாமல் அவள் மீதே விழப் போக,
“ஸ்டே அவே!” என விரல் நீட்டி எச்சரித்தவள் பொறுமையாக இரண்டடி பின்னகர்ந்து நின்று கொண்டு,
“ஏய்ய்!” என எகிறிக் கொண்டு வந்தவனது வயிற்றிலே ஒரு குத்து வைத்தவள்,
“என்னடா எகிறிட்டு வர? ரொம்ப நல்லவன் மாதிரியில்ல சீறிப் பாய்ற.. ச்சீய்! முதல்ல போய் மனுஷனா வாழ பழகு. அப்பறம் அவனை மதிக்க பழகு. பிறகு இந்த உலகம் உன்னை மதிக்கும்..” என்றாள், ஏளனக் குரலில்.
இவனிடம் பேசி பயனில்லை எனத் தெரிந்தாலும், சூழ்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்காவது உறைக்கட்டும் என்ற நினைப்போடு தான் கூறினாள்.
ஒரு வயதுப் பெண்ணிடம் நடு சாலையில் வம்பு செய்கிறானே.. அவனை அதட்டி இரண்டு கேள்வி கேட்டால் என்ன என்ற எண்ணமின்றி, ‘ஃப்ரீ ஷோ’ பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை பார்க்கும் போது பற்றிக் கொண்டு வந்தது பூம்பாவைக்கு.
“ஹே.. ஹேய்! இவன் ரொம்ப மோசமானவன்டி. எதுக்கு வீண் வம்பு? வா, நம்ம போலாம் மைதிலி..” எனப் பயத்தில் வெளிறிப் போன முகத்துடன் சாந்தனா தோழியின் வாயை அடைக்க முயன்றாள்.
“ப்ச், விடுடி! இந்த மாதிரி பொறுக்கிங்க எல்லாம் தட்டி கேட்க ஆளில்லைங்கிற தைரியத்துல சுத்திட்டு இருக்கானுங்க. சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறாங்களே தவிர அதட்டி ஒரு கேள்வி கேட்குறாங்களா, பாரு.
இதனால தான் இந்த கழிசடை நாய்ங்க இன்னுமே உருப்படாம தைரியமா சுத்திட்டு இருக்காங்க. பொறுக்கிப் பய!
இன்றைக்கு இவனை நான் சும்மா விடப் போறதுல்ல. எவ்ளோ தைரியம் இருந்தா என் கையைப் புடிச்சு இழுப்பான்?” என தோழியிடம் எகிறிய மைதிலி, அவன் புறம் தன் பார்வையை ஓட்டினாள்.
“ஏய்!!” என மீண்டும் சீறியவனை,
“ஏய் ச்சி, கம்முனு கெட!” என முறைப்புடன் அடக்கியவள்,
“அதில்ல, நீ யாருனு கேட்டல்ல என்கிட்டே? நீ என்னடா சொல்றது! உங்கப்பன் பெரிய அப்பாட்டக்கரா.. இல்ல இந்த நாட்டு மந்திரியா? நான் சொல்றேன் கேட்டுக்க, நான் யுகி பையாவோட ஒரே மச்சினி.
உடனே ஒரு கால் போட்டு அவரை இங்க வர வைச்சா உன் கதை கந்தல் தான். அப்பறம் உனக்கு இந்த மண்ணுல இடமிருக்கானு கேட்டா, கண்டிப்பா இல்லை.” என்றதோடு மட்டுமல்லாமல், கோபத்தில் நடுங்கிய விரல்களால் அலைபேசி திரையில் தட்டினாள்.
‘யுகி பையா’ என்றதும் குலை நடுங்கிப் போயிருந்தவன் அவள் அழைப்பு விடுக்கப் போவது கண்டு பதறிப் போனவனாய்,
“அவருக்கு கால் பண்ணாத! பேயடி அடிச்சு ஒரே நாள்ல என்..னை கொன்னுடுவாரு.” என வாய் குழறினான்.
“இவ்ளோ பயம் இருக்கிறவன் என்ன ம**க்கு அவர் இருக்கிற ஏரியாலேயே பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்துக்கணும்? கொஞ்சமும் பயமில்லாம போதையிலே ரோட்டுல நடமாடணும்..” என்று நக்கல் வழியும் குரலில் கேட்டு நகைத்தாள், மைதிலி.
“லுக், ரெண்டு நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு, இருந்த இடத்துக்கும் உத்தரவில்லாம ஓடிப் போய்டு!”என்று கூறி தன் காலை நீட்டிக் காட்ட,
“விட்டுருடி..” என அவளின் காதோரம் ஈனஸ்வரத்தில் முனகினாள் சாந்தனா.
இவனின் இந்த அசிங்கத்துக்கு காரணம், ஒன்றோ அவனது தந்தையின் அதிகாரமாக இருக்கும். இல்லையேல் எது நடந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்காக இருக்கும். இவனிடம் வம்பளந்து வீண் பகையை வளர்த்துக் கொள்கிறாளே என பயமாக இருந்தது அவளுக்கு.
முடியாதென மறுத்தவளை கெஞ்சிக் கொஞ்சிக் கெஞ்சி ஷாப்பிங்மால் அழைத்து வந்ததற்காக நன்றாக செய்து விட்டாள் என மனதினுள்ளே புலம்பித் தீர்த்தாள் சாந்தனா.
அவளின் நீட்டப்பட்ட காலைப் பார்த்ததும், அசட்டு தைரியம் மீண்டும் தலை தூக்கிப் பேயாட்டமாட, “திமிரு..” என பற்களைக் கடித்தவன் பாய்ந்து அவளின் முடியைப் பற்ற வந்தான்.
அது வரையே காத்திருந்தாற்போல், வேகமாக அவனை சூழ்ந்து கொண்டனர் ஓரிருவர்.
‘தைரியமாக சமாளிக்கிறாளே!’ என அமைதி காத்து நின்றவர்கள், அவளுக்கு பிரச்சனை என்றதும் தாமதியாமல் கிளர்ந்தெழுந்து கிளம்பி விட்டனர்.
இந்தரை அடையாளம் கண்டு கொண்ட மைதிலி ஆச்சரியத்தில் விழி விரித்தாள்.
“நீங்களா? இங்க என்ன பண்ணுறீங்க அண்ணா?”
அவளிடம் வம்பிழுத்த குமரனின் மகனைக் கை காட்டிய இந்தர், “இவனை தேடி தான் இங்க வந்தேன் சிஸ்டர். கவனமா வீட்டுக்கு போங்க. நான் பார்த்துக்குறேன்.” என்று கூறிவிட்டுப் புன்னகையுடன் ஒதுங்கி நின்றான்.
போற போக்கில், “என் கையை பிடிச்சிழுத்தான் பையா. அதுக்கு சேர்த்து எக்ஸ்ட்ராவா நாலு உதை கொடுங்க.” என்று கூறி அவனுக்குப் பழிப்பு காட்டி விட்டுத் தான் நகர்ந்தாள் மைதிலி.
“எதுக்குடி அவன் கிட்ட வம்பு பண்ண? நாய் எங்களை கடிச்சா நம்ம நாயைக் கடிக்க போவோமான்னு அம்மா எப்பவும் கேட்பாங்க. அவன் வம்பு பண்ணா கண்டுக்காம கடந்து வந்திருக்கணும்.” என்றவளை முறைத்தபடி கடைக்காரன் நீட்டிய தண்ணீர் பாட்டிலை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டவள்,
“சுத்தி நின்னு எவ்ளோ பேர் வேடிக்கை பார்த்தாங்கனு நீயே பார்த்தல்ல.. எவ்ளோன்னாலும் நாம கேர்ள்ஸ் இல்ல?” என்று விடாமல் புலம்பியவளை என்ன செய்தால் தகும் என்கின்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.
“மைதிலி!!”
பாட்டிலை உடைத்து அவன் பற்றியிழுத்த கையில் ஊற்றி தேய்த்துக் கழுவியபடி, “இதென்ன அநியாயமா இருக்கு. பொண்ணுங்கன்னா அடங்கி போகணுமா? அப்பறம் இன்னைக்கு கையைப் பிடிப்பான். சும்மா போய்ட்டோம்னா நாளைக்கு இடுப்பைத் தொட வருவான். மத்தவங்க எப்படினு தெரியல. ஆனா எனக்கு சொரணை இருக்கு. அவன் பிடிச்சு இழுத்தது என் கையை!” என்றாள், கோபத்தில் மின்னும் கண்களுடன்.
இவளிடம் பேசி வேலைக்காகாது எனப் புரிந்து கொண்ட சாந்தனாவிடமிருந்து பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
அவள் பழகும் ஆயிரம் தோழிகள் மத்தியில் மைதிலி தனி ஒருத்தி. கோபத் திமிரிலும், எதிராளி யாராக இருந்தாலும் சந்தர்ப்பம் பார்த்து வீழ்த்துவதிலும், அவளுக்கு நிகர் அவளே தான்!
அடங்கிப் போவதெல்லாம் தந்தை சிவதர்ஷனுக்கும், அத்தான் யுகேந்த்ராவுக்கும் மாத்திரமே!
தொட்டவனின் கையை முறுக்கி உடைக்காமல் விட மாட்டேன் எனும் ரகம். தன்னை சீண்டியது யாராக இருந்தாலும் அவர்களை திருப்பியடித்து ‘மைதிலியிடம் மோதாதே!’ என விரல் நீட்டி எச்சரிப்பாள்.
இதனாலே கல்லூரிக் காலத்தில் அவளுக்கென ஒரு தனி விசிறிக் கூட்டமொன்றே கிளம்பி இருந்ததெல்லாம் வேறு கதை!
சில்லறை இல்லை எனக் கூறி கடைக் காரன் நீட்டிய பபிள்கம்மின் கவரை உரித்து, அதில் பாதியை சாந்தனாவின் வாயில் திணித்தவள் மீதியை மென்று பபிள்ஸ் விட்டபடி பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.
“ப்ச்! அந்த பஸ் வர இன்னும் எவ்ளோ நேரமாகுமோ.. இதுக்கு தான் சொல்றது, நான் என்னோட ஸ்கூட்டியை ஓட்டிட்டு வரேன்னு.. கேட்டியா நீ?” என வெயில் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் புலம்பினாள் சாந்தனா.
“லைஃப்ல ஒவ்வொரு நிமிஷத்தையும் என்ஜோய் பண்ணி வாழனும் சாந்து. கடந்து போய்ட்டோம்னா கோடி கொடுத்தாலும் அந்த இடத்துக்கு திரும்ப வர முடியாது.
பஸ்ல போறதுல்லாம் தனிடி. கார், ஸ்கூட்டினு.. ப்ச்! அலுப்படிக்கிது.” எனக் கண்களை அங்குமிங்கும் உருட்டியபடி கூறியவள், சடேரென புழுதி கிளப்பிக் கொண்டு வந்து தன் முன் நிறுத்தப்பட்ட காரைக் கண்டு திகைத்த நேரத்தில்,
“கியூட்டி ப்பை!” என்ற அழைப்புடன் காரிலிருந்து இறங்கி வந்தான், யுகேந்த்ராவ்!
அவனை அங்கு எதிர்பார்த்திருக்காத மைதிலியின் முகத்தில், உவகையின் சாயல்.
“அத்தான்..” என்று கூவி அழைத்தவளை வேக எட்டுகளுடன் நெருங்கி வந்தவன், “ஆர் யூ ஓகே?” என்று கேட்டபடி பார்வையாலே அவளை ஆராய்ந்தான்.
“அதுக்குள்ள நியூஸ் வந்திடுச்சா அத்தான்?” எனப் பற்களை வாடகைக்கு விட்டபடி கேட்டவளை விளையாட்டுக்குக் கூட முறைக்க முடியவில்லை அவனால்.
‘அத்தான்’ என்ற அழைப்பு தந்த அதிருப்தியில் முகம் சுழித்தவன், மைதிலியின் கலைந்திருந்த கூந்தலை சரி செய்து ஹேர் பேன்ட்டை ஒழுங்காக மாட்டி விட்டுக் கொண்டே,
“விளையாடிட்டு இருக்காம ஒழுங்கா வீடு போய் சேரு!” என அதட்டினான்.
அவசரமாக ஏதோ கூற வாயெடுத்தவளைப் பார்வையாலே அடக்கியவன், “இன்னொரு வாட்டி நீ ரோட்டோர பஸ்ஸுக்காக காத்திருக்குறதை நான் பார்க்க கூடாது. இதென்ன புது பழக்கம்?” என்று கடிந்து கொண்டான்.
“அத்தான், அதுலாம்..” என்றவள் மேற்கொண்டு பேச வர முன்பே, “டேக் கேர்!” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டிருக்க,
“ரொம்ப ரூடா இருக்காருல்லடி?” என தோழியின் காதைக் கடித்தாள் சாந்தனா.
“ப்ச், அத்தானை அப்படி சொல்லாத! அவரு என்னோட ரோல் மாடல். ரொமான்டிக் பாய்யா சிரிச்சிட்டே இருந்தவரு தான், அத்தை மாமாவோட இறப்புக்கு அப்பறம் இப்படி ஆகிட்டாரு..” என்றவளின் கண்கள் வலியின் தாக்கத்தில் லேசாக கலங்க, அதை சாந்தனா காண முன் நாசுக்காக துடைத்து விட்டுக் கொண்டாள்.
“அவங்க எப்படி இறந்தாங்க?”
“எப்பா! கேள்வி கேட்டே என் காதை அவுட் பண்ணிடுவ போல. பேசாம வாயேன்..” என்ற மைதிலி, தனக்கு முன்னால் வந்து நின்ற பஸ்ஸில் ஓடிச்சென்று ஏறிக் கொண்டாள்.
அதற்கு மேலும் அவளிடம் எதையும் கறக்க முடியாதென்று புரியாதா என்ன, சாந்தனாவுக்கு?
*******
“ஒரு பெண்ணாக உன் மேல் நானே பேராசை கொண்டேன்..
உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்..
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்..
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்..
இனிமேல் நானே நீயானேன்..
இவன் பின்னாலே போனேனே..
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டெழுத்து..” என்ற பாடலை முணுமுணுத்தபடி யுகனின் வரவை எதிர்பார்த்து கூடத்தில் அமர்ந்திருந்தாள் மான்ஷி.
பாடலின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்றாற்போல் அவளின் தளிர் விரல்கள் சோபாவில் தாளம் தட்டிக் கொண்டிருந்தன.
விடிந்தது முதலே அவனைக் காணவில்லை. அவன் என்றோ அவளது எண்ணை பிளாக் லிஸ்டில் சேர்த்து விட்டிருந்தபடியால் அழைப்பும் செல்லவில்லை.
அப்படியே சென்றடைந்திருந்தாலும் அந்த அழைப்புக்கு பதில் கொடுத்திருப்பானா என்று கேட்டால், கண்டிப்பாக வாய்ப்பே இல்லை.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்தவளாய் எழுந்து நிற்கும்போது தான் வீட்டினுள் கள்ளத்தனமாக எட்டிப் பார்த்த மிதுனாவைக் கண்டு கொண்டாள்.
திடீர் கோபத்தில் பற்களை நறநறத்தபடி அவளருகே விரைந்தாள் மான்ஷி.
அழைப்பு விடுத்து அவளை ‘வா’ என அழைத்தது யுகன் தான். என்றாலும் ‘எப்படி உள்ளே செல்வது? ஹாலில் வேறு சைக்கோ ஜந்து உக்காந்து இருக்கிறதே..’ என்ற தவிப்புடன் கை பிசைந்து நின்றிருந்தவள் முன் வந்து நின்றவள்,
“திரும்ப வந்துட்டியா?” என இடுப்பில் கை ஊன்றி முறைப்புடன் கேட்டாள்.
துள்ளி விழுந்து இரண்டடி பின்னகர்ந்து நின்றவள் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றியபடி, “யுகி சார் தான்..” என்று இழுக்க,
“அடிங்! அவன் வான்னு சொன்னா உடனே வந்திடுவியா? நீ என்ன அவனுக்கு பொண்டாட்டியா.. வான்னு சொன்னானாம்; உடனே ஓடோடி வந்திடுவியாம். தொண்டை குழி தண்ணி வத்தற அளவுக்கு கத்துறேனே.. கொஞ்சம் கூட வெட்கமா இல்ல?” என்று சீறி விழுந்தாள் மான்ஷி.
‘அவன் துரத்த துரத்த நீயும் தான் சொரணை கெட்டு அவனைத் தேடி வர.. அப்ப இதுக்கு பெயரென்ன?’ என நேரம் காலம் தெரியாமல் மனசாட்சி அவளை வார, மேலும் கடுப்பாகியவள் முன்னால் நின்றிருந்தவளைக் கடுமையாக முறைத்தாள்.
அந்நேரம், “உள்ள வா மிது..” என்று வரவேற்றபடி பேண்ட் பாக்கெட்டினுள் கைகளை நுழைத்து ஸ்டைலாக மாடியிறங்கி வந்தான் யுகன்.
“அவ எதுக்கு இங்க வரணும்?” என அளவு கடந்த கோபத்துடன் கேட்டவள் கை தொடும் தூரத்தில் இருந்த ஜாடியை தூக்கி, என்ன ஏதென்று ஊகிக்கும் முன்னரே அவனை நோக்கி விட்டெறிந்திருந்தாள்.
“அம்மாஆ..” என அலறிய மிதுனா, இரத்தம் சொட்டச் சொட்ட கைகளை உதறியவனைப் பார்க்க திராணியற்று கண்களை இறுக மூடிக் கொண்டாள், அச்சத்தில்!
அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்தவன் பத்தே நிமிடங்களில் குளியலை முடித்துக் கொண்டு கூடத்துக்கு வரவும், மான்ஷி துள்ளலும் நடையுமாக வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது.
அவனைக் கண்டதும் தடுப்பு போட்டாற்போல் தன் நடையை நிறுத்திக் கொண்டவளின் கண்களில் ஹார்டின் பறந்தது. காதலின் உச்ச கட்டத்தில் அவனைச் சுற்றி உலா வந்து கொண்டிருக்கிறாள் பாவை, விளக்கைச் சுற்றி வட்டமிடும் விட்டில் பூச்சியாய்!
தலை துவட்டியபடி, அவளைக் கண்டும் காணாத பாவனையில் டைனிங் டேபிளில் சென்றமர, அதற்காகவே காத்திருந்த வேலைக்காரப் பெண் காமினி அவனுக்கு உணவு பரிமாறினாள்.
சற்றுநேரம் மௌனமாய் அவனது முகத்தையே சிந்தனை மீதுறப் பார்த்திருந்த மான்ஷியிடமிருந்து சோகப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
கூடவே, ‘நீ மயங்கி விழுந்தேல்ல? ஜன்னல் கேர்டன்ஸை ஓரந்தள்ளிட்டு, ரூம்குள்ளேர்ந்து உன்னை தான் யுகி பையா பார்த்துட்டே இருந்தாரு. லேப்டாப்பை திறந்து வைச்சுக்கிட்டு வேலை செய்றதெல்லாம் சும்மா ஒரு கண் துடைப்பு..’ என நேற்று அவள் கூறிய நினைவில் முகம் கனிந்தாள்.
நேற்று மயக்கம் தெளிந்ததும், வரண்டிருந்த தொண்டையை நனைத்துக் கொள்வதற்காக சமையலறை சென்றிருந்த நேரத்தில் காமினி உண்மையைப் போட்டு உடைத்திருந்தாள்.
இது இன்று நேற்றல்ல, எப்போதெல்லாம் அவளை அளவுக்கு அதிகமாக காயப்படுத்துகிறானோ, அன்றெல்லாம் சகோதரியாய் பழகும் காமினியிடமிருந்து உண்மை அம்பலமாகி விடும்.
இப்போது கூட, என்றும் போல், ‘ஒருவேளை அந்த வேலையாளை ஏவி இவனே தான் என் மயக்கத்தை தெளிவுச்சு இருப்பானோ?! பிறகு இவன் திட்ட, அவன் மன்னிப்பு இறைஞ்ச.. ப்ச், எல்லாம் செட்டப் ட்ராமாவா இருக்குமோ..’ என்று தான் தோன்றியது.
ஏதேதோ சிந்திக்கத் தோன்றியது.
அவற்றை ஓரந்தள்ளி விட்டு, காமினிக்குக் கண் காட்டி விட்டு மெல்ல நகர்ந்து வந்து அவனருகே நின்று கொண்டவள், அவள் அங்கிருந்து நகரும் வரை காத்திருந்து விட்டு,
“இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்தவா யுகன்?” என்று கேட்டுக் கொண்டே அவனுக்கு பரிமாற வர, அடுத்த நொடி தட்டு கீழே தூக்கி எறியப்பட்டு இட்லிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிதறின.
“உன்னை என் பக்கத்துல வர வேணாம்னு சொல்லி இருக்கேன் இல்ல? ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்ணுற.. மனுஷனை நிம்மதியா இருக்க விடவே மாட்டியா நீ?” என சத்தம் வைக்க,
“ரொம்ப பண்ணாதய்யா!” என கடுப்புடன் முனகினாள் மான்ஷி.
“என்னை டென்ஷன் ஏத்தாத! உன்னை இந்த வீட்டுக்குள்ள விட்டு வைச்சிருக்க ஒரே காரணம், சின்ன வயசுல கைக்குள்ள வைச்சு வளர்த்த நாயி, எவ்ளோ துரத்தினாலும் ஓடிப் போக மாட்டேங்குதேங்குற ஆதங்கம் தான்..
எவ்ளோ திட்டி அசிங்கப்படுத்தினாலும் சொரணை இல்லாம ஓடியோடி இங்கயே வர்ற! திட்டி, விரட்டி நானும் ஓய்ஞ்சு போய்ட்டேன். இப்போ திறந்து வைச்சிருக்கேன், வர்றவன் எல்லாம் அனுமதி இல்லாம வந்துட்டு போகட்டும்னு!
அக்கறை காட்டறேன்ங்குற பெயருல என்கிட்ட உரிமை எடுத்துக்க ட்ரை பண்ணாத.. இன்னொரு தடவை இதை என் வாயால, இந்தளவு பொறுமையோட சொல்லிட்டு இருக்க மாட்டேன்.
உங்க யாரோட சக்கரையையும் நான் எதிர்பார்க்கல. இன்னொரு வாட்டி பக்கத்துல வந்தா ஐ வில் கில் யூ டெஃபனெட்லி!” எனப் பல்லிடைக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
அவனது பார்வை அவளை துச்சமெனப் பார்த்திருக்க, வாயோ சரமாரியாக சொல்லம்புகளினால் பாவை மனதைக் குத்தி கிளறிக் கொண்டிருந்தது.
இது ஒன்றும் புதிய விடயமில்லை தான் என்றாலும், அவனின் கோபத்தில் உள்ளுக்குள் கிலி பரவி சற்று நகர்ந்து நின்றவளின் கண்கள் ஏகத்துக்கும் கலங்கிச் சிவப்பேறிப் போயிருந்தன.
எவ்வளவு தான் கேவலமாகப் பேசினாலும் ‘என் தன்மானத்தை சீண்டி விட்டாய்!’ என அங்கிருந்து புறப்பட்டுச் செல்லாமல் சொரணை கெட்டு அவன் காலடியிலே விழுந்து கிடப்பாள் பைத்தியக்காரி.
ஏதோவொரு காரணம் அவனை தன் பால் நெருங்க விடாமல் தடுத்து, அவனை வருத்திக் கொண்டிருப்பதாய் மனதார நம்பியவளுக்கு, தன் நெருக்கம் அவனை இம்சிக்கிறதென புரிந்தது.
ஆதலால் தான் எவ்வளவு துரத்தி விட்டாலும் ‘போடாங்..’ என ரோஷம் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவனிடமே ஓடி வருகிறாள்.
பிபி எகிறி மணிக்கணக்கில் அவளைக் கேவலமாய் திட்டி அவன்தான் வீணாகக் களைத்துப் போவானே தவிர, மறுவார்த்தை பேசாமல் சொல்வதை எல்லாம் இந்தக் காதால் வாங்கி மற்ற காதால் வெளியேற்றி விடுபவளிடம் எந்த முன்னேற்றமும் இருக்காது.
ஒரு கட்டத்தில் சலித்துப் போனவனாய், ‘என்ன பெண்ணிவள்! இவ்வளவு திட்டியும் அப்படியே நின்று கொண்டிருக்கிறாளே’ என அற்பப் புழுவை பார்ப்பது போல் கடந்து செல்லப் பழகி இருந்தான்.
அவனால் வளர்த்து ஆளாக்கப்பட்ட குட்டி மான்ஷி.. சிறு வயதிலே அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட மான்ஷி.. தன்னால் உயிரெனக் கருதி நேசிக்கப்பட்ட மான்ஷி.. அவள் இவளல்ல. அவள் மிகுந்த தன்மானம் உடையவள்!
யாராவது தன்மானத்தை சீண்டி விட்டால், பதிலுக்கு பெண் அரிமாவாய் சீறி சம்பந்த நபரின் பெயரைக் கெடுக்காமல் ஓய மாட்டாள். ஆனால் இப்போது முழுதாக முழுதாக மாறிவிட்டாள் என்பதை விட, அவனின் மாற்றம் அவளை இந்தளவுக்கு மாற்றி விட்டது எனச் சொல்வதில் தவறில்லை.
கடந்த காலத்தை நினைக்கும் போது ஆடவனிடமிருந்து பெருமூச்சொன்று வெளிப்பட்டாலும், அவளின் நடத்தை கண்டு எரிச்சலும் சற்று அதிகமாகவே வந்து தொலைத்தது.
“ச்சை!” எனக் கைகளை உதறியவன், கோபத்துடன் இருக்கையை ஓங்கி உதைந்து விட்டு அங்கிருந்து நகர முயல,
“சாப்பிடாமலே போறியா யுகன்? ப்ளீஸ், ஐம் சாரி!” என்ற கிள்ளையின் கெஞ்சல் குரல் முதுகுக்குப் பின் ஒலித்தது.
கண்களை மூடித் திறந்தான் யுகன். ஆழ மூச்சிழுத்து தன்னை ஆசுவசப்படுத்திக் கொள்ள முயன்றவன், தன் முயற்சியில் தோல்வி எய்தியவனாய் இருக்கையை தூக்கி அவளை நோக்கி எறிந்தான்.
பதறி இரண்டடி பின்னகர்ந்து நின்றவள் ஏதோ கூற வாயெடுப்பதற்குள்,
“ஷட்டப் இடியட்! நான் திரும்ப இந்த இடத்துக்கு வரும்போது நீ இங்க இருக்கக்கூடாது.” என்று எச்சரித்து விட்டு அறைக்குள் சென்றடைய,
“ஸ்ஸ்.. ஒருநாள் இல்லனா ஒருநாள், இவன் கத்துறதை கேட்டே என் காது அவுட் ஆகிட போகுது. என்னமா கத்தி தொலைக்கிறான்? மானுனு என் பின்னாடி உருகி வழிஞ்சவன் இவன்தானா? என்ன ம*த்துக்கு இப்படி அவொய்ட் பண்ணி தொலைக்கிறான்..” என சலித்துக் கொண்டவள் இரண்டு இட்லிகளை பொறுமையாக உள்ளே தள்ளினாள்.
இங்கே அவலம் என்னவென்றால், அவனின் அருகாமையின்றி உணவும் கூட உள்ளிறங்க மறுக்கிறது. வயிறு பசியில் கூப்பாடு போட்டு களைத்துப் போனாலும் சாப்பிட மனமின்றி திரும்பி படுத்துக் கொள்வாள்.
வீட்டுக்கு சென்றாலும் உண்ணப் போவதில்லை என்ற உண்மை புலப்பட்டதால் தான் இப்போதே அவசர அவசரமாக இரண்டு இட்லிகளை உள்ளே தள்ளியது!
அறைக்கதவு திறக்கப்படும் சத்தத்தில் துள்ளி எழுந்தவள் கைப்பையை எடுக்க மறந்து அங்கிருந்து ஓடி விட முயல,
“இதையும் எடுத்துட்டுப் போ..” என்ற யுகனின் கணீர் குரலைத் தொடர்ந்து கைப்பை அவளது முதுகில் வந்து மோதி கீழே விழுந்தது.
திரும்பி அவனை முறைத்தவள், “பேக்ல என் ஃபோனும் இருக்கு யுகன்..” சற்று கோபமாகக் கத்த வர,
“இன்னுமே போகலையா நீ..” என்று கேட்டவன் சோபாவிலிருந்து எழுந்து நின்றான் நிதானமாய்.. அதற்கு மேலும் அங்கு நின்றிருக்க அவள் என்ன பைத்தியமா?
கைப்பையை தூக்கிக் கொண்டு குடுகுடுவென ஓடி மறைந்தவள், மீண்டும், மாலை மங்கும் நேரத்தில் அவன் கண்முன் தான் வந்து நின்றாள்.
கெட்ட வார்த்தைகள் யாவும் மறந்து விட்ட தோரணையில், சலிப்புடன் அறைக்குள் நுழைந்து கொண்டான் யுகன்.
தூங்குபவனை தட்டி எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவனை என்ன செய்வதென்ற கடுப்பு அவனுக்கு!
*******
“இன்னும் ரெண்டு நாள்ல ஹைதராபாத் கிளையன்ட்ஸ் கூட சார்க்கு மீட்டிங் இருக்கு. மீட்டிங்காக இங்க வரவங்க கூட அவரும் அங்க போய்டுவாருனு ஒரு தகவல். திரும்பி வர எப்படியும் ஒருவாரம், பத்து நாள் ஆகலாம்னு நினைக்கிறேன்.
நடக்க போற மீட்டிங் ஆல் இந்தியன் கிரேட் பிசினஸ்மேன்ஸ் கூட நடக்க போகுதாம். தலைமை யுகி பையாவுக்கு! வரவங்க..” என்று மூச்சு விடாமல், தேவையான விடயங்களை எல்லாம் அலைபேசி வழியாக இன்னொரு காதுக்கு கடத்திக் கொண்டிருந்தான், குமரன். யுகேந்தின் வலது கை!
தனக்குத் தெரிந்தவற்றைக் கூறி முடித்துப் பெருமூச்சு விட்டவன், “இதெல்லாம் என் காதுபட கேட்ட தகவல்கள். இன்னுமே டைரக்ட்டா விஷயத்தை யுகி பையா என்கிட்டயோ மத்தவங்க கிட்டயோ சொல்லல கரண்சிங்! இன்னும் ரெண்டு நிமிஷத்துல பிலைட்னு இருக்கும் போது சொல்லுவாரு..” என்று கூறினான், தன்னைப் போன்றவர்களுக்கு இங்கே முன்னுரிமை கிடைக்கப் போவதில்லை என்ற ஆதங்கத்துடன்.
“யுகேந்த் இங்கிருந்து ஹைதராபாத் புறப்பட்ட அடுத்த நொடி எனக்கு தகவல் வரணும் குமரன். உனக்கு நான் கொடுத்த உரிமை வேற யாருக்கும் கொடுத்ததில்லை என்னோட இடத்தில! அது உனக்கே தெரியும்..” என விடயத்தை அந்த அண்டாவாயனிடம் கரக்கும் நோக்கில் உருக்கமாகப் பேசினான், கரண்சிங்.
உற்சாகத்துடன் சரியென்றவன் சற்று நேரம் வாயாலே வடை சுட்டு விட்டு நல்லவன் வேஷம் அணிந்து கொண்டு யுகேந்தைக் காண அவனின் கோட்டைக்குள் நுழைந்தான்.
அதன் பிறகு தான் அவனின் கத்தி வீச்சை வாங்கிக் கொண்டு கீழே சரிந்து, துடிதுடித்து இறந்து போனதெல்லாம்!
கரண்சிங்கோடு பேசி சரியாக ஒரு மணி நேரம் கூட தாண்டாத நிலையில் அவனுடன் குமரன் உரையாடியதை இவன் எப்படி அறிந்தான் என எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குமரனின் மரணத்துக்கான காரணம் என்னவென்று எவரும் அறிய முற்படவுமில்லை.
சிகரெட் புகையை பொறுமையாக வெளியேற்றியபடி, மற்றொரு கையால் அருகில் இருந்தவனின் கையைப் பலங்கொண்ட மட்டும் முறுக்கிக் கொண்டிருந்தான்.
“யுகி பையா! த்..தெரியாம உங்க வழியில குறுக்கா வந்துட்டேன். விடுங்க.. ஆஆ.. பையா, ஸ்ஸ்ஸ்..” என வலியில் கதறிய குரலெல்லாம் யுகனுக்கு கேட்கவே இல்லை போலும்!
செவிடன் போல் நின்றிருந்தவன் அவனின் கத்தலில் மனமுருகவும் இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.
இரவு வானை வெறித்தபடி படுரசனையுடன் சிகரெட் புகையை சுருள் சுருளாக வெளியேற்றிக் கொண்டிருந்தான்.
மொட்டை மாடிக்கு வரலாம் என மன அமைதிக்கென வந்தவனை பின்னிருந்து தாக்க வந்து வசமாக மாட்டிக் கொண்டு விட்டான் மற்றவன்.
அவனைப் பற்றி ஊரே அறிந்து, இரண்டு வார்த்தைகளை நேரில் நின்று பேசவே தயங்கும் பட்சத்தில் வந்தவன் மட்டும் விதி விலக்கா என்ன.. ஆனால் கையில் வந்து சேர்ந்த பணக்கட்டைக் கண்டு பயம் மறந்து யுகனை தாக்க வந்து விட்டவன் இதோ இப்போது வலியில் அலறிக் கொண்டிருக்கிறான்.
விடாமல் கத்திக் கொண்டிருந்தவனை எண்ணிப் பரிதாபமாகத் தான் இருந்தது. ஆனால் தன்னைத் தாக்க வந்த கை உடைந்து, அவன் மரண வலியில் அலறும் வரை விட்டு விடவில்லை. அப்படி விட்டால் அவன் யுகனும் அல்லவே!
வலியில் அலறிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “ஷ்ஷ்..” உதடுகளுக்கு குறுக்காக ஆள்காட்டி விரலை வைத்து சத்தம் போடாதே என செய்கை செய்ய, அதற்கு மேலும் அலற அவன் ஒன்றும் வாழத் தெரியாதவன் அல்லவே..
வலியை பற்களைக் கடித்து விழுங்கிக் கொண்டான். கண்ணீர் ஆறாக வழிந்தது.
“கரண்சிங் கிட்ட போய் அடுத்த வாட்டி நல்ல ஆளா அனுப்பி வைக்க சொல்லு டியூட். வர்றவன் எல்லாம் முதுகெலும்பு இல்லாதவனுங்க. லேசா கையைப் புடிச்சாலே அலறித் துடிக்கிறானுவ! இப்படியே போனா இந்த கேமும் எனக்கு போர் அடிச்சிடும்..” என நக்கல் வழித்தோடும் தொனியில் கூறியவனை உடைந்த கையை தாங்கிக் கொண்டு பயப்பார்வை பார்த்தான் வாலிபன்.
“ச்சு! இன்னும் எதுக்கு நின்னுட்டு இருக்க? இடத்தைக் காலி பண்ணு!” என்று அதட்டியவன் சிகரெட்டை நசுக்கி அணைத்து விட்டு நிமிரும் போது அவன் அங்கிருக்கவில்லை.
கையை மற்றொரு கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டிருந்தான்.
அலுப்புடன் கை நீட்டி சோம்பல் முறித்தவன், “பையா..” என்ற அழைப்பில், “சொல்லு இந்தர்..” என்று கொண்டே திரும்பினான்.
அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட, உயிர் தோழனுக்கு அடுத்ததாய் அவனுக்கு நம்பிக்கையானவன் தான் இந்தர். அந்த வீட்டில் சமையல் வேலை பார்க்கும் காமினி, அவனின் மனைவி.
அவர்கள், இரு வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியில் மனமொத்து திருமணம் செய்து கொண்டவர்கள். காமினியின் தந்தை ஒரு மாதிரியான ஆள்!
அவரால் தங்களுக்கு ஆபத்து நேரிடக் கூடும் எனப் பயந்து கடைசியாக இருவரும் வந்து சரணடைந்தது யுகனிடம்.. இந்த ஊரில் பாதுகாப்பான இடமென்றால் அது ‘யுகேந்த்ராவ் மேன்ஷன்’ மட்டுமே!
பாதுகாப்புக்கென சரண் புகுந்து விட்டால் அதன் பிறகு வாழ்நாள் பூரா அவனின்/அவளின் பாதுகாப்புக்கு அவன் கியாரண்டி.
சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் நடந்தேறி நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. மூன்று வயதில் ஒரு குழந்தை. பெயர் இந்து!
உண்ணக் கொடுத்த வீட்டுக்கு இரண்டகம் செய்யாமல் இன்று வரைக்கும் அவனுக்கு பாத்திரமாய் தான் நடந்து கொண்டிருக்கின்றனர் இருவரும்.
படைகளோடு மகளையும் மருமகனையும் தாக்க வந்த காமினியின் தந்தை, யுகனின் கோட்டைக்குள் அவர்கள் இருக்கும் விடயத்தை அறிந்து கொண்டதும் பின்வாங்கி திரும்பி விட்டார்.
பிறகு, யுகனின் ஏவலின் பேரில் பக்கத்து ஊருக்கு சென்றிருந்த இந்தரை காமினியின் தந்தை ஆள் வைத்து தாக்கியதன் பொருட்டு, வயதான காலத்தை கட்டிலோடு கழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிப் போனது அவருக்கு.
அவர்களுக்கு, ஒரு படுக்கையறையுடன் கூடிய அளவான வீடு கோட்டைக்குப் பின்னாலே கொடுக்கப்பட்டிருந்தது.
வீட்டில் சமையல் வேலை பார்க்கும் பெண், இந்தரின் கெஞ்சலில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டு, அந்த இடம் அன்றிலிருந்து காமினிக்கு சொந்தமாக்கப்பட்டு இருந்தது.
“பையா, அந்த குமரன் விஷயம்..”
“அவனுக்கு தாலி கட்டின ஒரு பொண்டாட்டியும், சின்ன வீடு ரெண்டும் இருக்கு. பொண்டாட்டிக்கும், குழந்தைங்களுக்கும் மாதா மாதம் செலவுக்கு போதுமான பணத்தை ஏற்பாடு பண்ணிடு. அன்ட் தென், அவனோட மூத்த பையன் ஊருல தறுதலையா சுத்திட்டு இருக்கான்னு கேள்வி. அவனையும் கவனிச்சுக்க..”
‘கவனித்துக் கொள்’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை சரியாகவே புரிந்து கொண்ட இந்தர் கோணல் சிரிப்புடன் தலை அசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
சென்று அறைக்குள் முடங்கிக் கொண்ட யுகன் மடிக்கணனியோடு கட்டிலில் ஐக்கியமாகியதில், மணித்துளிகள் மெல்லக் கரையலாயின.
மாலை மங்கி அவனியை இருள் அசுரன் கவ்வத் தொடங்கிய நேரத்தில், கை விரல்களை விசைப்பலகையோடு சரசம் புரியவிட்டு சிந்தனைகளை நாலாபுறத்திலும் சிதற விரட்டிருந்தவன் சலித்துப் போனவனாய் கட்டிலை விட்டு எழுந்து கொண்டான்.
மனம் எதிலும் லயிக்காமல் இருக்கும் பட்சத்தில், மடிக்கணனியின் முன் அமர்ந்து எவ்வளவு நேரம் தான் மூச்சுமுட்ட வேலை செய்வது போல் நடிப்பதாம்..
நடிப்பா? ஆமாம், நடிப்பு தான்! ஒரு கட்டத்துக்கு மேல் அவனுக்கே சலித்தது.
எதிலுமே ஆழ்ந்து போகாமல் அலை பாய்ந்து கொண்டிருக்கும் தன் மனதை எண்ணி அதிருப்தியுற்றவனாய் கைகளை மேல் நோக்கி உயர்த்தி சோம்பல் முறித்தான்.
மனம் நிம்மதியின்றி எதை எதையோ சிந்தித்து வெறுப்பூட்டிக் கொண்டிருக்க, சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சாரளமருகே சென்று நின்று கொண்டான்.
அளவுக்கதிகமாக டென்ஷன் ஏறி மன அழுத்தம் கூடிப் போகும் நேரங்களில் மட்டும், தன்னை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக சிகரெட்டை புகைத்துத் தள்ளுவது அவனது பழக்கம்!
ஒவ்வொரு தம்மாக இழுத்து, புகையை சுருள் சுருளாக வெளியேற்றியவன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு காலால் நசுக்கி அணைத்து விட்டுச் சற்றே மேலேறி இருந்த டீஷர்ட்டை இழுத்து சரி செய்தபடி,
“எதுக்கு இங்க வந்திருக்கே?” என வெகு நிதானமாகக் கேட்க, அறைக்குள் கள்ளத்தனமாய் நுழைய முயன்ற உருவமொன்று திடுக்கிட்டு நிமிர்ந்தது.
அவன் முதுகு காட்டி நின்றிருந்தபடியால் தன் வரவை அறிந்திருக்க வாய்ப்பில்லை என குறைத்து மதிப்பிட்டது தன் மடத்தனத்தை எண்ணி மானசீகமாய் தலையில் தட்டிக் கொண்டவள், “யுகன்.. ” என்றழைத்தாள் ராகமாய்!
வேறொவனாய் இருந்திருந்தால் அந்த மந்தகாசக் குரலிலே கிறங்கி, அவளின் முகபாவனைகளில் தொலைந்து போய் அவளை மொத்தமாக ஆட்கொண்டிருப்பது நிச்சயம்!
ஆனால் இந்த ரசனை கெட்டவனோ உதட்டைச் சுழித்தபடி திரும்பி பார்வையாலே என்னவென்று கேட்டான். கண்களே அவளை மிரட்டின.
ஒருகாலத்தில் அவை கனிவுக்கு அர்த்தம் சொல்லிய கண்கள் தாம்! நினைக்கும் போதே நெடுமூச்சொன்று வெளிப்பட்டது மான்ஷியிடமிருந்து.
மெலிதான குரலில், “சாப்பிட்டியா யுகன்? இப்போ நேரத்தைப் பார்த்தியா..” என வினவ, செக்கச்செவேரென சிவந்த கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தான் ஆடவன்.
தன் மீது அன்பு காட்ட, வேளா வேளைக்கு ‘சாப்பிட்டியா?’ என்று கேட்கவாவது தனக்கிருக்கும் உறவு அவள் மட்டுந்தான் என புத்திக்குப் புரிந்தாலும், அவளை ஏற்றுக் கொள்ள மனம் தயங்குகிறதே!
ஏதேதோ கசப்பான நினைவலைகள் மனக்கண் முன் தோன்றி அவனை இம்சிக்க, கைமுஷ்டிகளை இறுக்கி, பதிலிறுத்தாமல் கல்லுளி மங்கனாய் அசையாமல் நின்றான்.
அவனை நெருங்கி வந்தவள், “ஏன் யுகன், நம்ம குமரனைக் கொன்ன? அவனுக்கு நீன்னா ரொம்ப இஷ்டம்..” என்று உற்சாகமிழந்து கூறியபடி விசும்பினாள்.
கண்கள் மேல் நோக்கி சொருகிய நிலையில் அவன் உயிர் துறந்த காட்சி இன்னுமே அவளை பயமுறுத்தியது. பயத்தில் மீண்டும் கைகால்கள் உதறல் எடுத்தன.
கேள்விகளுக்கு பொறுமையாய் நின்று பதில் கூறுவதொன்றும் அவனின் குணமல்லவே! கேள்வி கேட்பது அவனாக இருக்குமே தவிர, தன் செயலை நியாயப்படுத்தும் பொருட்டு எதிரில் இருப்பவனிடம் உரையாட என்ன.. இரண்டு வார்த்தை பேசவே யோசிக்கும் ரகம்.
உன் கண்களுக்கு கெட்டவனாகத் தெரிகிறேன் என்றால், நான் உண்மையில் கேடு கெட்டவனாகத் தான் இருப்பேன் என்பது போல் இருக்கும் அவனின் அடுத்தடுத்த செயல்கள். நான் நினைப்பது ஒன்று, அவன் செய்வது இன்னொன்று!
பதில் கூறாமல் அவளைக் கடந்து சென்று அறையை விட்டு வெளியேறியவன், “ஜான்..” என்று கத்த, பெயருக்கு சொந்தக்காரனோ துண்டைக் காணோம், துணியைக் காணோம் என வியர்த்து வழியும் முகத்துடன் வந்து கைகட்டி நின்றான்.
எச்சில் விழுங்கிய ஜான், ‘யாருயா இந்த தேவயில்லாத வேலைய பார்த்தது?’ என்ற கேள்வியுடன், யுகனின் ஓங்கரிப்பில் அதிர்ந்து கூடத்தில் வந்து வரிசை கட்டி நின்றிருந்த மற்றவர்களை நோக்கி பார்வையை வீசினான்.
“சாரி யுகி பையா!” என்று கூறிக் கொண்டு தலை குனிந்து முன்னால் வந்து நின்றான் ஒருவன்.
உண்மையை தான் ஒத்துக்கொள்ளா விட்டாலும் அதை சுயமாகவே அறிந்து கொள்ள யுகனுக்கு வெகுநேரம் எடுக்காது என்பதை அறிந்திருந்தபடியால் சற்றும் தாமதிக்காமல் ‘நான்தான்’ என அவன் முன் வந்து நின்று விட்டான்.
அவனை இகழ்ச்சியாய் பார்த்தவனின் கண்களில், ‘எதற்காக அப்படி செய்தாய்?’ என்ற கேள்வி பொதிந்து நின்றது. வருடக் கணக்காய் அவனைச் சுற்றியே வலம் வருபவர்களுக்கு அந்த பார்வைக்கான அர்த்தம் மட்டும் தெரியாமல் போய் விடுமா என்ன..
“ஓகே ஃபைன்! ஒன்னும் பிரச்சனை இல்ல. இப்போ என்னன்னா, அவளை நீயே கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளிடு. ரைட் நவ்!” என அலட்டிக் கொள்ளாமல் கூறினான்.
மான்ஷி அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, அவளது பார்வையைக் கண்டு கொள்ளாதவனாய் மற்றவர்களைப் பார்த்து,
“இங்க என்ன ஷோவா ஓடுது?” என்று கேட்டது தான் தாமதம், கல் எறிந்து கலைக்கப்பட்ட காக்கா கூட்டத்தைப் போல் சிதறி மறைந்தனர் வேலையாட்கள்.
தலை கோதியபடி அவன் அங்கிருந்து நகர்ந்து விட, சில நொடிகள் அவனது முதுகை வெறித்துப் பார்த்திருந்த மான்ஷி, அந்த வேலையாள் தன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள முன் தானே ஓடி விடுவது நலமென எண்ணி அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தாள்.
இது ஒன்றும் புதிதல்ல என்பதை, அவளது வெறுமை பிரதிபலித்த முகமே பறைசாற்றி நின்றது.
எது எப்படியோ, ஸ்கூட்டி ஓட்டி வந்தாளோ அல்லது வான்வழியே பறந்து தான் வந்தாளோ என்னவோ அடுத்த அரைமணி நேரத்தில் அதிவேகமாக வீட்டை அடைந்திருந்தாள், மான்ஷி.
வந்ததும் வராததுமாய் நடு ஹாலில் நின்று கத்திக் கொண்டிருந்தவளைக் கழுவி ஊற்றிய சகுந்தலா, “உனக்கு என்ன தான் பிரச்சனைடி?” என்று கேட்டபடி சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.
நட்டநடு கூடத்தில் அமர்ந்து, மடக்கியிருந்த கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்து குலுங்கிக் கொண்டிருந்த மகளைப் பார்த்ததும் திக்கென்றது, அந்த அன்னைக்கு!
‘திடீர்னு என்னாச்சு இவளுக்கு.. காத்து கருப்பு எதுவும் அடிச்சிருச்சா என்ன?’ என இயல்பாய் எழுந்த கேள்வியை, இருபுறமாகத் தலையை உலுக்கி விரட்டியடித்தவள், “மான்ஷி!” என்ற அழைப்புடன் மகளின் தோள் தொட,
“ப்ளீஸ்ம்மா! எனக்கு யுகன் வேணும். எப்படியாவது அவனை எனக்கு கட்டிக் கொடுத்துடுங்களேன்..” என்றபடி அவ்வளவு நேரமும் சிறுகுரலில் குலுங்கிக் கொண்டிருந்தவள் பெருங்குரலெடுத்து ஓவென்று அழத் தொடங்கினாள்.
சகுந்தலாவுக்கு நெஞ்சில் பாரமேறிய உணர்வு!
‘கடவுளே, ஏன் என் பொண்ணுக்கு இந்த கஷ்டம்?’ என்று மனதினுள் மறுகியவள் துயரத்தை தனக்குள்ளே விழுங்கிக் கொண்டு,
“மூத்த புள்ளைனு உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம்டி. காலைல போனவ இப்போ தான் ஊர் மேஞ்சிட்டு வீட்டுக்கு வந்திருக்கா. வந்ததும் வராததுமா ஹால்ல உக்காந்துட்டு அழ வேற செய்றா! ஏன்ங்க, நீங்களாவது இவளைக் கேட்க மாட்டிங்களா..” என்று மகளிடம் ஆரம்பித்து, அப்போது தான் வீட்டினுள் நுழைந்த கணவனிடம் குறைபட்டுக் கொண்டாள்.
“பொண்ணுக்குட்டிய தான் நான் டூவேண்டி ஃபார் அவர்ஸ் பார்த்துட்டு இருக்கேனே சகு?” என்று சிரிப்புடன் கேட்டவரின் கண்களிலுமே வலியின் சாயல்!
அவரை முறைத்தவள், “காலைலேர்ந்து எத்தன கால் பண்ணி இருப்பேன்? எடுக்கவே இல்லை. சின்னவ புக்கும் கையுமா அலையிறா! இவ அப்ராட் போய் வந்ததுலேர்ந்து அவன் வீடே கதினு கிடக்குறா..” எனப் புலம்பியபடி கலங்கிப் போன கண்களை மறுபுறம் திரும்பி துடைத்து விட்டுக் கொண்டாள்.
‘மயக்கத்துல கிடந்தேன்ம்மா. அப்பறம் எப்படி உன் காலை அட்டென்ட் செய்து பேசுவேன்? சும்மா நிலவரம் தெரியாம கத்தாதம்மா, காண்டாகுது!’ என கத்தத் துடித்த நாவை கடினப்பட்டு அடக்கிக் கொண்டவள்,
“எனக்கு அவன் வேணும்!” என்று அழுத்தமாய் உரைத்தாள்.
“கேட்டதும் வாங்கிக் கொடுக்க அவன் என்ன ஷோகேஸ் பொம்மையா.. நல்லாருக்கு உன் பேச்சு..” என கேலி செய்தாள், வௌவால் போல் தலை கீழாக சோபாவில் தொங்கியபடி புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தவள்!!
“ப்ச், மைதிலி..” என இளையவளை அதட்டியவர் மான்ஷியின் தலை வருடியபடி,
” அப்பா சொல்றேன், உனக்கு அவன் வேணாம்டா. என் பொண்ணுக்குட்டியை உள்ளங்கைல வைச்சு தாங்குற மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்த்து நான் கட்டித் தர்றேன்.
அவனுக்கு உன் அருமை தெரியல; உன் காதல் புரியல; உன்னோட அன்பை அனுபவிக்க அவனுக்கு கொடுத்து வைக்கல. அவனை மறந்திடுடாம்மா!” என்க,
“இந்த மாதிரியான ஆறுதல் எனக்கு வேணவே வேணாம்!” என்று கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் மான்ஷி.
“என்ன பேச்சு பேசுறா பாருங்க. எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான்!” என பற்களை நறநறத்த மனையாளைப் பார்த்து அமைதியாக இரு என்ற குறிப்புடன் கண்களை மூடித் திறந்தவர்,
“இப்ப என்ன பண்ணனும்ங்குற?” என்று கேட்டார் பெருமூச்சுடன்.
“யுகன் என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குறான்ப்பா. திடீர்னு அவனுக்கு என்னாச்சு? எனக்கேதோ நான் அப்ராட் போய் வந்த இடைவெளில ஏதோ பெருசா நடந்திருக்கும்னு தோணுதுப்பா.
சின்ன வயசுல எனக்கும், அவனுக்கும் நிச்சயம் பண்ணி வைச்சீங்கல்ல? அப்போவே கலியாணத்தையும் முடிச்சிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்குமா, சொல்லுங்க?” என்று புலம்பினாள்.
தமக்கையின் சிறு பிள்ளைத் தனமான பேச்சில் அடக்கமாட்டாமல் வீடதிர சிரித்தாள், மைதிலி.
“அக்கா உனக்கும், அத்தானுக்கும் நிச்சயதார்த்தம் பண்ணி வைச்சது, நீ குட்டிப் பொண்ணா இருக்கும் போதாம்! அப்போவே கலியாணமும் பண்ணி வைச்சிருந்தா உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்க ஒரு நல்ல ஆயா நியமிக்கணுமேனு அப்பா புத்திசாலித் தனமா யோசிச்சிருப்பாரு..” என்று கிண்டலடிக்க,
“மூடிட்டு படிக்கற வேலையைப் பாரு..” எனத் தங்கையை அதட்டியவள் எழுந்து கோபத்துடன் காலைத் தூக்கி சோபாவில் உதைந்து விட்டு அறைக்கு ஓடினாள்.
“அம்மா, அக்காவை இப்போவே ஒரு நல்ல டாக்டருக்கு காட்டிடு! அத்தான் மேல பைத்தியமாகி கொஞ்ச நாள்ல ரோட்டுல இறங்கிட போறா..” என்று தாயிடம் கேலி பேசினாள் மைதிலி.
“ம்ப்சு, என்ன பேச்சு பேசற..” என்ற அதட்டலுடன் சின்ன மகளின் நடு மண்டையில் நங்கென்று கொட்டு வைத்த தர்ஷன், மலையெனக் கனத்த மனதுடன் அங்கிருந்து அகன்றார்.
‘கடவுளே, ரெண்டு பேரையும் எப்படியாவது சேர்த்து வைச்சிடு. சின்ன வயசுல இவங்களுக்கு போட்ட முடிச்சு என்றைக்கும் அவிழ்ந்து போயிடக் கூடாது. அதுக்கு நீதான் பொறுப்பு!’ என மனதுக்குள் கடவுளிடம் அவசர வேண்டுதல் ஒன்றை வைத்த சகுந்தலா,
“வா மைதிலி.. வந்து கூடமாட ஒத்தாசையா இரு!” என்றுவிட்டு சமையலறை நோக்கி நடக்க,
“ஆமா, எப்போ பாரு என்னையே கூப்பிடுங்க. நான் ஏதோ நாளைக்கே கலியாணம் பண்ணிக்கிட்டு புகுந்த வீடு போக போறாப்புல எனக்கே சொல்லுங்க. உங்க பெரிய பொண்ணை கூப்பிட வேணாம்..” என்று சலம்பியபடி அன்னையின் பின்னோடு சென்றாள், மைதிலி.
அறைக்குச் சென்று கதவடைத்துக் கொண்ட மான்ஷி இரவுணவுக்குக் கூட வெளியே வரவில்லை.
அலைபேசித் திரையில் சிரித்துக் கொண்டிருந்த யுகேந்தையே விழி எடுக்காமல் வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு வயிற்றில் வண்டி ஓடுவது கூட தெரியாமல் தான் போனது.
பசித்தது தான், ஆனாலும் எழும்பிச் சென்று உணவருந்த மனமில்லை.
காலையில் இரண்டு தோசையை நாலாக மடித்து விழுங்கிய பிறகு பச்சைத் தண்ணீர் கூட வாயில் படவில்லை. வார்த்தைக்கு வார்த்தை, செயலுக்கு செயல் விதவிதமாய் வருத்தும் யுகனை நினைக்கும் போது சாப்பிடத் தோன்றவில்லை.
அவன் அரக்கனென அறிந்த பிறகும், அந்த அரக்கத்தனத்தை பல தடவைகள் கண்ணாரக் கண்ட பிறகும் கூட அவன்மேல் தனக்கு ஏனிந்த பைத்தியகாரத் தனமான காதல் என்று அவளுக்கே புரியவில்லை.
அதைப் பைத்தியகாரத்தனம் என்று கூறவும் மனம் ஒப்பவில்லை.
யோசனையுடனே முகம் குப்புற விழுந்து சற்று நேரத்தில் உறங்கிப் போனவள், பசி தாங்க முடியாமல் நடுசாமத்தில் தேநீர் ஊற்றி, நாலைந்து பிஸ்கட்டை அதில் நனைத்து விழுங்கிவிட்டு வந்து மீண்டும் உறங்கியதெல்லாம் வேறு கதை!
மறுநாள் யுகன் வீட்டுக்கு செல்லும்போது வாசலில் புது செக்யூரிட்டி அவளைப் பார்த்து வரவேற்பாய் தலை அசைத்தார்.
நேற்று நடந்த சம்பவத்தால் பழைய செக்யூரிட்டியின் வேலை பறிப்போய் இருக்கிறது என ஊகித்து, மானசீகமாக அவரிடம் மன்னிப்பு வேண்டினாள் மான்ஷி.
“ஹாய் பையா, வேலைக்கு புதுசா?”
ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவருக்கு, முதலாளி காலையிலே அலைபேசியில் காட்டிய புகைப்படத்தில் சிரித்தவள் தான் தற்போது தனக்கு எதிரே நின்றிருக்கிறாள் என்பது சற்றுத் தாமதமாகத் தான் உறைத்தது.
“ஆமா, சார் எந்திரிச்சு தோட்டத்துல இருக்குற மினி ஜிம் பக்கமா போறதைப் பார்த்தீங்களா? ஏன் கேட்கறேன்னா நான் இப்போ அவரை மீட் பண்ணியாகணும்..” என்றவள் கேட்டை தாண்டிக் கொண்டு உள்ளே நுழையப் போக,
“சாரிமா, உங்களால உள்ள போக முடியாது!” என வழிமறிப்பது போல் வந்து நின்றார் செக்யூரிட்டி.
“ஏன்?”
‘இந்த பொண்ணு இங்க வந்தா வீட்டுக்குள்ள விட வேணாம். சரியான ஃப்ராடு! பேசியே கவுத்திடுவா..’ என்ற யுகனின் எச்சரிக்கை காதினுள் கேட்டுக் கொண்டே இருக்க,
“அது, இப்போ சார் பிஸியா இருக்காராம்!” என்று வாயில் வந்ததை அடித்து விட்டார்.
“ஓ, அப்படியா? உங்க சார் தான் இப்படி சொல்லச் சொன்னாரா..” என்று இகழ்ச்சிப் புன்னகையுடன் கேட்டவளுக்கு அவன் தன்னை செக்யூரிட்டியிடம் முன்பே அடையாளங்காட்டி இருப்பான் எனப் புரிந்தது. இது ஒன்றும் முதல்முறை அல்லவே!
செக்யூரிட்டி பதில் கூறாமல் விறைப்பாக நின்றிருக்க, அவரைப் பார்த்து சிரித்தவள்,
“ஆக்சுவலி எனக்கும், என் வீட்டுக்காரருக்கும் இடையில ஒரு சின்ன தகராறு. அதனால கூட அவர் என்னை உள்ளே விட வேணாம்னு சொல்லி இருப்பாரு பையா.
அவரை மீட் பண்ண வேற வழி தெரியல. இதுல நீங்க வேற வழி மறிச்சி நின்னா எங்க பிரச்சனை எப்படி தீரும், சொல்லுங்க. நானாவது போய் அவரை சமாதானம் பண்ண வேணாமா?” என வருத்தம் இழையோடிய குரலில், இதற்கு முன்னர் வந்தவர்களிடம் எதை சொன்னாளோ அதையே அட்சரம் பிசகாமல் சொல்லிக் கண்களைக் கசக்கினாள்.
‘பேசியே கவுத்துடுவா!’ என்ற முதலாளியின் எச்சரிக்கை வேறு நேரத்துக்கு அவருக்கு ‘பை பை’ காட்டிவிட்டுச் சென்றிருக்க,
“அட! இதுக்கெல்லாம் அழுதுட்டு இருக்கலாமா? நீ போய் உன் புருஷன் கிட்ட பேசுமா. எல்லாம் சரியாகிரும்..” எனக் கூறி அவளை உள்ளே அனுப்பி வைத்தார் செக்யூரிட்டி.
இன்னும் சற்று நேரத்தில் தன்னால் திட்டு வாங்கிக் கொள்ளப் போகிறாரே என எண்ணி வருந்தியவள், ‘சாரி பையா! எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல.’ என்று நினைத்து உதடு பிதுக்கி விட்டுத் தோட்டத்துக்கு ஓடினாள்.
ஓட்டத்துக்கு ஏற்றவாறு வேகமாக ஏறி இறங்கும் முறுக்கேறிய புஜங்களிலும், தொப்பையின்றி ஒட்டிக் கிடந்த வயிற்றில் விழுந்திருந்த சிக்ஸ் பேக்கிலும் சுயம் மறந்தாள்.
அதன் பிறகு மனசாட்சி கேவலமாக காரித் துப்பியதையோ, முழு உலகமே தெரியும்படி திறந்திருந்த வாய்க்குள் நாலு ஈ பறந்து மறைந்ததையோ அவள் உணரவில்லை.
அவளின் வருகையை ஆடவன் உணர்ந்திருக்க வேண்டும், என்ன நினைத்தானோ! திரட்மில்லின் வேகத்தைக் கூட்டி தன் ஓட்டத்தை மேலும் துரிதப்படுத்தினான்.
மொத்தமாக பத்து நிமிடங்கள் ஓடிக் களைத்தவன், கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த துண்டை உருவியெடுத்து மேனி வியர்வையை மெல்ல ஒற்றியெடுத்தான்.
மான்ஷி இன்னும் திறந்த வாய் மூடி இருக்கவில்லை.
அதே துண்டால் முகத்தையும் அழுந்தத் துடைத்தவன் அதை அவள் முகத்திலே தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து வெளியேற, முகத்தில் வந்து விழுந்த துண்டில் அவனின் வியர்வை நுகர்ந்து புன்னகைத்தாள், மான்ஷி.
பரந்த நிலப்பரப்பில் தாராள மனதோடு கட்டி போடப்பட்டிருந்த அந்த பெங்களா வீடானது, பல ஏக்கர்களைத் தனதாக்கிக் கொண்டு வானளவு உயர்ந்து வெகு கம்பீரமாய்க் காட்சியளித்தது.
பழங்கால கலை நயங்களுடன் காணப்பட்ட அவ்வீடு, பற்பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சகல வசதிகளுடன் வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று எண்ண வைக்கும்படி பிரம்மாண்டமானது என்றால், அது மிகையில்லை.
வீட்டைச் சுற்றி விரிந்திருந்த பசுமையான தோட்டம், குறைவற பூத்துக் குலுங்கியிருந்த மலர்ச் செடிகளாலும், அடர்ந்து வளர்ந்த பெரு விருட்சங்களாலும் பசுமை பெற்று பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்படி இயற்கை அன்னையின் அழகைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
அந்த விடிய காலை நேரத்தில், வீட்டினுள் கண்டபடி யாராலும் நுழைந்து விட முடியாது என்ற குறிப்புடன், கறுப்பு நிற இரும்பு கேட் அருகே சிலையென நின்றிருந்த செக்யூரிட்டியின் கை பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தாள், மான்ஷி.
“ப்ளீஸ் பையா! நான் உங்க சாரைப் பார்க்கணும். பிகு பண்ணாம என்னை உள்ள போக விடுங்களேன். வெறும் ஃபைவ் மினிட்ஸ் தான், போனதும் வந்திடுவேன்..”
‘ஒவ்வொரு நாளும் வந்து வாங்கிக் கட்டிக் கொள்கிறாயே! உனக்கு தேவை தானா?’ என்பது போல் அவளைப் பரிதாபமாகப் பார்த்தவர் முடியவே முடியாது என விறைப்பாக நின்றிருந்தார்.
“ப்ளீஸ் பையா, இன்னைக்கு ஒருநாள் மட்டும்! லெட் மீ இன்..”
“உன்னை உள்ள போக விட்டுட்டேன்னா என் வேலை பறி போய்டும்மா. ரெண்டு மூணு வாட்டி என்னை மீறி நீ உள்ள போனதால நான் தான் வாங்கி கட்டிக்கிட்டேன்..” என்று பாவமாக முகம் சுருக்கினார், செக்யூரிட்டி.
அவரைப் பார்க்கும் போது ஐயோ என்று தோன்றினாலும், ‘அவனை’ப் பார்த்தாக வேண்டும் என்ற பேராசைத் தீ மனதினுள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால், அருகில் யாரையும் பாவம் பார்க்க தோன்றவில்லை.
கெஞ்சிக் கெஞ்சி ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவளாக செக்யூரிட்டியை முறைத்தவள், அவர் எதிர்பாராத நேரத்தில் தன் ஹீல்ஸ் காலைத் தூக்கி ஓங்கி மிதித்ததோடு,
“ஐயோ அம்மாஆ..” என்று அலறியவரைக் கடந்து கொண்டு நொடி நேரப் பொழுதில் கேட்டைக் கடந்து உள்ளே ஓடியிருந்தாள்.
சில அடிகள் முன்னே ஓடியவள், திரும்பிப் பார்த்து, “ஐம் சாரி பையா!” என காது தொட்டு மன்னிப்பு வேண்ட,
“ஏம்மா பொண்ணு! சொல்றதைக் கேளுமா..” எனக் காலைப் பிடித்துக் கொண்டு அவர் கத்திய கத்தலெல்லாம் விழலில் இறைத்த நீர் போலாயிற்று!
“சாரி பையா! ஐ காட்ட கோ (gotta go)” என்று கண் சிமிட்டிக் கூறிச் சென்றவளின் பின்னால், “நில்லு மா..” எனக் கெஞ்சியபடி கெந்திக் கெந்தி ஓடினார், செக்யூரிட்டி!
என்றும் ஏதாவது ஒரு அராஜகத்தை செய்து கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்து விடுபவள், கோட்டையினுள் இருக்கும் அரக்கனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் வீடு திரும்பியதாய் சரித்திரமே இல்லை.
‘உங்கள் கவனயீனம் தான்’ என குற்றம் சுமத்தப்பட்டு மாதம் இரு முறைகள் செக்யூரிட்டி மாற்றப்பட்டுக் கொண்டிருப்பது தான் உச்சகட்ட கொடுமை!
அவள் இந்த வீட்டுக்கு வந்து செல்லத் தொடங்கியிருந்த கடந்த ஓரிரு மாதங்களில் மாத்திரம், நான்கு காவலாளிகளின் தொழில் அநியாயமாய் பறிபோனது தான் மிச்சம்.
செக்யூரிட்டியைப் பார்த்து பழிப்புக் காட்டியபடி ஓடியவள், திடீரென எதிலோ மோதி, “ஸ்ஸ்..” என நெற்றியை தேய்த்து விட்டபடி சட்டென்று நிமிர்ந்தாள்.
ஆங்கு, பாறையை விழுங்கியது போலான முக பாவத்துடன் கண்களை சுருக்கி அவளை முறைத்துக் கொண்டிருந்தான், ஆறடியை விட சற்றே உயர்ந்த தோற்றத்தை உடைய காளையொன்று!
கதிரோனைக் கண்ட கமலமாய் முகம் மலர்ந்தவள், “யுகன்..” என உற்சாகமாய் அழைக்க வருவதற்குள், அவளைத் தன்னிலிருந்து விலக்கி வேகமாகத் தள்ளி விட்டவனின் பார்வை, எச்சில் விழுங்கியபடி நின்றிருந்தவரின் மீது அழுத்தமாகப் பதிந்தது.
“சா.. சார்..”
“யூ மே கோ நவ்!” எனக் கணீர் குரலில் முழங்கியவன் அவர் கூற வரும் நியாயங்களைக் கேட்க விரும்பாமல் திரும்பி நடக்க, கை பிசைந்து நின்றவரிடம் மீண்டுமொரு முறை மன்னிப்புக் கோரி விட்டு பின்னோடு ஓடினாள், மான்ஷி!
தாயின் சேலை பற்றி பின்தொடரும் குழந்தையாய், அவன் கால்தடம் பின்பற்றி உள்ளே நுழைந்தவள் கண்டது, சோபாவில் ஒய்யாரமாய் சாய்ந்தபடி தொலைக்காட்சியில் ஓடிய ஆங்கில படத்தில் திளைத்துப் போயிருந்த மிதுனாவைத் தான்!!
பாலைவன சுடு மணலில் தெளிக்கப்பட்ட நீர் துளி போல், சட்டென்று பாவை முகத்திலிருந்த மலர்ச்சி மறைந்து கார்மேகங்கள் சூழ்ந்து கொண்டன.
கை முஷ்டிகள் இறுக, நறநறத்த பற்களுடன் யுகனை முறைத்தாள். அவளது கர்ண கொடூரமான முறைப்பை அவன் சற்றும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.
அலட்சியமாகத் தோளை உலுக்கியபடி சென்று சோபாவில் அமர, மேஜையிலிருந்த வயின் நிரம்பிய கிண்ணத்தை அவனுக்கு நீட்டினாள், மிதுனா.
அவளின் பார்வை இன்னுமே தொலைக்காட்சியை விட்டு அகலாததால், தன்னை எக்குத்தப்பாய் முறைத்துக் கொண்டிருந்தவளின் கோபம் அவளுக்கு தெரியாமல் போயிற்று!
மான்ஷியை அவ்வப்போது பார்வையால் மொய்த்தவாறு வயினை மொத்தமாக வாய்க்குள் சரித்துக் கொண்டவன், அருகில் இருந்தவளின் கரம் பற்றியிழுத்து அவளை முத்தமிடப் போக,
“யுகன்ன்ன்!!” என அந்த இடமே அதிரும்படி ஆவேஷமாக கத்தி, என்ன ஏதென்று சுதாகரிக்க முன்னரே ஹீல்ஸைக் கழற்றி அவளை நோக்கி வேகமாக விட்டெறிந்திருந்தாள் மான்ஷி!
திடுக்கிட்டு நிமிர்ந்த மிதுனா, அவள் வீசியடித்த காலணி தன்னைப் பதமாகத் தாக்கிவிட்டுக் கீழே விழுந்ததும் கடுகடுத்த முகத்துடன் நிமிர,
“என்னடி முறைப்பு?” என அரிமாவாய் சீறி விழுந்தாள்.
மனம் திக்கென்றது, மிதுனாவுக்கு!
“அவனை விட்டுத் தள்ளியே இருனு நான் சொல்றது உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது மிதுனா?” என உச்சஸ்தாயியில் கத்தியவள் இரண்டெட்டில் அவளை நெருங்கி,
“சாவுடி!” என்ற ஆவேச முணுமுணுப்புடன் அவளது தோள் பற்றித் தள்ளி விட்ட கணம், ஆடவனின் கைரேகை அவளின் பட்டுக் கன்னத்தில் அழுத்தம் திருத்தமாய் ‘பளார்!!’ என்ற சத்தத்தோடு பதிந்தது.
“அவளுக்காக என்னையே ஸ்லாப் பண்ணுறியா யுகன்?” என ஆங்காரமாய் ஓங்கரித்தவள் ஆத்திரத்துடன் அவனை ஓங்கி அறையப் போக, அந்தோ! அவளின் மென்கரங்கள் அவனால் சிறை பிடிக்கப்பட்டு முதுகுக்குப் பின்னால் வளைத்து பிடிக்கப்பட்டது.
“அவுச்! ஆஆ.. கையை விடு பைத்தியம். ஸ்ஸ், வலிக்குதுய்யா!! ப்ளீஸ்!” என இறுதியில் அவள் வலியில் கத்திக் கதறும் வரை ஓங்கிய கைக்கு விடுதலை கிட்டவில்லை.
வேலைக்காரர்கள் கூட, ‘பெரிய வீட்டு சமாச்சாரம் நமக்கெதுக்கு’ என்ற எண்ணத்துடன் கண்டும் காணாதது போல் தலையை குனித்தபடி அவ்விடத்தினின்று நகர்ந்தார்களே தவிர, அவர்களின் புறம் பார்வையைத் திருப்பவே இல்லை.
“ப்ளீஸ் என் கையை விடுய்யா! ஸ்ஸ், வலிக்குதுஊ யுகன்..” என்று அணை திறந்த வெள்ளமாக கண்ணீர் சிந்தியவளின் கண்ணீர் அவனுக்கு சற்றே திருப்தி அளித்ததோ..
கோணல் சிரிப்புடன் தோள் பற்றி அவளைப் பின் நகர்த்தியவன் சென்று சோபாவில் கால் நீட்டி அமர்ந்து கொண்டான்.
மான்ஷியெனும் ஜந்துவிடம் அடியோ, கிள்ளலோ வாங்கிக் கொள்ள எண்ணமின்றி அங்கிருந்து எப்பொழுதோ ஓடி விட்டிருந்த மிதுனாவை நினைக்கும் போது, சிரிப்பதா அழுவதா என்று தெரியாத நிலை ஆடவனுக்கு!
தொலைக்காட்சி இன்னுமே கேட்பார், பார்ப்பாரற்று தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது.
அதில் ஓடிக் கொண்டிருந்த காட்சிகளை வெறித்தவள், வலித்த கையை மற்றொரு கையால் மெல்ல அமுக்கி விட்டாள். அசைக்க முடியாதபடி ரணமாய் வலித்தது, அவனால் முறுக்கப்பட்ட கரம் மட்டுமல்ல.. அவனை சுமந்து கொண்டு துடிக்கும் இருதயமும் தான்!
“ச்சு, ரொம்ப வலிக்குதோ?”
மூச்சை ஆழமாக இழுத்து வெளியேற்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், “இனிமே அந்த மிதுனா இங்க வரக்கூடாது!” என தனக்கே அந்நியமான ஒரு குரலில் அழுத்தமாகக் கூற,
“வர்றதையும், வராததையும் முடிவு பண்ணனுமானது நான் இல்லையா?” என குரலில் ஒட்டிக் கொண்ட கேலியின் மிச்சத்தோடு வினவியவன் அவளின் கசங்கிப் போன வதனம் பார்த்து கேலியாய் நகைத்தான்.
“அவ கூட உக்கார்ந்து இங்கிலிஷ் பிலிம்ஸ் பாக்குறது, அவ கையை தொடறது, அவ தரும் வயினைக் குடிக்கிறது, அவளை ஒட்டிக்கிட்டு உட்காருறது.. இது எதுவும் எனக்கு பிடிக்கல. அவ இனிமே இங்க வரக்கூடாது..” கூறும் போதே அவளின் கண்கள் செந்தூர நிறமாகின.
“உனக்கு பிடிக்கலன்னா என்ன.. எனக்கு பிடிச்சுருக்கே!” என்றவன் தன்னை நோக்கிப் பறந்து வந்த வயின் பாட்டிலை வாகாக கேட்ச் பிடித்து, தாமதிக்காமல் அதை அவளை நோக்கியே விட்டெறிந்தான்.
சட்டென சுதாகரித்து, அவள் இரண்டடி நகர்ந்து நின்று கொண்டதால் நலமாயிற்று! இல்லையேல் வயின் பாட்டில் அவளது தலையைப் பதம் பார்த்து வைத்தியசாலை வரை அழைத்து சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
சுவற்றில் பட்டு உடைந்து சிதறிய கண்ணாடித் துண்டுகள் சில சுவரருகே நின்றிருந்தவளது உடலைக் கீறி இரத்தக் கசிவை ஏற்படுத்தியது.
அழக் கூட தோன்றாமல் விறைத்து நின்றிருந்தவள், “உன்னை வெறுக்கவும் முடியாம, காதலிக்கிற மனசுக்கு தடை விதிக்கவும் முடியாம தடுமாறி நிற்கிறேன் யுகன்.” என்றாள், உயிர் வெறுத்த குரலில்.
ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டாற்போல் வாய் விட்டுச் சிரித்தவனின் குரலில் மெலிதான வருத்தம் இழையோடியதாய் ஒரு பிரமை..
“நீ ஏன் இப்படி பண்ணுறே? மிதுனாவை கூட்டிட்டு இனிமே இங்க வராதய்யா! வர்ற கோபத்துக்கு அவளை ஏதாவது பண்ணிடுவேனோனு பயமாருக்கு. உன் பிடிவாதத்தால அந்த பொண்ணோட உயிர் போறதை நான் கொஞ்சமும் விரும்பல யுகன்..” என்றாள் மான்ஷி.
நகைப்பை நிறுத்திக் கொண்டு, “வாட்! பைத்தியமா நீ?” என்றவன் தொடர்ந்து, “கொல்ல போறது நீ! இடைல ஏன் என் பிடிவாதத்தைப் பத்தி சொல்லுற?” என்று எள்ளி நகையாடினான்.
“நீ உன் பிடிவாதத்தை விட்டுட்டு, என்னைக் கடுப்பேத்த அவளை இங்க வர வைக்கிறதை நிறுத்து! அவளுக்கும் சேதாரம் இல்ல; எனக்கும் கவலை இல்ல.. “
“ஃபன்னியா இருக்கு!” என சிரிப்புடன் கூறியபடி எழுந்து உள்ளறைக்கு செல்ல எத்தனித்தவன்,
“இனிமே அவ இங்க வந்தா ஐ வில் டெஃபினெட்லி கில் யூ மேன்!” என்ற மான்ஷியின் அதட்டலில் நிதானமாக நின்று திரும்பினான்.
ஊகித்தாற் போலவே பழம் வெட்டும் சிறு கைக்கத்தியை நீட்டியபடி கண்கள் சிவக்க காட்டேரியாய் நின்றிருந்தாள், மான்ஷி!
கேலியாக உதடு வளைத்தவன் சடுதியில் பாய்ந்து சென்று, அவளின் கையிலிருந்த கத்தியைத் திசை திருப்பி அவளுக்கு பின்னால் வேகமாக எறிய, அப்போது தான் வீட்டினுள் நுழைந்த ஒருவனின் கழுத்தில் ஆழமாய் இறங்கியது கத்தி!
அவன் வைத்த குறி தப்பியதாய் தான் சரித்திரமே இல்லையே! “சதக்க்!” என குருதி நாலாபுறமும் தெளிக்க, நிலத்தில் அடியற்ற மரமாய் சாய்ந்தான் கத்திக் குத்து வாங்கியவன்.
“யுகி ப்.. பாய்ய்!!” என்ற அலறல் சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பிய மான்ஷிக்கு, இரத்த வெள்ளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்தவனைப் பார்த்ததும் ஒரு நொடி இதயம் நின்று துடித்தது.
பயத்தில் உடல் வெடவெடக்க ஆரம்பித்து விட, குளிரில் நனைந்த கோழிக் குஞ்சு போல் யுகனின் பின்னால் பதுங்கியவள், இறுதி மூச்சுக்களை எண்ணிக் கொண்டிருந்தவனைப் பயத்தோடு ஏறிட்டாள்.
அவன் வேற்றான் அல்ல, குமரன்! யுகனுக்கு நம்பிக்கைக்குரிய கையாள் என்பதை விட, அவனின் வலது கை என்றே குமரனை இலகுவாக அடையாளப்படுத்தலாம்.
“குமரனா!? நோ, நீ எது.. எதுக்கு யுகன் அவனைக் கொன்ன?” என்று கேட்டபடி உடல் நடுநடுங்க அவன் முதுகில் முகம் புதைத்தாள், மான்ஷி.
தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் போது வராத பயமும், நடுக்கமும் மற்றொருவனின் உடலிலிருந்து வெளிப்பட்ட குருதியைக் கண்டதும் அவளுக்கு வந்து விட்டது.
“எது! நான் கொன்னேனா? கத்தியை நீதானே பிடிச்சுட்டிருந்த? அதுல உன் கைரேகை தான் அச்சுபிசகாம பதிஞ்சி போயிருக்கும். மறந்துட்டியா என்ன?” என்று கேட்டவன் தன்னோடு அட்டை போல் ஒட்டிக் கிடந்தவளை இழுத்து ஒரு புறமாக நிறுத்தி விட்டு குமரனின் அருகில் சென்றான்.
“குமரன்! குமரன்!” என்ற எள்ளல் அழைப்புடன் அவனருகே குனிந்தவன்,
குமரனின் உடலினின்று வெளியேறிய அளவுக்கதிகமான இரத்தத்தைக் கண்டு திக்பிரமை அடைந்தவளாக அரை மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தாள், மான்ஷி!
“ஹே, இங்க பாரு! மயங்கித் தொலைச்சிடாத என்ன.. அப்பறம் மயக்கம் தெளிஞ்சு கண்ணு திறக்க உன் உடம்புல உயிர் இருக்காது, சொல்லிட்டேன்!” என்று ஈவிரக்கமின்றி சத்தம் வைத்தவன்,
“யாரங்க..” என உள்நோக்கிக் குரல் கொடுத்ததும் அருகில் வந்து தலை குனிந்து நின்றவனிடம் குமரனைக் கண்காட்டி விட்டு எழுந்து கொள்ள,
“யுகன்..” என்ற முனகலுடன் தள்ளாடிக் கொண்டிருந்தவள் தொபுக்கடீரென்று மயங்கி விழுந்தாள்.
பற்களைக் கடித்து கோபத்தை விழுங்கிய கன்நெஞ்சக்காரன், “எவனும் இவளை நெருங்கக் கூடாது!” என்று எச்சரிக்கை செய்து விட்டு அவளைத் தாண்டி நடந்தான்.
ஊருக்கு நல்லது செய்யும் கடவுள் எனப் போற்றிப் புகழப்பட்டாலுமே, காலைச் சுற்றிச் சுற்றி வரும் சிறு பெண்ணிடம் அவன் நடந்து கொள்ளும் விதம் அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை அங்கிருந்தோருக்கு!
ஆனால் அவனை இடித்துரைக்கும் தைரியம் இங்கு யாருக்குத் தான் உள்ளதோ!? மாடியேறிச் சென்ற அசுரனை பயம் பொதிந்த பார்வை பார்த்து வைக்க மட்டுமே முடிந்தது அவர்களால்.