குறிஞ்சி மலர்.. 10
அதிகாலை நேரத்துக்கே உண்டான குளுமையும் புத்துணர்ச்சியும், மெல்லிய காற்றுடன் திறந்திருந்த வாசலினூடாகவும், சாளரங்களினூடாவும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன.
கோதையோ அந்த அதிகாலைப் பொழுதின் குளுமையிலும் கூட வியர்த்து விறுவிறுக்க நின்றிருந்தாள்.
இடது கையால் நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்தபடி வலது கையில் பால் குவளையை வைத்திருந்த கோதை, அப்போது தான் அவனின் நீல விழிகளைப் பார்த்தாள்.
“என்ன இந்த மனுஷன் தேத்தண்ணியைக் குடுத்தால் வாங்கிக் குடிக்காமல்.. குறுகுறுண்டு பாக்குது.. இதென்ன எல்லாருக்கும் கருவிழி இருக்கும் இந்தாளுக்கு மட்டும் நீலவிழியா இருக்குதே.. ஸ்ரைலுக்கு கண்ணுக்கு நீல லென்ஸ் போட்டிருப்பார் போல..”
என முணுமுணுத்தவள்
“இந்தாங்கோ..”
என்று அவனுக்கு முன்னால் குவளையை நீட்டினாள்.
இயல்பாக அவனது கரம் நீண்டு அவள் கொடுத்த குவளையை வாங்கிக் கொண்டது. கோதை அதோடு போயிருக்கலாம் ஆனால் அவளது கஷ்டகாலமோ தெரியவில்லை. தான் தில்லையம்பலத்தின் மகள் என்பதை அவனிடம் சொல்ல வேண்டும் என யோசித்தவள் மீண்டும்
“என்னங்கோ..”
என அழைக்க, நிதானமாக நிமிர்ந்து அவளைப் பார்த்தான் நீலவிழிக்காரன்.
“இங்க வந்த உடனேயே என்னைப் பத்திச் சொல்லச் சொல்லி என்ரை அப்பா சொல்லி விட்டவர்.. நான் தான் தில்லையம்பலத்தாருடைய ஒரேயொரு மகள்.. அப்பா ஏதோ உங்களுக்கு கடன் பட்டிருக்காராமே.. அந்தக் கடனை அஞ்சு மாசத்துக்கு இங்க உங்களிட்டை வேலை பாத்து அடைக்கோணும் எண்டு சொன்னாரு..”
என அவள் வேகமாகச் சொல்லி முடிக்கவும், ஜேம்ஸின் கையிலிருந்த மண்குவளை படீரென்று கீழே விழுந்து உடையவும் சரியாக இருந்தது.
“ஐயோ.. ஏனுங்கோ அதைக் கீழ போட்டியள்.. கை தவறீட்டுதோ..”
என்று கொண்டே உடைந்த மண் குவளையை அவள் எடுக்கக் குனிவதற்குள், ஜேம்ஸ் பக்கத்தில் கிடந்த பூச்சாடியைத் தூக்கிக் கீழே அடிக்க அந்தச் சத்தத்தில் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டாள் கோதை.
அதற்குள் அந்தச் சத்தங் கேட்டு, பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தார் வியாகேசு. ஓடி வந்தவர் ஒற்றைப் பார்வையிலேயே அங்கிருந்த சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, கோதையை இழுத்துக் கொண்டு சமையலறைக்குப் போனார்.
“என்னம்மா நீ.. அவனைப் பத்தி தெரியாமல் அவனோட போய்க் கதைச்சுக் கொண்டு நிக்கிறாய்..”
“ஏனப்பா அவருக்கு பொருளுகளை உடைக்கிற வியாதி ஏதும் இருக்குதோ..”
“அவனுக்கு சட்டு சட்டெண்டு கோபம் வரும்.. அப்புடி கோபம் வார நேரமெல்லாம் கைக்கு கிடைக்கிற பொருளுகளை எல்லாம் தூக்கி எறிவான் அடிப்பான்..”
“ஓ அக்ரசிவ் பிஹேவியரா.. அப்புடியெண்டால் சைக்காற்றிக் டொக்டரிட்டை காட்டினால் சரியாயிடுமே..”
“ஐயோ கடவுளே உனக்கு வாயில தான் சனி போல.. கொஞ்சம் நேரம் வாயை மூடிக் கொண்டு சும்மா இரு பிள்ளை..”
என வியாகேசு நொந்து போய்ச் சொல்ல,
“அதெண்டால் உண்மை தான் பெரிசு.. தங்கச்சிக்கு வாயில தான் சனி..”
என்று கொண்டு வஞ்சியும் சமையலறையினுள் வந்தான்.
“இஞ்சை பார் பிள்ளை.. இப்ப வந்தாரே அவர் தான் இந்த பங்களாவுக்கு பெரிய முதலாளி.. ஆனா கோபம் வந்தால் ஆள் கண்டதையும் தூக்கி அடிக்கும்..”
“சரி சரி.. ஆனா இப்ப என்னத்துக்கு கோபம் வருவான் நான் என்ன செய்தனான்..”
“நீ என்ன செய்தனியோ..”
“ஓ அதைத் தான கேக்கிறன் நான் என்ன செய்தனான்..”
“நொள்ளையம்பலத்திந்தை மகள் எண்டு சொன்னது காணாதோ..”
“இங்க பாருங்கோ.. உந்த மாதிரி எல்லாம் சொல்லாதேங்கோ.. பிறகு எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லீட்டன்..”
“சரி சரி சொல்லேல்லை வாய் தவறி வந்திட்டு.. மன்னிச்சுக் கொள்ளு.. தில்லையம்பலம் எண்ட பேரைக் கேட்டாலே அவனுக்கு ஆகாது.. அவரிந்தை மகள் தான் நீ எண்டு சொன்னால்.. அவன் கோபப் படாமல் உன்னையக் கொஞ்சுவானா.. நல்ல காலம் நான் ஓடி வந்தன்..”
“இல்லாட்டிக்கு என்ன ஆகியிருக்கும் அப்பா.. எனக்கு மேல எறிஞ்சிருப்பாரோ.. என்ன இருந்தாலும் இம்புட்டு கோபம் ஆகாது.. உவரைக் கண்டிப்பா சைக்காற்றிக் டொக்டரிட்டை காட்டத் தான் வேணும்..”
“தப்பித் தவறிக் கூட உதை அவனுக்கு முன்னால சொல்லியிடாத பிள்ளை..”
“ஏன் அப்பா..”
என்று கேட்ட பூங்கோதையைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டான் வஞ்சி.
“தங்கச்சி.. உன்னையப் பாத்து ஆரும் விசர் பைத்தியம் எண்டு பூடகமாச் சொன்னாக் கோபம் வருமோ வராதோ..”
“வரும்..”
“ஆ அதே மாதிரி தானே நீ சொல்லும் போது எங்கடை பாஸுக்கும் கோபம் வரும்..”
“உங்கடை பாஸுக்கு கோபம் வர்ர போல நான் இப்ப என்ன சொன்னான்..”
“விசர் பைத்தியங்களைத் தானே சைக்காற்றிக் டொக்டரிட்டை கூட்டிக் கொண்டு போவினம்.. அவரை அங்க போகச் சொன்னால் கோபம் வரும் தானே..”
“ஐயோ கடவுளே.. ஏன் தான் உப்புடித் தப்புத் தப்பா புரிஞ்சு கொள்ளுறியளோ தெரியேல்லை.. அது அப்புடி இல்லை.. அவரிந்தை கோபத்தைக் கட்டுப் படுத்துறதுக்கு தெரபியளும் தேவைப் பட்டா மெடிசினும் குடுப்பினம்.. நீங்கள் சைக்காற்றிக் எண்டாலே நீங்களாகவே ஒண்டை நினைச்சுத் தப்பாப் புரிஞ்சு வைச்சிருக்கிறியள்.. அங்க போறவை எல்லாரும் விசருகள் பைத்தியங்கள் எண்டோ.. அங்க விசருகள் பைத்தியங்கள் மட்டும் தான் போகோணும் எண்டோ இல்லை.. அதோட இந்த விசருகள் பைத்தியங்கள் எண்டுற வார்த்தையை முடிஞ்ச வரை சொல்லாதேங்கோ.. அது அத்தனை வரவேற்கத் தக்க வார்த்தைகள் இல்லை..”
“சாரி தங்கச்சி.. உதுக்கு உப்புடி ஒரு விளக்கத்தை ஆருமே இதுவரை குடுக்கேயில்லை.. நானும் தப்பாவே புரிஞ்சு கொண்டு இப்ப வரை இருந்திட்டன்.. இனி நான் ஆரையுமே அப்புடிச் சொல்ல மாட்டன்..”
“உப்புடி நிறையப் பேர் நினைக்கிறதனால தான் அண்ணாச்சி.. நிறைய பேர் சைக்காற்றிக் யுனிற்றுக்கு போகவே பயப்படுகினம்.. எங்க தங்களையும் மனநோய் புடிச்ச ஆக்களா முத்திரை குத்தியிடுவினமோ எண்டு நினைச்சுக் கொண்டு அந்தப் பக்கம் போறதில்லை.. அதனால தான் முளையில கிள்ளி எறிய வேண்டிய விசியத்தை அப்புடியே வளர விடுதுகள்..”
“இனி நான் எந்த விசியத்தையும் தேவையில்லாமக் கதைக்க மாட்டன் தங்கச்சி..”
“நான் சொன்ன உடனேயே அதைப் புரிஞ்சு கொண்டதுக்கு நன்றி அண்ணாச்சி..”
“இப்புடி ஆருமே என்னட்டை சொன்னதே இல்லையம்மா.. இன்னும் சொல்லப் போனால்.. நான் சொன்னதை ஆமோதிச்சு இன்னும் ரெண்டு மூண்டு வார்த்தையள் கதைக்கிறவை தான் கூட.. இனி அவையளையும் திருத்திறன்..”
“சரி திருத்துங்கோ.. இப்ப நான் என்ன செய்யிறது..”
“ஏன் தங்கச்சி உனக்கு என்ன..”
“எனக்கு என்னவோ.. உங்கடை பாஸ் தான் என்னைக் கண்டாலே கண்டதையும் தூக்கி உடைக்கிறாரே.. நான் எங்கினை ஓடி ஒளிக்கிறது..”
“தங்கச்சி.. நீ உன்ரை புடவைத் தலைப்பால முகத்தை மூடிக் கொண்டு வா.. அப்ப பாஸுக்கு நீ தான் எண்டு தெரியாது..”
என்று சொன்ன வஞ்சிமாறனின் முதுகில் ஒன்று போட்டு,
“இவனும் ஒரு அறிவாளி எண்டு இவனிட்டை ஐடியாக் கேக்கிறியே பிள்ளை.. தப்பிக்க வழி கேட்டால் மாட்டிக் கொள்ள வழி சொல்லுவான்.. எதுக்கும் நீ இப்பதைக்கு ஜேம்ஸிந்தை கண்ணுல மாட்டுப் படாமல் வேலையைப் பார்.. இப்புடியே இருக்கேலாது தான்.. ஏதாவது யோசிப்பம்.. இப்ப நான் வாரன்.. ஆனாத் தயவு செய்து இந்த வெண்ணெயிட்டை மட்டும் ஐடியாக் கேட்டுப் போடாத..”
என்று சொல்லிக் கொண்டே அவனைத் தள்ளிக் கொண்டு வெளியே போய் விட்டார்.
“ஐயோ காளியாத்தா.. இதுங்க குடுக்கிற பில்டப்பை பாத்தால்.. நான் நொந்து நூடில்ஸாகாமல் இங்கினை இருந்து போக முடியாது போலயே..”
என முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போதே,
“ஏய்..”
என்று கொண்டு சமையலறையினுள் வந்தார் மேரி.
“வந்திட்டா வடிவுக்கரசி.. இனி என்னைய ஒரு வழி செய்யாமல் அவாக்கு இருப்புக் கொள்ளாது..”
என்று கொண்டு அடுப்புப் பக்கம் திரும்பி நின்று கொண்டாள் கோதை.
“ஏய் உன்னைத் தான்டி..”
“இஞ்சை பாருங்கோ என்ரை பேர் பூங்கோதை.. எத்தினை தடவை சொல்லுறது என்னைய ஏய் எண்டு கூப்பிடாதேங்கோ எண்டு..”
“ஓஓ ஏன் அழகுசுந்தரிக்கு ஏய் எண்டு கூப்பிட்டால் காதுல ஏறாதோ..”
“மேரியம்மா.. நான் உங்களோட சச்சரவு செய்யேல்லை.. அப்புடிக் கூப்பிடாதேங்கோ எண்டு தானே சொன்னான்..”
“வாயை மூடுடி.. நீ இந்த வீட்டுக்கு வந்த வேலைக்கார அடிமை.. நாங்கள் என்ன செய்தாலும் அதை வாயை மூடிக் கொண்டு செய்யோணும்.. அதை விட்டுட்டு எனக்கு ஓடர் போடாத..”
“நான் ஓடர் போடலை.. சாதாரணமாச் சொன்னன்..”
“ஏய் ஏட்டிக்குப் போட்டியாப் பேசாத எனக்குக் கடுப்பாகுது..”
என மேரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஜேம்ஸின் பாடிகார்ட்ஸ்ஸான தேவாவும் ரகுமானும் சமையலறையினுள் வேகமாக வந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் மேரியின் பேச்சே சட்டென்று மாறியது.
“அம்மாடி.. எனக்கு ஒரு பால் தேத்தண்ணி போட்டுக் குடுக்கிறியா.. கொஞ்சம் அலுப்பாக் கிடக்குது.. உனக்கு இப்ப போடக் கஷ்டமெண்டால் நான் பிறகு வாரன்..”
என்ற மேரி, அதற்குக் கோதை பதில் சொல்வதற்கு முன்னரே அங்கிருந்து நழுவி விட்டார்.
அவர் போன திக்கைத் திரும்பி ஆச்சரியமாகப் பார்த்த கோதை, அப்போது தான் அங்கே நின்றிருந்த மற்ற இருவரையும் பார்த்தாள்.
“என்ன அண்ணாக்கள்.. உங்களுக்கும் பால் தேத்தண்ணி வேணுமோ..”
என்று முறுவலோடு அவள் கேட்க, ரகுமானைப் பார்த்த தேவா சட்டென்று ஆம் என்பது போலத் தலையை அசைக்க, தேவைவைப் பார்வையால் எரித்தான் ரகுமான்.
ரகுமானின் பார்வையிலேயே தேவா தனது தலையை சுளுக்கு எடுப்பது போல அப்படியும் இப்படியும் ஆட்ட, கோதைக்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடாகிப் போனது. ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் பேசாமல் நின்றாள்.
ரகுமான் தான் எந்தவொரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்
“ஐயா வரட்டாம்..”
என்று பொத்தாம் பொதுவாகச் சொல்ல, கோதையோ உள்ளூரக் கடுப்பாகிப் போனாள். ஆனாலும் அதையும் வெளியே காட்டிக் கொள்ளாமலும், எந்தவொரு ரியாக்ஷனும் காட்டாமலும் தேங்காய் ஒன்றை எடுத்து அதைத் துருவுவதற்காக உடைக்கத் தொடங்கினாள்.
ரகுமான் பொறுமையிழந்து போய் மீண்டும் ஐயா வரட்டாம் என்று சொல்ல, கோதை அதற்கும் கூட அவனைத் திரும்பிப் பார்க்காமல், பச்சைமிளகாய்களை எடுத்து நறுக்கத் தொடங்கினாள்.
அவளது செய்கையில் ரகுமான் பக்கத்தில் நின்றிருந்த தேவாவைப் பார்த்து முறைத்தான். அந்த முறைப்பில்
“அம்மாடி உன்னைத் தான் ஐயா வரட்டாம்..”
எனச் சட்டென்று சொன்னான் தேவா.
அவன் அவ்விதம் சொன்னதும் நிதானமாக அவர்களைத் திரும்பிப் பார்த்த கோதை
“தேவாண்ணா இது அழகு.. எனக்கெண்டு ஒரு பேர் இருக்குது.. அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுத் தான் எனக்கு சொல்லுற விசியத்தைச் சொல்லோணும்.. அதை விட்டிட்டு உங்கடை இசைப்புயல் உப்புடி தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் ஐயா வரட்டாம் எண்டால் நான் என்ன செய்ய..”
என்று விளக்கம் சொல்ல,
“இசைப்புயலா அது ஆரு.. இவன் பேரு ரகுமான்..”
எனத் தேவா பதிலுக்குக் கேட்டான்.
“உவரைத் தான் சொல்லுறன்.. உங்களுக்கு இசையமைப்பாளர் இசைப்புயலைத் தெரியாதோ.. அவருக்கு நிஜப் பேரு ரகுமான்.. அது தான் அப்புடிச் சொன்னான்..”
“இசைப்புயலா தெரியாதே..”
“என்னாது.. அப்போ தேனிசைத் தென்றலைத் தெரியுமா..”
“அது ஆரும்மா.. ரொம்ப முக்கியமானவையளோ..”
“ஐயோ கடவுளே.. இந்த வார்த்தையைக் கேட்ட பிறகும் எனக்கு நெஞ்சு வெடிக்காம இருக்குதே..”
என்று கொண்டு கோதை நெஞ்சைப் பிடிக்க, அவளை விசித்திரமாகப் பார்த்த ரகுமான்
“சீக்கிரமா வரச் சொல்லு தேவா.. ஐயாவுக்கு கோபம் வரப் போகுது..”
என்று சொல்லி விட்டு முன்னால் போய் விட்டான்.
“இங்கினை இருக்குறதுகளுக்கு எல்லாம் இருதயம் இரும்புல மாட்டியிருக்கு போலயே.. எங்கடை இசைப்புயலையும் தேனிசைத் தென்றலையும் தெரியாது எண்டிட்டு போறானுவளே குறுக்கால போவார்.. தலைவாஸ் மன்னிச்சிருங்கப்பா உங்களைப் போய்த் தெரியாதுண்டு சொல்லிட்டானுவளே.. பாட்டெண்டு வாயைத் திறந்தா பாடையில படுக்க வைக்கிற கும்பலோட கோத்து விட்டியே காளியாத்தா இது முறையா இது தகுமா.. “
என்று புலம்பிக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தாள் கோதை.