அசுரனின் குறிஞ்சி மலரே.. 15

4.4
(12)

குறிஞ்சி மலர்.. 15

ஜீவோதயத்தில் வெளியே பரந்து கிடந்த புல்வெளியில் அமர்ந்திருந்த வியாகேசு மற்றும் வஞ்சிக்கு நடுவே அமர்ந்து
‘தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா..’
என்ற பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள் கோதை.

வியாகேசு கண்களை மூடி அந்தப் பாடலை இரசித்துக் கொண்டிருந்தார்.
வஞ்சிக்கு பழைய பாடல்கள் அவ்வளவு பிடித்தம் இல்லை என்றாலும், கோதையின் குரலில் அந்தப் பாடலைக் கேட்க கேட்க அவனுக்கும் மிகவும் பிடித்திருந்தது.

கோதை தொடர்ந்தும்
‘ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா..’
என்று பாட, மேலே இருந்து ஜேம்ஸ் மெல்ல எட்டிப் பார்த்தான்.

அவன் எட்டிப் பார்த்த வேளையில்
‘நீள இரவிலே தோன்றும்
நிலவை போலவே
நிலவை போலவே
வாலைக் குமரியே நீயும்
வந்த போதிலே
வந்த போதிலே..’
என்ற வரியைப் பாடிக் கொண்டிருந்தாள் கோதை.

‘நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீரக் கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா..’
என்ற வரிகளை கோதையின் குரல் சுமந்து பாடலாய் வெளி வந்த போது, ஜேம்ஸின் நீல விழிகளில் லேசான சுவாரஷ்யம் தோன்றவே, கோதை அந்தப் பாடலை பாடி முடிக்கும் வரை அசையாமல் அங்கே நின்று அவளையே பார்த்திருந்தான்.

அவளது கணீர் குரலில் சத்தமாகப் பாடப் பட்ட அந்த இனிமையான பாடல் அவனது செவி தீண்டிச் செல்ல, தன்னை மறந்து கண்களை மூடி நின்றிருந்த ஜேம்ஸுக்கு, கோதை பாடலை பாடி முடித்ததும் வியாகேசும் வஞ்சியும் வேகமாகக் கை தட்ட தான் சுற்றுப்புறம் புரிந்தது.

மீண்டும் ஒரு முறை கோதையைப் பார்த்தவன் அடுத்த கணமே சுவற்றில் கையால் குத்தி விட்டு அங்கிருந்து வேகமாகத் தன்னறைக்குப் போய் விட்டான்.

கோதையிடம் செபமாலையையும் எலிசபெத்தையும் பார்க்கும் பொறுப்பை கொடுத்து இன்றோடு எட்டு தினங்கள் ஆகிவிட்டிருந்தது.

எட்டு தினங்களிலுமே அவர்கள் இருவரையும் உணவு உண்ண வைக்கவும், உறங்க வைக்கவும், குளிப்பாட்டவும் என்று கோதை கையிலெடுத்த மாய மந்திரம் பாடல் மட்டுமே, அவள் பாட்டுப் பாடி முடித்ததுமே இரண்டு பெண்மணிகளும் சமத்தாக நடந்து கொள்வதைப் பார்க்க கோதைக்கு சந்தோஷமாகத் தான் இருந்தது.

ஆரம்பத்தில் மூன்று நாட்களும் குளிப்பதற்கும், உணவு உண்பதற்கும் கொஞ்சம் முரண்டு பிடித்த செபமாலையும், எலிசபெத்தும் கோதையின் பாடல்களை கேட்டதும் சாதாரணமாகி விட்டார்கள். அதன்பின்னர் அவளது பாடலைக் கேட்பதற்காகவே முரண்டு பிடிக்கவும் தொடங்கி விட்டார்கள்.

அதை நாளடைவில் கோதையும் புரிந்து கொள்ள, அவள் அவர்களுக்குச் செய்த வேலைகள் சுமுகமாகவே போகத் தொடங்கியது.

இந்த எட்டுத் தினங்களுமே கோதை பாடிய பாடல்களைக் கண்டுங் காணாததும் போல, ஜேம்ஸ் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான். அவனுக்குமே அவளது பாடல்களைக் கேட்கையில் ஆரம்பத்தில் எரிச்சலாகவும் கடுப்பாகவும் இருந்தாலும், அடுத்தடுத்த தினங்களில் அவனுக்கு அந்த எரிச்சலும் கடுப்பும் போன இடமே தெரியவில்லை.

அதன் பிறகு அவள் பாடத் தொடங்கினாலே எங்கிருந்தாலும் தன்னை அறியாமலே வந்து அவள் பாடுவதே பார்த்துக் கொண்டிருப்பான். அதுபோலத்தான் இப்போதும் அவள் பாடலை பாடிய போது, மாடியில் இருந்த சாளரத்தின் வழியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்.

பொதுவாக பெண்களை கண்டாலே ஜேம்ஸுக்கு சுத்தமாக ஆகாது. பெண்கள் என்றாலே விலகி விலகி இருப்பான். அவன் முதன்முறையாக தன்னை அறியாமல் கவனித்துப் பார்க்கும் ஒரு பெண்ணாக கோதை தான் இருந்தாள். தான் ஒரு பெண்ணை கவனிக்கிறேன் என்பது அவனுக்கே தெரியாத உண்மை.

அதிலும் இன்னொரு விடயம் என்னவென்றால், கோதை பாடுவதை கவனித்துப் பார்க்கும் ஜேம்ஸுக்கு, அடுத்த சில நொடிகளிலேயே அவள் தில்லையம்பலத்தினால் அனுப்பி வைக்கப் பட்டவள் என்ற நினைவு வந்து கோபம் தலைக்கேறும். உடனே பக்கத்தில் இருக்கும் பொருளைத் தூக்கி அடித்து விட்டுப் போவான். அல்லாது போனால் கையை மடக்கி சுவற்றிலே குத்தி விட்டுப் போவான்.

வெளியே இருந்து பாட்டு பாடிக்கொண்டும் சிரித்துப் பேசிக் கொண்டுமிருந்தவளை நோக்கி வேகமாக வந்த ரகுமான்
“ஐயா சூடாத் தேத்தண்ணி வேணுமாம்.. வந்து போட்டுக் குடுங்கோ..”
என்று சொல்ல,
“அப்பா.. அண்ணாச்சி.. பிறகு சந்திப்பம் இப்ப கடமை என்னை அழைக்கிறது..”
என்றபடி கோதை எழுந்து கொண்டாள்.

உள்ளே சென்று தேநீர் தயாரித்தவள், அதைக் கொண்டு வந்து ரகுமானிடம் நீட்டினாள்.

“தேத்தண்ணி எனக்கில்லை.. ஐயாவுக்கு..”

“ஓம் தெரியும்..”

“பிறகு என்னட்டைக் கொண்டு வந்து தாறியள்..”

“இல்லை.. நீங்கள் கொண்டு போய்க் குடுங்கோ அது தான் உங்களிட்டைத் தந்தனான்..”

“இல்லை.. ஐயா நான் கொண்டு போனால் கோபமாயிடுவார்.. நீங்களே கொண்டு போங்கோ..”

“நானோ..”

“ஓம் நீங்கள் தான்.. அவர் என்ன வேலை சொன்னாலும் அதை முழுசாச் செய்யோணும் இடையில ஆரும் புகுந்தால் ஐயாவுக்கு கோபம் வரும்..”

“உங்கடை கொய்யாவுக்கு கோபம் வர ஒரு சாக்கு வேணும் அது தானே..”

“என்ன..”

“இல்லை ஆத்திக் கொண்டு போகவோ ஆத்தாமல் கொண்டு போகவோ எண்டு கேட்டன்..”

“ஐயாவுக்கு சூடாத் தான் பிடிக்கும்.. ஆத்தாமல் கொண்டு போங்கோ..”

“சரி நானே கொண்டு போறன்..”
என்ற கோதை, மாடிக்குப் போக மாடியில் எங்குமே அவனைக் காணவில்லை.

மாடியின் விளிம்பில் நின்று கீழே எட்டிப் பார்த்த கோதை
“இசைப்புயல் சார்.. உங்கடை ஐயாவை மேல காணேல்லையே.. அவரைத் தேடிப் புடிக்க முதல் தேத்தண்ணி ஆறிடுமே என்ன செய்ய..”
என்று கிட்டத்தட்ட கத்த, திடுக்கிட்டுப் போய் அண்ணாந்து பார்த்த ரகுமான், அவளையே ஒரு நொடி பார்த்து விட்டு, கீழே இருந்த ஏதோவொன்றை அழுத்தினான்.

அடுத்த நிமிடமே தன் அறைக்குள் இருந்து வெளியே வந்த ஜேம்ஸ், மாடியின் வராண்டாவில் போடப் பட்டிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொள்ள, அவனைத் திரும்பிப் பார்த்த கோதை
“ஓஹோ.. கீழ இருக்கிற அந்தப் பொத்தானை அமுக்கினால் தான் ஐயா வெளியால வருவார் போல.. இனித் தேடிக் கஷ்டப் படாமல் அதையே அமுக்குவம்..”
எனத் தனக்குள் சொல்லியபடி அவனை நோக்கிச் சென்று தேநீர்க் கோப்பையை நீட்டினாள்.

வழமை போல தனது நீல விழிகள் சுருங்க அவளைப் பார்த்தவன், தேநீர் கோப்பையை வாங்கிவிட்டு கோப்பையையும் அவள் முகத்தையும் ஒரு நொடி பார்த்து விட்டு, சட்டென்று அவள் எதிர்பாராத நேரத்தில் தேநீர் கோப்பையை விட்டெறிந்தான். அவன் விட்டெறிந்த வேகத்தில் தேநீர் கோப்பை படீரென்று சிதறி சூடான தேநீர் அவளது கால்களிலும் தெறித்தது.

ஏற்கனவே செம சூடாக இருந்த தேநீர் அவளது கால்களில் பட்டவுடன் அந்தச் சூடு தாங்காமல் கோதை கால்களை உதறவே, அவளின் முகத்தில் தெரிந்த சுணக்கத்தில் ஜேம்ஸின் முகத்தில் ஒரு திருப்தி பரவினாலும், மறு நொடியே அவனது முகத்தில் கடுமை வந்து குடியேறியது. அதனால் சோபாவை வேகமாகத் தள்ளி விட்டு அவன் எழுந்து போய் விட்டான்.

சற்றும் எதிர்பாராத அந்த செயலில் கோதை கொஞ்சமே கொஞ்சம் அதிர்ந்து போய் நின்றாலும், சில நொடிகளிலேயே சாதாரண நிலைக்கு மீண்டு கொண்டாள்.

கீழே சிதறிக் கிடந்த தேநீர் கோப்பையின் உடைந்த துண்டுகளை மெல்ல பொறுக்கி விட்டு
“சரியான பைத்தியமா இருப்பான் போல.. ஒண்டில் தேத்தண்ணியை நீட்டினால் குறுகுறுண்டு பாக்கிறது.. இல்லாட்டி போனால் தேத்தண்ணிக் கப்பைத் தூக்கி அடிக்கிறது.. என்ன பிறவியோ இனிமேல் எதுக்கும் என்ன குடுக்கிறது என்டாலும் நாலடி தள்ளி நிண்டே குடுப்பம்.. அது தான் நமக்கு பாதுகாப்பு..”
என்று முணுமுணுத்துக் கொண்டே மாடியை விட்டுக் கீழே இறங்கி வந்தவள், கீழே நின்றிருந்த ரகுமானை முறைத்தபடியே சமையலறையினுள் புகுந்து கொண்டாள்.

அதே நேரம் ரஹ்மானுக்கு பக்கத்தில் நின்றிருந்த தேவா கோதையின் முறைப்பைப் பார்த்து விட்டான்.

“என்ன ரகு.. புது மிஸ் உன்னையப் பாத்து முறைச்சுக் கொண்டு போறா..”

“ஓம் ஓம்.. அது ஐயாவுக்கு தேத்தண்ணி கொண்டு போகச் சொன்னான்..”

“சரி..”

“அவா.. அதை என்னட்டைக் கொண்டு வந்து குடுத்து.. என்னைய ஐயாட்டை கொண்டு போய்க் குடுக்கச் சொல்லிச் சொன்னா..”

“சரி..”

“நான் சொன்னன் ஐயாவுக்கு கோபம் வரும் நீங்களே கொண்டு போய்க் குடுங்கோ எண்டு..”

“சரி..”

“அப்ப அவா கொண்டு போனவா.. அவா போன கொஞ்ச நேரத்திலயே மேல ஏதோ விழுந்து சிதறுற சத்தங் கேட்டது..”

“சரி..”

“ஐயா தான் தேத்தண்ணிக் கப்பை போட்டு உடைச்சிட்டார் போல.. அதைப் பொறுக்கிக் கொண்டு போறா.. அவா கேக்கேக்குள்ள நான் போகேல்லை தானே.. அது தான் போற போக்கில என்னையப் பாத்து அந்த முறைப்பு..”

“சரி..”

“என்ன எருமை..”

“சரி..”

“கொல்லுவன்டா நாதாரி..”
என்று கொண்டு தேவாவை ரகுமான் துரத்த, எதேச்சையாக வெளியே வந்த கோதை ரகுமானது செயலைப் பார்த்து விட்டாள்.

“உந்த அலவாங்கு விழுங்கிக்கு உப்புடிக் கதைக்கக் கூடத் தெரியுமோ.. ஏதோ என்னைப் பாத்தால் மட்டும் தான் முடுக்கி விட்ட பொம்மை மாதிரி.. ஐயா வரட்டாம் கொய்யா வரட்டாம் எண்டு கொண்டு நிப்பார் போல.. எல்லாம் என்ரை நேரம்.. இங்கினை வந்து மாட்டிக் கொண்டன்.. ஒவ்வொண்டும் ஒவ்வொரு தினுசாக் கிடக்குது.. ஏதோ கஷ்டத்துக்கையும் ஒரு சந்தோஷம் போல அப்பாவும் அண்ணாச்சியும் எனக்கு கிடைச்சிருக்கினம் அதுவே போதும்..”
என முணுமுணுத்தவள் தன் வேலைகளில் மூழ்கி விட்டாள்.

தன்னை மறந்து செபமாலைக்கும் எலிசபெத்துக்குமான வேலைகளை செய்து கொண்டிருந்த கோதை, எதேச்சையாக நிமிர்ந்து சுவர்க் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க அது நேரம் இரவு எட்டு என்பதை காட்டிக் கொண்டிருந்தது.

“ஆத்தி இம்புட்டு நேரமாவா வேலை செய்து கொண்டிருக்கிறன் நேரம் போனதே தெரியேல்லை..”
என முணுமுணுத்த கோதை, செபமாலைக்கும், எலிசபெத்துக்குமான உணவை கொண்டு வந்து அவர்களுக்கு ஊட்டி விட்டு, வியாகேசுக்கும் வஞ்சிக்குமான இரவு உணவை கொண்டு சென்று கொடுத்துவிட்டு, அவர்களோடும் சிறிது நேரம் இருந்து அரட்டை அடித்து விட்டு மீண்டும் பங்களாவினுள் வந்தாள்.

இத்தனை நாட்களும் மாடியில் இருந்த வலது பக்க அறையில் இரவு தூங்கிக் கொண்ட கோதை, இன்று ஏனோ செபமாலையும் எலிசபெத்தும்  இருந்த அறையினுள் தூங்கலாம் என முடிவெடுத்து அந்த அறையினுள் நுழைந்து உட்பக்கமாகத் தாழ்ப்பாளைப் போடவே, செபமாலை அதிர்ந்து போய் அவளைப் பார்த்தார்.

கீழ்க் கண்ணால் செபமாலையின் அதிர்ந்த முகத்தை பார்த்த கோதை, ஒரு நொடி தயங்கினாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல், அந்த அறையில் செபமாலை இருந்த மூலைக்கு நேர் எதிரான மூலையில் இருந்த பீரோவுக்கு அடுத்த பக்கத்தில் பாய் போட்டு படுத்துக் கொண்டாள்.

கோதைக்கு இருட்டு என்றால் பயம் என்பதால், அந்த அறையில் மெல்லிய ஒளியைக் கசியும் மின்குமிழை வியாகேசின் தயவால் போட்டிருந்தாள் கோதை. அதனால் அவளுக்கு அந்த அறையினுள் தூங்குவது அத்தனை பயமாக இருக்கவில்லை.

இன்று காலையில் எழுந்தவுடன் வழமை போல, தன் சிறிய மரபெட்டிக்குள் பத்திரமாக வைத்திருக்கும் அம்மன் சிலையை எடுத்து அதை கும்பிடும்போது, இன்று இரவு இரண்டு பெண்மணிகளும் இருக்கும் அறைக்குள் தூங்கலாம் என்கிற எண்ணம் அவளை அறியாமலேயே அவள் மனதில் உதித்தது என்பது உண்மை.

அவளது ஆழ் மனதிலும் அதே எண்ணம் தோன்றிக் கொண்டிருந்ததால் அந்த அறைக்குள் வந்து படுத்துக் கொண்டாள்.

சட்டென்று பார்க்கும்போது அறைக்குள் கோதை படுத்திருப்பது தெரியவேயில்லை. படுத்தவாக்கிலேயே மேலே விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த கோதை, எதற்காக அம்மாச்சி தான் அறையினுள் வந்து உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டதும் அதிர்ந்து போய் பார்த்தார் என்ன காரணமாக இருக்கும், என அதையே யோசித்தபடி சில நிமிடங்களில் வேலை செய்த அசதியில் அவள் தூங்கி விட, அந்த இடமே அமைதியைத் தத்தெடுத்துக் கொண்டது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!