அசுரனின் குறிஞ்சி மலரே.. 17

4.9
(10)

குறிஞ்சி மலர்.. 17

ஜேம்ஸ்பீட்டரின் அறை வாசலில் நின்று அவனது கதவை ஓங்கித் தட்டிக் கொண்டிருந்தாள் கோதை.

அவளுக்கு பின்னால் நின்றிருந்த தேவாவுக்கு பயத்தில் வியர்த்துக் கொட்ட, ரகுமானோ அவளின் பக்கம் ஓடி வந்து
“இந்தாம்மா இப்ப எதுக்கு ஐயாவிந்தை கதவை உப்புடித் தட்டுறியள்.. ஐயாவுக்கு கோபம் வரப் போகுது..”
என தன் பதட்டத்தை மறைத்தபடி சொல்ல, வேகமாக அவனைத் திரும்பிப் பார்த்தவளின் பார்வையில் அவன் சட்டென்று வாயை மூடிக் கொண்டான்.

“உங்கடை கொய்யாவுக்கு இல்லாட்டிக்கு மட்டும் கோபம் வந்ததில்லை தானே.. நெத்தியில ஒரு கண் இல்லாதது தான் குறை.. இல்லாட்டிக்கு பொசுக்கு பொசுக்கெண்டு எரிச்சு சாம்பலாக்கிட்டு ஆள் போய்க் கொண்டே இருக்கும்..”
எனச் சொல்லிக் கொண்டே திரும்பியவள், அடுத்த தட்டுத் தட்டக் கையை ஓங்கவும் சட்டென்று கதவு வேகமாகத் திறக்கப் படவே, ஓங்கிய அவளது வலது கை வாசலில் நின்றிருந்த ஜேம்ஸ்ஸின் நெஞ்சில் வேகமாகப் பதிந்தது.

அதைக் கோதை எதிர்பார்க்கவில்லை என்பதால், அவனது நெஞ்சில் கை வைத்தபடி அப்படியே நிற்க, அவனோ தன் நெஞ்சில் பதிந்திருந்த அவளது கரத்தை தன் கரத்தால் இறுகப் பற்றி
“என்ன விசியம்..”
என்று அழுத்தமான குரலில் கேட்க, கோதையோ தலைசுற்றிக் கீழே விழப் போனாள். அப்போது தான் அங்கே வந்து கொண்டிருந்த வியாகேசு ஓடி வந்து அவளைத் தாங்கிக் கொண்டார்.

“நீ உள்ள போ பீட்டரு.. என்ன ஏதெண்டு நான் விசாரிக்கிறன்..”
என ஜேம்ஸை பார்த்து வியாகேசு சொல்ல, அவனோ வியாகேசின் பிடியில் சரிந்து கிடந்த கோதையை ஒரு பார்வை பார்த்து விட்டே உள்ளே போனான்.

ஜேம்ஸ் அறைக் கதவை மூடியவுடன், தன் கையில் கிடந்தவளை மெல்லத் தட்டி எழுப்பினார் கோதை. பேந்தப் பேந்த விழித்தபடி கண்களைத் திறந்து
“அசுரன் போயிட்டானா..”
என்று கேட்க, வியாகேசோ அவளை இழுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு போனார்.

“அசுரனோ.. ஆர் பிள்ளை அது..”

“உங்கடை முதலாளி தான்..”

“ஆர் பீட்டரைச் சொல்லுறியோ..”

“ஓம் அந்தக் குவாட்டரைத் தான் சொல்லுறன்..”

“ஏன் பிள்ளை அவனைப் பாக்க அசுரன் போலயோ இருக்குது.. சரி அதை விடு ஏன் அவன்ரை அறைக் கதவை அந்தத் தட்டுத் தட்டின்னீ.. பிறகு ஏன் மயங்கி விழுந்தனீ..”

“அசுரனை நாக்குப் பிடுங்கிக் கொள்ளுற மாதிரி ரெண்டு கேள்வி கேப்பம் எண்டு தான் வந்தனான்.. அது தான் அப்புடி ஒரு வேகத்துல கதவைத் தட்டிப் போட்டன்.. ஆளைப் பாத்ததும் ஒண்டுமே மண்டைக்குள்ள ஓடேல்லை..”

“சரி ஏன் மயங்கினீ..”

“அது மயக்கம் இல்லையப்பா..”

“அப்ப பின்ன என்ன..”

“பயம்..”

“பயமோ உனக்கோ..”

“ஓம் அந்தாள் திடுதிப்பெண்டு கதவைத் திறந்து என்ன விசியம் எண்டு கேட்ட உடனே.. என்ன விசியம் கேக்க வந்தனான் எண்டுறதையே மறந்திட்டன்.. அதோட அவர் ஒரு வார்த்தை கதைச்சுக் கூட நான் பாத்ததே இல்லை.. அதனாலயும் திடுதிப்பெண்டு அந்த அழுத்தமான குரலைக் கேட்டதுமே தலை கிறுகிறுத்துப் போயிட்டுது..”

“நல்ல பிள்ளை நீ.. நானும் ஏதவோ தைரியமான ஆளெண்டு உன்னை நினைக்க.. நீயென்ன அவனிந்தை குரலை எல்லாங் கேட்டு மயங்கி விழுறாய்..”

“சும்மா போங்கோப்போ அந்தாளைப் பாத்தாலே எனக்குப் பயந்து பயந்து வருது.. ஏதோ ஒரு வேகத்துல போய்க் கதவைத் தட்டியிட்டன்..”

“சரி அவனிட்டைச் சொல்லுற அளவுக்கு அப்புடி என்ன பிள்ளை விசியம்..”

“சொல்லுறன் சொல்லுறன்.. இப்புடி வந்து காதைக் காட்டுங்கோ..”

“ரொம்ப பெரிய ரகசியமோ..”

“ஓமப்பா.. ஆனா இரகசியம் சொல்ல முதல் எனக்கு இந்த மயக்கம் வார மாதிரி குழுசை ஏதாவது வாங்கித் தாறியளோ..”

“ஏன் பிள்ளை ஆரை மயங்க வைக்கப் போறாய்..”

“இந்த வீட்டுக்குள்ள சில விஷக்கிருமியள் இருக்கு.. அதுகளைத் தான்..”

“பிள்ளை எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை..”

“சரி நானே விளங்கிற மாதிரி சொல்லுறன்.. இந்த இடத்துக்கு ஆரும் இப்ப வருவினமே.. இது வேறை ஆருக்கும் தெரியக் கூடாது..”

“இப்ப ஒருத்தரும் வர மாட்டினம் சொல்லு..”

“அப்பா.. நேத்தைக்கு ராவு நான் அசுரனிந்தை அம்மாவும் அப்பம்மாவும் இருக்கிற அறைக்குள்ள தான் படுத்தனான்..”

“அடி அறிவு கெட்டவளே.. அங்கினை ஏன் படுத்தனீ.. ஏதும் உனக்கு ஆகி இருந்தால்..”

“அங்கினை படுத்ததால தான் நிறைய விசியமே வெளிச்சத்துக்கு வந்திருக்குது.. முதல்ல குறுக்கால கதைக்காமல் நான் சொல்லுறதை முழுசாக் கேளுங்கோ..”

“சரி சொல்லு..”

“அப்பா.. நீங்கள் நினைக்கிறது போல உங்கடை முதலாளியிந்தை அம்மாவும் அப்பம்மாவும் மனநோயாளியள் இல்லை.. அவை புத்திசுவாதீனத்தோட தான் இருக்கிறினம்..”

“என்ன பிள்ளை சொல்லுறாய்.. எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை..”

“விளங்குறபடியே சொல்லுறன்..”

“இந்த வீட்டுல வீட்டுக்கு பெரியவங்கள் எண்டுற பேரில ரெண்டு பன்னாடையள் சுத்தீட்டு இருக்குதுகளே அதுகளை நீங்கள் கவனிச்சு பாத்து இருக்கிறியளோ.. அவையளில ஏதவோ களவு இருக்கிற மாதிரியே எனக்கு தோணிக் கொண்டே இருக்கும்..”

“ஆர் அல்போன்ஸையும் ஜோசப்பையும் சொல்லுறியோ..”

“ஓம் ஓம் அதுகள் தானப்பா.. டக்கெண்டு எனக்கு அதுகளிந்தை பேர் வரேல்லை அவை தான் அவை தான்.. அவை ரெண்டு பேரும் தான் அந்த உங்கடை முதலாளியிந்தை அம்மாவுக்கும் அப்பம்மாவுக்கும் போதை ஊசி ஏத்தி மனநோயாளியள் போல வைச்சிருக்கிறினம்..”

“என்னடி பிள்ளை சொல்லுறாய்.. உனக்கெப்புடி தெரியும்.. உவ்வளவு உறுதியாய் சொல்லுறாய்.. அவங்களும் அப்புடிச் செய்யக் கூடிய ஆக்கள் தான்..”

“ஆதாரங் காட்டினால் நம்புவியளோ..”

“ஆதாரம் இல்லாமலே உன்னை நம்புவன்.. ஆனால் இந்த விசியம் கொஞ்சம் பயங்கரமா இருக்குது.. ஆதாரம் இருந்தால் காட்டன்..”

“சரி காட்டுறன்.. ஆனால் ஒண்டு இனி தான் நானே ஆதாரத்தை கண்டு பிடிக்க போறன்..”

“என்னாது..”

“பொறுங்கோ அதுக்குள்ள கடுப்பாகாதேங்கோ.. நீங்கள் எனக்கு கொஞ்சம் உதவி செய்யோணும்.. இப்போ கொஞ்சம் என்னோட குசினிக்கு வாரியளோ..”

“குசினியோ அப்புடியெண்டால்..”

“என்ன குசினியெண்டால் என்னெண்டு தெரியாதோ..”

“தெரியாது எண்டதால தானே கேக்கிறன்..”

“அச்சோ மக்கு அப்பா.. குசினியெண்டால் சமையலறை..”

“ஓ அதுக்கு அப்புடி வேறை ஒரு பேரு இருக்கோ..”

“இருக்கு.. இப்ப வாங்கோவன்..”
என்று கொண்டு, வியாகேசை சமையலறைக்குள் அழைத்துச் சென்றாள் கோதை.

கோதை கேட்ட மயக்க மாத்திரைகளை, வஞ்சியிடம் சொல்லி வியாகேசு எடுத்து வர வைத்து கோதையிடம் கொடுக்க, அதை வேகமாக மூன்று பழச்சாற்றுக் கோப்பைகளில் போட்டு, அதனுள் பழச்சாற்றை விட்டு கலக்கினாள்.

வஞ்சியும் வியாகேசும் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஓரமாக நிற்க, வஞ்சி ஜாடையில் என்னவென்பது போல வியாகேசைக் கேட்க, அவரோ கொஞ்சம் பொறு என்பது போல தானும் ஜாடை காட்டி விட்டு கோதையின் செயல்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

மாத்திரையை போட்டு அதனை நன்றாகக் கலக்கி முடித்த கோதை, கைகளை தட்டிக் கொண்டு இருவரையும் பார்த்தாள்.

“இப்ப இந்த யூஸை அந்த அல்போன்ஸுக்கும் ஜோசப்புக்கும் அப்புறம் இங்கினை சுத்திட்டு திரியுமே ஒரு அடங்காப் பிடாரி அதுக்கும் குடுக்கோணும்.. அப்பா ஆரையாவது மூண்டு பேரைக் கூப்பிடுங்கோ..”
என்று வியாகேசுக்கு சொல்ல, அவள் சொல்வதே வேதவாக்கு என்பது போல, பணியாளர்கள் மூவரை அழைத்து அந்த பழச்சாறை கொடுத்து அனுப்பி விட்டார் வியாகேசு.

பணியாளர்கள் வெற்று பழச்சாற்றுக் கோப்பைகளைக் கொண்டு வந்து கொடுக்கும் வரை, குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த கோதையைப் பார்த்துக் கொண்டிருந்த வியாகேசும் வஞ்சியும் எந்தக் கேள்வியையுமே கேட்கவில்லை.

அப்படியே அரை மணி நேரம் கடந்த நிலையில், இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்த கோதை, அல்போன்ஸ், ஜோசப் மற்றும் மேரி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை முதலில் நோட்டம் பார்த்தாள்.

அதன்படி மூவருமே அவரவர் அறையில் படுத்து கிடந்திருந்தார்கள். பணியாளர்களிடம் என்ன ஏதென்று விசாரித்த போது, தங்களுக்கு தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு போனார்கள் என்ற கூடுதல் தகவல் கிடைத்தது.

அதைக் கேட்ட உடனேயே வியாகேசையும் வஞ்சியையும் அழைத்துக் கொண்டு செபமாலையும் எலிசபெத்தும் இருந்த அறைக்கு வேகமாக ஓடினாள் கோதை.

எதேச்சையாக வெளியே வந்த ஜேம்ஸ் அவளது செயலைத்தான் கண்கள் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை தானும் அவர்களோடு அந்த அறையினுள் நுழைந்து கொண்டான்.

தன் பின்னோடு வந்தவர்களை திரும்பிப் பார்த்து ஏதோ சொல்வதற்கு வாயெடுத்த கோதை, அப்போதுதான் அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த ஜேம்ஸை பார்த்தாள். அவனைப் பார்த்த உடனேயே அவளுக்கு வார்த்தைகள் வெளி வர சிரமப்பட்டது.

“சொல்லு பிள்ளை இப்பவாச்சும் என்ன ஐடியா போட்டு வைச்சிருக்கிறாய் என்று தெளிவாச் சொல்லு..”
என வியாகேசு அவளைப் பார்த்துக் கேட்க, அவ்ளோ என்ன சொல்வது என்பது போல பின்னால் நின்றிருந்த ஜேம்ஸைத் தான் விழி விரியப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பார்வையில் எதையோ உணர்ந்து திரும்பிப் பார்த்த வியாகேசும், தங்களுக்கு பின்னால் நின்றிருந்த ஜேம்ஸைப் பார்த்து விட்டார்.

வியாகேசின் கைகளைப் பிடித்துக் கொண்டு, அவருக்கு பின்னால் மெல்லத் தன்னை மறைத்துக் கொண்ட கோதை
“அப்பா.. உவரைப் போகச் சொல்லுங்கோ.. உவரைப் பாத்த உடனேயே எனக்கு என்ன செய்ய வந்தனான் எண்டுறது மறந்து மறந்து வருது..”
என முணுமுணுக்க, அந்த முணுமுணுப்பு ஜேம்ஸின் காதுகளில் தெளிவாகப் புகுந்து கொண்டது.

தன் தலைவனைப் பார்த்து விட்ட வஞ்சி, அரச பாணியில் ஓரடி பின்னுக்குப் போய் கைகளைக் கட்டிக் கொள்ள, அதை பார்த்த கோதைக்கு சிரிப்பதா அழுவதா என்பதே தெரியவில்லை.

வியாகேசின் பின்னால் பாதி மறைந்தபடி நின்றிருந்தவளை, அழுத்தமான ஒரு பார்வை பார்த்தவன், அதன் பிறகே தன் தாயையும் அப்பம்மாவையும் பார்த்தான்.

எப்போதும் அழுக்குப் படிந்து பயங்கரமாக இருக்கும் இருவரும், பளிச்சென்ற தோற்றத்தோடு படுத்திருந்ததைப் பார்த்தவனது நீல விழிகள் வழமை போல சுருங்க, அவன் வேகமாகத் திரும்பிக் கோதையைப் பார்த்தான்.

அவனது அந்தப் பார்வையில், ஏற்கனவே வியாகேசின் பின்னால் பாதி மறைந்திருந்தவள் தன்னை முழுவதுமாக மறைத்துக் கொள்ள, ஒரு நொடி தயங்கிய ஜேம்ஸ் வேகமாக வெளியே போய் விட்டான்.

அவன் போன பிற்பாடு தான் கோதைக்கு மூச்சே வந்தது. தன்னை ஒருவாறு ஆசுவாசப் படுத்திய வண்ணம் நின்றவளிடம், வியாகேசு அங்கே தங்களை ஏன் அழைத்து வந்தாய் என்று கேட்க, அப்போது தான் அவளுக்கு அங்கே ஏன் வந்தோம் என்ற எண்ணமே வந்தது.

ஜேம்ஸ் போன பாதையை எட்டிப் பார்த்து விட்டு, சட்டென்று அறையை உட்பக்கமாகத் தாழ்ப்பாள் போட்டவள், வேகமாக ஓடிப் போய் அந்தத் தேக்கு மரக் கட்டிலின் கீழே குனிந்து பார்த்தாள். சட்டென்று எதுவுமே அவளுக்குப் புலப்படவில்லை.

அவளாக ஏதாவது சொல்லுவாள் அதுவரை பேசாமல் நிற்போம் என்ற எண்ணத்தில், அவளது செயலையே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள் வியாகேசும் வஞ்சியும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!