குறிஞ்சி மலர்.. 18
தேக்குமரக் கட்டிலுக்குக் கீழே லேசாக இருளாக இருக்க, மெல்லக் கையை விட்டு அங்கே ஏதேனும் பாதை தென்படுகிறதா என்பது போல கோதை தடவிப் பார்த்தாள்.
முதலில் ஒன்றுமே அவளது கண்களுக்குத் தெரியவுமில்லை, அவளது கைகளுக்குத் தட்டுப்படவும் இல்லை. ஆனாலும் அல்போன்ஸும் ஜோசப்பும் இங்கிருந்து தானே வெளியே வந்தார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்தவளால், அத்தனை சீக்கிரம் அங்கே ஒன்றுமேயில்லை என்ற எண்ணத்துடன் விட்டுப் போக முடியவில்லை.
நன்றாகத் தரையோடு தரையாகப் படுத்துக் கொண்டு, மீண்டும் கையை வைத்து நன்றாகத் தடவிப் பார்த்தவளை ஏமாற்றாமல், சற்றே உட்புறமாக ஏதோ தட்டுப் பட்டது.
நன்றாக தலையை கட்டிலின் கீழ்ப்புறமாக நீட்டி பார்த்தவளுக்கு, கதவுப் பிடிபோல் ஒரு அமைப்பு கண்ணுக்கு புலப்பட்டது. அவ்வளவுதான் அதை பார்த்ததுமே ஏதோ புதயலை கண்டு விட்டது போல கோதைக்கு உற்சாகம் வரவே, பக்கத்தில் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வியாகேசையும், வஞ்சியையும் அருகில் வருமாறு கையால் ஜாடை காட்டினாள்.
அவளது முகத்தில் தெரிந்த உற்சாகத்தில் அவள் எதையோ கண்டு கொண்டு விட்டாள் என்பதை புரிந்து கொண்ட வியாகேசு, கொஞ்சம் சிரமப்பட்டு தானும் கீழே குனிந்து அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.
“என்ன பிள்ளை.. ஏதும் கிடக்குதோ கீழ..”
“ஓமப்பா.. கதவுப் பிடிபோல ஒண்டு கிடக்கு..”
“எங்க விலத்து பாப்பம்..”
என்று கொண்டு கோதையை விலக்கிவிட்டு தான் கீழே குனிந்து பார்த்தார் வியாகேசு.
அவரது பார்வைக்கும் அந்த கைப்பிடி நன்றாகவே பளிச்சென்று தெரிந்தது. தன் பலம் கொண்ட மட்டும் அந்த கைப்பிடியை அந்தப் பக்கமும் இந்த பக்கமும் அசைத்துப் பார்த்தார். அவருக்கு பெரிய சிரமம் கொடுக்காமல் அவர் அசைத்த அசைப்பில், ஒரு ஆள் நுழைகின்ற அளவுக்கு ஒரு துவாரம் அந்தக் கட்டிலின் கீழே தோன்றியது.
பின்னால் நின்றிருந்த கோதையையும் வஞ்சியையும் ஒரு நொடி பார்த்தவர், சட்டென்று தன் வேஷ்டியை சண்டிக்கட்டு போல கட்டிக் கொண்டு, அந்த துவாரத்திற்குள் நுழைந்து விட்டார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த கோதையும் புடவையை இழுத்துச் செருகியபடி தானும் அதற்குள் நுழைந்து கொள்ள, சற்றே தள்ளி நின்று இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வஞ்சியும் அவர்களோடு இணைந்து கொண்டான்.
முதலில் நுழைந்த வியாகேசுக்கு இருளில் ஒன்றும் தெரியவில்லை. அதே நிலை தான் கோதைக்கும், ஆனால் அவர்களுக்குப் பின்னால் மூன்றாவதாக உள்ளே நுழைந்த வஞ்சியோ, கையில் அலைபேசியின் வெளிச்சத்தைத் தூக்கிப் பிடிக்க, முன்னே பாதை நன்கு தெரிந்தது.
அப்போது தான் இருவரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களைப் பார்த்ததும் தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி வஞ்சி ஏதோ சொல்ல வர, தன் வாயில் கை வைத்து அவனை நோக்கி அதைத் திருப்பிக் காட்டி, போதும் பொத்து என்பது போலச் சைகையில் காட்டி விட்டு, அவனது தொலைபேசியைப் பிடுங்கிக் கொண்டு முன்னால் நடக்கத் தொடங்கினாள் கோதை.
அவர்கள் இருவரும் அந்தப் பாதை முடிவை அறிவதில் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த வஞ்சியும் தன் குறும்புத்தனத்தை மூட்டை கட்டி ஓரமாக வைத்து விட்டு, அவர்கள் பின்னே மெல்ல மெல்ல நகரத் தொடங்கினான்.
ஒருவருடன் ஒருவர் பேசாமல், மெல்ல மெல்ல நகர்ந்தவர்கள் சரியாக ஐந்து நிமிடத்தில் இன்னொரு கதவின் பிடிக்கருகே வந்து நின்றார்கள். கோதை உற்சாகத்தில் அதைத் திறக்கப் போக, அவளது கையைப் பிடித்து தடுத்த வியாகேசு, மேலே தெரிந்த இன்னொரு கதவுப் பிடியைக் காட்டினார்.
அவர் சுட்டிக் காட்டிய கதவுப் பிடியை அப்போது தான் பார்த்த கோதை, தலையைச் சொறிந்து கொண்டு அவரைப் பார்த்தாள்.
“இதுல ரெண்டு கதவு இருக்குதே.. இப்ப என்ன செய்யப்பா..”
“ஓம் என்ன..”
“நான் ஒண்டைத் திறந்து போறன்.. நீங்கள் ஒண்டைத் திறந்து போங்கோ.. வஞ்சி வேறை கதவேதும் இருக்குதோண்டு பாக்கட்டும்..”
“சரி.. நீ வலப் பக்கம் போ.. நான் இந்த இடப் பக்கக் கதவைப் பாக்கிறன்.. பிள்ளை கவனமடி.. பாத்துப் பத்திரமா உள்ளட்டுப் பாரு.. அந்தக் கிராதகன்கள் என்னென்ன பொறி வைச்சிக்காங்களோண்டு தெரியாது.. தம்பி டேய் நீ வேறை ஏதாச்சும் கதவு இருக்கோண்டு பாரு..”
என்று கொண்டு, வியாகேசு இடப் பக்கக் கதவைத் திறக்க முயல, அதற்குள் வலது பக்கத்திலே மேலே இருந்த கதவைத் தட்டுத் தடுமாறித் திறந்திருந்தாள் கோதை.
கதவைத் திறந்தவளுக்கு அதனூடாக எப்படி மேலே போவதென்று தெரியவில்லை. இருளில் தான் நின்ற இடத்தில் படிகள் இல்லை என்பதைக் கண்டு கொண்டவள், தன் உயரத்தை விடவும் கொஞ்சம் அதிகமான உயரத்தில் இருந்த கதவை அண்ணாந்து பார்த்தாள். வளர்ந்து கெட்டதுகள் ஏறிக் குதிப்பதற்கு மாத்திரமே அந்தக் கதவு அமைக்கப் பட்டிருக்கிறது என்பதைச் சலிப்போடு பார்த்தவள், அந்தக் கதவை அடைய என்ன வழியென்று யோசனை செய்தபடி சுற்றும் முற்றும் பார்க்க, அவளது பார்வையில், அலைபேசியின் வெளிச்சத்தில் அங்குமிங்கும் வேறு ஏதேனும் கதவுகள் இருக்கிறதா என தேடிக்கொண்டிருந்த வஞ்சிமாறன் விழுந்தான்.
சட்டென்று அவனை இழுத்துக் கீழே குனிய வைத்தவள்,
“அண்ணாச்சி.. அசையாமல் அப்புடியே இரு.. நான் உனக்கு மேல ஏறி மேல போறன் சரியோ.. நான் அவ்வளவு பாரமில்லை அதனால பயப்பிடாத..”
என்று கொண்டு, அவன் வாய் திறந்து பதில் சொல்ல முதல் அவன் மேல் ஏறி, அந்தக் கதவின் மூலம் வெளியே எட்டிப் பார்த்தாள்.
கீழே அவளைத் தாங்கியபடி குனிந்து இருந்த வஞ்சிக்கு முதுகின் மேல் யாரோ பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போல அத்தனை வலி எடுத்தது. எங்கே தான் ஏதும் சொல்லி அவள் வேண்டுமென்றே தன் முதுகை மிதித்து விடுவாளோ என்ற பயத்தில், வாயை பொத்திக்கொண்டு எப்பொழுது இறங்குவாள் என்பது போல் அப்படியே அமர்ந்திருந்தான் வஞ்சி.
அதற்குள் மேல் கதவின் வழியாக எட்டிப் பார்த்த கோதை, விழிகளை சுழற்றி தான் எட்டிப் பார்த்த இடம் எந்த இடம் என்பதை ஆராய்வது போல பார்க்க, அந்த பங்களாவில் அவள் எல்லா இடங்களுக்கும் சென்றதில்லை என்பதால் அந்த இடம் எது என்று அவளுக்கு முதலில் பிடிபடவே இல்லை. சரி இங்கிருந்து பார்த்தால் தெரியாது அதனால் இந்த அறையில் நுழைந்து இது யாருடைய அறை என்பதை ஆராய்வோம், என நினைத்தவள் சற்றே எம்பி தன் கைகளை கதவின் விளிம்பில் அழுத்தி மேலே எம்பி எழப் பார்க்கவும், அந்த பிரம்மாண்டமான அறையின் ஒரு புறத்திலிருந்த இன்னொரு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் ஜேம்ஸ்பீட்டர்.
அறைக்குள் வந்தவன் சற்றுத் தயங்கி, பின்னர் தன் ஈரத் தலையைத் துவட்டத் தொடங்கினான்.
தலைக்குக் குளித்து விட்டு வந்திருப்பான் போல, ஒற்றைத் துவாலையை இடுப்பில் இறுகக் கட்டியிருந்தான். வெற்று மேனியில் இருந்தவனது வெளிர் வெள்ளைத் தோலைப் பார்த்தவளுக்கு, அவளை அறியாமலேயே வெள்ளரிப்பழம் நினைவுக்கு வரவே, அவனைப் பார்த்த அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்பதே தோன்றாமல் அப்படியே நின்றிருந்தாள் கோதை.
அதுவரை கோதைக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்த ஜேம்ஸ், இவள் இருந்த திசைப் பக்கம் சட்டென்று திரும்ப, அவ்வளவு தான் பதட்டம் அவளைப் பற்றிக் கொள்ள,
“ஆத்தி வெள்ளைப்பண்ணி.. இங்க தான் பாக்குது.. காளியாத்தா காப்பாத்து..”
என்று கொண்டு, பிடிமானமாகப் பிடித்திருந்த கைகளைச் சட்டென்று விட்டவள், பொத்தென்று கீழே விழுந்தாள்.
அவள் விழுந்த வேகத்தில் பதறி எழுந்த வஞ்சி, மேலே யாரையோ பார்த்துப் பயந்து தான் அவள் கீழே விழுந்திருக்கிறாள் என்பது சட்டென்று புரிய, வேகமாக எழுந்து மேல் கதவை சட்டென்று இழுத்துச் சாத்தினான்.
கீழே விழுந்தவளுக்கு இடுப்பில் சரியான அடி, எழ மாட்டாமல் எழுந்தபடி இடுப்பைப் பிடித்துக் கொண்டு,
“ஆத்தி இடுப்பு ஒடிஞ்சிட்டுது போல.. இருந்திருந்து இந்தப் பாதை அந்த அசுரனிந்தை அறையிலயோ போய்த் திறக்கோணும்.. எல்லாம் என்ரை நேரம்.. என்னையப் பாத்திருக்க மாட்டான்.. ஆத்தி பாத்திருந்தால் என்னாகி இருக்கும்..”
எனப் புலம்பியவளுக்குத் தெரியவில்லை. அந்த அசுரன் அவளைப் பார்த்து விட்டுப் பேசாமல் இருந்தான் என்பது.
மேலே தன்னறையில் நின்றிருந்த ஜேம்ஸ், கோதையின் தலை தெரிந்த திக்கைப் பார்த்துக் கொண்டு
“கிறுக்கு..”
என முணுமுணுக்க, அவன் சொன்ன கிறுக்கோ கீழே இடுப்பைப் பிடித்துக் கொண்டு ஒரு பக்கமாக இழுத்து இழுத்து வியாகேசை நோக்கிப் படியேறிச் சென்று கொண்டிருந்தது.
அவள் போவதற்கு முதல், முன்னால் இருந்த அறை வழியே மேலே ஏறி விட்டிருந்தார் வியாகேசு. அவரைத் தொடர்ந்து கோதையும் வஞ்சியும் அந்த அறைக்குள் ஏறிக் கொண்டனர்.
அதற்குள் அந்த அறை யாருடைய அறை என்று கண்டு கொண்ட வியாகேசு, அங்கே பெரிய கட்டிலில் மயக்கத்தில் கிடந்த ஜோசப்பை வெறிக்கப் பார்த்துக் கொண்டு நின்றார்.
அவருக்குப் பின்னால் வந்த கோதை அவரைப் போல ஜோசப்பை பார்த்துக் கொண்டு நிற்காமல், அங்கே கிடந்த அலுமாரிகளைத் திறந்து ஒவ்வொன்றாய் நிதானமாக எதையோ தேடத் தொடங்கினாள்.
அவளுக்கு பின்னால் வந்த வஞ்சி அவள் எதை தேடுகிறாள் என்பது புரியாமல் ஒரு கணம் விழித்து விட்டு, பின்னர் தானும் அவளுக்கு உதவுகிறேன் பேர்வழி என எதையோ தேடத் தொடங்கினான். சரியாக இருபது நிமிடங்கள் அப்படியே கழிய, கோதை எதை நினைத்து தேடினாளோ அந்தப் பொருட்கள் அவளது கையில் சிக்குப் பட்டது.
ஜோசப்பையே பார்த்துக் கொண்டு விறைப்பாக நின்றிருந்த வியாகேசை இழுத்து வந்து தான் பார்த்த பொருளை அவருக்கும் காட்டினாள் அவள்.
கோதை ஏதோ தப்பாக புரிந்து கொண்டிருக்கிறாள் அதனால்தான் போதை மருந்து அது இது என பேசுகிறாள் என முதலில் நினைத்த வியாகேசு, பின்னர் அந்த ஜோசப்பும் அல்போன்ஸும் சரியான கிருமினல்கள் தானே, ஒருவேளை கோதை சொன்னது போல அவர்கள் நடந்து கொண்டும் இருக்கலாம் தானே, அதனால் அவளோடு அவளது மனது கோணாமல் அவளுக்குப் பின்னால் போய், அவர்கள் என்னதான் செய்து வைத்து இருக்கிறார்கள் என பார்ப்போமே என்ற எண்ணத்தில் தான் அங்கே வந்திருந்தார்.
ஆனால் இப்போது கோதை காட்டிய பொருட்களை பார்த்ததும் அவருக்கு தலையே கிறுகிறுக்கத் தொடங்கி விட்டிருந்தது.
ஜோசப் படுத்திருந்த கட்டிலுக்கு பின் புறமாக இருந்த அலுமாரியின், கீழ் லாச்சியில் நிறைய போதை மருந்து அடங்கிய போத்தில்களும், ஊசிகளும் கிடந்தன. கைகள் நடுங்க அதை எடுத்துப் பார்த்தவருக்கு, உடலும் சேர்ந்தே பதறத் தொடங்க அப்படியே கீழே தொய்ந்து விழுந்து விட்டார் அந்தப் பெரிய மனிதர்.
அவருக்கு பின்னால் நின்றிருந்த வஞ்சி, சட்டென்று அவரைத் தாங்கிப் பிடித்துக் கொள்ள, கோதையும் பதறிக் கொண்டு அவரைப் பிடித்துக் கொண்டாள்.
“அப்பா.. என்னப்பா என்ன செய்யுது..”
“பெரிசு.. பெரிசு கீழ விழுந்து கை காலை முறிக்காத..”
என இருவரும் வியாகேசை இரண்டு பக்கமும் தாங்கிக் கொண்டு அவரைப் பார்க்க, அவரது விழிகளோ கலங்கிப் போயிருந்தது.