அசுரனின் குறிஞ்சி மலரே.. 19

4.7
(10)

குறிஞ்சி மலர்.. 19

வஞ்சி மற்றும் வியாகேசின் துணையோடு, ஜோசப்பின் அறைக்குள் கிடைத்த, போதைமருந்துகளுக்கு பதிலாக போசாக்கான மருந்துகளை, மாத்திரைகளை மாற்றி வைத்து விட்டிருந்தாள் கோதை.

அந்தக் காரியத்தைக் கச்சிதமாக, சந்தேகம் வராத வகையில் நிறைவேற்றிய பிறகு தான் அவளுக்கு வேலையே ஓடியது என்று சொல்லலாம்.

கிட்டத்தட்ட அந்த நிம்மதி கொடுத்த தென்பில், எலிசபெத் மற்றும் செபமாலைக்கு காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தவளை, வரவேற்பறையில் கேட்ட ஏதோ உடையும் சத்தம், பதறிக் கொண்டு வெளியே ஓடிச் சென்று எட்டிப் பார்க்க வைத்தது.

அங்கே கண்ட காட்சியில் வெலவெலத்துப் போய், அவள் சமையலறைக் கதவோடு அப்படியே சாய்ந்து நின்றுவிட, மீண்டும் கண்ணாடி ஜாடியொன்று கீழே விழுந்து நொறுங்கியது.

அதற்குள் அவளைப் பார்த்து விட்ட வியாகேசு, உள்ளே போ உள்ளே போ என்பது போல ஜாடை காட்ட, அவளோ அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

காரணம் அங்கே வரவேற்பறையில் அவளது வளர்ப்புத் தந்தை தில்லையம்பலமும் அவரது சொந்த மகள் ரூபவர்ஷினியும் நின்றிருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் சந்தோசப்படுவதற்கு பதிலாக கோதை பதறிக் கொண்டு நின்றதற்கான காரணம், அவர்களைக் கண்டதும் ஜேம்ஸ் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் மேசையை போட்டு உடைத்ததோடு, பக்கத்தில் இருந்த பொருட்களையும் போட்டு உடைத்தது தான், அதற்குள் மெல்ல நழுவி கோதையின் பக்கத்தில் போய் நின்று கொண்டான் வஞ்சி.

“என்ன தங்கச்சி.. உன்ரை அப்பருக்கு நீ மட்டும் தான் ஒரு பிள்ளை எண்டு சொன்ன போலக் கிடக்கு.. அவர் இன்னொரு பிள்ளையைக் கூட்டிக் கொண்டு வந்து இது தான் என்ரை பிள்ளை எண்டு கொண்டு நிக்கிறார்..”

“ஆ அதுக்கோ மேசையைப் போட்டு உடைச்சாரு அவரு..”

“அதுக்கு உடைக்கேல்லை..”

“அப்ப என்னத்துக்கு உடைச்சாராம்.. அவருக்கு எங்கடை அப்பா எண்டாலே ஆகாது தான்.. அதுக்காக வீட்டுக்கு வந்தவரிட்டை இப்புடியோ நடந்து கொள்ளுறது.. என்ன பழக்கம் உது.. ஒருத்தனும் கேக்க மாட்டியளோ சரியான அசுரன்..”

“இரு இரு இப்ப என்னத்துக்கு மிளகா கடிச்ச கணக்கா உப்புடி மூஞ்சியை வைச்சிருக்கிறாய்..”

“வீட்டுக்கு வந்த மனுசனுக்கு முன்னால உப்புடியே மேசையைக் கதிரையைப் போட்டு உடைக்கிறது..”

“ஆ உன்ரை அப்பரு என்ன கேட்டவர் தெரியுமோ..”

“அப்புடி என்னத்தையாம் கேட்டுப் போட்டார்..”

“ஆ தன்ரை மகள் ரூபவர்ஷியைக் கலியாணம் கட்டி.. தனக்கு மாப்பிள்ளை ஆகி.. பழசை எல்லாம் மறந்து போகட்டாம்..”

“கலியாணம் செய்யச் சொல்லித் தானே கேட்டவர்.. ஏதவோ கருமாதி செய்யச் சொன்ன போல அதுக்கேன் அம்புட்டு அலட்டல் எனக்கு விளங்கேல்லை..”

“என்ன தங்கச்சி நீ.. உன்ரை அப்பருல உனக்குப் பாசம் இருக்கெண்டாப் போல உப்புடி எல்லாம் கதைக்கலாமோ.. உங்கடை அப்பா எங்கடை பாஸைப் பத்தி கண்ட இடத்துல கண்ட மாதிரிக் கதைச்சுத் திரிஞ்சதோட இல்லாமல்.. அவரை ஆள் வைச்செல்லாம் போடப் பாத்தவர்..”

“பொய்..”

“மெய்..”

“நான் நம்ப மாட்டன்..”

“ஆ நம்ப மாட்டன் எண்டு சொல்லு அதை நான் ஏற்றுக் கொள்ளுறன்.. அதை விட்டிட்டு பொய் மை எண்டு கொண்டு நிக்காத..”

“அதுக்காக..”

“என்ன அதுக்காக..”

“இல்லை அவர் என்ன செய்திருந்தாலும் உப்புடியே நடத்துறது..”

“உனக்கு உன்ரை அப்பா பாசம் கண்ணை மறைக்குது.. ஒண்டை நினைவுல வைச்சுக் கொள்ளு.. தில்லையம்பலம் என்ற நபர் உனக்கு தான் அப்பா எங்கடை பாஸுக்கு அவர் ஒண்டுமே இல்லை.. அவரை அழிக்க நினைக்கிறவையளை அவர் அழிச்சிட்டுப் போயிட்டே இருப்பார்..”

“ஆ நல்லா அழிப்பாரு அழிப்பாரு அவரென்ன அழிறப்பரோ..”

“அவர் என்னவா எண்டாலும் இருந்திட்டு போகட்டும் இப்ப அதில்லை கதை.. உன்ரை அப்பர் செய்றதையும் செய்திட்டு.. இப்ப ஒண்டுந் தெரியாத பாப்பா போல தன்ரை மிகளைக் கலியாணம் கட்டுறியளோ எண்டு வந்து நிண்டால் எவரா இருந்தாலும் கோபந் தான் வரும்.. அதை முதல்ல புரிஞ்சு கொள்ளு பிறகு நீளமா வக்காலத்து வாங்கலாம்..”
என்று கொண்டு அங்கிருந்து போய் வியாகேசின் பக்கத்தில் நின்று கொண்டான் வஞ்சி.

ஜேம்ஸின் கோபத்தின் வீரியத்தை புரிந்து கொண்ட வியாகேசு, சட்டென்று அவனை இழுத்து ஒரு அறையில் விட, ஒரு கணம் அவரை முறைத்தவன், அதன் பிறகு என்ன நினைத்தானோ பேசாமல் உள்ளே போய் விட்டான்.

அவன் அவ்வளவு தூரம் இறங்கிப் போனதே வியாகேசுக்கு ஆறுதலாக இருக்க, கடுப்போடு தில்லையம்பலத்தைப் பார்த்தார் அவர்.

“யோவ்.. உமக்கு எம்புட்டு தைரியம் இருந்தால் உப்புடிக் கேட்டுக் கொண்டு வந்து நிப்பாய்.. நீ செஞ்சதையெல்லாம் நீ வேணுமெண்டால் உன்ரை சொகுசுக்கு மறந்திருக்கலாம்.. ஆனா அவன் அதை ஒருக்காலும் மறக்க மாட்டான்.. ஆள் வைச்சு நீ அவனைப் போட்டுத் தள்ளப் பாத்தது எங்களுக்குத் தெரியாது எண்டு நினைக்கிறியோ.. இப்ப நீயா வெளியால போறியோ இல்லாட்டிக்கு நாயை அவுத்து விடட்டுக்கோ..”
என்று வியாகேசு சொன்னதும் தான் தாமதம், தில்லையம்பலம் தன் மகள் ரூபவர்ஷியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு வேகமாக வெளியேறி விட்டார்.

“என்னப்பா.. என்னென்னவோ சொல்லிக் கூட்டியந்தியள்.. நானும் உங்களை நம்பி வந்தன்.. இப்ப பாருங்கோ எவ்வளவு அவமானம்.. அவன் ஏதவோ ஹீரோ மாதிரி ஹான்சமான ஆள் நிறையக் காசு பணம் வைச்சிக்கான் எண்டதால தான் உந்தக் கலியாணத்துக்கு ஓமெண்டனான்.. அவனென்ன பெரிய பிடுங்கி மாதிரிக் கண்டதையும் தூக்கி அடிக்கிறான்.. சரியான சைக்கோவா இருப்பான் போல.. உவனைக் கட்டுற நேரம் நான் கிணத்துல குதிச்சு சாவலாம்.. அதோட அவன் என்னப்பா என்னை விடக் கலரா இருக்கிறான்.. உவனோட கூடப் போனால் என்ரை கலர் கம்மியாயிடுமே.. எத்தினை கிரீம் பூசிக் கலராகக் கஷ்டப் பட்டன் எண்டு எனக்கெல்லோ தெரியும்.. இனி எனக்கு மாப்பிள்ளை பாக்கிறதா இருந்தால் என்னை விடக் குறைவான கலருல பாருங்கோ சொல்லீட்டன்..”
எனப் புலம்பிக் கொண்டே வந்த மகள் ரூபவர்ஷினியை எப்படி சமாதானம் செய்வது என்பது தெரியாமல், தலையைப் பிய்த்துக் கொண்டே நடந்தார் தில்லையம்பலம்.

சமையலறை வாசலில் நின்று கொண்டு ஜேம்ஸ் சென்ற அறையையும், தன் தந்தையும் தங்கையும் சென்ற திக்கையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த கோதையின் அருகில் வியாகேசு சென்றார்.

அவர் தன்னருகில் வந்து நின்றது கூட தெரியாமல் கோதை, ஜேம்ஸ் நுழைந்த அறையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன பிள்ளை.. என்ன விறைச்சுப் போய் நிக்கிறாய்.. உன்ரை அப்பாக்கு முன்னால பீட்டரு கண்டதையும் போட்டு உடைச்சது உனக்குக் கோபமோ..”

“இல்லையாப்பா பின்னே.. அவரிந்தை வயசுக்கு கூட ஒரு மரியாதை குடுக்கேல்லையே உந்த மனுஷன்.. உவரை அசுரன் எண்டுறதில எந்த தப்புமே இல்லை.. ஈவிரக்கமில்லாத அசுரன்..”

“சரி பீட்டர் அசுரனாவே இருந்துட்டுப் போகட்டும்.. உன்ரை கொப்பன் நல்லவனாவே இருந்திட்டுப் போகட்டும்..”

“என்ன இருந்திட்டுப் போகட்டும் எண்டு சொல்லுறியள்.. அது தான் உண்மை..”

“சரி அப்புடியே வைச்சுக் கொள்ளன்.. உன்ரை நல்ல வல்ல அப்பன் எவ்வளவு நாளைக்குப் பிறகு இங்கினை வந்திருக்கிறான்.. அப்புடி வந்தவன் தன்ரை பிள்ளை இங்க என்ன செய்யுது ஏது செய்யுது எண்டு உன்னை ஒரு எட்டு எட்டிப் பாத்தானோ.. இல்லாட்டிக்கு எப்புடி இருக்கிறாய் எண்டு ஒத்தை வரி தான் கேட்டானோ..”

“அது.. அது.. அப்பா கேக்கோணும் எண்டு இருந்திருப்பார்.. அதுக்குள்ள தான் உங்கடை அசுரன் கண்டதையும் தூக்கி அடிச்சு அவையளை விரட்டி விட்டிட்டானே..”

“நல்லாவே சமாளிக்கிறாய் பிள்ளை.. நீ சொல்லுறது நூற்றுக்கு இருநூறு வீதம் மெய்யில்லை எண்டு உனக்குக் கூடத் தெரியும்.. இருந்தாலும் சமாளிக்கிறாய்.. ஒரு உண்மை சொல்லட்டோ..”

“என்ன..”

“உன்ரை கொப்பன் இங்கினை வந்து சரியா ஒரு மணி நேரம் இருக்கும்.. அந்த ஒரு மணி நேரத்துல ஒருக்கா கூட அவனுக்கு உன்ரை நினைப்பு வரேல்லை எண்டுறது தான் உண்மை.. இதைச் சொன்னால் நீ நம்பவே போறாய்.. சரி நீ போ..”
என்றபடி அங்கிருந்து போக எத்தனித்த வியாகேசின் கையைப் பிடித்து நிறுத்தினாள் கோதை.

என்னவென்பது போல அவளைத் திரும்பிப் பார்த்தவர், அவள் விழிகள் சொன்ன மொழியில் கொஞ்சம் கலங்கித் தான் போனார்.

“எனக்கு என்னைச் சுத்தி என்ன நடக்குதெண்டு நல்லாவே தெரியுதப்பா.. இப்ப வந்திட்டுப் போனாரே பெரிய மனுஷன்.. அந்தாளுக்கு என்னையக் கண்டாலே ஆகாதெண்டும் எனக்கு நல்லாவே தெரியும்.. என்னைத் துளிகூட அவருக்குப் பிடிக்காதெண்டும் எனக்குத் தெரியும்.. இதெல்லாம் புத்திக்குத் தெரியுதப்பா.. ஆனா இந்தப் பாழாப் போன மனசுக்குத் தான் அது ஏறவே மாட்டன் எண்டுது.. நான் தான் அப்பா அப்பாண்டு அலட்டிட்டுத் திரியுறன்.. என்ரை அப்பாக்கு நான் வக்காலத்து வாங்காமல் வேறை ஆரு வாங்குவா எண்டுற மன ரீதியில தான் நான் கதைச்சிட்டுத் திரியிறன்.. அதை ஆரு புரிஞ்சு கொள்ளாட்டியும் பரவாயில்லை நீங்களாவது புரிஞ்சு கொள்ளுங்கோ.. என்னைச் சுத்திப் பாசமாயும் அன்பாயும் பேசுற ஒரு ஆள் இருந்தாலே போதுமப்பா.. மிச்ச வாழ்க்கையை ஈயெண்டு இளிச்ச படியே வாழ்ந்து முடிச்சிருவன்.. ஆனா எனக்கு அந்தக் கொடுப்பினை தான் இல்லையெண்டு கடவுள் ஆணியடிச்ச மாதிரி செய்திட்டாரு..”
என்று தன் மனக்கிடக்கையை அப்படியே கொட்டியவள், கட்டியிருந்த கறுப்புக் கரையிட்ட வெள்ளைப் புடவையால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

அவள் சொல்வதையே கேட்டிருந்த வியாகேசுக்கு, நெஞ்சு துடித்தது. ஒரு பெண் பிள்ளையை ஒரு பெண்ணாகவே மதிக்காத தில்லையம்பலத்தின் மீது கொலைவெறியே வந்தது.

தன் கையைப் பிடித்திருந்த கோதையின் வலது கையில், தனது வலது கையால் ஆறுதலாக தட்டிக் கொடுத்தவர் பின்னர் அவளது கூந்தலை வருடி கொடுத்து
“மூச்சுக்கு முன்னூறு தரம் அப்பா அப்பாண்டு என்னைக் கூப்பிடுறியே.. இனிமேல் இந்த அப்பாவுக்காக வக்காலத்து வாங்கிக் கதை.. எனக்காகச் சண்டை போடு.. உறவுகளுக்கு இரத்த சம்பந்தம் அவசியம் இல்லை பிள்ளை.. மனசுல ஒருத்தர் மேல ஒருத்தருக்கு அக்கறையும் அன்பும் இருந்தால் மட்டும் போதும்.. அப்புடிப் பாத்தால் அந்த அன்பு அக்காறை உன்மேல எனக்கும்.. என்மேல உனக்கும் நிறையவே இருக்கு.. மத்ததை தூக்கிப் போடு மீதியை நாங்கள் சந்தோஷமா வாழுவம்.. இப்ப இந்த அப்பனுக்கு கீரைப்புட்டு அவிச்சுக் குடு.. வாயெல்லாம் கீரைப்புட்டுக்கு ஏங்குது.. என்ன அப்புடி முழிக்கிறாய் கீரைப்புட்டு அவிக்கத் தெரியாதோ.. நான் வேணுமெண்டால் ரெசிபி குடுக்கட்டுக்கோ..”
என்று சொல்லிக் கொண்டே போன வியாகேசின் பேச்சில், கோதை பழைய நிலைக்கு வந்து விட்டாள்.

“என்ரை அப்பாக்கு இல்லாத கீரைப்புட்டா.. ஒரு கட்டுக் கீரை மட்டும்.. இல்லை இல்லை ரெண்டு கட்டுக் கீரை வாங்கிக் குடுங்கோ.. இப்பவே அவிக்கிறன்.. ரெசிபி எல்லாம் வேண்டாமாக்கும்..”
என்றபடி சமையலறையினுள் புகுந்த கோதையின் பின்னால் சிரித்த முகமாக வியாகேசு நுழைய, அவர்கள் பேசிய பேச்சில் கீரைப்புட்டு என்பது மட்டும் வஞ்சிமாறனின் காதில் விழவே, அவனும் அவர்களோடு சமையலறையினுள் புகுந்து கொள்ள, அவன் ஓடி வந்த தினுசுலேயே அவன் எதற்கு வருகிறான் என்பது புரிந்து விட கோதை பக்கென்று சிரித்து விட்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!