அசுரனின் குறிஞ்சி மலரே.. 21

4.9
(10)

குறிஞ்சி மலர்.. 21

ஜீவோதயம் பங்களாவின் வரவேற்பறையில், மேற்குப் பக்கச் சுவரில் கிடந்த வீணைவடிவ சுவர்க் கடிகாரத்தில் நேரம் எட்டு என்பதை, வீணை ஒலி தெரிவிக்க, மாடியில் இருந்து கீழே வந்தான் ஜேம்ஸ்பீட்டர்.

அவன் வருவதற்கு முன்னரே தில்லையம்பலம் அங்கே ஆஜராகி விட்டிருந்தார். பீட்டர் நாளை வந்து சந்திக்கச் சொன்னார் என்ற செய்தியைக் கேட்டதில் இருந்தே அம்பலத்துக்கு தலைகால் புரியவில்லை. அவனாகவே அழைத்திருக்கிறான் என்றால் நிச்சயமாக தனக்கு ஏதோ இலாபகரமான விசயம் தான் நடக்கப் போகிறது என அவர் உள்ளம் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் பாவம் அவருக்கு ஜேம்ஸ்ஸைப் பற்றி முழுதாகத் தெரிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை.

தில்லையம்பலம் மாத்திரம் அமர்ந்திருக்க, ஒரு பக்கத்தில் வியாகேசும் வஞ்சியும் நிற்க, மற்ற பக்கத்தில் தேவாவும் ரகுமானும் நின்றிருந்தார்கள்.

சுடச்சுட பால் தேநீர் கொண்டு வந்து தில்லையம்பலத்திடம் நீட்டினாள் கோதை. நிமிர்ந்து கூடப் பார்க்காமல் தேநீரை வாங்கியவரை
“அப்பா..”
என்றழைத்து நிமிர்ந்து பார்க்க வைத்தாள் பாசத்திற்காய் ஏங்கித் தவிக்கும் அந்தப் பாவை.

தன் முன்னால் நின்றிருந்த கோதையை அப்போது தான் பார்த்த தில்லையம்பலத்தின் பார்வை நீ இன்னும் உயிரோடு தான் இருக்கிறாயா என்பது போல இருந்தது. அவரைப் பற்றிக் கோதைக்குத் தெரிந்திருந்தாலுமே கூட, மகளே என்று அழைத்து சம்பிரதாயத்திற்காகவாவது இரண்டு வார்த்தைகள் கேட்க மாட்டாரா என்பது போல அவளது விழிகள் அவரை ஏக்கமாக நோக்க, அவரோ அவளை அலட்சியப் படுத்தி விட்டுத் தேநீரைச் சுவைக்க ஆரம்பித்து விட்டார்.

சில நொடிகள் அப்படியே நின்றவள், பின்னர் ஒரு விரக்திச் சிரிப்புடன் அங்கிருந்து போய் விட்டாள். மாடியில் இருந்து இறங்கும் போதே கோதையின் முகத்தையே அளவெடுப்பது போலப் பார்த்த வண்ணம் வந்த ஜேம்ஸுக்கு அவளது விரக்திச் சிரிப்புத் தப்பவில்லை.

வேகமாகக் கீழே வந்தவன் தில்லையம்பலத்தின் முன்னால் அமர்ந்து கொள்ள, அவனைப் பார்த்தவரோ வேகமாக எழப் போக, கையில் இருந்த தேநீர்க் கோப்பை கைதவறிக் கீழே விழப் போனது. ஒரு எட்டில் அதைப் பிடித்துக் கொண்டவன்
“பார்த்து என்ன பதட்டம்..”
என்று சொல்ல சற்றுத் தள்ளி நின்றிருந்த வஞ்சிக்குத் தலை கிறுகிறுத்தது.

தில்லையம்பலத்திற்கும் அதுவரை இருந்த கொஞ்ச நஞ்சத் தயக்கமும் ஜேம்ஸின் அந்த அணுகுமுறையில் காணாமல் போய் விட, சட்டென்று அவரின் முகம் பிரகாசமாகப் போய் விட்டது.

“என்ன தம்பி.. கூப்பிட்டு அனுப்பி இருந்தியளே.. என்ன விசியம்.. நீங்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளுறன்.. உங்கள் மேல எனக்கு நிரம்ப மரியாதை இருக்குது.. ஆனாப் பாருங்கோ நடுவுல ஆரவோ என்னையப் பத்தி உங்களிட்டைத் தப்பாப் போட்டுக் குடுத்திட்டானுங்கள்.. நான் உங்களுக்கு எதிரா ஒரு துரும்பைக் கூட அசைச்சதில்லை அது தான் உண்மை..”
என தில்லையம்பலம் நீளமாகச் சொல்லிக் கொண்டே போக, அவரை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார் வியாகேசு.

மனிதர்களில் சிலர் தங்களின் காரியம் ஆக வேண்டும் என்றால் காலைக் கூடப் பிடிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதை, அவர் தில்லையம்பலத்தின் செய்கை மூலம் புரிந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்னால் ஜேம்ஸை தடம் இல்லாமல் அழிக்கிறேன் பேர்வழியென்று அவர் கங்கணங் கட்டிக் கொண்டு திரிந்ததையும் அதற்காக அவர் செய்த அயோக்கியத்தனங்களையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது. இப்படியாக அலைந்து திரிந்தவருக்கு ஜேம்ஸ் அசைக்க முடியாத ஒரு அரசன் மற்றும் அசுரன் என்பது புரிந்து போய் விட, அவனை வளைக்க தன் மகளைக் கட்டிக் கொள்ளுங்கள் என்று வேறு விதமாக இறங்கி விட்டிருந்தார் அந்த பேராசைக்காரர்.

தான் அமர்ந்திருந்த சோபாவின் திண்டில் தன் இடது கையை முட்டுக் கொடுத்து, அதே கையில் தன் கன்னம் தாங்கியிருந்தவன் வலது கையால் தன் தொடையில் தாளம் போட்டபடி, தில்லையம்பலத்தை மேலும் கீழுமாகப் பார்த்து விழிகளால் ஊடுருவிக் கொண்டிருந்தான். அவனது பார்வை சமையலறை வாசலில் நின்று இங்கேயே பார்த்துக் கொண்டிருந்த கோதையையும் அவ்வப்போது தழுவி விலகத் தவறவில்லை.

எல்லோருமே ஜேம்ஸ் என்ன சொல்லப் போகிறான் என்பது போல பேராவலுடன் இருக்க, இருக்கையை விட்டு எழுந்து கொண்டவன் அப்படியும் இப்படியுமாக இரண்டு தரம் நடந்து விட்டு
“உங்களோட பொண்ணை மேரேஜ் செஞ்சிக்க எனக்கு டபுள் ஓகே..”
என்று தில்லையம்பலத்தைத் திரும்பிப் பார்த்துச் சொன்னான்.

அவன் அவ்விதம் சொல்லுவான் என தில்லையம்பலம் ஊசிமுனை அளவு கூட எதிர்பார்க்கவில்லை என்பதை, விழி விரித்து திகைத்திருந்த அவரின் முகமே பளிச்சென்று காட்டியது.

வஞ்சிமாறன் ஆவென்று நிற்க, தேவாவும் ரகுமானும் ஒரு பக்கம் திகைத்துப் போய் நிற்க, வியாகேசு மட்டும் தன் முன்னால் நின்றிருந்த ஜேம்ஸை யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

சமையலறை வாசலில் நின்று, தில்லையம்பலத்தை எதற்காக அழைத்திருப்பான் என்ற யோசனையோடு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கோதைக்கு, உடனே ரூபவர்ஷினியும் ஜேம்ஸும் மணக் கோலத்தில் அருகருகே நிற்பது கற்பனையில் தோன்றி மறைந்தது.
இதழ்களை இறுக மூடி, கண்களை மேலே செலுத்தி இருவரது ஜோடிப் பொருத்தத்தையும் கற்பனையில் கொண்டு வந்தவள், அதனை யோசித்தபடியே கையில் வைத்திருந்த தட்டில் தாளம் தட்டிக் கொண்டே உள்ளே போய் விட்டாள்.

மதிய உணவுக்கான காய்கறிகளை இப்போதே எடுத்து வைப்போம் என்ற எண்ணத்தில் அதை எடுத்துக் கொண்டே
“ரூபா கலரான பிள்ளை தான் ஆனாலும் இந்த மனுஷனுக்கு பக்கத்துல நிண்டாளெண்டால் அவளிந்தை கலர் காணாமலேயே போயிடுமே.. அவளுக்கு எப்பவுமே தன்ரை கலருல ஒரு கர்வமே இருக்குது.. அப்புடி இருக்க எப்புடி இந்த மனுஷனைக் கட்டச் சம்மதம் சொல்லியிருப்பள்.. இந்த அப்பருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை அவளுக்கு ஏத்த போல வேறை பொடியனைப் பாத்து அவளுக்குக் கட்டி வைக்க வேண்டியது தானே.. அதை விட்டிட்டு என்னத்துக்கு இந்த வெள்ளைப் பண்ணி தான் வேணுமெண்டு நிக்கிறாரோ தெரியேல்லை.. ஒருத்தருக்கு ஒருத்தரை பிடிச்சிருந்தாலும் பரவாயில்லை மனசுக்கு பிடிக்காம அதென்ன ஒரு கலியாணம் வேண்டிக் கிடக்கு.. ஒரு வேளை பிடிச்சு தான் உங்கடை மகளைக் கலியாணம் செய்ய டபுள் ஓகே எண்டு அப்பாட்டைச் சொன்னாரோ.. அப்புடியும் இருக்கும்.. ஆனா ரூபா தான் பாவம் இந்தாளுந்தை கோபத்தை எப்புடிச் சமாளிக்கப் போறாளோ தெரியேல்லையே.. இங்கினை இருக்கிற எனக்கே அந்தாளைச் சமாளிக்க முடியாமல் மூச்சுத் திணறுது..”
எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருந்த கோதையின் பின்னால் இருந்து
“ஏன் மூச்சுத் திணறுது..”
என்ற அழுத்தமான குரல் கேட்க, கையில் வைத்திருந்த காய்கறிக் கூடையை அப்படியே கீழே போட்டு விட்டு வேகமாகத் திரும்பிப் பார்த்தாள் கோதை.

சமையலறை வாசலில் சாய்ந்து நின்று அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ். அவனை அந்த நேரத்தில் அங்கே எதிர்பாராதவளுக்கு லேசாகக் கைவிரல்கள் தந்தியடிக்கத் தொடங்கின.

“அது அது வந்து.. அது அது.. ஆ ஆ வந்திட்டு.. இந்த ஏசி கொஞ்சம் கூடிட்டுது.. அது தான் எனக்கு மூச்சுத் திணறுது..”
என எதையோ சமாளிப்பாய்ச் சொல்லி வைக்க, அவளை மேலும் கீழுமாய்ப் பார்த்தவன்
“ஓ.. கிச்சன்ல ஏசி பூட்டின மாதிரி எனக்கு நினைவில்லை..”
என்று கொண்டே அவளருகில் வந்தான்.

அவன் தூரத்தில் நின்றாலே நடுக்கு வியாதி வந்த கணக்காய் நடுங்குபவளுக்கு, அவன் பக்கத்தில் வந்தால் சொல்லவும் வேண்டுமோ, நடுங்கிய விரல்களை வழமை போல இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு
“அது அது..”
என உண்மையில் திணறத் தொடங்கினாள் கோதை.

அவளையே ஒரு நொடி பார்த்தவன், தன் தலையை அழுந்தக் கோதியபடி
“எனக்கு பால் பாயாசம் செஞ்சு குடுக்க முடியுமா..”
என அதே அழுத்தங் குறையாத குரலில் கேட்க,
“பன்னாடை அதை வாசலில நிண்டே சொல்லித் தொலைக்க வேண்டியது தானே.. அதுக்கு எதுக்கு இம்புட்டு கிட்டவா வந்து பயமுறுத்துற போல நிண்டு கொண்டு கேக்கிறாய் மடையா..”
என மனதினுள் திட்டியவள், வெளியே மட்டும் நல்ல பிள்ளை போல மண்டையை நாலு பக்கமும் ஆட்டிச் சரியென்றாள்.

அவள் சரி என்று மண்டையை எல்லாப் பக்கமும் ஆட்டிய தினுஷைப் பார்த்தவன், கீழே கிடந்த காய்கறி கூடையை எடுத்து சமையல் மேடையில் வைத்து விட்டு போய் விட்டான்.
அவன் சமையலறை வாசலைக் கடந்த பின்னர் தான் அது வரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சையே வெளியே விட்டாள் கோதை.

ஜேம்ஸ் வெளியே சென்று பத்து நிமிடங்கள் ஓடிய பின்னர் கூட கோதை அசையாமல் அப்படியே தான் நின்றிருந்தாள். பின்னர் தான் அவளுக்கு சுரணையே வந்தது.

“ஆத்தி.. பால்பாசாயமாமில்ல அது எப்புடி செய்றது.. எனக்குப் பாலூத்தாமல் விட்டால் சரி தான்.. எதுக்கும் நம்மடை டப்பா போனில கூகுளாண்டவரிட்டை உதவி கேப்பம்.. அவர் செய்யாத உதவியா.. ஒரு வேளை அவரு காலை வாரினாலும் இருக்கவே இருக்கிறாரு நம்மடை யூத்து டுயூப்பு சாரு.. அவரு தான் பாயாசத்தை செஞ்சே காமிச்சிடுவாருல்ல..”
என வழமை போல தனக்கு தானே சொல்லியபடி, பல முறை விழுந்து எழும்பி நொறுங்கி நொந்து போன தன் தொலைபேசியைக் கையில் எடுத்தாள்.

அவள் கையில் இருந்த அந்த ஸ்மார்ட் ஃபோன், இன்னுமாடி என்னைய நம்பிட்டு சுத்தி திரிகிறாய் என்பது போல அவளைப் பார்க்க, உன்னைய விட்டால் எனக்கு வேறு யார் துணை என்பது போல அவள் அதைப் பார்க்க என சில நிமிடப் போராட்டத்தின் பின்னர், பால் பாயாசம் செய்யும் முறையை ஒன்றுக்கு நான்கு முறை பார்த்து, ஒருமாதிரி உயிரைக் கொடுத்து பாயாசம் செய்து முடித்தாள் கோதை.

ஜேம்ஸ் பாயாசம் கேட்டு மூன்று மணி நேரத்தின் பின்னரே பாயாசக் கிண்ணத்தைக் கொண்டு போய் அவனுக்கு முன்னால் நீட்டினாள் கோதை, முகமெல்லாம் வியர்த்து நெற்றியோரம் கீற்றாய் கரியும் பூசி இழுத்துச் செருகிய சேலையோடு கையில் பாயாசக் கிண்ணத்தோடு வந்து தன் முன்னால் நின்றவளை, என்னவென்பது போல ஜேம்ஸ் பார்க்க, அவ்வளவு தான் கோதைக்கு புசுபுசுவெனக் கோபம் ஏறி விட்டது.

“என்ன பாக்கிறியள் நீங்கள் தானே பாசாயம் சாரி சாரி.. பால்பாயாசம் கேட்டனியள்.. அது தான் செஞ்சு கொண்டு வந்தனான்.. இந்தாங்கோ..”
என கடுப்பை மறைத்து அவள் சொல்ல
“நான் கேட்டு எவ்வளவு நேரம்..”
என அழுத்தம் மாறாமல் அவன் கேட்க கோதை அவனை முறைத்தாள்.

“கேட்ட உடன குடுக்க நான் என்ன அச்சய பாத்திரமோ.. பால் பாயாசம் இதுவரை நான் செஞ்சது கூடக் கிடையாது.. ஏதவோ பாவம் பொடியன் கேட்டிச்சுதே எண்டு கூகுளாண்டவரிட்டை எல்லாம் உதவி கேட்டு.. ரொம்ப கஷ்டப் பட்டு கடினப் பட்டு பாயாசம் செஞ்சு கொண்டு வந்தால்.. உப்புடிக் கேக்கிறியள்.. இது உங்களுக்கே அடுக்குமா.. இந்தாங்கோ குடியுங்கோ..”
என்று கொண்டு அவன் முன்னே கிண்ணத்தை நீட்ட, அவனின் நீல விழிகள் அவளின் கருவிழிகளை ஊடுருவ, அவன் கரமோ பாயாசக் கிண்ணத்தை வாங்கிக் கொண்டது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!