குறிஞ்சி மலர்.. 23
பங்களாவின் மொட்டை மாடியில் இருந்து, வேலைக்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்திற்கான காசோலைகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்.
அந்த நேரம் அவனுக்கு பால் தேநீர் கொண்டு வந்தாள் கோதை. அவளது கெட்ட நேரமோ தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து ஜேம்ஸின் பரம எதிரியான லாரன்ஸ் ரோமியோவிடம் இருந்து அழைப்பு ஒன்று வரவே, அதை தூக்கி காதில் வைத்தான் ஜேம்ஸ்.
அந்த கடன்காரன் என்ன சொன்னானோ தெரியவில்லை. தொலைபேசி தொலைவில் இருந்த தூணில் மோதி உயிரை விட, அடுத்தது கோதை நீட்டிய தேநீர்க் கோப்பை கீழே விழுந்து சிதறியது. சுடச்சுட இருந்த தேநீர் அவளது காலில் பட்டுச் சிதற, வலியில் கால்களை உதறியவள் கோபத்தில் ஜேம்ஸை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் நிதானத்தில் இருந்தால் தானே இவளது பார்வையைக் கண்டு கொள்ள, ஆத்திரம் அடங்காமல் காசோலைகள் கிடந்த மேசையை அவன் தூக்கி உடைக்கப் போக, அடுத்து நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து, அவனது வலது கையை கோதை இறுகப் பற்றிக் கொண்டாள். திடீரென தோன்றிய ஸ்பரிசத்தில் ஒரு கணம் இளகி அவளைப் பார்த்தான் ஜேம்ஸ்.
ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் அவனது கையைப் பற்றியவளுக்கு, அவன் தன்னைப் பார்க்கிறான் என்பதை உணர்ந்ததும் வழமை போல கை விரல்கள் நடுங்கத் தொடங்கவே, மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவனது தோளை மெல்லத் தட்டிக் கொடுத்தாள்.
தன் கையைப் பிடித்திருந்த கரத்தின் நடுக்கத்தையும், தோளைத் தட்டிக் கொடுத்த கரத்தின் நடுக்கத்தையும் பார்த்தவனுக்கு, லேசாகக் கோபம் குறைவது போல இருக்கவே, விழிகளை மூடித் தன் தலையை அழுந்தக் கோதி விட்டுக் கொண்டு மீண்டும் அமர்ந்து கொண்டான்.
அவன் அமர்ந்து கொண்ட பிறகும் கூட கோதை தன் கைகளை எடுக்கவில்லை. அமர்ந்தவாக்கில் அவளது கரத்தையும் அவளது முகத்தையும் பார்த்தவனது பார்வையில், அப்போது தான் அவன் அமைதியாக இருந்து விட்டான் என்பதை உணர்ந்து கோதை வேகமாகக் கைகளை விலக்கினாள்.
“அச்சோ கடவுளே இப்ப இவன் என்ன நினைச்சானோ தெரியேல்லையே.. நான் எப்புடி அம்புட்டு தைரியமா இந்த கார மிளகாயை தொட்டனோ தெரியேல்லையே.. சரி எதையாவது சொல்லி சமாளிப்பம்..”
எனத் தனக்குத் தானே முணுமுணுத்தவள்,
“இந்தா உப்புடி எல்லாம் பொசுக்கு பொசுக்கெண்டு தூக்கி அடிக்காதேங்கோ.. அப்புடியே அடிக்கிறதா இருந்தாலும் நான் இல்லாத இடத்தில தூக்கி எறியுங்கோ.. நீங்கள் அடிக்கிற பொருள் சிதறி மூஞ்சி முகரையில பட்டு அது கிழிஞ்சு தொங்கீடுமோண்டு பயம்மாவே சுத்த வேண்டிக் கிடக்கு.. எம்புட்டு கஷ்ட பட்டு தேத்தண்ணி ஆத்தி வந்தனான்.. ஒரு நொடியில அதை அப்புடி விசிக்கீட்டியள்.. இனி போய் திரும்பவும் நான் தான் தேத்தண்ணி ஆத்தோணும்.. ஒரு நாள் வந்து தேத்தண்ணி ஆத்தி பாருங்கோ அதை நான் தூக்கி எறியிறன்.. அப்ப தெரியும் என்ரை கஷ்டம்.. இனியாவது ஏதும் தூக்கி உடைக்கிறது எண்டால் சொல்லீட்டு உடையுங்கோ.. நான் ஒரு அஞ்சடி இல்லையில்லை ஒரு பத்தடியாவே தள்ளி தூரம்மா நிக்கிறன்..”
என்று கொண்டு வேகமாக ஓடி விட்டாள்.
பின்னே அங்கேயே நின்றிருந்தால் அந்த அசுரன் எதையாவது தூக்கி அவள் மேலேயே போட்டுடைத்தால் என்ன செய்வது.
“இந்தா..”
என்று கோதை ஆரம்பிக்கும் போதே ஏதோ சொல்ல வருகிறாள் என அவளைப் பார்த்தவன், அவள் கடகடவென எல்லாவற்றையும் சொல்லி விட்டு நிற்காமல் ஓடவும், தலை சாய்த்து ஓடும் அவளையே பார்த்திருந்தான்.
வழமை போல சமையலறையினுள் வந்தவள் நெஞ்சை அழுத்தி மூச்சு வாங்கினாள்.
“உவனை எல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா.. எப்புடி தான் உவனால உப்புடி இருக்க முடியுதோ.. எல்லாருக்கும் கோவம் வந்தா கண் சிவக்கும்.. உவனுக்கு மட்டும் கண் பழுப்பும் மஞ்சளுமா மாறுது.. ஒரு வேளை மஞ்சக்காமாலையா இருக்குமோ.. இனி உவனுக்கு எவனாச்சு ஃபோன் எடுத்தால் அவனுங்களைத் தேடிப் போய் உதைக்கோணும்.. எதுக்கும் உவனுக்கு முன்னால போறதைக் கொஞ்சம் குறைப்பம்.. பிறகு உயிருக்கு உத்தரவாதம் இல்லை..”
எனப் புலம்பியபடி மீண்டும் பால் தேநீர் தயாரிக்கத் தொடங்கினாள்.
அதற்குள் எலிசபெத்துக்கும் செபமாலைக்கும் சத்துமா கஞ்சி கொடுக்க வேண்டிய நேரத்தை, அவளது விலைமதிப்பே இல்லாத தொலைபேசி அலாரம் மூலம் தெரிவிக்க, வேகமாக சத்துமா கஞ்சியை இரண்டு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டவள் அதை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, ஜேம்ஸ்ஸுக்கு கொடுக்க வேண்டிய பால் தேநீரை எடுத்துக் கொண்டு மீண்டும் மாடிக்குப் போனாள்.
ஜேம்ஸின் முன்னால் கிடந்த மேசையில், கொண்டு சென்ற தேநீர் கோப்பையை வைத்து விட்டு
“இந்தா பாருங்கோ.. திரும்பவும் தூக்கி அடிச்சிறாதேங்கோ.. அப்புறமா இந்த சத்துக் கஞ்சியை என்னால திரும்ப செய்யேலாது இது உங்கடை அம்மாக்கும் அப்பம்மாக்கும்..”
என்று கொண்டு திரும்பியவள், மீண்டும் வேகமாக அவனிடம் வந்தாள். இப்போது என்னவென்பது போல அவன் பார்க்க
“அப்புறமா இன்னொரு விசியம்.. தேத்தண்ணி குடிச்சு முடியுற வரைக்கும் எவனுந்தை ஃபோனையும் எடுக்கக் கூடாது சொல்லீட்டன்..”
என்று விட்டு அவள் வேகமாக போய் விட்டாள்.
சற்று முன்னால் தான் அவனுக்கு முன்னால் போகவே கூடாது எனத் தான் நினைத்ததை அவள் சுத்தமாக மறந்து போய் விட்டாள். அதோடு அவ்வப்போது அவனுக்கு முன்னால் அவளுக்கு குருட்டுத் தைரியமும் வந்து வந்து போகிறது. அது தான் இந்தப் பேச்சு. ஆனால் பதிலுக்கு என்று அவன் முறைக்கிறானோ அன்று தான் அவள் மயக்கம் போட்டு விழும் நாளாக இருக்கும்.
எலிசபெத் மற்றும் செபமாலை இருக்கும் அறைக்குள் வந்தவள், அவர்கள் அருகில் போய் அமர்ந்து கொண்டாள். இவர்களை அவள் பார்த்துக் கொள்ளத் தொடங்கி ஒரு மாதம் முடிந்தது கூடத் தெரியாமல், நாட்கள் அவ்வளவு வேகமாக ஓடி மறைந்திருந்தது.
இருவரும் அவளை மட்டுமே நெருங்க விட்டிருந்தாலும், இன்னும் கூட எதையுமே மனம் விட்டுப் பேச முன் வந்திருக்கவில்லை.
இப்போது கோதை அவர்களிடம் சத்துமா கஞ்சியை நீட்ட, அதை வாங்கி உண்ணத் தொடங்கியவர்களையே பார்த்திருந்தவளுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது, தான் இவர்களுக்கு நடக்கும் கொடுமை பற்றி இன்னும் ஜேம்ஸிடம் பேசவில்லை என்பது.
“அடக் காளியாத்தா.. இந்த விசியத்தை எப்புடி நான் மறந்தன்.. அந்தாளுக்கு முன்னால போய் நிண்டால் கதைக்க வேண்டியது மட்டும் ஒழுங்கா வந்திடுறதில்லை.. அடுத்த தடவை கண்டிப்பா கதைக்கோணும்..”
எனத் தன்னுள் சொல்லிக் கொண்டவள், இருவருடனும் ஒரு மணி நேரம் செலவழித்து விட்டே வந்தாள்.
தினமும் இருவருக்காயும் ஒரு மணி நேரம் ஒதுக்கி கொள்ளும் கோதை, அந்த நேரத்தில் ஊர்க் கதை எல்லாம் பேசுவாள். இரண்டு பெண்மணிகளும் அவளையும் அவள் பேசுவதையுமே கன்னத்தில் கை வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவள் பேசுவது அவர்களுக்கு பிடித்திருந்தது. ஆனாலும் தாங்கள் வாய் திறந்து ஏதும் பேசிக் கொள்ள மாட்டார்கள்.
கோதை தானாகவே திரட்டிய தகவலின் படி, ஜேம்ஸின் அன்னை எலிசபெத் ஒரு கிறிஸ்தவ பெண்மணி என்றும், அவரின் கணவர் கிறிஸ்தவ பெண்ணான செபமாலைக்கும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட்டுக்கும் பிறந்தவர் என்றும் தெரிந்து கொண்டாள். எலிசபெத்தின் கணவர் பெயர் சைமன் இவர்கள் இருவருக்கும் பிறந்த ஒரே வாரிசு ஜேம்ஸ்பீட்டர்.
இந்தக் கூடுதல் தகவல் அவளுக்கு கிடைத்தது வியாகேசின் மூலம் தான்.
“அப்பா..”
“என்ன பிள்ளை..”
“எனக்கொரு டவுட்டு..”
“என்ன டவுட்டு..”
“உங்கடை முதலாளி என்ன இனம்..”
“இனமோ..”
“ஓம் ஓம்.. இந்த தமிழா சிங்களமா முஸ்லீமா கிறிஸ்டியனா.. எங்கடை சிறிலங்காவுல இந்த நாலு இனம் தானே இருக்கு.. இந்த நாலு இனத்துல பிறந்த எவனுமே உப்புடி வெளிறிப் போன மாதிரி உரிச்ச கோழி நிறத்துல இல்லையே.. இந்தாள் மட்டும் ஏதவோ ஒரு தினுஷான கலருல இருக்காரே.. அந்த பாட்டுல வருமே வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தாய்ங்களா வெயிலுக்கு காட்டாமல் வளத்தாங்களா அந்த மாதிரி இருக்கு..”
“அட அதுவோ.. பீட்டருந்த அம்மா கிறிஸ்டியன்ஸ் தான் ஆனால் அவன்ரை அப்பா இருக்கார் தானே சைமன்.. அவரு எங்கடை செபாம்மாக்கும் இங்கிலாந்து நாட்டுக்காரருக்கும் பிறந்தவர்..”
“ஓ இது தான் அந்த வெள்ளரிப் பழக் கலருக்கும் நீலக் கண்ணுக்குமான கதையோ.. அதிருக்கட்டும் அதெப்புடி சிறிலங்கா பிள்ளையை இங்கிலந்துகாரர் கட்டினவர்..”
“லவ்சு தான்.. அது வந்தால் இங்கிலாந்துகாரன் என்ன ஆபிரிக்ககாரனையே கட்டலாம்..”
“ஆமால்ல..”
என்று கொண்டு வந்து விட்டாள் கோதை.
இப்போது அதைப் பற்றி யோசித்தபடி தன்னறையில் இருந்த கோதை, தானாகவே இரண்டு பெண்களிடமும் கதை கேட்டுப் பார்க்கலாமோ என்று யோசித்தாள். அதாவது அவர்களின் காதல் கதை பற்றி ஆர்வத்தோடு கேட்டால், அதைச் சொல்லிக் கொண்டே அவர்கள் இப்போது நடப்பவை பற்றியும் வாய் திறக்கக் கூடும் என யோசனை செய்தபடி இருந்தவளின் அறைக் கதவு தட்டப் படவே, யாராக இருக்கும் என யோசனை செய்து கொண்டு போய் கதவைத் திறந்தவள், அங்கே நின்றிருந்தவனைப் பார்த்ததும் கொஞ்சம் பதறித் தான் போனாள்.
கோதையின் அறை வாசலில் ஜேம்ஸ் தான் நின்றிருந்தான். இப்போது என்ன ஏழரையைக் கூட்டப் போகிறானோ தெரியல்லையே என அவள் நின்றிருக்க,
“கொஞ்சம் வெளிய வர முடியுமா..”
என்று கேட்டான் ஜேம்ஸ்.
அவன் அப்படி கேட்டதும் அறையை விட்டு வெளியே வந்து நின்று கொண்டு அவனைப் பார்த்தாள் அவள்.
“என்ன..”
“நீங்கள் தான வெளியால வரச் சொன்னியள்.. அது தான் வந்தன்.. பிறகு ஏன் என்ன எண்டு கேக்குறியள்..”
“வெளிய எண்டால் அவுட் சைட்..”
“ஆ..”
“ரவுனுக்கு..”
“ஓ ரவுனுக்கா..”
என்றபடி அவனை ஓரக் கண்ணால் பார்த்து
“இவனை நம்பிப் போகலாமோ.. அங்கினை எவனையாவது தூக்கி அடிச்சான் எண்டால் என்ன செய்றது.. அப்புடி அடிச்சால் விட்டிட்டு ஓடியாந்திர வேண்டியது தான்..”
எனத் தன்னுள் சொல்லிக் கொண்டவள், தன்னை ஒரு தடவை குனிந்து பார்த்து விட்டு
“சரி வாங்கோ போவம்..”
என்று கொண்டு அவனுக்கு முன்னால் நடக்கத் தொடங்கினாள்.
வேகமாக முன்னால் போனவள், வீட்டின் தலைவாசலைக் கடந்து, வெளி வாசலுக்கு போகவும் தேவா அவளை ஓடி வந்து தடுத்தான்.
“எங்கேம்மா போறீங்கள்.. ஐயா அங்க உங்களைப் பாத்துக் கொண்டு நிக்கிறார்..”
என அவன் சொல்ல
“உங்கடை கொய்யா தான் ரவுனுக்கு போகோணும் எண்டு சொன்னவர்.. பிறகு அங்கினை ஏனாம் நிக்கிறார்.. போய் பஸ் பிடிக்கோணும் எல்லோ..”
எனப் பதில் சொன்னாள்.
“பஸ்ஸிலயோ.. பஸ்ஸில இல்லையம்மா காரில தான் போகப் போறியள்..”
என அவன் சொல்லி முடிக்கவும் அவர்களின் முன்னால் அந்தக் கறுப்பு நிறக் கார் வழுக்கிக் கொண்டு வந்து நின்றது.
“இதுலயா.. அதுவும் இவன் கூடயா..”
என முணுமுணுத்த கோதை தயங்கி நிற்க, தேவா காரின் பின் பக்க கதவை திறந்து விட போக, சொடக்கிட்டு அவனை நிறுத்திய ஜேம்ஸ், காரின் முன் கதவைப் பார்த்தான். அவனது பார்வையைப் புரிந்து கொண்ட தேவா ஓடி வந்து காரின் முன் பக்க கதவை திறந்து விட்டான்.
கார் கதவை திறந்து விட்டவனையும், காரின் உள்ளே இருந்தவனையும் மாறி மாறிப் பார்த்தவளோ
“நான்.. பஸ்ஸில வாரனே..”
என்று மெல்ல இழுக்க, அவ்வளவு தான் காரின் உள்ளே கிடந்த அலங்கார பொம்மை கார் ஜன்னலின் ஊடாக பறந்து போய் மதிலில் பட்டுச் சிதறியது.
அவ்வளவு தான் அடுத்த கணமே கோதை காரில் ஏறி சட்டென்று அமர்ந்து கொள்ள, அந்த கார் திருகோணமலை ரவுனை நோக்கி சீறிப் பாயத் தொடங்கியது.