அசுரனின் குறிஞ்சி மலரே.. 24

4.8
(13)

குறிஞ்சி மலர்.. 24

பொதுவாக பயணம் போகும் போது, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்கும் கோதையால் அன்று அப்போது அப்படி வேடிக்கை பார்க்க முடியவில்லை.

காரணம் காரின் இரு மருங்கும் பசுமையான மரங்கள் செடிகள் புதர்கள் இருந்த போதும், அசுரனின் கரத்தில் கார் அத்தனை வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தது.

சாதாரண வேகத்தை விடச் சற்று வேகமாக வாகனம் பிரயாணித்தாலே பயத்தில் கண்களை மூடி குலதெய்வத்தை தொல்லை செய்யும் கோதைக்கு, இந்த வேகம் உடம்பை நடுங்க வைத்திருந்தது. கண்களை மூடித் தன்னை நிதானப் படுத்த முயன்றவளுக்கு அது முடியாமல் போகவே, மெல்லத் திரும்பி ஜேம்ஸைப் பார்த்தாள்.

கதைகளில் வரும் கடினப்பாறை போன்ற முகம், அது போல இருந்தது அவனின் முகம். அவனின் காலில் கையில் விழுந்தாவது வேகத்தைக் குறைக்கச் சொல்லுவோம் என நினைத்தவள்
“என்னங்கோ..”
என அழைத்தாள்.

அந்த அழைப்பு அவளுக்கே கேட்கவில்லை. மீண்டும் இரண்டு முறை அழைத்தவளுக்கு, அழுகையே வந்து விட்டது. தன்னைத் திடப் படுத்திக் கொண்டு, மெல்ல நகர்ந்து அவனருகே போய், அவன் கையைப் பிடித்து
“என்னங்கோ..”
என கொஞ்சம் சத்தமாக அழைத்தாள்.

அந்த தொடுகைக்கும் அழைப்புக்கும் பலன் இருந்தது. என்னவென்பது போல பாறைக்கல்காரன் திரும்பிப் பார்த்தான்.

“இல்லை.. பயமாக் கிடக்கு.. கொஞ்சம் சிலோவா போங்களேன்..”
எனக் கெஞ்சாத குறையாக அவள் சொல்ல, அவளை ஒரு நொடி ஆழமாகப் பார்த்தவன், சட்டென்று காரை நிறுத்தி விட்டான்.

சட்டென்று கார் நின்ற வேகத்தில், சீட் பெல்ட் போடததால் அவனோடு மோதிக் கொண்டு விழுந்தாள் கோதை.

அவனை இடித்து விழுந்ததும் உடனேயே
“சாரி..”
என்று கொண்டு தள்ளி அமர்ந்தவள், சீட் பெல்ட்டை தேட, ஸ்டியரிங்கில் கை வைத்து தலையை தாங்கி இருந்தவன், இரண்டு மூன்று முறை தலையை அழுந்த கோதி விட்டு, அவள் பக்கம் திரும்பி அவளுக்கு சீட் பெல்டை போட்டு விட்டான்.

அவன் தன் பக்கம் வந்து சீட் பெல்ட் போடவும், அவன் உடல் தன் மேல் படாமல் இருக்க, அவள் உடம்பை மெல்ல எக்கினாள். அதைப் பார்த்து விட்ட ஜேம்ஸ் முடிந்த வரை தன் விரல் படாமலேயே பெல்டை போட்டு விட்டு திரும்பி அமர்ந்து கொண்டான்.

மீண்டும் கார் பயணம் தொடர, இப்போது கோதையால் வெளியே இரசிக்க முடிந்திருந்தது. அதே நேரத்தில் காரில் இருந்த ஓடியோ பிளேயரில் யாரோ ஒரு ஆங்கிலப் பாடகன் உச்ச ஸ்தாயியில் சங்கு ஊதுவது போல சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருந்தான். பொதுவாக கோதை யாருடைய திறமையையும் கிண்டல் செய்பவள் இல்லை என்றாலும், இப்போதைய சூழலுக்கு அந்த பாடல் அவளுக்கு ஒப்பாரி வைப்பது போலத் தான் இருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“வேறை பாட்டே இல்லையோ..”

“ஏன் இந்த ஸோங்குக்கு என்ன..”

“இந்த ஸோங்குக்கு ஒண்டுமில்லை.. எனக்கு தான் தலை கிறுகிறுக்குது..”

“வை..”

“இல்லை எனக்கும் உங்களுக்கும் புரியுற போல ஒரு பாட்டு போடக் கூடாதா..”

“இந்த பாட்டு உனக்கு புரியலியோ..”

“இல்லை புரியலியே..”

“ஓவ்.. உனக்கு புரியும்னு தான் போட்டன்..”

“இல்லைங்க சத்தியமா புரியல்லை..”

“சரி மாத்திடலாம்..”

“ம்ம் மாத்துங்க..”

“உனக்கு தமிழ் பாட்டு தான் புரியுமா..”

“ஓம் ஓம்..”

“ஓ சரி..”
என்றவன் அடுத்து ஓட விட்ட பாடலில், கோதை அவனை விழி விரித்துப் பார்த்தாள்.

‘சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா.. செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!’
என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்ததுமே, கோதைக்கு புல்லரிக்கத் தொடங்கி விட்டிருந்தது.

அந்தப் பாடல் அவள் உயிர்ப் பாடல், இது எப்படி இவனுக்கு தெரிந்தது என யோசனை செய்தவள், உடனேயே தமிழ் பாட்டு என்ற ரீதியில் போட்டிருப்பான் போல மற்றபடி இது எனக்கு பிடித்த பாடல் என போட்டிருக்க மாட்டான் என நினைத்தவள், கண்களை மூடி அந்த பாடலை இரசிக்கத் தொடங்கி விட்டிருந்தாள்.

அளவான வேகத்தோடு பயணித்த அந்த கார், மிகப் பெரிய சாப்பிங் மாலின் முன்னால் வந்து நின்றது.
கண்களைத் திறந்து அந்த மாலைப் பார்த்தவளுக்கு தலை சுற்றியது.

“ஆத்தி.. இதுக்குள்ள போனால் எப்ப வெளியால வாரது.. வாரதுக்கு பாதை மறக்காம இருக்கோணுமே..”
எனத் தன்னுள் சொல்லிக் கொண்டு, பக்கத்தில் இருந்தவனைப் பார்க்க, அவனோ தன் இருக்கையை விட்டு இறங்கி வந்து, அவள் இறங்குவதற்கு வசதியாகக் கார்க் கதவைத் திறந்து விட, அவனைக் கண்டதுமே அந்த சாப்பிங் மாலில் இருந்து அந்த மாலின் முதலாளியே ஓடி வந்து அவனை வரவேற்றார்.

“என்ன சார்.. ஒரு வார்த்தை சொல்லி இருக்க கூடாதா.. இந்த மாலையே உங்க இடத்துக்கு அனுப்பி இருப்பனே.. இருந்தாலும் உங்களை மாதிரியான பெரியவங்க இங்க வந்தால் அது எங்களுக்கும் சுபீட்சம் தானே.. வாங்கோ வாங்கோ..”
என அந்த முதலாளி ஜேம்ஸை வரவேற்க, அவரது வரவேற்பை தன் தலையசைப்பில் ஏற்றுக் கொண்டவன், கோதை இறங்கும் வரை கார் கதவை பிடித்துக் கொண்டு நின்றான்.

ஜேம்ஸே ஒருவருக்கு கார் கதவை திறந்து விடுகிறான் என்றால், அவர் எவ்வளவு முக்கியமானவராக இருப்பார் என நினைத்த அந்த முதலாளி, காரை விட்டு இறங்கிய கோதையைப் பார்த்து
“வணக்கம் மேடம்..”
என்று கை கூப்ப,
“மேடமா நானா.. என்னங்கடா இது கோதைக்கு வந்த மரியாதை..”
என முணுமுணுத்துக் கொண்டு இறங்கி நின்றாள் கோதை.

அவளது சாதாரணமான தோற்றத்துக்கு இவ்வளவு மரியாதை கிடைப்பது என்பது அபூர்வம் தான், ஆனால் ஜேம்ஸோடு வந்ததால் அவளுக்கு மரியாதை மரியாதையாகக் கொட்டியது.

முதலாளி முன்னே நடக்க, அவனைத் தொடர்ந்த ஜேம்ஸை தொடர்ந்தாள் கோதை.

மாலின் உள்ளே சென்றதும், எல்லோருமே அவளையே பார்ப்பது போன்றதொரு பிரம்மை ஏற்படவே, நிதானித்து சுற்றிப் பார்த்தவளுக்கு அது பிரம்மை இல்லை உண்மை என்பது புரிந்து போய் விட்டது.

“இதென்னடா இது இப்புடிக் குறுகுறுண்டு பாக்குதுகள்.. தலைகிலை ஏதும் குழம்பீட்டோ.. சீலை ஒழுங்காத் தானே கட்டியிருக்கிறன்..”
எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டே புடவையைச் சரி செய்தவள், அந்த மார்பிள் தரை வழுக்கி கால் தடுமாறி விழப் போனாள்.

ஒரு எட்டில் அவளைப் பிடித்துக் கொண்ட ஜேம்ஸ்
“பாத்து..”
என்று விட்டு, மீண்டும் விலகி முன்னே நடக்க,
“பாத்ததால தான்டா விழவே போனன்..”
என முணுமுணுத்துக் கொண்டு அவனுக்குப் பின்னால் வேகமாகப் போனவள், அவனது கரத்தை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

அவள் தனது கரத்தை வேகமாகப் பிடிக்கவும், திரும்பி அவளைப் பார்த்தவன், அவள் சௌகரியம் இல்லாத வகையில் அங்கும் இங்கும் பார்த்து விழிப்பதைப் பார்த்ததும், அவளைத் தன்னோடு இழுத்துப் பக்கத்தில் நடக்க விட்டு, லேசாகத் தோளோடு பட்டும் படாமலும் பிடித்துக் கொண்டான்.

அவனது கை வளைவில் நடக்கையில் பாதுகாப்பாய் உணர்ந்தவள், மறந்தும் அவனை விட்டு விலகவில்லை. நேராக புடவைகள் அடுக்கி வைக்கப் பட்ட இடத்துக்கு வந்தவன், அவளது தோளைப் பிடித்து அங்கே இருந்த சோபாவில் அமர்த்த, அடுத்த நொடியே அவளின் முன்னால் வண்ண மயமான புடவைகள் கடை விரிக்கப் பட்டன.

தன்னை அமர்த்தி விட்டு, பின்னால் நின்றவனை அண்ணாந்து பார்த்து
“ஆருக்கு சாறி எடுக்கோணும்.. உங்கம்மாவுக்கும் அப்பம்மாவுக்குமா.. அவைக்கு என்ன கலர் புடிக்கும் எண்டு சொல்லுங்கோ..”
எனக் கேட்க, அவளது முகத்தையே அரைநொடி வெறித்துப் பார்த்தவன்
“உனக்கு தான் சாறி.. பிடிச்சதை எடு..”
என அழுத்தமாகச் சொல்லி விட்டு, அவளுக்கு பக்கத்தில் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்.

“எனக்கா..”
என்று கொண்டு முன்னால் கிடந்த வானவில் வண்ண புடவைகளைப் பார்த்தவளுக்கு லேசாக கண்கள் கலங்கவே, யாரும் அறியாமல் கண்ணீரை சுண்டி விட்டாள். அது நீல விழிக்காரன் பார்வைக்கு தப்புமா
“என்னாச்சு..”
என்றபடி அவளை நெருங்கி அமர்ந்து அவள் முகம் பார்க்க, அவளுக்கு தான் சங்கடமாகிப் போய் விட்டது.

“ஒண்டுமில்லை ஒண்டுமில்லை..”
என அவசரமாகச் சொல்லி, வேகமாய்த் தள்ளி அமர்ந்து கொண்டாள். அவளையும் அவள் தள்ளி அமர்ந்த இடைவெளியையும் பார்த்தவன் கண்களை மூடித் தன்னை நிதானப் படுத்தி விட்டு, புடவைகள் மேல் பார்வையைச் செலுத்தினான்.

“இந்த சாறி பாருங்க மேடம்.. இந்த சாறி உங்க கலருக்கு சும்மா தூக்கி அடிக்கும்..”
என்று கொண்டு, அங்கிருந்த பெண் ஒவ்வொரு புடவையாக கோதைக்கு தூக்கி காட்ட, அவளோ ஜேம்ஸை பார்த்து,
“இதெல்லாம் நான் கட்டுறதில்லை.. அப்புறம் என்னத்துக்கு..”
என்று கேட்க, அரையடி தள்ளி இருந்தவன் அவள் பக்கத்தில் வேகமாக வந்தான்.

“என்ன..”

“இந்த கலர் புடவை எல்லாம் நான் கட்டுறதில்லை..”

“ஏன்..”

“ஏனெண்டால்.. நான் நான்..”

“நீ..”

“நானொரு விதவை..”

“வித்தாவையா புரியல்லை..”

“ஆ.. எப்புடி சொல்ல.. விதவைக்கு என்ன இங்கிலீஷ்.. ஆ நானொரு விடோ..”

“ஸோ..”

“ஸோவா.. நான் கலர் புடவை கட்டக் கூடாது..”

“அப்புடினு யார் சொன்னது..”

“பிளீஸ் விதண்டாவாதம் செய்யாதேங்கோ..”
என அவள் சொல்லி முடிக்கவும், எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன், தாங்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்கிறோம் என அங்கிருந்தவர்களை அப்புறப் படுத்தினான்.

எல்லோரும் அங்கிருந்து போனதும் இப்போது ஜேம்ஸும் கோதையும் மாத்திரம் தான் அங்கே இருந்தார்கள்.

கை முஷ்டி இறுக நின்றவன், அவளுக்கு பின்னால் போய் நின்று கொண்டு, அவளையே சில நொடிகள் பார்த்திருந்து விட்டு
“இப்ப சாறி எடுக்க முடியுமா முடியாதா..”
என அழுத்தமாகக் கேட்க, அவளோ இருந்தபடியே அவனை அண்ணாந்து பார்த்து
“நான் தான் கலர் புடவை கட்டுறதில்லை எண்டு சொல்லுறனே அப்புறம் எப்புடி எடுக்க..”
என பாவமாகக் கேட்டாள்.

அவ்வளவு தான் அவளுக்கு முன்னால் கிடந்த நீளமான மேசையை, ஜேம்ஸ் ஒற்றைக் கையால் வேகமாகத் தூக்கி விட, அந்த கனமான மேசையை அவன் ஒற்றைக் கையால் தூக்கியது ஒரு பக்கம் அவளுக்கு அதிர்ச்சி என்றாலும், அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பது புரிந்து போய் விடவே, வேகமாக எழுந்து அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.

“அச்சோ முதல்ல அதைக் கீழ விடுங்கோ.. சாறி தானே நான் எடுக்கிறன் நான் எடுக்கிறன்.. ஆ ஊ எண்டா எதையாவது தூக்கிட வேண்டியது.. ஆராவது வந்திடப் போறினம் கீழ விடுங்களேன் பிளீஸ்.. அச்சாப் பிள்ளை எல்லே..”
என அவள் அவனைக் கெஞ்ச, அவளைப் பார்த்தபடியே அந்தப் பெரிய மேசையை கீழே விட்டான் ஜேம்ஸ்.

அவன் மேசையைக் கீழே விட்டதும், இடுப்பில் கை வைத்து, உதடு குவித்து உள்ளிருந்த காற்றை வெளியே விட்டவள், அவனை முறைத்துக் கொண்டே அமர்ந்து கொண்டாள். அதன் பின் ஒவ்வொரு புடவையாக ஆராய்ந்தவளின் பக்கத்தில் மீண்டும் வந்து அமர்ந்தவனோ
“பிப்டி சாறீஸ்.. எடுத்துக்கோ..”
என்று சொல்ல, வேகமாகத் திரும்பி அவனை முறைத்தாள்.

“என்ன விளையாடுறியளா.. ஐம்பது சாறி எடுத்து நான் என்ன கூடாரம் கட்டுறதோ.. ஒண்டு போதும் எனக்கு..”

“பிப்டி எடுக்க முடியுமா முடியாதா..”

“கடவுளே.. சரி ஒரு அஞ்சு எடுத்துக்கிறன்..”
என்று சொன்னவள், அவனது பார்வை போன திக்கில் பதறிப் போய்
“ஆத்தி இப்ப என்ன ஐம்பது சாறி எடுக்கோணும் அவ்வளவு தானே.. ஆனா எனக்கு எதுகுமே இங்க பிடிக்கலை அதனால இப்போதைக்கு பத்து எடுக்கிறன்.. மிச்சத்தை பிறகு எடுக்கிறன் பிளீசுங்க..”
என அவனது கையைப் பிடித்து மீண்டும் கெஞ்ச, சில நொடிகள் அவளைப் பார்த்தவன், சரியெனத் தலையை ஆட்ட, நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அப்படியே சோபாவில் சாய்ந்து விட்டாள் கோதை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!