குறிஞ்சி மலர்.. 25
தலைக்கு குளித்து விட்டு, தோள் வரை கிடந்த தன் முடியை உலர்த்தியபடி வந்த கோதைக்கு, கட்டிலில் கிடந்த புடவைகளைப் பார்த்ததும் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
எத்தனை அடாவடித்தனம் செய்து இந்தப் புடவைகளை வாங்க வைத்தான் அந்த அசுரன் என நினைத்தவளுக்கு, அவனிடம் அந்தக் கோபத்தைக் காட்டத் தான் முடியவில்லை.
வழமை போல வெள்ளையில் கறுப்பு கரையிட்ட புடவையை எடுத்து உடுத்திக் கொண்டவள், அன்று ஜேம்ஸின் முன்னால் போகக் கூடாது என முடிவெடுத்துக் கொண்டாள்.
காரணம் புடவைகளை அவளிடம் கொடுத்து விட்டு, இனிமேல் இதை தான் உடுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டான். அவனோடு பேசி வெல்ல முடியுமா அதனால் அப்போது ஒன்றும் மறுத்துப் பேசாமல் புடவைகளை வாங்கி வந்து விட்டாள்.
வந்த பின் ஏன் இதை வாங்கி வந்தோம் என்பது போலாகி விட்டிருந்தது அவளுக்கு. அதனால் தான் அவன் முன்னால் போக கூடாது என முடிவெடுத்து விட்டாள். ஆனால் முடிவெடுத்த அடுத்த நொடியே அவன் முன்னால் போய் நிற்க வேண்டிய சூழ்நிலை தான் அவளுக்கு அடிக்கடி வந்து தொலைக்கிறது.
தன் அரையடி கூந்தலை ஒருவாறு கொண்டைக்குள் அடக்கியவள், பொட்டில்லாத தன் நெற்றியையும் தாலியோடு வேறு நகையும் இல்லாத வெற்றுக் கழுத்தையும் ஒரு நொடி பார்த்து பெருமூச்சு விடவும், அவளது அறைக் கதவை யாரோ உடைப்பது போலத் தட்டினார்கள்.
“ஆருடா அது.. கொஞ்ச நேரமாச்சும் என்னைய பீல் பண்ண விடுறாங்களா.. உடன வந்திருவானுகள் எனக்கு மட்டும் ஏன் தான் இப்புடியோ..”
என்று புலம்பிக் கொண்டே கதவைத் திறந்தவள், அங்கே கை கட்டிக் கொண்டு நின்ற ஜேம்ஸை பார்த்ததும் கப்சிப்பென வாயை இறுக மூடிக் கொண்டு விட்டாள்.
அறை வாசலில் நின்றபடியே அவளை மேலும் கீழுமாக பார்த்தவனது பார்வை, அவளைக் கடந்து பின்னால் இருந்த கட்டிலில் கிடந்த புடவைகளில் போய் நிலைத்து நின்றது. அவனது பார்வையைத் தொடர்ந்து தானும் திரும்பிப் பார்த்தவளுக்கு ஐயோவென்றாகி விட்டது. இப்போது இவனை எப்படியாவது சமாளிக்க வேண்டுமே என்பது போல அவனைத் திரும்பிப் பார்த்தாள் கோதை.
“அது வந்து..”
என கோதை வாயைத் திறந்து எதையோ சொல்வதற்கு முதல் அவன் வேகமாகத் திரும்பி நின்று கொண்டான்.
திரும்பி நின்றவனது கை முஷ்டியின் இறுக்கத்திலேயே அவன் கோபத்தை அடக்க முயல்கிறான் என்பது கோதைக்கு புரிந்து விட்டது.
“ஐயோ காளியாத்தா.. இதென்ன டிசைன் டிசைனா கோபப்படுறானே.. இப்ப நான் என்ன செய்றது.. உவனைச் சமாதானப் படுத்திறதெண்டால் இந்த சாறியளைக் கட்டியே ஆகோணும்.. நான் மட்டும் கலர் சாறி கட்டிக் கொண்டு திரிஞ்சால் அவ்வளவு தான்.. தில்லையப்பா வேறை இங்கினை தான் நிக்கிறார்.. என்னை மட்டும் கலர் புடவையில பாத்திட்டார் எண்டால்.. உடன நான் அவரிந்தை குடும்ப பண்பாட்டை சீரழிச்சு எடுக்காத எடுப்பெல்லாம் எடுக்கிறன் எண்டு அதை இதை சொல்லி இருக்கிற நிம்மதியையும் குழி தோண்டி புதைச்சிடுவாரே.. அது கூட பரவாயில்லை பிறகு நீலாம்மாவை தரக்குறைவா வேறை பேசுவாரே.. அதுக்காக உவனை சமாதானம் செய்யாமல் எனக்கென்ன வந்தது எண்டு விட்டால்.. இப்ப முன்னால கிடக்கிறதை எல்லாம் தூக்கியடிப்பானே.. பிறகு அந்த சத்தத்துல எனக்கு தான் பிரஷர் கூடும்.. போதாதெண்டு உவன் சொல்றதை தான் அஞ்சு மாசம் கேட்டே ஆகோணுமாம்.. எப்ப அஞ்சு மாசம் முடியிறது எப்ப நான் நிம்மதியா இருக்கிறது.. ஏதாவது ஒரு வழியைக் காட்டி உம் பிள்ளையைக் கூடவே இருந்து காப்பாத்தும்மா காளியாத்தா..”
என ஜேம்ஸின் பின்னால் நின்று கொண்டு தனக்குத் தானே புலம்பியவள், தன்னை திடப் படுத்திக் கொண்டு அவனுக்கு முன்னால் போய் நின்றாள்.
“எடுத்த உடன எப்புடி சாறியளைக் கட்டுறது.. அதுக்கு பிளவுஸ் எல்லாம் தைக்கோணும் எல்லோ.. அது தான் இண்டைக்கு கலர் சாறி கட்டேல்லை.. ஒரு அஞ்சு நாள் குடுங்கோவன் பிளவுஸ் தைப்பிச்சிட்டு கண்டிப்பா கட்டுறன்..”
என கோதை கெஞ்சாத குறையாகக் கேட்க, அதற்கு கொஞ்சம் அவனிடம் மதிப்பு இருந்தது போலும், அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து பேசாமல் போய் விட்டான்.
அவன் போன திக்கையே பார்த்தபடி
“என்ரை பன்குளத்து பரமசிவா.. ஆருப்பா இவன் எங்க இருந்தவன் இம்புட்டு நாளும்.. விடிஞ்சால் பொழுது படுமட்டும் உவனை எப்புடிச் சமாளிக்கிறது எண்டுறதிலேயே என்ரை வாழ்க்க போயிடும் போலயே.. எனக்கு பதிலா போன அந்த மாலினியம்மா மட்டும் திரும்பி வந்து வலு ஹாயா சுத்திட்டு திரியுது.. ஆனா என்னைய மட்டும் அப்புடியே வைச்சுக்கானுவள்.. இந்த வீட்டு மதிலேறிப் பாஞ்சு ஓடித் தப்பிக்கலாம் எண்டு பாத்தால்.. இது வீடா இல்லாட்டிக்கு சுத்தி இருக்கிறது மதிலா எண்டே தெரியேல்லை.. போதாக்குறைக்கு சிங்கம் வேறை வளக்குறான் உந்த எடுபட்ட அசுரன்.. எப்புடி தான் இங்கினையிருந்து ஓடித் தப்பிறது..”
என்று கோதை வழமை போல புலம்ப, எப்படிப் போனானோ எப்படி வந்தானோ தெரியவில்லை, அவளின் பின்னால் வந்து
“நானா அனுப்பினா தவிர அது நடக்காது..”
எனச் சொல்லி விட்டு, மீண்டும் வந்த வழியே போய் விட்டான் ஜேம்ஸ்.
திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவளோ
“உவனுக்கு மட்டும் எல்லா பக்கமும் காதும் கண்ணும் கிடக்கு போல..”
என்று முணுமுணுத்து விட்டு, பட்டென்று வாயைப் பொத்திக் கொண்டாள். அவள் என்ன செய்தாலும் அவனுக்கு மட்டும் உடனே தெரிந்து விடுகிறதே என யோசனை செய்தவளுக்கு, மூளை யோசனை செய்ய மறுத்தது.
கோதை மனதிற்கு பாரமாக இருந்தாலோ அல்லது கடுமையாக யோசனை வந்தாலோ உடனே போய் படுத்து விடுவாள். அதனால் அப்போதும் ஓடிச் சென்று தனக்கென ஒதுக்கப் பட்ட அறைக்குள் விழுந்து படுத்துக் கொண்டாள். படுத்து அடுத்த அரைமணி நேரத்திலேயே தூங்கியும் விட்டாள்.
திடீரென அவளது அறைக் கதவு வேகமாகத் திறக்கப் பட, வாசலில் கறுப்பு ஷேர்ட் கறுப்பு வேஷ்டி அணிந்து ஜேம்ஸ் நின்றிருந்தான். அவனின் நீலவிழிகள் பழுப்பு நிறத்தில் ஜொலிக்க, அந்த பழுப்பு விழிகள் அவளைத் தான் உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
லேசாக விலகியிருந்த புடவையை இழுத்து, தன்னை முழுதாக மூடியபடி
கட்டிலில் இருந்து வேகமாக எழுந்த கோதை, கட்டில் விளிம்பில் ஒட்டிக் கொண்டு
“என்ன வேணும்.. ஏனிப்ப இங்க வந்தீங்கள்.. ஒரு பொம்பிளைப் பிள்ளை படுத்திருக்கிற அறைக்குள்ள இப்புடியா கேட்டுக் கேள்வி இல்லாமல் வந்து நிப்பியள்.. என்ன பழக்கம் இது..”
என கோபத்தைக் குரலில் கொண்டு வர முயன்று தோற்றவளாகி அவனைப் பார்த்தாள்.
ஆனால் அவனோ அவள் சொன்ன எதையும் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. அவனது பழுப்பு விழிகள் அவளைத் துளைக்க, நிதானமாக அவளை நோக்கி வந்தான்.
அவன் தன்னை நோக்கி வருகிறான் என்பதை உணர்ந்த கோதை, கட்டிலை விட்டு நகர, அவனும் அவளை நோக்கி நகர, முடிவில் சுவரோடு மோதி நின்றாள். இப்போது கோதைக்கும் ஜேம்ஸுக்கும் இடையில் ஒரு விரலளவு தான் இடைவெளி இருந்தது.
ஜேம்ஸின் மூச்சுக் காற்றின் வெப்பம் அவளது முன்னுச்சியில் வேகமாக பட, பயந்த விழிகளோடு அவனை அண்ணாந்து பார்த்தவளுக்கு, இதயம் எக்குத் தப்பாக துடிப்பது போல இருந்தது.
தன் பலம் கொண்ட மட்டும் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு, அவனைச் சுற்றிக் கொண்டு வெளியே ஓடப் பார்த்தவளை, ஒரு எட்டில் பிடித்து சுவரோடு சாய்த்தவன், அவளது கண்களையே பார்த்தபடி அவளின் கழுத்தை நோக்கி குனிய, அவனது கடவாய் பற்கள் அசுரப் பற்களாக கணத்தில் மாற, அவனது அந்த கோரைப் பற்கள் அவளது கழுத்தில் பதியவும், கோதையின் கழுத்தில் இருந்து இரத்தம் பீறிட்டது. அதை சுவைத்தபடி
“உன்னால இங்கேருந்து தப்பவே முடியாது.. நீ தான் என்னோட யாகத்துக்கு நரபலி..”
எனச் சொல்லிச் சிரித்தான் அசுரன்.
அவனுக்கு பின்னால் ஒரே நெருப்பும் குருதியுமாக இருக்க, வாய்க்குள் புறங்கையை வைத்து
“ஐயோ..”
என வீறிட்டுக் கத்தினாள் கோதை.
அவளது கத்தலைத் தொடர்ந்து யாரோ ஓடி வருவதும், அவளது அறைக் கதவு தட்டப் படுவதும் அவளுக்கு எங்கோ தூரமாகக் கேட்டது.
அவளது உதடுகள்
“அசுரன்.. ரத்தம்.. நான்.. செத்து..”
என்பதையே முணுமுணுக்க, அவளது அறைக் கதவு படீரென உடைபட உள்ளே ஓடி வந்தார் வியாகேசு, அவரைத் தொடர்ந்து ஜேம்ஸும் உள்ளே வர, அதற்குள் வியாகேசு கட்டிலில் படுத்திருந்தவளை உலுக்கி எழுப்பினார்.
“பிள்ளை பிள்ளை.. எழும்பு பிள்ளை.. கண்ணைத் திற கண்ணைத் திற.. கனவு ஏதும் கண்டியோ.. முதல்ல கண்ணைத் திறந்து பார்..”
என அவர் கிட்டத்தட்ட கத்தி பேச, கோதையோ கண்களை இறுக மூடிக் கொண்டு
“அசுரன்.. ரத்தம்.. நான் செத்து..”
என அதையே மீண்டும் புலம்பிக் கொண்டிருந்தாள்.
சற்று தள்ளி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், அங்கே கிடந்த குவளை நீரை அப்படியே எடுத்து கோதையின் முகத்தில் ஊற்ற, தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தமர்ந்தவள் அங்கே நின்ற இருவரையும் பார்த்து பேந்தப் பேந்த முழித்தாள்.
கலைந்திருந்த அவளது கூந்தலை ஒதுக்கி விட்டபடி, அவளது தோளைத் தட்டிக் கொடுத்தார் வியாகேசு.
“என்னடி பிள்ளை.. பகலிலயே கனவு கண்டு உந்தக் கத்து கத்துறாய்.. நாங்கள் என்னவோ ஏதவோ எண்டு பயந்து போனம்.. கதவைத் தட்ட தட்ட நீ திறக்கிறாயே இல்லை.. பிறகு பீட்டர் வந்து கதவை இடிச்ச இடியில தான் கதவு திறந்த..”
என வியாகேசு சொல்ல, கோதை அப்போது தான் அங்கே உள்ளே நின்றிருந்த ஜேம்ஸையும் அவன் பின்னால் திறந்து கிடந்த கதவையும் பார்த்தாள்.
“ஆத்தி கனவா.. ஏதவோ உண்மியாவே நடந்த போல எல்லோ கிடந்த..”
எனத் தன்னுள் யோசனை செய்தபடி, சட்டென்று ஜேம்ஸை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் கறுப்பு நிற உடையில் தான் இருந்தான். கனவில் வந்த அதே உடையில் அவனை அவள் பார்க்க, போதாக் குறைக்கு திறந்திருந்த கதவின் வழியே வந்த வெளிச்சமும் அவனது உருவத்துக்கு புது விதமாய் ஒளி கொடுக்க, விழியகற்ற மறந்து அவனையே வெறித்துப் பார்த்த கோதை, வியர்த்து விறுவிறுக்க அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
கட்டில் விளிம்போடு இருந்தவளது உடல் தரையைத் தொடும் முதல், அவளைத் தாங்கி ஏந்திக் கொண்டான், கனவில் வந்து அவளைப் பயமுறுத்தி இரத்தம் குடித்த அவளின் அசுரன்.
தன் கைகளுக்குள் துவண்டு போய்க் கிடந்தவளை ஒரு நொடி பார்த்தவன் மறு நொடியே அவளைக் கட்டிலில் சௌகரியமாகப் படுக்க வைத்து விட்டு, அந்த அறையின் சாளரங்களை வேகமாகத் திறந்து விட்டான்.
வெளியே இருந்து வேகமாக வந்த குளுமையான காற்று, அவளது தேகம் வருடிச் செல்ல அவளையே பார்த்திருந்தவன், வியாகேசிடம் அவளை ஒப்படைத்து விட்டு, அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.