அசுரனின் குறிஞ்சி மலரே.. 27

4.7
(11)

குறிஞ்சி மலர்.. 27

மாலை நேரத்தில் மலர்ந்த பெயர் தெரியாத மலர்களின் சுகந்தம் நாசி தீண்டிச் செல்ல, மாலை நேரக் காற்றின் குளுமை தேகம் வருடிச் செல்ல, பெண்ணவளின் ஸ்பரிசத்தில் உற்சாகமான ஜேம்ஸ் மெல்ல ஒரு ஆங்கிலப் பாடலை முணுமுணுக்கத் தொடங்கினான்.

ஜேம்ஸ்ஸின் பின்னால் அவனைக் கட்டிக் கொண்டு, மறைந்தார் போல நின்றிருந்தவளுக்கோ அதன் பிறகு சுற்றுப்புறம் எதுவுமே கருத்தில் படவில்லை. மாறாக நாய்களின் தோற்றமும் அவற்றின் உறுமலும் தான் கண்முன்னே நிழலாடிக் கொண்டிருந்தன.

அவளை மேலும் பயம் காட்டவென்றே, ஒரு நாய் ஜேம்ஸின் பின்னால் நின்றவளைப் பார்த்து பயங்கரமாக உறும, அந்த நாயின் உறுமலில் அடுத்த நாயும் அவளைப் பார்த்து உறும, இரண்டுமே அவளைப் பார்த்துப் பாய்ந்தன.

அவ்வளவு தான் கோதைக்கு ஒரு கணம் மூச்சே நின்று விட்டது. கண்களை இறுக மூடி தன் முகத்தை அவனது முதுகில் புதைத்துக் கொண்டு, இன்னும் இறுக்கமாக அவனைக் கட்டிக் கொண்டாள்.

கோதையின் அந்த அணைப்பில் ஜேம்ஸ் தன் தலையை அழுந்தக் கோதியபடி, இப்போது பல்வரிசை தெரியவே புன்னகை செய்தான்.

நாய்களின் உறுமல் நிற்காமல் தொடரவும்,
“அதைப் பிடியுங்கோ.. உதை ஏன் கூட்டி வந்தனியள்.. பிடியுங்களேன் பிளீஸ்..”
என அவனை அணைத்தபடியே கெஞ்ச, அவளது குரல் கேட்டதுமே நாய்கள் அவளையே பார்த்து துள்ளிக் குதித்து உறுமத் தொடங்கின.

அவனது இடுப்பை வளைத்துப் பிடித்துக் கொண்டு
“ஆத்தி.. என்னமா சத்தம் போடுது.. என்னையப் பிடிச்சால் கிலோக் கணக்குல பிச்சுத் தின்டுடுங்கள்.. தலைவலி போய் நெஞ்சுவலியே வந்திடும் போல கிடக்கு.. பாத்துக் கொண்டு நிக்கிறியளே.. பிடியுங்கோப்பா..”
என்று அவன் காதுக்குள் கத்தினாள் கோதை.

தலைசாய்த்து பின்னால் நின்றவளைப் பார்த்தான் ஜேம்ஸ்.

“என்ன அப்புடிப் பாக்குறியள்.. நாயளைப் பிடியுங்கோ..”

“இப்ப என்னெண்டு சொன்னீ..”

“என்னத்தை என்னெண்டு சொன்னான்..”

“என்னை என்னண்டு சொன்னீ..”

“நாயைப் பிடியுங்கோண்டு சொன்னான்..”

“ப்ச்.. இல்லை வேறை ஏதோ அப்பா எண்ற போல..”

“அப்பாவா..”

“நீ தானே சொன்னே..”

“வாய் தவறி வந்திட்டு போல..”

“ஓ..”

“என்ன ஓ.. நாயைப் பிடிச்சுத் தொலையுங்கோ..”

“அது.. நீ துள்ளுறதை பாத்து கோபமாயிட்டு..”

“என்னது..”

“தடவிக் குடுத்தா ஹப்பியாகி சைலன்ட் ஆயிடும்..”

“எது தடவிக் குடுக்கிறதோ..”

“யா..”

“சும்மா போங்கோ அந்தப் பக்கம்.. அது பாக்கிற பார்வையிலேயே குலை நடுங்குது.. நீங்கள் வேணுமெண்டே என்னைப் பழி வாங்குறியள்.. நான் போறன் வீட்டை.. நீங்கள் உங்கடை செல்லங்களைக் கொஞ்சுங்கோ..”
என கடுப்பாகிச் சொன்ன கோதை, அவனை விட்டு விலகி, வந்த பாதையில் வேகமாக நடக்கத் தொடங்க, அவள் அறியாமல் நாய்களைப் பார்த்துக் கண் ஜாடை செய்தான் ஜேம்ஸ்.

எஜமானின் ஜாடையில் துள்ளிக் குதித்த மூன்று நாய்களும் மூன்று பக்கமாகப் பிரிந்து, கோதையைப் பார்த்து உறுமியபடி பாய, கிட்டத்தட்ட பாய்ந்தோடி வந்து ஜேம்ஸை முன்பக்கமாகவே அணைத்துக் கொண்ட கோதை
“டேய் வளந்து கெட்டவனே.. அதைக் கொஞ்சம் பிடியேண்டா.. உனக்குப் போற வழியில புண்ணியமாப் போகும்..”
என்று கடுப்புக் குறையாமல் கத்த,
அவளைத் தன் கை வளைவுக்குள் அழகாய் அணைத்தபடி
“வாட் டூ யூ மீன் பை வளந்து கெட்டவன்..”
என்று விளக்கம் கேட்டான்.

“அது.. என்னைய விட உசரமா இருக்கியள் அது தான்..”
என விளக்கம் கொடுத்தவள், அப்போது தான், தான் அவனை ‘டா’ போட்டு பேசியது நினைவு வர நாக்கை கடித்துக் கொண்டே அவனிடம் இருந்து விலகி நின்று கொண்டாள்.

“சாரிங்க.. உந்த நாயைப் பாத்தாலே எனக்கு பயந்து பயந்து வருது.. உது ஒரு கடி கடிச்சாலே எலும்பெல்லாம் சுக்குநூறாப் போயிடுமாம் எண்டு படிச்சு இருக்கிறன்.. அந்த பயத்துல கொஞ்சம் மரியாதை இல்லாமல் கதைச்சிட்டன் சாரி..”

“அதெல்லாம் சரி தான்.. அப்புறம் ஒரு விசியம்..”

“என்னங்கோ..”

“என்னைய பாத்து ஏன் பயந்தே..”

“எப்ப..”

“இப்போ மூணு நாலு நாளா அது தானே நடக்குது..”

“என்ன நடக்குது..”

“என்னைப் பாத்து நடுங்கிறது..”

“இல்லைங்கோ..”

“பொய்..”

“அப்புடி இல்லை..”

“லிஷன் பேபி.. எனக்கு பொய் சொன்னா புடிக்காது.. அதுலயும் எனக்கு புடிச்சவங்க பொய் சொன்னா சுத்தமா புடிக்காது..”

“சாரிங்க..”

“எதுக்கு சாரி..”

“நான் உங்களிட்டை பொய் சொல்லீட்டன்..”

“இற்ஸ் ஓக்கேய்.. பட் இனிமேல் என்கிட்ட பொய் சொல்லக் கூடாது சரியா..”

“ம்ம்..”

“என்ன ம்ம்..”

“இனிமேல் உங்களிட்டை பொய் சொல்ல மாட்டன்..”

“ம்ம்.. குட் கேர்ள்.. சரி சொல்லு என்னைப் பாத்து ஏன் பயந்தனீ..”

“பிறகு சொல்லட்டோ..”

“எப்ப.. எனக்கு இப்பவே தெரியோணும்..”

“சொல்லுறனே பிறகு..”

“அது தான் எப்ப..”

“ஏதவோ எங்கையோ கூட்டிப் போறியளே.. அங்க போட்டு பிறகு சொல்லுறன்..”

“நம்பலாமோ..”

“ம்ம் நம்பலாம்..”

“சரி பாப்பம்..”

“சரி இப்பயாச்சும் அதுங்களைப் பிடியுங்கோவன்..”

“அது ஒண்ணும் செய்யாது.. பக்கத்துல வா..”

“பக்கமா வந்தா பிடிக்காதா..”

“அதை தான் கேக்கோணும்..”

“எப்புடிக் கேப்பீங்கள்..”

“ஹேய் வீரா.. விக்கி.. றொம்மி  மூண்டு பேரும் என்னோட பேபிக்கு தொல்லை குடுப்பீங்களா..”

“ஓ நல்ல பேருகள்.. ஆரு வைச்சது..”

“நான் தான்..”

“எனக்கு தொல்லை குடுக்க வேண்டாம் எண்டு சொல்லாமல்.. உங்கடை பேபிக்கு தொல்லை குடுக்க வேண்டாம் எண்டு சொல்லுறியளே ஆரு அது..”

“நீ தான்..”

“நானா.. என்னையா பேபி எண்டீங்க..”

“யா..”

“என்னைய பாத்தால் சின்னக் குழந்தை மாதிரியோ கிடக்கு..”
என கோதை கேட்க, பதில் சொல்லாமல் முன்னே நடக்கத் தொடங்கினான் ஜேம்ஸ். அவனது நாய்கள் மூன்றும் அவனைத் தொடர, வேகமாகப் போய் அவனது கையைப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள் கோதை.

“இப்ப எங்க போறம்..”

“எனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்கு..”

“தூரமோ..”

“கொஞ்ச தூரம் போகோணும்..”

“இந்த இடம் சூப்பரா இருக்குல்லே..”

“ம்ம்.. மனசுக்கு பிடிச்ச மாதிரியும் இருக்கு..”
என்றபடி ஜேம்ஸ் முன்னால் நடக்க, அவனது கையைப் பிடித்தபடி அங்கும் இங்கும் பார்த்தபடி நடந்த கோதைக்கு, எலிசபெத் மற்றும் செபமாலை பற்றி அவனிடம் பேச வேண்டும் என்பது சட்டென்று நினைவுக்கு வந்தது.

“என்னங்கோ..”

“சொல்லுங்கோ..”

“உங்களிட்டை முக்கியமா ஒரு விசியம் பத்தி கதைக்கோணும்..”

“எதைப் பத்தி..”

“அங்க இருக்கிற உங்கடை வீட்டுல..”

“பேபீ.. டோன்ற் ரோக் எபௌட் இட்..”

“ஆ.. என்ன..”

“அதைப் பத்தி இப்போ பேச வேண்டாம்னு சொன்னேன்..”

“ஓ.. ஆனா ஏன்..”

“இந்த இடத்துல நான் வேறை விசியம் பத்தி யோசிக்கிறதில்லை..”

“ஆனா இது வேறை விசியம் இல்லையே..”

“பிளீஸ் பேபி.. வேண்டாம் விட்டுடேன்..”

“சரிங்க இனி பேசலை.. ஆனா வீட்டுக்கு போனதும் கண்டிப்பா நான் சொல்ல வாரதைக் கேக்கோணும் சரியோ..”

“சரி..”

“அதோட இன்னொரு விசியம்..”

“என்ன..”

“எனக்கு இந்த இங்கிலீஷ் எல்லாம் ஒழுங்கா வராது..”

“ஓ..”

“அதனால என்கிட்டே தமிழ்ல மட்டும் பேசுங்கோ சரியா..”

“ம்ம் சரி..”

“அப்புறம் இன்னும் ஒரு விசியம்..”

“இப்ப என்ன..”

“என்னைய என்ரை பேர் சொல்லியே கூப்பிடுறீங்களோ.. இந்த பேபி அதெல்லாம் வேண்டாம்..”

“என்ன பேரு..”

“உங்களுக்கு என்ரை பேரு தெரியுமா..”

“பூக்கோத்தை..”

“ஐயோ கன்றாவி.. பூக்கோத்தை இல்லைங்கோ.. பூங்கோதை..”

“பூ.. கோத்தை..”

“ஐயா சாமி.. நீங்கள் பேபி எண்டே கூப்பிட்டுத் தொலையுங்கோ.. நல்லா வருது தமிழ் உங்களுக்கு.. அப்பப்போ நல்லா வருது அப்பப்போ சகிக்க முடியேல்லை..”

“உன் பேரை சரியா சொல்ல ட்ரை பண்றன் சரியா..”

“என்னவோ செய்யுங்கோ..”
என்று கொண்டு திரும்பிப் பார்த்தவள், அப்படியே நின்று விட்டாள்.

ஒரு பெரிய வயல் வெளியை அடுத்து ஒரு பசுமையான காடு, காட்டுக்கும் அந்த வயல்வெளிக்கும் நடுவில் ஒரு நீரோடை ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஓடையில் இந்த தொங்கலில் மான்கள் நீர் அருந்திக் கொண்டிருக்க, அடுத்த தொங்கலில் நீர் அருந்திக் கொண்டிருந்த கரடியைப் பார்த்ததும் கோதை மீண்டும் விக்கித்துப் போய் நின்றிருந்தாள்.

அவளுக்கு பின்னால் நின்றிருந்த ஜேம்ஸ், இன்னும் சில நொடிகளில் அவள் ஒரே ஓட்டமாக ஓடி வந்து தன்னை அணைத்துக் கொள்ளுவாள் அல்லவா என்கிற ரீதியில், இடுப்பில் கை வைத்துக் கொண்டு நிற்க, மெல்ல மெல்ல பின்னால் நகர்ந்து வந்த கோதை, அவனைச் சுற்றிக் கொண்டு போய் அவனுக்கு பின்னால் நின்று கொண்டாள்.

“என்னங்கோ.. இங்கேருந்து ஓடிப் போயிரலாமோ.. அங்க பாருங்களேன் கரடீ.. எனக்கு இண்டைக்கு நாளே சரியில்லை.. வாங்கோ திரும்பிப் பாக்காமல் ஓடிரலாம்..”
என அவனது காதுக்குள் குசுகுசுத்தாள்.

அவளைப் பின்னால் கை விட்டு முன்னுக்கு இழுத்தவன்
“என்ன பயம் உனக்கு.. அதான் நான் இருக்கேன்ல”
என அவளது நாடி பிடித்து கண்களைப் பார்த்து சொன்னான்.

அவனின் நீலவிழிகள் அவளின் கருவிழிகளை ஆழ்ந்து பார்த்தபடி இருக்க, கோதை திணறிப் போனாள்.

அவனது விழிகளில் ஏதவோ ஒரு ஈர்ப்புவிசை, அவளை அப்படி இப்படி அசைய விடாமல், அவன் விழிகளுள் ஈர்ப்பது போல இருக்கவே, வெகு பிரயத்தனப் பட்டு தன் பார்வையை விலக்கிக் கொண்டாள் கோதை.

“இது சரியில்லை.. ரூபாவைக் கட்டிக்கப் போறவரு.. அவரோட இவ்வளவு தூரம் நான் தனியா வந்ததே தப்பு.. போதாக் குறைக்கு அவரிந்தை கண்ணைப் பாத்து இப்புடி மயங்கி கிறங்கி எல்லாம் நிக்கவே கூடாது.. முதல்ல இங்க இருந்து போயிடோணும்.. நான் மட்டும் இவரோட இங்கினை தனியா நிக்கிறதை பாத்தால் தில்லையப்பா என்னவெல்லாம் கதைப்பாரு.. காளியாத்தா அதை காது குடுத்தே கேக்க ஏலாதே..”
எனத் தன்னுள் சொல்லிக் கொண்டவள் முன்னால், சொடக்கிட்டான் ஜேம்ஸ்.

“என்ன பலமான யோசனை..”

“ஆ.. ஒண்டுமில்லை..”

“கொஞ்சம் முதல் தானே எனக்கு பொய் சொன்னா புடிக்காதுனு சொன்னன்..”

“ம்ம்.. வீட்டுக்கு போலாமா..”

“போய்..”

“நிறைய வேலையிருக்கு..”

“என்ன வேலை..”

“இப்புடி கேட்டா என்ன சொல்லுறது..”

“பதில் சொல்லு..”

“சமைக்கோணும்..”

“உன்னைத் தவிர அங்க குக் பண்ண ஆக்களே இல்லையோ..”

“இல்லைங்கோ அப்புடியில்லை.. இருட்ட போகுது அது தான்..”

“இருட்டினா என்ன இப்ப..”

“சுத்தி காடு.. கரடி எல்லாம் நிக்குது..”

“அதான் நான் இருக்கேன்ல..”

“உங்களை ஒண்டுமே செய்யக் கூடாதெண்டு கரடி எதுலயாவது எழுதிக் குடுத்து இருக்குதோ..”

“என்ன ஜோக்கா.. ஆனா சிரிப்பு தான் வரலை..”

“அப்புடியே சிரிச்சிட்டாலும்..”

“இப்ப என்ன தான்டி வேணும் உனக்கு..”

“வீட்டுக்கு போகோணும்..”

“அதெல்லாம் இப்போதைக்கு போக முடியாது..”

“நான் போகோணும்..”

“பிடிவாதம் பிடிக்காத பேபி.. எல்லா நேரத்துலயும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டன்..”

“யாரு பிடிவாதம் பிடிக்கிறது நீங்கள் தான்.. இப்ப என்னைய வீட்டை போக விடப் போறியளோ இல்லையோ..”
என கோதை மீண்டும் மீண்டும் நச்சரிக்க, கண்களை மூடி தன்னை நிதானப் படுத்திக் கொண்டவன், கையை மடக்கி தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அவளைப் பார்த்தான்.

“இங்க உன்னோட விருப்பத்தை யாருமே கேக்கல்லை.. நான் வான்னு சொன்னா நீ வந்து தான் ஆகணும்.. என்னைய எரிச்சல் படுத்தாத..”
என கடினமான குரலில் சொன்னவனை வெறித்துப் பார்த்தவள், அடுத்து வாயே திறக்கவில்லை. பேசாமல் அவனைத் தொடர்ந்து நடக்கத் தொடங்கினாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!