அசுரனின் குறிஞ்சி மலரே.. 28

4.7
(12)

குறிஞ்சி மலர்.. 28

நீலரூபி அமைதியாக அமர்ந்திருக்க, அவரின் முன்னால் நின்றிருந்த அவரின் கணவரும் மகளும் சற்றே கடுப்போடு ஜேம்ஸை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அப்பா.. எனக்கு இந்த கலியாணத்துல கொஞ்சம் கூட இஷ்டமில்லை.. சொன்னா கேக்கிறியளா நீங்கள்..”

“என்ன பிள்ளை நீ.. எல்லாம் உன்ரை நல்லதுக்கு தான்.. அதோட அவனை கலியாணம் கட்டி சொத்து எல்லாத்தையும் உன்ரை பேருக்கு எழுதி வாங்கும் வரை தானே இந்த நாடகம் எல்லாம்..”

“அதுக்கு எதுக்குப்பா கலியாணம்.. கொஞ்ச நாளைக்கு இங்கினை இருந்து வேறை திட்டம் போட்டு சொத்தை வாங்கிக்கலாமே..”

“இல்லை பிள்ளை.. உனக்கு இந்த பீட்டர் ஃபோல் பத்தி சரியா தெரியேல்லை.. அவனுக்கு எல்லாப் பக்கமும் கண் காது எல்லாம் இருக்கு.. அவனை அவ்வளவு சீக்கிரம் ஏமாத்த ஏலாது..”

“அப்புறம் கலியாணம் மட்டும் எப்புடி அப்பா.. கலியாணம் கட்டினால் மட்டும் சொத்தெல்லாத்தையும் எழுதிக் குடுத்துடுவானா அந்த வெள்ளைக்காரன்..”

“அது சட்டபடி நீ மனைவி ஆன பிறகு எல்லாமே உன்ரை கைக்கு வந்திடும் பிள்ளை..”

“எப்புடி அவ்வளவு உறுதியா சொல்லுறியள்..”

“பீட்டர் ஃபோலிந்த பரம்பரை வழக்கப்படி.. கலியாணம் முடிஞ்ச அடுத்த மாதமே சொத்து முழுவதையும் மனைவியிந்தை பேருக்கு எழுதி வைச்சிடுவாங்கள்.. மனைவி மேல அவ்வளவு பிரியமும் நம்பிக்கையும் வைச்சிக்கிறதால அப்புடி செய்வாங்கள்..”

“ஓ.. இப்புடி வேறை ஒரு கதை இருக்குதோ..”

“ஓம் பிள்ளை.. அதனால கலியாணம் முடிஞ்சு ஒரு ஒரு மாசம் போகும் வரை வாயை மூடிக் கையைக் கட்டிக் கொண்டு அவன் சொல்லுறதைக் கேப்பம்.. பிறகு எங்கடை வித்தையை காட்டுவம்..”

“உங்களை நம்பி தான் இதுல இறங்குறன்.. அண்டைக்கு நடந்த போல அவன் எதையாவது தூக்கி அடிச்சால் பிறகு உங்களுக்கு இருக்கு..”

“அதெல்லாம் நான் பாத்துக் கொள்ளுறன் பிள்ளை.. நீ போய் ஓய்வெடு.. நாளைக்கு உனக்கு கலியாணம்.. நாளையில இருந்தே உன்ரை நாடக ஆட்டம் ஆரம்பம் சரியோ போ போ..”

“நீங்கள் சொன்னா சரி தானப்பா.. நான் கொஞ்சம் வெளியால போகோணும்.. போட்டு வாரன்..”
என்று கொண்டு ரூபவர்ஷி வெளியே போய் விட, வெளியே போகும் தான் பெற்ற மகளையே வெறித்து பார்த்தபடி நின்றிருந்தார் நீலரூபி.

மகள் போனதும் மனைவி பக்கம் திரும்பினார் தில்லையம்பலம்.

“ஏய் அங்க என்ன பராக்கு பாத்துக் கொண்டு நிக்கிறாய்.. போய் சூடா ஒரு தேத்தண்ணி கொண்டு வா..”

“ஏனுங்கோ நீங்கள் இப்புடி செய்யுறியள்..”

“எப்புடி செய்யுறன்..”

“உங்களுக்கு இருக்கிறதே ஒரே ஒரு பிள்ளை.. அவளுக்கு நல்ல புத்தியை சொல்லிக் குடுத்து.. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் குடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு தானே இருக்குது.. ஏனுங்கோ உங்களிட்டை இருக்கிற சொத்து உங்களுக்கு காணாதோ.. பிறகு என்னத்துக்கு அடுத்தவனிந்தை சொத்துப் பத்துக்கு ஆசைப் படுறியள்.. பொட்டைப் புள்ளைக்குள்ள என்ன மாதிரியான கேவலமான புத்தியை உருவாக்கி விடுறியள்.. நீங்கள் போட்ட உந்தக் கேவலமான திட்டம் அந்தத் தம்பிக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும்.. நாளைக்கு உங்களுக்கு தான் அவமானம்.. சொன்னால் புரிஞ்சு கொள்ளுங்கோவன்.. உந்த விஷப் பரிட்சை எல்லாம் எங்களுக்கு வேண்டாமுங்கோ..”

“உன்ரை புத்திமதி எனக்கு தேவையில்லை.. முதல்ல எனக்கு புத்தி சொல்ல உனக்கு என்ன தகுதி கிடக்கு.. இந்த சமுகத்துல தில்லையம்பலம் போல ஒரு உத்தமன் உண்டோ எண்டு சனம் பாராட்டோணும் எண்டுற ஒரே காரணத்துக்காக தான் உன்னை இப்பவும் கூடவே வைச்சிக்கிறன்.. கனக்க கதைச்சியோ கொலை செய்து புதைச்சிட்டு.. எவன் கூடவோ ஓடிப் போயிட்டாள்னு சோலியை முடிச்சு விட்ருவன்..”

“உங்கடை அராஜகத்துக்கெல்லாம் ஒரு முடிவு வராமலா போகப் போகுது.. என்ன ஜென்மங்களோ..”
என முணுமுணுத்தபடி நீலரூபி அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார்.

அவருக்கு தன் கணவனையும் தான் பெற்ற மகளையும் வெறுத்தே போய் விட்டது. அவருக்கு தற்கொலை எண்ணம் எத்தனையோ முறை வந்து போனாலும் கூட, அவரது மனம் அதற்கு துணியாததன் காரணம் கோதை மட்டும் தான். அவளுக்காக தான் அவர் பொறுமையாக இருக்கிறார்.

சில நொடிகள் அங்குமிங்கும் பார்த்து விட்டு, ஜோசப்பின் அறையை நோக்கிப் போனார் தில்லையம்பலம்.
அங்கே மாலினி, மேரி, ஜோசப், அல்போன்ஸ் என ஒரு கூட்டமே அவரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தது.

இந்த ஐந்து பேர் கொண்ட கூட்டணி தான் தற்போது ஜேம்ஸை சுத்தியிருக்கும் விஷக் கிருமிகள். அவனின் உச்ச கட்ட அவதாரத்தின் வீரியம் தெரியாமல் ஐவரும் அவனது சொத்து முழுவதையும் சுருட்டுவது தொடர்பாகவும், அவனை அடியோடு சாய்ப்பது தொடர்பாகவும் தான் இப்போது திட்டம் தீட்ட கூட்டம் போட்டிருந்தார்கள்.

ஜேம்ஸின் சாம்ராஜ்யத்தில் அவனது வெற்றிகளை மட்டும் அல்ல அவனது தோல்விகளையுமே அவன் தான் தீர்மானிப்பான் என்பது அப்போது பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை.

இங்கே ஒரு கும்பல் அவனை சாய்ப்பதற்கான சதிவலை பின்ன, அந்த அவனோ தன் முன்னால் இருந்தவளையே சீண்டி அவளைக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

“இங்க உன்னோட விருப்பத்தை யாருமே கேக்கல்லை.. நான் வான்னு சொன்னா நீ வந்து தான் ஆகணும்.. என்னைய எரிச்சல் படுத்தாத..”
என்ற ஜேம்ஸின் கடினக் குரலில் வாயை மூடிக் கொண்டு அவன் பின்னே நடந்து போனவள், மறந்தும் வாயைத் திறக்கவில்லை.

அதுவரை அவள் முகத்தில் லேசாக ஒட்டிக் கிடந்த புன்னகை கூட, இருந்த தடம் கூடத் தெரியாமல் விலகிப் போயிருக்க, கோதையின் முகமோ இறுகிப் போயிருந்தது.

ஜேம்ஸ் முன்னால் நடந்து, அவளை அழைத்துச் சென்று கொண்டிருந்த இடம் அத்தனை ரம்மியமாக இருந்தாலும், அவள் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் தான் இங்கே ஒரு அடிமை தானே என அவளது உள் மனம் அவளுக்கு அறிவுறுத்திக் கொண்டிருக்க, முடுக்கி விட்ட பொம்மை போல உணர்ச்சி துடைத்த முகத்துடனேயே அவனுக்குப் பின்னால் போய்க் கொண்டிருந்தாள் கோதை.

கொஞ்ச தூரம் போனதும், அவளுக்கு பக்கத்தில் வந்த ஜேம்ஸ் மேற்குப் பக்கமாக அண்ணாந்து பார்த்து விட்டு, அவளைத் திரும்பிப் பார்க்க, அவளோ குனிந்ததலை நிமிராமல் நின்றிருந்தாள்.

இன்னும் அருகில் வந்து, கோதையின் நாடியை ஒற்றைக் கரத்தால் நிமிர்த்தி மேற்கு பக்கமாக ஜேம்ஸ் காட்ட, அவள் முகம் மட்டும் மேலே நிமிர, அவளது விழிகளோ நீ காட்டினால் நான் பார்க்க வேண்டுமோ என்பது போல இறுக மூடியிருந்தன.

மேற்குப் பக்கம் பார்த்துக் கொண்டே அருகில் நின்றவளது முகபாவனை எப்படி இருக்கிறது என்கிற ஆர்வத்தோடு அவளது முகம் பார்த்தவனுக்கோ சட்டென்று கோபம் வந்து ஒட்டிக் கொண்டது.

“கண்ணைத் திறந்து மேல பாரு பேபி..”
என அவன் அதட்ட, சட்டென்று விழிகளைத் திறந்து கொண்டு மேலே பார்த்தவளது முகத்தில் எந்த விதமான உணர்வுமே இல்லை. நீ பார்க்கச் சொன்னாய் நான் பார்த்தேன் என்பது போல அவள் நிற்க, ஜேம்ஸ்ஸோ கண்களை மூடித் தன்னை நிதானப் படுத்த முயன்று கொண்டு
“இந்த இடம் உனக்கு பிடிக்கலையா பேபி..”
எனக் கேட்டான்.

அவன் அவ்விதம் கேட்டதும் ஒரு நொடி கூடத் தாமதியாமல்
“பிடிக்கேல்லை..”
என அவளிடம் இருந்து பதில் வந்தது.

“ஏன் பிடிக்கேல்லை..”

“……………”

“பேபி.. நான் கேள்வி கேட்டால் பதில் வரணும்..”

“என்ன பதில்..”

“ஏன் பிடிக்கலைனு கேட்டன்..”

“எனக்கு பிடிச்சா என்ன பிடிக்கேல்லை எண்டால் உங்களுக்கு என்ன.. நீங்கள் சொல்லுறதை நான் செய்யிறன் அது போதாதா..”

“ஓ..

“ம்ம்.. நீங்கள் பாக்கச் சொன்னியள் நான் பாத்திட்டன்.. பிறகென்ன..”

“அப்ப உனக்கு இந்த இடம் பிடிக்கலை அப்புடி தானே..”

“அப்புடி தான்..”

“அப்ப சரி.. வீராஆ..”
என ஜேம்ஸ் அழைக்க, உறுமிக் கொண்டே பாய்ந்து கொண்டு ஓடி வந்தது சிங்கம் போன்ற அந்த நாய்.

நாயின் உறுமலே கோதையின் நடுக்கத்துக்கு போதுமானதாக இருக்க, அதன் பாய்ச்சலைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ, போதாக் குறைக்கு ஜேம்ஸ் வேறு கைகளைக் கட்டிக் கொண்டு மூன்றடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டான்.

பாய்ந்து வந்த நாய் தனியே நின்ற கோதையின் பக்கம் பாய, அடுத்த நொடி ஜேம்ஸின் இடுப்பைக் கட்டிக் கொண்டு
“ஏன்டா எருமை மாடே இப்புடி என்ரை உசுரை வாங்குறாய்.. கொஞ்ச நேரமாச்சும் கோபப் பட விடுறியாடா சிடுமூஞ்சி.. ஆ ஊ எண்டால் வீரா சூராண்டு நாயை வேறை சூக் காட்டி விடுறாய்.. இப்ப என்ன இந்த இடம் எனக்கு பிடிக்கோணும் அம்புட்டு தானே.. எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்குது போதுமோடா..”
என அவன் முகம் பார்த்துக் கத்தினாள் கோதை.

அவளது செயலிலும் பேச்சிலும் பீறிட்டுக் கொண்டு வரப் பார்த்த சிரிப்பை அடக்கியவனோ, அவளை ஆழ்ந்து நோக்கி
“இடத்தை மட்டுமோ பிடிக்கும்..”
என அழுத்திக் கேட்க,
“எல்லாமே பிடிச்சிருக்குது.. நீ சொல்லுறது செய்யிறது கூட்டிட்டு போற இடம் எல்லாமே எல்லாமே பிடிச்சிருக்குது போதுமோ.. நாயைப் பிடியண்டா நாதாரி..”

“அப்போ என்னை..”

“உன்னையுந் தான்டா வெண்ணை..”
என்று கொண்டு துள்ளினாள் கோதை.

அவளுக்கோ அந்த நாயின் பல் பட்டாலே தன் உடம்பின் தசை அதன் வாய்க்குள் போய் விடுமோ என்கிற பெரும் பீதி. அந்தப் பீதியில் எதிரில் நிற்பவன் மீது அவள் கொண்டுள்ள பயம் வெறும் தூசு போல ஆகி இருக்கவே, வார்த்தைகள் பயத்தில் வந்து விழுந்து தொலைத்தன.

கோதையின் வாய் வழி வந்த வார்த்தைகளை வேறு யாரேனும் சொன்னால் அடுத்த நொடியே உக்கிரமாகும் குணம் கொண்ட ஜேம்ஸோ, அந்த வார்த்தைகளை அவள் உதிர்க்கையில் மட்டும் இரசித்தான் என்பது அவள் அறியாத உண்மை.

தன் இடுப்பைக் கட்டிக் கொண்டு, கால்களை நாய் கடித்து விடுமோ என்கிற பயத்தில் துள்ளியவளின் முகத்தையே பார்த்திருந்தவன், அடுத்த நொடியே அவளது தலையை ஒரு கையால் பிடித்து, தன் தோளில் பதித்து மறு கையால் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

கோதையோ ஜேம்ஸின் அணைப்பை உணரும் நிலையில் இல்லை. அவனின் தோள் வழியே பின்னால் நின்றிருந்த மற்ற இரண்டு நாய்களையும் தான் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். பயத்தில் அவளின் மரியாதை எங்கோ பறந்திருந்தது.

“பாரன் எப்புடி நிண்டு உறுமுதெண்டு.. உந்த சத்தத்துக்கு சாவுமணியே பரவாயில்லை போல.. கடிச்சு வைச்சால் ஊசி போடக் கூட இடம் இருக்காது..உந்த நாயளுக்கு என்னடா போட்டு வளக்கிறாய்..”

“இறைச்சீ..”

“ஆத்தீ.. உன்னையக் கடிக்காதோ..”

“இல்லை..”

“அப்ப என்னை மட்டும் ஏன் பாத்து உறுமுது..”

“பாசம்..”

“பாசமோ.. பயமா இருக்கடா.. என்ரை வாழ்க்கையில இப்புடி ஒரு நாயையே நான் பாத்ததில்லை.. நீ என்னடா எண்டால் ஆறேழு வளக்கிறாய்.. உனக்கு பயமா இல்லையோ..”

“உனக்கு பயமா இருக்கோ..”

“அதைத் தானேடா அப்பதை பிடிச்சு சொல்லுறன்..”

“உனக்கு பழக்கப் படுத்தி விடுறன்.. பயம் போயிடும்..”

“ஆஹா உந்தக் கூத்தெல்லாம் வேண்டாம்.. நீ பழக்கப் படுத்தி விட முந்தி நான் பரலோகம் போயிடுவன்.. எங்கையாவது ஒளிச்சுக் கட்டி வை அது போதும்..”

“நீ சொல்லுறதை நான் செய்யோணும் எண்டால்.. நீ எனக்கு பதிலுக்கு என்ன செய்வாய்..”

“பாயாசம் செஞ்சு குடுக்கிறன்..”
என்று கொண்டு, அவனது கரத்தை விலக்கியபடி நகர்ந்தவளை, இழுத்து மீண்டும் அணைத்தபடி
“அதெல்லாம் வேண்டாம்.. எப்பவுமே என் கூட இருப்பியோ..”
என லேசாக குரல் கமறக் கேட்டான் ஜேம்ஸ்.

“ஏன் உந்த நாயளைப் பாத்துப் பாத்தே உசிரை விடவோ.. போடா இவனே.. உனக்கும் ஒரு கும்பிடு உந்த பிசாசுகளுக்கும் ஒரு கும்பிடு..”
என்றவள் தொடர்ந்து
“சமைச்சு போடுறதுக்கோடா..”
என்று கொண்டு மீண்டும் நிமிர்ந்தவளைத் தான் அவன் பார்த்திருந்தான்.

“இப்புடி இறுக்கி இறுக்கி பிடிக்காத.. எலும்பு நோகுது.. ஆரும் பாத்தால் தப்பா கதைக்குங்கள்.. நல்ல புள்ளையா இருக்கோணும்.. அப்புறம் இன்னும் ஒரு விசியம் நான் உன்னோடயே இருக்கோணும் எண்டால் நீயும் எனக்கு ஒண்டு செய்யோணும்.. செய்வியோ..”
என புடவையை இழுத்துச் செருகியபடி கேட்டாள் கோதை.

“என்னடி செய்யோணும் சொல்லு..”
என்றவனுக்கு அவள் கேட்காமலேயே அவளின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற வெறியே வந்து விட்டது.

எப்போது வந்தாள் எப்படி வந்தாள் என்று தெரியாமலேயே அந்த அசுரனின் மனதினுள் காதல் குறிஞ்சிமலராய் மலர்ந்து மணம் பரப்பத் தொடங்கி விட்டிருந்தாள் கோதை. இனிமேல் அவனாக நினைத்தால் கூட அவளை விட்டுப் பிரிய மாட்டான் என்பது தான் யாருமே அறியாத உண்மை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!