குறிஞ்சி மலர்.. 32
தன் அறையினுள் நுழைந்து கொண்ட கோதைக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஏன் அவனுக்கு முகம் அப்படி மாறியது என மண்டையை போட்டுக் குழப்பிக் கொண்டாள்.
பிறகு தன்னைத் தானே மானசீகமாகத் திட்டியும் கொண்டாள். என்ன இருந்தாலும் நான் அந்தப் பாட்டைப் பாடி இருக்க கூடாது. அந்த இடத்துக்கு ஏற்ற போல நல்ல பாட்டாப் பாடியிருந்தால் அந்த இடம் இன்னும் அழகாக மாறியிருக்கும், அவனும் இப்படிப் பாதியில் எழுந்து வந்திருக்க மாட்டான் என நினைத்தவள் அலுப்புடன் வெளியே சென்றாள்.
வெளியே எங்குமே ஜேம்ஸைக் காணவில்லை. லேசாகப் பசிப்பது போல இருக்க, ஏதாவது எடுத்துக் கொறிக்கலாம் என கீழே சமையலறைக்கு போனவளை வஞ்சிமாறன் பிடித்துக் கொண்டான்.
“என்ன பிள்ளை.. அண்ணன் குழிப்பணியாரம் கேட்டனே.. குழி வெட்டிட்டியோ..”
“அப்பாவை கூப்பிடண்ணாச்சி..”
“ஏன் பிள்ளை..”
“குழி வெட்ட தான்..”
“அச்சோ சோலியே முடிஞ்சிடும் போ..”
“ஏன்..”
“அந்த மனுஷன் என்னையப் புதைக்கத் தான் குழி வெட்டும்..”
“ஹா ஹா அந்தப் பயம்.. சரி வாங்கோ வேறை எதாவது சாப்பிடத் தாரன்..”
“அப்ப குழிப்பணியாரம்..”
“அது குழி வெட்டியிட்டு கூப்பிடுறன்..”
எனச் சிரித்தவளைப் பார்த்துச் சிரித்தவன், தானும் அவளோடு சமையலறை சென்றான்.
வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் தீயாய் அலங்கார வேலைப்பாடுகள் செய்வதையே பார்த்தபடி உள்ளே சென்றவள், தனக்கும் வஞ்சிக்கும் தேநீர் ஊற்றத் தொடங்கினாள்.
“என்னண்ணாச்சி.. வீடெல்லாம் அலங்கார வேலை நடக்குது.. என்ன பங்ஷன்..”
“என்ன பிள்ளை உனக்கு விசியமே தெரியாதோ..”
“என்ன விசியம்..”
“பாஸ் திடீரெண்டு வந்து.. நாளைக்கே கலியாணம் எண்டு சொல்லீட்டார்..”
“என்னது..”
“ஓம்.. இங்க இருக்கிறவையளை மட்டும் வைச்சுக் கொண்டு சிம்பிளா முடிக்கப் போறாராம்..”
“அதுக்கு தில்லையப்பா ஒண்டும் சொல்லேலையோ..”
“சொன்னவர் தான்.. ஆனா பாஸ் சொன்னா சொன்னது தான்.. அதனால பேசாமல் இருந்திட்டார்..”
“ஓ..”
“சரி நீ உடுப்புகள் எடுத்து வைச்சிட்டியோ..”
“என்ன உடுப்புகள்..”
“நாளையான் விஷேசத்துக்கு தான்..”
“நான் ஒரு ஓரமா நிண்டு கொள்ளுவன்..”
“ஏன் ஏன் அப்ப நீ விஷேசத்துக்கு வர மாட்டியோ..”
“விஷேசம் வீட்டுல தானே.. நான் இங்க சமையல்கட்டுல நிண்டு கொள்ளுவன்..”
“ஏன் பிள்ளை..”
“நான் விஷேசத்துக்கு வரக் கூடாதண்ணா.. நான் வந்து அவை ஆரும் முகம் சுருக்க முந்தி நான் உள்ளயே இருக்கலாம் எல்லோ..”
என கோதை சொல்லவும், ஏதோ சொல்ல வந்த வஞ்சி பிறகு வாயை மூடிக் கொண்டான்.
அந்த நேரம் பார்த்து வியாகேசும் உள்ளே வந்தார். அவரைப் பார்த்ததும் அவருக்கும் சேர்த்து தேநீர் ஊற்றிக் கொடுத்தாள் கோதை.
“அண்ணனும் தங்கையும் என்னைய விட்டிட்டு என்ன ரகசியம் கதைக்கிறியள்..”
“அது ஒண்டுமில்லை பெரிசு.. குழிப்பணியாரம் கேட்டன் எல்லோ.. அதுக்கு எத்தினை அடி குழி வெட்டலாம் எண்டு டிஸ்கஸ் செய்றம்..”
“ஆ மூஞ்சி போடா அந்தப் பக்கம்.. பிள்ளையிந்தை முகமே சரியில்லை.. அதை என்ன ஏதெண்டு கேக்காமல் அவருக்கு குழிப்பணியாரமும் சுழிப்பணியாரமும் கேக்குதாம்..”
“ஏன் அவள் நல்லா தானே இருக்கிறாள்.. ஏன் பிள்ளை உடம்பு ஏதும் சரியில்லையோ..”
“இல்லையே அப்புடியெல்லாம் இல்லையே.. ஏனப்பா..”
“இல்லை வழமையை விடவும் உன்ரை முகம் கொஞ்சம் அப்செட்டா இருக்கு அது தான்.. ஏன் அந்த தில்லையான் ஏதும் சொன்னவனோ..”
“அச்சோ அப்புடி எல்லாம் இல்லையப்பா.. எனக்கு தான் தலைவலிக்கிற போல கிடக்கு.. அது தான் தேத்தண்ணி குடிக்க வந்தன்.. தேத்தண்ணி குடிச்சால் சரியாயிடும்..”
“பாரன்.. பெரிசுக்கு மட்டும் டக்கு டக்குனு எல்லாரும் நல்லா இருக்கினமோ இல்லாட்டிக்கு அப்செட்டா இருக்கினமோ எண்டுறது தெரிஞ்சிடுது..”
“சரி இதைக் குடியுங்கோ.. நான் ஏதாவது சமைக்கப் போறன்..”
என்றபடி கோதை திரும்பிக் கொள்ள, அவளுக்கு மனது சரியில்லை என்பது வியாகேசுக்கு புரிந்து போனது.
என்ன நடந்தது ஏது நடந்தது என அவளைத் துளைத்து துளைத்து கேள்வி கேட்பது அவருக்கு சரியாகத் தோன்றவில்லை. கோதை கெட்டிக்காரி எதையும் சமாளிக்கும் இதயம் கொண்டவள். அவளே சமாளித்துக் கொள்ளுவாள். அப்படி இல்லையென்றால் நிச்சயமாக தன்னிடம் வந்து சொல்லுவாள் என நினைத்த வியாகேசு, அவளுக்கு இப்போது வேண்டியது தனிமை என்பதைப் புரிந்து கொண்டு, அங்கேயே நின்று வளவளத்து கொண்டிருந்த வஞ்சியை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.
வஞ்சிக்கும் ஏதோ புரிவது போல் இருக்க, அவனும் அதற்கு பிறகு வாயைத் திறக்கவேயில்லை.
நேரம் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க, ஜேம்ஸுக்கு உணவை எடுத்து வைத்தவள், அதை தான் கொண்டு போகவோ வேறு யாரிடமும் கொடுத்து விடவோ என யோசனை செய்து முடிப்பதற்குள், அவனே கீழே இறங்கி வந்து உணவு மேசையில் அமர, அவனோடு வியாகேசும் அமர்ந்து கொண்டார்.
ஒரு தடவை உணவுப் பாத்திரங்களை எடுத்துப் போய் மேசை மேல் வைத்தவள், அவன் தன்னைக் கண்டு கொள்ளாமல் தானே உணவைப் பரிமாறவும் கடுப்பாகி விட்டாள்.
“ரொம்பதான் பண்றான் வெள்ளைப்பண்ணி.. இப்ப நான் அப்புடி என்ன செஞ்சிட்டன் எண்டு உப்புடி உர்ரெண்டு இருக்கிறான் வெண்ணை.. ஒரு பாட்டு பாடினது குத்தமா.. சரி தான் போடா உனக்கு கோபம் எண்டால் எனக்கும் தான் கோபம்..”
என மனதினுள் அவனை வைதவள் திரும்பிப் போய் சமையலறையினுள் நின்று கொண்டாள்.
ஜேம்ஸ் உணவு முடித்து போகும் வரை கூட அவள் வெளியே தலை காட்டவே இல்லை. உணவை முடித்த ஜேம்ஸோ அவள் எங்கே என்பது போல நிமிர்ந்து பார்க்க, அவள் தான் அங்கே இல்லையே, சில நிமிடங்கள் அப்படியே இருந்து பார்த்தவன் அவள் அங்கே வரப் போவதில்லை என்பதை உணர்ந்ததும் மீண்டும் கடுப்பாகி தன் அறைக்கு போய் விட்டான்.
இருவருக்குமே அன்று சிவராத்திரி ஆகிப் போனது. இயல்பிலேயே சட்டு சட்டென்று கோபமாகும் ஜேம்ஸுக்கு, அவள் ஏன் என்னிடம் வந்து பேசவில்லை என்ற கோபம். இவனது கோபத்தையே பார்த்து பார்த்து அது பழகிப் போனவளுக்கு, இப்ப என்ன நடந்து விட்டது என்று நீ முகத்தை தூக்கி வைத்திருக்கிறாய் என்கிற கோபம்.
அவரவர் கோபத்தோடேயே இருவரும் விடிய விடிய விழித்திருந்து விட்டு அதிகாலையில் தான் தூங்கத் தொடங்கியிருந்தார்கள்.
மறு நாள் காலை தில்லையம்பலம் அந்த பங்களாவை ஒரு வழி செய்து கொண்டிருந்தார். இன்னும் சில மணி நேரங்களில் தன் மகள் அந்த பங்களாவுக்கு எஜமானி ஆகி, ஜேம்ஸின் சாம்ராஜ்யத்துக்கே மகாராணி ஆகப் போகிறாள் என்கிற மிதப்பில் அவருக்கு பெருமை பிடிபடவில்லை.
அங்கிருந்த வேலையாட்களை கிட்டத்தட்ட தரக்குறைவாக பேசி வேலைக்கு ஏவிக் கொண்டிருந்தார். அவர்களும் மறு வார்த்தை பேசாமல் வேலை செய்து கொண்டிருந்தார்கள். என்ன இருந்தாலும் சம்பளம் கொடுக்கும் முதலாளியின் வருங்கால மாமனார் அல்லவா அந்த ஒரு மரியாதைக்காக அவர்கள் வாயே திறக்கவில்லை.
இதைப் பார்த்த வியாகேசுக்கு சரியான கடுப்பாகிப் போனது. ஆனாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு போய் விட்டார்.
ஜேம்ஸ் கொடுத்த பெட்டியை எடுத்துக் கொண்டு மாடிக்கு போனவர், ஜேம்ஸின் அறைக் கதவை தட்டி, கதவைத் திறந்தவனிடம் வேண்டா வெறுப்பாக பெட்டியை நீட்டினார் வியாகேசு.
அவரது முகத்தின் வழி அவரது உணர்வுகளைப் படித்தவனுக்கு, மெல்லியதாக சிரிப்பு வரவே அதை அவரிடம் காட்டிக் கொள்ளாமல்,
“உள்ள வாங்கோ..”
என்று அவரது கையைப் பிடித்து உள்ளே இழுத்து விட்டு கதவைப் பூட்டினான்.
“எனக்கு நிறைய வேலை இருக்கு..”
“சரி..”
“கதவைத் திறந்து விடு..”
“சரி..”
“விளையாடாத பீட்டர்..”
“சரி.. நான் விளையாடேல்லை.. என்ன முகமெல்லாம் ஒரு மாதிரி கிடக்கு..”
“என்ன மாதிரி கிடக்குது.. அதெல்லாம் நல்லா தான் கிடக்கு.. என்னைய போக விடு..”
“இல்லை உங்களுக்கு என்னில கோபம்..”
“உன்னில கோபப் பட எனக்கென்ன உரிமை கிடக்கு..”
“யப்பா.. என்ன கோபம் இப்ப..”
“எனக்கு ஒண்டும் இல்லை போக விடு..”
“ஓ.. உங்களுக்கு நான் அந்த பிள்ளையை கலியாணம் கட்டுறது பிடிக்கேல்லை அப்புடி தானே..”
“பிடிக்கேல்லை எண்டால் மட்டும் பேசாமல் இருந்திடுவியோ..”
என்று கடுப்படித்தவரின், கன்னத்தை மெல்லத் தட்டியவன், அவரது காதோரம் ஏதோ இரகசியம் சொல்ல, அதைக் கேட்ட வியாகேசுக்கு ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் விழிகள் விரிந்தன.
“உண்மையாவோடா..”
என அவனை நம்பாத பார்வை பார்க்க, அவரின் தலையில் கை வைத்து அவரைப் பார்த்தான் அவன். அது போதுமே அவருக்கு, வியாகேசின் மேல் ஆணையாக ஜேம்ஸ் ஒரு விசயம் சொல்கிறான் என்றால் அதை உயிரைக் கொடுத்தென்றாலும் நிறைவேற்றி வைப்பான் என்பது அவர் மட்டுமே அறிந்த உண்மை.
“அதெல்லாம் சரி தான் இதை எப்புடி நடத்தி முடிக்க போறாய்..”
“ஒரு பெரிய மனுஷன் எண்டு உங்களை அதுக்கு தானே கூப்பிட்டன்.. ஏதாவது ஐடியா சொல்லுங்கோ..”
“ஐடியா தானே..”
என குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி வியாகேசு தீவிரமான யோசனையில் இறங்கி விட, அவரையே பார்த்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான் ஜேம்ஸ்.
சில நிமிடங்கள் அப்படியும் இப்படியும் யோசனை செய்து விட்டு, அவனருகில் வந்து அமர்ந்து கொண்டு
“எனக்கொரு ஐடியா வருதுடா.. ஆனா அதுல உன்னை வெறுக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கே..”
என தன் சந்தேகத்தை சொன்னார் அவர்.
“அதெல்லாம் பிறகு பாத்துக் கொள்ளலாம்.. அதோட போகப் போக அதெல்லாம் சரியாயிடும்..”
“நீ சொல்லுறதும் சரி தான்..”
“ம்ம்..”
“சரி உனக்கு தோணுறதை நீ சொல்லு.. எனக்கு தோணுறதை நான் சொல்லுறன்..”
“சரி”
என்று கொண்டு ஜேம்ஸ் தன் ஐடியாவை சொல்ல, வியாகேசு தன் ஐடியாவை சொன்னார். அதன் படி அடுத்த ஒரு மணி நேரத்தில் ரூபவர்ஷி காணாமல் போனாள்.
ஜேம்ஸ் கிறிஸ்தவன் என்றாலும், பெண் இந்து என்பதால் திருமணச் சடங்குகள் இந்து முறைப்படியே நடக்க வேண்டும் என்று அவனே சொல்லி விட்டான்.
அதன்படி முகூர்த்தத்துக்கு இன்னும் இரண்டு மணி நேரமே இருக்க, ஐயரும் வந்து சேர்ந்து விட்டார். மணமகளை சீக்கிரமாக தயாராகச் சொல்லுங்கள் என வியாகேசு நீலரூபியிடம் சொல்ல, அவரோ வேண்டா வெறுப்பாக மகளின் அறைக்குச் சென்றார்.
அங்கே ரூபாவுக்காக ஒதுக்கி கொடுக்கப் பட்ட அறை திறந்து கிடந்தது. அறையைத் திறந்து போட்டு விட்டு இந்த எருமை என்ன செய்கிறது என தலையில் அடித்துக் கொண்டு அறையினுள் போனவர், அடுத்த பத்து நிமிடத்தில் ரூபா அங்கே இல்லை என்பதை கண்டு கொண்டார்.
அடுத்து அவர் தில்லையம்பலத்திடம் போய் நின்றார். தொலைபேசியில் யாருடனோ வெட்டி வீராப்பு பேசிக் கொண்டிருந்த கணவரைப் பார்க்க பார்க்க நீலரூபிக்கு கடுப்பேறியது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், ரூபா அறையில் இல்லாத விசயத்தை மட்டும் அவரிடம் சொன்னார்.
முதலில் மனைவி மீது எரிந்து விழுந்த தில்லையம்பலம், யாரிடமும் எதுவும் சொல்லாமல் தானும் மெல்ல மகளைத் தேட, ஒரு மணி நேரம் அப்படியே போனது தவிர அவளை ஆளைக் காணவேயில்லை. அவளது ஃபோன் வேறு வேலையே செய்யவில்லை. அப்படியே தலையில் கைவைத்துக் கொண்டு அவர் அமர்ந்து விட, நீலரூபியோ பேசாமல் அவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.