குறிஞ்சி மலர்.. 33
ரூபவர்ஷியை வீடு முழுவதும் தேடியும் அவள் எங்குமே கிடைக்கவில்லை. அதற்குள் பட்டு வேஷ்டி சட்டை போட்டு மாப்பிள்ளை கோலத்தில் ஜேம்ஸ் கீழே இறங்கி வர தில்லையம்பலத்துக்கு பதட்டம் கூடி விட்டது.
ஒரு மர்மப் புன்னகையோடு அவரையே பார்த்தபடி போய் மணமேடையில் அவன் அமர்ந்து கொள்ள, மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள் என ஐயர் உத்தரவு கொடுத்தார்.
முகூர்த்தத்துக்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது, ஐயர் ஏன் இப்போதே பெண்ணை அழைக்கிறார் என வஞ்சி யோசனையோடு பார்க்க, பதட்டத்தில் இருந்த தில்லையம்பலம் அதைக் கவனிக்கவில்லை.
அதற்குள் சமையலறைக்குள் நின்று, அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கோதையிடம் வியாகேசு போனார்.
“என்னம்மா என்ன.. எட்டி எட்டிப் பாத்திட்டே நிக்கிறாய்.. அங்க வந்து நிக்க மாட்டியோ..”
“வேண்டாம் அப்பா.. பிறகு என்னைப் பாத்திட்டு அபசகுனம் அது இதெண்டு கதைப்பினம்.. திடீரெண்டு கலியாணத்துல சின்ன தடங்கல் வந்தாலும் அது என்னால தான் எண்டும் சொல்லுவினம்.. பிறகு எனக்கு தான் கஷ்டமா இருக்கும்..”
“நீ வெளியால வந்தாலும் வராட்டிக்கிலும்.. நீ நினைக்கிற கலியாணம் நடக்காது போலயே..”
“ஏனப்பா..”
“உன்ரை தொங்கச்சியை காணேலையாம்..”
“காணேல்லையோ.. ஏன் எங்க போட்டாள்.. இன்னும் முக்காமணி நேரத்துல முகூர்த்தத்தை வைச்சுக் கொண்டு எங்கினை போய்த் தொலைஞ்சாள்..”
“அது தான் தெரியேல்லை பிள்ளை.. உனக்கேதும் தெரியுமோ..”
“எனக்கென்னப்பா தெரியும்.. அவள் வீட்டுலயே இல்லை எண்டுறதே நீங்கள் சொல்லி தான் தெரியுது..”
“போச்சுது எல்லாம் போச்சுது..”
“என்னப்பா..”
“பீட்டர் இத்தினை நாள் கட்டிக் காத்து வைச்ச அவனிந்தை மானமே போகப் போகுது..”
“உவள் காணாமல் போனதுக்கும் அவரிந்தை மானம் போறதுக்கும் என்னப்பா சம்பந்தம்..”
“என்ன பிள்ளை நீ.. ஒரு கலியாணம் நடக்கப் போகுது.. அதுக்கு இன்னும் முக்காமணி நேரம் தான் இருக்கு.. ஆனா பொம்பிளையைக் காணேல்லை எண்டால்.. மாப்பிள்ளைக்கு என்ன குறையோ என்ன வியாதியோ அது தான் கடைசி நேரத்துல பொண்ணு ஓடிப் போயிடுச்சு எண்டு கதைப்பாங்கள்..”
“உப்புடி எல்லாம் கதைப்பாங்களோ..”
“உதுக்கு மேலயும் கதைப்பாங்கள் பிள்ளை.. அது கூடப் பரவாயில்லை சமூகத்துல எங்கடை பீட்டர் எவ்வளவு பெரிய இடத்துல இருக்கிறான்.. அவனுந்தை கலியாணமே இப்ப நிக்க போகுதெண்டால் அது அவனுக்கு எவ்வளவு பெரிய கறுப்பு புள்ளி.. இத்தனை வருஷத்துக்கு பிறகு இப்ப தான் கலியாணம் கட்டுவம் எண்டு இறங்கி வந்தான்.. அது இப்புடியோ முடியோணும்.. பாவம் அவனே நொந்து போயிடுவானே..”
“பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதேங்கோப்பா.. அவருக்கு அப்புடி எல்லாம் நடக்காது.. அவள் உங்கினை தான் நிப்பாள்.. ஒருவேளை பியூட்டி பார்லர் போயிருப்பாள் போல.. இருங்கோ நான் தேடுறன்..”
என்று கொண்டு பதட்டத்துடன் வெளியே போனவளைத் தொடர்ந்து வெளியே வந்த வியாகேசு ஜேம்ஸைப் பார்க்க, அவன் புருவங்களை உயர்த்தி என்னவென கேட்க, கொஞ்சம் பொறுமையா இரு என்பது போல சைகை காட்டி விட்டு, கோதைக்கு பின்னால் போனார் அவர்.
வேகமாக ரூபவர்ஷிக்காக ஒதுக்கப் பட்ட அறையை நோக்கி போனவளை, எதிர் கொண்டு அணைத்துக் கொண்ட நீலரூபி
“கோதை இங்க பாருடி.. அந்த விசரி செய்த வேலையை எங்க எண்டே தெரியேல்லையடி.. இப்ப இன்னும் ஏன் பொம்பிளையைக் கூட்டி வரேல்லையெண்டு கேக்க தான் மானம் போகப் போகுது..”
என எரிச்சல் கலந்த கவலையோடு சொல்ல,
“சரி சரி தேடுவம் நீலாம்மா.. ஒரு வேளை மேக்கப் போடப் போனாளோ தெரியேல்லையே..”
என்று கொண்டு தாயை சமாதானம் செய்தாள்.
அதற்குள் அங்கே வந்திருந்த வியாகேசு, அறையினுள் போய் ஒரு கடிதத்தோடு வெளியே வந்தார்.
“பிள்ளை ஏதவோ கடதாசி கிடக்கடி என்னெண்டு பார்..”
என்று கொண்டு அதை கோதையிடம் நீட்டினார்.
“கடதாசியோ..”
என கைகள் நடுங்க அதை வாங்கிக் கொண்டவள், ஓரமாகச் சென்று அதைப் படித்தாள்.
“அப்பா.. என்னை மன்னித்து கொள்ளுங்கள். நான் இங்கிருந்து போகிறேன்.. உங்கடை ஆசைப்படி அந்த ஜேம்ஸை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது.. நேற்றிரவு தான் என் முன்னால் காதலன் கைலாஷ் என்னைப் பார்க்க வந்திருந்தார்.. அவர் எனக்காக தற்கொலை வரைக்கும் போய் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்.. எனக்கு மனது கனத்து விட்டது.. அதனால் அவருடனேயே போகிறேன்.. இதை அந்த ஜேம்ஸிடம் சொல்லி விடுங்கள் அதோடு நான் இப்படி கடிதம் மூலம் சொல்லி விட்டு போவற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது.. அந்த ஜேம்ஸ் நமக்கு எதிரி அல்லவா அவனை பழி வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பு.. கலியாணம் நடக்க இருக்க இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கிறது எனும் பட்சத்தில் அவனை வேண்டாம் என்று நான் வீட்டை விட்டு கிளம்பினால் அது அவனுக்கு அவமானம் தானே.. இந்த அவமானம் தாங்காமல் அவன் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.. அதனால் நான் இப்போதே கிளம்புகிறேன்.. உங்களுக்கு எதுவும் தெரியாது என்பது போலவேயே காட்டிக் கொள்ளுங்கள்.. நான் உங்களை பிறகு என் காதலனுடன் சந்திக்கிறேன்..”
என முடிந்திருந்தது கடிதம்.
அது ரூபவர்ஷியின் கையெழுத்து தான் என்பதை ஒரே பார்வையில் புரிந்து கொண்டவளுக்கு தலை சுற்றியது.
தலையில் கை வைத்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்ட கோதை
“இப்ப என்னப்பா செய்யிறது..”
என பாவமாக வியாகேசைப் பார்க்க
“நீ நினைத்தால் இந்த இக்கட்டை மாத்தலாம் பிள்ளை..”
என அவர் சட்டென்று சொன்னார்.
“நானோ நான் என்னப்பா செய்ய..”
“இப்ப நீ என்னத்துக்காக கவலைப் படுறாய்.. உன்ரை கொப்பருந்தை மானம் போகப் போகுதெண்டோ.. இல்லாட்டிக்கு பீட்டர் அவமானப் பட்டு நிக்கப் போறான் எண்டோ..”
“இதுல தில்லையப்பாந்தை மானம் போகாதே.. பாவம் அந்த மனுஷன் தான் அவமானப் பட்டு நிக்கப் போகுது..”
“அதனால அவனுக்காக நீ கவலைப் படுறாய் அப்புடித் தானே..”
“கவலைப் படாமல் வேறை என்ன செய்யிறது..”
“அவனை இந்த அவமானத்துல இருந்து காப்பாத்த ஒரு வழி கிடைச்சால்.. அதை நீ செய்வியோ..”
“சத்தியமா செய்வன் அப்பா..”
“இஞ்சை பார் பிள்ளை இண்டைக்கு அவனுக்கு கலியாணம் முடிஞ்சு.. அடுத்த ஒரு மணி நேரத்துல மீடியாக்கு அதை தெரியப் படுத்த ஒரு மீற்றிங் இண்டைக்கு போட்டு இருக்கிறான்.. அவை வார நேரம் அவன் தலை குனியாமல் நிமிர்ந்து நிக்கோணும் எண்டால் அதுக்கு உன்னால மட்டும் தான் உதவ முடியும்..”
“என்னப்பா செய்யோணும் சொல்லுங்கோ நான் செய்யிறன்..”
“பேச்சு மாற மாட்டியே..”
“என்னப்பா நீங்கள்.. திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டு இருக்கிறியள்.. என்னில நம்பிக்கை இல்லையோ..”
“உன்னில நிறைய நம்பிக்கை இருக்கு.. ஆனா இந்த காரியத்தை நீ செய்ய மாட்டாய் அது தான்..”
“அப்பா.. கடவுள் சத்தியமா.. உங்கள் மேல வைச்சிருக்கிற மரியாதை மேல ஆணையா.. நான் செய்வன் நீங்கள் சொல்லுங்கோ..”
“நீ ஜேம்ஸை கலியாணம் கட்டோணும்..”
“அப்போய்..”
“கத்தாத பிள்ளை.. இதுக்கு தான் சொன்னான் நான்.. நீ அந்த காரியத்தை செய்ய மாட்டாய் எண்டு.. பாவம் அவன்.. அவனுக்கு குடுத்து வைச்சது அவ்வளவு தான்..”
“என்னப்பா நீங்கள்.. என்னைய பத்தி தெரிஞ்சுமோ உப்புடிக் கேக்கிறியள்..”
“உன்னைய பத்தி தெரிஞ்சதால தான் கேக்கிறன் பிள்ளை..”
“அப்பா.. அவரிந்தை அந்தஸ்துக்கும் தகுதிக்கும் போயும் போயும் இந்த வாழ்விழந்தவளையோ கலியாணம் கட்டோணும்..”
“உப்புடி கதைக்காத பிள்ளை..”
“சரி நான் அப்புடி கதைக்கேல்லை.. அவர் ரூபாவைக் கட்டுறது பத்தி எவ்வளவு கனவு கண்டிருந்திருப்பார்.. நீங்கள் பாட்டுக்கு என்னை வந்து கேக்குறியளே இது அவருக்கு தெரிஞ்சால் எப்புடி இருக்கும்.. என்னைய கட்ட அவருக்கு எப்புடி விருப்பம் வரும்.. நான் இங்க வேலை பாக்க வந்தவள்..”
“அவன் தன்ரை பெயர் கெடாமல் இருக்க நீ இந்த உதவியை செய்யக் கூடாதோ பிள்ளை.. பாவமெல்லோ அவன்..”
“நான் என்ன சொல்லுறன் நீங்கள் என்ன சொல்லுறியள் அப்பா.. அவருக்கு இதுல இஷ்டம் இருக்குமோ தெரியேல்லையே..”
“அவன் சரி எண்டால் உனக்கு சம்மதமோ..”
“அது.. என்ரை தங்கச்சி வாழ்க்கை..”
“அவள் தான் ஆரைப் பத்தியும் யோசியாமல் காதலிச்சவனோட ஓடியிட்டாளே பிள்ளை..”
“என்னப்பா இப்புடி சங்கடத்துல மாட்டி விடுறியளே..”
“பிள்ளை ஒண்டு கேக்கிறன் சொல்லுறியோ..”
“என்னப்பா..”
“உனக்கு ஒழுங்கான அப்பா இருந்திருந்தால் உனக்கு மறுமணம் செய்து வைப்பர் தானே.. அப்ப நீ அதை வேண்டாம் எண்டு சொல்லுவியோ..”
“அப்பா..”
“இந்தப்பா என்ரை பிள்ளைக்கு கலியாணம் கட்டி வைக்க ஆசைப் படுறன் அது தப்போ.. எனக்கு நீயும் முக்கியம் பீட்டரும் முக்கியம்.. அவனுக்கு இந்த உதவி நீ செய்ய மாட்டியோ..”
என அவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, அந்த இடத்துக்கு ஜேம்ஸ் வந்து விட்டான்.
“என்ன நடக்குது இங்க.. சீக்கிரமா சடங்கு சம்பிரதாயங்கள் முடிஞ்சா தான் நான் மீடியாவை கூப்பிட முடியும்..”
என்று கொண்டு வந்து நின்றவனை திரும்பி பார்த்த கோதைக்கு மனதை ஏதவோ செய்தது. ஆனாலும் தன்னைக் கட்டிக் கொள்ள அவனுக்கு இஷ்டம் இருக்குமோ இல்லையோ என பேசாமல் நின்றாள்.
“தம்பி எங்களை மன்னிச்சிருங்கோ.. ரூபா எங்களை மோசம் செய்திட்டு அவள் விரும்புற பையனோட ஓடியிட்டாள்..”
என நீலரூபி விசயத்தை போட்டுடைக்க,
“யார் யாரோட ஓடினால் எனக்கென்ன.. சொன்ன நேரத்துல சொன்ன மாதிரி என்னோட கலியாணம் நடக்கணும் நடக்கும்..”
என அழுத்தமாகச் சொன்னவனை, இவன் என்ன லூசா ஓடிப் போனவளை எங்கே போய் பிடித்து வருவான் என்பது போல கோதை அவனைப் பார்த்திருந்தாள்.
சற்றே தள்ளி அமர்ந்திருந்த தில்லையம்பலத்தை சொடக்கிட்டு ஜேம்ஸ் அழைக்க, அவனருகே வேகமாக வந்து நின்றார்
“என்ன உங்கடை மகளை வைச்சு என்னை அவமானப் படுத்தின சந்தோஷமோ..”
என அவன் கேட்க, அவரோ திரு திருவென முழித்தார்.
மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தவன்,
“முகூர்த்தத்துக்கு இன்னும் இருபத்தைஞ்சு நிமிஷம் தான் இருக்கு.. என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..”
என கேட்டான்.
அப்போதும் தில்லையம்பலம் விழித்துக் கொண்டு நிற்க,
அவனுக்கு முன்னால் வந்து நின்ற நீலரூபி
“தம்பி.. எப்புடியும் எங்கடை மகளை தானே கலியாணம் கட்ட போறேனு சொல்லி இருக்கீங்கள்.. எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க.. ஒருத்தி போனால் என்ன.. இன்னொருத்தி இருக்காள்..”
என்று சொல்லிக் கொண்டே, சற்றே தள்ளி நின்ற கோதையை இழுத்து அவன் முன்னால் விட்டு
“என்ரை மூத்த பொண்ணைக் கட்டிக்கோங்க மாப்பிள்ளை..”
என்று பட்டென்று சொன்னார்.
“அம்மாஆ..”
என அதிர்ந்து போய் கோதை அவரைப் பார்க்க
“சும்மாயிருடி.. அந்த பையனுக்கு நாங்கள் வாக்கு குடுத்து இருக்கிறம்.. அதை நிறைவேத்தோணும்.. அம்மா தலை குனிஞ்சு நிக்கிறது உனக்கு சந்தோஷம் எண்டால் என்னை மறுத்து பேசு..”
என்று கொண்டு கோதையைப் பார்த்து நீலரூபி சொல்ல, கண்கள் கலங்க தலையைக் கவிழ்த்துக் கொண்டாள் கோதை.
சரியாக இருபத்தைந்து நிமிட முடிவில், மணமேடையில் பட்டு வேஷ்டி சட்டையில் ஜேம்ஸ் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகில் சிவப்பு வண்ண கூரைப் பட்டுடுத்தி தலை குனிந்து அமர்ந்திருந்தாள் கோதை. குனிந்திருந்த அவளது தலையையே பார்த்தபடி அவளது கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டினான் ஜேம்ஸ்.
தாலி கட்டி முடித்ததும் ஜேம்ஸ், வியாகேசைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். பதிலுக்கு அவனைப் பார்த்துக் கண்ணடித்து சிரித்தவரோ, நிதானமாக கையில் கிடந்த பூந்தி லட்டை வாயில் அடைத்துக் கொள்ள, தில்லையம்பலமோ இரத்த கண்ணீர் வடிய ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தார்.