குறிஞ்சி மலர்.. 37
கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் பூக்காடும், நடு நடுவே நீர்வீழ்ச்சியும் என இயற்கை எழில் கொஞ்சும் இடத்தின் நடுவில், பச்சை வண்ணப் புடவையில் கோதை நின்றிருக்க, அவளின் முன்னால் கையில் பூச்செண்டு ஏந்திக் கொண்டு ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இயற்கையின் அழகில் தன்னை மறந்திருந்தவளது பார்வையைத் தன் பக்கம் திருப்ப முனைந்து கொண்டிருந்த, அந்த பூச்செண்டுகாரனின் முகம் கோதைக்கு தெளிவாகத் தெரியவில்லை.
சூரிய வெளிச்சம் வந்து கொண்டிருந்த திக்கில், கோதையைப் பார்த்தபடி நின்றிருந்தவனது முகத்தைப் பார்க்க முடியாமல், சூரிய வெளிச்சம் கோதையின் கண்களை கூசச் செய்து கொண்டிருந்தது.
சூரிய வெளிச்சத்தை கைகளால் அணை கட்டிக் கொண்டு, முன்னால் நின்றிருந்தவனது முகத்தை பார்க்க முயன்றவளுக்கு, ஜேம்ஸின் காதல் கொண்ட முகமே கண்களுக்கு தெரிந்தது.
இவனுக்கு காதலாகக் கூடப் பார்க்கத் தெரியுமா என்பது போல கோதை விழி விரித்தபடி நிற்க, பூச்செண்டோடு அவளின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தவன், தன் நீலவிழிகளால் கோதையின் கரு விழிகளை ஊடுருவியபடி
“ஐ லவ் யூ.. பேபீ..”
என தன் காந்தக் குரலில் சொல்ல, கோதை அப்படியே மயங்கி அவன் மீதே விழுந்தாள்.
அவள் மீண்டும் கண் விழித்துப் பார்த்த போது, ஏரிக் கரையில் யாரோ ஒருவரின் மடியில் கிடந்தாள். மெல்லக் கண்விழித்துப் பார்த்தவளின் பார்வையில் அதே காதல் ததும்பும் ஜேம்ஸின் முகம் தான் விழுந்தது.
அதற்குள் அவளை யாரோ பிடித்திழுப்பது போல இருக்கவே, எழ மனமே இல்லாமல் அப்படியே கிடந்தவளின் கன்னத்தில் யாரோ வேகமாகத் தட்டவே, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் கோதை.
அவளுக்கு எதிரில் அவளை முறைத்துக் கொண்டு நீலரூபி தான் நின்றிருந்தார்.
“என்னடி பிள்ளை.. அடிச்சுப் போட்ட மாதிரி அசையாமல் கிடக்குறாய்.. நான் கத்திக் கத்திக் களைச்சுப் போனன்.. அது தான் கன்னத்துல ஒண்டு போட்டனான்.. எழும்பி வந்து முகத்தை கழுவிக்கொண்டு வா..”
என நீலரூபி சொல்ல, அப்போது தான் தான் கண்டது கனவென்பதை உணர்ந்தாள் கோதை.
“கனவா அது.. அது தானே பாத்தன் அந்த சிடுமூஞ்சியாவது பூச்செண்டு குடுக்கிறதாவது.. அதுவும் எனக்கு..”
என முணுமுணுத்துக் கொண்டே தன் வேலைகளைக் கவனித்தாள் கோதை.
எப்போதும் இருக்கும் உற்சாகம் அவளுக்கு அப்போது இருக்கவில்லை. என்னவோ தெரியவில்லை இனம் புரியாத ஒரு ஏக்கம் மனதைத் தாக்க அப்படியே அமர்ந்து விட்டாள் கோதை.
அவளுக்கு வேலைகள் எதுவுமே ஓடவில்லை. தாயோடு நிறைய பேசினாள். நிறைய விதம் விதமாக சமைத்து பரிமாறினாள். ஆனால் எண்ணம் எங்கோ இருந்தது.
இரண்டு நாட்கள் யாருக்கும் காத்திராமல் அப்படியே ஓடி மறைய, கொழும்பில் இருந்த ஜேம்ஸுக்கு பிஸினஸ் விசயமாக அவுஸ்திரேலியா செல்ல வேண்டிய நிலை வரவே, அவன் அப்படியே கொழும்பில் இருந்தே அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு போய் விட்டான்.
இரண்டு நாட்கள் முடிந்த நிலையில் கோதை பழைய கோதையாக மீண்டிருந்தாள். வியாகேசு இரண்டு தினங்களுக்கு பிறகு அவளை அழைத்துச் சென்று ஜேம்ஸின் அறையின் சாவியைக் கொடுத்தார்.
அறையைத் திறந்து கொண்டு உள்ளே போனவளுக்கு எந்தப் பக்கம் பார்த்தாலும் அவன் நிற்பது போல ஒரு பிரமை ஏற்படவே வேகமாக வெளியே வந்து விட்டாள்.
அதே நேரத்தில், கோதையோடு பள்ளியில் படித்த சாதனா என்ற தோழியிடம் இருந்து கோதைக்கு ஃபோன் வந்தது. இவளா என சலித்துக் கொண்டு அவளது அழைப்பை ஏற்றாள் கோதை.
“ஏய் சாதனா என்ன திடீரெண்டு ஃபோனெல்லாம் எடுத்திருக்கிறாய்..”
“ஏன் கோதை எடுக்க கூடாதோ..”
“சேச்சே அப்புடி சொல்லேல்லை.. கொழும்பு பையனை கட்டி.. அங்க செட்டிலான பிறகு என்னை எல்லாம் கண்டு கொள்ளுறதே இல்லை.. இப்ப அதிசயமா எடுத்து இருக்கிறாய் அது தான்..”
“அதுவா பேசி நாளாச்சா அது தான் எப்புடி இருக்காய்னு கேக்க எடுத்தன்..”
“ஓ.. நான் நல்லா இருக்கிறன்.. நீ..”
“நானும் நல்லா இருக்கிறன்.. உனக்கு ரெண்டாங் கலியாணம் ஆயிட்டு எண்டு கேள்விப் பட்டன்.. சொல்லவேயில்லை கள்ளி..”
என சாதனா விடுப்பு பிடுங்க ஆரம்பிக்க
“வாடி விடுப்புக்காரி.. அத்தான பாத்தன் சோலியன் குடும்மி சும்மா ஆடாது.. நீ ஃபோன் எடுக்கவே நான் யோசிச்சு இருக்கோணும்..”
எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்ட கோதை
“உனக்கு எப்புடி தெரியும் சாதனா..”
என அவளின் வாயைப் பிடுங்கினாள்.
“சும்மா சொல்லக் கூடாதுடி.. நல்ல புளியங் கொம்பாத் தான் பிடிச்சிருக்கிறாய்.. ஜேம்ஸ் சாரிந்தை வடிவுக்கும் ஸ்டைலுக்கும் அவரிந்தை பேர்ஸ்ஸனாலட்டிக்கும் அவரை கட்ட பொண்ணுங்க அப்பவே கியூவுல நிண்டதுகள்.. பாத்தா அவர் உன்னைய கலியாணம் கட்டி இருக்கிறாரே.. அவரிந்தை நிறத்துக்கும் அந்த நீலக் கண்ணுக்கும் நானே கிரஷ்.. உன்ரை கலருக்கும் அவரிந்தை கலருக்கும் பொருத்தமே இல்லையேடி.. அதோட உனக்கு தான் ஏற்கனவே ஒருக்கா கலியாணம் முடிஞ்சிதெல்லோ.. அது அவருக்கு தெரியுமோ.. மறைச்சிருப்பாய் எண்டு தான் நினைக்கிறன்.. அது தான் எனக்கு ஒரே ஷாக்..”
என கூசாமல் சொல்ல, கோதைக்கு கோபம் ஏறியது.
“ஏன் ஏன் உனக்கு ஷாக்.. எத்தினை பொம்பிளையள் கியூவுல நிண்டால் என்ன.. கியூபாவில நிண்டால் என்ன.. அவருக்கு என்னைய தான் பிடிச்சிருக்குது.. அது தான் கலியாணம் கட்டினவர்.. இதுல உனக்கு எதுக்கு ஷாக் வரோணும்.. அதோட கலர்ப் பொருத்தம் என்னத்துக்கு.. கடலை வறுத்து தின்னவோ.. மனப் பொருத்தம் இருந்தா மட்டும் போதும்.. அது எங்களுக்கு நிறையவே இருக்கு.. ஏன் எனக்கு திரும்ப கலியாணம் நடக்க கூடாதோ.. நான் ஏன் என்ரை முதல் கலியாணத்தை அவருக்கு மறைக்கோணும்.. எல்லாம் தெரிஞ்சு தான் அவர் எனக்கு தாலி கட்டினவர்.. நீ மூடிட்டு ஃபோனை வை.. வந்திட்டா பெரிய கிளியோபட்ரா.. ஆளும் மண்டையும்..”
எனப் பொரிந்து தள்ளி விட்டு ஃபோனை கட் செய்த கோதைக்கு, ஏனோ தெரியவில்லை இப்போதே ஜேம்ஸை பார்க்க வேண்டும் போல வேகம் வந்தது.
அவன் இல்லாத வீடு ஏதோ போல அவளுக்கு தோன்றவே, அவனது படத்தை எடுத்து வைத்துக் கொண்டு படத்தில் இருந்த ஜேம்ஸோடு குடுமிச் சண்டை போட்டாள்.
“வெள்ளைப் பண்ணி.. இப்ப நீ எங்க.. என்னைய இங்க விட்டிட்டு கொழும்பில பெட்டையளை சைட் அடிக்க போயிட்டியோ.. போனது தான் போனே ஒரு வார்த்தை சொல்லீட்டு போனா என்னவாம்.. கண்ட கண்ட விசரியள் எல்லாம் எடுத்து நீ ஸ்டைலாம் வடிவாம் அதாம் இதாம் எண்டு என்னட்டையே சொல்லுறாளுகள்.. அப்புடி என்ன வடிவு நீ என்னைய விட..”
எனச் சொல்லிக் கொண்டே, படத்தில் இருந்த அவனின் முகவடிவை கையால் வருடியபடி
“ம்ம்.. சரி ஒத்துக் கொள்ளுறன் நீ என்னைய விட வடிவு தான்.. அதுக்கு நான் என்ன செய்ய.. ஏன்டா என்ரை கழுத்துல தாலியைக் கட்டினே.. உனக்கு பக்கத்துல நான் எப்புடி நிக்கிறது.. அதுக்காக வேறை எவளையாவது நிக்க விட்ருவனா.. கண்ணை நோண்டிட மாட்டன்.. அந்த கொழும்புல இருக்கிற இடியப்பவாய்ச்சி.. உன்ரை நீலக் கண்ணுக்கு தான் கிரஷாம்.. அவள்டை கண்ணை நோண்டி காக்காய்க்கு போட்டு விடுறன்..”
என்று கொண்டு கோபத்தில் மெத்தையில் ஓங்கிக் குத்தினாள்.
பின்னர் கோபமான மனதை கொஞ்சம் றிலாக்ஸ் செய்ய, பக்கத்தில் கிடந்த கெட்செட்டை எடுத்து காதில் கொழுவி, வானலையில் போய்க் கொண்டிருந்த பாடலை ஒன் செய்தாள்.
“ஒரு காதல் வந்துச்சோ…
ஓஒஹ்… ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ…
ஓஒஹ்… ஒரு காதல் வந்துச்சோ
என்னை நானே மெல்ல கொஞ்சிக் கொள்ளவோ முத்தம் தந்து இரு கன்னம் கிள்ளவோ..
அச்சோ அச்சோ என ரொம்ப தோணுதே அச்சோ அச்சோ
ஏனோ ஆசை கூடுதே..
எண்ணத்தில் சடுகுடு குடுவென நெஞ்சத்தில் படபடபடவென ஆசை வந்து கொத்திச்சோ..
எண்ணத்தில் சடுகுடுகுடுவென நெஞ்சத்தில் படபடபடவென ஆசை வந்து கொத்திச்சோ
ஒரு காதல் வந்துச்சோ…ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ…ஓஒஹ்… ஒரு காதல் வந்துச்சோ
ஒஹ் இது காதல் காலமடி
என் சகியே இது காதல் காலமடி நெஞ்சுக்குள் எங்கேயோ கேட்கின்ற ராகத்தில் ரகசிய ஆலாபனை
இது காதல் காலமடி என் சகியே இது காதல் காலமடி..”
என்ற பாடல் ஒலிக்க,
“இது காதல் காலமடி..”
என அந்த வரிகளை முணுமுணுத்தபடியே நிமிர்ந்த கோதை மறுகணமே ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தாள். அவளது கரம் மெல்ல கழுத்தில் தொங்கிய தாலியை இறுகப் பற்றிக் கொண்டது.
கோதைக்குள்ளும் காதல் போதையை ஊற்றி விட்டான் அவளின் அசுரன். தன் காதலை உணர்ந்த அந்த நொடி மெல்ல சிரித்தபடி தனது தலையில் தட்டிக் கொண்ட கோதை, தன் அசுரனின் படத்தை எடுத்து நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
ஜேம்ஸ் அவளுக்காக அவளின் அத்தைக்காரியையும் அவளின் மகன்களையும் நாயை விட்டு விரட்டியது, அத்தைகாரிக்கு சூடு வைத்தது என எப்போதோ அவளின் மனதில் சலனத்தை உண்டு பண்ணி விட்டிருந்தான்.
காதினில் விழுந்த பாடல் வரிகள் மனதை தழுவி செல்ல, கண்ணில் பட்ட படத்தில் இருந்த ஜேம்ஸின் உருவமும் மனதை தழுவிச் சென்றது.
“ஒரு மின்சார பார்வையின்
வேகம் வேகம் உன்னோடு நான் கண்டு கொண்டேன்..
ஒரு பெண்ணோடு தோன்றிடும்
தாபம் தாபம் என்னோடு நான்
கண்டு கொண்டேன்..
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்..
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லைஎன் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏனின்னும் பேசவில்லை..”
எனப் பாடிக் கொண்டே ஜேம்ஸின் படத்தில் தன் இதழைப் பதித்தாள் கோதை.
“இனி எவளாச்சும் என்ரை வெள்ளைப் பண்ணி மேல கண்ணு போடட்டும்.. அந்தக் கண்ணுக்கு சூனியம் வைச்சு விடுறன்..”
எனச் சொன்னவள், அறையினுள் இருந்து கொண்டே வியாகேசுக்கு ஃபோன் எடுத்தாள்.
“என்னடி பிள்ளை.. ஃபோனுக்கு காசு கூடிப் போச்சுதோ.. கூடினால் எனக்கும் ஒரு அஞ்சு ரூவாப் போட்டு விடு..”
“அப்பா.. அஞ்சு ரூவா என்ன அம்பது ரூவாவே போட்டு விடுறன்.. எனக்கு அவரிந்தை நம்பரை ஒருக்கா போட்டு விடுறியளே..”
“எவரிந்தை நம்பர்..”
“மை ஆத்துக்காரர் நம்பர் தான்..”
“ஓ.. இந்தா போட்டு விடுறன்..”
என்று சொல்லிக் கொண்டே, வாட்சாப்பில் ஜேம்ஸின் நம்பரை கோதைக்கு அனுப்பி விட்டு, வியாகேசு ஏதோ சொல்வற்கு வாயைத் திறப்பதற்குள் அவள் ஃபோனை கட் செய்து விட்டிருந்தாள்.
“கட் பண்ணிட்டா.. அது சரி இப்ப தானே பீட்டரிந்தை நம்பரே வாங்கியிருக்கிறா.. இனி நான் பீட்டரை பத்தி அதிகமா கவலைப் பட தேவையில்லை எண்டு நினைக்கிறன்.. அவள் தன்ரை புருஷனை வடிவாப் பாத்துக் கொள்ளுவாள்.. மஞ்சள் கயிறு மாஜிக் எண்டு சும்மாவோ பெரியவை சொன்னவை..”
என நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி வியாகேசு தன் வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டார்.
வியாகேசிடம் இருந்து நம்பர் வந்ததுமே அதை தன் ஃபோனில் பதிவேற்றியவள், எப்படி அவனது பெயரை பதிவு செய்யலாம் என தன்னுள் ஒரு விவாதமே நடத்தி முடிக்க, இறுதியில் கோதையின் ஃபோனில் ஜேம்ஸின் நம்பர் அசுரன் என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப் பட்டது.