குறிஞ்சி மலர்.. 39
கோதைக்கும் ஜேம்ஸுக்கும் திருமணம் முடிந்து சரியாக ஆறு தினங்கள் முடிந்த நிலையில், ஏழாவது நாள் அவர்களின் திருமண வரவேற்பு நடத்தப் பட இருந்தது.
விடிந்தால் திருமண வரவேற்பு எனும் நிலையில், அதற்கான ஆயத்தங்களை வியாகேசும் வஞ்சியும் முன்னின்று கச்சிதமாக நடாத்திக் கொண்டிருந்தனர்.
திருமண வரவேற்பை நடாத்துவதற்காக வெளியே ஒரு மண்டபத்தை புக் செய்திருந்தார்கள். வரவேற்பில் இருந்து உணவு பரிமாறுவது வரை மண்டபத்தினரே சிரத்தையாகப் பார்த்துக் கொள்ள, பணம் கொடுத்து விட்டு அதை மேற்பார்வை செய்வது மட்டுமே வியாகேசின் வேலையாக இருந்தது.
ஜேம்ஸின் தொழில்முறை நண்பர்கள், அறிந்தவர்கள் தெரிந்தவர்கள், நிறுவன ஊழியர்கள் என ஏராளமானவர்கள் வருகை தர இருப்பதால் பெரிய மண்டபமாகவே பார்த்திருந்தார்கள்.
அது போக, ஜேம்ஸின் ஜீவோதயமும் நன்றாக அலங்கரிப் பட்டுக் கொண்டிருந்தது.
எல்லோருமே திருமண வரவேற்பிற்கான ஆயத்தங்களில் தங்களை மூழ்கடித்திருக்க ஒருத்தி மட்டும் அறையிலேயே முடங்கிக் கிடந்தாள்.
ஜேம்ஸ் ஆஸ்திரேலியாவில் இருந்த நான்கு இரவுகளும் அவளோடு தினமும் ஃபோனில் கதைப்பான். கதை முடிவில் அவளை பாட சொல்லி கேட்பான், இவளும் அவனுக்கு பிடித்த பாடலை பாடுவாள். அந்த பாட்டோடு இருவரும் தூங்கி விடுவார்கள்.
நாளை இருவருக்கும் திருமண வரவேற்பு என்ற நிலையில், ஜேம்ஸ் இன்று இரவே இங்கே வருவதாக இருந்தது. ஆனால் அவனை இன்னும் காணவில்லை. அவன் எப்போது வருவான் என்ற ஆவலிலும், அவனை நேரில் பார்த்த பின்னர் தான் எப்படி நடந்து கொள்ளப் போகிறோம் என்ற எண்ணத்திலும் கோதை சிறிது பதட்டமாகத்தான் இருந்தாள்.
நேரம் அதுபாட்டில் நகர்ந்து கொண்டிருக்க, ஜேம்ஸை மட்டும் இன்னும் காணவேயில்லை. நாளை திருமண வரவேற்பை வைத்துக் கொண்டு இன்னும் அவன் வந்து சேரவில்லையே என்ற எண்ணம் கோதைக்கும் வராமல் இல்லை.
நேற்று இரவு பேசும் போது கூட, அநேகமாக நாளை காலை வந்து விடுவேன் என கோதையிடம் சொல்லியிருந்தான். காலை நகர்ந்து மாலை வந்து இரவும் ஆகி விட்டிருந்தது. அவனை தான் காணவில்லை. நேற்றிரவுக்கு பிறகு இதோ இப்போது வரை அவனுக்கு அழைப்பு எடுத்தாலும் ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது.
பொதுவாக மனித மனம் ஏதாவது ஒரு விபரீதம் நடந்திருந்தால், அதே போல இன்னொரு விசயம் சாதாரணமாக நடந்தால் கூட, அது போல விபரீதம் ஆகி விடுமோ என்கிற மாதிரி பயத்தைத் தானாகவே தத்தெடுத்துக் கொள்ளும். அதே நிலை தான் இப்போது கோதைக்கும்.
கோதையின் முதல் கணவன் வாகீசன், அவளுக்கு தாலி கட்டி இரண்டு கிழமைகளில் கொழும்புக்குப் போனான். போனவன் திரும்பி வராமல் அவனது மரண செய்தி மட்டும் தான் அவளுக்கு வந்தது. அதே போல இதோ இவளின் ஜேம்ஸ் அவளுக்கு தாலி கட்டி, இரண்டு நாட்களில் கொழும்புக்குப் போயிருக்கிறான். வருகிறேன் என்று சொன்ன நேரத்தைக் கடந்தும் அவன் வரவில்லை என்பது, நேரம் ஆக ஆக கோதைக்கு உள்ளூர நடுக்கத்தைக் கொடுத்தது.
தான் தேவையில்லாமல் மனதை போட்டுக் குழப்பிக் கொள்கிறேன். அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும். அவுஸ்திரேலியாவில் இருந்து கொழும்பு வந்ததும் கொஞ்சம் களைப்பு வந்திருக்கும். அதனால் ஓய்வெடுக்கிறார் போல, யாராவது ஃபோன் எடுத்து தொல்லை கொடுக்கக் கூடும் என்பதால் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறார் போல என தனக்குத் தானே ஏதேதோ சமாதானங்கள் சொல்லிக் கொண்டிருந்த கோதை,
சுவாமி அறையில் தீபம் ஏற்றி வைத்தால், மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என நினைத்தாள்.
உடனே வேகமாக எழுந்து கொண்டவளுக்கு, அப்போது தான் நினைவு வந்தது அந்த வீட்டில் சுவாமியறை இல்லையென்பது.
ஜேம்ஸ் வந்ததும் அவனிடம் கேட்டு, இங்கே இருக்கும் ஒரு அறையை சுவாமியறையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தவள், தன் அறையில் இருந்த அலுமாரிக்குள் வைத்திருந்த அம்மன் படத்தை கும்பிட்டாள். மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
இப்படியே நேரம் போய், இரவு உணவு நேரம் கடந்து, இரண்டு மணி நேரங்கள் ஆன நிலையில், வியாகேசிடம் போய் நின்றாள் கோதை.
“என்ன பிள்ளை.. கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது.. நேரம் ஆகுது போய்ப் படுத்து நித்திரை கொள்ளு..”
“ஓமப்பா போறன்.. ஆனா..”
“என்ன பிள்ளை.. ஏதும் கேக்க வந்தனியோ..”
“ஓமப்பா..”
“அப்ப கேளன் பிள்ளை.. அதுக்கேன் அங்கையும் இங்கையும் பாத்துக் கொண்டு முழிக்கிறாய்..”
“அப்பா.. இவரு எப்போ வருவாரு..”
“ஆரு பிள்ளை.. பீட்டரோ..”
“ஓமப்பா..”
“வந்திடுவான் பிள்ளை.. “
“அது தான் எப்போப்பா..”
“அது தெரியேல்லையே பிள்ளை.. அவன் அதெல்லாம் சொல்ல மாட்டானே..”
“உங்களிட்டையும் ஒண்டும் சொல்லேலையோ..”
“இல்லையே பிள்ளை..”
“நல்ல பழக்கம் பழகி வைச்சிருக்கிறார்.. வீட்டில இருந்து தூர பயணம் வெளுக்கிட்டால் என்ன நேரம் போய்ச் சேருவன்.. என்ன நேரம் வெளுக்கிடுவன்.. இப்ப எங்க நிக்கிறன் எண்டு சொல்லோணும்.. அப்ப தானே வீட்டுல இருக்கிறதுகள் நிம்மதியா இருக்குங்கள்.. இதென்னடா எண்டால் ஆளிந்தை அட்ரேஸே தெரியேல்லை.. இண்டைக்கு வரட்டுக்கும் அவருக்கு இருக்கு.. மனுஷருக்கு இங்க உயிர் போகுது பயத்தில.. நீங்களாவது ரெண்டு ஏச்சுக் குடுக்க கூடாதோ அப்பா..”
என்று வியாகேசிடம் பொரிந்து தள்ளியவள், நீலரூபி அழைக்கவும் அவரிடம் போய் விட்டாள்.
இங்கே வியாகேசுக்கு சிரிப்போடு திருப்தியாகவும் இருந்தது. இது தானே அவரும் எதிர்பார்த்தது. எங்கே தன் பீட்டருக்கு அக்கறையும் அன்பும் கொடுக்க ஒரு பெண் மனைவியாக வர மாட்டாளா என அவர் கடவுளைக் கும்பிடாத நாளில்லை. இதோ அவர் கும்பிட்டதன் பலன் கோதை வடிவில் இந்த வீட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்.
சில நிமிடங்கள் அப்படியே நின்று கடவுளுக்கு நன்றி சொன்னவர் அடுத்த கணமே தலைமறைவாகி விட்டிருந்தார். பின்னே இங்கே நின்று அவளிடம் வாங்கிக் கொள்ளவா. ஜேம்ஸ் வருவதற்கு நேரம் ஆக ஆக, கோதை நிச்சயமாக தன்னை தான் திட்டுவாள் என்பது அவருக்கு புரியாமல் இருக்குமா. அதனால் தான் அங்கிருந்து ஓடி விட்டார்.
ஜேம்ஸ் எங்கே எப்போது நிற்பான் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். எந்த இடத்துக்கு வர வேண்டும் என்றாலும், அந்த இடத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்பே வந்து விடுவான். அநேகமாக நாளை காலை தான் அவன் வரக்கூடும், சில சமயங்களில் இன்று நள்ளிரவு கூட வரலாம். யாருக்கு தெரியும் அது அந்தக் கடவுளுக்கும் அவனுக்கும் மட்டும் தான் தெரியும். முன்பு எப்படியோ இப்போது மனைவி வந்து விட்டாள். அவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லட்டும். என எண்ணிக் கொண்ட வியாகேசு தன் வேலைகளில் மூழ்கி விட்டார்.
நீலரூபியின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டு அவரோடு பேசத் தொடங்கிய கோதைக்கு பேச்சு இந்தப் பக்கம் இருந்தாலும் எண்ணம் முழுவதும் கணவனின் வரவிலேயே இருந்தது.
நேரம் ஆக ஆக பயம் ஒரு பக்கம் என்றால், கோபம் மறு பக்கத்தில் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தது. இப்போது ஜேம்ஸ் மட்டும் கையில் கிடைத்தால் அவனை இழுத்து வைத்து கன்னம் கன்னமாக அறைய வேண்டும் என்ற வெறியே கோதைக்கு வந்து விட்டது.
“என்னடி பிள்ளை..”
“என்ன நீலுமா..”
“மூஞ்சை ஏன் உப்புடி உர்ரெண்டு இருக்குது..”
“அப்புடியோ இருக்குது..”
“அப்புடி தான்டி இருக்குது..”
“அவ்வளவு கேவலமாவோ மூஞ்சி இருக்கு..”
“லூசு கடுப்பா இருக்கியேனு கேட்டேண்டி..”
“கடுப்பாத்தாம்மா இருக்கிறன்..”
“அது தான் ஏன்.. என்ன நடந்த.. ஆரும் ஏதும் சொன்னவையோ..”
“நல்லா சொல்லுவினம்.. சொல்லீட்டு இருப்பினமோ..”
“நீ தைரியசாலி தான்டி.. என்ன ஒண்டு அப்பப்போ கோழை ஆயிடுறாய்..”
“கொஞ்சம் பலவீனம் வந்திடுதும்மா..”
“சரி இப்ப என்ன நடந்த..”
“இப்ப நேரம் என்ன..”
“இப்ப நேரம் ராத்திரி பத்தரையாகுதுடி.. ஏன்டி..”
“உங்கடை அருமைக் கொழுந்து மருமகத்தும்பி இருக்கார் தானே..”
“ஜேம்ஸுக்கு என்னடி..”
“அந்த மனுஷன் இண்டைக்கு காலம்பற வாரன் எண்டு சொன்னது.. இந்தா இன்னும் ஆளைக் காணேல்லை..”
“வேலையள் இன்னும் முடியாமல் இருக்கும் பிள்ளை..”
“இருக்கட்டுமே.. அவனுக்கு நாள் முழுக்க வேலையாவே இருக்கட்டுமே.. ஒரு ஃபோன் எடுத்து நான் வர லேட்டாகும் எண்டு சொன்னால் தேஞ்சா போயிடுவான் வெள்ளைப் பண்ணி..”
“ஏய் என்னடி மருமகனைப் போய் அவன் இவன் எண்டு கொண்டு..”
“அவன் உங்களுக்கு தான் மருமகன்.. எனக்கில்லை..”
“அடியே தம்பி உனக்கு புருஷன்டி..”
“அந்த நினைப்பு இருந்திருந்தா உப்புடி ஏனோதானோனு இருந்திருப்பானோ.. பொண்டாட்டி வீட்டுல இருந்து என்னைய எப்ப வருவான் எப்ப வருவான்னு பாத்துட்டு இருப்பாளே பாவம் எண்டு ஒரு ஃபோனோ இல்லாட்டிக்கு ஒரு மெசேஜ்ஜோ போட்டிருக்கோணுமோ இல்லையோ.. இங்க ஒண்டத்தையும் காணோம்.. போதாக்குறைக்கு துரை ஃபோனை வேறை ஆஃப் செஞ்சு வைச்சிருக்காரு.. இண்டைக்கு வரட்டுக்கும் சட்டையை பிடிச்சு நாலு கேள்வி நாக்கை புடுங்கிற போல கேட்டு விடுறன்..”
“ஏய் என்னடி பிள்ளை..”
“என்ன நொன்னடி பிள்ளை..”
“கோபமா இருக்கியோ..”
“சோகமா இருக்கிறன் நீலூம்மா.. எவ்வளவு பதட்டமா இருக்குது தெரியுமோ.. தூர பயணம் போனால் ஒரு மெசேஜ் போட்டு எங்க நிக்கிறன்.. எங்க வாரன் எண்டு சொல்லோணும்.. நாட்டுல எவ்வளவு நடக்குது.. ஆக்சிடென்ட் அது இதெண்டு.. மனசுக்குள்ள பயமா இருக்கோ இல்லையோ.. நீலும்மா இப்ப நான் செம கடுப்பா இருக்கிறன்.. எனக்குள்ள இருக்கிற பயமே நேரம் ஆக ஆக கடுப்பா மாறீட்டு இருக்குது.. உன்ரை மருமகத்தும்மி மட்டும் கையில கிடைச்சான் எண்டால் கீழ இழுத்து போட்டு மிதிச்சிடுவன் சொல்லீட்டன்..”
“சரி சரி டென்ஷன் ஆகாதடி..”
“டென்ஷன் ஆகாமல் எப்புடி நீலுமா..”
“நீ பழசை யோசிச்சு மனசை குழப்பாத..”
“நானா யோசிக்கேல்லை.. அதுவா வந்து தொலையுது.. அந்த மனுஷனோட தான் வாழ குடுத்து வைக்கேல்லை.. இந்த மனுஷனோடையாவது நிறைய்ய வாழோணும் நீலும்மா நானு.. அது தான் டக்கெண்டு என்ன ஏதோண்டு பயமா கிடக்கு..”
“அதெல்லாம் ஒண்டும் நெகெட்டிவா நடக்காது.. அம்மாவை மட்டும் திட்டுவாய் நெகெட்டிவா யோசிக்கிறன் எண்டு.. நான் இனி உனக்கு அடி தான் போடப் போறன்.. போய் படு நாளைக்கு வரவேற்பு.. மருமகன் வந்திடுவார்.. போய் நல்ல பாட்டா கேட்டுக் கொண்டு படு.. எல்லாம் சரியாயிடும்.. அப்புறம் இன்னொரு விசயம்.. உன்ரை தலையில ஜேம்ஸ் எண்டும் ஜேம்ஸிந்தை தலையில நீயெண்டும் நீங்கள் பிறக்கும் போதே அந்தக் கடவுள் எழுதி வைச்சிட்டான்.. நடுவுல ஒரு விபத்து போல தான் அந்த வாகீசன் வந்து போனது.. அது முடிஞ்சு போன விசியம் அதை இனி நீ நினைச்சு பாக்கவே கூடாது.. போ போய் ஒழுங்கா படு..”
என்று மகளது பயத்தை போக்க ஆறுதல் சொல்லி அவளை அனுப்பி வைத்தார் நீலரூபி.
தாய் சொன்னதை மனதில் பதித்து கொண்டு வந்து மெத்தையில் விழுந்தவளுக்கு தூக்கமே வரவில்லை. ஒரு மணி நேரம் அப்படியும் இப்படியும் உருண்டு பார்த்தவள், எழுந்து போய் வெளியே வாசலில் தூணோடு சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
அவளைக் கண்டதும் கூண்டுக்குள் நின்ற நாய்கள் உறும, அந்தச் சத்தம் காதில் விழுந்தாலும் மனதில் பதிந்து அவளுக்கு பயம் உண்டாகவில்லை. அவளது எண்ணம் முழுவதும் தன் நாயகன் ஒழுங்காக எப்போது வீடு வந்து சேருவான் என்பதிலேயே இருந்தது.