குறிஞ்சி மலர்.. 40
தூரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் மணி, நேரம் நள்ளிரவு பன்னிரெண்டு என்பதை உறுதிப்படுத்த டாங் டாங்கென ஒலிக்கவும் கோதை திடுக்கிட்டு கண் திறந்து பார்த்தாள்.
வாசல் தூணோடு சாய்ந்து லேசாக கண்மூடியிருந்தவளுக்கு, கண் லேசாக எரிவது போல இருந்தது.
நிமிர்ந்து வாசலைப் பார்த்தவள், மீண்டும் தூணில் சாய்ந்து கொண்டாள்.
அவளை அப்படியும் இப்படியும் மனதால் அலைக்கழிய வைத்துவிட்டு, நடு இரவு ஒரு மணிக்கு ஜேம்ஸ் வீடு வந்து சேர்ந்தான்.
வாட்ச்மென் ஓடிச் சென்று கதவை திறந்து வைக்க, வேகமாக உள்ளே வந்த ஜேம்ஸின் கறுப்பு கார், அவளுக்கு பக்கமாக சற்றே தள்ளி வந்து நிற்க, அதில் இருந்து இறங்கினான் ஜேம்ஸ்பீட்டர்.
அந்த இரவிலும் தங்கள் எஜமானனை கண்டு கொண்ட அந்த உயர் ஜாதி நாய்கள் உறும, இறங்கியவன் வேகமாக அவற்றிடம் சென்றான். ஜேம்ஸ் வாசலோடு தூணில் சாய்ந்திருந்த கோதையை கவனிக்கவில்லை.
நாய்களிடம் சென்று சரியாக பத்து நிமிடங்கள் அவற்றை தடவி கொடுத்து, அவற்றை மீண்டும் கூண்டினுள் விட்டு என அவற்றோடு செலவழித்து விட்டு வீட்டின் வாசல் பக்கம் திரும்பினான் ஜேம்ஸ்.
கார்ச் சத்தம் கேட்ட போதே, கோதையின் இதயம் படபடக்கத் தொடங்கி விட்டிருந்தது. காரில் இருந்து இறங்கிய அவனைப் பார்த்ததும், மனது சட்டென்று நிம்மதியாக ஓடிச் சென்று அவனை இறுகக் கட்டிக் கொண்டு தொங்க வேண்டும் போல வந்த வேகத்தை சிரமப் பட்டு அடக்கிக் கொண்டு அவனையே பார்த்திருந்தாள் கோதை.
வந்தவனோ அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் தன் நாய்களைக் கொஞ்சப் போகவும், சட்டென்று கோதையின் உணர்வுகள் கடுப்புக்குள் புகுந்து கொண்டது. வரட்டும் என முறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மெல்லியதாக மஞ்சள் நிற வெளிச்சம் வீட்டின் வெளியே கசிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் தூணோடு சாய்ந்தபடி தன்னையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த தன் தேவதையை அப்போது தான் பார்த்தான் ஜேம்ஸ்.
பச்சை நிறப் புடவையை இழுத்துச் செருகிக் கொண்டு, கண்கள் சிவந்து, உச்சியில் இருந்த குங்குமம் லேசாக கலைந்து, அரையடிக் கூந்தலை அள்ளிக் கொண்டை போட்டு, தாலியை புடவைக்கு வெளியே விட்டு, இவள் என் மனைவி என்ற கர்வத்தைக் கொடுத்தபடி அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தபடி அவளை நெருங்கி வந்தான் ஜேம்ஸ்பீட்டர்.
அவன் இதற்கு முதல் எத்தனையோ பயணங்கள் போய் வந்திருக்கிறான். அப்போதெல்லாம் வியாகேசோ வஞ்சியோ அவனுக்காக வாசலில் காத்திருப்பார்கள். அவன் அவர்களை திட்டி நித்திரை முழிக்க வேண்டாம் என்று சொல்லிய பிறகு, அவர்கள் அவனுக்காக காத்திருப்பது கொஞ்சம் குறைந்து போனது.
அநேகமாக அவன் வீட்டினுள் வரும் போது, இப்படி அவனுக்கென அவன் வரவை எதிர்பார்த்து யாருமே வாசலில் அமர்ந்திருந்தது இல்லை.
சட்டென்று இடக்கையில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்த்த ஜேம்ஸ் அது ஒன்று எனக் காட்டவும், மீண்டும் மனைவியை நிமிர்ந்து பார்த்தான். அவள் அப்போதும் அவனைத் தான் பார்த்தபடி இருந்தாள்.
அப்படியே மனைவியை அள்ளியணைத்து அவள் உச்சியில் முத்தமிட வேண்டும் போல வந்த வேகத்தை, தன் தலையை அழுந்தக் கோதி சமன்படுத்திய ஜேம்ஸ்
“ஹேய் பேபீ.. தூங்காமல் இங்க என்ன பண்ணீட்டு இருக்காய்..”
என்று கொண்டு அவள் அருகில் போக, முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு எழுந்த கோதை, ஜேம்ஸின் கன்னத்தில் விட்டாள் ஒரு அடி.
இதை சற்றும் எதிர்பாராத ஜேம்ஸ், கன்னத்தில் கை வைத்தபடி அவளைப் பார்க்க, கார்ச் சத்தத்தில் ஆளுக்கொரு பக்கமாக வெளியே வந்த வியாகேசும் வஞ்சியும், அவளது அந்த செய்கையில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டார்கள்.
வேறு யாரேனும் இப்படி தன்னிடம் நடந்து கொண்டால், அடித்த அந்த கையை புத்தூருக்கு மாவுக்கட்டு போட அனுப்பி வைத்து விடும் அளவுக்கு மாறி விடும் ஜேம்ஸோ மனைவியின் தோரணையை இரசித்தபடி அதை காட்டிக் கொடுக்காமல் உணர்ச்சி இல்லாமல் நின்றிருந்தான்.
அவன் ஏதாவது பேசுவான் என எதிர்பார்த்துக் கொண்டு இடுப்பில் கை வைத்தபடி நின்ற கோதைக்கு, அவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் தன்னையே பர்த்திருக்க இன்னும் கடுப்பாகிப் போனது.
ஜேம்ஸ் ஒரு படி கீழே நிற்க, ஒரு படி மேலே ஏறி நின்று, சட்டென்று அவனது சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு
“கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்காடா உனக்கு.. எப்ப வருவன்.. இப்ப எங்க நிக்கிறன் எண்டு ஒரு ஃபோன் போட்டு சொன்னால் துரை குறைஞ்சு போயிடுவியளோ.. சரி நீ தான் ஒண்டும் சொல்லாமல் இருக்கிறாய்.. நானாவது ஃபோன் போடுவம் எண்டு பார்த்தால் ஃபோன் ஆஃப் எண்டு வருது.. தெரியாமல் தான் கேக்கிறன் என்னத்துக்கு உனக்கு ஃபோன் அவசரத்துக்கு உதவாத ஒண்டும் இருந்து லாபமே இல்லை.. பேசாமல் உன்ரை ஃபோனை கொண்டு போய் புட்டுப் பானைக்குள்ள போட்டு மூடு.. கொஞ்சம் கூடப் பொறுப்பில்லை.. ஃபோனை ஆஃப் செஞ்சிட்டு அப்புடி என்னடா பிடுங்கின்னீ..”
என்று கொண்டு கிட்டத்தட்ட கத்தியவள், சட்டென்று கையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து போக வேகமாகத் திரும்ப, அவளைப் பிடித்திழுத்தான் ஜேம்ஸ்.
அவன் பிடித்திழுத்த வேகத்தில் அவனோடு மோதி நின்றவள், அவனை முறைத்து, நெற்றியில் விழுந்த அவளது கூந்தலை ஒதுக்கி விட்ட ஜேம்ஸின் கையை தட்டி விட்டு
“தொடாதேடா எருமை.. எனக்கு வர்ர கோபத்துக்கு..”
என்றபடி அவனது கழுத்தை நெரிப்பது போல போனாள்.
பின்னர் கைமுஷ்டியை இறுக்கி அவனது தோளில் குத்த, அது சரியாக அவனது எலும்பில் பட, அவன் சாதாரணமாகத் தான் நின்றிருந்தான்.
பாவம் கோதை வலி தாங்காமல் கத்தியே விட்டாள்.
“என்னடீ..”
என்று கொண்டு ஜேம்ஸ் அவளது கையைப் பிடிக்க, அதற்கும் அவன் மீது கோபப் பட்டவள், அவனைத் தள்ளி விட்டு உள்ளே போகத் திரும்ப, சட்டென்று மனைவியை தூக்கி விட்டிருந்தான் ஜேம்ஸ்.
அதனைப் பார்த்த வியாகேசு, வாயைப் பிளந்து அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்த வஞ்சியை இழுத்துக் கொண்டு உள்ளே போனார்.
“என்ன பெரிசு.. நம்ம கோதையா அது.. என்னா அடி அடிக்கிறா.. தைரியசாலி தான்..”
“ம்ம்.. அவ தைரியசாலி தான்..”
“பாஸ் பேசாமல் நிக்கிறார் பாத்தியளா..”
“ம்ம்.. பாத்தன் பாத்தன்..”
“ஐ.. ஜாலி.. இனி பாஸை அடக்க ஆள் வந்தாச்சு.. நமக்கு வேலை மிச்சம்.. ஒரு ஓரமா நிண்டு வேடிக்கை பாக்க வேண்டியது தான்..”
“ஓமடா..”
“நான் நிம்மதியா தூங்கப் போறன்..”
என்று கொண்டு வஞ்சி போய் விட, வெளி வாசலில் நின்ற இருவரையும் திரும்பி பார்த்தார் வியாகேசு.
கோதையை கையில் தூக்கி வைத்துக் கொண்டு அவளை ஏதோ சமாதானம் செய்து கொண்டிருந்த ஜேம்ஸ் அவருக்கு புதிது. இருவருக்கும் திருஷ்டி கழிப்பது போல விரல்களை நெட்டி முறித்தவர். நிம்மதியாக நித்திரைக்கு போய் விட்டார்.
இங்கே கணவனின் கைகளில் இருந்து கீழே இறங்கப் பெரும் பாடு பட்டுக் கொண்டிருந்தாள் கோதை. ஆனால் இறங்கத் தான் முடியவில்லை.
“கீழ விடடா என்னைய..”
“என்னடி மரியாதை எல்லாம் நீளுது..”
“பொறுப்பில்லாத உனக்கெல்லாம் என்னடா மரியாதை..”
“அப்புடி என்னடி பொறுப்பில்லாமல் போயிட்டன்..”
“எப்ப வாரன்.. எங்க நிக்கிறன் எண்டு ஒரு வார்த்தை சொன்னியளா..”
“இதுவரை நான் சொன்னதில்லையே..”
“அது எனக்கு எப்புடி தெரியும்..”
“இப்ப என்ன தான்டி பிரச்சினை..”
“நீங்கள் தான் பிரச்சினை.. நீங்கள் நடந்து கொள்ளுற விதம் தான் பிரச்சினை..”
“என்ன விதம்..”
“வெளிய போனால் எங்க போறன் எப்ப வருவன் எண்டு சொல்லீட்டு போகோணும்..”
“ஓ..”
“என்ன ஓ.. பிறகு பொண்டாட்டி எண்டு நான் ஒருத்தி இங்க என்னத்துக்கு இருக்கிறன்..”
“பேபீ..”
“வாயை மூடுங்கோ.. இப்புடி நான் சொல்லாமல் கொள்ளாமல் வெளியால எங்கேயும் போய்.. எங்க நிக்கிறன் எண்டே சொல்லாட்டிக்கு நீங்கள் என்ன செய்வியள்..”
“உதைப்பன்..”
“அதை தான் நானும் செய்யிறன்..”
என்று கொண்டு, அவனது தோளில் அடிக்கத் தொடங்கினாள் கோதை.
அவளது கையைப் பிடிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்பீட்டர்.
“என்ன பேபீ பண்றாய்..”
“பாத்தா தெரியல்லை..”
“தெரியல்லையே பேபீ..”
“அடிக்கிறன்..”
“அடிக்கிறியோ..”
“ஓமடா..”
“பாத்தா அப்புடி தெரியேல்லை பேபீ..”
“அப்போ எப்புடி தெரியுதாம்..”
“நீ ஒத்தடம் குடுக்கிற போல கிடக்கு பேபி..”
“போடா..”
“எங்கடி போக..”
“எங்கையாவது போ.. என்னைய இறக்கி விடு.. நான் கடுப்பில இருக்கிறன்..”
“இடுப்பில கிள்ளினால் கடுப்பு ஓடிரும் பேபீ..”
“மவனே இடுப்பில கை வைச்சே அடுத்த டெட் போடி நீதான்டா..”
“சரி சரி கூல்.. கோபப் படாத..”
“இப்ப இறக்கி விடப் போறீங்களோ இல்லையோ..”
“என்னடீ நடந்த..”
“நிசமாவே உங்களுக்கு ஒண்டும் விளங்கேலையோ..”
“நீ சொல்லன்..”
“உங்களைக் காணேல்லை எண்டு எவ்வளவு பயந்திட்டன் தெரியுமோ.. ஒரு ஃபோன் எடுத்து எங்க நிக்கிறன் எப்ப வருவன் எண்டு சொல்லி இருக்கலாம் தானே.. நீங்கள் வரும் வரை ஒரே பதட்டம்..”
“ஹேய் பேபீ.. இதெல்லாம் ஒரு விசயமா..”
“என்னது இதெல்லாம் ஒரு விசயமோவா.. டேய் கொன்னுருவன்டா.. என்னோட பீலிங்ஸ் உனக்கு ஒரு விசயமாவே தெரியேல்லையோ..”
என்று கொண்டு அவனிடம் இருந்து விடுபட்டு இறங்கி கொண்டாள் கோதை.
அவளது கண்கள் கலங்கியிருப்பதை அப்போது தான் பார்த்த ஜேம்ஸ். அவளது கன்னத்தை தொடப் போக, மீண்டும் அவனது கரத்தை வேகமாகத் தட்டி விட்டு அவனை முறைத்தாள்.
“என்ரை பயம் உங்களுக்கு சொன்னாலும் உங்களுக்கு புரியாது.. உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்.. நீங்கள் வரும் வரை நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.. ஒரு வார்த்தை சொல்லவும் இல்லை.. இண்டைக்கு காலமையில இருந்த இப்ப வரை உங்களுக்கு என்னாச்சோ ஏதாச்சோனு நான் பட்ட அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும்.. இப்ப உங்களை கண்ணில கண்ட பிறகு தான் நிம்மதியே வந்தது.. ஆனா உங்களுக்கு ஒரு எண்ணஞ் சிந்தனை இல்லை.. அப்புடி தானே..”
என்று வேகமாகத் தொடங்கி முடித்தவளுக்கு என்ன முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை.
அவளது அழுகையைப் பார்த்தவனுக்கோ பதறிப் போய் விட்டது. அவளை வேகமாக இழுத்து அவன் அணைத்துக் கொண்டான்.
“விடுங்கோ என்னைய..”
“சாரிடி பேபீ..”
“உங்கடை சாரியும் வேண்டாம் பூரியும் வேண்டாம்..”
“சாரிடி சாரி.. எனக்கு தெரியலை பேபீ.. நீ சொல்லி குடு.. நான் எப்புடி நடத்துக்கணும் எண்டு.. சாரிடி பேபீ.. உன்னைய ரொம்ப கஷ்டப் படுத்தீட்டன்.. அழாதடீ..”
“எனக்கு அழோணும்..”
“அழாத பேபீ..”
“அழ வைச்சதே நீ தானேடா..”
“சரி சாரி அழாத..”
“நான் அழுவன்.. அழக் கூட உரிமை இல்லையோ எனக்கு..”
“உனக்கு எல்லாத்துக்கும் உரிமை இருக்குடி.. ஆனால் அழுறதுக்கு இல்லை..”
“போடா..”
“பேபீ அழாதடி.. எனக்கு கோபம் ஏறுது..”
“அப்புடி தான் அழுவன்..”
“ஏய் எதையாவது தூக்கி போட்டு உடைச்சிருவன்டி அழாதடி..”
“உடைச்சு தான் பாரன் பிறகு தெரியும்..”
“சரி உடைக்க மாட்டன் அழாத.. இப்ப சொல்லுறதை கேக்க போறியோ இல்லையோ..”
“நான் ஏன் கேக்கோணும்..”
“பேபீ.. நாயை அவுத்து விட்ருவன்டி..”
என ஜேம்ஸ் சொல்லி முடிக்கவும், சுவிட்ச் போட்டது போல கோதையின் அழுகை நின்று போனது.