குறிஞ்சி மலர்.. 41
ஜேம்ஸ் தன் நாய்களை அவிழ்த்து விடுவேன் என்று சொன்னதும், எப்படித் தான் அழுகையை நிறுத்தினாளோ தெரியவில்லை. சட்டென்று கோதையின் அழுகை நின்று போனது.
“குட் பேபீ..”
“என்ன மிரட்டுறியளோ..”
“இல்லையே பேபீ..”
“அப்போ இதுக்கு என்ன பேரு..”
“எதுக்கு..”
என சாதாரணமாகக் கேட்டவனின் தொனியில் கடுப்பாகி
“ஆ..”
எனக் கண்களை மூடிக் கத்திய கோதை, வேகமாக உள்ளே போக திரும்ப, மீண்டும் மனைவியைத் தூக்கி விட்டிருந்தான் ஜேம்ஸ்.
“என்ன நீங்கள்..”
“என்ன நான்..”
“இப்புடி பொசுக்கு பொசுக்கெண்டு தூக்கினால் நான் என்ன செய்ய.. கொஞ்ச நேரமாவது கோபமா இருக்க விடுறியளோ.. முதல்ல கீழ இறக்கி விடுங்கோ..”
“அது என்னோட டிபார்ட்மெண்ட்..”
“எது..”
“கோபம்..”
“ஓஹோ..”
“என்ன ஓஹோ..”
“இனிமேல் வெளியே போகும் போது சொல்லீட்டு போவியள் தானே..”
“இல்லை..”
“என்னது..”
“இல்லைடி.. உன்னையும் கூட்டிட்டு போவன்னு சொல்ல வந்தன்..”
“நம்பலாமோ..”
“அப்போ நீ இன்னும் என்னைய நம்பலையோ..”
“நம்புறன் தான்.. அப்புறம் இன்னொரு விசியம்..”
“என்ன..”
“சும்மா சும்மா.. நாயை அவுத்து விடுறேனு இனி பயங் காட்டக் கூடாது..”
“ம்ம்.. அது நீ நடந்துக்கிற விதத்தை பொறுத்து..”
“என்ன நீங்கள்..”
என தொடங்கியவளின், நெற்றியோடு தன் நெற்றியை முட்டி
“பேபீ.. கண்டிப்பா இப்போ சண்டை போட்டு தான் ஆகணுமா.. தூக்கம் வருதுடி..”
என சொன்ன கணவனை இமைக்காமல் பார்த்த கோதை
“சாரிப்பா.. இனி சண்டை போட மாட்டன்.. வாங்க தூங்கலாம்..”
என்று சொல்ல, மனைவியை கையில் ஏந்தியபடி தன் வீட்டினுள் நுழைந்தான் ஜேம்ஸ்.
நல்லவேளை நடு இரவு தாண்டி விட்டிருந்ததால், வரவேற்பு கூடத்தில் யாரும் இருக்கவில்லை. இருந்திருந்தால் அவளுக்கு தான் சங்கடமாகிப் போயிருக்கும்.
மாடிப் படிகளில் ஏறி, ஜேம்ஸ் தன்னறை நோக்கி நடக்கவும், மீண்டும் அவனோடு சண்டை போடப் போனாள் கோதை.
“இனியாச்சும் என்னைய இறக்கி விடுங்கோவன்..”
“ஏன்..”
“நான் என்ரை அறைக்கு போக..”
“உன்ரை அறையோ..”
“ஓம்..”
“அங்க போய் என்னடீ பண்ண போறாய்..”
“என்னவோ செய்யிறன் உங்களுக்கு என்ன இப்ப..”
“பேபீ.. திரும்ப ஆரம்பிக்காதடி..”
“நான் என்ன ஆரம்பிச்சன்..”
“இப்ப இந்த அறைக்குள்ள தூங்குறதுக்கு உனக்கு என்ன பிரச்சினை..”
“பிரச்சினை இல்லை ஆனா..”
“பிளீஸ் பேபீ.. எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்..”
என்று கொண்டு தன் அறையினுள் நுழைந்தவன், தனது பெரிய படுக்கையில் அவளை அமர வைத்து விட்டு, குளியலறைக்குள் புகுந்து கொண்டு விட்டான்.
மெத்தையில் அமர்ந்து கொண்டு அவனது அறையை நோட்டம் விட்டவள், பேசாமல் கீழே படுத்து தூங்கலாமோ என யோசனை செய்தாள்.
“இல்லை வேண்டாம்.. பிறகு அதுக்கும் ஏதாச்சும் சொல்லுவாரு.. தூக்கம் வேறை வருது.. பேசாமல் கண்ணை மூடிட்டு படுத்திற வேண்டியது தான்..”
என தனக்கு தானே சொல்லிக் கொண்ட கோதை, அந்த பெரிய கட்டிலின் ஓரமாக திரும்பி படுத்துக் கொண்டாள்.
குளித்து முடித்து விட்டு உள்ளே வந்த ஜேம்ஸுக்கு, கட்டிலின் ஓரமாக கீழே விழுந்து விடுவது போல படுத்துக் கிடந்தவளை பார்க்க, லேசாக கோபம் எட்டிப் பார்த்தது. முடிந்தவரை அந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, மெத்தையில் படுத்துக் கொண்டவன், அடுத்த நொடியே அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அவனது திடீர் செயலில் முதலில் பதறித் திமிறியவள், சில நொடிகளில் அவனது நெஞ்சோடு தன் முகத்தை பதித்து கண்களை இறுக மூடி விட்டாள்.
கோதைக்கு ஜேம்ஸ் போன்ற கணவனும், அவனுடனான இந்த வாழ்க்கையும் எதிர்பாராத விதமாக கிடைத்த பொக்கிஷம். அவன் தன்னை தான் உயிராக நேசிக்கிறான் என்பது தெரியாமலேயே, அவனை தன் கணவனாக அவள் நேசிக்க தொடங்கி விட்டிருந்தாள்.
மனதில் வரித்துக் கொண்டவனின் தொடுகை அவளுக்குள் இருந்த சங்கடங்களையும், சஞ்சலங்களையும், தயக்கங்களையும் மெல்ல மெல்ல தூரமாக்கி விடுவதால், அவளின் மனதினுள் அவன் இன்னும் இன்னும் நெருக்கமாகிப் போனான்.
தன் கணவன் தானே என்கிற உரிமையில், கோதை அவன் நெஞ்சில் சுகமாக துயில, இவள் எனக்கு மட்டும் சொந்தமான தேவதை என்ற எண்ணத்தில் நெடுநாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் ஜேம்ஸ்.
அதிகாலையில் எல்லோருக்கும் முன்பாக விழித்துக் கொண்ட வியாகேசும், வஞ்சியும் அந்த பங்களாவையே ஒருவழி செய்து கொண்டிருந்தார்கள்.
காலை ஐந்து மணிக்கே, கோதைக்கு பிடித்தமான ‘பிள்ளையாரு சுழி போட்டு நல்லதெல்லாம் தொடங்கு.. வெள்ளவத்தை ஐங்கரனை வேண்டி வந்து வணங்கு..’ என்ற பாடல் ஒலிக்கத் தொடங்க, அந்தப் பாடலை இரசித்துக் கொண்டே கோதை புரண்டு படுக்க, அந்த சத்தத்தில் எழுந்து உட்கார்ந்த ஜேம்ஸுக்கு முகமே சரியில்லை.
தூக்க கலக்கத்தில் கண்களை தேய்த்தபடி, உர்ரென்ற முகத்தோடு அமர்ந்திருந்த கணவனின் தோள் தொட்டு தன் பக்கம் திருப்பினாள் கோதை.
“என்னங்கோ.. என்ன நடந்த.. உடம்புக்கு ஏதும் சரியில்லையோ..”
“இல்லைடி..”
“ஏன் ஏன் என்ன சரியில்லை..”
“அது இல்லைடீ..”
“அப்ப வேறை என்ன..”
“காலங் காத்தால யாருடி இப்புடி சவுண்டு வைச்சது.. கடுப்பா இருக்கு..”
“கடுப்பா இருக்குதா.. அப்போ இடுப்பை கிள்ளிட வேண்டியது தான்..”
“ஏய் என்னடீ நீ..”
“நீங்கள் தானே சொன்னியள்.. கடுப்பா இருந்தா இடுப்பை கிள்ளினா சரியாயிடும் எண்டு..”
“ஓ ஹோட்..”
“காலையில இந்த மாதிரி பாட்டு கேக்கிறது ரொம்ப நல்லதுங்கோ..”
“யாருக்கு..”
“எல்லாருக்கும் தான்.. மனசு லேசாயிடும் தெரியுமா.. நீங்கள் என்னடா எண்டு பாத்தால் கடுப்பா இருக்கு எண்டு சொல்லுறியள்..”
“உண்மையை தானேடி சொல்லுறன்..”
“சரி கண்ணை மூடுங்கோ..”
“எதுக்குடி..”
“அட மூடுங்கோ..”
என ஜேம்ஸின் கண்களை தன் கரங் கொண்டு மூடிய கோதை, அவனுக்கு அருகில் அமர்ந்து அவன் கரங்களை மென்மையாக பற்றி
“எதைப் பத்தியுமே யோசிக்காமல்.. அந்த பாட்டை மட்டும் கேளுங்கோ.. அந்த இசையை மட்டும் ரசியுங்கோ..”
என்று அவனது காதுக்குள் மெல்ல சொன்னாள்.
மனைவியின் அருகாமையும் அந்த இசையின் இனிமையும், ஜேம்ஸின் எரிச்சலை விரட்டி அங்கே புத்துணர்வை குடியமர்த்தியது.
இருவருமே கண்களை மூடி அந்த பாடலை கேட்க, அந்த பாடலை தொடர்ந்து மெல்லிய அழகான காதல் பாடல்களும் அவர்களது செவி தீண்டிச் செல்ல, இருவருமே நான்கு பாடல்களுக்கும் மேலாக அப்படியே இருந்து இரசித்துக் கொண்டிருக்க அவர்களின் அறைக் கதவு தட்டப் பட்டது.
வேகமாக எழப் போன கோதையின் கையை பிடித்து
“பேபீ.. எல்லா சோங்ஸுமே சூப்பர்டி.. கொஞ்சம் இரேன் கேப்போம்..”
என ஜேம்ஸ் இரசனையோடு சொல்ல
“அதெல்லாம் கேட்டுக்கலாம்.. இருங்கோ ஆரவோ கூப்பிடுகினம்..”
என்று கொண்டு போய் விட்டாள் கோதை.
கேட்ட பாட்டில் ஒன்றை கம்மிங் செய்தபடி சென்ற மனைவியை பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவேயில்லை.
தனது வாழ்விலும் இது போன்ற அழகான விஷயங்கள் அரங்கேறும் என ஜேம்ஸ் கனவிலும் நினைத்ததில்லை. இறுக்கமாகவும் ஆக்ரோஷத்தோடும் வலம் வரும் அவனை தன் பேச்சாலும் செயலாலும் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள் அவனின் கோதை.
அங்கே அறை வாசலில் வியாகேசு தான் நின்றிருந்தார். கையில் பெட்டியொன்றை வைத்துக் கொண்டு கோதையைப் பார்த்து புன்னகைத்தவர்,
அந்த பெட்டியை அவளிடம் நீட்டினார்.
“என்னப்பா இது..”
“வரவேற்புக்கு போட வேண்டிய உடுப்பு பிள்ளை..”
“என்ன வரவேற்பு..என்ன உடுப்பு..”
“சரியா போச்சு போ.. இண்டைக்கு உனக்கும் உன்ரை புருஷனுக்கும் திருமண வரவேற்பு.. அதை மறந்திட்டியே..”
“ஓம் ஓம்.. டக்கெண்டு ஒண்டுமே மனசுக்குள்ள வரேல்லையப்பா..”
“அது எப்புடி வரும்.. அது தான் அவன் வந்திட்டானே..”
“என்னப்பா.. ஆர் வந்த..”
“இல்லை பிள்ளை.. இதை நீயே திறந்து பாரு..”
“உடுப்பு அளவா இருக்குமோப்பா..”
“அதெல்லாம் சரியா தான் இருக்கும்.. உன்ரை புருஷன் தான் உனக்காண்டி உதை தைக்க சொன்னவன்.. நான் காவல் இருந்து வாங்கியாறன்.. போட்டு பாத்திட்டு சொல்லு..”
“ம்ம்.. நன்றியப்பா..”
“ஏன் பிள்ளை..”
“எனக்காண்டி எவ்வளவு மினக்கெடுறியள்..”
“இதெல்லாம் ஒரு வேலையே இல்லை பிள்ளை.. நீ சந்தோஷமா இருந்தால் போதும்.. அதுக்காண்டி நான் எவ்வளவு வேலையும் செய்வன்..”
“தெரியுமப்பா..”
“சரி போங்கோ போய் வெளுக்கிடுங்கோ.. பீட்டரிந்தை உடுப்பும் இதுக்குள்ள தான் கிடக்கு..”
“இப்பவே வெளுக்கிடவோ.. நேரம் ஆறரை தானே ஆகுது.. வரவேற்பு பத்துக்கு தானேப்பா..”
“ஓம் பிள்ளை வரவேற்பு பத்துக்கு தான்.. ஆனால் உங்களை ஃபோட்டோ சூட் செய்யோணுமாம்.. நீங்கள் ஜோடியா படம் ஒண்டும் பெரிசா எடுக்கேல்லை தானே..”
“ஓ..”
“என்ன ஓ எண்டு கொண்டு அப்புடியே நிக்கிறாய்.. போ போய் வெளுக்கிடு..”
“போறனப்பா.. ஒண்டு சொல்லட்டே.. ஓவர் நைட்ல ஒபாமா ஆன கணக்கா இருக்கு என்ரை நிலமை..”
“ஹா ஹா.. அப்போ பீட்டர் தான் அமெரிக்காவோ..”
என்று சிரித்துக் கொண்டே வியாகேசு போய் விட, தானும் சிரித்துக் கொண்டே உள்ளே வந்த கோதை
மெத்தையில் பெட்டியை வைத்து விட்டு நாடியில் கை வைத்தபடி அமர, தானும் நாடியில் கை வைத்தபடி அவளைப் பார்த்தான் ஜேம்ஸ்.
சில நொடிகள் அப்படியே அமர்ந்து இருந்த கோதை, அந்த பெட்டியை திறக்க மெரூண் நிற ரோஜாக்களை கொட்டி செய்தது போல அவளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது அந்த ஃபிரொக்.
இமை கொட்டாமல் அந்த ஃபிரொக்கையே பார்த்திருந்த கோதை, அதை மெல்ல வருடிக் கொடுத்தாள்.
ஃபிரொக்கின் கீழே முழுவதும் குட்டி குட்டி ரோஜாக்கள் ஒட்டப் பட்டிருக்க, இடுப்புக்கு மேலே மெரூண் முத்துக்கள் வைத்து தைக்கப்பட்டு இருந்தன.
அதை மெல்ல எடுக்க முயலும் போது தான், அந்த உடையின் கனமே அவளுக்கு புரிந்தது. அந்த உடையின் கீழே ஜேம்ஸுக்கான மெல்லிய சாம்பல் வண்ண கோட் சூட் கிடந்தது. அதையெடுத்து அவனிடம் நீட்டியவள், அங்கிருந்து போக எத்தனிக்க, அவளது கையைப் பிடித்துக் கொண்டான் ஜேம்ஸ்.
“எங்க போறாய்..”
“…………”
“பேபீ.. உங்கிட்ட தான் கேக்கிறன்..”
“…………”
“ஏய் என்னடி ஆச்சு..”
என தலைகுனிந்து நின்றிருந்தவளது முகத்தை நிமிர்த்தி பார்த்தவனுக்கு சட்டென்று கோபம் வந்து விட்டது.
கோதையின் கண்கள் கலங்கிப் போயிருந்தது. அவளுக்கு அந்த உடையைப் பார்த்த உடனேயே வெடித்து அழ வேண்டும் போல ஒரு வேகம் வந்து விட்டது. இந்த மாதிரி உடைக்காக அவள் ஒரு நாளும் ஆசைப் பட்டது இல்லை என்றாலும் கூட, அவளுக்காக இந்த மாதிரியான உடைகளை எவர் வாங்கிக் கொடுக்க முன் வருவார்கள். தன் வாழ்வில் திடீர் திடீரென அழகான விஷயங்கள் அரங்கேற பாவம் அவள் திணறித் தான் போனாள்.
இவனுக்கு முன்னால் அப்படி அழ முடியாதே. உடனே நாயை அவிழ்த்து விடுவேன் நரியை அவிழ்த்து விடுவேன் என அவளை ஒருவழி செய்து விடுவான். அதனால் தான் தனக்கென கொடுக்கப் பட்ட அறைக்குப் போய் ஒரு மூச்சு அழுது விட்டு வரலாம் என அவள் அங்கிருந்து போகப் பார்க்க, அவளது அசைவுகள் அவனது கழுகுப் பார்வைக்கு தப்புமா என்ன?
அது தான் உடனே அவளை இடைமறித்து விட்டான்.
ஜேம்ஸை பொறுத்தவரை அவனது தேவதை அழக் கூடாது. அவளை அழ வைப்பது யாராக இருந்தாலும் அவர்களை தூக்கி பந்தாடாமல் விட மாட்டான். ஆனால் தன் தேவதை அழுவதற்கான காரணமே தான் மட்டும் தான் என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை.
வழமை போல அவளின் கன்னம் தொட்ட கண்ணீரில் முகம் இறுகி நின்றவனை சமாதானம் செய்ய தெரியாமல் விழித்தவள், அவன் நெஞ்சிலேயே சாய்ந்து கொண்டாள்.