குறிஞ்சி மலர்..42
மார்பில் சாய்ந்திருந்த மனைவியின் ஸ்பரிசத்தில் உடல் இறுக நின்றிருந்தான் ஜேம்ஸ்.
அவனது முக பாவனையில் அவனது உள்ளத்தை படித்த கோதை, அவனது கன்னம் தொட, அவளது கரத்தை வேகமாக தட்டி விட்டான்.
“என்னங்கோ கோபமோ..”
“……………..”
“இப்ப என்ன.. என்னத்துக்கு இப்புடி முறுக்கிக் கொண்டு நிக்கிறியள்..”
“…………….”
“சரி தப்புதான் சாமி.. தெரியாம அழுதிட்டன் போதுமோ.. இனி அழேல்லை..”
“……………..”
“அது தான் அழேல்லை எண்டு சொல்லுறன் எல்லே..”
என்று சொன்னவளின் கன்னத்தையே ஜேம்ஸ் பார்த்திருக்க, மெல்ல கன்னத்தை தொட்டு பார்த்தவளுக்கு கண்ணீர் வழிந்து கொண்டிருப்பது தெரிந்தது.
சட்டென்று முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள், அவனைப் பார்த்து சிரிக்க, அவனோ அவளை விலக்கி நிறுத்தி விட்டு குளியலறையினுள் புகுந்து கொண்டான்.
அவன் போனதும் மெத்தையில் தொப்பென்று விழுந்தவள், தலையைப் பிடித்துக் கொண்டாள்.
“அடக் கிறுக்குப் பயலே.. அழக் கூடக் கூடாதாடா.. இப்போல்லாம் கோபப் படுறவன் இல்லைத்தானே எண்டு நம்பி கதைச்சால் டக்கு டக்கெண்டு சேஞ்ச் ஆகிறானே.. எதையாவது எடுத்து மண்டையை உடைக்காம விட்டால் சரி தான்..”
என கோதை தன்னுள் புலம்பிக் கொண்டே இருக்க, அவளைத் தேடி நீலரூபி வந்து விட்டார்.
அதன் பிறகு கோதை தன் உடையை அணிந்து தயாராகும் வரை அவரே கூட இருந்தார். கோதையை அலங்காரம் செய்வதற்கு பியூட்டி பார்லரில் இருந்து ஒரு பெண் வந்திருந்தாள்.
கோதையின் நிறத்துக்கு ஏற்றது போல, அழகாக அவள் டச்சப் கொடுத்து, அவளது முடியை கொண்டை போட்டு, மெரூண் நிறத்துக்கு தோதாக வெள்ளி நகை அணிவித்து என அவளை அழகாக அலங்கரித்து விட, கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்த கோதைக்கு கொஞ்சம் திருப்தியாக இருந்தது.
மேக்கப் செய்கிறேன் பேர்வழி என்று அந்த பெண் அவளுக்கு அள்ளி அப்பி விடாமல் மிதமான ஒப்பனையே செய்து விட்டிருந்தாள்.
அந்த மெரூண் நிற ஃபிரொக்கில் மிதமான ஒப்பனையோடு வந்த மனைவியை ஜேம்ஸின் நீல விழிகள் இரசனையோடு தொடர்ந்தாலும், அவள் அழுத கடுப்பில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
அதன் பின்னர் ஜீவோதயம் பங்களாவின் முன் முகப்பு பக்கத்தில் ஜேம்ஸ் கோதை இருவரையும் இணையாக நிற்க வைத்து விதம் விதமாக ஃபோட்டோ எடுத்தார்கள். அப்போதும் உர்ரென்றே இருந்தவனது இடுப்பில் யாருக்கும் தெரியாமல் கிள்ளி விட்டாள் கோதை.
சட்டென்று துள்ளிக் குதித்தவன் பக்கத்தில் என்னவென்பது போல வியாகேசு ஓடி வர, ஜேம்ஸ் கோதையை முறைத்தான்.
“இப்புடியே முறைச்சியள் எண்டால்.. திரும்பவும் கிள்ளுவன்..”
என்று கொண்டு மீண்டும் அவனைக் கிள்ளப் போனவளது கையை ஜேம்ஸ் இறுகப் பிடிக்க, அருகில் வந்த வியாகேசுக்கு விசயம் விளங்கி விட அவர் சிறு சிரிப்போடு தள்ளி நின்று விட்டார்.
எல்லோருமே வரவேற்பு மண்டபத்துக்கு கிளம்பி விட, எல்லோருமே விழாவில் கலந்து கொள்ளும் அந்த சந்தோஷ மனநிலைக்குள் புகுந்து கொள்ள, கோதையும் கலகலப்பாகவே வலம் வந்தாள்.
எப்படி முயன்றும் தில்லையம்பலத்தால் கோதையின் அந்த சந்தோஷமான முகத்தை பார்க்கவே முடியவில்லை. தன் மகள் இருக்க வேண்டிய இடமல்லவா. போயும் போயும் இவளுக்கா இந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும் என மனம் வெந்து கொண்டிருந்தார் அவர்.
அவளது சந்தோஷத்தை எப்படியும் கலைத்தே ஆக வேண்டும் என்ற அவரது வக்கிரமான புத்தி வேகமாக வேலை செய்ய, அதன் விளைவாக திரிலோகநாயகியும் அவரது மகன்களும் அந்த வரவேற்பில் கலவரம் செய்யவென்றே கிளம்பி வந்து கொண்டிருந்தார்கள்.
இது எதுவும் தெரியாத கோதை அந்த பிரமாண்டமான மண்டபத்தையும், அதன் அலங்காரத்தையும் ஒன்பதாவது அதிசயத்தை பார்ப்பது போல பார்த்திருந்தாள்.
கோதையை பொறுத்தவரை இந்த மாதிரியான ஒரு பிரம்மாண்டமான மண்டபத்திற்கு, அவள் இதுவரை ஒரு திருமண வரவேற்பிற்கு கூட சென்றது கிடையாது. அப்படி இருக்கையில் இத்தனை அழகான பிரமாண்டமான ஒரு மண்டபத்தில் அவளுக்கே திருமண வரவேற்பு நடைபெறும் என்பது எத்தகையதொரு விஷயம்.
மற்றவர்களுக்கு வேண்டுமானால் அது சாதாரணமாக இருக்கலாம் ஆனால் கோதையை பொருத்தமட்டில் அதை அவளால் சாதாரணமாக கடக்க முடியவில்லை. அவளுடைய நினைவுகள் அவளிடம் அனுமதி கேளாமல் மெல்ல அவளுடைய முதல் கல்யாணத்தில் போய் அமர்ந்து கொண்டது. அவளுக்கு நடந்த அந்த திருமணம் போல ஒரு அடிமட்ட ஏழை மகளுக்கு கூட நடந்திருக்காது.
ஒரு அநாதை போல கோவிலில் வைத்து அவளுக்கு தாலி கட்டப்பட்டது. அதன் போது நீலரூபி மட்டும் ஒரு ஓரமாக வந்து நின்று யாருக்கும் தெரியாமல் அர்ச்சனை தூவிச் சென்று போக, தில்லையம்பலம் அவளது திருமணத்தை எட்டி கூட பார்க்கவில்லை. அந்த நேரத்தில் வெளியூரில் தனக்கு வேலை என்று பசப்பி விட்டு வீட்டிலேயே இருந்து விட்டார்.
இதுதான் தனக்கு விதிக்கப்பட்ட தலையெழுத்து என கோதை அதை சாதாரணமாகவே கடந்து விட்டாள். ஆனால் அவளுக்கும் உள்ளூர தன்னுடைய திருமணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற ஆசைகள் இல்லாமல் இருக்குமா.
சாதாரணமான விஷயங்கள் கூட அவளுக்கு கிட்டாத கனியாக போன அந்த மோசமான சூழலில் இருந்து, இப்பொழுதுதான் அவளுடைய வாழ்க்கையில் வசந்தம் மெல்ல மெல்ல வீச தொடங்கியிருந்தது.
ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து ரசித்து கடந்து செல்ல தொடங்கியிருந்தாள் கோதை.
மண்டபத்தையே தன்னுடைய முட்டை கண்ணால் முழித்து முழித்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் தோளில் உரிமையோடு கை போட்ட ஜேம்ஸ், மண்டபத்தின் மேடையை கையால் காட்டி அவளை அங்கே அழைத்து சென்றான்.
அதன் பிறகு வந்த அத்தனை தொழிலதிபர்கள், தொழில் நண்பர்கள் என அனைவரிடமும் தன் மனைவியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் அவன் கைவளைவிலேயே வைத்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த தில்லையம்பலத்திற்கு கண்ணால் ரத்தக்கண்ணீர் வழியாத குறையாகிவிட்டது.
அவர் அடிக்கொரு தடவை மண்டப வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“அந்த லோக்கல்நாயகி எப்ப வந்து.. இங்கினை பிரச்சினை செஞ்சு.. அதை நான் எப்ப பாத்து ரசிக்கிறது.. அந்த பொம்பிளைக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. விழா நடக்க முதல் வாரன் எண்டு சொல்லிட்டு இன்னும் ஆளையே காணேல்லை.. குடும்பமா சேந்து எந்த ரெஸ்ட்ரோரண்ட்ல விழுங்கிக் கொண்டு இருக்குதுகளோ தெரியேல்லையே.. சோத்தை கண்டா காணும் அதுகளுக்கு.. ஆக்களை கையிலயே பிடிக்க ஏலாது.. அதுகள் வர முந்தி விழா தொடங்கீரும் போலயே..”
என தில்லையம்பலம் தனக்குத் தானே புலம்பிக் கொண்டு இருக்க, விழா தொடங்கிய பின்னரே அந்தப் புலம்பலுக்கு காரணமான திரிலோகநாயகி, தன் மகன்களோடு அங்கே ஆஜராகி இருந்தார்.
மேடையில் நின்றிருந்த மணமக்கள் இருவருக்கும் வந்த பிரமுகர்கள் கைகுலுக்கி பரிசளித்து செல்ல, தன் பக்கத்தில் நின்றிருந்த தன் கணவனை மெல்ல ஏறெடுத்து பார்த்தாள் கோதை.
இவனுக்கு நான் எந்த விதத்தில் பொருத்தம் என அவளால் நினையாமல் இருக்க முடியவில்லை. கோதை நிறம் எல்லாம் பார்ப்பவள் அல்ல என்றாலும், அவனது அந்த வெளிர் வெள்ளை நிறத்துக்கும் தனது சொக்லேட் நிறத்துக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பது அவளுக்கு புரியாமல் இல்லை.
அதிலும் அங்கு வருகை தந்திருந்த சில தொழிலதிபர்கள் அவளை திரும்பத் திரும்ப பார்த்ததில் அவள் சற்று சங்கடமானாள்.
அவளது சங்கடத்தை உணர்ந்தோ உணராமலோ அவளுக்கு ஆறுதல் சொல்லுவது போல, தன் கைவளைவிலேயே மனைவியை வைத்திருந்தான் ஜேம்ஸ்.
இந்த நேரத்தில் தான் திரிலோகநாயகியும் அவளது மகன்கள் இருவரும் மண்டபத்து வாசலில் வந்து இறங்கினார்கள்.
அவர்களைக் கண்ணால் கண்டவுடன் தான் தில்லையம்பலத்திற்கு உள்ளூர திருப்தியாக இருந்தது. கோதையை அவரது வீட்டுக்கு மணமுடித்து வைத்த போது கூட சிறிதளவும் மரியாதை கொடுக்காத தில்லையம்பலம், இப்போது திரிலோகநாயகியை வாசலில் பார்த்ததும் வாசல் வரை ஓடோடிச் சென்று வரவேற்றுக் கொண்டு வந்தார்.
திரிலோகநாயகிக்குமே என்னடா எப்பொழுதுமே தன்னை கண்டு கொள்ளாத, தனக்கு மரியாதை கொடுக்காத, இவ்வளவு ஏன் தன்னை ஒரு மனிசியாகவே மதிக்காத இந்த மனுஷன் இப்பொழுது மட்டும் எதற்காக விழுந்து விழுந்து கவனிக்கிறார் என்று தோன்றத் தான் செய்தது.
சரி ஏதோ பரவாயில்லை வந்த வரைக்கும் மூக்கு பிடிக்க உண்டு விட்டு, அந்த மானங்கெட்டவளை இங்கே இருந்து தரதரவென இழுத்துக் கொண்டு போய் விட வேண்டியது தான் அதனால் வந்த வேலையை கவனிப்போம் என பெரிய தோரணையோடு தில்லையம்பலத்துக்கு வணக்கம் வைத்தார்.
நாயகியின் வணக்கத்தை ஏற்று அதற்கு பதில் வணக்கம் வைக்கும் அளவுக்கு கூட தில்லையம்பலத்திற்கு பொறுமை இருக்கவில்லை.
“ஏய் உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்குதா..”
“ஏன் ஐயா.. ஏன் இப்புடி எரிஞ்சு விழுறியள்.. இப்ப அப்படி என்ன நடந்து போச்சுது..”
“இதுக்கு மேல வேற என்ன நடக்கோணும் எண்டு கேக்கிறன்.. உன்ரை மருமகள் மேடையில ஏறுறதுக்கு முதல் நீ வந்து இதை குழப்பி விடுவாய் எண்டு நான் கனவு கண்டு கொண்டு நிற்க.. அவள் மேடையில ஏறி எல்லாரும் அவளுக்கு கை குலுக்கி பரிசு குடுத்து அரைவாசி நேரம் போன பிறகு இப்ப வந்து நிக்கிறாய்..”
“ஐயா.. உங்களுக்கு என்னைய பத்தி இன்னும் சரியா விளங்கேல்லை..”
“ஓம் ஓம் உன்னைய பத்தி சரியா விளங்கிக் கொள்ளாமல் கூப்பிட்டு தொலைச்சிட்டன்.. பேசாமல் நானே வேறை ஐடியா ஏதாச்சும் போட்டு இருக்கலாம்..”
“பொறுங்கோ ஐயா.. நான் சொல்ல வாரதை கொஞ்சம் கேளுங்கோ..”
“என்ன சொல்லி தொலை..”
“இப்ப ஆக்கள் வாரதுக்கு முதல்.. அந்த எடுபட்டவளை அவமானப் படுத்தி இழுத்துக் கொண்டு போறதால என்ன லாபம் சொல்லுங்கோ.. அவள் அவமானப் பட்டு கூனிக் குறுகி நிக்கிறதை இங்க வந்தவை பாக்க வேண்டாமோ.. அப்ப தானே நல்லா இருக்கும்..”
“ம்ம்.. நீ சொல்லுறதும் சரி தான்..”
“சரி தான் இல்லை.. சரி..”
“சரி.. இப்ப என்ன செய்ய போறாய்..”
“அட இருங்கோ ஐயா.. வந்து சேர வேண்டிய எல்லாரும் வந்து சேரட்டும்.. அதுவரை நான் சூஸ் ஏதாவது குடிச்சு எனக்கு கொஞ்சம் எனேர்ஜி ஏத்திக் கொள்ளுறன்..”
எனச் சொல்லிக் கொண்டே உணவு பரிமாறப் படும் இடத்திற்கு போன திரிலோகநாயகியை அவரது வாரிசுகளும் தொடர்ந்தனர்.
இவள் சொன்னது போல செய்து விடுவாளா அல்லது எதையாவது சொதப்பி வைத்து விடுவாளா என்பது போல தில்லையம்பலம் நிற்க, திரிலோகநாயகி அங்கே உள்ளே பூந்திலட்டு, மஞ்சள் பணியாரம், கச்சான் அல்வா, தொதல், சொக்லேட் கேக், தட்டைவடை, பால்கோவா, பால் பாயாசம் என வகை வகையாக உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.
சாப்பாடு தான் முதல் மற்றது எல்லாம் அதற்கு பிறகு தான் என்கின்ற ரகம் திரிலோகநாயகி. அதனால் அவர் தன் வேலையை குறைவின்றி செய்து கொண்டிருந்தார்.