குறிஞ்சி மலர்.. 43
ஜேம்ஸ், கோதை ஜோடியின் திருமண வரவேற்பிற்காக அழைக்கப் பட்டிருந்த அத்தனை பிரமுகர்களும், தொழில் ரீதியான நண்பர்களும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்து விட்ட நிலையில், தில்லையம்பலம் திரிலோகநாயகி இருந்த திசையை திரும்பிப் பார்த்தார்.
சாப்பாடு அனைத்தையும் ஒரு பிடி பிடித்த பின்னர், இறுதியாக வெற்றிலையை மடித்து தாம்பூலத்தை வாய்க்குள் போட்டு அதக்கிக் கொண்டிருந்தார் திரிலோகநாயகி.
அவரையும் அவரது செய்கையையும் பார்க்க பார்க்க தில்லையம்பலத்திற்கு கடுப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இருந்தாலும் அவர் ஏதாவது செய்வார் என்கின்ற நம்பிக்கையில் கொஞ்சமே கொஞ்சம் அமைதி காத்துக் கொண்டிருந்தார்.
அதேபோல திரிலோகநாயகியும் கழுவிய கையை தன் முந்தானை சேலையில் அழுந்த துடைத்தபடி மண்டபம் நோக்கி வேகமாக போனார்.
ஜேம்ஸின் அருகாமையில் புதுப் பொலிவோடு சிரித்த முகமாக நின்றிருந்த கோதையின் பார்வையில், அப்போதுதான் தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த திரிலோகநாயகி விழுந்தார்.
“இவாவை இப்ப ஆரு இங்க கூப்பிட்டது.. இவாந்தை குணந் தெரியும் எண்டுறதாலே நீலும்மா கண்டிப்பா கூப்பிட்டு இருக்க மாட்டா.. அப்ப ஆரு கூப்பிட்டிருப்பினம்.. அரிசி வாங்க பக்கத்துல இருக்கிற கடைக்கே போகப் பஞ்சிப் படுற மனுஷி.. அங்க யாழ்ப்பாணத்துல இருந்து இங்க திருகோணமலைக்கு வந்திருக்குது எண்டால் என்ன அர்த்தம்.. என்னுல அம்புட்டு பாசம் போல.. இப்ப இங்க வந்து என்ன ஏழரையைக் கூட்டப் போகுதோ தெரியேல்லையே..”
என கோதை தனக்குத் தானே முணுமுணுக்க, அவள் பக்கம் எப்போதும் ஒரு பார்வை வைத்திருக்கும் ஜேம்ஸ், அவளின் பார்வை போன திக்கில், மேடை நோக்கி வந்து கொண்டிருந்த பெண்மணியை தன் நீல விழிகளால் ஊடுருவினான்.
முதல் பார்வையிலேயே அவர் யாரென்று அவனுக்கு புரிந்து போய் விட்டது. நாய்களை துரத்த விட்டு, போதாக் குறைக்கு சூடு வைத்து என விதம் விதமான தண்டனைகளைக் கொடுத்தவனுக்கு அவரை அத்தனை சீக்கிரம் மறந்து போய் விடுமா. சரி இங்கே எதற்கு வருகிறார் என்பதை பார்க்கலாம் என்பது போல பொறுமையாக நின்றிருந்தான்.
அந்த பொறுமை கூட, அவனின் பேபிக்காக மட்டும் தான். அந்த பொறுமையை பொறுமை இழக்க செய்து பொட்டலம் கட்டி அனுப்புவதற்கு என்றே வந்த திரிலோகநாயகி, நேராக போய் கோதையின் முன்னால் நின்றார்.
வந்தவர் தான் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்தப் போவதில்லை என்பது கோதைக்கு நன்றே தெரியும். இருந்தாலும் ஒரு வேளை தான் இத்தனை நாள் பக்கத்தில் இல்லாததில் தன் அருமை புரிந்து, தனக்கு வாழ்த்து சொல்ல தான் வந்திருக்கிறார் என்கின்ற நப்பாசையில் அவரது முகத்தை ஏறெடுத்து பார்த்தாள் கோதை.
திரிலோகநாயகியின் முகத்தில் மருந்துக்கு கூட பாசமோ நேசமோ இருக்கவேயில்லை. மாறாக தன் வீட்டில் பொங்கிப் போட்டு, தனக்கு அடிமை வேலை செய்ய வேண்டிய இவளுக்கு எப்படி இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கலாம் என்கின்ற பொறாமையும் எரிச்சலும் மட்டுமே அப்பட்டமாக தெரிந்தது. அதற்கு ஏற்றார் போல அவரது வார்த்தைகளும் சாக்கடை போல நாற்றம் வீசிக் கொண்டு வந்து விழுந்தது.
“என்னடீ.. குடும்ப கௌரவத்தை குழி தோண்டி புதைக்கவெண்டே திரியிறியோ.. என்ரை பிள்ளையை உன்ரை கேடு கெட்ட ராசியால அநியாயமா சாகக் குடுத்திட்டு நான் பரிதவிச்சுக் கொண்டு கிடக்கிறன்.. நீ என்னடா எண்டால் கொஞ்சங் கூட வெக்கம் மானம் எதுகுமே இல்லாமல் இன்னொருத்தனோட உரசிக் கொண்டு நிக்கிறாய்.. அப்புடி என்னடி உனக்கு இருக்கப் படாத வருத்தம்.. எனக்கு தெரியும் நீ உப்புடி தான் கண்டமேனிக்கு ஆட்டம் போடுவாய் எண்டு..”
என கோதையை திரிலோகநாயகி கண்டமேனிக்கு வார்த்தைகளால் அபிஷேகம் செய்ய, தன் உணர்வுகளை அடக்க கோதை படாதபாடு பட்டுப் போனாள்.
கோதை தைரியமான பெண் என்றாலும் கூட, இத்தனை நேரம் இருந்த நிம்மதியும் சந்தோஷமும் திரிலோகநாயகியின் வரவாலும் பேச்சாலும் கொஞ்சம் அடிபட்டு போய் விட்டிருந்தது.
லேசாக கண்கள் கலங்குவது போல இருக்க, அது கண்ணீராய் கன்னம் தொடும் முதல் அதை உள்ளிழுத்து தன்னை சமன் செய்ய சரியாக திணறிப் போனாள் கோதை.
இதற்கெல்லாம் ஒரே காரணம், பக்கத்தில் கை முஷ்டி இறுக நின்றிருந்த அவளின் அசுரன்.
அவளின் அசுரனுக்கு அவள் அழுதால் பிடிக்காது, அவளை யாரேனும் ஒற்றை வார்த்தை தப்பாக பேசினால் பிடிக்காது.
ஆனால் இந்தம்மா அவனுக்கு பிடிக்காத விசயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்க, பதறிய நெஞ்சோடு ஓரக் கண்ணால் கணவனை நோட்டம் விட்டாள் கோதை. அவள் பயந்தது போலவே உடல் இறுக நின்றிருந்தவனது இடக் கரம் பக்கத்தில் கிடந்த பூச்சாடியை இறுகப் பிடித்திருந்தது.
கண்களை இறுக மூடி நின்றிருந்தவன் தன்னையும் தன் கோபத்தையும் கட்டுப் படுத்த பெரும் பாடு படுகிறான் என்பது கோதைக்கு புரிந்து விட்டது.
“ஆத்தீ.. ஒரு மனுஷனை நல்லா இருக்க விடுதுகளா இதுகள்.. இப்ப தான் கொஞ்ச நாளா அதை இதை உடைக்கிறது குறைஞ்சு போய் கிடக்கு.. அதுக்கும் உலை வைக்கவெண்டே வந்திட்டாவே.. இந்த மனுஷிக்கு வாயில வாஸ்து சரியில்லை.. இண்டைக்கு மண்டை பிளந்து கொண்டு தான் போகப் போறா.. இந்த மனுஷன் வேறை ரொம்ப நேரமா கண்ணை இறுக்க மூடிட்டு நிக்கிறாரே.. ஐயோ என்ன நடக்கப் போதோ..”
என தன்னுள் புலம்பிய கோதை, தன் வியாகேசப்பாவை கண்களால் தேடினாள்.
வியாகேசும், வஞ்சியும் அப்போதே திரிலோகநாயகியும் அவரது மகன்களும் மண்டபத்திற்குள் வரும் போது கவனித்து விட்டார்கள். இது சரி இல்லையே சந்தோசமாக இருக்கும் இடத்தை ஏதோ கலவர பூமியாக மாற்றத்தான் இவர்கள் வருகிறார்கள் என்பது அவர்களுக்கு தில்லையம்பலத்தின் நடவடிக்கையை பார்த்த உடனேயே புரிந்து விட்டிருந்தது.
அதனால் திரிலோகநாயகியின் ஒவ்வொரு செய்கையையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருந்திருந்தார்கள். இப்போதும் அவர் மேடையில் ஏறி கோதையுடன் கண்டமேனிக்கு பேசவும், கீழே இருந்த அத்தனை விருந்தாளிகளையும் இரண்டு பக்கமாக பிரித்து உணவு உண்ணும் அடுத்த பெரிய அறைக்கு அவர்கள் அனுப்பி கொண்டிருந்தார்கள்.
மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த இனிமையான பாடல்களின் சத்தத்துக்குள் நாயகியின் பேச்சு அடங்கிப் போயிருக்க, மேடையில் ஏறி அவர் பேசியது அங்கிருந்த யாருக்குமே கேட்கவில்லை.
உணவு பரிமாறுவது எல்லாம் சரியாக இருக்கிறதா என கவனித்து விட்டு, மேடைக்கு வந்த நீலரூபி அப்போது தான் நாயகியையே பார்த்தார்.
“இந்தம்மா இங்கினை என்ன செய்யுது.. முகம் வேறை விடியாமக் கிடக்குது.. அச்சோ என்ரை பிள்ளையிட்டை அபசகுனமா என்னத்தை சொல்லி வைச்சாளோ..”
என பதறிக் கொண்டே மேடையில் ஏறிய நீலரூபி, நாயகியை பிடித்து ஒரு ஓரமாக இழுத்துக் கொண்டு போனார்.
“இந்தா நாயகியம்மா.. உன்னைய ஆரு இங்க வரச் சொன்னது.. அப்புடியே வந்தாலும் சாப்பிட்டு போக வேண்டியது தானே.. அதை விட்டிட்டு அவளோட என்னத்தை கதைச்சு அவளிந்தை மனசை கலைக்கிறியள்..”
“ஏய்.. அவ என்ரை மருமகடீ.. என்ரை மருமகளை எவனோ ஒருத்தன் கலியாணம் கட்டுவானாம் அதை நான் கைகட்டி பாக்கோணுமோ..”
“ஓ அவ உங்கடை மருமகளோ.. அந்த எண்ணம் இருக்கிறவங்கள் அவளை வீட்டுல வைச்சு அடிமை மாதிரி வேலை வாங்கியிருப்பியளோ..”
“அது அவளுந்தை கடமை..”
“எது உங்கடை மகன்மாரிந்தை பொஞ்சாதியளுக்கும் வடிச்சுக் கொட்டுறதோ..”
“அதெல்லாம் செய்ய தானே வேணும்.. அது போகட்டும் உவள் எப்புடி ரெண்டாங் கலியாணம் கட்டலாம்..”
“அவளுக்கு இஷ்டம் அவள் கட்டினாள்.. உங்களுக்கு இஷ்டம் எண்டால் நீங்களும் கட்டுங்கோவன் ஆர் வேண்டாம் எண்டது..”
“ஐயோ கடவுளே என்ன பேச்சு.. உப்புடி கேவலமா கதைக்கிறியே..”
“உங்கள் அளவுக்கு ஒண்டும் நான் கேவலமா கதைக்கேல்லையே..”
“நான் பொலிசில கம்ளைண்ட் குடுப்பன்..”
“என்னெண்டு பாயாசத்துல கச்சான் இல்லை எண்டோ..”
“ஏய்..”
“இந்த ஏய் ஓய் எண்டால் வாயை இழுத்து வைச்சு தைச்சிருவன்.. என்ரை பேர் நீலரூபி..”
“ஆட்டம் போடுறீங்கடி ஆத்தாளும் மகளும் சேர்ந்து..”
“எங்களுக்கு ஆடத் தெரியுது நாங்கள் ஆடுறம்.. நீங்கள் வயிறு எரிஞ்சது காணும் நடையைக் கட்டுங்கோ.. இன்னும் கொஞ்சம் நேரம் இங்கினை நிண்டியளோ.. வரவேற்புல கலவரம் செஞ்சு எங்கடை மகளை மன உளைச்சலுக்கு ஆளாக்க பாக்கினம் எண்டு பொலிசில கம்ளைண்ட் குடுத்திருவன்.. பிறகு கலியாண சோறு திண்ட வாயால களி தின்ன வேண்டி வரும்..”
என நீலரூபி மிரட்ட, நாயகி உண்மையில் பயந்து தான் போனார்.
அதற்குள் ஜேம்ஸின் பாடிகார்ட்ஸ் வேகமாக வந்து அவரையும் அவரது மகன்களையும் பிடித்து கொண்டு போய் வெளியே விட்டு மண்டப வாசலை மூடினார்கள்.
நாயகியின் இளைய மகன்
“அம்மாய்.. அந்த தொல்லையம்பலம் வேணும் எண்டே எங்களை அவமானப் படுத்த தான் இங்கினை கூப்பிட்டு இருக்கிறான்.. அது தெரயாமல் நாங்களும் வந்து நல்லா வாங்கி கட்டி இருக்கிறம்..”
என ஆதங்கப் பட
“ஓமடா.. அவன் அங்க ஊர்ப் பக்கம் வரட்டும் நாயை கழட்டி துரத்த விடுறன்..”
என புலம்பிக் கொண்டே நாயகி பேருந்து நிலையம் நோக்கி நடக்க, மகன்களும் அவரைத் தொடர்ந்தார்கள்.
உள்ளே ஜேம்ஸ் இறுகப் பிடித்த பிடியில் பூச்சாடி உடையாத குறையாக கிடக்க, அவனது கையில் கிடந்த சாடியை மெதுவாக பற்றி ஓரமாக வைத்த கோதை, அவனது கரத்தோடு தன் கரத்தை சேர்த்து இறுகப் பற்றிக் கொண்டாள்.
அவள் தன் கரம் தொட்டதும் தான் கண்களைத் திறந்து கொண்டான் ஜேம்ஸ். நொடியில் மாறும் அவனது விழிகளை அருகில் நின்று பார்த்தவளுக்கு அவளை அறியாமலேயே உள்ளூர லேசாக உதறல் எடுத்தது.
அவனோடு லேசாக ஒட்டி நின்று கொண்டு அவனது முகத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவளை, என்னவென்பது போல குனிந்து பார்த்தான் ஜேம்ஸ்.
“கோபமா இருக்கியளோ.. எனக்கு உங்களை பாக்க பயமா கிடக்கு..”
என கோதை உள்ளே போய் விட்ட குரலில் சொல்லவும், கண்களை மூடித் திறந்து தன்னை நிதானப் படுத்திக் கொண்டு
“என்கிட்டே என்ன பேபி உனக்கு பயம்..”
என அவளை லேசாக அணைத்து, அவளது உச்சியில் நாடி பதித்து கேட்டவனது அணைப்பில் கொஞ்சம் நிம்மதியானாள் கோதை.
“அதில்லைங்கோ.. உங்கடை கண்ணு இருக்குதே.. அது நீங்கள் கோபமா இருக்கிற நேரம் வேறை கலருக்கு மாறுது.. அந்த நேரத்தில உங்களுக்கு பக்கத்துல வர பயமாக் கிடக்கு.. அது கூட பரவாயில்லை உங்களை பாக்கவே பயமாக் கிடக்கு..”
“அது இயல்பாவே அப்புடி தான்டீ.. கோபம் வந்தா அப்புடி ஆயிடுறன்.. அதுக்காக பக்கத்துலயே வரமாட்டியோ..”
“கோபத்துல என்னையும் அடிப்பீங்களோ..”
“லூசா பேபீ நீ..”
“சொல்லுங்கோ..”
“அடிக்க மாட்டன்டீ..”
“நிசமாவா..”
“இங்க பாரு பேபீ.. எவ்வளவு கோபத்துலயும் நான் நிதானமா நடந்துக்கிறது உங்கிட்ட மட்டும் தான்..”
“ஏன் அப்புடி..”
“ஏன் அப்புடி என்றது உனக்கு அதுவா தெரியணும்..”
“அப்போ என்னைய அடிக்க மாட்டீங்கள் அப்புடி தானே..”
“இப்ப உனக்கு என்னடீ பிரச்சினை..”
“உங்க கண்ணு தான்..”
“அதுக்கு நான் என்னடீ பண்றது..”
“எனக்காக ஒண்டு செய்யிறியளா..”
“சொல்லு..”
“எப்பவுமே கூலிங் கிளாஸ் போடுங்கோ.. அப்ப உங்கடை கண்ணு கலர் மாறுறது எனக்கு தெரியாது..”
“எல்லாம் என்ரை நேரம்..”
“என்னங்கோ..”
“நேரமாச்சு.. நாமளும் சாப்பிடுவமானு கேட்டன்..”
“ஆ ஓம் ஓம்.. பசிக்குது பசிக்குது.. வாங்கோ சாப்பிடுவம்..”
என பரபரத்த மனைவியின் கையை பிடித்துக் கொண்டு உணவு மேசை நோக்கி நடந்தான் ஜேம்ஸ்.