குறிஞ்சி மலர்.. 44
தன் கணவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, ஊரில் இருக்கும் அத்தனை தெய்வங்களின் பெயர்களையும் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தாள் கோதை.
கண்களில் சிறு சிரிப்போடு அவளின் ஒவ்வொரு செயலையும் பார்த்து இரசித்தபடி, கண்டுங் காணாததும் போல அமர்ந்திருந்தான் ஜேம்ஸ்.
திருமண ஜோடிகள் இருவரும் தங்களின் தேன்நிலவை கொண்டாட அவுஸ்திரேலியாவுக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இது தான் கோதையின் முதல் விமான பயணம். பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க எவ்வளவு முயன்றும் அவளால் முடியவேயில்லை.
“ஊரிக்காட்டு காளியாத்தாளே.. தீருவில் ஒழுங்கை கண்ணகியம்மாளே.. செல்வச் சந்நிதியானே.. நல்லூர் முருகனே.. கதிர்காமக் கந்தனே.. வல்லிபுர ஆழ்வாரே.. பெரியதம்பிரானே.. வன்னிச்சியம்மா.. மாதானாச்சி.. கோணேச்சரத்தானே.. நாகபூசணியம்மாளே.. நெற்கொழு வைரவா.. உடுப்பிட்டி வீரபத்திரா.. என்னைய கூடவே இருந்து காப்பாத்தி விடுங்கோ..”
என கோதை புலம்பிப் புலம்பி வேண்டிக் கொள்ள, பின்னால் இருந்து அவளைச் சுரண்டி
“இவ்வளவும் தானோ இன்னும் ஏதாவது பேருகள் இருக்கோ..”
என சிறு சிரிப்போடு வியாகேசு கேட்க, பக்கத்தில் இருந்த வஞ்சி விழுந்து விழுந்து சிரிக்க, தன் வேண்டுதலை பாதியில் நிறுத்தி அவர்களை முறைத்தாள் கோதை.
தேன்நிலவுக்கு கணவன் மனைவி இருவரும் மட்டும் கிளம்பி போகவில்லை. கொசுறுகளாக வியாகேசு, வஞ்சி, நீலரூபி, தேவா, ரகுமான் என ஒரு படையே திரண்டு தான் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
தம்பதியினருக்கான தேன்நிலவு பற்றி யோசனை செய்து, அவர்களை எங்கே அனுப்பி வைக்கலாம் என்பது பற்றி பெரிய பட்டிமன்றமே நடத்தி, கடைசியில் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கலாம் என்ற முடிவுக்கு வியாகேசும் வஞ்சியும் வந்திருந்தனர்.
அதிலும் வியாகேசு கனடா என்று சொல்ல, வஞ்சி அவுஸ்திரேலியா என்று சொல்ல, அநேகமான ஓட்டு அவுஸ்திரேலியாவுக்கே விழுந்திருந்தது.
வியாகேசை விடவும் ஒரு ஓட்டு அதிகமாக வஞ்சிக்கு விழுந்தது. மொத்தமாக ஓட்டு போட்டவர்கள் மூன்றே மூன்று நபர்கள் தான். வியாகேசு கனடா என்று சொல்லி தனக்கு தானே ஓட்டு போட, வஞ்சியும் அவுஸ்திரேலியா என்று சொல்லி தனக்கு தானே ஓட்டு போட, கடைசியில் நீலரூபி அவுஸ்திரேலியா என்று சொல்லி தன் ஓட்டை வஞ்சிக்கு போட, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வஞ்சியின் பக்கம் ஜெயித்து அவுஸ்திரேலியா தேன்நிலவுக்கு போகும் இடமாக மாறியது.
ஜேம்ஸ் தன் மனைவியுடனான தேன்நிலவுக்கான சகல ஆயத்தங்களையும் செய்ய, அவனது மனைவியோ தன் அம்மா நீலு, அப்பா வியாகேசு, அண்ணன் வஞ்சி, துணைக்கு பாதுகாவலர்கள் தேவா மற்றும் ரகுமான் வந்தால் தான் நான் வருவேன் என்று விட, மனைவியின் விருப்பமே தன் விருப்பம் என எப்போதோ மாறி விட்டிருந்த ஜேம்ஸும், உடனடியாகவே அதற்கு ஆமாம் என்று சொல்லி விட்டான்.
தாங்கள் எதற்கு என மறுத்துப் பேசியவர்கள் ஜேம்ஸின் ஒற்றைப் பார்வையில், மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு இதோ விமானத்தில் ஏறியமர்ந்து விட்டார்கள்.
எலிசபெத்தையும், செபமாலையையும் தாங்கள் பயணம் முடிந்து வரும் வரை, தன்னுடைய மருத்துவ நண்பனின் கீழ் இயங்கும் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்திருந்தான் ஜேம்ஸ். இல்லாது போனால் அவனின் மனைவி அவனை நிம்மதியாக இருக்க விடமாட்டாளே அதனால் தான் இந்த முன்னாயத்தம்.
கோதை விமானப் பயணத்திற்கு பயப் படுகிறாள் என்பதை புரிந்து கொண்ட வியாகேசு, ஊர்க் கதையெல்லாம் சொல்லி அவளைச் சிரிக்க வைத்துக் கொண்டே வந்தார்.
அவரது நகைச்சுவை பேச்சில் சுற்றுப் புறம் மறந்து, கோதை தானும் நகைச்சுவையாகப் பேசத் தொடங்க, ஜேம்ஸ் வழமை போல தன் மனைவியை இரசிக்க, நீலரூபி தன் மகளோடு சேர்ந்து சிரிக்க, அந்தப் பயணம் கலகலப்பாகிப் போனது.
எப்போதும் போல ரகுமான் உர்ரென்றே முகத்தை வைத்து கொண்டு வர, சந்தோஷமாக இருக்கவும் முடியாமல் முறைப்பாக இருக்கவும் முடியாமல் தேவா வழமை போல இருதலைக் கொள்ளி எறும்பாக வந்து கொண்டிருந்தான். அவர்களது முகத்தையும் பாவனையையும் பார்த்த வஞ்சிக்கு சிரிப்பு தான் வந்தது.
ஆனானப் பட்ட எங்களின் பாஸையே நிற்க வைத்து கேள்வி கேட்கும் என் தங்கை கோதைக்கு, நீங்கள் இருவரும் எம் மாத்திரம் என உள்ளூர எண்ணிக் கொண்டவன், அந்த பயணத்தை சந்தோஷமாக அனுபவிக்க தொடங்கினான்.
கோதைக்கு எல்லாமே புதிதாக இருந்தது. எல்லாவற்றையும் நின்று நிதானமாக இரசிக்கும் குணம் அவளுக்கு. அதனால் அவளது கவனம் முழுவதும் புதிதாக நுழைந்த நாட்டில் இருந்த இடங்களில் குவிய, மற்றவர்களுக்கு எப்படியோ ஒருவனுக்கு கடுப்பாகி போனது.
என் மனைவி என்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என்கிற சுயநலவாதி ஆகிப் போனான் ஜேம்ஸ். அதனால் அவன் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, புது இடத்தை பார்த்த குஷியில் இருந்த கோதைக்கு அவனை நிமிர்ந்து பார்க்க கூட நேரங் கிடைக்கவில்லை.
அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய தலைநகரமான சிட்னியில் அவர்கள் காலையிலேயே வந்து சேர்ந்ததும், பெரிய விடுதி ஒன்றில் அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டதால் எல்லோரும் பயணக் களைப்பு தீர ஓய்வெடுக்க செல்ல, கோதை மட்டும் வெளியிலேயே நின்றிருந்தாள்.
“பேபி..”
“ம்ம்..”
“பேபீஈ..”
“ஆ..”
“எனக்கு தூக்கம் வருதுடி..”
“நித்திரை வந்தா போய்க் கொள்ளுங்கோவன்..”
“ப்ச்.. நீ வர்ரியா இல்லையா..”
“நீங்கள் நித்திரை கொள்ள நான் ஏனுங்கோ.. அங்க பாருங்கோவன் கடல் எவ்வளவு அழகா இருக்கு.. இந்தக் கடல் தானோ.. அப்புடியே நீண்டு திருகோணமலைப் பக்கமாவும் வருகுது.. என்னா நீலம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு..”
“பேபீ.. அழகாத் தான்டி இருக்கு.. அதை அப்புறமா வந்து ரசிக்கலாம்.. இப்போ நீ வா..”
“எனக்கு இப்பவே ரசிக்கோணும்.. நான் வேணுமெண்டால் அப்பாவை உங்களோட வந்து தங்க சொல்லட்டுக்கோ..”
“ஒண்டும் வேண்டாம்.. நீ வர்ரியா இல்லையா இப்போ..”
“என்ன நீங்கள்..”
“இப்ப நீ உள்ள வரலை..”
“வரேல்லை எண்டால் என்ன செய்வியளாம்.. என்ன நாயை அவுத்து விடுவியளோ.. ஹா ஹா ஹா.. அந்த வேலையெல்லாம் இங்கினை ஆகாதப்பூ.. உங்கடை செல்லக்கட்டியள் அங்க சிறிலங்காவுல.. நாங்கள் நிக்கிறது ஆஸ்திரேலியாவுல.. சரி நாயைத் தான் காட்டி மிரட்ட ஏலாதெண்டுட்டு.. எதையாவது தூக்கி அடிக்கலாம் எண்டு யோசிச்சியளோ அதுவும் நடக்காது.. அங்க சுத்தி பாருங்கோ எல்லாம் சுவத்தோட பிற் செஞ்சு விட்டிருக்காங்கள்.. சுத்தியல் கொண்டாந்து தான் உடைக்கோணும்..
சோ உந்த மிரட்டுற வேலையை விட்டிட்டு.. போய் இழுத்து மூடிக் கொண்டு நித்திரை கொள்ளுற வேலையை பாருங்கோ..”
என்று கொண்டு அவனைப் பார்த்து பழிப்பு காட்டிய கோதை
“ஆ ஊவெண்டால் நாயை அவுத்து விட்ருவன் நரியை அவுத்து விட்ருவன் எண்டு வந்திடுவாரு சீமைத்துரை.. இங்கினை இவருந்தை பாஷா ஒண்டும் பலிக்காதில்லே..”
என்றபடி திரும்பவும், அவளுக்கு சொடக்கிட்டு தன் பக்கம் திரும்ப வைத்தான் ஜேம்ஸ்.
“இப்ப என்ன சொல்லப் போறியள்..”
என அவனின் பக்கம் திரும்பியவளை, இடுப்பில் கை வைத்து கொண்டு, அவளையே பார்த்திருந்தவனது தோரணையில் கோதைக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.
“என்ன.. ஏன் இப்புடியே உறைஞ்சு போய் நிக்கிறியள்.. உங்கடை செல்லக்கட்டியளை ரொம்ப மிஸ் செய்றியளோ.. போங்கோ போய்ப் படுங்கோ..”
என்று கோதை சிறு சிரிப்போடு சொல்ல, உணர்ச்சி துடைத்த முகத்தோடு, அவளை நோக்கி நிதானமாக வந்தான் ஜேம்ஸ்பீட்டர்.
அவனது முக பாவனையிலும், அவனது நடையின் தோரணையிலும், தன்னை அறியாமலேயே ஓரடி பின்னால் போன கோதைக்கு, லேசாக உதறியது. என்ன தான் தெனாவெட்டு கதை கதைத்தாலும், அதெல்லாம் அவன் தள்ளி சற்றே தூரமாக நிற்கும் வரையில் தான். அவன் நெருங்கி வந்தாலோ அல்லது ஒரு பார்வை பார்த்தாலோ போதும் உடனே கோதைக்கு குளிர் காய்ச்சல் வந்தது போல கைகால் உதறத் தொடங்கி விடும். அந்தக் கதை தான் இப்போதும் நடந்து கொண்டிருந்தது.
“இந்தா பாருங்கோ.. என்னைய அடிக்க மாட்டன் எண்டு சொன்னியளே..”
என்று கொண்டு தன் இரண்டு கன்னங்களையும் இரண்டு கைகளால் கோதை மூட, அவளுக்கு மிக அருகில் வந்து, அவளது இரண்டு தோள்களிலும் தன் கரங்களை மாலை போல கோர்த்து தன் பக்கமாக இழுத்த கணவனை இமைக்க மறந்து கோதை பார்க்க, அவனது விழிகளும் அவளது விழிகளைத் தான் ஊடுருவியது.
“என்ன பேபி நீ.. என்னைய புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா..”
என்று கொண்டு ஜேம்ஸ் கண் சிமிட்டி கேட்க, அந்த நீல விழிகளுக்குள் கோதை தொபுக்கடீரென தலை குப்புற விழுந்து தொலைத்தாள்.
நீங்கள் நேர் கொண்டு பார்த்தாலே வார்த்தைக்கு பஞ்சமாகிப் போய் விடும் நேரத்தில், இந்த நெருக்கத்தில் மட்டும் எனக்கு பேச்சு வந்து விடுமோ என்பது போல நின்றிருந்தாள் கோதை.
கோதை பேச்சின்றி தன்னையே வெறித்தபடி நிற்க, குனிந்து அவளது காதோரம் கிடந்த முடிச் சுருளை ஊதி விட்டவன், அவளது காதுக்குள்
“பேபீ.. பொறுமையை ரொம்ப சோதிக்கிறடி..”
என அழுத்திச் சொன்னவனது ஸ்பரிசத்தில் கூசிச் சிலிர்த்தவள், வேகமாக அவனைத் தள்ளி விட்டு விலகி நின்றாள்.
“இந்தா.. இந்த தொட்டு தொட்டு கதைக்கிற வேலையெல்லாம் வைச்சுக் கொள்ளாதேங்கோ..”
“இதே வார்த்தையை அப்போ சொன்னே ஓகே.. பட் இப்பவும் இதே வார்த்தை தானா..”
“எப்பவுமே அதே வார்த்தை தான்.. நான் பேச்சு மாறுறவளில்லை..”
“சரிங்க மேடம்.. இப்போ ரூமுக்கு தூங்க வாறியளா இல்லையா..”
“வர முடியாது..”
“அப்போ சரி..”
“என்ன அப்போ சரி..”
“என்னோட பெட்ஸை கூப்பிட்ர வேண்டியது தான்..”
“கூப்பிடுங்கோ கூப்பிடுங்கோ.. நல்லா கத்தி சத்தம்மா கூப்பிடுங்கோ..”
“கூப்பிடத் தான்டி போறன்..”
என்று கொண்டு அவளையே பார்த்திருந்தவன், அவளுக்கு பின் பக்கமாக சொடக்கிட்டு
“றொம்மீ.. ச்சூ..”
என்க, அவன் அப்படி அழைத்ததும் பின்னால் இருந்து ஒரு பெரிய உறுமல் சத்தமே கேட்டது.
திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்த கோதைக்கு, பயத்தில் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது.
அவளுக்கு பின்னால் றொம்மியை பிடித்தபடி ரகுமான் நின்றிருந்தான்.
றொம்மியும் அவளைப் பார்த்து தான் உறுமிக் கொண்டிருந்தது.
“ஆத்தி.. இதை எப்படா கூட்டிட்டு வந்தான்.. இது தெரியாமல் பெரிசா வாயைக் காட்டித் தொலைச்சிட்டனே.. அது வேறை என்னையவே முறைக்குதே.. உடம்பெல்லாம் நடுங்குதே..”
என கோதை முணுமுணுத்துக் கொண்டு ஓரடி பின்னால் எடுத்து வைக்க, கோதையின் பின்னால் நின்றிருந்த ஜேம்ஸைப் பார்த்த றொம்மி அவனை நோக்கி பாய எத்தனித்தது.
அவ்வளவு தான் கோதை ஒரே பாய்ச்சலில் பாய்ந்து ஜேம்ஸின் இடுப்பில் ஏறியிருந்து கொண்டு, அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.
அவளது அந்த செயலை ஜேம்ஸும் எதிர்பார்க்கவில்லை என்பது, திகைத்து நின்ற அவனது முகமே எடுத்து சொல்ல, சில நொடிகளில் அவனது திகைப்பு சுவாரஷ்யத்தை தத்தெடுத்துக் கொண்டது.
தன் நெஞ்சோடு முகத்தை மறைத்துக் கொண்டு
“முருகா முருகா..”
என முணுமுணுத்தபடி இருந்தவளையே சில கணங்கள் பார்த்தவன், ரகுமானை நோக்கி கண்ணசைக்க, வழமை போல இவனது கண்ணசைவில் பணிவிடை செய்யும் அவனும் நாயை அப்படியே விட்டு விலகிச் சென்று விட்டான்.
கோதையின் காதோரம் குனிந்து
“இப்போ தூங்க போலாமா பேபீ..”
என ஜேம்ஸ் கேட்க,
மண்டையை எல்லாப் பக்கமும் ஆட்டி வைத்தாள் ஜேம்ஸின் அன்புத் துணைவி.