அசுரனின் குறிஞ்சி மலரே.. 46

4.8
(13)

குறிஞ்சி மலர்.. 46

மனைவியின் வெட்கப் பார்வையில் உல்லாசமாக வலம் வந்த ஜேம்ஸ், அவளை தனியே எங்கேயும் அனுப்புவதேயில்லை.

“பேபீ..”

“என்னங்கோ..”

“நான் ரூம்ல இல்லாத நேரம்.. ஊரை சுத்திப் பாக்கிறேனு கிளம்பிடாதே..”

“நீங்கள் சுத்தி காட்டினா நான் ஏன் கிளம்பிப் போக போறேன்..”

“அப்போ இதுவரை நாளும் நடந்தது என்னடி..”

“அது வேறை இது வேறை..”

“என்னடீ..”

“சும்மா எவ்வளவு நேரம் தான் இந்த அறைக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிறது சொல்லுங்கோ..”

“உன்னை யாரு அடைஞ்சு கிடக்க சொன்னது.. நீ கேசப்பா கூட போய் பேசிட்டு இரேன்..”

“பாவம் அப்பா.. என்ரை அலம்பலை கேட்டு கேட்டு காதால ரத்தம் வடியாத குறையா கிடக்கிறாரு.. நான் அப்பானு கூப்பிட்டுக் கொண்டு போனாலே அலறியடிச்சு ஓடுறாரு.. வஞ்சியண்ணாச்சியைப் பத்தி சொல்லவே தேவையில்லை.. எனக்கு வேறை கதைக்காமலே இருக்க முடியேல்லை..”

“நான் வேலை விசியமா வெளிய போயிட்டு வர்ர வரைக்கும் தானேடி..”

“அது வரைக்கும் நான் என்ன செய்ய.. எங்க போறதா இருந்தாலும் என்னைய கூட்டிக் கொண்டு போங்கோ.. இல்லாட்டிக்கு இங்கினையே நான் கதைக்கிறதை கேட்டுக் கொண்டு இருங்கோ..”

“பேபி.. அவசர வேலை ஒண்ணுடி.. போறதும் வாரதும் தான்..”

“போறதும் வாரதும் எண்டால் ஏன் போறீங்களாம்..”

“தாயே கொஞ்சம் கருணை காட்ட கூடாதா..”

“போய்த் துலையுங்கோ.. பிஸிநெஸ் பாக்க வாரவரு என்னைய எதுக்கு இங்கினை கூட்டி வருவானாம்..”
என முணுமுணுத்துக் கொண்டு கோதை படுக்கையில் விழ, இனியும் நின்றால் அவள் தன்னை போகவே விட மாட்டாள் என்பதை புரிந்து கொண்ட ஜேம்ஸ் வேகமாக வெளியேறி விட்டான்.

அவன் போன திக்கையே பார்த்தபடி படுத்துக் கிடந்தவளுக்கு, எப்போதடா தாய் நாட்டுக்கு கிளம்புவோம் என்றிருந்தது. ஜேம்ஸ் இங்கே வந்ததில் இருந்து இப்படி தான் அடிக்கடி எங்கோ வெளியே போய் விட்டு வருகிறான். அதைப் பற்றி கேட்டாலும் ஒழுங்கான பதில் கிடைப்பதில்லை. சரி அவன் வேலை அவன் பார்க்கிறான் என கோதையும் அமைதியாகிப் போனாலும் மனதோடு ஏதோ ஒரு சலனம் அவளுக்கு இருந்து கொண்டே தான் இருந்தது.

அதோடு என்ன காரணத்துக்காகவோ தெரியவில்லை ஒரு மாத காலம் மட்டுமே அவுஸ்திரேலியாவில் இருப்பது என வந்திருந்த ஜேம்ஸ், சட்டென்று அதை மூன்று மாத காலம் ஆக்கி விட, முதலில் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்ட கோதைக்கு பிறகு அதுவும் பிடிக்கவில்லை. காரணம் கணவன் மனைவி இருவரையும் அங்கே விட்டு மற்றவர்கள் நாட்டுக்கு திரும்ப ஆயத்தமாகி இருந்தார்கள்.

இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் புறப்பட இருந்தார்கள். இப்போதெல்லாம் தேவாவை போலவே ரகுமானும் கோதையோடு சுமுகமாகவும் சகஜமாகவும் பேசத் தொடங்கி விட்டிருந்தான்.

அவர்கள் இருவரும் கோதைக்கு பின்னால் தங்கச்சி தங்கச்சி என்று சுத்தி வருவதைப் பார்த்த வியாகேசும் வஞ்சியும் மூக்கில் விரலை வைத்தார்கள். போதாக்குறைக்கு அவர்களுக்கும் தேவா மற்றும் ரகுமானின் இசையில் வந்த பாடல்களை அவள் அறிமுகப் படுத்தி வைத்து விட, இருவருமே இசைப் போதைக்கு அடிமையாகி எப்போதும் ஏதாவது ஒரு பாடலை கம்மிங் செய்தபடியே வலம் வந்தார்கள்.

சில மணி நேரங்கள் அப்படியும் இப்படியும் புரண்டு படுத்தவள், போரடிக்கவே வியாகேசை தேடிக் கொண்டு போனாள்.

“அப்பா..”

“என்ன பிள்ளை..”

“கட்டாயம் நீங்கள் போய் தான் ஆகோணுமோ..”

“பிள்ளை.. எத்தினை தடவை நானும் உனக்கு இதுக்கு பதில் சொல்லீட்டன்..”

“பதிலில ஏதும் மாற்றம் வந்திருக்குமோ எண்டுற நப்பாசை தான் அப்பா..”

“எத்தினை நாள் தான் பீட்டரிந்தை அம்மாவையும் அப்பம்மாவையும் அங்க தனியா விடுறது.. என்ன தான் தெரிஞ்சவையிட்டை விட்டிட்டு வந்தாலும் அங்க இருக்கிற கிருமினல்களால இங்க நிம்மதியா இருக்க முடியேல்லை பிள்ளை.. அதோட மற்றவைக்கும் நிறைய வேலையள் இருக்குது பிள்ளை.. உன்ரை அம்மாவும் பாவம் தானே அவாக்கு இந்த இடம் சுத்தமா ஆகேல்லை..”

“ம்ம்.. புரியுதுப்பா..”

“உன்ரை புருஷனோட நீ சந்தோஷமா நேரத்தை செலவழி..”

“எங்கயப்பா.. அந்த மனுஷன் திடீர் திடீரெண்டு எங்கயோ போயிடுறாரு..”

“ஒரு நாளில ஒரு மணி நேரம் தானே பிள்ளை அவன் வெளியால போட்டு வாரான்..”

“என்னண்டே தெரியேல்லையப்பா.. அவரோடயே இருக்கோணும் போல கிடக்குது.. அவர் இல்லாத நேரம் கடுப்பா கிடக்குது கோபம் வருது.. சில நேரங்களில அழுகை கூட வருது..”

“கடைசியில உனக்கும் அந்த வியாதி தொத்தீட்டு எண்டு சொல்லு பிள்ளை..”

“என்ன வியாதியப்பா..”

“அது தான் மேனியா.. காதல்மேனியா..”

“போங்கோப்பா..”
என்று வெட்கப் பட்டபடி கோதை தன்னறைக்குள் ஓடி விட்டாள்.

மெல்லிய புன்னகையோடு அவள் போன திக்கையே பார்த்த வியாகேசு
“நீயும் பீட்டரும் எப்பவுமே நிம்மதியா இருக்கோணும்.. சீக்கிரமாவே எங்கடை ஜீவோதயத்துக்கு ஒரு வாரிசு வரோணும்..”
என்று வேண்டியபடி தன் வேலைகளைக் கவனிக்க போய் விட்டார்.
…………
அந்த விடுதியின் வாசலில் நின்று அனைவருக்கும் கையசைத்து விடை கொடுத்த கோதை, அறையினுள் புகுந்து கதவடைத்துக் கொண்டாள்.

விமான நிலையம் வரை சென்று அவர்களை வழியனுப்பி வைக்கும் அளவுக்கு அவளுக்கு பிடிப்பு இருக்கவில்லை.
எங்கே அங்கே வைத்து அழுது ஒப்பாரி வைத்து, கணவனிடம் வேண்டிக் கட்டிக் கொள்ள வேண்டி வருமோ என்கிற பயத்தில் அறையினுள்ளேயே இருந்து கொண்டு விட்டாள்.

ஜேம்ஸும் கோதையும் தங்கி இருந்த அறையை ஒட்டி ஒரு பால்கனி ஒன்று இருந்தது. மாலை நேரம் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்ததனால் மாலைச் சூரியனை ரசிக்கும் பொருட்டு பால்கனியில் போய் நின்று கொண்டாள் கோதை.

எல்லோரையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு தன்னறைக்கு வந்த ஜேம்ஸை, லாரன்ஸ் ரோமியோவின் ஃபோன் அழைப்பு டிஸ்டொப் செய்யவே, அவன் புயல் வேகத்தில் அறையை பூட்டிவிட்டு கிளம்பி போய் விட்டான். வெளியே போகும் அவசரத்தில் அறைக் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு அவன் போய் விட, இது தெரியாமல் கணவனின் வரவுக்காக பால்கனியில் காத்திருந்தாள் கோதை.

நேரம் அதுபாட்டில் நகர்ந்து செல்ல, வெளியே போனவன் வந்தபாடேயில்லை. மெல்ல மெல்ல மாலை மயங்கி இருள் பரவ, இயல்பாகவே இருளென்றால் பயம் கொள்ளும் கோதை, அறையினுள் போய் மின்குமிழை ஒளிரவிட்டு, ஏதாவது சுவாமிப் பாடல்களை கேட்கலாம் என உள்ளே போனாள்.

உள்ளே நுழைந்தவளுக்கு இருளில் ஒன்றுமே தெரியவில்லை. உள்ளே நுழைந்து சுவிட்ச் போர்ட் எங்கே இருக்கிறது என்பதை தடவிப் பார்த்து, அதைப் போடக் கூட அவளுக்கு பயமாக இருந்தது. அறையினுள் கிடந்த பொருட்கள் படு பயங்கரமாக காட்சி கொடுக்கவே, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடிப் போய்ப் பால்கனியிலேயே நின்று கொண்டு விட்டாள்.

வெளியே நகரமே ஒளிர்ந்து அத்தனை வண்ணமயமாக இருந்தது. ஆனால் பாவம் அவளுக்கு தான் அதை இரசிக்கும் மனநிலை சுத்தமாக இருக்கவில்லை.

“ஐயோ காளியாத்தா.. இதென்ன சோதினை.. உடம்பெல்லாம் நடுங்குதே போன மனுஷனை இன்னும் காணேல்லையே.. ஃபோன் வேறை எடுத்துப் பாப்பம் எண்டால்.. அது வேறை அறைக்குள்ள கிடக்குது.. எங்க வைச்சன் எண்டே தெரியேல்லையே.. மனுஷன் வர்ரதுக்குள்ள பயத்துலயே செத்ருவன் போலயே.. முருகா.. விநாயகா.. என்னைய காப்பாத்துங்கோ..”
என அவள் கைகூப்பி கண்களை இறுகமூடி வேண்டிக் கொண்டிருக்கும் போதே, பால்கனியை அடுத்து இருந்த பக்கத்தில் இருந்து யாரோ பயங்கரமாக அடித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். இருளில் அது தெளிவாக தெரியாது போனாலும், ஏற்கனவே பயத்தில் இருந்தவளை அவர்களது பயங்கரமான சண்டை இன்னும் பாதிக்கவே, அப்படியே மயங்கிச் சரிந்தாள் கோதை.

வெளியே போன ஜேம்ஸ் நள்ளிரவை தாண்டியே அறையினுள் வந்தான். அவனுக்கு இருந்த ஆக்ரோஷமான மனநிலையில், மனைவியென்று ஒருத்தி அங்கே தனக்காக எதிர்பார்த்து தனியாக இருப்பாள் என்பதே மறந்து போய் விட்டிருந்தது.

அந்தளவுக்கு அவன் கோபத்தில் இருந்தான். ஜேம்ஸ்பீட்டரும் லோரன்ஸ்ரோமியோவும் தான் இப்போது போதைப்பொருள் கடத்தலில் முன்னணியில் நின்றார்கள். இப்போது கூட இங்கே வைத்தும் இருவருக்கும் இடையில் ஒரு தொழில்முறை ஒப்பந்தம் நடந்து கொண்டிருந்தது. அதற்காக வெவ்வேறு நாடுகளில் இருந்து நிறைய தொழில் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அதில் ஜேம்ஸுக்கு ஒரு பகுதி சப்போர்ட், லாரன்ஸுக்கு ஒரு பகுதி சப்போர்ட்.

அதில் ஜேம்ஸுக்கு சாதகமாக இருந்த ஒருவன் சட்டென்று லாரன்ஸின் பக்கம் போய் விட, அதே இடத்தில் அவனை பின்னியெடுத்து விட்டு வந்து விட்டான் ஜேம்ஸ். அவனை எதிர்க்கும் சக்தி இல்லாமல் எல்லோரும் கைகட்டி நிற்க, அடி வாங்கியவன் சாகாத குறையாகிப் போனான்.

ஜேம்ஸ் எதிரியை கூட மன்னித்து விடுவான். ஆனால் நம்பிக்கை துரோகியை என்றுமே மன்னிக்க மாட்டான். பொதுவாகவே இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு குணம் தான். நம்பிக்கை துரோகியை யாராலும் மன்னிக்க முடியாது. ஜேம்ஸ் ஒருபடி மேலே போய் அவனை தண்டித்து விட்டே ஓய்வான். அப்படியே அவனை நம்பியதற்காக தன்னையும் தண்டித்து கொள்ளுவான்.

அறையினுள் நுழைந்தவன், கோபம் தீர சுவற்றிலே ஓங்கிக் குத்தி விட்டு, பால்கனிக்கு வந்து நின்று கொண்டான். இந்த மாதிரியான நேரங்களில் அவனுக்கு நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் இல்லாது போனால் ஆக்ரோஷம் கொஞ்சம் கூட குறையாது.

சில ஆழமான மூச்சுகளை எடுத்து தன்னை நிதானப் படுத்த முயன்றவனுக்கு அது முடியாமல் போகவே, ஆ என்று கத்தியபடி சுவற்றில் ஓங்கி குத்தினான். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் போகவே, அங்கிருந்த கண்ணாடிப் பொருட்களை தூக்கியடிக்க போக, அவனது கரம் அந்தரத்தில் தொங்கியது.

பொருட்களை போட்டு உடைத்தால் தன் பேபிக்கு பிடிக்காது என்பது அவனுக்கு அத்தனை ஆக்ரோஷத்திலும் சட்டென்று தோன்றவே, கையில் வைத்திருந்த கண்ணாடி ஜாடியை அப்படியே வைத்தவன், அப்போது தான் மனைவியை தேடினான்.

அறையில் எங்குமே அவளைக் காணவில்லை. குளியலறை தவிர அங்கே வேறு அறைகளும் இல்லை. வேகமாக பால்கனியை போய் பார்த்தவன் அப்படியே விக்கித்து போய் நின்று விட்டான்.

துவண்டு போன கொடி போல, கீழே விழுந்து கிடந்தவளைப் பார்க்கையில், ஒருவேளை தூங்கி விட்டாளோ என நினைத்த ஜேம்ஸ், உடனேயே அவளை மெல்ல எழுப்பினான். அவளோ மூச்சுப் பேச்சில்லாமல் அப்படியே கிடக்கவும், ஜேம்ஸுக்கு உள்ளே ஏதோ செய்தது.

மனைவியின் கன்னம் தட்டி
“பேபீ.. பேபீ.. என்னடி ஆச்சு.. எந்திரிடி..”
என்றவனுக்கு, அவள் அசையாமல் கிடக்கவும் மீண்டும் கோபமாகிப் போனது.

“இப்போ எந்திரிக்க போறியா இல்லையா..”
என்று கொண்டு பக்கத்தில் கிடந்த தண்ணீர் போத்தலை எடுத்து, அவளது முகத்தில் ஊற்ற, அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த கோதை, அவனது கன்னத்தில் விட்டாள் ஒரு அடி. அவனது ஆசை மனைவியின் இரண்டாவது அடி இது.

கன்னத்தை பொத்திக் கொண்டு
“ஏன்டி..”
எனக் கேட்டவனை, ஒரு நொடி பார்த்தவள் மறுநொடியே இறுக அணைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள். சில நொடிகள் அழுதவள், அவனைத் தள்ளி விட்டு அவனிடம் இருந்து விலகி அமர்ந்து கொண்டாள்.

“என்னைய விட்டிட்டு இவ்வளவு நேரமும் எங்க போனனியள்.. எனக்கு இருட்டு எண்டால் பயங்கரம் ஒரே பயமா இருந்தது.. பக்கத்துல வேறை ஆரவோ சண்டை போடுறாங்கள்.. என்னைய பாத்துக் கொள்ளுறதை தவிர அப்புடி என்ன உங்களுக்கு வெட்டி பிடுங்குற வேலை..”

“தப்பு தான் சாரிடி பேபீ..”

“ஆ ஊவெண்டால் சாரி பூரி எண்டு கொண்டு வாங்கோ..”

“நீ தைரியமான பொண்ணு.. தனியா இருந்துக்குவேனு நினைச்சேன்டி..”

“உங்களை ஆரு அப்புடி எல்லாம் தப்பு தப்பா யோசிக்க சொன்னது..”

“சரி சரி என்மேல தப்பு தான் சாரி.. அழாத..”

“இப்பவும் சொல்லுறன்.. என்னைய அழ வைக்கிறதே நீங்கள்..”
என அவள் சொல்லி முடிப்பதற்குள், அவளை வேகமாக இழுத்து அணைத்துக் கொண்டு
“இப்போ றொம்மியை கூப்பிடணுமா பேபி..”
என்ற ஜேம்ஸை பார்த்து முறைத்த கோதை, அவனை முறைக்க முடியாமல் வந்த வெட்கத்தில் அவனது நெஞ்சில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

அவளது வெட்கத்தின் காரணம், இருவரது ரொமான்ஸுமே அந்த றொம்மியை வைத்து தான் ஓடிக் கொண்டிருந்தது. இவள் ஒதுங்கி நிற்க, அவன் றொம்மியை அழைக்க, இவள் அவனைக் கட்டிக் கொள்ள என இருவரையும் சேர்த்து வைத்த பெருமை றொம்மியையே சாரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!