அசுரனின் குறிஞ்சி மலரே.. 47

4.7
(14)

குறிஞ்சி மலர்.. 47

ஜேம்ஸும் கோதையும் அவுஸ்திரேலியா வந்து, இரண்டு மாதங்கள் ஓடி விட்டிருந்தன.

இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல துணையாகவே மாறி விட்டிருந்தார்கள். ஆனாலும் கோதைக்கு இன்றுவரை தன் கணவன் அண்டகிரவுண்டில் போதைப் பொருள் கடத்தலில் கொடிகட்டிப் பறக்கும் மன்னன் என்பது தெரியவே தெரியாது.

அது தெரிய வரும் போது அவள் என்ன செய்வாள் என்ற பயம் வியாகேசுக்கு நிறையவே இருந்தது. ஆனாலும் இது பற்றி அவர் அவளிடம் மூச்சு கூட விடவில்லை. ஜேம்ஸ் போன்ற ஒரு நல்லவன் சிலபல ரணங்களால் இப்படி மாறிப் போனது அவருக்கு பெரிய வருத்தம். இந்த நிலை மாற கோதை உறுதுணையாக இருப்பாள் என அவர் நம்பினார்.

வியாகேசு மட்டும் இல்லை வஞ்சி, தேவா மற்றும் ரகுமான் என யாருமே ஜேம்ஸ் பற்றிய இரகசியத்தை அவளிடம் சொல்லவில்லை. அதிலும் அந்த விஷயத்தை தன் மனைவியிடம் இருந்து மறைக்க வேண்டும் என்றோ அல்லது அதை அவளிடம் சொல்ல வேண்டும் என்றோ ஜேம்ஸ் நினைக்கவேயில்லை. தன் மனைவியை உயிராக நேசிக்கிறான். தன் அனைத்து பிஸிநெஸ்ஸையும் குறைவில்லாமல் நடாத்துகிறான். அதில் ஒரு பிஸிநெஸ் போதை கடத்தல். அது அவனுக்கு எப்போதும் கிக்காக இருக்கும் ஒரு வேலை. இது தான் அவனது இப்போதைய வாழ்க்கை.

வழக்கம் போல தன் பிஸிநெஸ் விஷயமாக ஜேம்ஸ் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தான். கோதையின் பார்வை கணவனையே தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவளது பார்வையைக் கண்டு கொண்டவன், அவளுக்கு பக்கத்தில் போய் அமர்ந்து கொள்ள, சட்டென்று தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள் கோதை.

“என்ன பேபீ.. என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு..”

“ஒண்டுமில்லையே..”

“ஒண்ணுல்லைனு உன்னோட வாய் தான் சொல்லுது.. ஆனா பாரு உன்னோட கண்ணு எனக்கு நிறைய கதை சொல்லுது..”

“சரி இப்போ என்ன கதை சொல்லுது..”

“சொல்லீடுவன்.. பிறகு நீ முழியை பிரட்டுவாய்..”

“நான் முழியை பிரட்டினதும் அப்புடியே பயந்திர்ர ஆள் தானே நீங்கள்..”

“இப்ப என்னோட பேபிக்கு என்ன கோபம்..”

“ஏன் நீங்கள் மட்டும் தான் கோபப் படோணுமோ நாங்கள் எல்லாம் கோபமே படக் கூடாதோ..”

“நான் ஒண்ணுமே சொல்லலியேடி..”

“ஏன் சொல்லித் தான் பாருங்கோவன்..”

“பேபி.. இப்போ எதுக்குடி கோபமா இருக்காய்..”

“ஏனெண்டு உங்களுக்கு தெரியாது..”

“தெரியுது பேபீ..”

“தெரிஞ்சு கொண்டு தான் கேக்குறியளோ.. உங்களை கையெடுத்து கும்பிடுறன் என்னைய சிறிலங்காவுக்கு அனுப்பி வைச்சு விடுங்கோ.. நான் அங்க போய் அப்பா அம்மா அண்ணா எண்டு நிம்மதியா இருக்கிறன்..”

“அப்போ இங்க நீ என்கூட நிம்மதியா இல்லையா..”

“நீங்கள் கூட இருந்தால் தானேங்கோ நான் நிம்மதியா இருக்க.. என்னைய தனியா விட்டுட்டு எங்கையோ போறீங்கள்.. சரி ஏதவோ வேலையா போறனீங்கள் ஒருமணி நேரத்தில வந்துடுவீங்கள் எண்டு பாத்தால்.. ஒரு அஞ்சு மணி நேரத்துக்கு ஆளையே காணக் கிடைக்காது.. எனக்கு தான் தனியா இருக்கிறது பயம் எண்டு உங்களுக்கு தெரியாதோ..”

“ஜேம்ஸோட பொண்டாட்டி தைரியசாலியா இருக்கணும்டி.. இப்புடி சின்ன விசயத்துக்கு பயப்படுறவளா இருக்க கூடாது..”

“ஆ அதுக்கு துரை.. நல்ல தைரியசாலியான பொண்ணா பாத்து தாலி கட்டி இருக்கோணும்..”

“பேபீ.. கோபப் படுத்துற போல பேசாதடி..”

“அப்புடி தான் பேசுவன்.. ஒண்டு நாளைக்கே என்னைய என்ரை நாட்டுக்கு அனுப்பி விடுங்கோ.. இல்லாட்டிக்கு என்னையும் உங்களோட கூட்டிக் கொண்டு போங்கோ..”

“சரி பேபீ.. இண்டைக்கு மட்டும் வெளியில போயிட்டு ஓடி வாரன்..”

“……………..”

“பேபி பிளீஸ்டி..”

“போக வேண்டாம் எண்டு சொன்னால் மட்டும் கேக்கிற ஆள் தானே..”
என்று கொண்டு குளியலறையினுள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டாள் கோதை.

சில நொடிகள் பூட்டிய கதவைப் பார்த்த ஜேம்ஸ் அடுத்த நொடியே வெளியேறியிருந்தான். அவனின் மனைவி இந்த விடுதியில் இருப்பது தான் அவளுக்கு பாதுகாப்பு. இந்த விடுதி முழுவதுமே அவனது கண்காணிப்பில் தான் இருந்தது.

லாரன்ஸ் ரோமியோ தன் பிஸிநெஸ்ஸுக்காக கோதையை கடத்தி வைத்து ஜேம்ஸை பிளாக்மெயில் செய்யும் எண்ணத்தில் நிறைய திட்டங்கள் தீட்டி வைத்திருக்க, அது ஜேம்ஸின் காதுக்கு வராமல் போகுமா, அது தான் தாய்க் கோழி குஞ்சை அடைகாப்பது போல மனைவியை அடைகாத்தான்.

அவன் நினைத்திருந்தால் அன்றே வியாகேசோடு கோதையை தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்திருப்பான். ஆனால் மனைவி எப்போதும் தன் பார்வை வட்டத்துக்குள் தான் இருக்க வேண்டும், அவளது குரல் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு பைத்தியமாகிப் போனதோடு, அவளை தானே பாதுகாக்க வேண்டும் என்பதாலும் தான் அவளை தன்னோடு வைத்துக் கொண்டான்.

அவன் ஏதாவது வேலை என்று வெளியே போனால், அவன் மீண்டும் விடுதிக்கு வரும் வரை அவனது அறைப் பக்கம் விடுதியின் பணியாள் கூட போக முடியாது. வெளியே செல்லும் முன்பே மனைவிக்கு வேண்டியதை கொண்டு வர வைத்து விடுவான்.

குளியலறையினுள் புகுந்த கோதை, கதவோடு சாய்ந்து கீழே அமர்ந்து கொண்டாள். உடம்பு கொஞ்சம் பலவீனமானது போல இருந்தது. காரணமே இல்லாமல் அழுகை அழுகையாக வந்தது. அவளுக்கு தன் கணவன் எப்போதும் தன்னோடேயே இருக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருந்தது. இப்போது கொஞ்சம் நாட்களாக ஏனோ தெரியவில்லை அவனுக்கும் தனக்கும் ஏதோ விலகல் வந்து விடுமோ என்கிற இனம் புரியாத பயம் வேறு அவளுக்கு வந்து தொலைத்தது.

அதோடு கொஞ்ச நாட்களாகவே உடம்பு ஏதோ அலுப்பாக இருப்பது போல உணர்வு, அதோடு ஒரே அசதியாக இருந்தது. எதையும் சாப்பிடக் கூடப் பிடிக்கவேயில்லை. அதை மீறி சாப்பிட்டாலும் குமட்டிக் கொண்டு வேறு வந்தது.

கணவனது அருகாமையை அதிகமாக நாடுவதிலும், வியாகேசு, நீலரூபி மற்றும் வஞ்சியின் கரிசனத்தை தேடுவதிலும் மனதை செலுத்திய கோதைக்கு தனக்குள் நடந்த மாற்றத்தை சட்டென்று கண்டு பிடிக்கவே முடியவில்லை.

ஜேம்ஸ் தன் மனைவியின் மீது கொண்ட அளவு கடந்த நேசத்தக்கும், கோதை தன் கணவன் மீது வைத்த அதீதமான பாசத்துக்கும் அடையாளமாக அன்புச் சின்னமாக, ஜேம்ஸின் உயிர் கோதையின் மணி வயிற்றில் உருவாகி விட்டிருந்தது.
அதை கோதை தான் இன்னும் சரியாக உணரவில்லை.

இந்த உடல் உபாதைகளை எல்லாம் கணவனுக்கு தெரியாமல் மறைப்பதற்குள்ளே அவளுக்கு மூச்சு வாங்கிப் போனது. அவள் அழுவதை அவனால் தாங்கி கொள்ள முடியாது என்பது போல்தான், அவளுக்கு உடலில் ஏதும் சிறு வேதனை ஏற்பட்டால் கூட, உடனே டென்ஷனாகி விடுவான் ஜேம்ஸ். பிறகு கோதை தான் அதற்கும் அவனை அமைதிப் படுத்த வேண்டும். மனைவியின் சிறு மாற்றத்தை கூட சட்டென்று கண்டு கொண்டு விடும் ஜேம்ஸுக்கு, பிஸிநெஸ்ஸில் இருந்த டென்ஷனும், அவள் அதை மறைத்த விதமும் அவளது நிலையை அவனுக்கும் காட்டிக் கொடுக்கவேயில்லை.

ஜேம்ஸும் வெளியே சென்றால், சொன்ன நேரத்தை விடவும் தாமதமாக வருவதற்கான காரணம் என்னவென்றால், அவன் வெளியே கோபமடைந்தால் சுற்றுப்புறத்தை மறந்து நிதானம் இழந்து விடுவான். கோதை பக்கத்தில் இருந்தாலாவது அவனை அவனது அந்த நிலையை மாற்றி விடுவாள். ஆனால் அவள் அந்த நேரத்தில் அறைக்குள் அடைந்து கொண்டு தனிமைகீதம் வாசித்துக் கொண்டு இருப்பாளே, அதனால் தான் ஜேம்ஸ் தன்னையும் தன் கோபத்தையும் கன்ரோல் செய்து அறைக்கு வருவதற்குள் தாமதமாகி விடுகிறது.

இன்றும் அப்படி தான் வெளியே போனவனை, லாரன்ஸின் கையாள் ஒருவன் கோபமாக்கி விட, அதன் விளைவு கையாளுக்கு மூக்கு உடைந்து போனது. ஜேம்ஸ் அதிவேகமாக காரை ஓட்டிக் கொண்டு போய் கடற்கரையில் இறங்கி, கடலில் போர்ட்டில் ஏறி தன் கோபம் தீர பயணம் செய்யத் தொடங்கி விட்டிருந்தான்.

கடற் காற்று முகத்தில் வீச, சினம் கொஞ்சம் குறைவது போல இருந்தது. அந்த நேரத்தில் மனைவியின் அருகாமை வேண்டும் என மனம் ஏங்க தொடங்க, அடுத்த நொடியே அவளிடம் போக விரைந்தான்.

……………..

குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த தங்கள் தலைவனேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள் லாரன்ஸின் கையாள்கள்.

“ஏன்டா டேய்..”

“சொல்லுங்கோ தலைவரே..”

“இப்போ எல்லாம் பீட்டர்ல ஒரு மாற்றம் தெரியுது.. கவனிச்சு இருக்கிறியளோ..”

“ஓம் தலைவர்.. புதுசா கலியாணம் ஆகி இருக்கு..”

“பொண்டாட்டில அவ்வளவு பாசம் வைச்சிக்கான் போலயே..”

“ஓம் தலைவர்..”

“அதெல்லாம் சரி அந்த பொண்ணுக்கு.. நிஜமாவே பீட்டரோட இரகசியம் தெரியாதோ..”

“தெரியாது தலைவரே..”

“தெரிஞ்சால் என்னாகும்..”

“தெரிஞ்சால் விட்டிட்டு போயிடும் எண்டு நினைக்கிறன்..”

“அப்போ தெரிய வையுங்கடா..”

“அது தான் கொஞ்சம் சிரமம் தலைவரே.. அந்த பிள்ளையை விடுதியை விட்டு வெளியால பாக்கவே முடியிறதில்லை.. அப்புடியே பாத்தாலும் பீட்டர் பக்கத்துலயே இருப்பாரு..”

“ஏதாவது செய்து.. பீட்டர் பத்தி தெரிய வையுங்கடா.. உங்களுக்கு ரெண்டு நாள் தான் டைம்..”
என சொல்லி விட்டு லாரன்ஸ் போய் விட, மற்றவர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டு நின்றார்கள்.

அவர்களுக்கு ஜேம்ஸ்பீட்டரின் ஆவேசமும் ஆக்ரோஷமும் நன்றாகவே தெரியும். அதனால் அவனின் மனைவியை நெருங்க பயம் கொண்டார்கள். வேறு வழியில் தான் அவளுக்கு தெரிய வைக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்து இருந்ததால், இன்று ஜேம்ஸ் வெளியே போவதை கவனித்து, லாரன்ஸின் கையாளில் ஒருவன் அவனை கோபப் படுத்தி திசை திருப்பி விட, ஜேம்ஸும் கடலில் போர்ட்டில் பயணம் செய்து கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் கோதையின் ஃபோன் நம்பரை வெகு சிரமப்பட்டு ஒருவன் கைப்பற்றியிருக்க, அறையில் அடைந்து கிடந்து அழுது கொண்டிருந்த கோதையின் ஃபோன் அலறியது.

அவளோ அதை உணரும் நிலையில் இல்லை. இதுவே ஊரில் இருந்தால் இப்படி அறைக்குள் அடைந்து கிடைக்கத் தேவையில்லை. காலாற நடக்கலாம், மற்றவர்களோடு அரட்டை அடிக்கலாம், அப்படியே அந்த மரக் குடிலுக்குப் போய் இயற்கையை இரசிக்கலாம் என யோசனை செய்து கொண்டு இருந்தவளின் கவனத்தை வெகு நேரத்தின் பின்னரே ஃபோன் சத்தம் தன் பக்கம் திருப்பியது.

முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, கணவனாக இருக்குமோ என்கிற ஆவலில், ஃபோனை எடுத்துக் காதில் வைத்தவளுக்கு எதிரே கேட்ட வேற்று ஆணின் குரல் எரிச்சலைக் கொடுத்தது. இருந்தாலும் என்ன விசயம் என்பதை காது கொடுத்து கேட்டாள்.

“ஜேம்ஸ்பீட்டரோட மனைவி பூங்கோதையா..”

“ஓம் நீங்கள்..”

“நான்.. அது முக்கியம் இல்லை.. உங்க கிட்டே ஒரு முக்கியமான விசயம் சொல்லணுமே..”

“என்ன விசயம்..”

“உங்க கணவர் பத்தி உங்களுக்கு தெரியாத ஒரு விசயம்..”

“இஞ்சை பாருங்கோ.. எதுவா இருந்தாலும் சுத்தி வளைக்காமல் டக்கெண்டு சொல்லுங்கோ.. நீங்கள் ஒவ்வொரு வரியா சொல்லிக் கொண்டு இருக்கிறதை கேக்க எனக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை..”

“சரி நான் விசயத்துக்கே வாரன்..”

“அதை தான் நானும் சொல்லுறன்.. விஷயத்துக்கு வாங்கோ..”

“உங்கடை கணவர்.. போதைப் பொருட்கள் கடத்துற பிஸிநெஸ்ஸில் கொடி கட்டி பறக்கிற ஒரு ஜாம்பவான்.. இதை உங்களுக்கு சொல்லாமல் மறைச்சு செய்யிறார்..”

“என்ன உளறுறியள்..”

“நான் உளறேல்லை.. இது தான் உண்மை..”

“நீங்கள் சொல்லுற லூசுக் கதையைக் கேட்டுக் கொண்டு நிக்க எனக்கு நேரம் இல்லை.. நான் ஃபோனை வைக்கிறன் போய் உருப்படியா வேலை ஏதும் இருந்தால் பாருங்கோ..”

“ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்.. ஆதாரம் உங்கடை வாட்சாப்புக்கு அனுப்பி இருக்கிறன் பாருங்கோ.. பிறகு உண்மை தெரியும் உங்களுக்கு..”
என்றபடி எதிர்முனையில் ஃபோன் வைக்கப் பட்டு விட்டது.

கோதையோ ஃபோனை தூக்கி மெத்தையில் போட்டு விட்டு விழுந்து படுத்து விட்டாள். இப்போது தனக்கு சொல்லப் பட்டதை அவள் துளி கூட நம்பவில்லை. அந்தளவுக்கு அவளுக்கு உடல் அசதியாக இருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!