குறிஞ்சி மலர்.. 48
கோதை அசதியோடு படுத்திருந்த அந்த நேரம் பார்த்து வியாகேசின் அழைப்பு வந்தது.
திரையில் தெரிந்த அவரின் சிரித்த முகத்தை பார்த்ததும் கொஞ்சம் உற்சாகம் வரவே, வேகமாக அவரது அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் கோதை. ஆனாலும் மனதோடு லேசான பாரம் இருந்தது.
“என்ன பிள்ளை.. என்ன செய்றாய்.. என்ன சாப்பிட்டனீ.. ரெண்டு மூண்டு தரம் ஃபோன் எடுத்தன்.. நீ திரும்பி எடுக்கவே இல்லையே..”
“……………”
“பீட்டர் எங்க பிள்ளை.. ரெண்டு பேரும் ஊரெல்லாம் சுத்தி பாக்குறியளோ..”
“இல்லையப்பா..”
“ஏன் பிள்ளை.. ஏதும் சண்டையோ..”
“சண்டை பிடிச்சாலாவது பொழுது அது பாட்டுக்கு போகுமப்பா.. இந்த மனுஷன் எங்கையோ பிஸிநெஸ் வேலை எண்டு சொல்லிப் போட்டு போயிட்டுது.. ஆளை இன்னும் காணேல்லை..”
“வந்திடுவானம்மா..”
“வந்திடுவான் தானப்பா.. ஆனா எப்ப எண்டு தான் தெரியேல்லை.. எனக்கு வேறை போரடிக்குது.. உங்க இருந்தாலாவது இவர் எப்ப வந்தாலும் போனாலும் பேச்சுத் துணைக்கு நீங்கள் இருக்கிறியள்.. ஆனா இங்க அப்புடி இல்லையே.. ஒரே போரடிக்குது..”
“ம்ம் புரியுது பிள்ளை.. இன்னும் ஒரு மாதம் தானே.. டக்கெண்டு போயிடும்..”
“ஐயோ இன்னும் ஒரு மாதம் எண்டு நினைக்கவே ஒரே மலைப்பா கிடக்குது.. எங்கையாவது காத்து வாக்கில காலாற நடக்கலாம் எண்டாலும் அதுக்கும் இந்த மனுஷன் விடாது..”
“எல்லாம் உன் மேல இருக்கிற அக்கறை தானே பிள்ளை..”
“நானும் இல்லை எண்டு சொல்லேலையே அப்பா.. எனக்கு தான் இதை தாங்க முடியேல்லை.. மூச்சு முட்டுது.. இண்டைக்கு பாருங்கோ.. இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள ஆள் வராட்டிக்கு நான் வெளியால கடற்கரைப் பக்கம் நடக்க போயிடுவன்..”
“ஐயோ அவன் வந்து திட்டுவானேம்மா..”
“திட்டிக் கொண்டாச்சும் எனக்கு பக்கத்துல இருக்கட்டும்.. சரியப்பா நான் பிறகு கதைக்கிறன்..”
என்றபடி ஃபோனை தூக்கி போட்டு விட்டு அடுத்த பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள் கோதை. உடல் அசதியில் தொடர்ந்து பேசக் கூட முடியவில்லை அவளுக்கு.
கோதை உடல் அசதியில் தூங்க முயற்சி செய்ய, அவளது ஃபோனில் தொடர்ந்து மெசேஜ் வந்ததற்கான சத்தம் கேட்கவே, மெல்ல எட்டி அதை எடுத்து என்னவென பார்த்தாள்.
வாட்சாப்பில் நிறைய படங்களும் சில வீடியோக்களும் வந்திருந்தன. வேண்டா வெறுப்பாக அதை தட்டிப் பார்த்தவளுக்கு லேசாக தலை கிறுகிறுத்தது.
அனைத்து படங்களிலும் ஜேம்ஸும், முகத்தை மறைத்தபடி வேறு யார் யாரோ நின்றிருந்தார்கள். போதாக்குறைக்கு போதைப்பொருள் நிறைய படத்தில் தெரிந்தன. வீடியோவை பற்றி சொல்லவே தேவையில்லை. கையில் பெரிய துப்பாக்கியோடு சிங்கம் போல நின்றிருந்த கணவனை பார்க்க கோதைக்கு பயத்தில் வியர்த்துக் கொட்டியது.
அவளது விழிகள் பின்னணியில் கிடந்த போதைப் பொருட்களை கவனிக்கவில்லை. கவனித்தாலும் அது பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரிந்திருக்காது. அவளுக்கு தெரிந்தது எல்லாம் அவன் கையில் வைத்திருந்த துப்பாக்கியும், அதைக் கொண்டு இருவரை சுட்டதும் தான்.
கைகள் நடுங்க, உடல் வியர்க்க தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே உறைந்து போய் அமர்ந்து விட்டாள் கோதை.
கோதைக்கு இரத்தம், கத்தி, துப்பாக்கி என்றாலே ஆகாது. பயத்தில் உறைந்து போய் மயங்கி விடுவாள். இப்போதும் அதே நிலை தான், அதிலும் அவனது நேசம் மிக்க கணவனின் கையில் துப்பாக்கியை பார்த்ததும் அவளுக்கு உயிரே பதறி விட்டது.
இத்தனை நாளும் ஜேம்ஸ் பொருட்களை தூக்கியடித்து தான் அவள் பார்த்திருக்கிறாள். அது கூட ஆரம்பத்தில் பயத்தைக் கொடுத்தாலும் பிறகு அவளுக்குப் பழகிப் போய் விட்டது.
ஆனால் இப்படி கனரக துப்பாக்கியோடு, எதிரில் நிற்பவனது இரத்தம் குடிக்கும் அசுரனாக அவள் அவனைப் பார்த்ததேயில்லை. அதைப் பார்த்த போது அவள் அவளாகவே இல்லை. பயத்தில் முகம் வெளிறிப் போயிருந்தது.
கைகள் நடுங்க மீண்டும் மீண்டும் ஜேம்ஸ் அதிரடியாக பெரிய துப்பாக்கியோடும், வேறு ஆயுதங்களோடும் இருக்கும் அந்த வீடியோவைப் பார்த்தவளுக்கு உலகமே சுழல்வது போல இருந்தது.
தட்டுத்தடுமாறி வியாகேசுக்கு மீண்டும் அழைத்தவளுக்கு, நெஞ்சின் மேல் ஏதோ கனமாக அழுந்துவது போன்றதொரு உணர்வு வரவே, நெஞ்சை அழுத்தி வைத்துக் கொண்டாள்.
இப்போது தானே பேசினாள் அதற்குள் என்ன விசயமாக இருக்கும். ஒருவேளை ஜேம்ஸ் வந்து விட்டானோ அவனைத் திட்டிக் கொண்டே என்னிடம் புகார் சொல்லப் போகிறாளோ என்ற எண்ணத்தில் அவளது அழைப்பை காதில் வைத்தார் வியாகேசு.
“அப்பா..”
“என்னம்மா.. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்குது..”
“அப்பா உங்களை ஒண்டு கேப்பன்.. என் மேல சத்தியமா உண்மையைச் சொல்லோணும்..”
“என்ன பிள்ளை நீ.. சத்தியம் அது இதெண்டு கொண்டு.. நீ கேட்டால் நான் எனக்குத் தெரிஞ்சதை சொல்லீட்டு போகப் போறன்..”
“உங்களுக்கு எவ்வளவு காலமா என்ரை வீட்டுக்காரரை தெரியும்..”
“அவன் பிறந்ததுல இருந்தே தெரியும் பிள்ளை..”
“அப்போ அவரிந்தை வரலாறு சரித்திரம் எல்லாம் உங்களுக்கு தெரியும் அப்புடி தானேப்பா..”
“என்ன பிள்ளை என்ன நடந்தது..”
அப்பா அவரு.. துவக்கு எல்லாம் பாவிக்கிறவரோ.. அதுக்கு லைசன்ஸ் யாரு குடுத்தது.. அவரிந்தை சில வீடியோஸ் பாத்தன் அதுல பெரிய பெரிய துவக்கோட நிக்கிறார்.. பாக்கவே பயமா கிடக்கு.. உங்களுக்கு இதைப் பத்தி எந்தளவுக்கு தெரியும்..”
“அது பிள்ளை..”
“நீங்கள் தயங்கிறதை பாத்தால் உங்களுக்கு எல்லாம் தெரியும் போல.. அப்புடியோ அப்பா.. கொஞ்சம் முதல் ஆரவோ ஒருத்தன் ஒரு நம்பர்ல இருந்து எடுத்து.. உன்ரை புருஷனை பத்தி உனக்கு தெரியாத ஒரு விசியம் எண்டு சொல்லி.. அவரு போதைப் பொருள் கடத்துறதுல பெரிய மன்னன் அப்புடி இப்புடினு சொல்லுறான்.. அதுக்கு பிறகு ஏதவோ ஒரு பிரைவைட் நம்பர்ல இருந்து நிறைய படங்களும் வீடியோஸும் வந்த.. அதுல முழுக்க அவர் தான் கையில ஆயுதங்களோட நிக்கிறார்.. அதெல்லாம் உண்மையோ..”
“பிள்ளை பக்கத்துல பீட்டர் நிக்கிறானோ..”
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோப்பா..”
“பிள்ளை.. உந்த விசியத்தை பத்தி நீ உன்ரை புருஷனிட்டை தான் கேக்கோணும்.. உதுக்கு அவன் தான் பதில் சொல்லோணும்..”
“அப்போ நான் பாத்த வீடியோஸ்ல இருக்கிறது எல்லாமே உண்மை அப்புடி தானேப்பா..”
“கோதையம்மா.. என்னைய சங்கடத்துக்கு ஆளாக்காத..”
என அவர் சொல்லி முடிப்பதற்குள் கோதை ஃபோனை கட் செய்திருந்தாள்.
இந்தப் பக்கம் வியாகேசுக்கு ஏதோ போலவிருந்தது. ஏதோ இப்போது தானே பீட்டர் சந்தோசமாக நிம்மதியாக இருப்பது போல தெரிந்தது, அதற்குள் இப்படி ஒரு புது பிரச்சினை கிளம்ப வேண்டுமா. பீட்டரிடம் இந்த பிஸிநெஸ் எல்லாம் உனக்கு தேவையா உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை இதை விட்டுத் தள்ளு என மன்றாடி வேண்டிக் கொண்டேனே, லாரன்ஸ் விட்ட சவாலுக்கு பதிலடி கொடுப்பதற்கு, இதில் கொஞ்சம் கூட யோசியாமல் குதித்து விட்டானே, இப்போது கோதையை எப்படி சமாதானப் படுத்துவது என வியாகேசின் மனது ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.
மனசு தவிக்க கோதைக்கு மீண்டும் அழைத்தார் வியாகேசு, அவள் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்திருந்தாள்.
தலையில் கை வைத்துக் கொண்டு வியாகேசு கீழே இருந்து விட, அவரைத் தேடிக் கொண்டு வந்தான் வஞ்சி.
“என்ன பெரிசு.. என்ன நடந்த எந்தக் கப்பல் கவிண்டு போச்செண்டு தலையில கை வைச்சுக் கொண்டு இருக்கிறியள்..”
“டேய் பெரிய பிரச்சினை வரும் போல கிடக்கடா..”
“என்ன பிரச்சினை.. தெளிவா சொல்லுங்கோ..”
“கோதைக்கு இண்டைக்கு ஆரவோ குறுக்காலபோவான் ஃபோன் எடுத்து.. எங்கடை பீட்டர் போதை கடத்துறதுல மன்னன் அது இதெண்டு சொல்லீட்டு.. போதாக்குறைக்கு வீடியோஸ் வேறை அனுப்பி வைச்சிக்காணாமடா..”
“ஐயோ என்ன சொல்லுறியள்..”
“ஓமடா.. பிள்ளை இப்ப எனக்கு எடுத்தவள்.. ஆளிந்தை குரலே சரியில்லையடா.. என்னட்டை அதைப் பத்தி கேட்டவள்.. நான் ஒண்டுமே சொல்லேல்லை.. ஆளுக்கு கோபம் எண்டு நினைக்கிறன்.. திரும்ப எடுக்க எடுக்க எடுக்கிறாளே இல்லை..”
“அப்ப பாஸுக்கு ஒருக்கா எடுத்துப் பாருங்கோவன்..”
“அங்க பிரச்சினை எந்த லெவலில இருக்கெண்டு தெரியாமல் அவனுக்கு எடுத்துப் பாக்கவும் பயமாக் கிடக்கு..”
“பயந்து கொண்டே இருந்தால் எப்புடி.. ஃபோனை இப்புடி தாங்கோ..”
என்று கொண்டு, வியாகேசின் ஃபோனை வாங்கி, ஜேம்ஸ்பீட்டருக்கு அழைப்பு கொடுத்தான் வஞ்சி. அவனது ஃபோனும் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.
“டேய் இப்ப என்னடா செய்யிறது.. ரெண்டுமே சுவிச்சாப் செஞ்சு வைச்சிக்குதுகள்.. ஏதும் பெரிசா சண்டை போடுதுகளோ.. ரெண்டுந்தை குணத்துக்கும் அடுத்த உலகப் போரே அங்க நடந்தாலும் சொல்லுறதுக்கில்லை..”
“சரி சரி டென்ஷன் ஆகாதேங்கோ.. ஒருமணி நேரம் கழிச்சு திரும்ப எடுத்துப் பாப்பம்..”
“அதுவரை என்னடா செய்யிறது.. என்னால வேறை பொறுமையா இருக்க ஏலாதடா..”
“பொறுமையா இருந்து தான் ஆகோணும் பெரிசு.. இப்ப இந்த நேரத்தில நாங்களும் இடைஞ்சல் குடுக்க கூடாது.. கொஞ்சம் நேரம் போகட்டும்..”
“சரியடா.. இருந்தாலும் உள்ளுக்க உதறுது..”
“இஞ்சை பாரு பெரிசு.. இதால அவை பிரிஞ்சிடுவினமோ எண்டு வீணா பயப்பிடாதேங்கோ.. எங்கடை பாஸ் எந்த ஒரு சூழ்நிலையிலையும் தங்கச்சியை கை விடவே மாட்டார்..”
“அது தெரியும் தான்.. ஆனா கோதையை நினைக்கத் தான் உதறுது.. சரி பாப்பம் நல்லது நினைப்பம் நல்லதே நடக்கும்..”
என வியாகேசு தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார்.
…………….
அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ஜேம்ஸ்பீட்டரின் நீல விழிகள் மனைவியைத் தேடின. அவன் மனைவி மெத்தையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
சொன்ன நேரத்தை விடவும் தாமதமாக வந்ததற்கு அவள் தன்னை திட்டும் அழகை இரசிக்க அவன் பேராசை கொண்டான்.
அவனுக்கு இப்போதெல்லாம் தன்னை நினைக்கவே பெரிய ஆச்சரியமாக இருக்கும். அவனுக்கு பெண்களின் வாசமே பிடிக்காது, அவர்கள் அவனோடு பேச்சுக் கொடுத்தாலே கொலைவெறி ஆகி விடுவான். அவர்களைப் பார்த்தாலே அவனுக்கு ஒவ்வாமை வந்து விடும். அதனால் தான் அவனது வீட்டில் எப்போதும் ஆண் பணியாளர்கள் மட்டுமே இருப்பார்கள்.
அப்படியிருந்தவனது பாலைவனத்து வாழ்க்கைக்குள் தான் பூந்தென்றலாக, பூந்தூறலாக வந்து சேர்ந்தாள் கோதை. அவனை அறியாமலேயே மெல்ல மெல்ல அவளது குணத்தில் ஈர்க்கப் பட்டு, அவளின் பக்கம் அவனது மனம் சாய்ந்து விட, அவனது உயிராகிப் போனாள் கோதை.
எத்தனையோ அழகழகான பெண்கள் அவனுக்கு வலை போட்டு, பின்னர் அவனது ஆக்ரோஷமான செயல் கண்டு பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடி இருக்கிறார்கள்.
இவனது குணம் அறிந்த பின்னரும் கூட, அவனோடு தைரியமாகப் பேசிய ஒரே பெண் கோதை தான். அவளது செயல்களால் அவளைப் பார்க்க பார்க்க அவளுடைய அழகு அவனுக்கும் கூடிக் கொண்டு போவதைப் போலவே இருக்கும், மனைவியை தினம் தினம் இரசித்தான்.
பெண்களின் வாசமே தனக்கு ஒவ்வாது என நினைத்திருந்த ஜேம்ஸுக்கு, பூங்கோதை சுவாசமாகிப் போனாள்.
எவ்வளவு கோபத்தில் கட்டுப்பாடு இழந்தாலும் கோதை விஷயத்தில் அவன் என்றுமே நிதானம் தவறியதில்லை.
சூரியன் மெல்ல மெல்ல மறைவதற்கு தயாராகிக் கொண்டிருந்ததால், அவனது மாலை நேர மஞ்சள் கதிர்கள் மெத்தையில் படுத்திருந்தவளது முகத்தில் மஞ்சள் வண்ணம் பூசி விட்டது போல, அவளது முகத்தில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது.
உதடுகளை இறுக மூடி புருவத்தை நெரித்துக் கொண்டு படுத்திருந்த மனைவியின் பக்கம் மெல்ல அமர்ந்து கொண்ட ஜேம்ஸ், இறுக்கமாக மூடியிருந்த அவளது இதழ்களை மெல்ல வருடி, அவளது புருவங்களை நீவி, கூந்தலை கோதி விட்டான்.
பெண் வாசத்தை வெறுத்தவனுக்கு அவனவளின் வாசம் மட்டுமே பூவாசம், சுவாசம்.