குறிஞ்சி மலர்.. 49
கண்களை மூடிப் படுத்திருந்த கோதைக்கு, கணவனின் ஸ்பரிசத்தில் தூக்கம் கலையவே, திறப்பேனா எனச் சண்டித்தனம் செய்த விழிகளை சிரமப் பட்டுத் திறந்து பார்த்தாள்.
எதிரே அமர்ந்திருந்த கணவனைப் பார்த்ததும், அதுவரை லேசாகப் பின்னுக்குப் போயிருந்த பயம் வேகமாக எட்டிப் பார்க்கவே, உடல் நடுங்க பதறியடித்து எழுந்து சுவரோடு ஒட்டிக் கொண்டாள் கோதை.
“என்னாச்சு பேபீ.. பயந்திட்டியா நான் தான்டி..”
என்றபடி அவன் அவளை நெருங்க, கண்களை இறுக மூடிக் கொண்டு மீண்டும் சுவரோடு நன்றாக ஒட்டிக் கொண்டவளின் செய்கை ஜேம்ஸுக்கு விசித்திரமாக இருந்தது.
கோதைக்கு ஜேம்ஸின் முகத்தை பார்க்கவே பயமாக இருந்தது. அவன் பக்கத்தில் வந்தாலோ அவனது முகத்தை பார்த்தாலோ இரத்தமும், துப்பாக்கியும், வெறி கொண்ட அவனது முகமும் கண்முன்னே வந்து அவளைப் பயம் கொள்ளச் செய்தது.
கோதை கலகலப்பான பெண் என்றாலும் கூட அவளுக்கு இருளச்சம் மற்றும் இரத்தத்தை பார்த்தாலோ வன்முறையை பார்த்தாலோ ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் இருந்தன.
அவள் ஜீவோதயத்திற்குள் வந்த வேளை ஜேம்ஸ் அவ்வளவாக தன் ஆக்ரோஷத்தை வெளிப் படுத்தியிருக்கவில்லை. கோபம் வந்தால் பொருட்களை தூக்கியடிப்பான். தன்னைக் காயப் படுத்திக் கொள்வான். இவை பாரதூரமாக போகாமல் அளவாக இருந்ததால் தான் கோதை, ஜேம்ஸை நெருங்கி தைரியமாக பேசியிருந்தாள்.
ஜேம்ஸ் ஆரம்பத்திலேயே தன் ஆக்ரோஷத்தை முழு அளவோடு காட்டியிருந்தால், கோதை அவனது திசைப் பக்கமே தலை வைத்துப் படுத்திருக்க மாட்டாள் என்பது தான் உண்மை.
வழமையாக வெளியே போய் விட்டு வரும் கணவனின் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பவளுக்கு, இப்போது அவனது வருகையில் உடல் நடுங்குவது தான் அவளாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவனைக் கண்டதுமே பயந்து நடுங்கிய மனதை திடப் படுத்திக் கொண்டு, அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள் கோதை. இதுவரை நாளும் அவன் அவளை அடித்தது இல்லை என்பதே அவளுக்கு கொஞ்சம் பயம் குறைவது போல இருந்தது.
எதுவாக இருந்தாலும் உரியவரிடம் தெளிவாகப் பேசி விட வேண்டும் என்கிற முடிவு அவளின் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் அதை கண்டு கொள்ளும் நிலையில் தான் உரியவன் இருக்கவில்லை.
“ஹேய் பேபீ.. என்னடி உடம்பு இப்பிடி நடுங்குது.. நான் இல்லாத நேரம் நிறைய ஐஸ்கிரீம் குடிச்சியோ..”
என்று கொண்டு மனைவியின் நெற்றியில் கை வைத்து பார்த்தவனுக்கு, அது கொதித்துக் கொண்டு இருப்பதை உணர முடிந்தது.
“பேபீ.. என்னடி இப்புடி கொதிக்குது..”
“உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்..”
“பேசலாம் பேபி.. அதுக்கு முன்னாடி வா ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்..”
“எனக்கு ஒண்டுமில்லை.. நான் உங்களிட்டை இண்டைக்கு கதைச்சே ஆகோணும்..”
“ஒண்ணுமில்லையோ.. எப்புடிக் கொதிக்குது பாரு.. பீவர்னு நினைக்கிறன்.. முதல்ல நீ எழும்பு..”
“முதல்ல நான் கேக்கிற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கோ.. அப்ப தான் நான் எங்கயும் வருவன்..”
“ப்ச்.. இப்ப என்னடீ உனக்கு வேணும்..”
“என்ரை கேள்விக்கு சரியான உண்மையான பதில் வேணும்..”
“சரி.. நீ வா ஹாஸ்பிடல் போய்கிட்டே பேசிக்கலாம்..”
“இல்லை..”
“என்ன இல்லை..”
“இப்ப இங்க எனக்கு பதில் வேணும்..”
“என்னோட பொறுமையை ரொம்ப சோதிக்கிறடி..”
“……………..”
“சரி உடனே மூஞ்சியை தூக்கி வைச்சுக்காத கேட்டுத் தொலை..”
என்று கடுப்பானவன் மீண்டும் அவளுக்கு அருகே அமர்ந்து கொண்டான்.
கேட்கப் படும் கேள்விகளுக்கு நின்று நிதானமாக பதில் சொல்லும் பழக்கம் ஜேம்ஸின் சரித்திரத்திலேயே கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு இத்தனை தூரம் இறங்கி வந்து, அவளது சின்ன சின்ன உணர்வுகளுக்கு கூட மதிப்பு கொடுத்து நடந்து கொள்வது என்பதெல்லாம் அவன் கனவில் கூட காண விரும்பாத ஒரு விடயம்.
அப்படி இருந்த ஜேம்ஸ் தான் இப்போதெல்லாம் கோதை லேசாக முகம் சுருக்கினாலே மனம் நொந்து போகும் அளவுக்கு, காதல் கடலில் தலை குப்புற விழுந்து கிடக்கிறான். அவனை கோதையின் கோபம் மட்டுமே பாதிக்கிறது. ஜேம்ஸுக்கு கோபம் வந்தால் அவனை சமாதானம் செய்யும் காலம் போய், கோதைக்கு கோபம் வந்தால் அவளை சமாதானம் செய்யும் அளவுக்கு ஜேம்ஸுக்கு கோதை அதி முக்கியமானவளாகிப் போனாள்.
“சரி கேளுடி என்ன கேட்கணும்..”
“…………”
“பேபீ.. கேள்வி கேட்கப் போறேனு சொல்லீட்டு ஏன்டி என்னையே முறைச்சிட்டு இருக்கே..”
“நீங்கள் என்னைய ஏன் கலியாணம் செஞ்சனியள்..”
“உன்னைய பிடிச்சிருந்திச்சு.. உன் கூட வாழ ஆசைப் பட்டேன்.. சோ கலியாணம் செஞ்சிக்கிட்டேன்..”
“பொய்..”
“என்ன பொய்..”
“நீங்கள் என்னைய கலியாணம் செஞ்ச நோக்கமே வேறை..”
“புரியல்லை..”
“நீங்கள் என்ன செஞ்சாலும் அதை தட்டி கேக்காமல்.. எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டு போற ஒரு அடிமை உங்களுக்கு பொண்டாட்டியா வேணும்.. அதுகும் அவளுக்கு என்ன நடந்தாலும் கேக்க ஆளில்லாத அளவுக்கு அவள் இருக்கோணும் எண்டுறது தான் உங்களிந்தை எண்ணம்.. அதுக்கு தோதான மாதிரி நான் வந்தன்.. அது தான் கலியாணம் செஞ்சிட்டியள்..”
“என்னடி உளர்ராய்..”
“நான் உளறுரனா.. போதை பாவிச்சவையள் தான் உளறுவினம்..”
“இப்ப உனக்கு என்னடி பிரச்சினை.. என்ன ஏதேதோ சொல்லுறாய்.. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு..”
“நீங்கள் போதை மருந்து யூஸ் செய்றியளோ..”
“நான் டிரக்ஸ் யூஸ் பண்ணலடி.. அதை சரக்கா வேறை இடத்துக்கு சப்ளே பண்றன்..”
“ஐயோ ஐயோ கடவுளே.. எவ்வளவு கேவலமான தொழில் செய்யிறியள்.. அதை மறைச்சு என்னைய கலியாணம் கட்டி.. உங்களை எவ்வளவு நல்லவர் எண்டு நம்பினான்.. கடைசியில நீங்கள் இவ்வளவு கேவலமான வேலையோ செய்யோணும்.. அதைப் பத்தி என்னட்டை சொல்லக் கூட இல்லையே..”
“தேவையில்லாத விசியங்களை ஏன்டி நான் உங்கிட்டே சொல்லோணும்.. நான் உங்கிட்ட எதையும் மறைக்க கூட இல்லை.. இன்னும் சொல்ல போனால் நான் என்னென்ன துறையில என்னென்ன பிஸிநெஸ் செய்யிறேன்னே உனக்கு தெரியாது.. நீயும் தெரிஞ்சிக்க ஆசைப் படேல்லை.. நானும் என்னை பத்தி தம்பட்டம் அடிக்க விரும்பேல்லை..”
“அப்போ அந்த போதைக்கடத்துற வேலையை பெருமையா தான் நினைக்கிறியள் அப்புடி தானே..”
“பேபீ.. நீ கேட்ட கேள்விக்கு நான் இவ்வளவு தூரம் பொறுமையா பதில் சொன்னதே பெரிய விசியம்.. இதை பத்தி இதோட விட்ரு..”
“எப்புடி விட.. சின்ன விசியமா இது.. இல்லாட்டிக்கு நான் தெருவுல போறவள் வாரவளா உங்களை எக் கேடோ கெட்டுப் போங்கோண்டு விட..”
“ப்ச்.. பேபீ பிளீஸ்.. இந்த பேச்சு வேண்டாம்.. இப்போ நீ ஹாஸ்பிடல்கு கிளம்பு..”
“இல்லை.. மாட்டன்.. எனக்கு ரெண்டில ஒண்டு தெரிஞ்சாகோணும்..”
“இப்ப என்னடி தெரியோணும் உனக்கு..”
“இது நாள் வரை நீங்கள் எத்தினை பேரை கொலை செய்திருப்பியள்..”
“தெரியலடி..”
“தெரியேல்லையோ.. ஐயோ கடவுளே.. நீங்கள் இவ்வளவு மோசமானவரா.. நீங்கள் செஞ்ச பாவம் இப்ப செஞ்சு கொண்டு இருக்கிற பாவம் எல்லாம் நம்ம குழந்தையைத் தானுங்கோ வந்து அடிக்கும்.. அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டன் எண்டுது..”
“அது குழந்தை பிறந்த பிறகு யோசிக்கலாம்.. நீ இப்புடி தொட்டதுக்கு எல்லாம் என் கூட சண்டை போட்டால் எப்புடிடி நமக்கு சீக்கிரமா குழந்தை பிறக்கும்..”
“டேய் கொலைகாரப் பாவி.. நான் என்ன கதைச்சுக் கொண்டு இருக்கிறன்.. நீ என்ன கதைக்கிறாய்..”
“பேபீ.. கண்டதையும் பத்தி பேசி நேரத்தை வீணடிக்காமல்.. சீக்கிரமா எனக்கு குழந்தை பெத்துக் குடுக்கிற வழியைப் பாரு..”
“உனக்கு குழந்தையே பெத்துக் குடுக்க மாட்டன் போடா கொலைகாரப் பாவி..”
என்று கொண்டு அவனின் நெஞ்சில் குத்தியவளின் கையை இறுகப் பற்றிக் கொண்டு
“பேபீ.. நான் ரொம்ப பொறுமைசாலி கிடையாது.. உங்கிட்டே மட்டும் தான்டி நான் இவ்வளவு தூரம் இறங்கி பொறுமையா பேசிட்டு இருக்கேன்.. என்னோட பிஸிநெஸ்ல யாருமே இதுவரை தலையிட்டதில்லை.. அதுக்கு நான் விட்டதுமில்லை.. இந்த நிமிஷத்தோட என் பிஸிநெஸ் பத்தி நீ கதைக்கவோ நினைக்கவோ கூடாது.. எல்லா நேரமும் நான் ஒரு மாதிரி இருக்க மாட்டேன்..”
என குரலை உயர்த்தாமல், நிதானமாக அழுத்தமாக சொன்னவனையே பார்த்திருந்தவளுக்கு, அவனது அந்த பழுப்பு விழிகள் பயத்தைக் கொடுக்க வார்த்தையற்று அப்படியே அமர்ந்து விட்டாள்.
இவன் நல்லவனா கெட்டவனா இவனோடு குடும்பம் நடத்தலாமா வேண்டாமா. உடலையும் மனதையும் அவனது காலடியில் முழு விருப்பத்தோடு ஒப்புக் கொடுத்து, வெகு நாட்கள் ஆன பிறகு இப்படி ஒரு கேள்வி தனக்குள் வரும் அளவுக்கு சூழ்நிலை ஒன்று வந்ததை நினைக்க நினைக்க கோதைக்கு தலை மீண்டும் கிறுகிறுத்தது.
சற்று முன்னால் நடந்த சம்பாஷணை பற்றி ஜேம்ஸ் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அது தான் கோதைக்கு கோபத்தைக் கொடுத்தது.
அப்படியே இருந்தவளின் கன்னம் தட்டி
“வா ஹாஸ்பிடல் போலாம்.. பீவர்னு நினைக்கிறன்..”
என்றவன் அடுத்த கேள்வி ஏதும் இல்லாமல் அவளைத் தூக்கிக் கொண்டு வெளியே விரைந்தான்.
மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அவனுக்கு பதட்டம் ஆகி விட, எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் அவன் வைத்தியசாலை நோக்கி விரைய, எங்கே எங்கே என கண்கொத்திப் பாம்பாக அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்த லாரன்ஸின் கையாட்கள் அவனது வாகனத்தை தொடர்ந்தார்கள்.
கண்களை மூடி இருக்கையில் சாய்ந்திருந்த மனைவியை அடிக்கடி கவனித்தவாறே வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த ஜேம்ஸின் விழிகள், தன் வாகனத்துக்கு பின்னால் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்த அந்த வாகனத்தை அப்போது தான் கவனித்தது.
ஒற்றைப் பார்வையிலேயே வருபவர்கள் யார் அவர்களின் நோக்கம் என்ன என்பதைக் கண்டு கொண்ட ஜேம்ஸ். பக்கத்து இருக்கையில் இருந்த மனைவியை இழுத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான். அவன் மீது இருந்த கோபத்தில் விலகப் போன கோதை, அவனது பார்வையில் அவனையே இறுகக் கட்டிக் கொண்டாள்.
மனைவியின் செய்கையில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன்,
ஆள் நடமாட்டம் குறைவான இடம் நோக்கி வாகனத்தை வேகமாக செலுத்தினான்.
வாகனத்தின் அதி வேகத்தில் ஏற்கனவே இருந்த உடல் அசதியோடு, கணவனைப் பற்றி தெரிந்த உண்மைகள் கொடுத்த மன அசதியும் சேர்ந்து இப்போது இருந்த சூழ்நிலையும் அவளுக்கு மறுபடி நடுக்கத்தை கொடுக்க, கணவனை இறுக்க கட்டி முகத்தை அவனது தோளில் புதைத்துக் கொண்டாள் கோதை.
மனைவியின் அணைப்பு கொடுத்த உற்சாகத்தில், ஜேம்ஸின் கைகளில் கார் சீறிப் பாய்ந்து வேகம் எடுத்தது.
சன நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து, ஜேம்ஸ் தன் காரை சட்டென்று யூட்டேர்ன் அடித்து திருப்ப, அதை எதிர்பார்க்காத பின்னால் வந்த வாகனங்கள் இரண்டும் முன்னால் கிடந்த மின்கம்பத்தில் மோதி நின்றன.
காரில் இருந்த கண்ணாடி வழியே அதைப் பார்த்து சிரித்த ஜேம்ஸ், இப்போது வண்டியின் வேகத்தை குறைத்து ஓட்ட, கோதையோ வெளியே வாகனங்கள் மோதிக் கொண்ட சத்தத்தில் காதுகளை இறுக பொத்திக் கொள்ள, அவளை ஒற்றைக் கையில் அணைத்துக் கொண்டான் ஜேம்ஸ்.
அதற்குள் பின்னால் மின் கம்பத்தோடு மோதிக் கொண்ட வாகனங்கள் மீண்டும் திருப்பிக் கொண்டு வந்து ஜேம்ஸின் காரை மறிப்பது போல நிற்க,
“பொண்டாட்டிக்கு முன்னாடி அடி தடி வேண்டாம்னு ஒதுங்கி போனால்.. விடுறீங்களாடா..”
என முணுமுணுத்துக் கொண்ட ஜேம்ஸ், மனைவியை தன்னிடம் இருந்து மென்மையாக விலக்கி அவளது இருக்கையில் அமர்த்தி சீட் பெல்ட் போட்டு விட்டான்.
“பேபீ.. சண்டை பாக்குற ஆர்வத்துல கீழ இறங்கிடாதடி.. அப்புறம் உம்மேல எவனாச்சும் கை வைச்சால் நான் கொலைகாரனா மாறீடுவன்..”
என்று சொல்லி கோதையின் கன்னத்தில் தட்டிக் கொடுத்து விட்டு, ஜேம்ஸ் காரை விட்டு இறங்கினான்.