அசுரனின் குறிஞ்சி மலரே.. 53

4.8
(13)

குறிஞ்சி மலர்.. 53

ஜேம்ஸ் சொன்னதை எல்லோரும் திகைப்போடு பார்க்க, அதே திகைப்போடு தான் கோதையும் அவனைப் பார்த்திருந்தாள்.

தில்லையம்பலம் தான் முதலில் சுதாரித்துக் கொண்டு அவனிடம் கேள்விகளை வீசினார்.

“ஏன் ஏன் அப்புடி செய்தனியள்..”

“ஏன்னா.. நான் தான் என்னோட பேபியை விரும்பீட்டனே.. அப்போ அவளைக் கல்யாணம் செய்றது தானே முறை..”

“பேபியா..”

“யெஸ்.. என்னோட பேபி..”
என்று கொண்டு கோதையை மெல்ல தோளோடு அணைத்துக் கொள்ள, ரூபாவும் தில்லையம்பலமும் விக்கித்துப் போய் பார்த்துக் கொண்டு நிற்க, கோதையோ கணவனின் முகத்தையே அண்ணாந்து பார்த்திருந்தாள்.

“அப்போ என்ரை மகளை கலியாணம் செய்ய சம்மதம் எண்டு வாக்கு கொடுத்தியளே.. அது பொய்யா..”

“அது பொய்யில்லை..”

“பொய்யில்லையோ.. எப்புடி உங்களால இப்புடி பேச முடியுது..”

“இதைப் பாருங்க மிஸ்டர் தில்லை.. இந்த ஜேம்ஸ் எப்போவுமே வாக்கு மாற மாட்டான்..”

“அது தான் மாறீட்டியளே..”

“நோ நோ.. நான் என்ன சொன்னேன் உங்கடை மகளை கலியாணம் கட்டிக்க சம்மதம்னு தானே சொன்னேன்..”

“ஓம்..”

“ஆனா எந்த மகள்னு சொல்லலியே..”

“என்ன தம்பி விளையாடுறியளோ.. எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு மகள் தானே..”

“நோ நோ.. என்னோட பேபியை உங்களோட ஒரே மகள்னு சொல்லி தான் எங்கிட்டே அனுப்பினீங்க.. உங்கடை வசதிக்கு அதை நீங்கள் மறந்திருந்தால்.. அதை இந்த இடத்துல பதிவு செஞ்சிருக்கிறன் நினைவு படுத்திக் கொள்ளுங்கோ..”

“அது அது..”

“அது அது தான்.. அப்புறம் இன்னொரு விஷயம் இந்த ஜேம்ஸுக்கு பொண்டாட்டி ஆகிற தகுதி என்னோட பேபிக்கு மட்டும் தான் இருக்கு.. அப்பவும் இப்பவும் எப்பவும் நான் நேசிச்ச நேசிக்கிற நேசிக்கப்போற ஒரே ஆளு என்னோட பேபி மட்டும் தான்.. சும்மா சும்மா அவளைச் சீண்டிப் பாக்கிற வேலை வேண்டாம் சொல்லீட்டன்..”
என முடித்துக் கொண்ட ஜேம்ஸ்
வியாகேசிடம் திரும்பி
“கேசப்பா.. நானும் பேபியும் டயர்டா இருக்கிறோம்.. இந்த இடத்தை கிளியர் ஆக்குங்கோ..”
என்று சொல்லிக் கொண்டே, பக்கத்தில் நின்று தன்னையே கொட்ட கொட்ட பார்த்திருந்த தன் மனைவியை தூக்கிக் கொண்டு தன்னறை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

தில்லையம்பலமும் ரூபாவும் பேயறைந்தது போல அப்படியே நின்றிருந்தனர்.

“என்ன ரெண்டு பேரும் வெளியால போறியளோ.. இல்லாட்டிக்கு தக்க மரியாதை தரவோ..”
என வியாகேசு கேட்க, அவரை முறைத்து விட்டு இருவரும் வெளியேறி இருந்தார்கள்.

அடுத்த அரைமணி நேரத்தில் வெளியே ஒரு ரெஸ்ட்ரோரண்டில் தில்லையம்பலம், ரூபா, அல்போன்ஸ், ஜோசப், மேரி, மாலினி என ஜேம்ஸ் மீது பகை கொண்ட ஒரு கூட்டமே கூடி, அவனுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி அதை நிறைவேற்ற, எப்போதுமே அனைத்தையும் கண்காணிக்கும் ஜேம்ஸ் மனைவியை சமாதானம் செய்வதில் மூழ்கி இருந்ததால் அதை கவனிக்க மறந்தான்.

………………

தங்களது அறைக்குள் வந்ததும், கணவனிடம் இருந்து விடுபட்ட கோதை நேராகச் சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவளுக்கு நிறைய அழ வேண்டும். அது அவளது கணவனின் முன்னால் நடக்கவே நடக்காத விஷயம்.

ஜேம்ஸும் அவளைத் தடுக்கவில்லை. அவனுக்கும் களைப்பாக இருக்கவே அப்படியே மெத்தையில் விழுந்து படுத்துக் கொண்டான்.

குளியலறையினுள் நுழைந்த கோதை, வெளியே சத்தம் கேட்காமல் ரப்பை திறந்து விட்டு, கதவோடு சாய்ந்து அழத் தொடங்கியிருந்தாள்.

அப்படியென்றால் தன்னை விரும்பித் தான் தன் கணவன் திருமணம் செய்திருக்கிறான் என்ற எண்ணமே கோதையைத் திக்குமுக்காட செய்திருந்தது.

அவன் திருமணத்துக்கு முன்னர் கூட, எப்போதுமே அவள் மீது அன்பைத் தான் வெளிப் படுத்திக் கொண்டிருந்திருக்கிறான். அதை தான் புரிந்து கொள்ளவில்லை என்பது இப்போது தான் அவளுக்கே விளங்கியது.

தன்னுடைய வாழ்க்கை திடீரென அர்த்தப் பட்டது போன்றதொரு சந்தோஷம் கோதைக்குள் வந்த அந்த நொடி, பொங்கிப் பொங்கி அழத் தொடங்கினாள்.

மனைவியின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனிக்கும் ஜேம்ஸுக்கு, இப்போது மட்டும் பூட்டிய குளியலறையினுள் அவள் அழுவது தெரியாமல் போகுமா?

அடுத்த நொடியே குளியலறை கதவு வேகமாகத் தட்டப் படவே, முகத்தை நீரால் அடித்துக் கழுவிக் கொண்டு கதவைத் திறந்தாள் கோதை.

கைகளைக் கட்டியபடி ஆராய்ச்சிப் பார்வையால் மனைவியை ஆராய்ந்தவனை நிமிர்ந்து பார்க்கத் திராணியற்று தலை குனிந்து நின்றிருந்தாள் கோதை.

“என்னடியாச்சு..”

“ஒண்டுமில்லை..”

“ஒண்ணுமில்லாமலோ முகம் வீங்கிப் போய்க் கிடக்கு..”

“அதான் ஒண்டுமில்லை எண்டு சொல்லுறன் எல்லே..”

“பேபீ..”

“என்ன..”

“அழுதியாடி..”

“ஓம் எண்டு சொன்னால்.. நாயைக் கழட்டி விட மாட்டியளே..”
எனப் பாவமாகக் கேட்டவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்
“சாரிடி.. நீ அழுதால் எனக்கு கோபம் ஏறுதுடி.. உனக்கு நான் என்ன குறை வைச்சேனு நீ அழுறாய்னு தோணுது..”
எனத் தன் மனதில் உள்ளதை அவளிடம் சொன்னான்.

கணவனின் மார்பில் வாகாக சாய்ந்து கொண்டவளுக்கு அவன் மீது காதல் இன்னும் கூடிப் போனது.

“குறை வைச்சா மட்டும் அழுகை வராதுங்கோ..”

“வேறை..”

“நிறைவா பாத்துக் கொண்டாலும் சந்தோஷத்துல அழுகை வரும்..”

“அப்போ இப்ப அழுதியே அது குறையா நிறையா..”

“என்ரை மூஞ்சியை பாக்கும் போது உங்களுக்கு என்ன தோணுதாம்..”
என கணவனை அண்ணாந்து பார்த்துக் கேட்டவளின், முகவடிவை அளந்தவனுக்கு அவளது விழிகளில் தெரிந்த நிம்மதி அவனுக்கு சொல்லாமல் சொல்லியது அவள் நிறைவாக இருக்கிறாள் என்பதை, மனைவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு
“குறையோ நிறையோ என் பொண்டாட்டி அழக் கூடாது அவ்வளவு தான்..”
என்று அழுத்தமாக சொன்னவனைப் பார்க்க பார்க்க கோதைக்கு பெருமிதமாக இருந்தது.

“ஏனுங்கோ.. நிசமாவே என்னைய பிடிச்சு தான் கலியாணம் செய்தியளோ..”

“ம்ம் யெஸ் பேபீ..”

“ஏன் என்னைப் பிடிச்சுது..”

“இது தான்னு குறிப்பா சொல்லத் தெரியேல்லை.. ஆனாலும் என் கூட தைரியமா பேசின ஒரே பொண்ணு நீ தான்..”

“அப்போ வேறை எவளுமே பேச மாட்டாளுகளோ..”

“மாட்டாளுகளே..”

“சரி.. அப்புறம் உங்களுக்கு என்னைய பிடிக்கும் எண்டு என்கிட்டயே சொல்லி இருக்கலாமே..”

“சொன்னால் என்ன பேபீ செஞ்சிருப்பாய்..”

“தெரில்லைங்க..”

“நான் சொல்லட்டோ..”

“ம்ம்..”

“ராத்திரியோட ராத்திரியா தலைமறைவாகி இருப்பாய்..”

“அதுவும் உண்மை தான்.. அது சரி உங்களுக்கு உங்களை கட்டிக்க எத்தினையோ பொண்ணுங்க கியூவுல நிக்கும் போது.. என்னை ஏன் கட்டிக்கிட்டீங்க..”

“தெரிலைடீ.. எவளாவது பக்கத்துல வந்தாலே கடுப்பாகும்.. ஆனா நீ வந்தா மட்டும் ஏதோ ஒரு பீலாச்சு.. என்னவோ தெரியல்லை உன் கூட வாழ்ந்தால் நான் நிம்மதியா இருப்பேனு தோணிச்சு.. அது தான் தாலியைக் கட்டி கூடவே வைச்சுக்கிட்டேன்..”

“ஒரு வேளை இன்னிக்கு ரூபா வந்து உண்மை சொன்ன பிறகு.. நான் உங்களை விட்டிட்டு போயிருந்தால் என்ன செய்வீங்க..”

“கொலை செஞ்சிருவேன்டி..”

“அவளையா..”

“உன்னை..”

“என்னையா.. கொலைகாரா..”

“இதைப் பாரு பேபீ.. கோபமோ வெறுப்போ எதுவா இருந்தாலும் நீ என் கூட இருந்து தான் அதைக் காட்டிக்கணும்.. இந்த விட்டிட்டு போறது பத்தி கனவுல கூட நினைக்க கூடாது.. எனக்கு கடுப்பாகுது..”
என்று சொன்ன ஜேம்ஸ் கடுப்போடு குளியலறைக்குள் போய் விட, சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தவள் வெளியே வந்தாள்.

வெளியே வஞ்சியும் வியாகேசும் ஏதவோ கதை பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“என்ன ரெண்டு பேரும் நான் இல்லாத நேரத்தில ஏதவோ சந்தோஷமா இருக்கிற போல கிடக்கு..”

“சந்தோஷமா தான் இருக்கிறம் பிள்ளை.. ஆனா நீ இல்லாத நேரத்துக்காக இல்லை.. இது வேறை ஒரு விசியம்..”

“என்னப்பா என்ன விசியம்..”

“நம்ம வஞ்சிக்கு பொண்ணு பாத்திருக்கிறம் பிள்ளை..”

“நிசமாவாப்பா.. சூப்பர் சூப்பர்.. எப்புடி அண்ணனுக்கு அண்ணியை பிடிச்சிருக்குதோ..”
என்றபடி கோதை வஞ்சியைப் பார்க்க, அவனோ வெட்கப் பட்டு வியாகேசின் பின்னால் ஒளிந்து கொண்டான்.

“என்ன அண்ணாச்சி வெக்கம்மோ.. பாத்தியளோ தங்கச்சிக்கு இன்னும் அண்ணியை காட்டவே இல்லையே..”

“இங்க எல்லாம் அவளைக் கூட்டிக் கொண்டு வர ஏலாது தங்கச்சி..”

“ஏனாம்..”

“பாஸுக்கு பிடிக்காது..”

“ஓ.. ஆனால் அதெல்லாம் நான் பாத்துக் கொள்ளுறன்.. நீங்கள் நாளைக்கு கூட்டிக் கொண்டு வாங்கோ..”

“வேண்டாம் தங்கச்சி.. இங்க வேண்டாம்.. நாளைக்கு வெளியில திருக்கோணேஸ்வரக் கோவிலுக்கு கூட்டிக் கொண்டு வரட்டோ..”

“சரி சரி.. முதல் முதல் சந்திக்கும் போது கோவில்ல பாக்கிறது நல்லம் தான்.. கோவில்ல பாத்திட்டு முறையா வீட்டுக்கு கூப்பிடுவம்..”
என்று சொன்ன கோதை, வஞ்சிக்கு கை குலுக்கி வாழ்த்துகள் சொன்னாள்.

ஒருமணி நேரத்துக்கும் மேலாக அரட்டையடித்துக் கொண்டு இருந்தவர்கள், நேரம் போனதைக் கவனிக்கவே இல்லை.

“அப்பா.. நீலும்மா எங்க.. அவாவை முடிவா கேக்கோணும்.. இனிமேல் என்னோட இருக்கிறியளோ இல்லாட்டிக்கு அவையோட போறியளோ எண்டு..”

“உங்கம்மா கோயிலுக்கு போயிருக்கா.. இப்ப வர்ர நேரம் தான் பிள்ளை..”

“ஓ.. அம்மா பாவம் அப்பா.. நான் அந்த வீட்டுல இருந்த வரைக்கும் அவாவை அந்த பெரிய மனுஷன் மதிச்சதே இல்லை.. எவ்வளவு கொடுமைப் படுத்துவார் தெரியுமோ.. அப்பெல்லாம் யோசிப்பன்.. அம்மாவை நான் தனியா கூட்டிட்டு போயிடோணும் எண்டு.. இப்ப அம்மாவை என்னால வடிவா பாத்துக் கொள்ள ஏலும்..”

“உங்கம்மா உன் கூடவே வருவாள் எண்டுறது கேள்விக்குறி தான் பிள்ளை.. என்ன இருந்தாலும் ரூபாதானே அவள் பெத்த பிள்ளை..”

“எனக்கு அது புரியுதுப்பா.. ஆனா அம்மா இங்க வர முதல் சொல்லிச்சு.. நான் உன் கூட வந்திருவன் அப்புடினு பாப்போம்.. என்ன இருந்தாலும் தில்லையப்பா வீட்டுல தானே நான் வளந்தன் அந்த நன்றிக்கு அவருக்கு ஏதாவது உதவி செய்யோணும்..”

“அந்தாளு தானே.. நீ இந்த மாதிரி போய் நிண்டால்.. உன்ரை புருஷன்டை சொத்தைப்பூராவும் எனக்கு எழுதி வையெண்டு கூசாமல் கேப்பான் அவன்..”

“அப்புடியும் கேப்பாரோ..”

“கண்டிப்பா கேப்பான்.. விட்டால் உன்னைய தூக்கி வைச்சிட்டே.. ஜேம்ஸை மிரட்டிப் பாப்பாரு அந்த மனுஷன்..”

“ஏனப்பா.. தில்லையப்பா இப்புடி இருக்கிறாரு.. காசு எண்டால் எந்த எல்லை வரைக்குமே போக ரெடியா இருக்காறே அதை தான் என்னால தாங்க முடியேல்லை..”

“விட்டுத் தள்ளும்மா சில ஜென்மங்களைத் திருத்தவே முடியாது..”

“என்ன செய்ய.. எக்கேடும் கெட்டுப் போங்கோ எண்டு விட முடியேல்லை.. சரி அதை விடுங்கோ.. என்ரை அவரிந்தை அம்மாவும் அப்பம்மாவும் என்ன செய்யினம்.. இடையில நடந்த விசியங்களால அவையோடயும் மனம் விட்டு பேச முடியேல்லை..”

“அதுகளை பேசவே முடியாதபடிக்கு எல்லோ இங்கினை இருக்கிற கழிசடையள் செஞ்சு வைச்சிக்குதுகள்..”

“அதெல்லாம் சரி எவ்வளவு காலமா உவை உப்புடி இருக்கிறினம்..”

“நாலு வருஷமா தான் பிள்ளை..”

“அதுக்கு முதல்..”

“அதுக்கு முதல் நல்லா தான் இருந்ததுகள்.. அதோட உவை ரெண்டு பேரும் லண்டனில தான் இருந்ததுகள்..”

“அப்ப என்ரை வீட்டுக்காரர்.. எங்க இருந்தவர்..”

“அவனும் இருபது வயது வரை அங்க தான் இருந்தவன்.. பிறகு தானாவே விருப்பப் பட்டு இங்க வந்திட்டான்.. அவன் இங்க வந்தது அவனிந்தை தகப்பனுக்கு சுத்தமா பிடிக்கேல்லை.. ஜேம்ஸுக்கும் அந்தாளுக்கும் சுத்தமா ஆகாது.. அது தான் தகப்பனுக்கு இங்க வாரது பிடிக்கேல்லை எண்டதும் மூட்டை முடிச்சோட இங்க வந்திட்டான்.. அதுக்கு பிறகு அவன் லண்டன் பக்கம் போகவே இல்லை.. தகப்பன் இறந்த நேரம் மட்டும் ஒருக்கா போட்டு வந்தவன்.. நான் ஜேம்ஸ் பிறந்தது தொட்டு  லண்டனிலயும் பிறகு அவன் இங்க வந்த பிறகு இங்கேயும் எண்டு அவனோட தான் இருக்கிறன்..”

“அப்ப உவருக்கு சின்ன வயசுல இருந்தே உந்த கோபத்துல பொருள்களை தூக்கியடிக்கிற பழக்கம் இருக்கோ..”

“இந்தப் பழக்கம் இடையில தான் வந்தது.. அதுவும் அவனிந்தை அப்பாவால தான் வந்தது.. ஜேம்ஸிந்தை அப்பாக்கு வேறை ஒரு பொண்ணு கூட தொடர்பு வரவும் தான்.. அவனுக்கு தகப்பனை சுத்தமா பிடிக்காமல் போயிட்டுது.. தகப்பன் தொடர்பு வைச்ச பொண்ணு இவனுக்கு தெரிஞ்ச ஒரு தோழி எண்டு தெரிஞ்ச உடனே அவனால தாங்கிக் கொள்ள முடியேல்லை.. அதுல இருந்து பொம்பிளையள் எண்டாலே அவனுக்கு பிடிக்காது.. ஆரும் அவனுக்கு கிட்ட வந்தாலே எதையாவது தூக்கி அடிச்சிருவான்.. லண்டனில இருக்க இருக்க தன்ரை தோழியிந்தை துரோகம் நினைவுக்கு வந்து ஆக்ரோஷத்தை குடுக்குது எண்டிட்டு இங்க வந்திட்டான்.. தாயை தன்னோட வா எண்டு கூப்பிட்டு பாத்தான்.. அவா புருஷனை விட்டு வர மாட்டன் எண்டு சொல்லீட்டா.. அதுல அவனுக்கு தாயிலயும் கோபம்.. அப்ப இருந்து இப்ப வரை ஆரோடையும் ஒட்டாத தன்மை அவனுக்கு.. நீ வந்த பிறகு தான் அவன் ஏதவோ நிம்மதியா இருக்கிறான்..”

“ஓ.. பாவம் என்ரை புருஷன்..”
என தன் கணவனுக்காக பரிதாபப் பட்டாள் கோதை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!