அசுரனின் குறிஞ்சி மலரே.. 55

4.8
(12)

குறிஞ்சி மலர்.. 55

ஜீவோதயத்தில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து வந்து சேரும் தூரத்தில் தான் எலிசபெத்தையும் செபமாலையையும் அடைத்து வைத்திருந்தார்கள்.

அரைமணி நேரத்தில் அவர்கள் இருந்த இடத்தை தெரிந்து கொண்ட ஜேம்ஸ் அங்கே செல்ல முனைய
அவனை தடுத்தார் வியாகேசு.

“பீட்டர் நாங்கள் அதை பாத்துக் கொள்ளுறம்.. நீ உன்ரை பொஞ்சாதியோட இரு..”

“நீங்கள் அங்க போய் என்ன செய்யப் போறியள்..”

“அந்த இடத்துக்கு போய் அவையளை மீட்டிட்டு அதுக்கு பிறகு இதை சட்டரீதியா அணுகலாம் எண்டு பாக்கிறன்..”

“வேண்டாம் நீங்கள் இங்க பேபி கூட இருங்கோ நான் போறன்..”

“வேண்டாம் பீட்டர்.. நீ செம கோபத்துல இருக்கிறாய்.. இந்த நேரத்துல நீ அவ்வளவு தூரம் பயணம் செஞ்சு போக வேண்டாம்..”

“சொன்னதை மட்டும் செய்யுங்கோ..”
என்றவன் அடுத்த நிமிடமே அங்கிருந்து போய் விட்டான்.

அதற்குள் வியாகேசின் நண்பர் ஒருவருக்கு விஷயம் போக, இருவரையும் அடைத்து வைக்கப் பட்ட இடத்துக்கு பக்கத்தில் இருந்த அவர் உடனேயே அந்த இடத்துக்கு போய் விட்டார்.

தன்னோடு இருபது பேரை அவர் அங்கு அழைத்துப் போய் சரியாக அரைமணி நேரத்தில் அவர்கள் இருவரையும் மீட்டு விட, தகவல் வேகமாக வியாகேசுக்கு வந்து சேர, அவர் அதை ஜேம்ஸுக்கு தெரிவிக்க முக்கால் மணிநேர பயணத்தில் இருந்தவன் உடனேயே வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.

சதிக்கூட்டத்தில் இருந்தவர்கள் எலிசபெத்தும் செபமாலையையும் மீட்கப் பட்டதை அறிந்ததும், நீலரூபியை வைத்து கோதையை கடத்த அடுத்த திட்டம் போட்டார்கள்.

அதன்படி நீலரூபியை விபத்துக்கு உள்ளாக்கி விட்டு, கோதைக்கு அதை ஃபோனில் யார் மூலமோ தெரியப் படுத்த, தாயைப் பார்க்கும் அவசரத்திலும் அவருக்கு ஏற்பட்ட விபத்து கொடுத்த பதட்டத்திலும் யாரிடமும் சொல்லாமல் கோதை வீட்டை விட்டு வெளியே வந்து, பேருந்து நிலையம் வர, அங்கே வைத்து அவள் கடத்தப் பட்டாள்.

கோதை மேல் ஒரு கண்ணை வைத்திருந்த வியாகேசு அவளைத் தொடர்ந்து ஓடி வர, அவரை அடித்துப் போட்டு விட்டு அவர்கள் கோதையோடு அங்கிருந்து போய் விட்டார்கள்.

ஜீவோதயம் திரும்பிக் கொண்டிருந்த ஜேம்ஸ், தூரத்தில் வரும்போதே ரோட்டில் அடிபட்டு மயங்கிக் கிடந்த வியாகேசைப் பார்த்ததும் அவரைத் தூக்கிக் கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தான். அவனுக்கு கோதை கடத்தப் பட்டது தெரியாது.

……………..

எலிசபெத்தையும் செபமாலையையும் மீட்பதற்கென்று வெளியே கிளம்பிச் சென்ற தன் கணவன், வெற்றிகரமாக அவர்களை அழைத்துக் கொண்டு திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டு அறையினிலேயே இருந்த கோதைக்கு, அரை மணி நேரத்தின் பின்னர் ஒரு அழைப்பு வந்தது.

அழைப்பு எடுத்தவன் தான் யார் எவர் என்ன என்பதை கூறாமல், உங்களுடைய அம்மா நீலரூபி விபத்துக்குள்ளாகி இங்கே இருக்கும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.

அந்த செய்தியை கேட்டதுமே பதறிப்போன கோதை வைத்தியசாலைக்கு செல்வதற்காக வெளியே வஞ்சியையும் வியாகேசையும் தேடினாள். அவர்கள் இருவரும் எலிசபெத் மற்றும் செபமாலை பற்றி யாருடனோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

தாய்க்கு விபத்து என்ற செய்தியும் இப்பொழுதே அவரைப் பார்க்க வேண்டும் என்ற வேகமும் அவளைப் பிடித்து ஆட்ட வேகமாக பேருந்து நிலையம் நோக்கி விரைந்தாள் கோதை.

அவள் வீட்டு வாசல் தாண்டி வெளியே செல்வதை எதேச்சையாக பார்த்த வியாகேசு, இவள் எங்கே தனியாகப் போகிறாள் என்கிற பதட்டத்தில் அவளைப் பின் தொடர்ந்து போவதற்குள் அவரை அடித்துப் போட்டு விட்டு கோதையை ஒரு வெள்ளை வான் தூக்கிக் கொண்டு போனது.

தன்னை சிலர் கடத்த முயல்கிறார்கள் என்பதை தெரிந்ததுமே, கோதை முரண்டு பிடிக்காமல் பேசாமல் தானாகவே வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள். தான் முரண்டு பிடிக்க அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக பிடித்து வாகனத்தில் ஏற்ற எங்கேயாவது தன் உடல் மோதி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பயத்தில் தான் கோதை தானாகவே வாகனத்தினுள் அமர்ந்து கொண்டாள்.

ஒரு அரைமணி நேரத்து பயணத்தின் பின்னர், அவளை ஒரு வீட்டின்
இருளடைந்த அறைக்குள் பூட்டி வைத்து விட்டு அவர்கள் போய் விட, அறையின் இருளில் உடலும் மனமும் பதற, தன் கணவன் தன்னை மீட்க வர மாட்டானோ என்கிற ஏக்கத்தில் மயங்கிச் சரிந்தாள் கோதை.

கோதையை அடைத்து வைத்த வீட்டுக்கு சில நிமிடங்களில் வந்து சேர்ந்த தில்லையம்பலமும், ரூபாவும் மற்றும் அல்போன்ஸும் அடுத்து என்ன செய்வது என அடுத்த கட்ட திட்டம் போடத் தொடங்கினார்கள்.

“அப்பா.. பேசாமல் உவளை போட்டுத் தள்ளினா என்னப்பா.. உவளால தான் என்னை அந்த வெள்ளையன் கட்டுறான் இல்லை..”

“ஓம் பிள்ளை அதை தான் நானும் யோசிக்கிறன்..”

“கொஞ்சம் பொறு தில்லை.. அவசரப் படாதே.. உவளை வைச்சு பெரிய பணப் பரிமாற்றமே நடக்க இருக்குது.. நீங்கள் என்னடா எண்டால் போட்டுத் தள்ளத் திரியிறியள்..”

“பணப் பரிமாற்றமோ என்ன சொல்லுறாய்.. எனக்கு ஒண்டும் விளங்கேல்லை..”

“ஜேம்ஸ்பீட்டரோட பிஸிநெஸ் எதிரி லாரன்ஸ் இருக்கானே..”

“ஓம் அவனுக்கு என்ன..”

“அவன்.. ஜேம்ஸோட பொண்டாட்டியை தன்ரை கைக்கு குடுத்தால் குறிப்பிட்ட கோடி காசு தாரன் எண்டு பேரம் பேசி இருக்கிறான்.. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வருவான்..”

“அட அப்புடி வேறை ஒரு சங்கதி இருக்கோ.. பாரன் அந்த அநாதைக் கழுதைக்கு வந்த டிமான்டை..”

“அப்பா.. அவளுக்கு ஒண்டும் டிமான்ட் வரேல்லை.. அவளுக்கு தாலி கட்டினவனிந்தை மவுசு அப்புடி..”

“நீ சொல்லுறதும் சரி தான் பிள்ளை.. அப்ப சரி அல்போன்சு உவளை நீங்கள் அவனிட்டையே குடுங்கோ.. குடுத்த பிறகு சொல்லுங்கோ உவள் அவனோட ஓடிப் போயிட்டாள் எண்டு ஜேம்ஸுக்கு சொல்லி உவளை மறக்க செஞ்சிட்டு என்ரை மகளை கட்டி வைப்பம்..”

“நீங்கள் என்னவோ செய்யுங்கோ.. ஆனால் பேசி வைச்ச மாதிரி எங்கடை பங்கு எங்கடை கைக்கு வரோணும்..”

“அதெல்லாம் சரியா வந்திடும்.. நீ உவளை அந்த லாரன்ஸிட்டை குடுத்திட்டு எனக்கு எடுத்து சொல்லு.. நான் அதே கையோட ஜேம்ஸிட்டை போறன்..”
என்று சொன்ன தில்லையம்பலம் மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து போய் விட, அவர் சென்ற அடுத்த பத்து நிமிடங்களில் அங்கே வந்தான் லோரன்ஸ் ரோமியோ

அவன் வந்ததுமே அவன் எழுதிக் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்டு அங்கிருந்து அல்போன்ஸ் போய் விட, அந்த வீடு முழுவதும் அவனது ஆட்களின் கண்காணிப்பின் கீழ் வரவே, வீட்டின் கூடத்தில் கால் மேல் கால் போட்டு, சிகரெட் பத்திக் கொண்டு இருந்தவன், தன் கையாள் ஒருவனிடம் கோதையை இழுத்து வரப் பணித்தான்.

லாரன்ஸ் ரோமியோ இதுவரை கோதையைப் பார்த்தது இல்லை. அவனுக்கும் பெண்கள் என்றாலே சுத்தமாக பிடிக்காது. அவனுக்கு ஒரு மாதத்திற்கு முன்னால் ஜேம்ஸ் சொன்ன வார்த்தைகள் தான் காதில் எதிரெலித்துக் கொண்டிருந்தன. அதற்காக தான் அதற்காக மட்டும் தான் அவன் கோதையை தூக்க மும்முரமாக இருந்தான்.

ஜேம்ஸும் லாரன்சும் சந்தித்துக் கொண்ட தருணம்.

“என்ன பீட்டரு.. பொண்ணுங்களை கண்டாலே தலை தெறிக்க ஓடுறனீ.. கலியாணமே செஞ்சிட்டியாமே..”

“என்னோட பேபியோட மகிமை அப்புடி..”

“ம்ம்.. கேள்வி பட்டன் இப்போ எல்லாம் ஒரே பேபி புராணமாமே.. ஆனா எல்லா பொண்ணுங்களுமே சாக்கடையள் தான் பீட்டரு.. அது தெரியாம நீ வேறை கலியாணம் வரை போயிருக்கியே..”

“மத்த பொண்ணுங்க சாக்கடையா இருக்கலாம்.. ஆனா என்னோட பேபீ புனிதமானவ.. அது உனக்கு சொன்னாலும் புரியாது..”

“எங்க உன்னோட புனிதவதியை கண்ணுலயே காட்ட மாட்டேன்றியே..”

“கண்டிப்பா காட்டுவன்.. ஆனா அவ கொஞ்சம் வன்முறைக்கு பயந்தவ.. சோ நீ வெப்பன்ஸ்ஸோட வரலைன்னா கண்டிப்பா காட்டுவன்..”

“ஓ.. என்னவோ சொல்லுறே.. எனக்கென்னவோ அவ உன்னோட சொத்தை பணத்தை பாத்து தான் வந்திருப்பாளோனு தோணுது..”

“குட் ஜோக்.. என்னோட பேபிக்கு என் சொத்து பற்றியோ நான் எந்த லெவல் பிஸிநெஸ்மேன் என்றது பத்தியோ எதுவுமே தெரியாது..”

“சரி பாக்கலாம்.. உண்மையிலேயே அவ கிரேட்டான வுமன் எண்டால் நானே அவளைக் கையெடுத்து கும்பிடுவன்..”

“கும்பிடத் தான் போறே.. என் பேபியோட சக்தி அப்புடி..”
என ஜேம்ஸ் முடித்து விட, லாரன்சுக்கே ஜேம்ஸை பார்க்க வியப்பாக இருந்தது.

பெண்வாடையே ஆகாமல் இருந்தவனுக்கு இப்போது ஒருத்தி பற்றி பேசுவது நினைப்பது மட்டுமே மூச்சாகிப் போனதைப் பார்க்க வியப்பாக இருந்தது.

அதனால் தான் அவன் நினைப்பது போல அவனின் மனைவி ஒன்றும் உத்தமி இல்லை. அவளும் பணம் என்றால் பறக்கும் சாதாரண பெண் தான் என்பதை காட்ட, அவளை கடத்தி அவளுக்கு பல கோடிகளை கொடுத்து ஒரு மாதம் மட்டுமே தன்னோடு வைத்துக் கொள்ள ஆசைப் பட்டான். அப்படி அவளும் இருந்து விட்டால், அதை ஜேம்ஸிடம் காட்டி இங்கே பார் உன் உத்தம பத்தினியின் லட்சணத்தை எனக் காட்டி விடலாம் என்றும் கணக்கு போட்டு வைத்திருந்தான்.

லாரன்ஸும் ஜேம்ஸும் லண்டனில் சிறு வயதில் ஒன்றாக படித்தவர்கள், அதன் பிறகு ஜேம்ஸ் இங்கே இலங்கை வந்து பிஸிநெஸ் தொடங்கி விட, லாரன்ஸும் தன் சொந்த வாழ்க்கையில் அடிபட்டு இலங்கை வந்து தானும் பிஸிநெஸ் தொடங்கி இருந்தான். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்களை சதித்திட்டம் போட்டு பிரித்ததே அல்போன்ஸும் ஜோசப்பும் தான். அதன் பிறகு இருவருமே போதைச் சரக்குகள் கடத்தி, ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு எதிரியாகி விட்டார்கள்.

கூடத்தில் அமர்ந்து வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தவனின் முன்னால், கட்டப் பட்ட கதிரையோடு கொண்டு வந்து அமர்த்தப் பட்டாள் கோதை. ஒரு பக்கமாக தலை தொங்கிக் கிடக்க மயங்கிக் கிடந்தவளை அப்போது தான் பார்த்த லாரன்ஸ் திகைத்துப் போய் எழுந்து நின்றான்.

“டேய்.. பீட்டரோட பொண்டாட்டியை தூக்கிட்டு வர சொன்னா.. அந்த அலுக்கோசு அல்போன்சு ஏன்டா இந்த பிள்ளையை தூக்கி வந்தான்.. பாவமடா இது.. இது நல்ல பிள்ளையாச்சேடா.. கட்டை அவுத்து விடுங்கடா..”
எனக் கிட்டதட்ட கத்த, அவனது கத்தலில் மிரண்டு போன அவனின் அடியாட்கள் இருவரும்
“தலைவரே.. இது தான் பீட்டரோட பொஞ்சாதி.. இங்க பாருங்கோ..”
என்று கொண்டு ஒரு புகைப்படத்தை லாரன்ஸிடம் காட்டினார்கள்.

அந்த படத்தில் கணவனின் கைவளைவில் சிரித்த முகத்தோடு நின்றிருந்தாள் கோதை.

சட்டென்று கோதையின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்ட லாரன்ஸ்
“அடேய்.. தண்ணியைக் கொண்டு வாங்கோடா..”
என்று மீண்டும் கத்தி விட்டு, அவளின் கட்டுகளை வேகமாக அவிழ்த்து விட்டான்.

அவர்கள் கொண்டு வந்து கொடுத்த தண்ணீரை கோதையின் முகத்தில் தெளித்து, கன்னத்தை லேசாக தட்டி
“தங்கச்சி.. தங்கச்சீ..”
என்று அழைக்க, மெல்ல கண் திறந்து பார்த்த கோதை, சுத்தி நின்றவர்களை பார்த்து மிரண்டு கொண்டே கடைசியாக தன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்திருந்த லாரன்ஸ்ஸை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“அண்ணா நீங்களோ.. எனக்கு உயிரே போயிட்டுது.. ஆரவோ ரெண்டு மூண்டு தடிமாடுகள் என்னைய தூக்கி வந்திட்டாங்கள் அண்ணா.. நீங்கள் தான் அந்தப் பன்னாடையளிட்டை இருந்து என்னைய காப்பாத்தினியளோ..”
என லாரன்ஸை பார்த்துக் கேட்க,
“உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு.. பீட்டர் தான் உம் புருஷனோ..”
என தன் சந்தேகத்தை அவளிடமே கேட்டான் லாரன்ஸ்.

“கல்யாணம் திடீரெண்டு தான் அண்ணா நடந்த.. ஓம் ஓம் அவர் தான் அண்ணா..”

“ஓ..”

“அண்ணா என்னைய வீட்டுல விட்டு விடுறீங்களோ.. எனக்கு பயந்து பயந்து வருகுது..”

“சரி வா..”
என்று கொண்டு நடக்க சிரமப் பட்டவளின் கையை மெல்ல பற்றி, அவளை அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டான் லாரன்ஸ்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!