அசுரனின் குறிஞ்சி மலரே.. 61 (எபிலாக்)

5
(24)

குறிஞ்சி மலர் 61 (எபிலாக்)

அந்த ஏகாந்த சூழலில், இயற்கையின் அழகான காட்சியில் தன்னை மறந்து தன் மனைவியின் இனிய குரலில் அவள் பாடிய பாடலில் தன்னை தொலைத்திருந்தான் ஜேம்ஸ்.

“அத்தான்..”

“……………”

“அத்தான்..”

“ம்ம் சொல்லு பேபீ..”

“பாட்டு எப்புடி..”

“சூப்பர்டி.. எப்பவும் போல ரொம்ப இனிமையாப் பாடின்னீ..”

“பாட்டு இனிமை கிடக்கட்டும்.. வரிகள் எப்புடி..”

“ம்ம் வரிக்கு என்ன குறை நல்லா தான் இருக்கு..”

“பொதுவா நான் உங்களுக்கு பாடிக் காட்டுற பாட்டுகள் எல்லாமே சிற்றுவேஷன் சோங்காவே இருக்குமே.. அதைக் கவனிச்சு இருக்கிறியளோ..”

“கவனிக்காம..”

“அப்போ இப்ப பாடின பாட்டு..”

“இதுக்கு என்னடி சிற்றுவேஷன்..”
என்றவனின் கரத்தை எடுத்து தன் வயிற்றில் வைத்தாள் கோதை.

“என்ன பேபி.. வயிறு வலிக்குதா..”

“லூசுப் புருஷா..”

“என்னடி..”

“நீ அப்பாவாகப் போறாயடா வெண்ணெய்..”

“என்னடி சொல்லுறாய்..”
என்றவனுக்கு அவள் சொன்னதை சட்டென்று புரிந்து கொள்ள முடியவில்லை.

புரிந்து கொண்ட அடுத்த நிமிடமே அவன் போட்ட கூச்சலில், மரங்களில் இருந்த பறவைகள் எல்லாம் தலை தெறிக்க பறந்தோடின.

போதாக்குறைக்கு மனைவியைத் தூக்கி சுத்த, அவளுக்கு அந்த மரக் குடிலே சுழலத் தொடங்கி விட்டது.

“அச்சோ கீழ இறக்கி விடுங்கோ..”
எனக் கத்தியவளை மெல்லக் கீழே விட்டவன்
“என்னோட வாழ்க்கையில நான் இந்தளவுக்கு சந்தோஷமா இருந்ததே கிடையாது பேபி..”
என்று கொண்டு அவளை அணைத்து மனைவியின் உச்சந் தலையில் தன் நாடியைப் பதித்து, அப்படியே நின்றிருந்தான்.

கணவனின் கையணைப்பில் நின்றபடி
“நானும் தான்..”
என்றவளின் குரல் லேசாகத் தடுமாறியது.

அவளின் முகவாயை மெல்ல நிமிர்த்தி, முகத்தை ஆராய்ந்த ஜேம்ஸ்
“அழுறியா பேபீ..”
எனக் கேட்க
“இல்லையத்தான்.. ஆனா அழோணும் போல இருக்கு.. ஆனா அழுதால் உங்களுக்கு கோபம் வரும் அது தான்..”
எனப் பாவமாகச் சொன்ன மனைவியையே இமைக்காமல் பார்த்திருந்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை. அவளது முகத்தை தன் நெஞ்சோடு மெல்ல அழுத்தி
“அழு பேபி.. ஆனா இது தான் நீ கடைசியா அழுறதா இருக்கோணும்..”
என சொல்ல, அவனது மார்போடு சாய்ந்தபடி மனம் விட்டு அழுதாள் கோதை.

சில நிமிடங்கள் அழுதவள், முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு, கணவனின் முகம் பார்த்தாள்.

“சொல்லு பேபி..”

“இனிமேல் எவ்வளவு தான் கோபம் வந்தாலும்.. எனக்கு முன்னால பொருளுகளைத் தூக்கி அடிக்கக் கூடாது..”

“சரி..”

“நான் டென்ஷன் ஆயிட்டால்.. உங்கடை குழந்தையும் டென்ஷனாயிடும் புரியுதா..”

“புரியுது புரியுது..”

“என்ன புரியுது..”

“இந்த மாதிரி நேரத்துல உன்னையக் கவனமாப் பாத்துக் கொள்ளோணும்..”

“அப்போ மத்த நேரத்துல அப்புடிப் பாத்துக் கொள்ள மாட்டியளோ..”

“ஹேய் என்னடீ..”

“இந்தா பாருங்கோ.. குழந்தை வந்ததும் என்னைய கண்டுக்காமல் விட்டியளோ அவ்வளவு தான் சொல்லீட்டன்..”

“நான் ஏன் பேபி அப்புடி செய்யப் போறன்.. எத்தினை குழந்தையள் வந்தாலும் நீ மட்டும் தான் முதல்ல எனக்கு இஷ்டம்..”

“பேச்சு மாற மாட்டியளே..”

“பேச்சும் மாற மாட்டன் நானும் மாற மாட்டன்.. ஆனா..”

“என்ன ஆனா..”

“ஆனா நீ தான் குழந்தை வந்ததும் என்னைய கண்டுக்கவே மாட்டாய்..”
என்ற கணவன் தோளில் விரலால் கோலம் போட்டபடி
“இல்லையத்தான்.. எனக்கும் கூட நீங்கள் தான் முதல்ல இஷ்டம்..”
எனச் சொன்ன கோதை
“நான் வாழ்ந்த இத்தனை வருஷத்துல உங்களோட இருந்த நாள்ல தான் சந்தோஷமாவே இருந்தன் தெரியுமோ.. புருஷனை இழந்து பொட்டையும் பூவையும் பறி கொடுத்திட்டு நிண்ட எனக்கு வாழ்க்கை பிச்சை குடுத்ததே நீங்கள் தானே.. எனக்கு மனைவி எண்ட அங்கீகாரம் குடுத்து இவ்வளவு உசரத்துல வைச்சிக்கிறதும் நீங்கள் தானே..”
எனத் தொடர்ந்தும் சொல்ல, அவளது வாயைப் பொத்தினான் ஜேம்ஸ்.

“இதைப் பாரு பேபி.. நான் ஒரு பிச்சையும் உனக்குப் போடேல்லை.. பொண்ணுங்க எண்டாலே துரோகியள் எண்டு நினைச்சு எல்லாரையும் வெறுத்திட்டு இருந்த எனக்கு.. பொண்ணுங்களில பொக்கிஷமும் இருக்குனு புரிய வைச்சு.. என்னோட வாழ்க்கையை அர்த்தப் பட வைச்சவ நீ தான்.. இன்னும் ஒண்ணு சொல்லட்டோ.. உன்னோட சுபாவத்துக்கு உன்னை எவன் வேணாலும் கட்டி உன் கூட வாழ்க்கை நடத்தீடுவான்.. ஆனா என்ரை சுபாவத்துக்கு உன்னால மட்டும் தான்டி என் கூட வாழ்க்கை நடத்த முடியும்.. என்னை எப்புடி வைச்சுக் குப்பை கொட்டலாம் என்றது உனக்கு மட்டும் தான் தெரியும்..”
என அவன் சொல்ல, அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் கோதை.

தன் வாழ்க்கை அவ்வளவுதான், இனிமேல் தன் வாழ்க்கையில் வண்ணங்களுக்கே இடமில்லை என நினைத்திருந்தவளுக்கு முன்னால் அசுரனாய் வந்து பிறகு தேவதூதனாய் மாறி வண்ணங்களை அள்ளித் தெளித்தவன் தன் கணவன் எனப் பெருமிதம் கொண்டாள் கோதை.

இருவரும் வீட்டுக்குப் போனதும் வியாகேசை அழைத்தான் ஜேம்ஸ்.

“என்ன புருஷனும் பொஞ்சாதியும் இப்போ சமாதானம் ஆன மாதிரிக் கிடக்கு..”
என்று கொண்டு வந்தவரின் கால்களில்
“எங்கள் மூண்டு பேரையும் ஆசிர்வாதம் செய்யுங்கோப்பா..”
என்றபடி கோதை அவரின் காலில் பணிய, ஜேம்ஸ் தானும் மனைவியைப் பின்பற்றினான்.

“மூண்டு பேரோ.. என்ன பிள்ளை..”

“ஓமப்பா மூண்டு பேர் தான்.. நீங்கள் தாத்தா ஆகப் போறீங்கள்..”

“நான் தாத்தா ஆகப் போறனோ..”
என ஒன்றும் புரியாமல் தலையைச் சொறிந்த வியாகேசு, அடுத்த கணமே புரிந்த செய்தியில் பூரித்துப் போய் இருவரையும் ஒன்றாக அணைத்துக் கொண்டார்.

“அச்சச்சோ எனக்கு கையும் ஓடேல்லை.. காலும் ஓடேல்லை.. இனி என்ரை பேரனோ பேத்தியோ பிறக்கும் வரைக்கும் கோணேச்சரத்தானுக்கு பொங்கல் தான்..”
என்று கொண்டு துள்ளிக் குதித்த அந்த வயதானவரைப் பார்க்க கோதைக்கு கண்கள் கலங்கி விட்டது.

இது போன்ற பாசங்கள் கிடைப்பது எல்லாம் கடவுள் கொடுத்த வரம் இல்லாமல் வேறென்ன என நினைத்தவள், கணவனை அழைத்துக் கொண்டு அவனது அன்னையிடமும் அப்பம்மாவிடமும் சென்றாள்.

செய்தி கேட்டதுமே எலிசபெத்துக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை என்றால், செபமாலையோ
“ஐ நான் பூட்டி ஆகப் போறேன்..”
என அங்கிருந்த வேலைக்காரர்கள் எல்லோருக்கும் புது வேட்டை சட்டை எனப் பரிசு கொடுத்து வீட்டையே அமர்க்களப் படுத்தி விட்டார்.

வஞ்சியும் செய்தி கேட்டதும் சந்தோஷத்தில் தன் தங்கைக்கு வாழ்த்து சொல்ல, கோதையை நிலத்தில் கால் வைக்க விடாத அளவுக்கு அந்த வீடே தாங்கிக் கொண்டது.

………..

ஆறு மாதங்களுக்கு பிறகு..

இடையில் ஒரு மாதம் பிஸிநெஸ் விசயமாக ஜேம்ஸ் அமெரிக்கா சென்று வந்திருந்தான். அது கூட கோதை தான் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருந்தாள்.

இந்த ஆறு மாதத்துக்குள் தில்லையம்பலமும் ரூபாவும் அமெரிக்கா போய் செட்டில் ஆகி விட, நீலரூபி நிம்மதியாக மகளோடே இருந்து விட்டார்.

அந்த ஒரு மாதம் முடிந்து ஜேம்ஸ் நாடு திரும்பிக் கொண்டிருந்தான். மனைவியைப் பார்க்கும் ஆர்வமும் ஆசையும் அவனை எங்குமே நின்று நிதானமாக ஓய்வெடுக்க விடவில்லை.

தன் பெரிய ஒன்பது மாத வயிற்றோடு, வாசல் வரை வந்து தன்னை வரவேற்ற மனைவியின் தாய்மை நிறைந்த அழகில் சொக்கிப் போன ஜேம்ஸ், சுற்றி நிற்பவர்களை கண்டு கொள்ளாமல் மனைவியைத் தூக்கிக் கொள்ள, அவள் தான் சங்கடத்தில் நெளிந்தாள்.

“பேபி.. ரொம்பக் குண்டாயிட்டேடி.. தூக்கும் போது மூச்சு வாங்குது..”

“எல்லாம் உங்கடை பிள்ளை செய்ற வேலை.. மாதம் மாதம் நிறை ஏறிக் கொண்டே போகுது..”

“என் பிள்ளை சமத்துடி.. நீ தான் கண்டதையும் சாப்பிட்டு வெயிட் போடுறே..”

“ஏன் சொல்ல மாட்டியள்.. ஒரு நாள்ல எத்தினை தடவை சாப்பிட்டாலும் பசி அடங்கவே மாட்டன் எண்டுது.. அதுக்கு நான் என்ன செய்ய..”

“சாப்பாட்டு ராணி.. நீ குழந்தை உண்டாக முதலே எப்புடி சாப்பிடுவேனு எனக்கும் நீலாம்மாக்கும் தான் தெரியும்..”

“போடா உன் கூட கோபம்..”
என முறுக்கிக் கொண்டு போன மனைவியை இழுத்து அவளின் நெற்றியில் முட்டி விட்டு
“இந்த மாதக் கடைசில வார ஞாயிறு உனக்கு வளைகாப்பு வைச்சிக்கலாம்னு முடிவு செய்திருக்கோம் பேபி.. உனக்கு யார் யாரைக் கூப்பிட ஆசையோ சொல்லீடு கூப்பிட்ரலாம்..”
என வேறு பேச்சுக்கு தாவி மனைவியை சமாதானம் செய்தான் ஜேம்ஸ்.

“அப்புடி எல்லாம் யாரும் இல்லையே.. இங்க வீட்டுல உள்ளவங்களை தவிர.. லாரன்ஸண்ணாவையும் அவரு அம்மாவையும் கூப்பிட்டா போதும்..”
என கோதை முடித்து விட, வளைகாப்புக்கு எந்தப் புடவையைக் கட்டுவது என்ற பேச்சு வந்தது.

கோதை முடிவாக சொல்லி விட்டாள் கணவன் எடுத்துக் கொடுக்கும் புடவையைத் தான் கட்டுவேனென்று, அதன் படி அவளுக்கு பிடித்த பச்சை நிறத்தில் ஒரு அழகான பட்டுப் புடவையை ஜேம்ஸ் மினக்கெட்டு வாங்கி வர, புடவையைப் பார்த்த கோதைக்கு ஒரே சந்தோஷமாகி விட்டது. புடவைக் கடைப் பக்கமே மழைக்கும் ஒதுங்காத அவளின் கணவன், அவளுக்கு பிடித்த நிறத்தில் அழகான புடவையை எடுத்து வந்தால், அவளுக்கு சந்தோஷமாக இருக்காதா என்ன.

கோதையின் வளைகாப்பன்று ஜீவோதயமே விழாக்கோலம் பூண்டது. கோதையின் நலன் விரும்பிகளைத் தவிர வேறு யாரையுமே ஜேம்ஸ் அழைத்திருக்கவில்லை. மனைவியின் பூரித்துப் போன முகத்தை வேறு யாரேனும் பார்த்தால் அவள் மீது பொறாமை கொண்டு விடுவார்கள் அதனால் அவளுக்கு ஏதும் தீங்கு வந்து விடும் என பயந்தவன் வேறு யாரையுமே அழைக்கவில்லை.

கணவன் எடுத்துக் கொடுத்த பச்சைப் பட்டில், தாய்மையின் பூரிப்பில், அளவான நகைகளோடு நெற்றி நிறைய குங்குமத்தோடும், தலை நிறையப் பூவோடும் இருந்த கோதையை ஜேம்ஸ் விதம் விதமாக படம் பிடித்தான்.

வியாகேசு, நீலரூபி, தேவா, ரகுமான், வஞ்சி மற்றும் அவனின் வருங்கால மனைவி, வீட்டில் இது நாள் வரை விசுவாசமாக வேலை செய்த பணியாளர்கள் இவர்கள் மாத்திரமே அங்கே நின்றிருந்தார்கள்.

அது போக வெளியாளாக லாரன்ஸும் அவனின் தாயும் மட்டுமே வந்திருந்தார்கள்.

அதிலும் லாரன்ஸ் தாய்மாமன் சீராக தன் பங்குக்கு செய்தவற்றை கண் கலங்க ஏற்றுக் கொண்ட கோதையின், கண்ணீரைத் துடைத்து விட்ட ஜேம்ஸ்
“இந்தா பாரு லாரன்ஸு.. என்னோட பேபியை அழ வைக்காதே.. அப்புறம் நான் கோபமாயிடுவன்..”
என்று கொண்டு அவனோடு பொய்யாகச் சண்டைக்கு போக அந்த இடமே கலகலப்பானது.

சந்தோஷம் கூடிப் போக, அன்றே கோதைக்கு பிரசவ வலியும் வந்து விட்டிருந்தது.

சிரித்துக் கொண்டே இருந்த மனைவியின் முகம் சட்டென்று சுருங்கிப் போக, அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்த, ஜேம்ஸ் பயந்து போனான்.

அவளுக்கு பிரசவ வலி வந்து விட்டதை அறிந்த நீலரூபியும், எலிசபெத்தும், செபமாலையும்  மற்றும் லாரன்ஸின் அன்னை வளர்மதியும் ஆளாளுக்கு அவளைப் பிடித்துக் கொள்ள, தன் பெரிய வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்த லாரன்ஸ் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தான்.

கோதை கத்திய கத்தலில் பயந்து போன ஜேம்ஸ், தாயிடம் திரும்பி
“ஏம்மா இவ இப்புடிக் கத்துறா எனக்கு பயமா இருக்குமா.. அவளைக் கத்த வேண்டாம்னு சொல்லும்மா..”
என சிறு பிள்ளை போல புகார் செய்ய, அவரோ அவனைத் தட்டிச் சிரித்து விட்டு மருமகள் பக்கம் திரும்ப, அவன் கடுப்பாகிப் போனான்.

அதற்குள் எல்லோரும் வைத்தியசாலை வந்து விட, பிரசவ வாட்டினுள் கணவனையும் அனுமதித்தார்கள்.

அதைப் பார்த்த லாரன்ஸ்
“உவனை எதுக்கு உள்ள விடுறியள்.. உவன் செய்யப் போற ரகளையில பாவம் என்ரை தங்கச்சி அங்கயும் உவனை தான் சமாதானம் செய்யோணும்..”
எனச் சிரித்தான்.

எல்லோரும் தன்னைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பதை ஜேம்ஸ் பார்த்தாலும் அதை உணரும் நிலையில் அவன் இல்லை.

பிரசவத்தின் போது கோதை கத்திய கத்தலிலும், அவள் வலியில் துடித்த விதத்திலும் அதிகமாக மிரண்டு போனான் ஜேம்ஸ்.

“பாப்பா பிறக்கிறது இவ்வளவு பயங்கரம்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.. உன் கிட்ட பாப்பா வேணும்னு கேட்டே இருக்க மாட்டன்டி..”
என்றவனது தோரணையில் அந்த வலியிலும் மெல்லச் சிரித்தாள் கோதை.

தாயை விடத் தன் தந்தையைப் பெரும்பாடு படுத்தி எடுத்து விட்டு நிதானமாக வந்து பிறந்தாள் ஜேம்ஸின் இளவரசி.

“இந்தாங்க மிஸ்டர் உங்களுக்கு பொண்ணு பிறந்திருக்கா..”
என்று கொண்டு தாதி நீட்டிய தன் குழந்தையை நடுக்கத்தோடு மெல்ல வாங்கி மார்போடு அணைத்துக் கொண்ட ஜேம்ஸின் நீல விழிகள் குழந்தையைப் பார்க்காமல், மனைவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தன.

கோதை கத்திய கத்தல் அவனது காதுக்குள் இப்போது வரை கேட்டுக் கொண்டேயிருந்தது. அவன் மனைவியைப் பார்த்த விதத்திலேயே பக்கத்தில் நின்றிருந்த வைத்தியருக்கு புரிந்து போய் விட்டது, இன்னொரு குழந்தையை இந்தப் பெண் கனவில் கூட வயிற்றில் சுமக்க முடியாதென்பது.

மனைவியின் தலையை கோதி, அவளின் வயிற்றை வருடி அவளோடே இருந்தவன் இன்னும் கூட குழந்தையைப் பார்க்கவேயில்லை.

அதற்குள் கண்கள் திறந்து பார்த்த கோதை
“என்ன குழந்தை அத்தான்..”
என மெல்லக் கேட்டாள்.

அவளையே பார்த்திருந்தவனுக்கு காதல் இன்னும் கூடிப் போகவே, அவள் நெற்றியில் முத்தம் வைத்து
“பொண்ணுடி..”
என தானும் மெல்லச் சொல்ல
“ஓ.. ஆரைப் போல இருக்காள்..”
எனக் கோதை கேட்ட பின்னர் தான் குழந்தையின் முகத்தைப் பார்த்தான் ஜேம்ஸ்.

தாயின் நிறத்தில், தகப்பனின் நீல விழிகளோடு பிறந்திருந்தாள் ஜேம்ஸின் இளவரசி. வெளியே நின்றிருந்தவர்கள் எல்லோரும் தங்கள் புது இளவரசியைப் பார்க்க உள்ளே வர, அவர்களிடம் குழந்தையைப் பெருமையோடு காட்டிய கோதை, குழந்தையின் நீலமணிக் கண்கள் மேல் மெல்ல முத்தமிட்டாள்.

குழந்தைக்கு அப்போதே ‘பூவரசி’ என ஜேம்ஸ் பெயர் வைக்க,
“என்னோட அடுத்த அரசி..”
என்று கொண்டு குழந்தையை வாங்கிக் கொஞ்சினான் லாரன்ஸ்.

அவனிடம் இருந்து குழந்தையை ஆசையோடு வாங்கிய செபமாலை
“உனக்கு ஒரு கலியாணத்தை செஞ்சு வைச்சு.. உனக்கும் பேத்தி பிறந்த பிறகு தான் நான் சாவன்..”
என்று சொல்ல, பக்கத்தில் நின்றிருந்த வஞ்சி
“பாட்டிக்கு ஆசையைப் பாரன்..”
என்று சிரிக்க
“முதல்ல கலியாணத்தை செஞ்சு குழந்தை குட்டியைப் பெறுற வழியைப் பாருடா வெண்ணெய்.. பிறகு என்னையப் பாத்து சிரிக்கலாம்..”
என்று அவனது கன்னத்தில் ஒரு அடி போட்டார் செபமாலை.

தடம் மாறி போய் இருந்த ஜேம்ஸ் மற்றும் லாரன்ஸின் வாழ்க்கை சரியான வழிக்கு வந்ததற்கு காரணமான கோதையை இருவரின் அன்னையரும் இரண்டு பக்கமும் அணைத்துக் கொள்ள, வியாகேசும் நீலரூபியும் தங்கள் பேர்த்தியைக் கொண்டாடினர். எல்லோரும் குழந்தையோடு பிஸியாகி விட, ஜேம்ஸ் மட்டும் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அவளது தோளில் சாய்ந்து கொண்டான்.

இருவரது வாழ்வுமே அவரவர் துணையால் அர்த்தப் பட்டு விட, அவர்களை அப்படியே சந்தோஷமாக விட்டு நாமும் சந்தோஷமாக விடை பெறுவோம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!