குறிஞ்சி மலர்.. 9
மலேசியாவில் இருந்து கொழும்பு திரும்பிய ஜேம்ஸ் பீட்டர், அதிகாலையிலேயே திருகோணமலை திரும்பிக் கொண்டிருந்தான்.
அவனது வரவை எதிர்நோக்கி பங்களாவின் வாசலில் காத்திருந்த வியாகேசுவுக்கு பக்கத்தில், தூணோடு சாய்ந்து கொண்டு தூங்கி வழிந்தபடி நின்றிருந்தான் வஞ்சிமாறன்.
“யோவ் பெரிசூ..”
“என்னடா..”
“பாஸு வர இன்னும் எம்புட்டு நேரம் புடிக்கும்.. வருதா வருதா வருதா..”
“டேய்.. கொஞ்ச நேரமாச்சும் சும்மா இரடா.. உந்தக் கேள்வியை நீ எத்தினை தரங் கேட்டாலும் அவன் வார நேரந்தான் வருவான்.. என்ன இழவுக்கு நீ இப்ப உதுல வந்து ஒட்டிக் கொண்டு நிக்கிறாய்..”
“என்ன பெரிசு உப்புடிக் கேட்டுப் போட்டியள்.. அவரை வரவேக்க நான் நிக்கிறதைப் பாக்கோணும்.. பாஸு அப்ப தானே மனங் குளிருவார்..”
“என்னவோ செஞ்சு தொலை.. கொஞ்ச நேரமாச்சும் வாயை மூடிக்கொண்டு கிட.. அப்புடியே நேரத்தையும் பாத்துச் சொல்லு..”
“வாயை மூடிக் கொண்டு எப்புடி நேரஞ் சொல்லுறதாம்..”
“இப்ப சொன்னியே அப்புடி தான்..”
“நேரம் சரியாக அஞ்சு மணி..”
“தேத்தண்ணி ஏதும் குடிக்கப் போறியோடா..”
“ஆத்தித் தந்தியள் எண்டால் நல்லா இருக்கும்..”
என வஞ்சிமாறன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவன் முன்னால் தேநீர்க் கோப்பை நீட்டப் பட்டது.
இந்த நேரத்தில் நமக்கு தேநீர் கொடுக்கும் அந்த நல்ல ஜீவன் யாரப்பா என்பது போல அவன் நிமிர்ந்து பாரக்க, மெல்லிய புன்னகையோடு நின்றிருந்தாள் பூங்கோதை.
“எனக்கோ..”
“ஓம் உங்களுக்கு தான்.. ஏன் வேண்டாமோ..”
“அச்சோ அப்புடி சொல்ல நான் என்ன மடையனோ.. கொண்டாங்கோ கொண்டாங்கோ..”
“இந்தாங்கோ.. இந்தாங்கோ..”
என்று கொண்டு வஞ்சியிடம் தேநீர் கோப்பை ஒன்றைக் கொடுத்த கோதை, இன்னொரு கோப்பையை வியாகேசிடம் கொடுத்தாள்.
“என்ன மகள்.. முகமெல்லாம் பிரகாசமா இருக்கு.. உள்ள இருக்கிற தடிமாடுகள் பெரிசா ஒண்டும் வேலை வாங்கேல்லையோ.. நான் நிறைய்யப் பயந்து கொண்டு இருந்தனான்..”
“வெள்ளாப்புல மூண்டு மணிக்கு எழும்பி ராத்திரி பதினோரு மணிக்குத் தூங்குற வரைக்கும் என்ரை பேரைத் தான் ஏலம் போட்டுக் கொண்டு இருக்குங்கள்..”
“ஆனா உன்ரை முகத்தைப் பாத்தால் கவலைப்படுற மாதிரியே தெரியேலையே..”
“ஓமப்பா.. நான் ஒண்டும் கவலைப்படேல்லை ஏன் தெரியுமோ..”
“ஏன் பிள்ளை..”
“ஏனெண்டால் இங்க தான் எனக்கு ஆரும் சூடு வைக்கிறதில்லை.. மனசு நோகப் பேசுறதில்லையே..”
“என்ன பிள்ளை சொல்லுறாய்..”
“அப்பா நான் எவ்வளவு வேலை எண்டாலும் செய்வன்.. என்ரை உடம்பை எவ்வளவு வருத்தினாலும் தாங்கிக் கொள்ளுவன்.. ஆனா இந்த மனசை நோகடிக்கிற போல ஆரும் வாத்தைய விட்டால் நான் கொஞ்சம் அப்செற் ஆயிடுவன்.. அந்த வகையில இந்த வீட்டில ஆரும் எந்த வாத்தையைப் பிரயோகிச்சும் என்னைய நோகடிக்கேல்லை..”
“நீ ஒரு தைரியசாலியெண்டு நினைக்கிறன்..”
என வியாகேசு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வெளிக் கதவு திறக்க ஜேம்ஸின் கறுப்பு வண்ணக் கார் வேகமாக உள்ளே வந்து அவர்களின் முன்னால் சட்டென்று நின்றது.
கார் வந்து நின்ற வேகத்தில், கையில் வைத்திருந்த தட்டைக் கீழே போட்டு விட்டு, பக்கத்தில் நின்றிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு கோதை கண்களை மூடிக் கொள்ள, வஞ்சியோ கையில் வைத்திருந்த தேநீர் கோப்பையை சட்டென்று பக்கத்தில் கிடந்த பூச்சாடியினுள் மறைத்து வைத்துவிட்டு வியாகேசைப் பார்த்தான்.
அவர் மட்டுமே எந்த விதமான பதட்டமும் இல்லாமல், நிதானமாக எழும்பி நின்று கொண்டு ஜேம்ஸின் கார் கதவை திறந்து விட்டார்.
காரில் இருந்து இறங்கிய தங்களது எஜமானைப் பார்த்து விட்ட நொடியே, சற்றே தள்ளிக் கிடந்த கூண்டுக்குள் இருந்த திபெத்திய மாஸ்டிஃப் நாய்கள் உறுமித் தங்கள் இருப்பை உணர்த்தவே, அவற்றின் சத்தத்தில்
“ஆத்தி உந்தச் சிங்கங்களுக்கு என்ன தான் போடுவியளோ இப்புடி உறுமுதப்பா..”
என்று கொண்டே வியாகேசின் பின்னால் ஒளிந்து கொண்டாள் கோதை.
இறங்கிய வேகத்தில் நாய்களைப் பார்வையால் வருடிக் கொண்டிருந்தவன் அப்போதுதான் திடீரென்று கேட்ட பெண் குரலில் திரும்பிப் பார்த்தான்.
வியாகேசின் பின்னால் நின்றிருந்த அவளின் தோற்றம் அவனுக்கு சரியாக தெரிந்ததோ இல்லையோ, ஆனால் பெண்ணொருத்தியின் குரல் கேட்டதுமே அவனுடைய நீலக் கண்கள் இயல்பாக பழுப்பு நிறத்துக்கு மாறத் தொடங்க, வியாகேசையும் வஞ்சியையும் அழுத்தமான பார்வை ஒன்று பார்த்துவிட்டு ஜேம்ஸ் வேகமாக உள்ளே போய் விட்டான்.
கோதை வியாகேசின் பின்னால் ஒளிந்து நின்றாலும் கூட, அவளது பார்வை முழுவதும் ஜேம்ஸின் மேலேயே தான் இருந்தது.
“ஆருப்பா அது உப்புடி முறைச்சிட்டுப் போறது..”
“அவன் முறைக்கேல்லை பிள்ளை.. சும்மா பாத்திட்டுப் போறான்..”
“என்னது..”
“சும்மா பாத்திட்டுப் போறான் எண்டு சொன்னன்..”
“நல்லாச் சொன்னியள் போங்கோ.. சும்மா பாக்கிறதே முறைக்கிற மாதிரிக் கிடந்தால்.. அப்ப முறைச்சால் எப்புடிக் கிடக்கும்..”
என கோதை சொல்ல
“ஆ.. நான் வீட்டு ஓட்டுக்கு மேல கிடப்பன்..”
என வஞ்சி இடையிட்டுச் சொல்ல, அவன் சொன்ன தினுசில் மற்ற இருவரும் பக்கெனச் சிரித்து விட்டார்கள்.
“பெரிசு வாங்களேன் பாஸிட்டை போவம்..”
“ஏன்டா ஏதும் கேக்கப் போறியோ..”
“ஓம் பெரிசு..”
“என்னடா..”
“பாஸு கோலாலம்பூர்ல இருந்து என்ன கொண்டு வந்தவர் எண்டு கேக்கப் போறன்..”
“அதையேன் அங்கினை போய் கேக்கிறாய்.. என்னட்டைக் கேளன் நான் சொல்லுறன்..”
“உங்களுக்கு எப்புடி தெரியும்..”
“ஊகம் தான்டா..”
“சரி சொல்லுங்கோ..”
“ஒரே நேரத்துல அஞ்சு பேரைத் துளைச்சுக் கொண்டு போற துவக்கும்.. பூமராங் மாதிரி வித்தியாசமான ஆயுதமும் தான் வாங்கி வருவான் வேறை என்ன வாங்கி வருவான்..”
“ஆஆஆ.. அப்ப சாப்பிடுறதுக்கு கூட ஒண்டும் வாங்கியந்திருக்க மாட்டாரோ..”
“ஏன் வாங்கியராமல் உந்த எலிமருந்து புலிமருந்து எல்லாம் கண்டிப்பா வாங்கியந்திருப்பான்..”
“யோவ் பெரிசு.. வாயை மூடிக் கொண்டு சும்மா இருமய்யா.. எப்ப பாத்தாலும் வெட்டுறதும் குத்துறதும் நஞ்சு வைச்சுக் கொல்லுறதும் தான் உம்மடை வாயைத் திறந்தாலே வரும்..”
“என்ன செய்ய எல்லாம் பழக்க தோசம் தான்..”
என்று கொண்டு பூங்கோதையின் பக்கம் திரும்பிய வியாகேசு
“அம்மாடி.. நீ உந்த வீட்டுக்குள்ள சமைக்கிற சமையல் வாசனை அங்கினை வரைக்கும் சுழண்டு சுழண்டு வந்து மணக்கும்.. அந்த வாசத்தோடையே காஞ்சு போன ரொட்டியையும் தீஞ்சு போன தோசையையும் நான் சாப்பிட்டு முடிச்சிருவன் தெரியுமோ.. வாசனையே அம்புட்டு அருமை எண்டால் ருசி எப்புடி இருக்கும் எண்டு அடிக்கடி யோசிச்சுப் பாப்பன்..”
என்று சொல்ல, வஞ்சிமாறன் வாயை மூடிக்கொண்டு சிரித்தான்.
“ஏண்டா சிரிக்கிறாய்..”
“இல்லை எனக்கும் சமைக்கிறதுல ஒரு பிடி தாவன் பிள்ளை எண்டு கேட்டால் தங்கச்சி தந்திட்டுப் போகப் போகுது.. அதுக்கு எதுக்கு இம்புட்டுப் பேச்சு எண்டு கேக்கிறன்..”
“போடா போடா போக்கத்தவனே..”
“தங்கச்சீ.. பெரிசு வாய்க்கு ருசியாச் சாப்பிட்டு வருஷக் கணக்கு ஆயிட்டுது.. வயசான காலத்துல அதுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடோணும் எண்டு ஆசை இருக்குது.. அந்த ஆசையை நீ கொஞ்சம் பாத்து நிறைவேத்தி வை தாயே..”
“ஆருக்கடா வயசாயிட்டுது.. ஒரே நேரத்துல இருபது இட்டிலி சாப்பிடுவன் உன்னால முடியுமோ.. பெரிசாப் பேச வந்திட்டான்..”
“நானும் எங்கையோ ஒரே நேரத்துல இருபது பெட்டி என்னவோ தூக்குவன் எண்டு சொல்லப் போறியளாக்கும் எண்டு பாத்தன்.. ஆனாலும் நீங்கள் ஒரு சாப்பாட்டு ராமன் எண்டுறதை உப்புடி அடிக்கடி நிரூபிக்கத் தேவையில்லை..”
“இந்தா பிள்ளை உவனுக்கு வாயை ஒட்டுற போல ஏதாச்சும் பசை கிண்டிக் குடு.. பிடிச்சு ஒட்டி விடுவம்..”
என வியாகேசு வேகமாகப் போய் வஞ்சியின் முதுகில் ஒன்று வைக்க,
“பெரிசு உனக்கு வயசு ஏறினாலும் உடம்புல தெம்பு நிறைய்ய இருக்கு எண்டு நான் ஒத்துக் கொள்ளுறன்.. சப்பா என்னா அடி..”
என்று கொண்டு முதுகைத் தேய்த்து விட்டான் வஞ்சிமாறன்.
அவர்கள் இருவரது பேச்சையும் செய்கையையும் வேடிக்கை பார்த்து இரசித்துக் கொண்டிருந்த கோதை
“இப்ப என்ன அப்பருக்கும் அண்ணருக்கும் மூண்டு நேரச் சாப்பாடும் குடுக்கோணும் அவ்வளவு தானே.. இதுக்கு எதுக்கு இம்புட்டு சுத்திவளைப்பு.. நேராவே கேட்டிருக்கலாமே..”
என்று சொல்லிக் கொண்டே உள்ளே போகத் திரும்ப, வேகமாக ஓடி வந்து அவளை இடைமறித்தான் வஞ்சி.
“தங்கச்சி.. மூண்டு நேரம் எண்டுறதோட விட்டிறக் கூடாது.. நடுநடுவுல மாலைச் சிற்றுண்டிக்கு கொறிக்கவும் ஏதாச்சும் பாத்துக் குடுக்கோணும்..”
“ஓ அப்புடியா குடுத்திட்டாப் போச்சு.. ஆனாப் பதிலுக்கு நீங்கள் என்ன தருவியள்..”
“பதிலுக்கு நான்..”
என்று வஞ்சி முழிக்க, இடையே புகுந்த வியாகேசு
“பதிலுக்கு அவன்.. சாப்பாடு குடுத்த பாத்திரத்தைக் கழுவித் தருவானாக்கும்..”
என்று சொல்லி விட்டு ஓடத் துவங்க,
“இரு தங்கச்சி நான் அப்புறமா வந்து உன்னோட கதைக்கிறன்.. இப்ப பெரிசுக்கு ரெண்டு முதுகுல குடுத்திட்டு வாரன்..”
என்று கொண்டே அவரைத் துரத்தத் தொடங்கினான் வஞ்சிமாறன்.
சில நொடிகள் அவர்களையே சந்தோஷமாகப் பார்த்திருந்த கோதை, தன் வேலைகளைக் கவனிக்க என்று உள்ளே போனாள்.
உள்ளே போன ஜேம்ஸ், வரவேற்பறையிலேயே அமர்ந்து கொண்டு, கால்களைத் தூக்கி முன்னே கிடந்த டேபிளில் போட்ட படி, விட்டத்தை வெறித்தபடி இருக்க, உள்ளே வந்த கோதை அவனை நின்று நிதானமாகப் பார்த்தாள்.
“பாவம் ரொம்ப தூரம் கார் ஓடீட்டு வந்திருப்பார் போல.. ஒரு டீயைப் போட்டுக் குடுப்பம்..”
எனத் தனக்குள் முணுமுணுத்தவள், வேகமாகச் சமையலறைக்கு ஓடினாள்.
வெளியே இருந்தவனது தோரணையிலேயே அவன் களைத்துப் போய் இருக்கிறான் என்பதைக் கணப் பொழுதில் புரிந்து கொண்ட கோதை, அவனுக்கு ஏலக்காய் தட்டிப் போட்டுப் பசுப்பால் ஆற்றி, ஓரமாகக் கிடந்த மண் குவளையை எடுத்து அதனுள் ஊற்றி எடுத்துக் கொண்டு வெளியே போனாள்.
அப்போதும் அவன் அதே போஸில் தான் அமர்ந்திருந்தான்.
மெல்ல நடந்து சென்று அவனுக்கு முன்னால் நின்று, அவனை எப்படி அழைப்பது அவனது பெயர் தெரியாதே என முழித்தவள். மெல்லச் செருமினாள். ஆனால் அவனோ அசைவேனா என்பது போல அப்படியே அசையாமல் விட்டத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
இரண்டு மூன்று முறை அப்படியே இருமியவள், அவன் அசையாமலேயே இருப்பதைப் பார்த்து விட்டு, இன்னும் கொஞ்சம் பக்கத்தில் போய்
“என்னங்கோ..”
என்று அழைத்தாள்.
அந்த என்னங்கோ என்ற ஒற்றைச் சொல்லில், வேகமாக நிமிர்ந்து அவளைப் பார்த்தவனின் கண்கள் பளிச்சிட்டது. ஆனாலும் அந்த பளிச்சிட்ட பார்வை கண நேரத்தில் மறைந்து போக அவனது முகம் வழமை போல அழுத்தத்தைத் தத்தெடுத்துக் கொள்ள, என்னவென்பது போல புருவம் உயர்த்தினான் ஜேம்ஸ்.
கோதைக்கு அவனது புருவமுயர்த்தலே போதுமாக இருக்க,
“நான் இங்க புதுசா வேலைக்கு வந்திருக்கிறன்.. உங்களைப் பாத்தால் களைச்ச மாதிரி இருக்குது.. அதுதான் ஏலக்காய் தட்டிப் போட்டு பசும்பால் சூடாக்கி கொண்டு வந்தனான்.. சூடு ஆறுறதுக்குள்ள குடியுங்கோ.. களைப்பெல்லாம் பறந்து போயிடும்..”
என்று சொல்லிக் கொண்டே குவளையை அவனிடம் நீட்டினாள்.
அவளையும் அவள் நீட்டிய குவளையையும் பார்த்த ஜேம்ஸின் நீல விழிகள் லேசாகச் சுருங்கியது.