இரவின் இருளும், மேகத்தின் அடர் நிறமும் சேர, இருளுக்குள் ஓர் இருள் இணை சேர்ந்தது.
இந்நேரம்தான் தீய சக்திகளுக்கு கொண்டாட்டமான நேரமென்பார்கள். தவறு செய்யத் தூண்டும் நேரமும் இதுவே. பணத்தில் புரளும் மனிதர்கள் மட்டுமே வாழும் பகுதி அது. ஒரு சப்தமும் இல்லாமல் நிசப்தமாகவே இருந்தது.
பெயரளவில் கூட நாய்களோ அல்லது வேறு ஏதேனும் உயிரனமோ அங்கே தென்படவில்லை.
சற்று நேரம் முன்புதான் கூர்க்கா விசில் ஊதியவாறே அவ்விடத்தைக் கடந்து சென்றான். ஊரே அடங்கிட, சற்று நேரம் முன்புதான். மழை நன்கு அடித்துப் பெய்திருந்தது. தரை எங்கும் ஆங்காங்கே மழை நீர் தேங்கிக் கிடக்க நடப்பதற்கு சற்றே சிரமமான பாதை தான் அது. பணக்காரர்களின் வசிப்பிடம்தான் அது. ஆனால் ஏனோ அங்கு சாலை அவ்வளவு சுமூகமாக இல்லை.
நடு ராத்திரியில் இருளைக் கிழித்து சாலையில் தேங்கி நின்ற நீரை சிதறடித்தபடி க்ரீச்சிட்டு நின்றது பகாட்டி லா. இருட்டின் அடர்த்தியான கரிய நிறத்தைக் கெடுக்காது அதுவும் டார்க் பிளாக் கலரில் மேட்ச் ஆனது.
காரின் கதவு ஆட்டோமேட்டிக்காக மேல் நோக்கி உயர்ந்து திறந்திட, அதிலிருந்து இறங்கிய நெடியவன், “கோ” ஒற்றை வார்த்தையை காரை டிரைவ் பண்ணி வந்தவன் மீது துப்பிவிட்டு, அகன்றான்.
இருளை ஊடுருவியவனின் இரக்கமற்ற விழிகளில் எந்தத் தேடலுமில்லை.
அகன்று விரிந்த மார்பு, முறுக்கேறிய புஜங்கள் எதிரியை தாக்குவதற்கென்றே பயிற்சி பெற்றிருந்தது.
நெடிய வலுவான கால்களைத் தரையில் அழுத்தமாய் பதித்து நடக்க, தரையில் பாவியிருக்கும் நீரின் சளக் சளக் என்ற சப்தம் கூட எதிரொளிக்கவில்லை. ஓசையெழுப்பாமல் நடந்தாலும் அவனது காலடியின் அழுத்தத்தில், கல்லாய் இறுகிய முகத்தில், அவனது ஆறடிக்கும் மேற்பட்ட உருவம் மொத்தத்திலும் அவனது அலட்சியமும் திமிரும் ஓவர் லோட் ஆகியிருந்தது.
அவன் எங்கிருந்து வருகிறான் என்ற கேள்விக்கு பதில் சொல்ல அவனுக்கு விருப்பமுமில்லை. கேட்டாலும் தெரிஞ்சு என்னத்த கிழிக்கப் போற என்ற பதிலைக் கடித்துத் துப்புவான். அவன் இருக்குமிடத்தில் அவனுக்கான சூழ்நிலை தானாகவே பொருந்தி நிற்கும்.
அந்தப் பகுதிக்கு பொருத்தமேயில்லாமல் ஒரு குடிசை வீடு. அதை நோக்கித்தான் சென்றது அவனது நெடிய கால்கள். பக்கத்திலிருந்த உயர்ந்த கட்டிடத்துக்கும் அந்த சாலைக்கும் தொடர்பேயில்லாத ஒரு தோற்றம். கோபுரத்தினருகே ஒரு குப்பைத் தொட்டி.
இரவின் இருளோடு கூடல் புரியும் ஆசையில் மேகங்கள் வானில் அடர்ந்தது. இன்னும் மழை வரப்போகிறது என்ற அறிகுறியானது வீசும் காற்றில் தென்பட்டாலும் அவனது நடையில் தொய்வில்லை.
தெருவிளக்குகள் ஒன்று இரண்டு மட்டும் தான் உயிரோடு இருந்தன. விளக்குகளின் மீது பார்வையை பதித்தவனின் உதடுகளில் அலட்சியம் கலந்த எள்ளல் சிரிப்பொன்று உதித்திட, என்னை எதுவும் செய்திட முடியாதென்ற கர்வம் அவனது இறுகிய முகத்தில் எதிரொலித்தது.
காம்பவுண்ட் சுவற்றில், ஒரே தாவாகத் தாவி ஏறியவன், மறுபுறம் எட்டிக் குதித்தான், குதித்தவன் சற்று நகர்ந்து மறைவாக நின்று சுற்றிலும் நோட்டமிட்டான் யாரேனும் வருகிறார்களா என்று. அவவீட்டில் நாய்கள் கூட இல்லாமலிருக்க, இகழ்ச்சிப் புன்னகையொன்றை அவனது உதடுகள் உதிர்த்தது.
இவ்வளவு பெரிய வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர இல்லாது இருக்கிறது. அப்படி எனில் தவறுகள் மிக எளிதாக நடக்கலாமே. அந்த வீட்டைச் சுற்றியிலும் தன் பார்வையை சுழல விட கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
சில இடங்களில் மின்சார வயர்களும் பொருத்தப்பட்டு இருக்க. கவனமாக கால் வைத்து நடந்தான்.
பைப்பில் சரசரவென கால்களைப் பதித்து கைகளால் உடும்பாய் பற்றிக் கொண்டு ஏறியவன், ஜன்னல் வழியே கண்ட காட்சியில் திகைத்துப் போனான்.
அங்கே ஏற்கனவே இறந்து கிடந்தார், அதித்யாராஜ். இந்தியாவில் முக்கியப் பிரஜை.
கட்டிலின் அருகே நின்றிருந்த யுவதியின் கையில் கத்தி, அதிர்ச்சியில் விரிந்த பூனை விழிகள், அவளது கைகளில் ரத்தக் கரைகள், பார்த்தவனின் இதழ்களில் ஒரு ஏளன சிரிப்பொன்று உதயமாக, என்ற எண்ணம் உதிக்க, தோள்களை அலட்சியமாய்க் குலுக்கிவிட்டு வந்த வழியே இறங்கப் போக.
“ஹேய் மேன். டோன்ட் மூவ்” அவனை நோக்கி சுட்டுவிரலை உயர்த்திக் கூறியவள், அங்கே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கைகளை சுத்தமாக கழுவிவிட்டு, அவனிருந்த திசையில் பாய்ந்து வந்தாள்.
அவனோ அவளது மொழியைக் காதில் வாங்காது வந்த வழியே இறங்கினான்..
ஒருக்கணம் இங்கேயே தாமதித்து நின்றாலும், செய்யாத குற்றத்தை தன் தலையிலேயே முழுக்க முழுக்க சுமத்தும் அபாயம் உண்டு. இப்போதைக்கு இவனோடு சென்றால்தான் தான் தப்புவோம் என்றுணர்ந்து அவனை அழைக்க, அவனோ அவளை சட்டையே செய்யாது இறங்கினான்.
“மைகாட். போறானே போறானே” செய்வதறியாமல் நின்றவள், சுதாரித்து ஜன்னலருகே ஓடி வந்தாள்.
ஜன்னலைத் திறந்தவள், அதன் வழியே கால்களை பதித்து வெளியே வந்தவள், அப்படியே அவனது முதுகில் வவ்வால் போலத் தாவி அமர்ந்தாள். ஜன்னலின் கம்பிகள் முழங்காலுக்கும் கீழே நன்றாக கீறியிருக்க, வலி உயிர் போனது அவளுக்கு.
திடுமென அவள் தன் மீது தாவி ஏறியதால், கால் சிலிப் ஆகிட, தலை குப்புற விழப்போய், கால்களை ஜன்னலில் ஊன்றி சமாளித்தான். “ஹேய் இடியட்!” சீறியவன் அவளை உதறித் தள்ளிட முயன்றான்.
“ஹேய் ஹேய் ப்ளீஸ். கால்ல அடிபட்டிருக்கு. இங்கருந்தா மாட்டிப்பேன். ஹெல்ப் ஹெல்ப்” அவனது இடையில் தன் கால்களை பின்னிக் கொண்டு, தோள்களைக் கட்டிக் கொண்டு கெஞ்சியவளை ஏதும் செய்ய முடியாத சூழ்நிலை அவனுக்கு.
மூன்றாவது மாடியின் பைப்பில் அவன் தொங்கிக் கொண்டிருக்க, அவனது முதுகில் அவள். உள்ளேயோ கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த டெட் பாடி.
இந்த இடத்திலிருந்து விரைவாக செல்வதே நலம்.
அதனால் புதிதாக தோளில் விழுந்த சுமையையும் சுமந்தவன் வந்த வழியே வெளியேறினான்.
‘வாட் எ மேன்!’ அவனது வீர தீரத்தை மெச்சியது அவள் உதடுகள்.
யானை மீது பறவைகள் அமர்ந்தால் அதன் சுமை அதற்கு உரைக்குமா என்ன. அது போலத்தான் இவளது சுமையும் அவனுக்கு உரைக்கவில்லை.
அவளது தோளில் வவ்வால் போலத் தொங்கிய பெண்ணிற்க்கு பயத்தில் தேகமெங்கும் வெடவெடத்துப் போக, எங்கே மயங்கிப் போய் விழுந்து விடுவோமோ என்று அஞ்சினாள்.
அவனது தோள்களை இறுக கட்டிக் கொண்டவள், “ஹேய் மேன். மயக்கம் வர மாதிரியே தலைக்குள்ள கிர்றுன்னு இருக்கு. என்னோட கையப் புடிச்சுக்கறியா?” அவன் காதோரம் எட்டிக் கேட்டாள்.
“மூடிட்டு வர்றியா. இல்ல தூக்கி வீசிட்டுப் போயிட்டே இருக்கவா?” அவனது சீற்றத்தில் அடிவயிற்றில் நெருப்புப் பற்றியது போல வெடவெடத்துப் போனவள் இன்னும் அவன் கழுத்தை இறுக்கினாள் கைகளால்.
“ஏற்கனவே ஒரு கொலையைப் பண்ணியாச்சு. இப்ப என்னையும் போட்டுத் தள்ள பிளானா?”
“நோ” அவளது அலறல் நிசப்தத்தை கலைக்க.
“ஏய் வாய மூடு. இல்ல இங்கயே யாரு கையிலயாவது சிக்கிக்க” அவளுக்கும் மேல் அவன் சப்தமிட.
வாயை மூடிக்கொண்டாள். இருட்டில் இருவரது பயணமும் தொடர்ந்தது.
ஆனால் அதுவும் சில நேரம்தான். காற்றாற்று வெள்ளம் கூட அடங்கிப் போகலாம். இவள் அடங்கினால் அது அதிசயம்தான்.
“ஹேய் மேன் நீ எதுல வந்த?” திரும்பவும் ஆரம்பித்தாள்.
“…”
“நடு இரவு, நடுரோட்டில் எந்த வாகனமும் குறுக்கே மறுக்கே வராம நாம மட்டும் இப்படி நடக்கறது நல்லா இருக்கு” அனுபவித்து சொன்னாள்.
“நடக்கறது நான். நீயில்ல” அத்தனை திமிர் அவன் பேச்சில்.
‘திமிர் பிடிச்ச கொரில்லா’ தான்தான் அவன் தோளில் குரங்கு போல தொற்றிக் கொண்டு வருகிறோம் என்பதை உணராது அவனைக் கொரில்லா குரங்கு என மனசாட்சியே இல்லாது சாடினாள்.
“உன் பேரென்ன?” அவன் தோளில் இருகைகளையும் வளைத்துப் பிடித்து, கால்களை அவனது இடையில் போட்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தவளுக்கு நடக்கும் அவசியமில்லாது போகவும், பொழுது போகாமல் பேச்சுக் கொடுத்தாள் அவனிடம்.
கொடிய மிருகத்தின் குணமரியாமல் சீண்டிப் பார்க்குமாம் சிறு விலங்கு. அதுபோலத்தான் இவளும் அவன் யார் என்பதை அறியாமல் சீண்டிப் பார்த்தாள்.
“உன் பேரென்ன மேன்?”
“தவன்!” எரிச்சலோடு வார்த்தைகளை உதிர்த்தான்.
“இப்ப எங்க போறோம்?”
“ஹேய் ஜஸ்ட் க்ளோஸ் யுவர் இடியட் மவுத்?” நிசப்தமான நேரத்தில் அவனது குரல் காதையே அடைக்க, வாயை மூடிக் கொண்டாள். கால் வேறு உயிர் போக வலிக்க, நடக்கவும் முடியாது.
அங்கே டெட் பாடி இருக்கும் வீட்டில் தான் தங்கியதற்கான அடையாளமும், செத்தது தெரியாமல் எழுப்பியதால் அதன் உடையில் அவளுடைய கைரேகையும் நன்றாகப் பதிந்திருந்தது.
எப்படியும் தன்னை தேடிக் கண்டறிந்து விடுவார்கள். அதனால் இப்போதைக்கு இவனோடு செல்வதே குட் டிசிசன். தப்பிக்கும் வழி இருக்கப் போய்தான கொலை பண்ண வந்திருக்கான்? உதட்டை சுளித்தவள் அவனது சிந்தனையை அறிந்திருந்தால், இப்போதே தவழ்ந்து போயாவது போலீசில் சரணடைந்திருப்பாள்.
அவன் யார்? நல்லவனா, கெட்டவனா, அவனோடு செல்வது சரியா? தவறா? காப்பாற்றுவனா இல்லை நாசமாக்குவானா எதைப் பற்றியும் பயமும் இல்லை, யோசிக்கும் அவகாசமும் அவளுக்கில்லை.
ஆனால் அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் எண்ணம் அவளை உந்தித் தள்ள, மூடிய வாயை மீண்டும் திறந்தாள்,
அவளது கேள்விக்கு அவன் பதில் தரவில்லை, தர விரும்பவும் இல்லை. அலட்சியமாக நடந்தான் சாலையில்.
“கொலை பண்ண வந்தியா? திருட வந்தியா?”
தவனின் நடை நிற்க, இருட்டில் அவனது விழிகள் மின்னிட இருக்குமிடத்தை ஆராய்ந்தது. தகவல் அறிந்து காவலர்கள் வருகிறார்கள் என்பதை அறிந்தவன், காட்டுப்பாதையின் சரிவில் இறங்கி நடந்தான்.
“நீ நல்லவனா கெட்டவனா?” அவளுக்கு வாய் கொழுப்பு அதிகம்தான்.
“நான் நல்லவன் இல்லை” எகத்தாளமாய் வந்தது வார்த்தைகள்.