அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்தவன் பத்தே நிமிடங்களில் குளியலை முடித்துக் கொண்டு கூடத்துக்கு வரவும், மான்ஷி துள்ளலும் நடையுமாக வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது.
அவனைக் கண்டதும் தடுப்பு போட்டாற்போல் தன் நடையை நிறுத்திக் கொண்டவளின் கண்களில் ஹார்டின் பறந்தது. காதலின் உச்ச கட்டத்தில் அவனைச் சுற்றி உலா வந்து கொண்டிருக்கிறாள் பாவை, விளக்கைச் சுற்றி வட்டமிடும் விட்டில் பூச்சியாய்!
தலை துவட்டியபடி, அவளைக் கண்டும் காணாத பாவனையில் டைனிங் டேபிளில் சென்றமர, அதற்காகவே காத்திருந்த வேலைக்காரப் பெண் காமினி அவனுக்கு உணவு பரிமாறினாள்.
சற்றுநேரம் மௌனமாய் அவனது முகத்தையே சிந்தனை மீதுறப் பார்த்திருந்த மான்ஷியிடமிருந்து சோகப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
கூடவே, ‘நீ மயங்கி விழுந்தேல்ல? ஜன்னல் கேர்டன்ஸை ஓரந்தள்ளிட்டு, ரூம்குள்ளேர்ந்து உன்னை தான் யுகி பையா பார்த்துட்டே இருந்தாரு. லேப்டாப்பை திறந்து வைச்சுக்கிட்டு வேலை செய்றதெல்லாம் சும்மா ஒரு கண் துடைப்பு..’ என நேற்று அவள் கூறிய நினைவில் முகம் கனிந்தாள்.
நேற்று மயக்கம் தெளிந்ததும், வரண்டிருந்த தொண்டையை நனைத்துக் கொள்வதற்காக சமையலறை சென்றிருந்த நேரத்தில் காமினி உண்மையைப் போட்டு உடைத்திருந்தாள்.
இது இன்று நேற்றல்ல, எப்போதெல்லாம் அவளை அளவுக்கு அதிகமாக காயப்படுத்துகிறானோ, அன்றெல்லாம் சகோதரியாய் பழகும் காமினியிடமிருந்து உண்மை அம்பலமாகி விடும்.
இப்போது கூட, என்றும் போல், ‘ஒருவேளை அந்த வேலையாளை ஏவி இவனே தான் என் மயக்கத்தை தெளிவுச்சு இருப்பானோ?! பிறகு இவன் திட்ட, அவன் மன்னிப்பு இறைஞ்ச.. ப்ச், எல்லாம் செட்டப் ட்ராமாவா இருக்குமோ..’ என்று தான் தோன்றியது.
ஏதேதோ சிந்திக்கத் தோன்றியது.
அவற்றை ஓரந்தள்ளி விட்டு, காமினிக்குக் கண் காட்டி விட்டு மெல்ல நகர்ந்து வந்து அவனருகே நின்று கொண்டவள், அவள் அங்கிருந்து நகரும் வரை காத்திருந்து விட்டு,
“இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்தவா யுகன்?” என்று கேட்டுக் கொண்டே அவனுக்கு பரிமாற வர, அடுத்த நொடி தட்டு கீழே தூக்கி எறியப்பட்டு இட்லிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிதறின.
“உன்னை என் பக்கத்துல வர வேணாம்னு சொல்லி இருக்கேன் இல்ல? ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்ணுற.. மனுஷனை நிம்மதியா இருக்க விடவே மாட்டியா நீ?” என சத்தம் வைக்க,
“ரொம்ப பண்ணாதய்யா!” என கடுப்புடன் முனகினாள் மான்ஷி.
“என்னை டென்ஷன் ஏத்தாத! உன்னை இந்த வீட்டுக்குள்ள விட்டு வைச்சிருக்க ஒரே காரணம், சின்ன வயசுல கைக்குள்ள வைச்சு வளர்த்த நாயி, எவ்ளோ துரத்தினாலும் ஓடிப் போக மாட்டேங்குதேங்குற ஆதங்கம் தான்..
எவ்ளோ திட்டி அசிங்கப்படுத்தினாலும் சொரணை இல்லாம ஓடியோடி இங்கயே வர்ற! திட்டி, விரட்டி நானும் ஓய்ஞ்சு போய்ட்டேன். இப்போ திறந்து வைச்சிருக்கேன், வர்றவன் எல்லாம் அனுமதி இல்லாம வந்துட்டு போகட்டும்னு!
அக்கறை காட்டறேன்ங்குற பெயருல என்கிட்ட உரிமை எடுத்துக்க ட்ரை பண்ணாத.. இன்னொரு தடவை இதை என் வாயால, இந்தளவு பொறுமையோட சொல்லிட்டு இருக்க மாட்டேன்.
உங்க யாரோட சக்கரையையும் நான் எதிர்பார்க்கல. இன்னொரு வாட்டி பக்கத்துல வந்தா ஐ வில் கில் யூ டெஃபனெட்லி!” எனப் பல்லிடைக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
அவனது பார்வை அவளை துச்சமெனப் பார்த்திருக்க, வாயோ சரமாரியாக சொல்லம்புகளினால் பாவை மனதைக் குத்தி கிளறிக் கொண்டிருந்தது.
இது ஒன்றும் புதிய விடயமில்லை தான் என்றாலும், அவனின் கோபத்தில் உள்ளுக்குள் கிலி பரவி சற்று நகர்ந்து நின்றவளின் கண்கள் ஏகத்துக்கும் கலங்கிச் சிவப்பேறிப் போயிருந்தன.
எவ்வளவு தான் கேவலமாகப் பேசினாலும் ‘என் தன்மானத்தை சீண்டி விட்டாய்!’ என அங்கிருந்து புறப்பட்டுச் செல்லாமல் சொரணை கெட்டு அவன் காலடியிலே விழுந்து கிடப்பாள் பைத்தியக்காரி.
ஏதோவொரு காரணம் அவனை தன் பால் நெருங்க விடாமல் தடுத்து, அவனை வருத்திக் கொண்டிருப்பதாய் மனதார நம்பியவளுக்கு, தன் நெருக்கம் அவனை இம்சிக்கிறதென புரிந்தது.
ஆதலால் தான் எவ்வளவு துரத்தி விட்டாலும் ‘போடாங்..’ என ரோஷம் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவனிடமே ஓடி வருகிறாள்.
பிபி எகிறி மணிக்கணக்கில் அவளைக் கேவலமாய் திட்டி அவன்தான் வீணாகக் களைத்துப் போவானே தவிர, மறுவார்த்தை பேசாமல் சொல்வதை எல்லாம் இந்தக் காதால் வாங்கி மற்ற காதால் வெளியேற்றி விடுபவளிடம் எந்த முன்னேற்றமும் இருக்காது.
ஒரு கட்டத்தில் சலித்துப் போனவனாய், ‘என்ன பெண்ணிவள்! இவ்வளவு திட்டியும் அப்படியே நின்று கொண்டிருக்கிறாளே’ என அற்பப் புழுவை பார்ப்பது போல் கடந்து செல்லப் பழகி இருந்தான்.
அவனால் வளர்த்து ஆளாக்கப்பட்ட குட்டி மான்ஷி.. சிறு வயதிலே அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட மான்ஷி.. தன்னால் உயிரெனக் கருதி நேசிக்கப்பட்ட மான்ஷி.. அவள் இவளல்ல. அவள் மிகுந்த தன்மானம் உடையவள்!
யாராவது தன்மானத்தை சீண்டி விட்டால், பதிலுக்கு பெண் அரிமாவாய் சீறி சம்பந்த நபரின் பெயரைக் கெடுக்காமல் ஓய மாட்டாள். ஆனால் இப்போது முழுதாக முழுதாக மாறிவிட்டாள் என்பதை விட, அவனின் மாற்றம் அவளை இந்தளவுக்கு மாற்றி விட்டது எனச் சொல்வதில் தவறில்லை.
கடந்த காலத்தை நினைக்கும் போது ஆடவனிடமிருந்து பெருமூச்சொன்று வெளிப்பட்டாலும், அவளின் நடத்தை கண்டு எரிச்சலும் சற்று அதிகமாகவே வந்து தொலைத்தது.
“ச்சை!” எனக் கைகளை உதறியவன், கோபத்துடன் இருக்கையை ஓங்கி உதைந்து விட்டு அங்கிருந்து நகர முயல,
“சாப்பிடாமலே போறியா யுகன்? ப்ளீஸ், ஐம் சாரி!” என்ற கிள்ளையின் கெஞ்சல் குரல் முதுகுக்குப் பின் ஒலித்தது.
கண்களை மூடித் திறந்தான் யுகன். ஆழ மூச்சிழுத்து தன்னை ஆசுவசப்படுத்திக் கொள்ள முயன்றவன், தன் முயற்சியில் தோல்வி எய்தியவனாய் இருக்கையை தூக்கி அவளை நோக்கி எறிந்தான்.
பதறி இரண்டடி பின்னகர்ந்து நின்றவள் ஏதோ கூற வாயெடுப்பதற்குள்,
“ஷட்டப் இடியட்! நான் திரும்ப இந்த இடத்துக்கு வரும்போது நீ இங்க இருக்கக்கூடாது.” என்று எச்சரித்து விட்டு அறைக்குள் சென்றடைய,
“ஸ்ஸ்.. ஒருநாள் இல்லனா ஒருநாள், இவன் கத்துறதை கேட்டே என் காது அவுட் ஆகிட போகுது. என்னமா கத்தி தொலைக்கிறான்? மானுனு என் பின்னாடி உருகி வழிஞ்சவன் இவன்தானா? என்ன ம*த்துக்கு இப்படி அவொய்ட் பண்ணி தொலைக்கிறான்..” என சலித்துக் கொண்டவள் இரண்டு இட்லிகளை பொறுமையாக உள்ளே தள்ளினாள்.
இங்கே அவலம் என்னவென்றால், அவனின் அருகாமையின்றி உணவும் கூட உள்ளிறங்க மறுக்கிறது. வயிறு பசியில் கூப்பாடு போட்டு களைத்துப் போனாலும் சாப்பிட மனமின்றி திரும்பி படுத்துக் கொள்வாள்.
வீட்டுக்கு சென்றாலும் உண்ணப் போவதில்லை என்ற உண்மை புலப்பட்டதால் தான் இப்போதே அவசர அவசரமாக இரண்டு இட்லிகளை உள்ளே தள்ளியது!
அறைக்கதவு திறக்கப்படும் சத்தத்தில் துள்ளி எழுந்தவள் கைப்பையை எடுக்க மறந்து அங்கிருந்து ஓடி விட முயல,
“இதையும் எடுத்துட்டுப் போ..” என்ற யுகனின் கணீர் குரலைத் தொடர்ந்து கைப்பை அவளது முதுகில் வந்து மோதி கீழே விழுந்தது.
திரும்பி அவனை முறைத்தவள், “பேக்ல என் ஃபோனும் இருக்கு யுகன்..” சற்று கோபமாகக் கத்த வர,
“இன்னுமே போகலையா நீ..” என்று கேட்டவன் சோபாவிலிருந்து எழுந்து நின்றான் நிதானமாய்.. அதற்கு மேலும் அங்கு நின்றிருக்க அவள் என்ன பைத்தியமா?
கைப்பையை தூக்கிக் கொண்டு குடுகுடுவென ஓடி மறைந்தவள், மீண்டும், மாலை மங்கும் நேரத்தில் அவன் கண்முன் தான் வந்து நின்றாள்.
கெட்ட வார்த்தைகள் யாவும் மறந்து விட்ட தோரணையில், சலிப்புடன் அறைக்குள் நுழைந்து கொண்டான் யுகன்.
தூங்குபவனை தட்டி எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவனை என்ன செய்வதென்ற கடுப்பு அவனுக்கு!
*******
“இன்னும் ரெண்டு நாள்ல ஹைதராபாத் கிளையன்ட்ஸ் கூட சார்க்கு மீட்டிங் இருக்கு. மீட்டிங்காக இங்க வரவங்க கூட அவரும் அங்க போய்டுவாருனு ஒரு தகவல். திரும்பி வர எப்படியும் ஒருவாரம், பத்து நாள் ஆகலாம்னு நினைக்கிறேன்.
நடக்க போற மீட்டிங் ஆல் இந்தியன் கிரேட் பிசினஸ்மேன்ஸ் கூட நடக்க போகுதாம். தலைமை யுகி பையாவுக்கு! வரவங்க..” என்று மூச்சு விடாமல், தேவையான விடயங்களை எல்லாம் அலைபேசி வழியாக இன்னொரு காதுக்கு கடத்திக் கொண்டிருந்தான், குமரன். யுகேந்தின் வலது கை!
தனக்குத் தெரிந்தவற்றைக் கூறி முடித்துப் பெருமூச்சு விட்டவன், “இதெல்லாம் என் காதுபட கேட்ட தகவல்கள். இன்னுமே டைரக்ட்டா விஷயத்தை யுகி பையா என்கிட்டயோ மத்தவங்க கிட்டயோ சொல்லல கரண்சிங்! இன்னும் ரெண்டு நிமிஷத்துல பிலைட்னு இருக்கும் போது சொல்லுவாரு..” என்று கூறினான், தன்னைப் போன்றவர்களுக்கு இங்கே முன்னுரிமை கிடைக்கப் போவதில்லை என்ற ஆதங்கத்துடன்.
“யுகேந்த் இங்கிருந்து ஹைதராபாத் புறப்பட்ட அடுத்த நொடி எனக்கு தகவல் வரணும் குமரன். உனக்கு நான் கொடுத்த உரிமை வேற யாருக்கும் கொடுத்ததில்லை என்னோட இடத்தில! அது உனக்கே தெரியும்..” என விடயத்தை அந்த அண்டாவாயனிடம் கரக்கும் நோக்கில் உருக்கமாகப் பேசினான், கரண்சிங்.
உற்சாகத்துடன் சரியென்றவன் சற்று நேரம் வாயாலே வடை சுட்டு விட்டு நல்லவன் வேஷம் அணிந்து கொண்டு யுகேந்தைக் காண அவனின் கோட்டைக்குள் நுழைந்தான்.
அதன் பிறகு தான் அவனின் கத்தி வீச்சை வாங்கிக் கொண்டு கீழே சரிந்து, துடிதுடித்து இறந்து போனதெல்லாம்!
கரண்சிங்கோடு பேசி சரியாக ஒரு மணி நேரம் கூட தாண்டாத நிலையில் அவனுடன் குமரன் உரையாடியதை இவன் எப்படி அறிந்தான் என எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குமரனின் மரணத்துக்கான காரணம் என்னவென்று எவரும் அறிய முற்படவுமில்லை.
சிகரெட் புகையை பொறுமையாக வெளியேற்றியபடி, மற்றொரு கையால் அருகில் இருந்தவனின் கையைப் பலங்கொண்ட மட்டும் முறுக்கிக் கொண்டிருந்தான்.
“யுகி பையா! த்..தெரியாம உங்க வழியில குறுக்கா வந்துட்டேன். விடுங்க.. ஆஆ.. பையா, ஸ்ஸ்ஸ்..” என வலியில் கதறிய குரலெல்லாம் யுகனுக்கு கேட்கவே இல்லை போலும்!
செவிடன் போல் நின்றிருந்தவன் அவனின் கத்தலில் மனமுருகவும் இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.
இரவு வானை வெறித்தபடி படுரசனையுடன் சிகரெட் புகையை சுருள் சுருளாக வெளியேற்றிக் கொண்டிருந்தான்.
மொட்டை மாடிக்கு வரலாம் என மன அமைதிக்கென வந்தவனை பின்னிருந்து தாக்க வந்து வசமாக மாட்டிக் கொண்டு விட்டான் மற்றவன்.
அவனைப் பற்றி ஊரே அறிந்து, இரண்டு வார்த்தைகளை நேரில் நின்று பேசவே தயங்கும் பட்சத்தில் வந்தவன் மட்டும் விதி விலக்கா என்ன.. ஆனால் கையில் வந்து சேர்ந்த பணக்கட்டைக் கண்டு பயம் மறந்து யுகனை தாக்க வந்து விட்டவன் இதோ இப்போது வலியில் அலறிக் கொண்டிருக்கிறான்.
விடாமல் கத்திக் கொண்டிருந்தவனை எண்ணிப் பரிதாபமாகத் தான் இருந்தது. ஆனால் தன்னைத் தாக்க வந்த கை உடைந்து, அவன் மரண வலியில் அலறும் வரை விட்டு விடவில்லை. அப்படி விட்டால் அவன் யுகனும் அல்லவே!
வலியில் அலறிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “ஷ்ஷ்..” உதடுகளுக்கு குறுக்காக ஆள்காட்டி விரலை வைத்து சத்தம் போடாதே என செய்கை செய்ய, அதற்கு மேலும் அலற அவன் ஒன்றும் வாழத் தெரியாதவன் அல்லவே..
வலியை பற்களைக் கடித்து விழுங்கிக் கொண்டான். கண்ணீர் ஆறாக வழிந்தது.
“கரண்சிங் கிட்ட போய் அடுத்த வாட்டி நல்ல ஆளா அனுப்பி வைக்க சொல்லு டியூட். வர்றவன் எல்லாம் முதுகெலும்பு இல்லாதவனுங்க. லேசா கையைப் புடிச்சாலே அலறித் துடிக்கிறானுவ! இப்படியே போனா இந்த கேமும் எனக்கு போர் அடிச்சிடும்..” என நக்கல் வழித்தோடும் தொனியில் கூறியவனை உடைந்த கையை தாங்கிக் கொண்டு பயப்பார்வை பார்த்தான் வாலிபன்.
“ச்சு! இன்னும் எதுக்கு நின்னுட்டு இருக்க? இடத்தைக் காலி பண்ணு!” என்று அதட்டியவன் சிகரெட்டை நசுக்கி அணைத்து விட்டு நிமிரும் போது அவன் அங்கிருக்கவில்லை.
கையை மற்றொரு கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டிருந்தான்.
அலுப்புடன் கை நீட்டி சோம்பல் முறித்தவன், “பையா..” என்ற அழைப்பில், “சொல்லு இந்தர்..” என்று கொண்டே திரும்பினான்.
அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட, உயிர் தோழனுக்கு அடுத்ததாய் அவனுக்கு நம்பிக்கையானவன் தான் இந்தர். அந்த வீட்டில் சமையல் வேலை பார்க்கும் காமினி, அவனின் மனைவி.
அவர்கள், இரு வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியில் மனமொத்து திருமணம் செய்து கொண்டவர்கள். காமினியின் தந்தை ஒரு மாதிரியான ஆள்!
அவரால் தங்களுக்கு ஆபத்து நேரிடக் கூடும் எனப் பயந்து கடைசியாக இருவரும் வந்து சரணடைந்தது யுகனிடம்.. இந்த ஊரில் பாதுகாப்பான இடமென்றால் அது ‘யுகேந்த்ராவ் மேன்ஷன்’ மட்டுமே!
பாதுகாப்புக்கென சரண் புகுந்து விட்டால் அதன் பிறகு வாழ்நாள் பூரா அவனின்/அவளின் பாதுகாப்புக்கு அவன் கியாரண்டி.
சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் நடந்தேறி நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. மூன்று வயதில் ஒரு குழந்தை. பெயர் இந்து!
உண்ணக் கொடுத்த வீட்டுக்கு இரண்டகம் செய்யாமல் இன்று வரைக்கும் அவனுக்கு பாத்திரமாய் தான் நடந்து கொண்டிருக்கின்றனர் இருவரும்.
படைகளோடு மகளையும் மருமகனையும் தாக்க வந்த காமினியின் தந்தை, யுகனின் கோட்டைக்குள் அவர்கள் இருக்கும் விடயத்தை அறிந்து கொண்டதும் பின்வாங்கி திரும்பி விட்டார்.
பிறகு, யுகனின் ஏவலின் பேரில் பக்கத்து ஊருக்கு சென்றிருந்த இந்தரை காமினியின் தந்தை ஆள் வைத்து தாக்கியதன் பொருட்டு, வயதான காலத்தை கட்டிலோடு கழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிப் போனது அவருக்கு.
அவர்களுக்கு, ஒரு படுக்கையறையுடன் கூடிய அளவான வீடு கோட்டைக்குப் பின்னாலே கொடுக்கப்பட்டிருந்தது.
வீட்டில் சமையல் வேலை பார்க்கும் பெண், இந்தரின் கெஞ்சலில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டு, அந்த இடம் அன்றிலிருந்து காமினிக்கு சொந்தமாக்கப்பட்டு இருந்தது.
“பையா, அந்த குமரன் விஷயம்..”
“அவனுக்கு தாலி கட்டின ஒரு பொண்டாட்டியும், சின்ன வீடு ரெண்டும் இருக்கு. பொண்டாட்டிக்கும், குழந்தைங்களுக்கும் மாதா மாதம் செலவுக்கு போதுமான பணத்தை ஏற்பாடு பண்ணிடு. அன்ட் தென், அவனோட மூத்த பையன் ஊருல தறுதலையா சுத்திட்டு இருக்கான்னு கேள்வி. அவனையும் கவனிச்சுக்க..”
‘கவனித்துக் கொள்’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை சரியாகவே புரிந்து கொண்ட இந்தர் கோணல் சிரிப்புடன் தலை அசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.