Home Novelsதேனிறைக்கும் சீதளநிலவே!தேனிறைக்கும் சீதளநிலவே – 04

தேனிறைக்கும் சீதளநிலவே – 04

by Hilma Thawoos
4.8
(8)

மக்கள் அதிகமாகப் புலங்கும் அந்த நாலடுக்கு ஷாப்பிங்மாலின் முன், அரை போதையில் தள்ளாடியபடி கடந்து செல்லும் பெண்களிடம் வம்பளந்து கொண்டிருந்தான் ஒருவன்.

தன்னைப் பார்த்து அஞ்சி தள்ளி நின்ற யுவதிகளின் கரம் பற்றி இழுத்து அவர்களிடம் வம்பளக்க, கடுப்பாகி அவனை கை நீட்டி அறைந்தே விட்டாள் அவர்களில் ஒருத்தி.

அவமானத்தில் முகம் கறுத்தவன், “ஹேய்! யூ!என்னையே அடிச்சிட்டல்ல.. நான் யார்னு தெரியுமா உனக்கு?” என்று தள்ளாட்டத்துடன் கேட்டபடி நேராக நிற்க முடியாமல் அவள் மீதே விழப் போக,

“ஸ்டே அவே!” என விரல் நீட்டி எச்சரித்தவள் பொறுமையாக இரண்டடி பின்னகர்ந்து நின்று கொண்டு,

“நீ யார்னா கேட்குற? ஹாஹா, யாரா இருந்தா எனக்கென்ன.. கண்டவ கையை பிடிச்சி இழுத்துக்கிட்டு போதைல அலையிற நீயெல்லாம் நல்ல அப்பனுக்கு பொறந்தவன் இல்லனு தெரியுது!” என்றாள், அருவருப்பில் சுழிந்த உதடுகளுடன்!

“ஏய்ய்!” என எகிறிக் கொண்டு வந்தவனது வயிற்றிலே ஒரு குத்து வைத்தவள்,

“என்னடா எகிறிட்டு வர? ரொம்ப நல்லவன் மாதிரியில்ல சீறிப் பாய்ற.. ச்சீய்! முதல்ல போய் மனுஷனா வாழ பழகு. அப்பறம் அவனை மதிக்க பழகு. பிறகு இந்த உலகம் உன்னை மதிக்கும்..” என்றாள், ஏளனக் குரலில்.

இவனிடம் பேசி பயனில்லை எனத் தெரிந்தாலும், சூழ்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்காவது உறைக்கட்டும் என்ற நினைப்போடு தான் கூறினாள்.

ஒரு வயதுப் பெண்ணிடம் நடு சாலையில் வம்பு செய்கிறானே.. அவனை அதட்டி இரண்டு கேள்வி கேட்டால் என்ன என்ற எண்ணமின்றி, ‘ஃப்ரீ ஷோ’ பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை பார்க்கும் போது பற்றிக் கொண்டு வந்தது பூம்பாவைக்கு.

“ஹே.. ஹேய்! இவன் ரொம்ப மோசமானவன்டி. எதுக்கு வீண் வம்பு? வா, நம்ம போலாம் மைதிலி..” எனப் பயத்தில் வெளிறிப் போன முகத்துடன் சாந்தனா தோழியின் வாயை அடைக்க முயன்றாள்.

“ப்ச், விடுடி! இந்த மாதிரி பொறுக்கிங்க எல்லாம் தட்டி கேட்க ஆளில்லைங்கிற தைரியத்துல சுத்திட்டு இருக்கானுங்க. சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறாங்களே தவிர அதட்டி ஒரு கேள்வி கேட்குறாங்களா, பாரு.

இதனால தான் இந்த கழிசடை நாய்ங்க இன்னுமே உருப்படாம தைரியமா சுத்திட்டு இருக்காங்க. பொறுக்கிப் பய!

இன்றைக்கு இவனை நான் சும்மா விடப் போறதுல்ல. எவ்ளோ தைரியம் இருந்தா என் கையைப் புடிச்சு இழுப்பான்?” என தோழியிடம் எகிறிய மைதிலி, அவன் புறம் தன் பார்வையை ஓட்டினாள்.

“ஏய்!!” என மீண்டும் சீறியவனை,

“ஏய் ச்சி, கம்முனு கெட!” என முறைப்புடன் அடக்கியவள்,

“அதில்ல, நீ யாருனு கேட்டல்ல என்கிட்டே? நீ என்னடா சொல்றது! உங்கப்பன் பெரிய அப்பாட்டக்கரா.. இல்ல இந்த நாட்டு மந்திரியா? நான் சொல்றேன் கேட்டுக்க, நான் யுகி பையாவோட ஒரே மச்சினி.

உடனே ஒரு கால் போட்டு அவரை இங்க வர வைச்சா உன் கதை கந்தல் தான். அப்பறம் உனக்கு இந்த மண்ணுல இடமிருக்கானு கேட்டா, கண்டிப்பா இல்லை.” என்றதோடு மட்டுமல்லாமல், கோபத்தில் நடுங்கிய விரல்களால் அலைபேசி திரையில் தட்டினாள்.

‘யுகி பையா’ என்றதும் குலை நடுங்கிப் போயிருந்தவன் அவள் அழைப்பு விடுக்கப் போவது கண்டு பதறிப் போனவனாய்,

“அவருக்கு கால் பண்ணாத! பேயடி அடிச்சு ஒரே நாள்ல என்..னை கொன்னுடுவாரு.” என வாய் குழறினான்.

“இவ்ளோ பயம் இருக்கிறவன் என்ன ம**க்கு அவர் இருக்கிற ஏரியாலேயே பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்துக்கணும்? கொஞ்சமும் பயமில்லாம போதையிலே ரோட்டுல நடமாடணும்..” என்று நக்கல் வழியும் குரலில் கேட்டு நகைத்தாள், மைதிலி.

“லுக், ரெண்டு நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு, இருந்த இடத்துக்கும் உத்தரவில்லாம ஓடிப் போய்டு!”என்று கூறி தன் காலை நீட்டிக் காட்ட,

“விட்டுருடி..” என அவளின் காதோரம் ஈனஸ்வரத்தில் முனகினாள் சாந்தனா.

இவனின் இந்த அசிங்கத்துக்கு காரணம், ஒன்றோ அவனது தந்தையின் அதிகாரமாக இருக்கும். இல்லையேல் எது நடந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்காக இருக்கும். இவனிடம் வம்பளந்து வீண் பகையை வளர்த்துக் கொள்கிறாளே என பயமாக இருந்தது அவளுக்கு.

முடியாதென மறுத்தவளை கெஞ்சிக் கொஞ்சிக் கெஞ்சி ஷாப்பிங்மால் அழைத்து வந்ததற்காக நன்றாக செய்து விட்டாள் என மனதினுள்ளே புலம்பித் தீர்த்தாள் சாந்தனா.

அவளின் நீட்டப்பட்ட காலைப் பார்த்ததும், அசட்டு தைரியம் மீண்டும் தலை தூக்கிப் பேயாட்டமாட, “திமிரு..” என பற்களைக் கடித்தவன் பாய்ந்து அவளின் முடியைப் பற்ற வந்தான்.

அது வரையே காத்திருந்தாற்போல், வேகமாக அவனை சூழ்ந்து கொண்டனர் ஓரிருவர்.

இவ்வளவு நேரமும் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்தவர்கள், இந்தரின் ஆட்கள். யுகேந்த்ராவ் அவனின் உதவிக்காக நியமித்தவர்கள்.

‘தைரியமாக சமாளிக்கிறாளே!’ என அமைதி காத்து நின்றவர்கள், அவளுக்கு பிரச்சனை என்றதும் தாமதியாமல் கிளர்ந்தெழுந்து கிளம்பி விட்டனர்.

இந்தரை அடையாளம் கண்டு கொண்ட மைதிலி ஆச்சரியத்தில் விழி விரித்தாள்.

“நீங்களா? இங்க என்ன பண்ணுறீங்க அண்ணா?”

அவளிடம் வம்பிழுத்த குமரனின் மகனைக் கை காட்டிய இந்தர், “இவனை தேடி தான் இங்க வந்தேன் சிஸ்டர். கவனமா வீட்டுக்கு போங்க. நான் பார்த்துக்குறேன்.” என்று கூறிவிட்டுப் புன்னகையுடன் ஒதுங்கி நின்றான்.

போற போக்கில், “என் கையை பிடிச்சிழுத்தான் பையா. அதுக்கு சேர்த்து எக்ஸ்ட்ராவா நாலு உதை கொடுங்க.” என்று கூறி அவனுக்குப் பழிப்பு காட்டி விட்டுத் தான் நகர்ந்தாள் மைதிலி.

“எதுக்குடி அவன் கிட்ட வம்பு பண்ண? நாய் எங்களை கடிச்சா நம்ம நாயைக் கடிக்க போவோமான்னு அம்மா எப்பவும் கேட்பாங்க. அவன் வம்பு பண்ணா கண்டுக்காம கடந்து வந்திருக்கணும்.” என்றவளை முறைத்தபடி கடைக்காரன் நீட்டிய தண்ணீர் பாட்டிலை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டவள்,

“சுத்தி நின்னு எவ்ளோ பேர் வேடிக்கை பார்த்தாங்கனு நீயே பார்த்தல்ல.. எவ்ளோன்னாலும் நாம கேர்ள்ஸ் இல்ல?” என்று விடாமல் புலம்பியவளை என்ன செய்தால் தகும் என்கின்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.

“மைதிலி!!”

பாட்டிலை உடைத்து அவன் பற்றியிழுத்த கையில் ஊற்றி தேய்த்துக் கழுவியபடி, “இதென்ன அநியாயமா இருக்கு. பொண்ணுங்கன்னா அடங்கி போகணுமா? அப்பறம் இன்னைக்கு கையைப் பிடிப்பான். சும்மா போய்ட்டோம்னா நாளைக்கு இடுப்பைத் தொட வருவான். மத்தவங்க எப்படினு தெரியல. ஆனா எனக்கு சொரணை இருக்கு. அவன் பிடிச்சு இழுத்தது என் கையை!” என்றாள், கோபத்தில் மின்னும் கண்களுடன்.

இவளிடம் பேசி வேலைக்காகாது எனப் புரிந்து கொண்ட சாந்தனாவிடமிருந்து பெருமூச்சொன்று வெளிப்பட்டது.

அவள் பழகும் ஆயிரம் தோழிகள் மத்தியில் மைதிலி தனி ஒருத்தி. கோபத் திமிரிலும், எதிராளி யாராக இருந்தாலும் சந்தர்ப்பம் பார்த்து வீழ்த்துவதிலும், அவளுக்கு நிகர் அவளே தான்!

அடங்கிப் போவதெல்லாம் தந்தை சிவதர்ஷனுக்கும், அத்தான் யுகேந்த்ராவுக்கும் மாத்திரமே!

தொட்டவனின் கையை முறுக்கி உடைக்காமல் விட மாட்டேன் எனும் ரகம். தன்னை சீண்டியது யாராக இருந்தாலும் அவர்களை திருப்பியடித்து ‘மைதிலியிடம் மோதாதே!’ என விரல் நீட்டி எச்சரிப்பாள்.

இதனாலே கல்லூரிக் காலத்தில் அவளுக்கென ஒரு தனி விசிறிக் கூட்டமொன்றே கிளம்பி இருந்ததெல்லாம் வேறு கதை!

சில்லறை இல்லை எனக் கூறி கடைக் காரன் நீட்டிய பபிள்கம்மின் கவரை உரித்து, அதில் பாதியை சாந்தனாவின் வாயில் திணித்தவள் மீதியை மென்று பபிள்ஸ் விட்டபடி பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

“ப்ச்! அந்த பஸ் வர இன்னும் எவ்ளோ நேரமாகுமோ.. இதுக்கு தான் சொல்றது, நான் என்னோட ஸ்கூட்டியை ஓட்டிட்டு வரேன்னு.. கேட்டியா நீ?” என வெயில் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் புலம்பினாள் சாந்தனா.

“லைஃப்ல ஒவ்வொரு நிமிஷத்தையும் என்ஜோய் பண்ணி வாழனும் சாந்து. கடந்து போய்ட்டோம்னா கோடி கொடுத்தாலும் அந்த இடத்துக்கு திரும்ப வர முடியாது.

பஸ்ல போறதுல்லாம் தனிடி. கார், ஸ்கூட்டினு.. ப்ச்! அலுப்படிக்கிது.” எனக் கண்களை அங்குமிங்கும் உருட்டியபடி கூறியவள், சடேரென புழுதி கிளப்பிக் கொண்டு வந்து தன் முன் நிறுத்தப்பட்ட காரைக் கண்டு திகைத்த நேரத்தில்,

“கியூட்டி ப்பை!” என்ற அழைப்புடன் காரிலிருந்து இறங்கி வந்தான், யுகேந்த்ராவ்!

அவனை அங்கு எதிர்பார்த்திருக்காத மைதிலியின் முகத்தில், உவகையின் சாயல்.

“அத்தான்..” என்று கூவி அழைத்தவளை வேக எட்டுகளுடன் நெருங்கி வந்தவன், “ஆர் யூ ஓகே?” என்று கேட்டபடி பார்வையாலே அவளை ஆராய்ந்தான்.

“அதுக்குள்ள நியூஸ் வந்திடுச்சா அத்தான்?” எனப் பற்களை வாடகைக்கு விட்டபடி கேட்டவளை விளையாட்டுக்குக் கூட முறைக்க முடியவில்லை அவனால்.

‘அத்தான்’ என்ற அழைப்பு தந்த அதிருப்தியில் முகம் சுழித்தவன், மைதிலியின் கலைந்திருந்த கூந்தலை சரி செய்து ஹேர் பேன்ட்டை ஒழுங்காக மாட்டி விட்டுக் கொண்டே,

“விளையாடிட்டு இருக்காம ஒழுங்கா வீடு போய் சேரு!” என அதட்டினான்.

அவசரமாக ஏதோ கூற வாயெடுத்தவளைப் பார்வையாலே அடக்கியவன், “இன்னொரு வாட்டி நீ ரோட்டோர பஸ்ஸுக்காக காத்திருக்குறதை நான் பார்க்க கூடாது. இதென்ன புது பழக்கம்?” என்று கடிந்து கொண்டான்.

“அத்தான், அதுலாம்..” என்றவள் மேற்கொண்டு பேச வர முன்பே, “டேக் கேர்!” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டிருக்க,

“ரொம்ப ரூடா இருக்காருல்லடி?” என தோழியின் காதைக் கடித்தாள் சாந்தனா.

“ப்ச், அத்தானை அப்படி சொல்லாத! அவரு என்னோட ரோல் மாடல். ரொமான்டிக் பாய்யா சிரிச்சிட்டே இருந்தவரு தான், அத்தை மாமாவோட இறப்புக்கு அப்பறம் இப்படி ஆகிட்டாரு..” என்றவளின் கண்கள் வலியின் தாக்கத்தில் லேசாக கலங்க, அதை சாந்தனா காண முன் நாசுக்காக துடைத்து விட்டுக் கொண்டாள்.

“அவங்க எப்படி இறந்தாங்க?”

“எப்பா! கேள்வி கேட்டே என் காதை அவுட் பண்ணிடுவ போல. பேசாம வாயேன்..” என்ற மைதிலி, தனக்கு முன்னால் வந்து நின்ற பஸ்ஸில் ஓடிச்சென்று ஏறிக் கொண்டாள்.

அதற்கு மேலும் அவளிடம் எதையும் கறக்க முடியாதென்று புரியாதா என்ன, சாந்தனாவுக்கு?

   *******

“ஒரு பெண்ணாக உன் மேல் நானே பேராசை கொண்டேன்..

உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்..

எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்..

எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்..

இனிமேல் நானே நீயானேன்..

இவன் பின்னாலே போனேனே..

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்

காதல் இரண்டெழுத்து..” என்ற பாடலை முணுமுணுத்தபடி யுகனின் வரவை எதிர்பார்த்து கூடத்தில் அமர்ந்திருந்தாள் மான்ஷி.

பாடலின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்றாற்போல் அவளின் தளிர் விரல்கள் சோபாவில் தாளம் தட்டிக் கொண்டிருந்தன.

விடிந்தது முதலே அவனைக் காணவில்லை. அவன் என்றோ அவளது எண்ணை பிளாக் லிஸ்டில் சேர்த்து விட்டிருந்தபடியால் அழைப்பும் செல்லவில்லை.

அப்படியே சென்றடைந்திருந்தாலும் அந்த அழைப்புக்கு பதில் கொடுத்திருப்பானா என்று கேட்டால், கண்டிப்பாக வாய்ப்பே இல்லை.

பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்தவளாய் எழுந்து நிற்கும்போது தான் வீட்டினுள் கள்ளத்தனமாக எட்டிப் பார்த்த மிதுனாவைக் கண்டு கொண்டாள்.

திடீர் கோபத்தில் பற்களை நறநறத்தபடி அவளருகே விரைந்தாள் மான்ஷி.

அழைப்பு விடுத்து அவளை ‘வா’ என அழைத்தது யுகன் தான். என்றாலும் ‘எப்படி உள்ளே செல்வது? ஹாலில் வேறு சைக்கோ ஜந்து உக்காந்து இருக்கிறதே..’ என்ற தவிப்புடன் கை பிசைந்து நின்றிருந்தவள் முன் வந்து நின்றவள்,

“திரும்ப வந்துட்டியா?” என இடுப்பில் கை ஊன்றி முறைப்புடன் கேட்டாள்.

துள்ளி விழுந்து இரண்டடி பின்னகர்ந்து நின்றவள் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றியபடி, “யுகி சார் தான்..” என்று இழுக்க,

“அடிங்! அவன் வான்னு சொன்னா உடனே வந்திடுவியா? நீ என்ன அவனுக்கு பொண்டாட்டியா.. வான்னு சொன்னானாம்; உடனே ஓடோடி வந்திடுவியாம். தொண்டை குழி தண்ணி வத்தற அளவுக்கு கத்துறேனே.. கொஞ்சம் கூட வெட்கமா இல்ல?” என்று சீறி விழுந்தாள் மான்ஷி.

‘அவன் துரத்த துரத்த நீயும் தான் சொரணை கெட்டு அவனைத் தேடி வர.. அப்ப இதுக்கு பெயரென்ன?’ என நேரம் காலம் தெரியாமல் மனசாட்சி அவளை வார, மேலும் கடுப்பாகியவள் முன்னால் நின்றிருந்தவளைக் கடுமையாக முறைத்தாள்.

அந்நேரம், “உள்ள வா மிது..” என்று வரவேற்றபடி பேண்ட் பாக்கெட்டினுள் கைகளை நுழைத்து ஸ்டைலாக மாடியிறங்கி வந்தான் யுகன்.

“அவ எதுக்கு இங்க வரணும்?” என அளவு கடந்த கோபத்துடன் கேட்டவள் கை தொடும் தூரத்தில் இருந்த ஜாடியை தூக்கி, என்ன ஏதென்று ஊகிக்கும் முன்னரே அவனை நோக்கி விட்டெறிந்திருந்தாள்.

“அம்மாஆ..” என அலறிய மிதுனா, இரத்தம் சொட்டச் சொட்ட கைகளை உதறியவனைப் பார்க்க திராணியற்று கண்களை இறுக மூடிக் கொண்டாள், அச்சத்தில்!

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!