Home Novelsதேனிறைக்கும் சீதளநிலவே!தேனிறைக்கும் சீதளநிலவே – 05

தேனிறைக்கும் சீதளநிலவே – 05

by Hilma Thawoos
4.2
(5)

மான்ஷி அதீத கோபத்தில் வீசியடித்த ஜாடி காற்றில் பறந்து வந்து அவனைத் தாக்கி விட்டுக் கீழே விழுந்துடைந்து நாலாபுறமும் சிதறிப் போனது.

அவன் கையில் காயமாகி இரத்தம் வெளியேற ஆரம்பித்ததும், வீசி அடித்தவளுக்கே உயிர் வரை வலி கண்டது தான் விந்தை!

ஜாடி தன்னை நோக்கி வீசப்படுவதைக் கண்டதும் நகர்ந்து நிற்பான். பிறகு அந்த ஜாடி மீண்டும் தன்னை நோக்கியே வீசியெறியப்படும் என்றல்லவா நினைத்தாள்? கல்லுளி மங்கன் போல் நின்ற இடத்திலே நின்றிருப்பான் என கனவா கண்டாள்..

“ஐயோ யுகன், ரத்தம்!” என பதறிக் கொண்டு வந்தவளின் கண்களில் மாலை மாலையாய் வழிந்தது, கண்ணீர்.

அவளின் காட்டுக் கத்தலில் தான், நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் உறைந்து நின்றிருந்த மிதுனா என்ற சிலைக்கு உயிரே வந்தது. யுகனை ஏறிட்டுப் பார்த்தவள் கையில் இரத்தம் வழிய அவன் நின்றிருந்த கோலம் கண்டு அதிர்ந்து கண்களை இறுக பொத்திக் கொண்டாள்.

“ஐயோ யுகன், உன் கைல பிளட் வருது. அதான் வீசி அடிக்கிறேன்னு தெரியுதுல? அப்பறம் அப்படியே நின்னுட்டு இருப்பியா பைத்தியம்! நீ என்ன லூசாய்யா?”

வார்த்தைக்கு வார்த்தை மூக்குறிஞ்சியபடி விம்மலுடன் பேசியவள், அவனின் கை பற்றி, காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் தன் துப்பட்டாவால் துடைத்து விட்டாள். காயம் பட்டது அவனுக்கு, ஆனால் வலியின் தாக்கத்தில் துடித்துப் போனதென்னவோ அவள்..

“சாரிடா..” என கண்ணீர் வழிய மன்னிப்பு இறைஞ்சியவள் அழுதழுது மூச்சிறுகிப் போய் இடது கையால் மெல்ல நெஞ்சை நீவிக் கொண்டாள்.

மூச்சை ஆழமாக இழுத்து வெளியேற்றியவாறு உள்ளே ஓடப் பார்த்தவளின் இடை வரை வளர்ந்த கூந்தலைப் பற்றி இழுத்து நிறுத்தியவன்,

“ஆக்ட்டிங் போதும்! இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு..” என அலட்டிக் கொள்ளாமல் சிடுசிடுத்தான், யுகன்.

“ஆக்ட்டிங்கா?” என்று கேட்டவளுக்கு அழுகையையும், கோபத்தையும் மீறி சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.

“ஆகட்டிங் இல்ல?” என்று தன்னிடமே கேட்டுக் கொண்டு கண்களை துடைத்தபடி விரக்தியாகச் சிரிக்க முயன்றவள், அவன் முடியைப் பற்றி இழுத்துக் கொண்டிருப்பதால் எழுந்த வலியில் சட்டென முகம் சுணங்கினாள்.

“ஸ்ஸ்ஸ்..” என பற்களைக் கடித்து வலியை விழுங்கிக் கொண்டவள் அவனின் கைகளுக்குள் சிறையாகி பாடுபட்டுக் கொண்டிருந்த முடியை ஒரே இழுவையாக இழுத்து விடுவித்துக் கொண்டு வீட்டினுள் ஓடினாள்.

அடுத்த அரை நிமிடத்தில் முதலுதவிப் பெட்டியோடு அவன் முன் வந்து நின்றவள், அவனது உஷ்ண முறைப்பை சற்றும் கண்டு கொள்ளாமல் மருந்து கட்டி விட முயல, அவள் கையைத் தட்டி விட்டவன்,

“மிதுனாஆ..” என்று உச்சஸ்தாயியில் கத்த, அவ்வளவு நேரம் இருவரையும் ஆவென வாய் பிளந்து பார்த்திருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸை அவ கைல கொடுத்துட்டு மரியாதையா இங்கேருந்து கிளம்பு. என் பொறுமைய சோதிக்காத!” என அதட்டியவன் இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற குறிப்புடன் விறுவிறுவென வீட்டினுள் சென்று விட்டான்.

கோபத்தில் புசுபுசுவென மூச்சு வாங்கியவள், “எல்லாம் உன்னால வந்தது. எனக்கும் அவனுக்கும் இடைல ஆயிரம் சண்டைகள் இருக்கும்; கோபம் இருக்கும்; ஏன் வெறுப்பு கூட இருக்கும். ஆனா நீ வந்து குறுக்கா நிற்க வேண்டிய அவசியமில்ல மிதுனா. அப்பறம் உன் அம்மாப்பாவுக்கு அவங்க பொண்ணு இல்லாமலே போய்டுவா..” அவனை நெருங்க முடியாத இயலாமையைக் கொட்டித் தீர்க்க, அவளைப் பயப்பார்வை பார்த்து வைத்தாள் மிதுனா.

யுகனையே பயமின்றி தாக்கியவளாயிற்றே! தன்னைத் தாக்க முடியாத கோபத்தில் தான் ஜாடியை அவனை நோக்கி விட்டெறிந்தாள் என அவளுக்குப் புரியாமலில்லை.

“அவன் ரொம்ப ரோஷக்காரன். இப்போ நான் போகலைன்னா மருந்து கட்டிக்காம, கைல வழியிற ரத்தத்தை கூட துடைக்காம அப்படியே உக்காந்துட்டு இருப்பான். ஸோ போறேன். மருந்து போட்டு விட்ட கையோட நீ இடத்தை காலி பண்ணிட்டு போயிட்டே இருக்கணும். இனி இந்த பக்கம் மறந்தும் கூட எட்டிப் பார்த்திடாத! என்னை கொலைகாரி ஆக்காதே மிதுனா.” என கட்டளையாய் கூறியவள் முதலுதவி பெட்டியை அவள் கையில் திணித்து விட்டு நகர்ந்தாள்.

மிதுனா பெருமூச்சுடன் வீட்டினுள் நுழையும் போது, கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கையில் வழியும் இரத்தத்தை வெறித்துக் கொண்டிருந்தான், யுகன்.

“யுகன் சார்!” என்ற அழைப்புடன் அவனை நெருங்கிச் செல்லவென்று காலடி எடுத்து வைத்தவள் அவன் பார்த்த பார்வையில் அவ்விடமே தேங்கி விட, கை நீட்டி முதலுதவி பெட்டியைக் கை காட்டினான்.

“உங்க கைல..” என பதற்றமாகப் பேச வந்தவளை முறைத்தவன், “உன் வேலை எதுவோ, அதை மட்டும் பாரு மிதுனா..” என்றான் அழுத்தமாய்.

மேற்கொண்டு விதண்டாவாதம் செய்ய தைரியமின்றி முதலுதவிப் பெட்டியைக் கொடுத்து விட்டு அவனுக்கு சற்றுத் தள்ளி சோபாவில் அமர்ந்து கொண்டாள், கைகளைப் பிசைந்தபடி.

பற்களைக் கடித்து வலியை தனக்குள் புதைத்தபடி காயம்பட்ட கையில் மற்றொரு கையால் சுயமாகவே கட்டுப் போட்டுக் கொண்டான் யுகன். இடையிடையே பதறி தன்னருகே வந்து நின்றவளை தீப் பார்வை பார்த்து தூர நிறுத்தவும் மறக்கவில்லை.

    •••••••

நிலத்தில் விழுந்து வலியால் துடி துடித்துக் கொண்டிருந்தவனை ஆசை தீரப் பார்த்திருந்தான் யுகன். காயம்பட்ட கையில் கட்டு போட்டுக் கொண்டதும் அடுத்ததாய் அவன் வந்து நின்றது இந்த இடத்துக்கு தான்!

அவனின் கியூட்டி ப்பை’யை தொட்டவனை அப்படியே விட்டு விட அவன் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லையே!

ஏற்கனவே அவனைப் பற்றி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் காதில் வந்து விழுந்திருக்க, ‘சரிதான் விட்டுப் பிடிக்கலாம்’ என நினைத்திருந்தவன் அந்தப் பொறுப்பை அப்படியே இந்தரிடமே ஒப்படைத்தும் விட்டிருந்தான்.

ஆனால் மைதிலியிடம் வம்பு வளர்த்து அவளது கைப் பற்றியது பத்தாதென்று அவளின் கூந்தலை வேறு பிடித்திழுத்திருக்கிறானே! அவள் வலியில் துடித்துப் போயிருக்க மாட்டாளா என அவளை விட இவன் தான் சினந்தான். அவளது கசங்கிய முகத்தைக் கற்பனை செய்து பார்த்தவனுக்கு இவனைக் கொன்று விட வேண்டுமென்று தான் ஆசை பிறந்தது.

“எவ்ளோ தைரியம் இருந்தா பொண்ணுங்க கையைப் பிடிச்சிழுப்ப.. பொண்ணுங்கன்னா அவ்ளோ இளக்காரமா போச்சா உனக்கு?” என்று கேட்டவன் ஜீவனற்று நிலத்தில் விழுந்திருந்தவனது கையில் ஷூக் காலால் அழுத்தம் கொடுக்க,

“அம்மாஆஆஆ.. ” எனப் பெருங் குரலெடுத்துக் கதறினான், குமரனின் மகன்.

“ச்சை, அம்மானு சொல்லாதடா..” என பற்களைக் கடித்தவனின் கண்கள் கலங்கிச் சிவப்பேறின.

இருவரையும் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்திருந்த இந்தருக்கு யுகனின் கோபம் அதீத பயத்தைக் கொடுக்க, எச்சிலைக் கூட்டி வறண்டு போயிருந்த தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டவன், “யுகி பையா..” என்றழைத்தான், இறங்கிய குரலில். அவன் அழைத்தது அவனுக்கே கேட்காத நிலையில் சிங்கமாய் கர்ச்சித்து நின்றவனுக்கு கேட்டிருக்க முடியுமா என்ன..

“ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்! இன்னொரு வாட்டி உன்னைப் பத்தி ஒரு சின்ன கம்ப்ளைன்ட் என் காதுல வந்து விழக் கூடாது..” என விரல் நீட்டி எச்சரிக்கையாய் கூறியவன் நாவை மடித்து,

“ஜாக்கிரதை!” என சீறி விட்டு விருட்டென்று அங்கிருந்து வெளியேறி விட, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தொப்பென்று நிலத்தில் அமர்ந்தான் இந்தர்.

என்ன நடக்குமோ.. ஏது நடக்குமோ என்ற யோசனையில் ஒழுங்காய் மூச்சு விடக் கூட மறந்து போயிருந்தான் அந்த அப்பாவி.

பெண்களை லேசாகத் தொட்டவனின் கையையே கதறக் கதற துண்டித்து தூர எறிபவன் மைதிலியை நடு சாலையில் வைத்து வம்பு செய்தவனை விட்டு வைக்க மாட்டான் என உறுதியாய் நம்பினான். ஆனால் அவன் அடித்து மிரட்டியதோடு விட்டு விட்டுச் சென்று விட்டானே..

‘நாம் நினைத்தது என்று தான் நடந்திருக்கிறது? நினைப்பது ஒன்று.. நடப்பது ஒன்று!’ எனப் பெருமூச்சு விட்டவன்,

“உனக்கு இது தேவையாடா? நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருந்தா லைஃபைக் கூட சந்தோசமா வாழாம இப்படி பாதிலயே முடமாகி கிடப்பியா?” என்றான்.

குரலில் அத்தனை ஆதங்கம்..

எதற்கு இந்த வீண் வேலை? உன் பாட்டில் இருந்திருக்கலாமே.. இவ்வளவு நாள் குடியால் உடம்பைக் கெடுத்துக் கொண்டிருந்தவன் பெண்ணைத் தொட்ட.. இல்லை தொட்டு கலாய்க்க நினைத்த ஒரே காரணத்தினால் முடமாகியே விட்டானே என அவன் மேல் பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை இந்தரால்.

“அது அவனோட விதி! இவனைப் பார்த்து இன்னும் நாலு பேர் நடு ரோட்டுல பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணுறதை நிறுத்திடுவாங்க..” என முதுகுக்கு பின்னே ஒலித்த யுகனின் சிம்மக் குரலில் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றான். போகிறேன் என்று சென்றவன் மீண்டும் வந்து நிற்பான் என அவன் எங்கே அறிந்தான்?

“ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய், நல்ல ட்ரீட்மென்ட் கொடுத்துடு..” வலியில் முனகிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவாறே இந்தரிடம் கூறியவன் அவனின் பதிலை எதிர் பாராமல் அங்கிருந்து சென்று விட,

“உங்களை புரிஞ்சிக்கவே முடியல பையா!” அழாத குறையாய் முணுமுணுத்தான் இந்தர்.

தவறென்று ஒன்றைக் கண்டு கொண்ட நொடியில் சம்பந்தப்பட்டவனை அடி வெளுத்து விட்டு, காயமாகியவனை ‘ஹாஸ்பிடலில் சேர்த்து விடு ‘ எனக் கூறினால் பாவம் இவனும் என்னதான் செய்வான்? சரியென்று தலை அசைத்து விட்டு கூறுவதை கூறியபடியே செய்து முடிப்பவன் இரவில் காமினியிடம் புலம்பித் தள்ளுவான்.

அதற்கென்று மனதளவில் சாதாரணமாகவேணும் யுகனை வைதது கிடையாது. அவனது எந்தவொரு செயலிலும் அதிருப்தியில் முகம் சுழித்ததும் கிடையாது. செய்தவன் அனுபவிக்கட்டுமே என ஆழ்மனம் கூறிவதைக் கேட்டு தன்னைத் தானே ஆறுதல்படுத்திக் கொள்வான்.

பக்கவாத நோயாளியைப் போல் கையையும் காலையும் இழுத்துக் கொண்டிருந்தவனை அள்ளித் தோளில் போட்டுக் கொண்டவன், ஒப்படைக்கப்பட்ட வேலையை செய்து முடிக்கவென அங்கிருந்து கிளம்பினான்.

   *******

இருள் அடர்ந்த நேரத்தில் சமையலறையில் பாத்திரம் உருட்டிக் கொண்டிருந்தாள், சகுந்தலா.

இரவுணவை தயாரிப்பதற்கென வெட்டி வைத்திருந்த காரட் துண்டுகளை நறுக் நறுக்கென கடித்த வண்ணம் சமையலறையின் படியில் ஏறி அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தாள், மான்ஷி.

யோசனை முழுவதும் யுகனை சுற்றித் தான் வலம் வந்தது. கைக் காயம் என்னவாயிற்றோ.. இந்நேரம் உணவு உட்கொண்டு இருப்பானோ.. என்ன செய்து கொண்டிருப்பான்.. அந்த ரோஷம் கெட்டவள் மிதுனா அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டிருப்பாளா, இல்லையா.. பெயின் கில்லர் மருந்து போட்டிருப்பானா.. அதைப் போட்டிருந்தால் கொஞ்சமாவது வலி குறைந்திருக்குமே.. என பலவாறெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தவளின் தொடையில் வலிக்கும்படி கிள்ளி வைத்தாள், சகுந்தலா.

தொடையில் சுள்ளென்று வலித்ததும் தான், விரண்டோடிக் கொண்டிருந்த சிந்தனைக் குதிரை ஓரிடத்தில் மூச்சிறைக்க நின்றது போலும், “ஸ்ஸ்..” என வலியில் முகம் சுருக்கியபடி தாயை முறைத்தாள்.

“அப்படி என்னடி யோசனை உனக்கு?”

“ப்ச்!” என சலித்துக் கொண்டவள் கை நீட்டி சோம்பல் முறித்தபடி,

“வேற எதைப் பத்தி தான் யோசிக்க போறேன்ம்மா? எவ்ளோ அன்பா இருந்தான்.. மைதிலியை விட என்னைத் தான் ரொம்ப புடிக்கும் யுகனுக்கு. ஆனா இப்போ என்னைக் கண்டுக்குறதே இல்ல, பார்த்தியா? கண்டாலே வள்ளுனு எரிஞ்சு விழறான். ஏன்ம்மா..

படிப்புக்காக நான் அவனை விட்டுட்டு அப்ராட் போயிருக்கவே கூடாதும்மா. அதான் அவன் இப்போ என்கிட்ட பேசாமலே இருக்கானோ, என்னவோ..” என்றாள், தன்னை சிந்தனைக்குள் மூழ்கடித்துக் கொண்டே..

“அப்படி சொல்லவும் முடியாது கண்ணம்மா. நீ அப்ராட் போன பிறகும் கூட வாரா வாரமோ, மாசம் ரெண்டு தடவையோ தவறாம உன்னைப் பார்க்க வந்தானே? திடீர்னு தான் இப்படி ஆகிட்டான். பாவம் யுகி தம்பி!”

ஆமோதிப்பாய் தலை அசைத்தாள், மான்ஷி.

“அப்பாம்மாவை ஒரே டைம்ல இழந்ததுக்கு பிறகு தனிமைல இருந்து இப்படி முரடனா ஆகிப் போய்ட்டான், மான்ஷி. நீங்க போய் உங்க வீட்டுல இனி தங்கிக்கோங்கனு திடீர்னு ஒருநாள் வந்து சொன்னதும், நாங்களும் அதான் சரினு யோசிச்சி நம்ம வீட்டுக்கே வந்துட்டோம்.

அப்போ நம்ம கூடவே தங்கிக்கோப்பானு சொன்னேன்; கேட்கல. எத்தனையோ வாட்டி நானாகட்டும், உன் அப்பாவாகட்டும்! போய் கூப்பிட்டு பார்த்தும் எதுவும் வேலைக்கு ஆகல. ஒரேயடியா மறுத்துட்டான்.

அவங்க இறப்பு பிறகு தம்பி அவ்ளோவா நம்ம வீட்டு பக்கம் வந்து போகல. நானோ, உன் அப்பாவோ போனாலும் முகம் கொடுத்து பேசல.

ஆனா மைதிலி கூட பேசினான்; அடிக்கடி ஃபோன் பண்ணி மணிக் கணக்கா பேசி சிரிப்பான்; இவளும் அங்க போய் வருவா! தம்பி இங்க வரதுனாலும், அவளைப் பார்க்குறதுக்காக மட்டுந்தான் வந்தேன்னு சொல்லுவான்.

இப்போல்லாம் யாருக்கிட்டயும் ஒட்டி பழக பயப்படறானோ என்னவோனு தோணுது, மான்ஷி! ருத்ரா அண்ணாவை அவனுக்கு எவ்ளோ புடிக்கும்னு உனக்கு தான் தெரியுமே..”

ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவளுக்கு, இடைப்பட்ட காலத்தில் ஏதோவொன்று நடந்திருப்பதாய் உள்ளுணர்வு உறுத்தியது.

யாரிடமும் நெருங்கிப் பழக பயப்படுகிறான் என்றே வைத்துக் கொண்டாலும், அப்படியாயின் மைதிலியிடமும் கூடத் தானே அளவோடு பழகி இருக்க வேண்டும்? ஆனால் அன்னை கூறுவதை வைத்துப் பார்த்தால், அதற்கு தலை கீழாக அல்லவா நடந்திருக்கிறது?

காலையில் ஷாப்பிங்மால் சென்றிருந்த இடத்தில் நடந்த விடயம் பற்றி மைதிலி அன்னையிடம் கூறக் கேட்டாளே..

நடந்த சம்பவம் கேள்வியுற்றதும் அவளைக் காண ஓடோடி சென்றிருக்கிறான் என்றால்! ம்ம்கூம், மேற்கொண்டு சிந்திக்காமல் அயர்வோடு தலை சிலுப்பிக் கொண்டாள், மான்ஷி.

“மான்ஷி!” என நான்காவது முறையாக அழைத்து பார்த்துவிட்டு தோளில் ஒரு அடி வைத்து, மீண்டுமொரு முறை இயல்புக்கு அழைத்து வந்தாள், சகுந்தலா.

“ஹான்!!” எனத் தெளிந்து திருதிருத்தவள்,

“அத்தை, மாமா இறந்ததுக்கு அப்பறம் என்னைப் பார்க்க வந்தவன், எனக்குன்னு உன்னைத் தவிர வேற யாருமே இல்லைனு எவ்ளோ அழுதான் தெரியுமா? அந்த அழுகை இன்னுமே என் கண்ணுக்குள்ள இருக்கும்மா. ரொம்பவே உடைஞ்சு போயிருந்தான்.

அன்னைக்கு வந்து என்னை பார்த்து பேசிட்டு போனவன் பிறகு எனக்கு ஃபோனே பண்ணல; நான் பண்ணினாலும் எடுத்து பேசல; திடீர்னு அவொய்ட் பண்ண தொடங்கிட்டான்.

என்மேல எதுனாலும் கோபமோ நினைச்சுக்கிட்டு, இங்க வர என்னாலான முயற்சிகளை எல்லாம் செய்தேன். அப்பா, இருந்த அத்தனை வழிகளையும் அடைச்சு, என்னை இங்க வர விடாம பண்ணாரு!

சரிதான், பழசு எதுக்கு? நான் தான் வந்துட்டேனேம்மா. எதுக்கு என்னை இந்தளவு தவிர்க்கறான்? நான் என்னம்மா தப்பு பண்ணேன்.. இந்த ரெண்டு மாசத்துல அவன் என்கிட்ட ஒழுங்கா பேசின நாள்னு ஒரு நாளே இல்ல, தெரியுமா?” என்றவளின் குரல் பாதியிலே உடைந்தது.

மனம் நொந்தவராய் மகளை மிகுந்த வருத்தத்துடன் ஏறிட்டாள் சகுந்தலா.

“மானும்மா எப்போடி என்கிட்டே வருவனு தினம் தினம் ஃபோன் பண்ணிக் கேட்டவன் தானேம்மா.. நான் வந்ததும் வந்திட்டியா மானுனு கேட்டுட்டு ஓடி வந்து அவனோட மான்குட்டியை கட்டி அணைச்சு கொஞ்சி இல்லையா இருக்கணும்?

எதுக்கும்மா கோபப்படனும்? என்னை முறைக்கணும்.. விலகி நடக்கணும்.. வே.. வேதனைப் படுத்தனும்?”

பதில் சொல்லத் தெரியாமல், கனத்த மௌனத்தை அவ்விடம் நிலைக்க விட்டவளின் கரம் மான்ஷியின் தலை வருடிக் கொடுத்தது, வெகு ஆதூரத்துடன்.

“அவன் என்னை ஸ்ட்ரேஞ்சரைப் போல பார்க்கிறான்ம்மா. அவனோட மானு இல்லம்மா நான்? மைதிலி கிட்ட ரொம்ப நல்லா பேசத் தெரிஞ்சவனுக்கு, ஏன் என்னைப் பிடிக்கல?”

“தம்பிக்கு உன்னைப் புடிச்ச அளவுக்கு வேற யாரையும் பிடிக்காது, கண்ணம்மாஆ!” என மகளின் துயராற்ற முயன்றாள், சகுந்தலா.

விரக்தியுடன் சிரித்துக் கொண்டவள், “காலம் மாறிப் போய்டுச்சும்மா..” என்க,

“வாய்க்கு வந்தபடி பேசாதடி!” என அதட்டினாள், மருமகனின் கரைக் காணாத அன்பையும்.. காதலையும் மனக்கண் முன் காட்சியாக்கியபடி.

“எனக்கென்னவோ, இத்தனை வருடங்கள் அவனைத் தவிக்க விட்டதுக்காக தான் என்னை இப்படி ஒதுக்கி வைக்கிறானோனு தோணுதும்மா. கண்டிப்பா அவனை நான் அடைவேன்; உங்க மருமகன் கையை கோர்த்துட்டு ஒருநாள் நான் இந்த வீட்டுக்கு வரல!! சத்தியமா என் பேரை நான் மாத்திக்கிறேன்..” என சபதம் எடுக்க,

“ஏற்கனவே உன் பேரை தான் தம்பி மாத்தி வைச்சிருக்காரே, மாளவிகா!” என மகளை இலகுவாக்கும் பொருட்டு கேலி செய்தாள், சகுந்தலா.

நினைத்தாற்போலவே, மான்ஷியாக மாற்றம் பெற்ற மாளவிகாவின் முகம் விகசித்தது.

தலை அசைத்து மெல்ல சிரித்துக் கொண்டவள்,

“அப்பப்பா! அவ பேரு மாளவிகாடானு நாங்க எல்லாரும் சொல்லுறதைக் கேட்காம, இல்ல மான்ஷி தான்னு அவன் சின்ன வயசுல செய்த சேட்டைகள் இன்னுமே கண்ணுக்குள்ள நிற்குது!

மாளவிகானு அவன் காதுபட யாராவது கூப்பிட்டா போதுமே! மான்ஷி சொல்லுனு அடிக்க வருவான். கோபம் பொத்துகிட்டு வரும் தம்பிக்கு! அந்த வயசுலயே உன்மேல அன்பு வைச்சவன் தான், இப்போ ஒதுக்கிறான்னா.. ஏதாவது காரணம் இருக்கும்னு என் மனசு சொல்லுதும்மா!

பொறுமையாரு! காலம் எல்லாத்தையும் சரி செய்யும்னு நம்புவோம்..” என்றவளைப் பார்த்து புரிந்ததாகத் தலை அசைத்தாள்.

நினைவுகள் மீண்டும் மனம் கவர்ந்தவனை நோக்கி அவசர கதியில் பயணித்தன.

ஓ.. வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக..

அவன் வருவான் என்று காத்திருந்தேன்..

ஓ.. அவன் குரல் கேட்கும் திசைகளிலெல்லாம் புது புது கோலம் போட்டு வைத்தேன்..

என் இருபது போகும், எழுவதும் ஆகும்..

அவனை விடமாட்டேன்..

என் மடியினில் ஒருநாள் தலை வைத்து தூங்கும்..

அழகை நான் பார்ப்பேன்..’

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!