Home Novelsதேனிறைக்கும் சீதளநிலவே!தேனிறைக்கும் சீதளநிலவே – 10

தேனிறைக்கும் சீதளநிலவே – 10

by Hilma Thawoos
5
(1)

குருவிக் குளியலொன்றை போட்டுக் கொண்டு அறைக்கு வந்தான் யுகேந்த்ராவ்!

இடுப்பிலிருந்த டவல் நழுவிக் கீழே விழாதிருப்பதற்காய், அதன் இரு பக்க நுனிகளை இழுத்து இறுக்கமாக சொருகிக் கொள்ளவும், மேஜையிலிருந்த அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

தலையை இருபுறமாக ஆட்டி நீர்த் திவலைகளை நாலாபுறமும் விசிறியடித்தவன் கேசத்தை வலது கையால் கோதி விட்டபடி மற்ற கையால் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.

இந்த அழைப்பு வருமென ஏற்கனவே எதிர்பார்த்திருந்தான் போலும், கீழுதட்டை வளைத்து கேலியாய் நகைத்தபடி அழைப்பேற்றவன்,

“நீ கால் பண்ணுவேனு தெரியும். ஆனா இவ்ளோ சீக்கிரமா பண்ணுவேனு எதிர் பார்க்கல டியுட்!” என்றான். குரலில் நக்கலும் ஏளனமும் கொட்டிக் கிடந்தது.

மறுபுறத்தில் இருந்தவனின் கண்களில் லேசான திகைப்பு!

‘அழைப்பு விடுத்தது நானென அவன் அறிய வாய்ப்பில்லை; என்னை இனங்காணக் கூடாது என்பதற்காகத் தானே, புது எண்ணிலிருந்து அழைப்பே விடுத்தேன்? இருந்தும் ஊகித்து விட்டானே!’ என எழுந்த திகைப்பு மறுநொடியே கோபமாய் மாற,

“ஐ வார்ன் யூ யுகேந்த்! என் வழியில குறுக்கா வராத. அதான் உனக்கு நல்லது. இதுவரை நாள் நீ பார்த்த கரண்சிங், அவனை உசுப்பேத்தி விட்டதுக்கு அப்பறமா பார்க்க போறவனை விட ரொம்ப நல்லவன்..” என எச்சரிக்கும் விதமாகப் பேசினான்.

கை வந்து சேரவிருந்த பெரிய டீலைக் கை நழுவி போகும்படி செய்து விட்டது பத்தாதென, கரண்சிங்கின் உற்பத்தி பொருட்கள் யாவிலும் கலப்படம் என்ற தகவலை தேவையான இடத்துக்கு அனுப்பி வைத்து, அதை உண்மைப் படுத்துவதற்காக சிலபல விளையாட்டுகளையும் அரங்கேற்றி இருந்தான் யுகேந்த்ராவ்!

கையாலாகாத நிலையில் இருந்து கொண்டு மிரட்டுவதற்காய் அழைப்பு விடுப்பான் என ஏலவே இவன் எதிர்பார்த்திருக்க, கோபத்தின் உச்சிக்கு சென்றிருந்த கரண்சிங் ஊகத்தைப் பொய்ப்பிக்காமல் உடனே அழைத்து விட்டான்.

வாய் விட்டுச் சிரிக்கத் தோன்றியது யுகனுக்கு.

“ரியல்லி? சரி சொல்லு, உன்னை எப்படிலாம் உசுப்பேத்தி விட்டா நீ செமயா காண்டாவ? ஆக்சுவல்லி வர வர எனக்கும் இந்த கேம் போரடிக்குது..” என நக்கலாய் பேசியபடி ஜன்னலருகே திரும்பி நின்றவன்,

“முதல்ல, எதிர்ல இருக்கிறவனைப் பயமுறுத்தற மாதிரி பேச பழகுடா வெண்ணமவனே!” என்றுவிட்டு, அதற்கு மேலும் பேசுவதற்கு எதுவுமில்லை என்பது போல் அழைப்பை துண்டித்துக் கொண்டான்.

கண்கள் சாளரத்துக்கு வெளியே தெரிந்த தோட்டத்தின் வனப்பில் லயித்தன.

கதிரவனின் ஒளி பட்டு வெட்கிக் கொண்டிருந்த மலர்களைக் கண்ணாரக் கண்டு ரசித்தான். நினைவடுக்குகளில் ஏதேதோ நிழற்படங்கள்.. அவை யாவும் ஆடவனின் ஏகாந்தத்துக்கு மேலும் இதம் சேர்ந்தன.

‘அந்த பட்டர்ஃப்ளை அழகா இருக்கு யுகன்..’ என்றொரு குரல்.

‘அழகா இருக்கா? உன்னை விடவாடி..’ என குழையும் குரலோடு சேர்த்தி, கிண்கிணி நாதமாய் நகையொலியொன்று காதை நிறைத்தது.

கண்களை இறுக மூடித் திறந்து கடந்த காலத்தை நெஞ்சோடு புதைக்க முயன்றவனின் முதுகில் சட்டென்று வெண்பஞ்சு மூட்டையொன்று மோதி விழுந்தது.

மென் கரங்கள் இரண்டு கொடி போல் சுற்றி வளைத்தன, அவனது கட்டுடலை.

“உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்யா!” என்று கூறியவளின் சூடான கண்ணீர் அவனது வெற்று முதுகை பாரபட்சமின்றி நனைக்க, ஆடவனின் உடல் விறைத்தது.

“என்கிட்டே சொல்லிக்காமலே கெளம்பிப் போய்ட்ட.. சரிதான், அப்போ மீட்டிங் முடிஞ்சதும் வந்திருக்கலாம் இல்லையா?” என உரிமையாய் கேட்டு அவனின் முதுகில் தன் ஈர இதழ்களைப் பதித்தவள் அடுத்த நொடி,

“அம்மாஆ..” என்ற முனகலுடன் கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து நின்றாள்.

ஆமாம், தன் மீது படர்ந்திருந்த கைகளைப் பற்றி பார்வைக்கு முன்னால் இழுத்து நிறுத்தியவன், தன் கைகளை முழு வேகத்தில் வீசி விட்டான் அவளது கன்னத்தை நோக்கி! கை வந்து முழு விசையுடன் பாவையின் கன்னத்தில் மோதியதில் கன்னம் இரத்தமென சிவந்து போனது.

அவசரமாக கழுத்தை சுற்றிப் போட்டிருந்த டவலை உருவி உடலைப் போர்த்திக் கொண்டவனின் கண்களில் தெரிந்த பதற்றமெல்லாம் ஒருசில நிமிடங்கள் தான்!

அடுத்த க்ஷணமே, “யாரு உனக்கு என்கிட்ட இந்தளவு உரிமை எடுத்துக்க அனுமதி கொடுத்தா? ச்சை! இப்படி தான் வந்து திடுதிப்புனு வந்து அணைப்பியா..” என எரிந்து விழுந்தவன்,

“உன் வாசனைய என் பக்கத்துல உணர கூடாதுனு நினைக்கிறேன். உனக்கு புரியல?” என்று வினவியபடி டேபிள் மீதிருந்த பேர்ஃபியூம் பாட்டிலைத் திறந்து, அதிலிருந்த திரவியம் முடிந்து போகும் வரை தன் வெற்றுடலில் அடித்தான்.

அவனது செயலில் வெகுவாக மனம் நொந்து போனவள் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். குதிரைப் படையொன்று பயணிப்பது போல், நெஞ்சம் கனத்தது.

அவனது வருகை அறிந்ததும் தடுக்க வந்த தந்தையைக் கூட சற்றும் மதியாமல் அவனைக் காண விரைந்தோடி வந்தாளே!

அறைக் கதவருகே நின்று கள்ளத்தனமாய் அவனைப் பார்த்து ரசித்து, அவன் செதுக்கி வைத்திருந்த கட்டுடல் அழகில் தன்னை மறந்து, அவனது உருவத்தை மொத்தமாய் தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டாளே..

‘மானு..’ என்ற அழைப்புடன் ஓடி வந்து அணைத்து, ‘உன்னை எவ்ளோ மிஸ் செய்தேன் தெரியுமாடி?’ என்ற கொஞ்சல் மொழிகளை அவன் பேசப் போவதில்லை என அறிவாள் தான்.

இருப்பினும், காதல் வயப்பட்ட அவளின் மனதும், தன்பால் அதிக ஈடுபாடு கொண்டவனின் அக்கறைக்காய் ஏங்கி நிற்கும் நெஞ்சமும், இந்த அன்பெல்லாம் கிடைக்கப் போவதில்லை என அறிந்தும் எதிர்பார்த்துத் தொலைக்கிறதே..

“என் ஸ்மெல்.. என் வாசனையை உணர்ந்தா உன் கண்ட்ரோல் மிஸ் ஆகிடும்னு பயப்படறியா யுகன்?” அழுகையோடு வினவியவள் அவனை கேலிப் பார்வையை உணர்ந்து கொண்டு,

“நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெ.ரியு..மா?” என வினவினாள்.

வாய் திறந்தானோ இல்லையோ, அவள் எழுப்பிய வினா அவனுக்கு வேறொரு நிகழ்வை நொடிப் பொழுதில் நினைவூட்டிச் சென்றது.

அவனுக்கு பன்னிரண்டு வயதிருக்கும் போது, ஸ்கூல் சுற்றுலா பற்றி அறிந்து கொண்டு, ‘முடியவே முடியாது! மானுவை விட்டுட்டு தனியால்லாம் போக மாட்டேன்..’ என அடம் பிடித்தவனை ஒற்றைக் காலில் நின்று ருத்ரவன் பஸ் ஏற்றிவிட்ட நிகழ்வு! மறக்க முடியாத அழகிய தருணங்களை சுமந்த காலமது.

அன்றும் கூட, சுற்றுலாவை முடித்துக் கொண்டு வீடு திரும்பியவனின் முதுகைக் கட்டிக் கொண்டு கண்ணீருடன் இதே வார்த்தைகளை தான் உதிர்த்தாள் மான்ஷி.

‘உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?’

‘நீ ஏன்டா என்னை விட்டுட்டு போன? நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா.. உனக்கு என்மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல..’

விம்மலோடு கொஞ்சல் மொழி பேசியவளின் கண்ணீர் கண்டு பதறி, தன் கைகளாலே அவள் கண்ணீரைத் துடைத்தெறிந்து, அவளைத் தன் நெஞ்சக்கூட்டோடு அணைத்து ஆறுதல் அளித்தவன், இன்று அவளது கண்ணீருக்கே காரணமானவனாய் இருக்கிறான்.

காலத்தின் கோலமா? விதியின் சதியா..

அவ்வளவு காலமும் மலர்களைக் கொய்து வந்து தன் கைகளில் பொத்தி, அவற்றைப் பாதுகாத்து வைக்குமாறு கூறியவனே ஒருநாள் திடீரென்று அந்த மலர்களை பறித்தெடுத்து, தன் அழுகையையும், கண்ணீரையும் பொருட்படுத்தாமல் அவற்றை காலால் நசுக்கி அநியாயமாக்கினால் எப்படி இருக்கும்?

பொக்கிஷம் பொக்கிஷமென நெஞ்சில் சேமித்து வைத்த அவனின் அன்பும், அக்கறையும், இன்று அவனாலே பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நினைக்கும் போதே மூச்சடைப்பது போல் உணர்ந்தாள் பாவை.

“யுகன்ன்ன்..”

“ப்ம்ச், இந்த ஒரு வாரம்.. பத்து நாளா எவ்ளோ நிம்மதியா இருந்தேன்லனு நினைக்கிறப்போ அந்த நாட்களுக்காக மனசு ஏங்குது!” என கரடுமுரடான குரலில் சலித்துக் கொண்டவன் சென்று வாட்ரோபிலிருந்த பிளைன் டீஷர்ட் ஒன்றை எடுத்து, திரும்பி நின்று அணிந்து கொண்டான்.

“அப்போ நீ என்னை நிஜமாவே மிஸ் பண்ணவே இல்லையா யுகன்?”- ஏக்கத்தில் நெஞ்சம் வெடித்து விடுமோ என அஞ்சும்படியாய் இருந்தது அவளின் விம்மிப் போன குரல்.

நின்று திரும்பியவன் அவளைப் பார்த்த பார்வையில் உள்ளுக்குள் மரித்துப் போனாள் மான்ஷி. அப்படி ஒரு பார்வை! ‘பைத்தியமா நீ?’ எனக் கேட்டு நின்ற அந்தப் பார்வையின் பட்டவர்த்தனமான கேள்வியில் மொத்தமாக உடைந்து போனாள்.

இந்தப் பார்வை, கேலி கிண்டலை எல்லாம் இந்த ஓரிரு மாதங்களாகவே கடந்து வருகிறவள் தான். இருப்பினும், ‘உன்னை ஒரு வாரம் கழித்து பார்க்கிறேனே யுகன், சிறு புன்னகையை ஆவது என்னை நோக்கி வீசி இருக்கக் கூடாதா?’ என விம்மினாள்.

கத்தி அழுதால் மனப் பாரம் குறையுமெனத் தோன்றினாலும், அழுதால் என்ன.. அழுது களைத்து மயங்கியே போனாலும் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்க இங்கு ஆருமில்லை என விரக்தியுற்றாள்.

“யுகன்..”

சலிப்புடன், அவளைக் கிஞ்சித்தும் கண்டு கொள்ளாமல் நடந்தான் யுகேந்த்ராவ்.

“யுகன், ஐ க்னோ! ஐ க்னோ எவ்ரிதிங் அபௌட் வாட் ஹப்பெண்ட்.. எதுக்கு நீ அவொய்ட் பண்ணுறேனு தெரியும் யுகன். கியூட்டி பை’னு மைதிலி கிட்ட கொஞ்சுவியே!  என்னை மட்டும் வெறுத்து ஒதுக்க காரணம் என்னனு எனக்கு தெரியும். என்னை நீ உன் பக்கத்துல சேர்க்க தயங்கறது ஏன்னும் தெரியும்..” என பொறுமை இழந்தவளாய் குரலுயர்த்தி கத்தினாள் மான்ஷி.

அவனது நடை தடைப்பட்டது. நின்று திரும்பிப் பார்க்கவில்லை தான் என்றாலும், வெட்டு விழுந்திருந்த புருவத்தை அழுத்தமாய் நீவியபடி அவள் கூறப் போவதைக் கேட்பதற்காய் காதுகளை கூர்மைப்படுத்திக் கொண்டான்.

‘காரணம் தெரிந்து விட்டதா?’ நினைக்கும் போதே உடல் சூடேறி, கண்கள் கோபத்தில் கோவைப் பழமாய் சிவந்து போயின.

“முடியாது, உன்னை விட்டு யாருமில்லாத இடத்துக்கு போய் என்னால இருக்க முடியாதுன்னு மறுக்க மறுக்க அப்பா என்னை படிக்கிறதுக்காக அப்ராட் அனுப்பி வைச்சாருல்ல?

அத்தை, மாமா ஆக்சிடண்ட்ல இறந்து போனதை கேள்விப்பட்டதும் எவ்ளோ துடிச்சேன் தெரியுமா? நானும் அவங்களை கடைசியா ஒரு வாட்டி பார்க்கணும்ங்குறதுக்காக வந்தே தீருவேன்னு அடம் பிடிச்சேன்.

அன்று,

‘நான் வருவேன், ப்ளீஸ் வர விடுங்களேன்..’ என அலைபேசி வழியே கதறிக் கொண்டிருந்தாள் மான்ஷி.

“வேணாம்டா. அதான் இங்க னாம எல்லாரும் இருக்கோமே, நீ பதறாத! எல்லாத்தையும் சரி வர பார்த்துக்கறோம்..” என யோசித்துப் பார்க்காமல் உடனடியாக மறுத்தார் சிவதர்ஷன்.

ருத்ரவனும், ரேணுகாவும் இறந்து விட்ட தகவல் காதை எட்டிய நேரத்திலிருந்து அவருக்கு நிமிடத்துக்கு ஒரு தடவை அழைப்பு விடுத்து கெஞ்சிக் கொண்டு தான் இருக்கிறாள். அவர் தான் பிடி கொடுக்காமல், தான் நினைத்தது தான் நடந்தாக வேண்டும் என்ற வீம்பில் மறுத்து பேசிக் கொண்டிருந்தார்.

“டாடி, யுகன் ரொம்ப உடைஞ்சு போயிருக்கான். அவனுக்காக நான் அங்க வரணும். ரொம்ப அழறான்ப்பா..” என கூறும் போதே,

‘எனக்குனு இப்போ இங்க யாரும் இல்லடி. எல்லாரும் என்னை விட்டு போய்ட்டாங்க. நீயும் தூரமா இருக்கே. தாங்கிக்க முடியல மானு..’ என உடைந்து பேசிய யுகனின் வார்த்தைகளை நினைத்து அழுதாள்.

அவனின் துயராற்றுவதில் தன் பங்கு என்னவென்பதைப் புரிந்து கொண்டதிலிருந்து அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எந்தெந்த முறைகளில் கெஞ்ச முடியுமோ, அந்தளவுக்குக் கெஞ்சி கூத்தாடிப் பார்த்து விட்டாள் தந்தையிடம்.

அவர் உறுதியாக மறுத்தபடியால், அவரறியாமல் கள்ளத்தனமாய் புக் செய்த டிக்கெட்களும் கூட அவரின் கருணையால் கான்செல் ஆகிக் கொண்டே இருந்தது.

“ப்.பா ப்..ளீஸ்..” என கடைசி நம்பிக்கையில் கெஞ்சிப் பார்த்தாள்.

மகளின் கெஞ்சலைக் காது கொண்டு கேட்க முடியாமல் அழைப்பைத் துண்டித்துக் கொண்ட தர்ஷன், அதன் பிறகு அவளின் அழைப்புகளுக்கு பதில் கொடுக்கவே இல்லை.

கட்டிலில் விழுந்து உருண்டு அழுது கரைந்தவள் இறுதி முயற்சியாய் தன் மணிக்கட்டை அறுத்து, வழிந்தோடிய இரத்தத்தை புகைப்படமாக்கி தர்ஷனுக்கு வாட்ஸப் செய்தாள்.

இனியாவது யுகனைக் காணச் செல்ல சந்தர்ப்பம் அமையுமென எதிர்பார்த்தாள். நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் இறைவனின் இருப்பை எங்ஙனம் உணர்வதாம்..

“நீ பைத்தியகாரத் தனமா எதையாவது ட்ரை பண்ணி செத்துகித்துப் போயிடாதம்மா..” என அழைப்பு விடுத்து மிக மோசமாய் அதட்டியவர், ‘உன் ஆட்டம் என்னிடம் எடுபடாது!’ என அத்தோடே அலைபேசியையும் அணைத்து ஓரந்தள்ளி வைத்து விட்டார்.

எது எப்படியோ, இவள் கையை அறுத்துக் கொண்ட விடயமறிந்து யுகன் தான் உயிர் வரை பதறிப் போனான்.

தன் கவலை, கண்ணீரையெல்லாம் மறந்து அவளை திட்டித் தீர்த்து விட்டான். அவனிடமிருந்து அந்தளவுக்கு சரமாரியாகத் திட்டு வாங்கியது அதுதான் முதன்முறை..

‘நீ என் உயிருடி..’ என அவன் கூறிக் கலங்கிய வரியில் அவளின் இதயம் அடிபட்டுப் போனது. தனக்கு ஒன்றென்றதும் இவ்வளவு கலங்குகிறான், ஆனால் அவனின் இழப்பிற்கு ஆறுதல் கூற நான்தான் அருகில் இல்லாமல் போய் விட்டேன் என கலங்கினாள்.

பெற்றவர்களின் இறுதி சடங்குகள் முடிந்த மறுநாளே, மான்ஷியைக் காண்பதற்காக விமானம் ஏறியிருந்தான் யுகன்.

அங்கு சென்று அவளது பைத்தியக்காரத் தனத்தை கண்டித்து அவளைக் கன்னம் கன்னமாக அறைந்து, பின் அவளை தன் நெஞ்சோடு அணைத்து உச்சி முகர்ந்ததெல்லாம் வேறு கதை!

‘உன்னுடனே ஊருக்கு வந்து விடுகிறேன்..’ என அடம் பிடித்தவளை,

‘மாமாவுக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாரு. நீ இங்கேயே இருந்து படி. நீ ஒரு கலெக்டராவோ, பெரிய ஆளாவோ வந்துட்டா எனக்கு இல்லையா பெருமை? நீ கலங்காதே.. வாரா வாரம் உன்னைப் பார்க்க ஓடோடி வருவேன்டி..’ என ஆறுதல்படுத்தி விட்டு வந்தவன், அன்று தான் அவளைப் பார்த்துப் பேசிய கடைசி நாளாகவும் அமைந்தது.

அதன் பிறகு அவனிடமிருந்து அழைப்புகள் வரவில்லை; இவளிடமிருந்து புறப்பட்ட அழைப்புகளுக்குக் கூட பதிலோ, பதில் அழைப்புகளோ இல்லை. என்ன ஏதேன்று புரியாமல் ஊருக்கு வர முயன்றவளை வலுக்கட்டாயமாய் அங்கே இருக்குமாறு தடுத்து வைத்திருந்தார் சிவதர்ஷன்.

அவனைக் காணவில்லை, அவனிடம் பேசவில்லை என ஏக்கத்திலே துடிதுடித்துப் போனவள், இன்று வரை பதில் தேடிக் கொண்டு தான் இருக்கிறாள், அவனது அலட்சியத்துக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும், விலகலுக்குமான காரணம் என்னவாய் இருக்கும் என்பதை!

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!