‘வேலும் மயிலும் துணை இருக்க வேற என்ன வேணும் என்ன அப்பனே நாளும் உன்னை போற்றிடுவேன் நவசக்தி பாலமுருகையா’ என்ற பாடல் நன்றாக ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்த கிருத்திகா காதில் விழ,
முகம் வரை இழுத்தி போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, உடலை வளைத்து சோம்பல் முறித்த வண்ணம் மெல்ல எழுந்து அமர்ந்தாள்..
மீண்டும் ‘வேலும் மயிலும் துணை’ என்ற பாடல் ஒலித்தது.. அது மொபைல் ரிங்டோன்… ‘ம்பச்’ என்ற சலிப்புடன் மெல்ல திரும்பி மெத்தை அருகே இருந்த மொபைலை பார்த்தாள்.. எடுக்கவில்லை.. ஏனெனில் அது அவளுடையது அல்லவே..
அவள் கணவனுடையது.. இவ்வளவு நேரம் போன் அடிச்சிட்டு இருக்கு எங்க போனார் சலித்தபடி மீண்டும் மொபைலை பார்க்க, மிளிர்ந்த ஒளியில் மணி ஏழு என அது காட்டியது,
“அச்சச்சோ” என தலையில் அடித்து கொண்டு அடித்து பிடித்து மெத்தையை விட்டு எழுந்து கபோர்ட்டுக்கு சென்று அவள் உடைகளை வேகமாக எடுத்து கொண்டு பாத்ரூம் அருகே சென்று திறப்பில் கை வைத்து திருக, கதவு திறக்கவில்லை, உள் தாழ்ப்பாள் போட்டு இருக்கும் போல..
‘அச்சோ டைமாச்சே’, “ச்சே” கால்லை தரையில் உதைத்தாள்.. அவள் கணவன் தான் உள் இருப்பான் போல,
பத்து நாள் விடுமுறை எடுத்து இருந்தவள், இன்று வேலைக்கு செல்ல வேண்டும்..
இந்த பத்து நாள் லீவுக்கே அந்த எச்.ஓ.டியிடம் அவ்வளவு திட்டு வாங்கி இருந்தாள்.. ஆம் அவள் பிரபல கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக தான் பணியாற்றுகிறாள்.. இன்று வேறு இளநிலைப் படிப்பிற்கான முதலாமாண்டு மாணவர்களின் முதல் நாள்.. சீனியர் மாணவர்கள் எந்த குரங்கு சேட்டையும் பண்ணாது பார்த்து கொள்ள வேண்டும்.. ராகிங் அது இதுன்னு எந்த பிரச்சினையும் நம்ம டிபார்ட்மெண்ட்டில் வர கூடாது.. எல்லாரும் சீக்கிரமே வந்துருங்க என்ற மெசேஜ் வேறு..
ஆனால் இப்போது மணி ஏழை கடந்து இருக்க.. குளித்து ரெடியாகி போவதற்குள் லேட்டாகி விடும்.. கண்டிப்பா இன்னைக்கு திட்டு தான் என தனக்குள் புலம்பியவள்,
“அச்சோ கொஞ்சம் சீக்கிரம் தான் வாங்களேன் எனக்கு அர்ஜெண்ட்” என சத்தம் போட்டபடி பாத்ரூம் கதவை தட்டிய கிருத்திகா,
‘ச்சே என்ன உளறிட்டு இருக்க, மார்னிங் தூங்கி எழுந்து அர்ஜெண்ட்டுனா, அவர் வேற எதுவும் தப்பா நினைச்சிட போறார்’ என தலையில் அடித்து கொண்டவள்,
“காலேஜ்க்கு டைம்மாச்சு சீக்கிரம் கிளம்பனும் அதுக்காக சொன்ன அர்ஜெண்ட், அந்த அர்ஜெண்ட்டை நீங்க வேற ஏதோ அர்ஜெண்ட்ன்னு தப்பா நினைச்சுடாதீங்க” என விளக்கம் வேறு கொடுத்தாள்..
அவள் எழுந்து இரண்டு நிமிடம் கூட இருக்காது… ஆனால் நூறு தடவைக்கு மேல் கதவை தட்டி விட்டாள்.. இன்னும் கதவை நிறுத்தாமல் தட்டி கொண்டே இருந்தாள்…
வேகமாக கதவு திறக்கப்பட்டது..
ஆறடி உயரத்தில், மாநிறத்தில் இடையில் டவலுடன் தலை முதல் அவனின் திடக்காந்திரமான உடற்கட்டில் நீர் திவலைகள் நில்லாது வழிந்த வண்ணம் கிருத்திகாவை முறைத்தபடி வாசற்படியில் நின்று இருந்தான்..
அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள் “ச்சே ச்சே என்ன இது, இப்புடி வெறும் டவலோட மட்டும் வந்து நிற்கிறீங்க, கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா” என முகத்தை சுளிக்க,
இன்னும் உக்கிரமாக அவளை முறைக்க ஆரம்பித்தான் அவளின் மணாளன்…
‘குளிக்க கூட விடாமல் கதவை உடைக்குமளவு இடைவிடாது தட்டிவிட்டு இப்போது இப்புடி பேசுவதற்கு தான் இந்த முறைப்பு’ என்பது புரிய,
“என் மேல் எதுக்கு கோவப்படுறீங்க எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்… நான் இன்னைக்கு வேலைக்கு போகனும் அதும் நேரமா போகனும்ன்னு நைட்டே சொன்னேன்ல.. ஃபைவ் தெர்டிக்கு அலராம் வச்சிட்டு படுத்து இருந்தேன்.. அதை நீங்க எதுக்கு ஆஃப் பண்ணுனீங்க, அப்புடி ஆஃப் பண்ணாம இருந்தா அந்த அலராம் அடிக்கிற சவுண்ட்ல நான் எழுந்திருப்பேன் லேட்டாகி இருக்காதுல்ல எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், ஏன் இப்புடி பண்ணுனீங்க” என கல்லூரிக்கு தாமதமாகி கொண்டு இருப்பதை மறந்து கணவனுடன் மல்லுக்கு நிற்க
அதே நேரம் ‘ஹக்ரி பேக்ரி பேல் ஹக்ரி பேக்ரி பேல் என அவளின் மொபைலிருந்து சத்தம் வந்தது…
“அச்சசோ” என மானசிகமாக மறுபடியும் தலையில் அடித்து கொண்டாள் கிருத்திகா.. ஏனெனில் அடித்தது அவளுடைய அலாரம் டோன்..
‘அப்புடியானல் ஒன்றைரை மணி நேரமாக அலாரம் ஐந்து நிமிட இடைவெளியில் அடித்து கொண்டே இருந்திருக்கின்றது… அதை கூட உணராமல் கும்பர்கணி போல் தூங்கி விட்டு அவனை குறை கூறி இருக்கமா’ என்றவளுக்கு தவறு செய்து விட்டோம் என சாரி கேட்கவோ இறங்கி போகவோ மனமில்லை..
“நான் ஏதோ டயர்ட்ல தூங்கிட்டேன்.. நீங்க எழுப்பி விட்டு இருக்கலாம்ல, ஏன் எழுப்பலை” என கெத்தை விட்டு கொடுக்காது கண்ணை உருட்டி கணவனிடம் மீண்டும் கிருத்திகா சண்டைக்கு நிற்க,
அவனோ அவளின் குற்றசாட்டுக்கு பதில் அளிக்கவும் இல்லை.. கோவப்படவும் இல்லை.. யார்க்கிட்டயோ பேசுகிறாள் என்பது போல் வேறு ஒரு டவலை எடுத்து தலையை துவட்டியபடி கிருத்திகாவை தாண்டி சென்றான்..
“எவ்வளவு அலட்சியம் இந்த மனுஷனுக்கு கேட்கிறதுக்கு பதில் சொல்லலாமா போறதை பார் எல்லாம் என் நேரம்” என தன் தலையில் மறுபடியும் அடித்து கொண்டு அவன் மேல் உள்ள கோவத்தை பாத்ரூம் கதவவை படாரென அடித்து சாத்தி அதன் மீது காட்டிவிட்டு உள்ளே சென்றாள்…
ஷவரின் அடியில் நின்று குளித்து கொண்டு இருந்தவளுக்கு மனதே ஆறவில்லை.. அவளின் காலை இவ்வளவு தாமதாக ஏழு மணிக்காக தொடங்கும்.. அவ்வளவு சோம்பேறியா அவள்,
அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் வைக்காமல் எழுந்து கொள்ளும் பழக்கம் உடையவள் அல்லவா அவள்… ஆனால் இன்று எல்லாம் மாறி விட்டது.. இந்த பத்து நாளில் எல்லாமே மாறி விட்டது…
இந்த அப்பாவால் தான் இது எல்லாம்… “கீரத்திமா வர வெள்ளிக்கிழமை காலேஜ்க்கு லீவ் சொல்லிட்டு வந்துடு, நம்ம ஊர்ல, வடிவேலன் அய்யா பெரிய பையனுக்கு கல்யாணம் கண்டிப்பா குடும்பத்தோட எல்லாரும் போகனும் என்ற போது, “சரிங்கப்பா” என தலை ஆட்டி இருக்க கூடாது..
அந்த கல்யாணத்திற்கு போய் இருக்கவே கூடாது அது தான் அது தான் கிருத்தி நீ செஞ்ச மிகப்பெரிய முட்டாள்தனம் என கையில் குளிப்பதற்காக வைத்து இருந்த ஷாம்பு பாட்டிலை கொண்டு தலையில் அடித்து கொண்டாள்..
அன்று கிருத்திகா சென்றது அவள் கணவனுக்கு ஏற்பாடு செய்து இருந்த கல்யாணத்திற்கு தான்.. போன இடத்தில் சினிமா சீரியல்களில் வருவது போல் முகூர்த்த நேரத்தில் இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கலை என்று லெட்டர் எழுதி வைத்துவிட்டு மணப்பெண் காணாமல் போக,
அவளின் இப்போதைய மாமியாரும் முன்னாள் யாரோ ஒருவருமான முருகேஸ்வரி அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்து கொண்டு மயக்கம் போட, மண்டபமே காச் மூச்சென களேபரமாகி விட, அய்யோ பாவம் அடுத்து இங்க என்ன நடக்க போகுது என மும்மரமாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த கிருத்திகாவை தீடீர் மணமகளாக்கி விட்டார் அவளின் தந்தை..
“ப்பா என்னப்பா இது, என்னால் முடியாது, யார் என்னனு தெரியாத ஒருத்தரை போய் எப்புடிப்பா, என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. முடியவே முடியாது”என கிருத்திகா முதலில் மறுக்க,
“கிருமா உனக்கு இரண்டு வயசு இருக்கும் போது ஒரு வேலை வெட்டி தொழில்ன்னு எதுவும் இல்லாமா சுத்தியும் கடன் பிரச்சினையில் சிக்கி மீள முடியாம குடும்பத்தோட சாகுற நிலைமையில் இருந்தப்ப, நான் கேட்காமலே ஓடி வந்து உதவி செஞ்சவர்மா மாப்பிள்ளை பையனோட அப்பா வடிவேலன் அய்யா.. அவர் வாங்கி கொடுத்தது தான் உன் அப்பா இப்ப பார்க்கிற கவர்மெண்ட் வேலை.. உன்கிட்ட அவரை பத்தி எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. அவர் நம்ம குடும்ப்த்திற்கே கடவுள் மாதிரி”,
“அப்புடிபட்ட வடிவேலன் அய்யா குடும்பம் இப்புடி ஒரு கஷ்டமான சூழ்நிலையில் நிற்கும் போது, எப்புடி மா வேடிக்கை பார்த்துட்டு நிற்க முடியும்.. அப்புடி நின்னா நான் நன்றி கெட்டவனாகிட மாட்டன்னா”,
“அதுக்கு உங்க நன்றி கடனை தீர்க்க நான் தான் கிடைச்சனா என்னால் முடியாது” என்றவளிடம்,
“வடிவேலன் அய்யா பையன்மா குணத்தில் குறை சொல்ற அளவு இருக்க மாட்டார்.. நல்ல பையன்மா, அப்பா உனக்கு கெடுதல் நினைப்பான்னா கிருமா” என ஏதேதோ பேசி திட்டி கடைசியாக எமோஷனல் ப்ளாக் மெயில் செய்து ஒத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளினார் கிருத்திகா தந்தை மாணிக்க வேல்…
வேற வழியில்லாது வேண்டா வெறுப்பாக மணமேடைக்கு சென்றாள் கிருத்திகா.. அப்போது தான் மாப்பிள்ளை பற்றி முக்கியமான ஒரு விஷயத்தை அப்பாவிடம் கேட்க மறந்தது நியாபகம் வர நிமிர்ந்து அப்பாவை பார்க்க அவர் தூரத்தில் இருந்தார்..
அவளை மணமேடைக்கு அழைத்து சென்ற மாப்பிள்ளையின் தங்கையிடம், “அவங்க என்ன படிச்சு இருக்காங்க” என கிருத்திகா கேட்க,
அவளை முறைத்த மாப்பிள்ளையின் தங்கை “ப்ளஸ் டூ தான் அதுக்கு என்ன இப்ப” என சர்வசாதாரணமாக கிருத்திகா தலையில் இடியை இறக்க, அதே நேரம் அவள் கழுத்தில் தாலியும் ஏறியது வீரய்யன் கையினால்,