“சபரி ரேவதி நட்சத்திரம்” என்று சொல்ல வந்த சபரிக்கு முன்பாக “சௌதாமினி கிருத்திகை நட்சத்திரம்” என்ற பெண்ணின் குரல் தன் அருகே கேட்க,
‘யாருடா இந்த அவசரகுடுக்கை’ என்றபடி தன் இடப்புறம் நின்று இருந்த பெண்ணவள் புறம் திரும்பி பார்த்தவன், அதன் பிறகு பார்வையை அவள் முகத்தை விட்டு எங்குமே நகர்த்தவில்லை..
அவளின் முகத்தோற்றம் அவனை ஈர்த்ததை விட, மனதிற்குள் இறைவனிடம் வைக்க வேண்டிய வேண்டுதலை, இருகரம் கூப்பி கண்களை இறுக மூடியபடி தலையை ஆட்டி ஆட்டி உதடுகளில் முணுமுணுத்தபடி சாமி கும்பிடுவது,
சிறு குழந்தை தன் தாயிடம் எனக்கு அது வேணும் இது வேணும் என்று கேட்பது போல் ரசிக்கும்படியாக இருந்தது… அவள் முகத்திலே ஒரு குழந்தை தனம் இருந்தது… அது தான் அவனை வெகுவாக ஈர்த்தது… அவளையே கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தான்… செளதாமினியின் வேண்டுதல் லிஸ்ட் பெரிது போல அவள் கண் திறந்தபாடில்லை… சபரியும் பார்வையை மாற்றியபாடில்லை..
மந்திரங்களை உச்சரித்தபடி ஐயர் இவர்கள் அருகே வர, விழி திறந்தாள் சௌதாமினி. மொத்தமாக அவளிடம் விழுந்து விட்டான் சபரி அந்த மெரூன் நிற விழி உடையவளிடம்,
சௌதாமினி தீபாராதனை எடுத்து கண்களில் ஒற்றி கொண்டு, ஐயர் தந்த விபூதியை மோதிர விரலால் எடுத்து அவள் வைத்திருந்த கல் பொட்டுக்கு மேலாக சிறிது கோடு போல் வைத்து கொண்டாள். அது அவள் எழில் முகத்திற்கு எடுப்பாகவே இருந்தது.. அவள் நகர அனிச்சையாக அவன் கால்களும் அவள் புறம் செல்ல பார்க்க முடியவில்லை… அவனை செல்ல விடாமல் கையை இழுத்து பிடித்து நிறுத்தினாள் ஹரிணி..
“சிவபூஜையில் கரடின்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா இன்னைக்கு தான் நேர்ல பார்க்கிறேன்.. கைய விடு கரடியே நான் போகனும்” என் மினி போறா,
உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா சபரி? என்றாள் கடுப்புடன் ஹரிணி
“ஏய் ஒரு போலீஸ்காரனை பார்த்து கேட்கிற கேள்வியா இது” சபரி முறைக்க
“பின்ன என்னடா உன்னை எதுக்காக கோவிலுக்கு வர சொன்னேன்.. நீ என்னடான்னா அதை மறந்தட்டு என்ன என்னமோ பண்ணிட்டு இருக்க” என்று ஹரிணி கேட்ட பின்பு தான் கோவிலுக்கு வந்ததற்கான காரியம் நினைவு வந்தது..
“தியா வந்துட்டாளா எங்க?”
“உனக்கு பின்னாடி இருக்க அந்த மண்டபத்துல தான் உக்கார்ந்து இருக்கா… நாங்க வந்து அரை மணி நேரத்திற்கு மேலாச்சு, எத்தனை டைம் கால் பண்றது நீ சைட் அடிக்கிறதுல பிஸியா இருந்ததால் அதையும் பார்க்கமா விட்டுருக்கா.
வா வந்து அவகிட்ட பேசு அதுக்கப்புறம் மினியோ சனியோ யார் பின்னாடி வேணா போ”..
“ஏய் உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்” என்று ஹரிணி தலையில் கொட்டிய படி தியா இருந்த இடத்தை நோக்கி நடந்தான்..
தியா சூர்யாவை சந்தித்து வந்து ஒரு வாரம் கடந்து இருந்தது.. இந்த ஒரு வாரமும் தியாவின் உலகமே மாறி இருந்தது.. இதுவரை கண்ணீரை கண்டிராத அவள் விழிகள் இந்த ஒரு வார காலமும் அணை உடைத்த அருவியாய் மாறி இருந்தது… வாய் ஓயாமல் பேசுபவள் அமைதியை தத்தெடுத்து இருந்தாள்..
தேவாவை பார்த்த நாளிலிருந்து அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எத்தனை எத்தனை பேரிடம் கேட்டு இருப்பாள்…
ஆனால் இன்று தேவாவை பற்றி அறிந்த உண்மைகளின் பாரம் அவளால் தாங்க முடியாததாக இருந்தது.. இதுக்கு தெரிந்து கொள்ளாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.. காதல் கொண்ட மனம் அவனுக்காக வருத்தப்பட்டது… ஐந்து வருடங்களுக்கு முன்பு தேவா எவ்வளவு வேதனைகளை அனுபவித்து இருப்பான் என்று நினைத்து நினைத்து அதே வேதனையை இன்று அவள் அனுபவித்தாள்..
பட்டாம் பூச்சியாய் சுற்றி திரியும் மகளின் புது வித நடவடிக்கையில் குழம்பி போன யமுனா… என்னடா என்னாச்சு அம்மா கிட்ட சொல்லுடா, ஃப்ரெண்ட்ஸ் கூட சண்டையா, எக்ஸாம் சரியா எழுதலையா, என்ன பிரச்சனைடா என்று விசாரக்க தியா ஒன்னும் இல்லை என்று கூறி விட்டாள்… இனியா கூட வந்து எவ்வளவோ கேட்டு பார்க்க தியா அமைதியையே பதிலாக தந்தாள்..
ஹரிணிக்கு தேவா விஷயம் தான் ஏதோ ஒன்று என்பது தெரிந்தது. ஆனால் என்னவென்று தான் புரியவில்லை.. கேட்டாலும் எதுவும் சொல்லவில்லை.. பொறுத்து பார்த்த ஹரிணி இங்கு அழைத்து வந்துள்ளாள் தியாவை. சபரி கண்டிப்பாக தியா விடம் இருந்து உண்மையை வரவழைத்து அவளின் மனநிலையை மாற்றி விடுவான் ஏனெனில் சபரி தியாவின் male version என்பதால்,
தியா அருகே வந்த சபரி அவளின் அழுது வடிந்த முகத்தை பார்த்ததும் “மச்சான் என்னோட ஃபீலிங்கா” என்றபடி பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்தான்..
ஹரிணி ‘இது எல்லாம் என்ன டிசைனோ என்ற ரீதியில் தன் தலையில் அடித்து கொண்டாள்..
தியா அவனை முறைக்க,
“மச்சான் சத்தியமா சொல்றேன் இந்த ஃபீலிங் எல்லாம் உனக்கு செட் ஆகவே இல்லை”…
“ஏற்கெனவே நீ சுமாரா தான் இருப்ப. இதுல சோகமா இருக்கேன் அப்புடின்னு மேக்கப் போடாமா ரொம்ப ரொம்ப சுமாரா இருக்க, இப்புடி மேக்கப் போடாம வெளிய வந்து எங்களை மாதிரி பசங்களை பயமுறுத்தலாமா” என்றதும் தியா தன்னருகே கிடந்த தேங்காய் சில்களை எடுத்து அவன் மீது வீச அவன் நகர்ந்து விட்டான்…
“என் மேலே படவே இல்லையே” என்று பழிப்பு காட்ட,
தியா மற்றோரு சில்லை எடுத்து வீச அவன் நகர, இவள் வீச, அவன் நகர என்று அது ஒரு விளையாட்டாக மாறி போனது…
நல்ல நண்பர்கள் இருந்தால் போதும் எவ்வளவு மோசமான மனநிலையில் இருந்தாலும் சிறிது நேரத்தில் அதை மகிழ்வாக மாற்றி விடுவர். ஹரிணி சபரி அதை தான் செய்தனர். தியா முகத்தில் கொஞ்ச நேரத்தில் சிரிப்பை வரவழைத்து விட்டனர்…
“சரி இப்ப சொல்லு மச்சான் உனக்கு என்ன பிரச்சினை?” என்றவனிடம் தேவாவின் கடந்த காலத்தை பற்றி கூறினாள்… கேட்ட சபரி ஹரிணிக்கே பயங்கர அதிர்ச்சி… அந்த இடமே இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்தது…
“மச்சான் இது எல்லாம் நடந்து முடிஞ்சு அஞ்சு வருஷம் ஆகிருச்சு.. நடந்து இருக்கவே கூடாத விஷயம் தான் ஆனா நடந்திருச்சு, அதற்காக நீ இப்புடி உக்கார்ந்து கவலைப்பட்டே இருந்தே எல்லாம் சரி ஆகிடுமா சொல்லு”,
“கவலைப்பட்ட சரி ஆகாது தான் சபரி. ஆனா பாவா பாவம்டா.. எனக்கு அவர் எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சு இருப்பார்ன்னு நினைக்கும் போது அழுகையா வருது எனும் போதே கண் கலங்க,
“ஏய் என்ன இது சீரியல் பார்க்கிற கிழவி மாதிரி கண்ணீர் வடிச்சிட்டு” சபரி அதட்டல் போட,
கண்ணை துடைத்தவள் எல்லாத்தையும் சரி பண்ணணும்டா சபரி என சொல்ல,
எப்புடி சரி பண்ண ஹரிணி கேட்கவும்,
“ஒரு இரண்டு விஷயம் நடக்கனும். அந்த இரண்டு விஷயமும் நான் நினைச்சா மாதிரி நடந்தா எல்லாம் சரி ஆகிடும்”…
“என்ன இரண்டு விஷயம் சொல்லுடா மச்சான். உனக்கு நான் உதவி பண்றேன்” என்றான் சபரி..
“ஒன்னு எந்த ஹாஸ்பிடல் கௌரவத்தை காப்பாத்த என் பாவா வாழ்க்கையை அழிச்சாங்களோ அந்த ஆரோக்கியம் ஹாஸ்பிடல் இழுத்து மூடி சீல் வைக்கனும்” என்ற தியாவின் கண்களில் அவ்வளவு வெறி..
இது கொஞ்சம் கஷ்டம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையும் பண்ண முடியாது … அஞ்சு வருஷத்திற்கு முன்னாடி நடந்தது.. இவ்வளவு கிரிமினல்ல யோசிச்ச அந்த மகேஸ்வரன் எந்த திட்டத்தையும் விட்டு வச்சு இருப்பான்னு தோணலை.. இருந்தாலும் ட்ரை பண்ணுவோம்.. இரண்டாவது விஷயம் என்னன்னு சொல்லு சபரி கேட்க.
எனக்கும் பாவாக்கும் சீக்கிரமா கல்யாணம் நடக்கனும்” என்று அசலாட்டாக கூற, கேட்ட இருவரும் தான் அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து கொண்டனர்…
ஹரிணி அதே அதிர்ச்சியுடன் “தியாமா நீ தேவா சாரை கல்யாணம் பண்ணிக்க போறியா”,
“யா ஃஅப்கோர்ஸ் இதுல உனக்கு என்னடி டவுட்டு, லவ் பண்ணா கல்யாணம் பண்ணி தானே ஆகனும்”..
“இது எப்புடி நடக்கும் தியாமா உன் அம்மா அப்பா தேவா சாரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பாங்களா, ஒரு வேளை அவங்க சம்மதிச்சாலும் தேவா சார் ஒத்துக்குவாரா” என்ற ஹரிணியிடம்,
அவர் தானே க்கும் ஒத்துக்கிட்டாலும் என தியா சலிக்க,
“அப்புறம் எப்படி?”
“எல்லாரும் சம்மதிச்சு எனக்கு கல்யாணம் நடக்கிறதுக்குள்ள நான் கிழவி ஆகிடுவேன். அதான் பர்ஸ்ட் கல்யாணத்தை முடிச்சிட்டு அப்புறமா எல்லார் சம்மதம் வாங்கிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள் தியா கண்ணடித்து,