வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௩ (3)

4.9
(16)

அம்பு – ௩ (3)

அவளின் செவ்வரி ஓடிய இதழோடு தன் இதழ் சேர்த்து அவன் எழுதிக் கொண்டிருந்த காதல் கவிதையில் மொத்தமாய் மூழ்கியிருந்தாள் சித்திரப்பாவை அவளும்..

வெகு நேரம் ஒட்டி வைத்த அதரங்களை வெட்டிக் கொள்ள மனமில்லாமல் இருவரும் அந்த முத்தத்துக்குள்ளேயே மூச்செடுக்க மறந்து கவிதையாய் துவங்கியதை காவியமாக மாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்..

முத்த மயக்கத்தில் இருந்து முதலில் சற்று தெளிந்த இந்தர் இதழை விலக்காமல் கண் திறந்து காரிகை அவள் முகம் நொடிக்கு நொடி காட்டிய உணர்வு கீற்றுகளை தன்னை மறந்து ஆழ்ந்து பார்க்க அவளோ மோக சுழலில் சிக்கித் தவித்தபடி மூச்செடுக்க மறந்தவளாய் ஆசை கடலின் அடி ஆழத்திற்கு பயணப்பட்டவள் போல் மெய் மறந்து கிடந்தாள்..

அதற்கு மேல் அவளை சோதிக்க மனம் இல்லாது தன் இதழ்களை சட்டென பிரித்துக் கொண்டவன் அவள் முகத்தில் பிரியமான எதையோ இழந்துவிட்ட கணநேர பாவனையை பார்த்த நொடி இதழ் விரித்து அழகாய் புன்னகைத்திருந்தான்..

அவளோ அப்போதும் கண்களைத் திறவாமல் ஆசை மயக்கத்தின் வலிய பிடியில் கட்டுண்டு கிடந்தவளாய் அவன் பிடரி மயிருக்குள் தன் விரல்களை விட்டு பிடித்து தன் புறம் அவனை இழுத்து “இந்து ப்ளீஸ்..” என்று மறுபடி அவன் அதரங்களோடு வன்மையாய் வேகத்தோடு தன் இதழ் சேர்த்திருந்தாள்..

அவளோடு சேர்ந்து இருந்த காலங்களில் அவளுக்குள் மூழ்கி இருக்கும் நேரம் மோகத்தின் உச்சத்தில் தாபம் நிறைந்த கிறங்கிய குரலில் அவள் இந்து என்று அவனை அழைக்கும் போது அவனுக்குள் கட்டவிழும் ஆண்மை துள்ளி எழுந்து உச்சத்தை அடைந்து சிலிர்த்தடங்கும்..

வெகு நாட்களுக்குப் பிறகு அதே அழைப்பு பாகில் கலந்த தேனாய் அவனுக்குள் ஊடுருவி உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்த அவள் இதழுக்குள் ஆழமாய் புதைந்து போனான் அவன்..

சில நொடிகள் தாண்டி அவளின் விழியோரம் ஒரு நீர் துளி எட்டிப் பார்க்க அவள் கன்னப்பகுதி முழுவதும் தன் உள்ளங்கையில் அடக்கி இருந்தவனின் நுனி விரலை அந்தக் கண்ணீர் துளி நனைத்தது..

சட்டென கண் திறந்தவன் அந்த ஒற்றைக் கண்ணீர் துளியின் ஈரத்தில் தன் மேல் மாறாத அவளின் காதலின் ஆழத்தை முழுவதுமாய் உணர்ந்து இருந்தான்.. இனி எந்த நிலையிலும் அவளை தன்னிலிருந்து பிரிந்து போக விடுவதில்லை என்று தீர்மானம் கொண்டான் அவளின் காதல் தலைவன்..

அவள் காதல் அலையின் ஈரத்தில் நெகிழ்ந்து போனவனின் இதழில் அவனை அறியாமல் ஒரு கர்வ புன்னகை இறுமாப்போடு தன்னையே இருத்திக் கொண்டது.. அவள் இதழிலிருந்து விலகி அவள் முகத்தில் தோன்றிய காதல் உணர்வுகளின் சிதறல்களை புன்னகை மாறாமல் ரசித்து பார்த்திருந்தான் கள்வன் அவன்..

ஆனால் அவன் இதழின் அந்த நொடி நேர இழப்பில் சட்டென கண்களை திறந்தவளுக்கு தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்பது புரிய ஒரு நொடி அதிர்ந்து போனாள்.. அனல் மேல் பனியாய் அவன் அருகாமையில் உருகும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள்..

கண்கள் வெவ்வேறு திசையில் அலை பாய “ஐயோ மானங்கெட்ட மனசு இவன் கிட்ட வந்தாலே இவன் கிட்ட மொத்தமா கவுந்து போகுதே” பற்களை கடித்து முணுமுணுவென தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்..

அவள் வாயசைவிலேயே அவள் என்ன பேசினாள் என்று உணர்ந்து கொண்டவனின் மனம் இன்னும் அவளோடு பசை போட்டு ஒட்டிக்கொள்ள ஏங்கி தவிக்க ஆரம்பித்தது..

அவள் நாடியில் கைவைத்து முகத்தை நிமிர்த்தியவன் “உன் மனசு அப்படிதான்டி சொல்லும்.. ஏன்னா அதுக்கு பொய் சொல்லி நடிக்க தெரியாது.. உள்ள என்ன இருக்கோ அதைதான் வெளியில காட்டும்..” என்றான் அவள் முகத்தை தன் கண்களால் ஊடுருவி அளந்து கொண்டே..

அவ்வளவு நேரம் தன்னை மறந்து காதல் கடலின் ஆழத்தில் நீந்தி கொண்டிருந்தவளின் முகம் இப்போது அதற்கு எதிர் மாறாக இறுக்கத்தை தத்தெடுத்து இருக்க ஏனோ அவனுக்கு அவள் கோபம் அடம் பிடிக்கும் ஒரு குழந்தையின் கோபமாகவே தோன்றியது..

அந்த எண்ணமே அவன் இதழில் உதித்த சிரிப்பை இன்னும் விரித்து பெரிதாக்கியது..

ஏற்கனவே கடுப்பில் இருந்தவளுக்கு அவன் முகத்தில் நிறைந்திருந்த புன்னகை இன்னும் ஆத்திரத்தை கூட்ட அவனை எரிப்பது போல் முறைத்தாள்..

“என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல?”

அவன் கையை தட்டி விட்டு அவள் இன்னும் ஆத்திரத்தோடு வினவ “என்ன நினைச்சுகிட்டு இருக்கேன்.. நீ என் பொண்டாட்டின்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. இனிமே ஒரு நிமிஷம் கூட உன்னை பிரிய கூடாது.. உன்னையும் என் குட்டி இளவரசியையும் என் பக்கத்துலயே வச்சுக்கிட்டு காலம் முழுக்க உங்களோட வாழணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன்..”

“அது உங்க கனவிலயும் நடக்காது.. உங்களை மாதிரி ஒரு மனுஷனோட வாழறதை நினைச்சு பார்த்தாலே எனக்கு வெறுப்பா இருக்கு..”

ஒரு பெருமூச்சை விட்டவன் புருவம் உயர்த்தி “ம்ம்.. அப்படியா.. ஆனா.. இவ்வளவு நேரம் நீ நடந்துக்கிட்டதை பார்த்தா அந்த மாதிரி ஒரு செகண்ட் கூட எனக்கு ஃபீல் ஆகலையே பேபி.. தொடங்கி வெச்சது தானடி நானு.. அதுக்கு அப்புறம் விடாம பிடிச்சு வச்சுக்கிட்டது நீ தானடி.. ரொம்ப நாள் கழிச்சு உயிர் இல்லாதவளுக்கு உயிர் கிடைச்ச மாதிரி என் வாயை போட்டு இப்படி கடிச்சு வச்சுட்டு பேசுற பேச்சை பாரு..”

தன் உதட்டை பிடித்து முன்னால் நீட்டி அவளுக்கு காட்டியபடி குறும்பு பார்வையோடு சொன்னவனின் கண்களைப் பார்த்தவளோ ஒரு நொடி அவன் பார்வையில் தடுமாறி போனாள்..

“இப்படி பார்த்து பார்த்து தான் மொத்தமா சாச்சுட்டான் நம்மள.. இந்த முறை ஏமாறக்கூடாது” என்று முணுமுணுத்தபடி அவன் பார்வையில் இருந்து அவள் விழி விலக்க அவனோ அவள் முகத்தை தன் புறம் திரும்பியவன் “இங்கேயும் அதே நிலைமைதான்டி.. உன் கண்ணை பார்த்தாலே உள்ளுக்குள்ள மொத்தமா ஆஃப் ஆயிடுறேன்.. ப்ப்பாஆஆ.. அந்த கண்ணுல அப்படி என்னதான் வச்சிருக்கியோ.. தெரியல.. மாட்டுனா வெளில வரவே மனசு வரமாட்டேங்குது..”

வார்த்தைகள் தான் சலிப்பாய் வந்ததே தவிர பேதை அவளின் முகம் பார்த்த அவன் கண்களிலோ ஏகத்துக்கும் ரசனை கூடித்தான் இருந்தது..

“ம்க்கும்.. நீ எவ்வளவுதான் முயற்சி பண்ணாலும் என் மேல உனக்கு இருக்கிற லவ்வை மறைக்க முடியாது மலரு.. ம்ஹூம்.. சாரி.. இப்ப நீதான் சாஃப்டான மலர் இல்லையே.. ஸ்ட்ராங்கான வில்லி இல்லை.. என்னோட ஆசை வில்லி..”

அவன்  கூற்றுக்கு பதிலாய் அவளால் முறைக்க தான் முடிந்ததே தவிர மறுத்து எதுவும் சொல்ல இயலாமல் தடுமாறினாள் வஞ்சியவள்.. அவன் சொன்னதத்தனையும் உண்மைதானே.. ஆழக்கடலின் சுழலாய் தன்னை அவனுக்குள் இழுத்துக் கொண்டு ஆட்டி வைக்கும் வித்தை அறிந்தவனாயிற்றே அவன்..

அவள் உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் இந்த ஒருவன் புறம் மட்டும் எப்போதும் அவளின் எந்த கட்டளைக்கும் அடங்காமல் காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்பாய் அவனை நோக்கி பாய்ந்து அவனை இறுகப்பற்றி கொண்டு விட துள்ளி ஓடுகிறதே..

எல்லாம் தெரிந்தாலும் அவனிடம் அதை ஒப்புக் கொண்டு சரணடைய மனம் இல்லாதவள் வேண்டுமென்றே அவட்சியமாய் வேறு வார்த்தைகளை வீசி அவனை வெறுப்பேற்ற முயன்றாள்..

“லவ்வா.. லவ்வெல்லாம் ஒன்னும் இல்ல.. இத்தனை நாளா ஆஸ்திரேலியால தானே இருந்தேன்.. அங்க இதெல்லாம் ரொம்ப சகஜம்தான். அங்க இந்த டேட்டிங் கிஸ்ஸிங்..  ஹக்கிங் ஏன் ஒன் நைட் ஸ்டேண்ட் இது எல்லாமே பார்த்துட்டு தான் வந்து இருக்கேன்.. சும்மா சொல்ல கூடாது.. அப்ப பார்த்ததைவிட இப்ப இன்னும் உடம்பெல்லாம் ஏத்தி ரொம்ப ஹேண்ட்ஸம்மா தான் இருக்கீங்க.. அதான் அங்கே என்னை அப்ரோச் பண்ண கைஸ் கிட்ட நடந்துக்கிற மாதிரியே உங்ககிட்டயும் கொஞ்சம்..” ஒரு மார்க்கமாய் அவனை பார்த்தவள் அவனை இன்னும் சீண்டும் நோக்கோடு.. “ஹான்.. இப்பவும் உங்களோட ஒன் நைட் ஸ்டேண்ட் எனக்கு ஓகே தான்.. அதுக்காக வாழ்க்கை முழுக்க உங்களோட வாழறதெல்லாம்.. ப்ச்.. சான்சே இல்ல மிஸ்டர் இந்தர்..”

அவனோ தன் காதில் விரல் விட்டு அலட்சியமாய் குடைந்தவன் “ப்ப்பா.. உன் கம்பி கட்ற கதையெல்லாம் முடிச்சிட்டியா? நீ சொன்னதெல்லாம் உண்மையாவே இருந்தாலும் எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல.. ஆஸ்திரேலியால இருந்தப்போ நீ எப்படி இருந்தங்கறது எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை.. நீ அங்க ஒன் நைட் ஸ்டேன்ட்ல இருந்தியோ இல்ல பாய் ஃபிரண்ட் கூட டேட் பண்ணிக்கிட்டு இருந்தியோ.. இல்ல அதுக்கும் மேல இன்னொருத்தனோட நீ குடும்பமே நடத்தி இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை.. இப்போ நீ என்னோட பொண்டாட்டி.. எவனுமே அதை இல்லன்னு சொல்ல முடியாது.. நீ இன்னொரு கல்யாணம் பண்ணி இருந்தா அதுவும் வேலைக்காகாது.. சோ போன முறை தப்பிச்சு போன மாதிரி என்கிட்ட இருந்து தப்பிச்சு போகலாம்னு கனவிலயும் நினைக்காத.. இனி உன்னையும் விடறதா இல்ல.. என் பொண்ணையும் விட்டுக் கொடுக்கிறதா இல்லை.. அதனால வேற எதுவும் ட்ரை பண்ணாம என்னோட எப்படி சந்தோஷமா வாழலாம்னு யோசிக்கறதுக்கு முயற்சி பண்ணு.. ஏன்னா உனக்கு யோசிக்கறதுக்கு நான் இங்க நிக்கிற வரைக்கும் தான் டைம்.. அதுக்கப்புறம் ஒரு பக்கம் என் செல்லக்குட்டி சக்தியை தூக்கிக்கிட்டு இன்னொரு பக்கம் உன்னை அப்படியே தோள்ல அள்ளிப் போட்டுக்கிட்டு போயிட்டே இருப்பேன்.. எவனும் என்னை தடுக்க முடியாது..”

அவன் தீர்க்கமாய் சொல்லிவிட்டு “யோசிச்சு டிசைட் பண்ணி சொல்லுங்க மேடம்..” என்றவன் சீட்டியடித்தபடி தன் பிடரி மயிரை கோதிவிட்டுகொண்டு ஒய்யாரமாய் அங்கிருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து விட அவளோ பல்லை கடித்தபடி அவனைத்தான் முறைத்திருந்தாள்..

“இப்போவும் என் ஃபீலிங்ஸ்க்கு மதிப்பு கொடுக்க மாட்டீங்க இல்ல?”

அவள் விழிகளை உருட்டி கேட்க பட்டென தன் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்து அவள் அருகே வந்து நின்றவன் அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டு “உன் ஃபீலிங்க்ஸ்காக தான்டி இப்ப பேசிகிட்டு இருக்கேன்.. உன்னால என்னை விட்டு இருக்க முடியாது.. என்னாலயும் முடியலடி.. இங்க பாத்தியா?”

தன் விரல் நுனியில் அவள் கண்ணீரின் ஈரத்தை காட்டியவன் “இது சொல்லுதுடி.. நீ என் மேல வச்சிருக்கற காதலை.. இங்க பாரு.. எனக்கு வெட்டி பேச்சு பேச டைம் இல்ல.. சீக்கிரம் டிசைட் பண்ணி சொல்லு.. இந்த முறை நீ எந்த காம்ப்ரமைசும் பண்ண வேண்டாம்.. நீ எப்படி எங்க வாழனும்னு சொல்றியோ அங்க வாழலாம்.. உனக்கு அந்த வீட்டுக்கு வர இஷ்டம் இல்லையா? அதுவும் எனக்கு ஓகே தான்.. நம்ம மூணு பேரும் தனியா இருக்கலாம்.. ஆனா எதுக்காகவும் இனி நான் உன்னையும் என் பொண்ணையும் விட்டுக் கொடுக்கறதா இல்ல.. இதை உன்னோட இந்த காலி குடோன்ல நல்லா அழுத்தி போட்டு வச்சுக்க..”

அவள் தலையில் சுட்டுவிரலால் சுட்டி அவன் சொன்னதை கேட்டவள் ஆழமாய் ஒரு மூச்செடுத்து அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து கைகளால் முன் நெற்றியை தாங்கி ஐந்து நிமிடங்கள் அமைதியாய் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்..

சட்டென நிமிர்ந்து “ஓகே நான் உங்க கூட வரேன்.. ஆனா எனக்கு நிறைய கண்டிஷன்ஸ் இருக்கு.. அந்த கண்டிஷனுக்குலாம் ஓகேனா நம்ம சேர்ந்து வாழலாம்.. அதுவும் உங்களோட அந்த குடும்பம் இருக்கிற அதே வீட்ல..”

இறுக்கமான குரலில் எதிர்பக்க சுவற்றை தீவிரமாய் வெறித்த படி சொல்லி முடித்திருந்தாள் அவள்..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!