சாரளம் வழியாக கசிந்து வந்த கதிரொளி முகத்தில் பட்டதும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் மெல்ல விழி மலர்ந்தான்.
கண்களைத் திறக்க மனமின்றி கட்டிலில் அங்குமிங்குமாய் உருண்டவன் அப்போது தான் நினைவு வந்தவனாக, “மானு..” என்ற அழைப்புடன் படக்கென்று கட்டிலில் எழுந்து அமர்ந்தான். மின்விசிறி சுழன்று கொண்டிருந்த காற்றோட்டமுள்ள அவ் அறைக்குள்ளும் வியர்த்து ஊற்றியது அவனுக்கு.
மான்ஷியை காணவில்லை என்றதுமே மன அழுத்தத்தில் மயங்கி விழுந்தவனைத் தாங்கி வந்து கட்டிலில் படுக்க வைத்திருந்தனர், ரேணுகாவும், சகுந்தலாவும். ருத்ரவன் மான்ஷியை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகே சிறியவனின் மயக்கம் தெளிவிக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு.
இல்லையேல் மயக்கம் தெளிந்து அவன் கேட்கப்போகும் கேள்விகளுக்கு பதில் கூறியாக வேண்டுமே! கூடவே வீணாக மன அழுத்தத்தைக் கூட்டிக் கொள்வான் என்கின்ற பரிதாபம் வேறு..
“மானு..” என்ற அழைப்புடன் கட்டிலை விட்டுத் துள்ளி எழுந்தோடியவனின் கண்ணையோ, கருத்தையோ தான் கண் விழிக்கும் வரை அறைக்குள் காத்திருந்த பெற்றோர் கவரவில்லை என்பது நிஜம்! ‘மானு’ என்ற ஒருத்தி மட்டுமே நினைவில் நின்றாள்.
மகனின் பதற்றத்தைக் கண்டு கவலையுற்ற ரேணுகா, கணவனின் முகத்தை வருத்தத்துடன் ஏறிட, தாடையை தேய்த்தபடி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார் ருத்ரவமூர்த்தி.
மகனின் நடத்தைகளும், அவன் மான்ஷி மீது வைத்திருக்கும் கரை காணாத, அளவுக்கு மீறிய பேரன்பும் அவரை சற்றே அசைத்துப் பார்த்தது; நெஞ்சில் பல விதமான எண்ணங்களைத் தோற்றுவித்து, பயத்தையும் விதைத்தது.
விடயமறிந்து யுகன் மன அழுத்தம் எகிறி மயங்கியே விட்டான் என்பதை ரேணுகாவின் மூலம் அறிந்து கொண்டவரால், அதை கிஞ்சித்தும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இத்தனைக்கும் அன்பு ஆயிரம் யானைகளுக்கு சமமான பலத்தைக் கொடுக்கும் அதேநேரம், இரத்தமும் சதையுமாக இருப்பவர்களை சுக்குநூறாக உடைத்து பலவீனப்படுத்தவும் செய்யும் என்பதை அறியாதவரல்ல.
‘அதற்கென்று அவள் சம்பந்தப்பட்ட விடயங்களில் இவ்வளவு பலவீனம் வேண்டாம்’ என மனதினுள் குறைப்பட்டுக் கொண்டார்.
மான்ஷிக்கு ஏதாவது ஒன்றென்றால் அவன் அவனாகவே இல்லை. நொடியில் அரக்கனாய் மாறி, சம்பந்தப்பட்டவனை வெளுத்து வாங்கி விடுகிறான். இந்த தீவிரம் ஆரோக்கியமான நிலையல்ல எனத் தோன்றியது அவருக்கு.
“என்னங்க..”
சிந்தனைக் குதிரைக்கு கடிவாளம் போட்டு இயல்புக்கு மீண்டவரின் பார்வை மனைவியின் கலக்க முகத்தில் கேள்வியாய் பதிந்தது. அவரது முகத்திலும் சோக மேகங்கள் சூழ்ந்து கிடந்தன.
“ஒரு சில மாதங்கள் முன்ன, நாம ஒரு வயசானவரை எதேச்சையா சந்திச்சோமே! கோயில்க்கு போய் வர வழியில வண்டி ரிப்பேராகி ரோட்டோரமா நின்னுட்டு இருக்கும் போது அவர் சொன்னது நினைவிருக்கா?” தயக்கமாக தான் கேட்டாள். இதை எதற்கு இந்த நேரத்தில் நினைவு படுத்தினாய் என சத்தம் வைப்பாரோ எனப் பயமாக இருந்தது.
‘சந்தனப்பாவையின்பால் மனம் உடையான் கொண்ட நேசமே நேசம்! விதி வசத்தால் பிரிவின் வாசனை நுகர இருக்கும் இரு இருதயங்கள். ஹாஹா, எப்படி சாத்தியம்? இவளுயிர் அவன் ஆன்மாவிலும், அவளுயிர் இவன் ஆன்மாவிலும் இரண்டறக் கலந்திருக்கும் போது பிரிவென்பது சாத்தியமா என்ன.. எல்லாம் அவன் செயல்!’
அன்று அந்த வயதானவர் கூறிய வார்த்தைகள் ருத்ரவனின் காதில் அட்சரம் பிசகாமல் ரீங்காரமிட்டன.
கூற வருவது என்னவென புரியாவிட்டாலும், நிலைமை தீவிரம் என்பது மட்டும் புரிந்தது. இருப்பினும், ‘கண்டதையும் எண்ணி மனதைக் கெடுத்துக் கொள்வானேன்?’ என கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். அந்த அலட்சியம் தான் தவறோ..
“ரெண்டு பேரும் ஒன்னா இருக்கலனா, யாராவது ஒருத்தங்களோட உசுருக்கு ஆபத்து வந்தே தீரும்னு சொல்ல வராருனு அன்னைக்கே சொன்னேனே! எனக்கு என்னமோ மனசுக்கு பயமாவே இருக்குங்க..”
அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்ட ருத்ரவன், “சும்மா யோசிக்காத! அப்படி எதுவும் இருக்காது. எதுக்கும் ஈவினிங் கோயில் போய்ட்டு வந்துறலாம்..” என்றார் நிதானமாக.
‘காலதேவன் அவர்களின் பின்னோடு நிழலாய் வலம் வந்து கொண்டிருக்கிறான். புத்திரன் உயிர் பிழைக்க நினைத்தால், முடிச்சு போட்டு இணைந்த இதயங்களின் பந்தத்தை மேலும் பலப்படுத்தி விடு!’ – இறுதியாய் அவர் கூறிய வார்த்தைகள் இவை!
எவ்வளவு தான் சாதாரணமாக இருக்க நினைத்தாலும், ம்ம்கூம் முடியவில்லை. இருவரின் அன்பும் அளவு கடந்ததென இதற்கு முன்பே பல தடவைகள் தோன்றி இருந்தாலும் ஏனோ இப்போது மனம் பதைபதைத்தது.
“மானுஊ..” என்ற கூவலோடு கதவைத் திறந்தவனின் தவிப்புற்ற கண்களுக்கு, அன்று மலர்ந்த ரோஜாவாய் பஞ்சணையில் துயில் கொண்டிருந்த பெதும்பை விருந்தானாள்.
விடலையின் பார்வை கனிந்தது.
கதவை சாற்றிக்கொண்டு மெல்ல அவளை நெருங்கி வந்தவனின் ஊடுருவும் பார்வை, அவளின் முகம், கைகால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை வெகு தீவிரமாக ஆராய்ந்தது.
அப்படி எதுவுமில்லை என்பதைக் கண்ணாரக் கண்ட பிறகு தான் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது அவனால். காணும் வரை உள்ளுக்குள் அவன் எந்தளவு துடித்தான் என்பதை அவனையன்றி வேறாரும் அறிய வாய்ப்பில்லை.
நடந்ததை மொத்தமாகக் கூறிவிட்டால் இவ்விடத்தில் பூகம்பமே வெடிக்கும் என மனம் எச்சரித்தது. கூடவே, ‘எதுவும் யுகேந்துக்கு தெரியாம பார்த்துக்கோ தர்ஷா. அவனுக்கும் இப்போ விவரம் புரியிற வயசு இல்லையா? உடனே கோபப்படுவான். பாப்பா விஷயத்துல அவன் எந்தளவுக்கு உணர்ச்சி வசப்படறான்னு தெரியும்ல..
சம்பந்தப்பட்டவனைத் தேடி கொல்லவும் தயங்க மாட்டான். வாய் பத்திரம்டா. எனக்குனு இருக்கிற சொத்து அவன் மட்டுந்தான். இந்த வயசுலயே போலீஸும் கையுமா அவன் அலையக் கூடாதுனு யோசிக்கிறேன்..’ என ருத்ரவன் கூறியது வேறு அவரை வாய் திறக்க விடாமல் தடுத்தது.
தர்ஷன் கூறியதைக் கேட்டு லேசாக இதழ் விரித்தவன், “அவளுக்கு எதுவும் ஆகலைல?” என்று செவி வழியாய் கேட்டு நிம்மதியடையும் பொருட்டு யோசனையுடன் வினவ,
“எதுவும் ஆகலபா, நம்ம போய் சேருற வரைக்கும் அரை மயக்கத்துல தூங்குறாப்புல கண்ணை மூடிட்டு நின்னுருக்கா. கண்ணைத் தொறந்தா எங்க அவங்க போட்டுத் தள்ளிடுவாங்கனு பயந்துட்டா போல..” என்றார்.
“அவ பெரியவ ஆகுனதும், மார்ஷியல் ஆர்ட்ஸ், கராத்தே எல்லாம் கத்து கொடுக்கணும் மாமா. அவளுக்கு அப்பாவைப் போல தைரியசாலியா இருக்க ரொம்ப புடிக்கும்..” என்றவனைப் பார்த்து ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவர்,
“அவ தூங்கட்டும் கண்ணா! நீ போய் அப்பறமா வா..” என அவனை அப்புறப்படுத்த முயன்றார்.
சட்டென்று யோசனை வயப்பட்டவன், “ஏன் இப்போ பார்த்தா ஆகாதா மாமா?” என ஒரு மாதிரியான குரலில் வினவ,
“அது.. அவ தூங்குறா!” என தடுமாறினார், தர்ஷன்.
“நான் அவளை எழுப்ப போறதுல்ல மாமா..” என்றவன் அவர் கூற வருவதைக் கேளாமலே சென்று மான்ஷியின் அருகே அமர்ந்து கொள்ள, அதற்கு மேலும் மறுக்க மனமில்லை பெரியவருக்கு.
‘சரிதான், போகட்டும்..’ என எண்ணியபடி அவ்விடத்தினின்று அகன்று விட,
“மானும்மா..” என பெயருக்கே வலித்து விடுமோ எனும்படி மென்மையிலும் மென்மையாய் சிறு குரலில் அழைத்தவன், துவண்டு வீழ்ந்திருந்த அவளின் கரங்களைத் தன் கைகளுக்குள் சிறை பிடித்துக் கொண்டான்.
“நீ ரொம்ப பயந்து போயிருப்ப இல்லையா? நீ இல்லனதும் என் ஹார்ட்டே நின்னு போன மாதிரி இருந்துச்சு. பாரு, இன்னுமே தாறுமாறா தான் துடிச்சுக்கிட்டு இருக்கு..” எனக் கூறியபடி அவளின் கரங்களைத் தன் இடது நெஞ்சில் வைத்து அழுத்தினான்.
“யுகன்..” உறக்கத்தில் முனகினாள் மான்ஷி.
“நான்தான். தூங்குனது போதும், கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரேன். என்கிட்ட பேசேன்டி..” என புலம்பியபடி குனிந்து பாவையின் பிறை நுதலில் முத்த அச்சாரம் பதித்தவனின் விழிநீர் அவளின் கன்னத்தில் துளியாய் சொட்டியது.
“யுகி..” சிணுங்கினாள்.
“நீ தைரியசாலி தான்! அதுக்குனு இனிமே எங்கயும் தனியா போயிடாத என்ன..” என்றவனின் மென்மையில் உருகியவள் மெல்ல நகர்ந்து வந்து, தாயின் மடி தேடும் குழந்தையாய் யுகனின் மடியில் தலை வைத்து, முகத்தை அவனின் வயிற்றோடு புதைத்தாள்.
“ஹே, சோம்பேறி! எழுந்திருடி. தூக்கம் தான் கலைஞ்சிருச்சில்ல?” எனக் கேட்டு வலிக்காதவாறு சிறியவளின் தோளில் பட்டென்று ஒரு அடி வைத்தவன்,
“ஸ்கூல் போகல?” என்று கேட்டது தான் தாமதம்,
“நேரம் என்ன?” என பதறிக் கொண்டு எழுந்தமர்ந்தவள், முற்று முழுதாக விடிந்திருந்த அதிகாலைப் பொழுதின் வெளிச்சத்தில் கண்கள் கூசி முகம் சுருக்க,
“மான்குட்டி..” என அவளின் கன்னம் கிள்ளினான் யுகன்.
“ப்ச், பாரு! விடிஞ்சிருச்சு. அம்மா என்னை ஓட விட்டு அடிக்க போறாங்க யுகன். ஏன் ஏர்லியா என்னை எழுப்பி விடல?” என குறைப்பட்டுக் கொண்டவள் கட்டிலை விட்டு எழுந்திருக்க முயல,
“பாத்ரூம் போகணுமா?” என்று வினவினான் யுகன், அவசரமாக.
“ஆமா! விட்டா இந்த இடத்துலயே பாஸ் பண்ணிடுவேன் போல யுகனு..”
சிரித்தவன், “வா, நான் கூட்டிட்டு போறேன்..” என அவளைத் தன் கைத்தாங்கலாக அழைத்து செல்ல முயன்ற போது தான், நேற்றைய நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவடுக்குகளில் தோன்றின.
சட்டென்று பொன்மேனி விறைத்தது.
உடல் வெடவெடக்க, “யுகன்..” என்றழைத்தவளின் முக மாற்றத்தைப் புரிந்து கொண்டவனாய், “என்னடி? என்ன பண்ணுது.. உனக்கு எதுவும் ஆகலைல..” என பதற,
“அந்த அங்கிள் என்னை.. என்..” என ஏதோ கூற வாய் திறந்தவள், கதவோரம் நின்று ‘சொல்லாதே’ என சைக்கினை செய்து கொண்டிருந்த தந்தையைக் கண்டு விட்டு,
“ப்பாஆஆ..” என்று அழைத்தாள் தவிப்புடன்.
“மான்ஷிம்மா..” என்று கொண்டே விரைந்து மகளை நெருங்கியவர், “என்னமா.. பாத்ரூம் போகணுமா? வா, நானே உன்னைக் கூட்டிட்டு போறேன்..” என யுகனிடமிருந்து மகளை பிரித்து நிறுத்த,
“அவ ஏதோ சொல்ல நினைக்கிறா மாமா. என்னனு கேளுங்க..” என அவளைத் தன்னிலிருந்து விலக்கி நிறுத்தியது கூட உறைக்காதபடிக்கு பதறித் துடித்தான் யுகன்.
“அவ ரொம்ப பயந்து போயிருக்கா.. இல்லம்மா மான்ஷி?” என மகளிடம் கேட்க, என்ன புரிந்ததோ ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவள் கூற வந்ததை அத்தோடு விழுங்கிக் கொண்டாள்.
கடத்திச் சென்றவர்களில் ஒருவன் அவளை தகாத முறையில் தீண்டியதைப் பற்றி, அவளை வீட்டுக்கு அழைத்து வரும் வழியிலே, அரை மயக்கத்தில் புலம்பியிருந்தாள் மான்ஷி.
அதைப் பற்றி எதையாவது மான்ஷி உளறி வைப்பாளோ என்று தான் தர்ஷன் பயந்து போனார். ஆனால் அரை மயக்கத்திலிருக்கும் போது நடந்தவை பற்றி அவளுக்கு எந்தவொரு நினைவும் இல்லை என்பது அவர் அறியாத உண்மை.
சாதாரணமாக, ‘நான் ரொம்ப பயந்து போயிருந்தேன். அவங்க என்னை ரொம்ப மெரட்டுனாங்க யுகன்..’ என்று தான் கூற வந்தாள். அதற்குள் அவர் தான் முகம் வெளிறிப் போகும் அளவுக்கு வீணாகப் பதறி விட்டார்.
ஆனால் ஈற்றில் ருத்ரவமூர்த்தி எதை எண்ணிப் பயந்தாரோ.. எதை எண்ணி தர்ஷனிடம் முன்னெச்சரிக்கை செய்தாரோ அதே விடயம் தான் நடந்தேறியது.
ஆம், தர்ஷன் தன்னிடம் எதையோ மறைப்பதைப் புரிந்து கொண்டு, தாயை வைத்து தந்தையிடம் விடயத்தைப் புத்தி சாதுர்யமான முறையில் கறந்தவன், சம்பந்தப்பட்டவனை தாக்கி கோமாவுக்கே அனுப்பி வைத்திருந்தான்.
இந்த விடயத்தில் உயிர் நண்பனான தினேஷிடம் கூட அவன் எந்தவொரு உதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை; அந்த ரவுடிகளின் இருப்பிடம் வரை தனியாகச் சென்று அவர்களது எலும்புகளை கச்சிதமாக எண்ணும் அளவுக்கு மூர்க்கனாகிப் போயிருந்தான்.
‘இதுக்கு மேலயும் நாம இங்க இருக்குறது நல்லதில்ல ருத்ரா! மான்ஷி விஷயத்துல யுக கண்ட்ரோல் இல்லாம இருக்கான். அவளால அவனுக்கு ஏதும் பாதகம் வந்திடுமோனு மனசு பதறுது. நம்ம வீட்டுக்கு போய்டறோம்டா..’ என்ற தர்ஷனின் முடிவே சரியென்று தோன்றியது.
அப்போது தான் பிரச்சனை பூதாகரமாய் வெடித்தது.
விடயம் தெரிந்து வானுக்கும் பூமிக்குமாய் குதித்தவன், “என்னையும் மானுவையும் பிரிக்க உங்க யாருக்கும் உரிமை கிடையாது. அவ எங்க இருப்பாளோ, அங்க தான் நானும் இருப்பேன்..” என ஆடிய ஆட்டமெல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல.
ஏற்கனவே தன்னிடம் அடி வாங்கி உடல் முழுதும் புண்ணாகிக் கிடந்தவனை மேலும் வருத்த எண்ணமின்றி ருத்ரவன் பற்களைக் கடித்தபடி பொறுமையோடு நின்றிருக்க,
“எந்நாளும் இங்கயே இருக்க முடியாதுல கண்ணா. அடிக்கடி வந்து பார்த்துட்டு போ! நீ பெரியவன் ஆகுனதும் மான்ஷியை உனக்கே கட்டி கொடுக்குறேன். அப்பறம் அவளை உன் கைக்குள்ள வைச்சுப் பார்த்துக்கோ..” என சமாளிக்கப் போராடிக் களைத்ததென்னவோ தர்ஷன் தான்.
ம்ம்கூம், சற்றும் அசைந்தானில்லை.
மறுப்புகள் எதிர்வாதங்கள் வலுக்க, தன் இடுப்பை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தவளைத் தன்னிலிருந்து விலக்கி நிறுத்திய கோபத்தில் யுகன் அந்த விபரீதத்தை செய்தான்.
ஈற்றில் கையிலிருந்து அருவியாய் இரத்தம் வழிய, “எங்கே.. இப்போ அவளை என்கிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டு போங்களேன், பார்ப்போம்..” என்று சபதமிட்டான் வெற்றிச் சிரிப்புடன்.
அறைக்குள் இருந்த ஆளுயர கண்ணாடி சிதிலமடைந்து, டைல்ஸ் தரையில் துகள்துகளாகச் சிதறிக் கிடந்தது இரத்தத் திட்டுக்களோடு.
இனியென்ன.. ருத்ரவன் ஆடித் தீர்த்து விட்டார். மூன்றாம் உலகமகா யுத்தமே தலை தூக்கியது வீட்டினுள்!
எல்லாம் ஒரு முடிவுக்கு வர, மகனின் கட்டுப்போடப்பட்டிருந்த கையைப் பார்த்து மூக்கு சிந்திக் கொண்டிருந்த ரேணுகாவின் மனதில் அந்த வயோதிபர் கூறிய வரிகளின் உண்மைத் தன்மை வலுப்பெற்றது.
அவளை அமைதிப்படுத்த, யுகனுக்கு ஜோசியம் பார்த்தேயாக வேண்டுமெனப் புரிந்து கொண்டார் ருத்ரவன். அப்படியாவது சமன்பட்டால் சந்தோசம் என எண்ணிக் கொண்டு அவளை அழைத்துச் சென்றவருக்கு தலையில் இடி விழுந்த பிரமை!
அந்த வயதானவர் கூறிய அதே விடயம் மீண்டுமொரு முறை ஜோசியக்காரனால் உறுதிபடுத்தப்பட்டது.
யுகனின் பாதுகாப்புக் கேடயம், அவனின் உயிரோடு உடலோடு கலந்த மாளவிகா. அதாவது மான்ஷி மட்டுமே!
ரேணுகா அழுது கொண்டே இருந்தாள். அவளின் பிடிவாதத்தின் பிரகாரம், தனது பத்தொன்பதாம் வயதில் காலடி எடுத்து வைத்த யுகேந்திரனுக்கும், பதினான்கே வயதான மான்ஷிக்கும் நிச்சயம் செய்யப்பட்டது.
“சின்ன பசங்க..” என வருத்தப்பட்ட சகுந்தலாவுக்கு, தாம் வறுமையுற்று புகலிடமின்றி சுற்றித் திரிந்த காலங்களில் தெய்வாதீனமாய் கரம் கொடுத்தவர்களுக்கு பிரதியுபகாரம் செய்த மகிழ்வு இல்லாமல் இல்லை.
‘இருந்தாலும் இந்த வயதில்..’ நினைக்கும் போதே மனம் விம்மியது.
“ச்சு, சும்மாரு சகி!” என மனைவியை அதட்டிய தர்ஷன், முகம் விகசிக்க புதுப் பொலிவுடன் நின்றிருந்த யுகனைக் கண் ஜாடையால் அவளுக்குக் காண்பித்து விட்டு,
“எப்போவும் சந்தோசமா இருங்க!” என மனதார வாழ்த்தினார். மனதை வருத்திக் கொண்டிருந்த பாரமொன்று நெஞ்சை விட்டு அகன்ற உணர்வு!
“நான் என் மானுவை கண்ணுக்குள்ள வைச்சுப் பார்த்துப்பேன் மாமா. அவள்’னா எனக்கு உயிரு!” – இவை மான்ஷியின் கரம் பற்றிக் கொண்டு பத்தொன்பது வயது வாலிபன் உறுதி தொனிக்க கூறிய வார்த்தைகள்.
ஆனால் அந்த உறுதி வார்த்தைகள் இன்று பொய்ப்பிக்கப்பட காரணம் தான் என்னவோ..